பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/48. கண்ணன் பிறப்பு

48. கண்ணன் பிறப்பு

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

திண்ண முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் -இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
                                                                                              (கண்ணன் பிறந்தான்)

சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)