மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/3. பிறமண்டிலங்களின் புதைபொருள்கள்

3. பிற மண்டிலங்களின் புதை பொருள்கள்

ஆராய்ச்சி இடங்களிற் பாயும் ஆறுகள்

இந்தியாவில் ஆராய்ச்சிக்குரிய பிற இடங்களை அறியுமுன், அவ்விடங்கள் அமைந்துள்ள ஆற்று வெளிகளைப் பற்றி அறிதல் இன்றியமையாததாகும். ஆதலின், சிந்து நீங்கலாகவுள்ள கங்கை, நருமதை,கோதாவரி,கிருஷ்ணை, காவிரி, தாமிரபரணி, பெரியாறு என்னும் யாறுகளைப் பற்றியும் அவை பாயும் இடங்களைப் பற்றியும் ஈண்டு முதலில் குறிப்பிடுவோம்.

கங்கை

இமயமலையின் தென் பள்ளத்தாக்குகளிலிருந்து புறப்படும் ‘பாகீரதி அலகண்டா’ என்னும் இரண்டு சிற்றாறுகளின் கலப்பே கங்கை யாறு ஆகும். இஃது அல்லகபாதை அடையும்வரை மிக்க நீரோட்டம் உடையதன்று. அல்லகபாதில் மிகப் பெரிய யாறாகிய யமுனை என்பது கங்கையிற் கலக்கின்றது. அங்கிருந்து கங்கையாறு ஐக்கிய மண்டிலத்திலும் வங்காள மண்டிலத்திலும் பாய்ந்து வங்கக்கடலிற் கலக்கின்றது. இதன் மொத்த நீளம் 2490 கி.மீ. ஆகும். இதில் கலப்புறும் யாறுகள்-சர்தா, இராம் கங்கா, கும்டி, கோக்ரா, சோனை, கண்டக்குசி என்பன. இதன் சங்கமுகத் துறையில் உள்ள புகர் நில வெளி 128 முதல் 352 கி. மீ. அகலமுடையது. இதன் பாய்ச்சலைப் பெறும் இடம் 39,000 சதுரக் கற்கள் ஆகும். இது மிகப் பழைய கால முதலே சிறப்புடையாறாகக் கருதப்பட்டு வருகின்றது. இது பாய்கின்ற நிலம் கங்கை வெளி எனப்படும். இதன் கரையோரத்தில் இருந்த பண்டை நகரங்கள் (வட) மதுரை, கெளசாம்பி, பிரயாகை, வாரணாசி (காசி) முதலியன.

சிந்து வெளியிற் குடியேறிய ஆரியர் நாளடைவில் கங்கையமுனை யாறுகட்கு இடையில் உள்ள நிலப்பகுதியிலும் குடியேறினர். அங்கனம் அவர்கள் குடியேறும் பொழுது அங்கு வாழ்ந்திருந்த பண்டை மக்களோடு போரிட்டனர். “கிருஷ்ணன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட ‘கிருஷ்ணர்’ (கறுப்பர்) யமுனைக் கரையில் வாழ்ந்திருந்தனர். அவருள் ஐம்பது ஆயிரம் பேரை ஆரியர் தலைவனான இந்திரன் கொன்றான்”[1] என்று ரிக்வேதம் கூறுவதிலிருந்து, கங்கை வெளியிற் பல இடங்களில் பண்டை மக்கள் நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தனர்[2] என்னும் உண்மையை உணரலாம்.

நருமதை-தபதி யாறுகள்

இவை வட இந்தியாவிற்குத் தென் எல்லையாகவுள்ள விந்திய-சாத்பூரா மலைத் தொடர்களிலிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கிச் சென்று அரபிக் கடலில் கலக்கின்றன. நடு இந்தியாவின் தெற்கில் உள்ள மலைக் கோட்டங்களும், நடு மண்டிலங்களின் வடக்கில் உள்ள மலைக்கோட்டங்களும் முறையே விந்தியசாத்பூரா மலை நாடுகளிற் கலந்துள்ளன. இவ்விரு மலைத் தொடர்கட்கும் இடையே சிறந்த யாறாகிய தருமதை ஒடிக்கொண்டிருக்கிறது.இந்த இருமலைத் தொடர்களைச் சார்ந்த நாடுகளில், பல வகைப்பட்ட மலைவாணர் வாழ்கின்றனர். இம்மலை நாடுகளில், அடர்ந்த காடுகள் மிக்குள்ளன இவற்றைக் கடந்துபோதல் இயலாத செயல், போக விரும்புபவர், கரையோரங்கள் வழியாகவும் கடல் வழியாகவும் போகலாம். இம்மலைப் பகுதிகளாற்றான் வட இந்திய வரலாறு வேறாகவும் தென் இந்திய வரலாறு வேறாகவும் இருக்கின்றன.

