மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/ஆண்டிகள் கூடி மடம் கட்டுதல்

41
ஆண்டிகள் கூடி மடம் கட்டுதல்

ஒரு சிறிய நகரத்தில் இருந்த ஆண்டிகள் (துறவிகள்) வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாங்கி உண்பார்கள்.

இரவில் ஒரு மடத்தில் வந்து தங்குவது வழக்கம்.

மடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. கொசுக்கடி குப்பை கூளங்கள், சாக்கடை இவற்றால் மோசமாக இருந்தது. இடமும் போதாது. என்றாலும், ஆண்டிகள் வந்து சிரமத்தோடு அங்கே இரவில் தங்கி காலையில் எழுந்து செல்வார்கள். “இப்படி எத்தனை நாட்களுக்கு தான் நாம் கஷ்டப்படுவது? இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நமக்கு என்று தனியாக ஒரு மடம் கட்டி, அதில் வசதியாக இருக்க வேண்டும் ஆளுக்கு ஒரு அறை, பொதுக் கூடம் ஒன்று, கிணறு இவற்றை அமைத்துக் கொண்டால் சுகமாக இருக்கும் என்று இரவில் எல்லோரும் கூடிப் பேசுவார்கள். பிறகு தூங்கிவிடுவார்கள்.

காலையில் எழுந்ததும் வழக்கம் போல் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிச்சை எடுக்கப் புறப்பட்டு விடுவார்கள்.

மீண்டும் இரவு மடத்துக்கு வருவார்கள். மடம் கட்டுவது பற்றி பேசுவார்கள், பிறகு, தூங்கிவிடுவார்கள் தினமும் வாயால் பேசி, மனதால் மடத்தைக் கட்டி அந்த ஆண்டிகள் காலத்தை கழித்தார்கள்.

பிச்சை எடுத்து உண்னும் ஆண்டிகள் மடம் கட்ட முடியுமா?