மார்ட்டின் லூதர் கிங்/பதிப்புரை



பதிப்புரை

ஏய்த்துப் பிழைப்பவனுக்கு எச்சரிக்கை மணியடித்து, ஏழையை பணக்காரன் இழித்துப் பழித்துக் கேவலமாக மதிப்பதைப் போக்கி, சமதர்மம் பேசிய சான்றோர்-மனிதனை மனிதன் அடிமைகொண்டு மிருகமாக நடத்துவதைக் கண்டித்து அடிமை விலங்கை அறுத்தெறிந்த அறிஞர்-சொந்த நாட்டிலே மக்கள் தங்கள் சுபிட்சத்தையும், சுகவாழ்வையுமிழந்து அன்னியன் ஆட்சியிலே அல்லலுற்றுக் கிடக்கையிலே தியாகசொரூபமாய், தீரத்துடன் போராடி சுதந்தரத்தை வாங்கித்தந்த தியாகிகள்-மூடப் பழக்கத்துடன் மக்கள் ஐக்கியமாயிருப்பதறிந்து முறையாக, படிப்படியாக பகுத்தறிவுப் பிரசாரம் செய்து, பாடுபட்ட பகுத்தறிவு வாதிகள்-ஆகிய இவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களே நாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் சமர்ப்பிக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு அறிஞர், அண்ணாதுரை அவர்களின் புத்தகங்களை அடுக்கடுக்காக அடுத்தடுத்து வெளியிட்டபொழுதே உண்டாயிற்று. 

ஆகவே தமிழ்நாட்டு எழுத்தாளர் வரிசையிலே முன்னணியில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் தோழர் சி. பி. சிற்றரசு அவர்களை நேரில் சந்தித்து என் அவாவை வெளியிட்டேன். அதற்கு அவர் சிறிதும் அட்டியின்றி என் ஆசைக்கிணங்கி, அன்புடன் இசைந்தார்கள். அதன் பலனாகவே இந்நூலை தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுக்குத் தமிழ் மன்றத்தின் மூலம் சமர்ப்பித்துள்ளேன்.


தமிழ் மன்றம்

திருச்சி

இரா. இராசன்