தென்னாடு

விந்திய-சாத்பூரா மலைத்தொடர்கட்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதி தென்னாடு அல்லது ‘டெக்கான்’ எனப்படும். இம் மேட்டுப் பகுதி கிழக்கு நோக்கியும் தென்கிழக்கு நோக்கியும் சரிந்துள்ளது. அதனால் மகா நரி, கோதாவரி, கிருஷ்ணை, காவிரி என்னும் பெரிய யாறுகள் கிழக்கு நோக்கி ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த யாறுகள் பாயும் நிலப்பகுதிகள் வளமுடையனவாகும் மக்கள் தொகுதி மிக்குடையனவாகும். இந்த யாறுகள் மேற்கு மலைத் தொடர்ச்சியில் உற்பத்தியாவன.

கோதாவரி

இந்தப் பெரியாறு 1440 செ மீ நீளமுடையது. இதன் சமவெளியில் அரிசி, புகையிலை, எண்ணெய் விதைகள், கரும்பு முதலியன பெருவாரியாக விளைகின்றன. இதனை அடுத்துள்ள காடுகளில் தேக்க மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்த யாற்றின் நெடுந்துரம் ஹைதராபாத் நாட்டில் அடங்கி இருத்தலால், இந்த யாற்றால் உண்டாகும் பெரும்பயனை அந்நாடே பெற்றுவருகின்றது.

கிருஷ்ணை

இது 1280 செ மீ நீள முடையது. 180 செ. மீ. தொலைவு பம்பாய் மண்டிலத்தில் ஒடிப்பின்பு ஹைதராபாத்திற்குட் புகுந்து, பின்னர்ச் சென்னை மண்டிலத்தை அடைகின்றது. இதன் பாய்ச்சலைப் பெற்ற மருத நிலங்களில் நெல் முதலிய பலவகைப் பொருள்கள் வளமுறப் பயிராகின்றன்.

காவிரி

இந்த யாறே தமிழ் நூல்களிற் சிறப்புப் பெற்றதாகும். இது மேற்கு மலைத் தொடரில் தோற்றமாகி, மைசூர்நாட்டின் வழியே தமிழ் நாட்டை அடைந்து வங்கக் கடலில் கலக்கின்றது. இதன் நீளம் 760 செ. மீட்டராகும். இதன் பயனை அடைந்துவரும் நிலம் 76,800 ச. கி. மீ பரப்புடையது. இது தஞ்சாவூர்க் கோட்டத்தில் கடலோடு கலக்கின்றது. இது பொன்னைக் கொழிக்கும் பெருமை யுடையதாதலின், ‘பொன்னி எனப் பெயர் பெற்றது.

தாமிரபரணி

இந்த யாறும் பொன் கொழிக்கும் பெருமை பெற்றது. இது திருநெல்வேலிக்கோட்டத்திற் பாய்கின்றது. இதனை அடுத்துள்ள மருத நிலங்கள் மிக்க விளைச்சலை நல்குகின்றன. இது பாயும் “திருநெல்வேலிக் கோட்டத்தில் பண்டைப் புகழ்பெற்ற கொற்கை முதலிய பாண்டியர் நகரங்கள் மறைந்து கிடக்கின்றன.

பேரியாறு

இதுமேற்கு மலைத்தொடர்ச்சியில் தோன்றி மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்றது; திருவாங்கூர் நாட்டில் தோன்றிக் கொச்சி நாட்டிற் பாய்கின்றது.

ஆற்று வெளிகளில் பண்டை மக்கள்

இந்தியாவில் உள்ள இந்த யாறுகள் பாயப் பெற்றுள்ள இடங்களிலும் மலை நாடுகளிலும் பழைய கற்கால மனிதரும் புதிய கற்கால மனிதரும் செம்புக்கால மனிதரும் வெண்கலக்கால மனிதரும் இரும்புக்கால மனிதரும் கிராமங்களையும் நகரங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தனர் என்பது கூறாமலே விளங்கும். இவர்கள் இங்ஙனம் வாழ்ந்திருந்தனர் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இனி, அச்சான்றுகளை ஒரளவு முறையே காண்போம்.

ஐக்கிய மண்டலத்துப் புதை பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவும் ஹரப்பாவும் தோண்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே-சிந்துவெளி நாகரிகம் பரவி இருந்த உண்மை வெளிப்படுவதற்கு முன்னரே-கங்கை ஆற்றுப் பாய்ச்சல் நாடுகளில் செம்பினாலாய வாட்களும், வரலாற்றுக் காலத்துக்கு முன் பயன்படுத்தப்பட்ட கத்திகளும், மனித உருவம்போலச் செய்யப்பட்ட பொருள்களும் கிடைத்துள்ளன. மனித உருவம் போன்ற பொருள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த முத்திரைகள் சிலவற்றுள் காணப்படும் மனித உருவம் போன்றே இருந்தன.

