மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/கார் இருப்பது எதற்காக?

43
கார் இருப்பது எதற்காக?

ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்.

அவரிடம் கார் ஒன்றும், மாட்டு வண்டி ஒன்றும் இருந்தது.

ரெங்கூனில் இருந்த செட்டியாருடைய வட்டிக் கடையை அரசு சட்டம் காரணமாக, மூடும்படி ஆயிற்று. பின்னர், அங்கே இருந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொண்டது.

செட்டியாரின் வசதிகள் யாவும் குறைந்து விட்டது, மாட்டு வண்டியை விற்று விட்டார். வேலை ஆட்களையும் விலக்கி விட்டார்.

வீட்டில் இருந்த நகைகள் முதலானவற்றை விற்று, மிகுந்த சிக்கனத்தோடு வாழ்ந்து வந்தார்.

அந்த நிலையில் காரை மட்டும் விற்கவில்லை. டிரைவரையும் விலக்கி விட்டார். காரும் பழுதாகி விட்டது. ஆனால் அதை விற்கவில்லை.

தினமும் விடியற்காலையில், செட்டியார், அவருடைய மனைவி, அவருடைய மகன் ஆகிய மூவரும் ஷெட்டிலிருந்து தள்ளிக் கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்துவார்கள். இரவு பத்து மணிக்குப் பிறகு. முன்போல், காலை மூவரும் தள்ளிக் கொண்டு போய் ஷெட்டில் நிறுத்துவார்கள்.

ஒரு நாள் செட்டியாரின் மகன், “ஓடாத காரை விற்றுத் தொலைக்காமல் காலையில் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்துவதும், இரவில் தள்ளிக் கொண்டு போய் ஷெட்டில் விடுவதும் ரொம்பவும் சிரமமாக இருக்கிறது” என்று சங்கடப்பட்டான்.

அதற்குச் செட்டியார், “கெளரவமாக வாழ்ந்தேன். கார் வைத்துக் கொண்டிருப்பதால் பெருமை இருக்கிறது; ஊரார், உறவினர் மதிப்பு வைத்திருக்கின்றனர்.

நல்ல செழிப்புள்ள குடும்பத்திலிருந்து, உனக்குப் பெண்ணைக் கொடுக்க முன்வருவார்கள். திருமணம் நடந்த பின், காரை விற்று விடலாம்” என்றார்.

நொடித்துப் போனாலும், சிலர் கெளரவத்துடன் இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்வது இயல்பு. அது ஒரு போலியான வாழ்க்கை!