மார்ட்டின் லூதர் கிங்/அறிமுகம்

அறிமுகம்

கடலின் அடிவாரத்தில் முத்தும், வேகமான நீர்வீழ்ச்சியில் மின்சாரமும், அமைதி கொள்பவனிடம் ஓர் அறிவும், நீண்ட விவாதத்தின் முடிவில் ஓர் உண்மையும், நிகரற்ற வாள்வீரன் நெஞ்சத்தில் ஓர் அஞ்சாமையும் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல, ஜர்மனியின் தெருக்களில் ஒருவன் திரிகின்றன். ஏன் இப்படித் திரிகின்றான் என்று யாருக்கும் பல நாட்கள் புலப்படாமலே இருந்தது.

அன்று அவனை யார், "இவன் ஓர் தூங்கும் எரிமலை," என்று எண்ணப் போகின்றார்கள். சமுதாயத்தைச் சாகடிக்கும் நயவஞ்சகர்களைத் தன் நாவன்மையால் வென்று, அவர்களுக்கு சாவோலை நீட்ட வந்த சமர்க்களச் சிங்கம் என்று யாருக்குத் தெரியும்.

தனக்கென வாழாத பிறர்க்குரியாளன், வெறும் வாதங்களால் மாத்திரமின்றி சந்தனக்கட்டையைத் தேய்த்துக் தேய்த்து அதில் ஓர் மணம் காணுவதைப் போல், மதத்தைத் துருவித்துருவி ஓர் உண்மையைக் கண்டுபிடித்த உத்தமன் என்று உலகம் போற்றும் என்று யூகிக்கமுடியாத பருவம்.

தான் கண்ட உண்மையைத், தண்டனைக்குப் பயந்து மறைத்துவைத்து, தானே மனம் புழுங்கிச் சாகாமல், தக்க நேரத்தில் தரணியெல்லாம் அறியச்செய்த தன்னுணர்வாளன் என்பதை தார்வேந்தனும், போப்பும் கனவிலும் கண்டறிந்திருக்க மாட்டார்கள்.

அந்த உருவுடையோனைப் பற்றியே இங்கு நாம் ஆராய்கிறோம். அவன் ஒப்பற்ற வீரன். அழகுக்காக சிலவற்றை, குணத்துக்காக சிலவற்றை, தன்மைக்காக சிலவற்றை, தோற்றத்திற்காக சிலவற்றை, தேவைக்காக சிலவற்றை, பெருமைக்காக சிலவற்றை நாம் அணுகுவகைப்போல, இவரை நாம் அறிவால் அணுகுகின்றோம். அஞ்சாமைக்காக நெருங்குகின்றோம். வாதத்துக்காக வாழ்த்துகிறோம். வீரத்துக்காக் போற்றுகிறோம். அந்தமாவீரன் மார்டின் லூதரைப் பற்றியே இங்கே குறிப்பிடுகிறோம்.