ஜெனரல் கன்னிங்காம் என்பாரும் பிறரும் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்குகளாகிய காஜிப்பூர், காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பல இடங்களில் நிகழ்த்திய ஆராய்ச்சி மூலம், செம்பினாற் செய்யப்பட்ட கருவிகள் மட்டும் இன்றிப் பல ஒவியங்களும் சிவப்புக் கற்களாலாய மணிகளும், சிந்து ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கிடைத்தவற்றை ஒத்த பல பொருள்களும் வெளிப்பட்டிருக்கின்றன. வாரணாசி காசிக் கோட்டத்தில் சில செம்புக் கருவிகளும் சக்கிமுக்கிக் கற்களும் கிடைத்தன. இவைபோலவே, கங்கை ஆற்றின் எதிர் கரையிலுள்ள காஜிப்பூர்க் கோட்டத்திலும் பல பொருள்கள் கிடைத்திருக்கின்றன.

கெளசாம்பி தோன்றிய காலம்

ஐக்கிய மண்டிலத்தின் பல இடங்களில் பண்டைக்காலப் பொருள்கள் பல கிடைத்துள்ளன. ஓரிடத்தில் ஒன்பது வாய்ச்சிகள் உட்படப் பதினாறு செப்புக் கருவிகள் கிடைத்தன; இருபுறமும் அவ்வாறு கணைகளுடன் கூடிய செம்பாலாய அம்பு முனைகள் அகப்பட்டன.வடமதுரையில் ஒரிடத்தில் இருந்த மண்மேட்டைத் தோண்டியபோது செம்பாலாய பல வாய்ச்சிகளும் அம்பு, வேல், போன்ற எறிபடைகளும் கிடைத்தின. ‘ஷாஜஹான்பூர்’ கோட்டத்தில் செம்பாலாய ஈட்டிமுனை ஒன்று கிடைத்தது. இந்தச் செம்பு ஈட்டி இப்பொழுது இலக்ஷ்மணபுரி-பொருட் காட்சி நிலையத்தில் காட்சி அளிக்கின்றது. இதுபோல, ‘இட்டவா’ கோட்டத்தில் கிடைத்த பிறிதோர் ஈட்டி இப்பொழுது பிரிட்டிஷ் பொருட்காட்சி நிலையத்தில் உள்ளது. பிறிதோர் இடத்தில் மனித உருவம் போன்ற கருவி ஒன்றும் நீண்ட கனத்த வாள் ஒன்றும் கிடைத்தன. கங்கை ஆற்றங்கரையில் உள்ள ஓரிடத்தில் பல அம்பு முனைகளும் கல்லுளிகளும் கிடைத்தன. கான்பூர் கோட்டத்தில் சில இடங்களில் செம்பாலாய மனித உருவங்களும் அம்பு முனைகளும் ஈட்டிகளும் கல்லுளிகளும் கிடைத்தன. பிறிதோரிடத்தில் சிறுத்துக் குறுகிய உளி ஒன்று கிடைத்தது. இஃது 12.5 செ. மீ. உயரமுடைய கல்லுளி ஆகும். இந்தச் செம்புக் காலத்திற்றான் கெளசாம்பி என்னும் வரலாற்றுச் சிறப்புடைய நகரம் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்று இராவ்பகதூர் தீக்ஷஜித் கருதுகின்றார். ஸர் ஜான் மார்ஷல் என்னும் அறிஞர் ‘பீட்டர்’ என்னும் ஊரில் ஒரு பகுதியை மட்டும் அகழ்ந்து ஆராய்ச்சி நடத்தியதன் மூலம், கல்லாலும் செம்பாலும் செய்யப்பட்ட பொருள்கள் பலவற்றைக் கண்டெடுத்தனர்.

பீகார் மண்டிலத்துப் புதை பொருள்கள்

பீகார் மண்டிலத்தில் கங்கையும் சோனையாறும் கலக்கும் இடத்தில் மோரியர் தலைநகரமான பாடலிபுரம் அமைந்திருந்தது. அது சரித்திரப் புகழ்பெற்ற பண்டை நகரமாகும்.அஃது இன்றுள்ள பாடலிபுரத்திற்கும் ஹாஜிப்பூர்க்கும் இடையில் இருந்த நகரம். அதன் பெரும் பகுதி கங்கையாற்றால் சேதமுற்றுவிட்டது என்று அங்குள்ளார் கூறுகின்றனர். எனினும், ஆராய்ச்சியாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்தபோது, அசோகனது அரண்மனையின் சிதைவுகளையும் பிற அரிய பெரிய பொருள்களையும் கண்டெடுத்தனர். இப்பொழுதுள்ள புதிய பாடலிபுர நகர சபையினர் அண்மையில் புதை கழிநீர் வடிகால்களை நிலத்திற்கு அடியில் அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது மோரிய வமிசத்தவர்.இந்நாட்டைஆட்சிபுரிந்த காலத்திற்கு உரியபண்டைக் குறியீடுகள் பலவற்றைக் கண்டெடுத்தனர்.[3]

