பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/60. கலைமகளை வேண்டுதல்

60. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர்?-என
தின்னுயிரே!என்தன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன்-கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன்-இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்குவீர் அமிழ்தெனவே-அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

மாதமொர் நான்காய்நீர்-அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவீட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் என்தன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும்-என்தன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்-அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்.

கண்மணி போன்றவரே!-இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும்;-சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர்!-என்தன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்;
அண்மையில் இருந்திடுவீர்!இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

தானெனும் பேய்கெடவே,-பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெ னும் ஒளி பெறவே,-நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே.
தேனெனப் பொழிந்திடுவீர்!-அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்!-நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

தீயினை நிறுத்திடுவீர்!-நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே-உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்,
தாயென உமைப்பணிந்தேன்-பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்.
வாயினிற் சபத மிட்டேன்;இனி
மறக்ககி லேன்.எனை மறக்ககிலீர்!