மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/அற்பப்புத்தி உடையவன்

15
அற்பப் புத்தி உடையவன்

சில ஆண்டுகளாக, ஒரு அரசனுக்கு குழந்தை பிறக்க வில்லை. மற்றொரு அரச குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி அமைச்சர்கள் முதலானோர் ஆலோசனை கூறினர். ஆனால், அரசன் அதை ஏற்க மறுத்து விட்டான்.

சில மாதங்களுக்குப் பிறகு, அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாடு முழுவதும் மகிழ்ச்சியாக விழா கொண்டாடியது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியின் நினைவாக, அரண்மனையில் பணிபுரிவோர் அனைவருக்கும் வேட்டி, துண்டு, புடவை முதலியவற்றை வழங்குமாறு உத்திரவிட்டான் அரசன்.

எல்லோரும் மகிழ்ச்சியோடு வேட்டி, துண்டு, புடவையோடு வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.

அவர்களில் ஒருவன் மட்டும் மிகுந்த மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தான்.

“ஏன் இப்படி துள்ளிக் குதித்து ஒடி வருகிறாய்?" என்று வழியில் அவனைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

“அரண்மனையில் எனக்கு இரண்டு வேட்டி, இரண்டு துண்டு கொடுத்தார்கள்” என்றான்.

“கையில் ஒரு வேட்டி, ஒரு துண்டுதானே வைத்திருக்கிறாய்?” என்று கேட்டான் அவன்.

“என் பக்கத்து வீட்டில் இருக்கும் ராகவனுக்குக் கொடுக்கவில்லை. அதனால், எனக்கு இரண்டு கொடுத்ததாகத் தானே எண்ண வேண்டும்” என்றான் அவன்.

அடுத்த வீட்டுக்காரனுக்குக் கிடைக்கவில்லை என்பதில் இவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

சிலர் இப்படி அற்ப சந்தோஷம் கொள்வார்கள்.