நடு மண்டிலத்து வெள்ளித் தாம்பாளங்கள்

நடு மண்டிலத்தில் ஒர் இடத்தில் ஒரே சமயத்தில் 424 செம்புக் கருவிகள் கிடைத்தன. சோட்டா நாகபுரிப்பகுதியில் செம்புக் காலத்திற்கு உரிய இடங்கள் பல இன்னும் அகழ்ந்து பார்க்க வேண்டுபவையாக இருக்கின்றன. இம்மண்டிலத்தில் ஓர் ஊரில், திருத்தமாகச் செய்து முடிக்கப்படாத உளிகள் மூன்று உட்படப் பல சிறு செம்புக் கருவிகள் கிடைத்தன. ஆராய்ச்சியாளர் இவற்றை மிகவும் முக்கியமானவை என்று கருதுகின்றனர். சோட்டா நாகபுரியின் தென்பாகத்தில் செம்புச் சுரங்கள் இருப்பதால், அந்த வெளியில் மேலும் பல இடங்களில் பண்டைக் காலப் பொருள்களோ அன்றிச் செம்புச் சுரங்கங்களோ இருத்தல் வேண்டும் என்று அறிஞர் நினைக்கின்றனர். இதே மண்டிலத்தில் பிறிதோரிடத்தில் 162 வெள்ளித் தாம்பாளங்கள் அகப்பட்டன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்புக்காலத்திற்கு உரிய பொருள்களுள் இவைதாம் மிகச் சிறந்தவை என்று அறிஞர் கருதுகின்றனர். ஜப்பல்பூரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட கல்தச்சர் உளி ஒன்று கிடைத்தது. இவ்வுளி நீண்டு வளைந்ததாய்க் கூரிய முனை உடையதாய் இருக்கிறது.[4]

ஒரிஸ்ஸாவில் இரட்டைக் கோடரிகள்

ஒரிஸ்ஸா (உரியா) மண்டிலத்தைச் சேர்ந்த ‘மயூர்ப்பஞ்ச்’, சமத்தானத்தில் இருபுறமும் கூர்மை உடைய செம்பாலாகிய இரட்டைக் கோடரிகள் கிடைத்தன. இந்த மாகாணத்தில் கந்த கிரி (Khanda Giri) என்னும் மலைப் பிரதேசத்தில் அழகிய வேலைப்பாடமைந்த மலைக் குகைகள் இருக்கின்றன. இந்த இடம் ஆராய்ச்சிக்கு மிகவும் உரியதாகும்.[5] வங்காளத்திலும் செம்பாலான கருவிகள் சில கண்டெடுக்கப் பட்டன. இப்பகுதிகளில் விரிவான முறையில் ஆராய்ச்சி நடைபெறின் வரலாறு எழுதத் தொடங்கப்பட்ட காலத்திற்கும் அதற்கு முன்னைய காலத்திற்கும் உள்ள உறவுபற்றிய துணுக்கங்கள் பலவும், செம்புக் காலத்தில் நம் நாட்டின் எவ்வெப் பகுதிகளில் மக்கள் எவ்வெந்நிலையில் இருந்தனர் என்பதும், அதற்குப்பிற் பட்ட கால விவரங்களும் கிடைக்கப்பெறலாம் என்பது அறிஞர்கள் கருத்தாகும். -

டெக்கான்

இந்திய நாட்டின் வடபுறத்துச் செய்தி இவ்வண்ணம் இருப்பத் தென்புறத்தைக் கவனிப்போம்; நருமதை, தபதி ஆகிய ஆறுகள் பாயும் இடங்கள் பயன் அற்றவையா? செய்ப்பூர், பிக்கானீர், ஜெய்ஸால்மர், காம்பே வளைகுடா, புரோச் ஆகிய இடங்களைச் சூழ்ந்துள்ள இடங்கள் அறிஞர் கவனத்தை ஈர்க்கவில்லையோ? ‘இல்லை’ என்று கூறிவிடல் முடியாது. இந்த இடங்களிலும், சிந்து வெளி நாகரிகம் பரவி இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல கிடைத்தல் கூடும் அறிஞர் இதுவரை இப்பகுதி களில் தீவிரமாக ஆராய்ச்சி நிகழ்த்தவில்லை. எனினும், ஈண்டும் சிந்து வெளி நாகரிகம் பரவித்தான் இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. சிந்து ஆற்றுப் பாங்கில் வாழ்ந்த மக்கள் கனி பொருள்களுக்காகவும் வாணிபம் பற்றியும் இந்தப் பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களுடன் கூட்டுறவு பெற்றிருத்தல் வேண்டும். கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்குகளைவிட இந்தப்பகுதிகளில், இக்கருத்தை மெய்ப்பிப்பதற்கு வேண்டிய சான்றுகள் பல வெளிப்படும் என ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.அப்பண்டைக் காலச் சிவப்புமண் கற்களும், செங்கற்களும், சிவப்பு மண்ணாலாய மணிகளும், மட்பாண்டங்களும், பிற பெர்ருள்களும் கரம்பே, புரோச் ஆகிய துறைமுகப்பட்டினங்கள் மூலமாகவே, வெளிநாட்டாருக்கு அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து சிந்து வெளி நாகரிக் காலத்தில் இந்த பட்டினங்கள் வெளிநாட்டு வாணிபத்தின் பொருட்டுப் பெருஞ் சிறப்புப் பெற்றவையாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்சிசியாளர் கருதுகின்றனர்.

