மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/தொடர்பு: II

தொடர்பு: II

இருபத்தினான்கு தீர்த்தங்கரரின் சரிதங்களைச் கூறுகிற ஸ்ரீபுராணம் என்னும் ஜைன சமய நூலிலே, ஆதிநாதர் புராணத்திலே, நவநிதிகளின் இயல்பும் ஜீவ அஜீவ ரத்தினங்களின் இயல்பும் இவ்வாறு கூறப்படுகின்றன :——

" இவனுக்கு நிதிகள் ஒன்பது அவையாவன —— காளம், மஹாகாளம், நைஸர்ப்பம், பாண்டுகம், பத்மம், மாணவம், பிங்கலம், சங்கம், சர்வரத்தினம் என. அவற்றுள், காளம் என்னும் நிதி, வீணா வேணு மிருதங்கம் முதலாகிய வாத்தியங்களைக் கொடுக்கும். ம்ஹாகாளம் என்பது உழவு தொழில் வரைவு வாணிஜ்யம் வித்யா சில்பங்களை முடிக்குங் கருவிகளைக் கொடுக்கும். நைசர்ப்பம் என்பது ஆசன சயனாதிகளைக் கொடுக்கும். பாண்டுகம் என்பது சர்வ தான்யங்களையும் ஷட்ரசங்களையும் கொடுக்கும். பத்மம் என்பது, பட்டுந்துகிலும் முதலானவற்றைக் கொடுக்கும். மாணவம் என்பது, ஸஸ்த்ரங்களையும் அஸ்த்திரங்களையும் கொடுக்கும். பிங்கம் என்பது திவ்யாபரணங்களைக் கொடுக்கும். சங்கம் என்பது, படகமத்தளாதிகளைக் கொடுக்கும். சர்வரத்னம் என்பது நானாவித சர்வரத்தினங்களையும் கொடுக்கும்.

இவனுக்கு இரத்தினங்கள் பதினாலு. அவற்றுள் ஜீவரத்னம் ஏழாவன —— ஸ்திரீயும் புரோகிதனும் சேனாபதியும் கிருகபதியும் ஸ்தபதியும் கஜமும் அஸ்வமும் என. அஜீவரத்னம் ஏழாவன சக்கரமும் தண்டமும் சத்ரமும் மணியும் காகிணியும் வாளும் சர்மமும் என.

முற்றிற்று.