புகழேந்தி நளன் கதை/2. கலிதொடர் காண்டம்


கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரில் ஏறினான் சென்று 181


மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தணையப்
பொங்கி எழுந்த பொறிவண்டு - கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோல் ஏங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண் 182


பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து 183


மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் கானென்றான் வேந்து 184


புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி 185


கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து 186


ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து 187


அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக்-கலந்தொசிந்த


புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அலகு 188


கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ-கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார் 189


கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள்-வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட வொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண் 190


கொழுநன் கொழுந்தாரை நீர்விசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள்-கெழுமியவக்
கோமகற்குத் தானிணைந்த குற்றங்கள் அத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல் 191


பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல்-எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்த்துவக்கும் சேய் 192


பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்க 193


சிறுக்கின்ற வாண்முகமும் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும்-குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையாய் ஆம் 194


சோர்புனலில் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம்-பாராய்


விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு 195


செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க்-கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன் 196


காவி பொருநெடுங்கண் காதலியும் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித்-தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கை நதிஆடி
ஒழியா துறைந்தார் உவந்து 197

ஊடல் கொள்ளுதல்

நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும்-இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரல்குல் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில் 198


கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலை
தன்மணிவாய் உள்ளே தடுமாற-மன்னவனே
இக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்கா
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து 199


தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக்-கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழல்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி 200


தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில்-அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவம் என்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து 201


சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீரடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான்-வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு 202


அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ் செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர்-அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோவையரின் மேலான கொம்பு 203

மாவிந்த நகர் வாழ்க்கை

வேரி மழைதுளிக்கும் மேகக் கருங்கூந்தற்
காரிகையும் தானும்போய்க் கண்ணுற்றான்-மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறும் கங்கைக் கரை 204


சூதக் கணியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்கும் குப்பியென-மாதரார்
ஐயுற்று நோக்கும் அகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன் 205


வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மாற்றின் தடம்பதிதான்-வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே எங்கள் நகர் 206


பொய்கையும் வாசப் பொழிலும் எழிலுருவச்
செய்குன்றும் ஆறும் திரிந்தாடித்-தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ 207


கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப-நூலென்னத்

தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு.208

கலிமகன் புகுதல்

ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்ட புகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு 209


சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி-சிந்தையெல்லாம்
தன்வயமே ஆக்குந் தமையனுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து 210


நாராய னாயநமவென்றவனடியிற்
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்-பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தைக் கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி 211


நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன்-மன்னவனே!
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து  212


புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி இளமேதிக் காற்குழம்பு-பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு  213


வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறக்
கங்கைத் திரைநீர் கரையேறிச்-செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து  214

அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி என்னகொடி என்ன-மிடற்சூது
வெல்லும் கொடியென்றான் வெங்கலியால் அங்கவன்மேல்
செல்லும் கொடியோன் தெரிந்து 215


ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல்-தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து 216

சூதின் தீமைகள்

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய்-போதில்
சினையாமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி 217


அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும்-மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து 218


உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மாணஞ் சிதைக்கும்-மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து 219


ஆயம் பிடித்தாரும் அல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே-மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே -
வடித்தாரின் நூலோர் வழக்கு 220

நளன் சூது ஆடுதல்
 

தீது வருக நலம்வருக சிந்தையாற்
சூது பொரவிசைந்து சொல்லினோம்-யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று 221


நிறையில் கவறாடல் நீநினைந்தா யாகில்
திரையிற் கதிர்முத்தஞ் சிந்தும்-துறையில்
கரும்பொடியா மள்ளர் கடாவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது 222


விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினேன் உன்பணையும் ஏதென்ன-மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து 223


காரேயும் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயும் தோளான் தனிமனம்போல்-நேரே
தவறாய்ப் புரண்ட தமைய னொடுங்கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி 224


வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணயம் உரையென்ன-வைத்தநிதி
நூறாயிரத்திரட்டி நூறுநூறாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து 225


பல்லா யிரம்பரியும் பத்துநூறாயிரத்துச்
சொல்லார் மணித்தேரும் தோற்றதற்பின்-வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கும் மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி 226


சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான்-சூதரங்கிற்


பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழற்
பூவையரைத் தோற்றான் பொருது 227


சிறியானைச் சேர்ந்தாள் திரு


கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு 228


மனைக்குரியார் அன்றே வருந்துயரம் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று 229


இனிச்சூ தொழிந்தோம் இனவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போதும் என்றான் நளன் 230


மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகம் கொள்ளத்தான் போனாற்போல்-தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து 231


கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வலி 232


நாட்டு மக்கள் அவலம்


ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே-பாரிடத்தை
யார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று233

  



வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால்-சீலம்
ஒழிவரோ செம்மை உரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர்.  234


வடியேறு கூரிலைவேன் மன்னாவோ உன்றன்
அடியேற்கட் காதரவு தீரக்-கொடிநகரில்
இன்றிருந்து நாளை எழுந்தருள்க என்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து 235


மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னிர்நோக்கி-இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமோ தன்மனத்தில் வைத்து 236


வண்டாடும் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடினார் தம்மைக் கொல்லென்று-தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று237


அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதமையை நோக்கி-முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றும் கூரிலைவேன் மன். 238


தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான்-முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் தன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு239


கொற்றவன்பால் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியோடு புட்கரனும் வீற்றிருப்ப-முற்றும்
இழவு படுமாபோல் இல்லங்க டோறும்
குழவிபா லுண்டிலவே கொண்டு240

  



சுரம் கடத்தல்


சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரும் நோவப் பதைத்துருகி-எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து241


தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி - யாதும்
தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து242


காதல் இருவரையும் கொண்டு கடுஞ்சுரம் போக்
கேதம் உடைத்திவரைக் கொண்டுநீ-மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளைத் தான்
243


குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொளலாம் பெறலாமோ-கொற்றவனே
கோக்காதலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து
244


கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்
செய்தவந்தான் எத்தனையும் செய்தாலும்-மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்
புகப்பெறார் மாதராய் போந்து245


மக்கள் செல்வம்


பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லாதவர்?246



சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தாம் இன்முகத்து-முன்னங்
குறுகு தலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி 247


போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவற்குந் தோற்றாதே-ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன் 248


சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய்-தனக்குரிய
தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள்
249


மன்னவராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதம் தேக்கி யிருப்பாரேல்-சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
அரும்பேடை மானே யவர் 250


செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்பன் எழில்நகர்க்கே-நங்கோலக்
காதலரைப் போக்கி அருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல எடுத்து 251


பேதை பிரியப் பிரியாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன்-தாதைக்குக்
காட்டுநீ என்றான் கலங்காத உள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து 252


மக்களைப் பிரிதல்


தந்தை திருமுகத்தை நோக்கித்தமைப்பயந்தாள்
இந்து முகத்தை எதிர்நோக்கி-எந்தம்மை


வேறாகப் போக்குதிரோ என்றார் விழிவழிய
ஆறாகக் கண்ணி அழுது 253


அஞ்சனந்தோய் கண்ணின் அருவிநீர் ஆங்கவர்க்கு
மஞ்சனநீர் ஆக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாள் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து 254


இருவர் உயிரும் இருகையான் வாங்கி
ஒருவன் கொண்டேகுவான் ஒத்து-அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக் கொண்டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து 255


காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை எனநின்றுயிர்ப்போட-யாதும்
உரையாடா துள்ளம் ஒடுங்கினான் வண்டு
விரையாடும் தாரான் மெலிந்து 256


சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற் போய்த் தேவியொடும் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவின் கண்மணிகள் தாம்பொடியாத்
துள்ளிவே கின்ற சுரம் 257

பறவை ஏய்த்தல்

 
கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பார் ஈந்த அரசனையும் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து. 258


தேன்பிடிக்கும் தண்துழாய்ச் செங்கண் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல்-தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா என்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது 259


பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள் வருமாபோற் கழன்றோடி - எய்க்கும்
இளைக்குமா போல் இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணி மன் 260


கொற்றக் கயற்கட் கொடியே இருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்தப்
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து 261


எற்றித் திரைபொர நொந்தேறி யிளமணலிற்
பற்றிப் பவளம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடு நீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தான் ஆடையாற் போந்து 262


கூந்தல் இளங்குயிலும் கோமானும் கொண்டணைந்த
பூந்துகில் கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோன் நானேகாண் என்றதே
பொன்னாடு மானிறத்த புள் 263


காவிபோற் கண்ணிக்கும் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது 264


அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் - புறக்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொல் என்றழியா
நின்றாள் விதியை நினைந்து 265


வையம் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே


சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து 266


அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவாள் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளாற் பாரை
யொளிப்பான்போற் பொற்றே ருடன் 267


பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்கும் தோன்றா விருள் 268


பாழ்மண்டபம் அடைதல்


எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள் வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண்டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண்டபங்கண்டான் வந்து 269


மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாறு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதாரய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து 270


வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து 271


பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியரீைரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனியென்றான் அரசு 272



விரைமலர்ப்பூ மெல்லணையும் மெய்காவல் பூண்ட பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான் காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப் பூணேர் முலையாள் புலர்ந்து 273

தீய வனமும் துயின்று திசைஎட்டு மேதுயின்று பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக் - கண்மேற் றுயில்கை கடனென்றான் - கைகொடுத்து மண்மேற் றிருமேனி வைத்து 274

புன்கண்கூர் யாமத்துப் பூமிமேற் றான்படுத்துத் தன்கண் துயில்வாளைத் தான்கண்டு - மென்கண் பொடியாதால் உள்ளாவி போகாதால் நெஞ்சம் வெடியாதால் என்றான் விழுந்து 275

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி இன்றுதுயில இறைவனுக்கே - என்றனது கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள் மைபுகுந்த கண்ணி வர. 276

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத் தாமம் எனக்களித்த தையலாள் - யாமத்துப் பாரே அணையாயப் படைக்கண் துயின்றால்மற் றாரே துயரடையார் ஆங்கு 276

பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத செம்மை யுடைமணத்தான் செங்கோலான் - பொய்ம்மை விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று கலக்கினான் வஞ்சக் கலி 278

வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்குஞ் செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச மதித்ததேர்த்தானை வயவேந்தன் நெஞ்சத் துதித்ததே வேறோர் உணர்வு 279

காரிகைதன் வெந்துயரம் காணாமல் நீத்தந்தக் கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே இருவர்க்கும் ஒருயிர்போ லெய்தியதோர் ஆடை அரிதற் கவனினைந்தா னாங்கு 280

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன் கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக் கேளான தேமொழியை நீங்கக் கிளரொளிசேர் வாளாய் மருங்கிருந்தான் வந்து 281

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக முற்றுந்தன் அன்பை முதலோடும் - பற்றி அரிந்தான் அரிந்திட்ட டவள்நிலைமை நெஞ்சில் தெரிந்தான் இருந்தான் திகைத்து 282

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம் 283

சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த ஒளித்ததேர்த்தானை உயர்வேந்தன் நெஞ்சம் வலித்ததே தீக்கலியால் வந்து 284

தமயந்தியைப் பிரிதல்


தீக்கானகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன் கோக்காதலியைக் குறிக்கொண்மின் - நீக்காத காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின் றேதிலன்போல் போகின்றேன் யான் 285

ஏந்தும் இளமுலையாள் இன்னுயிரும் தன்னருளும் பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்

தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளில் கானகத்தே இட்டு 286

தாருவெனப் பார்மேல் தருசந்த திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளில்
செங்கோ னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து287

தமயந்தி துயர்


நீலம் அளவே நெகிழ நிரைமுத்தின
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்றாய் என்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணாதயர்ந்து288

உடுத்த துகிலரிந்த தொண்டொடியாள் கண்டு
மடுத்த துயிலான் மறுகி - அடுத்தடுத்து
மன்னேயென அழைப்பாள் மற்றுமவ னைக்கானா
தென்னேயிஃ தென்னென் றெழுந்து289

வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையளிக்கொண் டெவ்விடத்தும் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு290

அழல்வெஞ் சிலைவேடன் அம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போல் ஓடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தாள் இருங்குழைமேல் கண்ணித்
கொழுந்தோட வீமன் கொடி291

வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானும் குழலும் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமேல் இட்டு292

தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் 293

வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானுடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று 294

செய்தபிழை ஏதென்னும் தேர்வேந்தே என்றழைக்கும்
எய்துதுயர்க் கரைகாணேனென்னும் - பையவே
என்னென்னா தென்னென்னும் இக்கானின் விட்டேகும்
மன்னென்னா வாடும் அயர்ந்து 295

அல்லியரந்தார் மார்பன் அடித்தா மரையவள்தன்
நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்தநீர் வெள்ளத்தே தான் 296

வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நெடிதுழி வாழ்வீர் - பிரித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான் 297

அரவு விழுங்குதல்


வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியான்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
பேரார் விழியாள் புலர்ந்து 298

அங்கண் விசும்பின் அவிர்மதிமேல் சென்றடையும் வெங்கண் அரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு

மேலெல்லாம் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு299

வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்
விலக்காயோ என்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி நின்றாள் எடுத்து 300

வென்றிச் சினவரவின் வெவ்வாய் இடைப்பட்டு
வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுள்
திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே என்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து 301

மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை
நீரேனும் காண்குதிரோ என்றழுதாள் நீள்குழற்குக்
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து 302

அடையும் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட்
டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்
தந்தருள்வாய் என்னாத்தன் தாமரைக் கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து 303

உண்டோர் அழுகுரல்என் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம் 304

வெய்ய அரவின் விடவாயின் உட்பட்டேன்
ஐயன்மீர் உங்கட் கபயம்யான் - உய்ய
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி
இருளீரும் பூணாள் எடுத்து 305

சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின் வில்வேடன் கண்டு 306

ஆருயிறும் நானும் அழியாமல் ஐயாவிப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்
இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி
விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு 307

வேடன் காத்தல் இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்
சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து 308

வேடன் அழைப்ப விழிபதைத்து வெய்துயிரா
ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்
தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினி
ஆறெலாமாக வழுது 309

தீக்கட் புலிதொடரச் செல்லும் சிறுமான்போல்
ஆக்கை தளர வலம்ந்து - போக்கற்றுச்
சீறா விழித்தாள் சிலைவேடன் அவ்வளவில்
நீறாய் விழுந்தாள் நிலத்து 310

வண்டமிழ்வாணர்ப்பிழை வன்குடிபோல் தீத்தழன்மீ
மண்டு கொடுஞ்சுரத்தோர் மாடிருந்து - பண்டையுள
வாழ்வெல்லாம் தானினைந்து மற்றழுதாள் மன்னிழைத்த
தாழ்வெலாம் தன்தலைமேற் றந்து 311

வழிப் போக்கன் துணையாதல்


அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்
இவ்வளவு தீவினையேன் என்பாள்தன் - மெய்வடிவைக்

கண்டானை யுற்றாள் கமலமயி லேயென்றான்
உண்டாய தெல்லாம் உணர்ந்து 312

எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னுர் யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து 313

முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றேன் என்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து 314

சேதி நகர் சேர்தல்


சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டுஅப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தம் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து 315

அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணிரும்
உற்ற துயரும் உடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டோம் நிலவேந்தன்
பொற்றேவி என்றார் மடவார் எடுத்து 316

போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை யறியவே - நீயேகிக்
கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கணிதிறந்து
வண்டுவாழ் கூந்தன் மயில் 317

ஆங்கவளும் ஏக அரசன் பெருந்தேவி
பூங்கழலின் மீதே புரண்டழுதாள் - தாங்கும்
இனவளையாய் உற்ற துயர்எல்லாம்
எனது வினைவலிகாண் என்றாள் மெலிந்து 318

அந்தா மரையி லவளேயென்றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவாறெல்லாம் உரையென்றாள் ஒண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு 319

என்னைத் தனிவனத்திட் டெங்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாச் சோர்ந்து 320

உன்ற்லைவன் தன்னை யொருவகையால் நாடியே
தந்து விடுமளவும் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே இருக்க இனிதென்றாளேந்திழையைக்
கொங்கேயுந் தாராள் குறித்து 321

ஈங்கிவளிவ்வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி என்று செலவிட்டான்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து 322

ஓடும் புரவித்தேர் வெய்யோன் ஒளிசென்று
நாடும் இடமெல்லாம் நாடிப்போய் - கூடினான்
போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாஞ்
சேதித் திருநாடு சென்று 323

தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை
ஆமென்றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுவான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தாள் அழுது 324

மங்கை விழிநிர் மறையோன் கழல்கழுவ
அங்கவன்றன் கண்ணிரவளுடன்மேற் - பொங்கக்
கடல்போலுங் காதலார் கையற்றோர் தங்கள்
உடல்போலும் ஒத்தார் உயிர் 325

மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்
வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றா ளயர்ந்து 326

தன்மகளாவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழுப்பும் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி திகைத்து 327

கந்தனையும் கன்னியையும் கண்டாயி னுஞ்சிறிது
தன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு 328

விதர்ப்பம் சேர்தல்


கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்
கானாள மக்களையும் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது 329

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்கும் சூழ்வார் - வழுவாக்
காமநீ ரோதக் கடல் கிளர்ந்தால் ஒத்தவே
நாமவேல் வீமன் நகர் 330

தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்
சிந்தை கலங்கி திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே என்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ 331

செவ்வண்ண வாயாளும் தேர்வேந் தனுமகளை
அவ்வண்ணங் கண்டக்காலா ற்றுவரோ - மெய்வண்ணம்

ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணி னின்று. 332

பணியிருளிற் பாழ்மண்டபத்திலே யுன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்னிணைந்து என்செய்தாய் என்னாப் புலம்பினாள்
பொன்னினைத்தாய் நோக்கிப் புலர்ந்து 333


3. கலி நீங்கு காண்டம்


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயுங்காணலாம் - மால்யானை
முந்தருளும் வேத முதலே யெனவழைப்ப
வந்தருளும் செந்தா மரை 334

போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை
ஒதுவார் உள்ளம் எனவுரைப்பார் - நீதியார்
பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மானின் றாடும் அரங்கு 335

மன்னா உனக்கபயம் என்னா வனத்தீயிற்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து 336

ஆரும் திரியா அரையிருளில் அங்ஙனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டான் எதிர் 337

தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமணத்தில்
ஆக்கி யருளால் அரவரசைப் - போக்கி
அடைந்தான் அடைதலுமே ஆரழலோன் அஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவந்து 338