விந்தமலைப் பகுதிகளில் புதிய கற்கால மக்கள் கையாண்ட நல்லுருவில் அமைந்துள்ள இயந்திரங்கள், கல் உளிகள், தாழிகள், உரல்கள், பல்வேறு வகைப்பட்ட பிற பொருள்கள், உயர்தர மணிகளாலான பொருள்கள், சித்திர வர்ண வேலைப்பாடமைந்த கலங்கள் முதலியன குகைகளிலிருந்தும் மண் மேடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டன. கத்தியவாரில் உள்ள ‘லிம்ப்டி’ நாட்டில் ‘அரங்ப்பூர்’ என்னும் இடத்திற் கிடைத்த ஏராளமான மட்பாண்டங்களும் பிற பொருள்களும் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவை போலவே இருத்தல் கவனித்தற்குரியது. இப்பகுதியில் மேலும் விரிவான ஆராய்ச்சி நடைபெறின், சிந்து வெளி நாகரிகம் நருமதை-தபதி யாறுகள் பாய்கின்ற இடங்களிலும் பரவியிருந்த பண்பு புலனாகும்.

பரோடாவில் புதிய கற்கால மக்கள் கையாண்ட மட்பாண்டங்கள் பெருவாரியாகக் கிடைத்தன.அவை சித்திரத்தை யுடைய பலநிறப் பாண்டங்கள் சித்திரம் இல்லாத பாண்டங்கள் என இருவகை யாகும். அவற்றுள்ளும் கரடுமுரடானவை, மழ மழப்பு உடையவை, கண்ணுக்கு இனியவை, சித்திரம் தீட்டப் பெற்றவை என நான்கு வகை உண்டு. இவை நேரே கண்டு இன்புறத் தக்கவையே அன்றி எழுத்தால் அறிந்து இன்புறுத்தக்கவை அல்ல.

ஹைதராபாதில் பல இடங்களில் இத்த்கைய பல் வகைப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ‘பல்லாரிக் கோட்டத்தில் உள்ள இராமன் துர்க்க மலைகளைச் சார்ந்த தார்வார்-பாறைகளின் மேற்குப்புற எல்லையில், புதிய கற்கால மக்கள் வைத்திருந்த பலவகை நிறங்கள் கொண்ட களிமண் பொருள்களும் பிறவும் பெருவாரியாகக் கண்டெடுக்கப் படுகின்றன’, என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மைசூர் நாட்டிலும் முன் சொன்ன பல நிறப்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன; பழைய கற்கால மக்களும் புதிய கற்கால மக்களும் கட்டிவிட்டுச் சென்ற ஒரு வகைக் கற்கோவில்களும் சவக் குழிகளும் கிடைத்துள்ளன.

சென்னை மண்டிலம்

பல்லாரி, அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் என்னும் நான்கு கோட்டங்களிலும் புதிய கற்கால மக்களின் மட் பாண்டங்கள் மேற்சொன்ன இலக்கணங்களைக் கொண்டன வாகக் காணப்படுகின்றன. பெருங் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பலவகைச் சமாதிகள் பல்லாரிக் கோட்டத்தில் மிக்குள்ளன. அங்கு இதுகாறும் 2000க்கு மேற்பட்ட சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன என ஜே.சி.பிரெளன் என்னும் ஆராய்ச்சியாளர் அறைந்துள்ளனர். அனந்தப்பூர்க்கோட்டத்தில் ‘ஹிந்துப்பூர்’ என்னும் புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7 கி. மீ. தொலைவில் ‘தெமகெடியபல்லே (பள்ளி)’ என்னும் சிற்றுார் உளது.அதன் கிழக்கிலும் தெற்கிலும் பல சிறிய குன்றுகள் இருக்கின்றன. அவை ஏறத்தாழ ஒரே தொடர்ச்சியாக உள்ளன். அவற்றுள் ஒன்று குகைகளாகச் செய்யப்பட முற்பட்டது என்பதற்குரிய அடையாளங்கள் தென்படுகின்றன. அங்கு நாற்றுக் கணக்கான கல்லுளிகள், வேறு பல கற்கருவிகள், சுத்திகள் முதலியன அகப்பட்டன. குண்டக்கல் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் மரச்சிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது புதிய கற்காலப் பெண்களது கூந்தல் அலங்காரத்திற்கு வேண்டப் பட்டதாகும். அஃது எடுக்கப்பட்ட இடத்தில் மதிப்புக்குரிய மட்பாண்டங்கள் பலவும் தோண்டி எடுக்கப்பட்டன. கர்நூல் கோட்டத்தில் உள்ள பில்லசுர்க்கம் குகையில் பற்களால் ஆன தாயித்துகள் கிடைத்தன.[6] இத்தகைய மலை முழைகளை ஆராய்வதால் பல பண்டைப் பொருள்கள் கிடைக்கும். ‘மலைப்பிரதேசங்களில் உள்ள காடுகளில் அஞ்சாது நுழைந்து, குகைகளைக் கண்டறிந்து, ஆராய்ச்சி நிகழ்த்துதல் அறிஞர் கடனாகும் என்று புட் (Foote) என்னும் ஆராய்ச்சியறிஞர் அறைந்துள்ளனர். கிருஷ்ணா சில்லாவில் ‘குடிவாடா’வில் இருக்கும் பெரிய மண்மேடுகட்குக் கிழக்குப் பக்கத்தில், புதிய கற்காலத்துக்கு உரிய சித்திரம் தீட்டப் பெற்ற ‘குதிர்’ ஒன்று அகப்பட்டது. இஃது ஏதேனும் ஒரு கூலப் பொருளைச் சேமித்து வைக்கப்பெறும் பெரிய ‘குதிர்’ ஆகும். இதில் பட்டையாக நிறம் தீட்டப்பட்டுள்ளது. அப்பட்டைக்கு இண்டயில் பலவண்ண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. பண்பட்ட களிமண் காப்புகள் பல இடங்களில் அகப்பட்டன. அவற்றின்மீது வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. சிப்பி வளையல்கள் பலவகை வேலைப்பாடுகளுடன் கூடியனவாகக் கிடைத்துள்ளன.

சென்னைக்கு அடுத்த பல்லாவரத்தில் களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பெற்ற (terra cotta) மனித உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் கால்கள் குட்டையாக இருந்தன. அங்குப் பிணம் புதைக்கும் தாழிகள் பலவுங் கண்டெடுக்கப் பட்டன. சேலத்தில் பல்லாரி முதலிய கோட்டங்களிற் கிடைத்த மட் பாண்டங்களைப் போன்ற பொருள்களே மிகுதியாகக் கிடைத்தன், செந்நிற மண்ணாலாய பெண் உருவங்கள் சில கிடைத்தன. இப்பெண் உருவங்களின் கூந்தல் அலங்காரம் ஆராய்ச்சியாளர் கருத்தைக் கவர்ந்தது. கூந்தல் பல சுருள் சுருளாகத் தலைமுழுவதும் சுருட்டப்பட்டு, அச்சுருள்கள் மீது உயர்ந்த சீப்புகள் செருகப்பட்டமாதிரி காணப்பட்டது.[7] இவ்வகை அலங்காரம் கொள்ளும் பெண்கட்குக் கழுத்தணி (அட்டிகை போன்றது) அவசியமாகும். பெண்கள் உறங்கும்பொழுதும் அக்கூந்தற் சுருள்கள் அவிழாமல் இருத்தற்கு கழுத்தணியே வேண்டற்பாலது. இங்ஙனம் உதவும் கழுத்தணி ஒன்று மைசூர்ப்பகுதியில் காவிரியாற்றின் கரை அருகில் தோண்டி எடுக்கப்பட்டது.சேலம் கோட்டத்தில் குடிசைகளைப் போன்ற பிணப்பெட்டிகள் பல கண்டெடுக்கப்ட்டன.இவைபோன்றவை பல கூர்ச்சரத்திலும் அகப்பட்டன.[8]

மகிழ்ச்சிக்குரிய மண்மேடு

கோயமுத்துர்க் கோட்டம் பல்லடம் தாலுகாவில் உள்ள செட்டிபாளையம் என்னும் ஊருக்கு அண்மையில் வயல் வெளியில் ஒரு மண்மேடு இருக்கின்றது. அதன் நீளம் 2550 செ.மீ; அகலம் 2130 செ. மீ. அதன் உயரம் மிகக் குறைவாகும்.அதன் ஒரு புறம் சிறிய கூழாங்கற்களின் குவியல் இருக்கின்றது. அம்மேடுள்ள இடித்தில் மட்பாண்டச் சிதைவுகளும் பல வகை உலோகப் பொருள்களும் எலும்புகளும் கிடக்கின்றன. மேட்டின் நடு இடத்தில் கற்குகை போன்று ஒன்று காட்சி அளித்துக்கொண்டு இருந்தது. ஆராய்ச்சியாளர் அதனைத் தோண்டிப் பார்த்த போது இது கல்லாலான பிணக்கோவில்[9] என்பது தெரிந்தது. அஃது ஒரு நீள சதுர அறையாகும்; 240 செ.மீ. நீளமும் 142.5 செ.மீ அகலமும் 15 செ. மீ. உயரமும் உடையது; பெருங்கற்களால் கட்டப்பட்டது. அதன் கூரையாக அமைந்த கல் 322.5 செ. மீ நீளமும் 20 செ. மீ. அகலமும் 30 செ. மீ. உயரமும் கொண்டிருந்தது. அக்கோவிலின் உட்புறத்தில் பலவகைப் பண்டைப்பொருள்கள் இருந்தன. மழமழப்பான கறுப்புநிற மண்பாண்டங்கள் நல்ல நிலையிற் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது: நீர் அருந்தும் செம்புக் கோப்பை ஒன்று கிடந்தது; வேறொரு கோப்பையின் மூடிமீது ஆடு (மான்?) நிற்பது போலச் செதுக்கப்பட்டுள்ளது; இக் கோப்பை பாரசீகத்தில் “லூரித்தான்’ என்னும் இடத்தில் கிடைத்த வெண்கலப் பாத்திரங்கள் நினைப்பூட்டுவது’ என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.இவை கிடைத்த மண்மேட்டுக்கு அருகில் வேறு பல மண்மேடுகள் ஆங்காங்கு இருக்கின்றன. இவை அனைத்தும் ஆராய்ச்சிக்கு உட்படுமாயின் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென் இந்திய நாகரிகத்தை அறிய வசதி உண்டாகும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[10]

புதுக்கோட்டையில் தாழிகள்

புதுக்கோட்டையைத் தமிழ்நாட்டிற் புதை பொருள் ஆராய்ச்சிக்குரிய திருப்பதியாகச் சொல்லலாம். அங்கு முன் சொன்ன பலவகை மட் பாண்டங்கள் கிடைத்துள்ளன. அங்குப் புதிய கற்கால மக்களுடைய பிணம் புதைக்கும் பலவகை முறைகளைக் காணலாம். மண் தாழியில் உடல் உட்கார வைக்கப் பட்டு, அதன்மேல் மணல் பாதியளவு பரப்பப்ட்டு, அவ்வளவுக்கு மேல் அரிசியும் பிற கூலப்பொருள்களும் கொண்ட தட்டொன்று வைக்கப்பட்டுத் தாழி புதைக்கப்பட்டுள்ளது. அத்தாழியின் பக்கங்களில் இறந்தவன் பயன்படுத்திய கற்கருவிகளும் பிறவும் வைக்கப்பட்டுள்ளன. தாழி, மணல் நிரம்பப் பரப்பப்பட்டு மூடியிட்டுப் புதைக்கப்பட்டுள்ளது. தாழியைப் புதைத்த குழி, மணல் போடப்பட்டுப் பாறையால் மூடப்பட்டுள்ளது. அப் பாறையின் மீது மீண்டும் மணல்கொட்டிப் பாதி முட்டைவடிவம் போன்ற பாறை ஒன்றால் மூடப்பட்டுள்ளது.இப்பாறையைச் சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை சமத்தானத்தில் நீர்ப்பசையுள்ள இடங்களின் அருகிர்ல ஆயிரக்கணக்கான தாழிகள் புதைக்கப்பெற்ற இடங்கள் பல கற்கள் வரை உள்ளன. இவ்விடங்கள், சுற்றிலும் உள்ள தரையைவிட்ச் சிறிது உயர்ந்துள்ளன. இப்பகுதிகளை மேலாகத் தட்டினால் அவற்றின் ஒசை நன்கு கேட்கும். இத்தாழிகள் உருவத்தில் பலவாறு வேறுபட்டுள்ளன; சில 120 செ. மீ. உயரமும் 105 செ. மீ. குறுக்களவும் கொண்டுள்ளன. [11]சில தாழிகள் கோடுகளைக் கொண்டுள்ளன. இரும்புக் காலத்துச் சவப் பெட்டிகள் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பிணமும் மற்றொன்றில் அவ்விறந்தவர் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாழிகள் உள்ள இடங்களைச் சோதித்துப் பார்த்தால், பண்டைக்கால மக்களைப்பற்றிச் சுவை பயக்கும் செய்திகள் பல நன்குணரலாம்.

திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலிக் கோட்டங்களிலும் மேற்சொன்ன பலவகையானவையும் பல நிறமுள்ளவையுமான மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. திருநெல்வேலிக் கோட்டத்தைச் சேர்ந்த ஆதிச்ச நல்லூரில் தாமிரபரணியாற்றுக் கரையோரம், ஏக்கர் ஒன்றில் ஏறக்குறைய ஆயிரம் தாழிகள் வீதம் 114 ஏக்கர்களில் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றுள் இரும்பு, வெண்கலம், பொன் இவற்றாலான பொருள்கள் இருந்தன. குடிசைத் தாழிகள் (hut urns) சில சிந்து மண்டிலத்தில் உள்ள பிராமண பாத்திலும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டெக்கான் பகுதி வட இந்தியாவைவிடப் பழமையானது; வட இந்தியா கடலுள் மூழ்கியிருந்தபோது டெக்கான் பீடபூமி தனித்திருந்தது. ஆதலின், அதுவே புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பொருத்தமுள்ள இடம் ஆகும் என்று நில நூல் நிபுணர் அறைகின்றனர்.

