பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/49. கண்ணன் திருவடி

49. கண்ணன் திருவடி

கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே,

தருமே நிதியும்,பெருமை புகழும்
கருமா மேனிப்,பெருமா னிங்கே,

இங்கே யமரர்,சங்கந் தோன்றும்
மங்கும் தீமை,பொங்கும் நலமே.

நலமே நாடிற்,புலவீர் பாடீர்;
நிலமா மகளின்,தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர்
தொகையோ யசருப்,பகைதீர்ப் பதையே

தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்பபா ரமரர்,பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர்,புவியீர் மாலும்
சிவனும் வானோர்,எவரும் ஒன்றே

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே