புல்லின் இதழ்கள/நெஞ்சிலே முள்


 
2. நெஞ்சிலே முள்

மூடியிருந்த அறையின் கதவுகளைத் திறந்து கொண்டு ஹரி கையில் தம்பூராவுடன் வெளியே வந்தான். குளுமையான இளங்காற்று அவனைத் தழுவிக் கொண்டே அறையினுள் புகுந்தது. காலை எட்டரை மணி வண்டிக்குப் பாகவதர் ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வர அவன் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும்.

தம்பூராவை மூலையில் சார்த்தி விட்டு அவசர அவசரமாகக் குருநாதருடைய அழுக்குத் துணிகளை மூட்டையாகச் சுருட்டிக் கொண்டு காவிரிக்குப் புறப்பட்டான் ஹரி.

சலவைக்குச் சலவை சாயம் மாறிக் கொண்டே வரும் மட்டமான துணியைப் போல-கணத்துக்குக் கணம் வானத்தின் நிறம் வெளுத்துக் கொண்டே வந்தது. தெருவில் இரண்டொரு வீடுகளில் சாணம் தெளிக்கிற சத்தம் கேட்டது. காலை நீராட்டத்தை முடித்துக் கொண்டு, வைதிகர்களும், வயோதிகர்களும், சில பெண்களும் ஆற்றிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். சிலர் தெருவில் இருந்த கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. திண்ணையில் படுத்திருந்த காளையர்களில் சிலர், போர்வை தெருவில் நழுவி விழுந்து கிடப்பது கூடத் தெரியாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஹரி வீட்டுக் கொல்லைப்புறமாகத் திரும்பிய போது யாரோ அங்கிருந்து மெல்லிய குரலில், “ஹரி, ஹரி!” என்று தன்னை அழைக்கிற சப்தத்தைக் கேட்டுத் திரும்பினான்.

கொல்லையில் பால் கறந்து கொண்டிருந்த பாகவதரின் பெரிய பெண் காயத்திரி, கையில் இருந்த பால் பாத்திரத்துடன் அவனை நோக்கி வேகமாக வந்தாள்.

“அதற்குள் ஆற்றுக்குப் புறப்பட்டு விட்டாயா ஹரி?”

அவளுடைய கேள்விக்கு உடனடியாகப் பதில் கூற அவன் தயங்கினான்; நிலத்தையும், கட்டை விரலையும் பார்த்தபடியே நின்றான்.

“அப்பா ஊரில் இல்லாத போது கூட ஏன் இத்தனை சீக்கிரம் ஹரி?” என்று அவள் கேட்டாள்.

“இப்பொழுது போனால்தானே கொஞ்சம் நிம்மதியாகக் குளிக்கலாம்? அக்கம் பக்கம் மற்றவர்களுடைய சௌகரியங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. இஷ்டத்துக்குத் துவைக்கலாம். மேலும், ஐயா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாமா?” என்றான்.

“நானும் அதைத்தான் சொல்ல இங்கு வந்தேன். அப்பா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாமா? இன்னும் இப்படி எத்தனை நாள்தான் கூச்சப்படுவாய்? அப்பா இருந்தால், உன்னை புதன்கிழமை காலையில் வெறுமனே போய் குளிக்க அநுமதிப்பாரா? கொஞ்சம் இரு; இதோ ஒரு நொடியில் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து வருகிறேன்.”

“வேண்டாம்; அதற்கெல்லாம் நேரம் இல்லை. எட்டரை மணிக்குள் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும். நேரமாகி விட்டது; நான் வருகிறேன்.”

“ஒன்றும் நேரமாகி விடாது. மூன்று மணியிலிருந்து பாடுகிறாய். கண் வேறு சிவந்து கிடக்கிறது; நிமிஷத்தில் வந்து விடுகிறேன்.” பதிலுக்குக் கூடக் காத்திராமல், காயத்திரி கையில் பாலுடன் வேகமாக உள்ளே சென்றாள். ஹரி அந்தத் திசையையே பார்த்தபடி சிலை போல் நின்று கொண்டிருந்தான்.

ஒன்பது வயதுப் பாலகனாக அந்த வீட்டில் நுழைந்தது முதல் காயத்திரியை அவனுக்குத் தெரியும். அன்பை வாரி வழங்குவதில் அவளுக்கு இணை அவளே. அதனால்தானோ என்னவோ, கடவுளின் அன்புக்கே அவள் வரையில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது.

‘கன்னிகாதான பலன் கிட்ட வேண்டும்’ என்று கருதி, ஏழு வயது காயத்திரியை, மாப்பிள்ளை என்ற பத்து வயது மணிப் பயலுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாகவதர். ஆனால், அவர் விரும்பியபடி கன்னிகாதான பலன் கிட்டியதே தவிர, கன்னிப் பெண் காயத்திரிக்கு வாழ்வுதான் கிட்டவில்லை. மணமான நாலைந்து மாதங்களுக்குள்ளேயே அவள் விதவை ஆகி விட்டாள். ஆம்-கணவன் என்ற பதவியில் இருந்த பத்து வயது மணி; கையில் கிட்டியிருந்த கனியைப் பற்றி அறியாமல், தோட்டத்திலுள்ள மாங்கனிக்காக மரத்திலேறிக் கீழே விழுந்து உயிரை விட்டான்.

இப்படி மலராமலே வாழ்க்கையை முடித்துக் கொண்ட காயத்திரியின் கதையை அவளொத்த வயதில் அந்த வீட்டையடைந்த ஹரியினால், அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்காக அநுதாபப்பட தெரியவில்லை. ஆனால் இப்போது—பத்து வருஷங்களுக்குப் பிறகு அதன் ஆழம், தன்மை, வேதனையின் வேகம் எல்லாம் அவனுக்கு விளங்கின. ஆனால், அவள் யாருடைய அநுதாபத்தையும், ஆறுதலையும் விரும்பாமல், எதிர்நோக்காமல் அவற்றுக்கு அப்பாற்பட்டவளாகத் தன்னை மாற்றிக் கொண்டு நின்றாள். இப்படியே காயத்திரியின் நினைவில் நின்று, நின்று ஹரிக்கு கால் கடுத்துக் காலம் கரைந்ததே தவிர, உள்ளே சென்ற காயத்திரியையும் காணோம்; எண்ணெயையும் கானோம். மாறாக, உள்ளேயிருந்து வந்த காரசாரமான விவாதங்களே அரைகுறையாக அவன் செவிகளைத் தாக்கின.

காயத்திரியிடம், “ஒரு முறை எண்ணெய்க் குளி தவறி விட்டால்தான் என்ன? அதற்காக நீ ஏன் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்?” என்ற சுசீலாவின் கேள்வியும், தாயின் சமாதானமும் அவன் செவிகளில் தேய்ந்து ஒலித்தாலும் அவை பாய்ந்து உள்ளத்துள் செல்லத் தவறவில்லை. துக்கம் பெரும் உருண்டையாக அவன் நெஞ்சை அடைத்தது; அவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.

தான் இந்தப் புவியில் வந்த வழியையே எண்ணிக் கொண்டு சென்றவனுக்குக் காவிரிக்குச் செல்லும் வழியில் கவனம் இல்லை. கவனமில்லாமலே, பழகிப் போன கால்களை நம்பிச் சென்றான்.

துாரத்தில் சுழலிட்டு ஓடும் காவிரி கண்ணுக்குத் தெரிந்தது. அவனது எண்ணத் துரும்புகள் அலைக்கழி பட்டு அமிழ்ந்தும், மிதந்தும் போய்க் கொண்டிருந்தன.

எத்தனை முயன்றும் காயத்திரியை அவனால் மறக்க முடியவில்லை. ‘என்னிடம் காயத்திரி ஏன் இப்படி அன்பும், அக்கறையும் காட்டி, உடன் பிறந்தவளிடமே பேச்சு வாங்கிக் கொள்ள வேண்டும்? சுசீலா கூறுவதும் மெய்தானே? பணமும், பண்டமும் கொடுத்துப் பாட்டுச் சொல்லிக் கொள்கிற எத்தனையோ சிஷ்யர்கள் இருக்கிற போது; தண்டச் சோறு போட்டுச் சங்கீதம் சொல்லிக் கொடுப்பதோடு, தீவட்டித் துரைக்கு எண்ணெய்க் குளி ஒரு கேடா? என்னால் அவர்களுக்கு என்ன உபயோகம்? அவர்களின் குடும்பத்துக்கு என்ன ஆதாயம்? உபயோகம் இல்லாத என்னிடம் அன்பும், ஆதரவும் காட்ட யார்தாம் விரும்புவார்கள்? என்னிடம் இரக்கம் காட்டுகிறவர்களைக் கூடத் தண்டிப்பேன் என்று விதி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் போது, அதை இந்தக் காயத்திரியால் எதிர்த்து வெல்ல முடியுமா? எனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்; நான் அப்படியே பழகிப் போனவன். ஆனால் என்னிடம் அன்பு செலுத்தும் குற்றத்துக்காக ஒருவர் துன்புறுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. எனக்காக யாரும் அநுதாபப்பட வேண்டாம். இதை. எப்படி, யார் காயத்திரிக்குச் சொல்லுவது?’ இதை எண்ணித்தான் அவன் மனம் குமுறினான்.

எண்ணெயைப் போக்கச் சிகைக்காய் உண்டு, எண்ணெயால் எழுந்த வேதனையைப் போக்கக் காவிரிக்கும் வலிமை இல்லையே!

தண்ணீரில் மூழ்கி எழுந்தான் ஹரி. குருநாதரின் துணிகளை எல்லாம் சிரத்தையுடன் துவைத்து, அலசிக் கல்லின் மேல் பிழிந்து வைத்தான். சுருள் சுருளான அவனது அழகிய கேசத்திலிருந்து, சிவந்த மேனியில் வழிந்து கொண்டிருந்த தண்ணீருடன், அவனது இமை வழி இறங்கிய கண்ணீரும் கலந்தது. குளித்ததனால் உடற்புழுக்கம் தணிந்தது; ஆனால், மனப் புழுக்கம் தணிய மருந்து ஏது? தலையைத் துவட்டிய போது அவன் எதிர் மண்டபத்தைக் கவனித்தான்.

சுவரில் எழுதிய சித்திரம் போல் அசைவற்று, அதைப் பார்த்தபடியே அவன் ஒரு கணம் நின்றான். இளமை நினைவுகள் அவனை ஈர்த்தன.

வயிற்றுக்குச் சோறில்லாமல், வீட்டிலிருந்து அடித்துத் துரத்தப்பட்ட பாலகன் ஒருவன் இனிய குரலில், மனம் போனபடி, சங்கீத விதி எதற்கும் கட்டுப்படாமல், காலைப் பொழுதில் அந்த மண்டபத்தில் பாடிக் கொண்டிருந்தான். அப்போது, அவனுக்கு அடுத்த வேளை உணவு இல்லையே என்ற நினைப்பு இல்லை. கடந்த நாள் இரவு பட்டினி கிடந்தோமே என்ற எண்ணம் இல்லை. நாம் என்ன பாடுகிறோம், யாருக்காகப் பாடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், யாருக்கும் அஞ்சாமல், குரலை உயர்த்திப் பாடிக் கொண்டிருந்தான்.


“வள்ளிக் கணவன் பேரை
 வழிப்போக்கர் சொன்னாலும்
 உள்ளம் குழையுதடி கிளியே;
 ஊனும் உருகுதடி கிளியே—
 ஊனும் உருகுதடி கிளியே”