மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/பதிப்புரை

பதிப்புரை.


"வடமொழி தென் மொழி என்னும் இரண்டு மொழிகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச்சீராக்கி அமிழ்திலும் இனிய சுவையும், ஆழ்ந்த கருத்தும், தெளிவும், தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும் மேன்மையுடையதாக்கி அவைகளிற் பல காவியங்களையும் நீதி நூல்களையும் செய்து வைத்தவர்கள் ஜைன சமயப்பேரறிஞர்களேயாவர்," என, யசோதர காவியத்தை முதன் முதலில் பதிப்பித்த கில்லயம்பூதூர் உயர்திரு. வெங்கடராம அய்யங்கார் அவர்கள் அக்காவியத்தின் முகவுரையில் புகழ்ந்துள்ளார்கள்.

உண்மையில் ஜைனப் பேரறிஞர்கள் உலகம் உய்ய வேண்டி காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கொண்டு அறிவுக்கலைகளை, அன்பு நெறிகளை ஆர்வத்தோடு வளர்த்துள்ளனர். அதுமட்டுமன்று! அத்தகைய அறிவுக் கலைகளில் தோன்றும் கருத்துக்களையும் வரலாற்றுச் செய்திகளையும் கல்லிலேயும் செதுக்கிவைத்தனர். ஓவியங்களின் வாயிலாகவும் தீட்டி வைத்தார். இவ்வுண்மைாளை இந்தியா முழுவதுங் காணப்படும் மகள், குகைகள், கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் முதலியவற்றல் அறியலாம். அவற்றினுள் ஒன்றே நமது மாமல்லபுரத்துச் சிற்பங்கள்.

இச்சிற்பங்களின் உண்மை வரலாறுகளை அறிந்தோ அறியாமலோ அச்சிற்பங்களை "அர்ச்சுனன் தவம்" என்றும் "பகீரதன் தவம்" என்றும் பலவாறாக எழுதி வெளியிட்டுள்ளனர். ஆனால் மாமல்லரச் சிற்பங்களை நேரே சென்று பார்த்தால் எதோ சமய வெறி இங்கு நடனம்புரிந்துள்ளதென்பதை ஆங்காங்குள்ள சிறு சிறு கோயில்களின் மத்தியில் உள்ள உருவங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளவற்னின்றும் தெளிவாகும். காய்தல், - உவத்தலின்றி நடுநிலைமையோடு ஆராயும் புலவர்களும், கல்வெட்டு நிபுணர்களும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் இந்நாட்டிற்குத் தேவை தேவை யென்பதை அங்கே அழிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் அபயக்குரலால் அழைப்பன போன்று தோன்றுகின்னை!

நமது - தமிழகத்தில் ஆராய்ச்சியின் பெயரால் தமிழ்த் தொண்டின் பெயரால் எத்துணைக் கலைக் கொலைகள் நடந்து வருகின்றன வென்பதை எடுத்துக்கூறவும் வெட்கமாயிருக்கிறது! ஒருசமயத்திற்குரிய நூல்களையும் வரலாற்றையும் திருத்தியும் கூட்டியும், குறைத்தும் மறைத்தும் எழுதி வெளியிடுவது சகஜமாகி வீட்டது. இவைகளை யெல்லாம்விட பண்டைய நூலாசிரியர்களை மதமாற்றும் தொண்டுதான் தலை சிறந்து விளங்குகின்றது!

அந்தோ! இதைவிட ஒரு நாட்டிற்கும், அந்நாட்டின் கலைகளுக்கும், வரலாற்றுண்மைகளுக்கும் கேடு விளைவிக்க வேறு என்ன வேண்டும்?

"சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந் தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி'

என்ற தேவர் திருவாய் மொழியைச் சிரமேற்றாங்கி "கிருஸ்தவமும் தமிழும்" "பௌத்தமும் தமிழும்" என்ற இரு அரும் பெரும் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுப் பேரும் புகழும் பெற்ற உயர் திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களே மாமல்லபுரத்துச் சிற்பங்களை நடு நிலைமையோடு ஆராய்ந்து அவை ஜைன சார்புடையவை எனப் பல ஆதாரங்களுடன் இந்நூலில் எடுத்து விளக்கியுள்ளார்.

தொல்காப்பிய உரையாசிரியராகிய இளம்பூரணரை "புலவுத் துறந்த நோன்பியராதலாற் பொய் கூறார்" என நக்கீரர் போன்ற புலவர் பெருமக்கள் அவருரையைப்போற்றிப் புகழ்ந்து ஏற்றது போல் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இவ்வாராய்ச்சி உரையையும் சென்னை, ஆர்க்கியாலஜி கழகத்தில் நடந்த ஆராய்ச்சிக் கூட்டத்தில் அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டதால் இதன் உயர்வையும் உண்மையையுங் கருதி யானும் ஆவலோடு அச்சிட்டு வழங்க முன் வந்தேன், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் சிறந்த தமிழ்த்தொண்டை இத்தமிழகம் என்றும் மறவாததுபோலவே ஜைன பெருமக்களும் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அவ் அறிஞர் எழுதியுள்ள "சமணமும் தமிழும்" என்ற அரிய ஆராய்ச்சி நூலினையும் விரைவில் அச்சிட்டு வெளியிட முயற்சிக்கின்றோம் என்பதையும், அப்பெரியாருக்கும் தமிழகத்திற்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

10—6—50
வேதாரணியம்,
இங்ஙனம்.
அ. ஜீ. அனந்தராஜய்யன் முதலியார்,