மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/இரவலர் யார்? புரவலர் யார்?

11. இரவலர் யார்? புரவலர் யார்?


“வெளிமான், உன்னிடம் பரிசில் பெற வந்தேன்!” என்றார் பெருஞ்சித்திரனார்.

“தம்பி, இவர்க்குப் பரிசில் தருக” என்று தன் தம்பியை நோக்கிக் கூறினான் வெளிமான்.

இளவெளிமான், புலவர் திறம் உணரா இளையன். எனவே, அவன் தன் கைக்குக் கிட்டிய பொருளைக் கொண்டு வந்து பரிசெனக் கொடுத்தான். பெருஞ்சித்திரனார் பரிசைப் பார்த்தார். இளவெளிமான், முகத்தைப் பார்த்தார். பின்னர் சென்று விட்டார்.

அவர் அம்பென விரைந்து குமணனை அடைந்தார். குமணன் புலவர் முகத்தைப் பார்த்தான்; அவர் கண்களில் பனிக்கும் நீர்த் துளியைக் கண்டான். அவன் கைகள், நீண்டன. புலவர் பாடினார்; குமணன், பெருஞ்சித்திரனாருக்குக் கை நிறையப் பரிசு கொடுக்கவில்லை, அவர், கண் நிறையப் பரிசு கொடுத்தான்!

என்ன பரிசு என்று நினைக்கிறீர்கள்? ஒரு பெரிய யானை!

சித்திரனார் உள்ளத்தில் ஒரு கணம் மின் வெட்டிற்று.

அவர் யானையை ஒட்டிக் கொண்டு, தன் இல்லத்திற்கா போனார்? இல்லை. இல்லை. நேரே இளவெளிமானிடம் சென்றார். அவன், காவல் மரத்தில், யானையைக் கட்டினார்.

“அரசே, அதோ, உன் காவல் மரத்தில் கட்டியிருக்கும் யானையைப் பார் அது புரவலன் தந்த பரிசில். இப்போது இதனை இரவலன் உனக்கு அளிக்கிறான். நின்னிடத்து விட்டுச் செல்லுகிறேன். ஏற்றுக் கொள் இதனை. சென்றுவருகிறேன்.”

“புரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள், அவ்வாறே இரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள்”, “காவல் மரமும் கட்டப் பெற்றிருக்கும் யானை”யும் கதை கூறின.