பூட்டிய விலங்கைப்
பொடிசெய் வதற்குப்
பாட்டுக் கவிஞன்
பாரதி பிறந்தான்

பாரத அன்னை
படும் துயர் போக்க
வீரன் பிறந்தான்
வேங்கைப் புலிபோல்



கொஞ்சிப் பேசும்
குழந்தைப் பருவம்
அஞ்சி நடக்கும்
அழகுப் பருவம்

ஈன்ற அன்னை
இலக்குமி அம்மாள்
மாண்டு மடிந்தாள்
மண்ணில் மறைந்தாள்

கணக்கும் அறிவுக்
கலையும் யந்திர
நுணுக்கம் பலவும்
கற்றுக் கொடுக்கத்

தந்தை நினைத்தார்
தனயன் ஏனோ
சிந்தையில் அவற்றைச்
சேர்க்க மறுத்தான்


கணக்கை வெறுத்துவந்தான் - கண்டால்
காத வழிசென்றான்
பிணக்கெனச் சொல்லிவந்தான் - பாரதி
பிடிவாதம் செய்துவந்தான்

சோலைக் குயிலைப்போல் - பூவைச்
சுற்றும் வண்டைப்போல்
காலை மாலைகளில்-அவன்
கவிதை பாடிவந்தான்.



எட்டய புரத்தினிலே - வாழ்ந்து
இருந்த புலவரெல்லாம்
பட்டம் கொடுத்தார்கள் - அவனைப்
பாரதி என்றார்கள்

கோட்டுக் களிற்றிடையே - சிங்கக்
குட்டி இருப்பதுபோல்
பாட்டுப் புலவரிடை - இளம்
பாரதி வீற்றிருந்தான்

தந்தை இறந்துவிட்டார் - துன்பம்
தாங்க முடியாமல்
சிந்தை துடித்தழுதான் - ஏதும்
செய்வ தறியாமல்

பிள்ளைப் பருவத்திலே - வறுமை
பேய்போல் வந்ததம்மா
துள்ளும் இளம்வயதில் - துன்பம்
சூழ்ந்து கொண்டதம்மா


முல்லை மலரழகி - சிவந்த
முருக்கம் பூவழகி
செல்லம் மாளைமணம் - விரைவில்
செய்து முடித்தார்கள்


பன்னிரண் டாமாண்டில் - இளம்
பாலகன் சுப்பையா
கன்னி ஒருத்திக்குக் - காதற்
கணவன் ஆகிவிட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/1&oldid=1016537" இலிருந்து மீள்விக்கப்பட்டது