பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/5. முருகன் பாட்டு

5. முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான். 1.

வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2.

தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3.

தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன் 4.