பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/66. ஜெயம் உண்டு

66. ஜயம் உண்டு

ராகம்-கமாஸ் (தாளம்-ஆதி)

பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)