திருவிதாங்கூர்

இது பண்டைச் சேரநாட்டின் பெரும் பகுதியாகும். இப்பகுதியில் மலைகள் பல. அம்மலைகள் மீதும், அவற்றை அடுத்துள்ள இடங்களிலும் பழைய கற்கால மனிதரும் புதிய கற்கால மனிதரும் இரும்புக்கால மனிதரும் இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அம்மக்கள், இறந்தவர் உடலங்களை எரித்து உண்டான சாம்பலையும் எலும்புகளையும் பெரும் தாழிகளில் அடைத்து அவ்விறந்தவர் பயன்படுத்திய பலவகைக் கருவிகளும் பாண்டங்களும் பிறவும் அத்தாழிகளுள் அடக்கிப் புதைத்தனர். அவ்விடங்களுக்குமேல் ஒழுங்கான பாறைக் கற்களை நட்டுச் சிறு மண்டபங்கள் அமைத்துள்ளனர். இத்தகைய மண்ட்பங்கள் பல மலையரையர், முதுவர் என்னும் நாகரிகமற்ற மக்கள் வாழ்கின்ற இடங்களில் காணப் படுகின்றன. ஓரிடத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அகப்பட்ட தாழியின் வாய் 37.5 செ.மீ. அங்குலம் குறுக்களவு உடையது; 192 செ. மீ. உயரமுடையது. அதனுள் எட்டுச் சிறு தாழிகளும், உணவுண்ணும் கலன்களும், நீரருந்தும் கலன்களும், சாடிகளும், சட்டிகளும் இருந்தன. அவையாவும் கருப்புக் களிமண்ணாலும் சிவப்புக் களிமண்ணாலும் செய்யப்பட்டவை. அத்தாழியின் மேற்புறத்தில் 75 செ.மீ நீளமுள்ள வாள் ஒன்று கிடைத்தது.அதன் கைப்பிடி அழிந்தது போலும்! அத்தாழிக்குள் இரண்டு இரும்பு ஈட்டித் தலைகள் கிடந்தன. பிறிதோர் இடத்தில் வெண்கல விளக்கொன்று கண்டெடுக்க்ப்பட்டது. இத்தகைய பழங்காலப் புதைப்பொருள்களைப்பற்றிய விவரங்கள் ஆராய்ச்சியாளரால் அவ்வப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெக்கான் பகுதி தனித்திருந்ததா?

பழைய புதிய கற்காலங்களிலும் இவற்றை அடுத்துத் தோன்றிய இரும்புக் காலத்திலும் கிடைத்த பொருள்களைப் பிற நாடுகளிற் கிடைத்த பொருள்களோடு வைத்து ஆராய்கையில், டெக்கான் பகுதி வெளி நாடுகளோடு தொடர்புற்று இருந்தது என்னும் பேருண்மையை உணரலாகும்: (1) பல்லாவரத்தில் அகப் பட்ட மனித உருவம் இராக்கில் உள்ள ‘பாக்தாத்’ நகரில் கண்டெடுக்கப்பெற்ற உருவங்களை ஒத்துள்ளது கவனித்தற்குரியது. (2)கால் கொண்ட மட்பாண்டப் பொருள்கள் பல ஹென்றிக் ஷ்லீமன் என்பாரால் தோண்டி எடுக்கப்பெற்ற ‘ட்ராய்’ நகரத்தில் கிடைத்த மட்பாண்டப் பொருள்களை ஒத்துள்ளன. (3) மைசூர்ப் பகுதியில் கண்டு எடுக்கப்பெற்ற ‘ஸ்வஸ்திகா’ வடிவில் அமைந்த பொருள், ‘டராய்’ நகரில் அகப்பட்ட ஸ்வஸ்திகள் வடிவத்தைப் பெரிதும் ஒத்துள்ளது.[12] (4) ‘செட்டிபாளையத்திற் கிடைத்த மான் அல்லது ஆடு நிற்பதாக உடைய கோப்பை மூடி ஒன்று பாரசீகத்தில்லூரிஸ்தானில் கிடைத்த வெண்கலப் பொருள்களை ஒத்துள்ளது. இன்ன பிற காரணங்களால் அப்பண்டைக் கால மக்கள் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் அறிவியல் துறையிலும் வாணிபத் துறையிலும் நெருக்கமான தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் என்னும் பேருண்மை புலனாகும்.[13]

பண்டைத் தமிழ் நகரங்கள்

‘வடஇந்தியாவை விடத்தென்னாடு பழைமை வாய்ந்ததாதலின், மெய்யான ஆராய்ச்சிக்கு உரிய இடம் தென்னாடே ஆகும்’ என்று, நிலநூற் புலவர் கூறுகின்றனர் என்பதை முன்னரே குறிப்பிட்டோம் அல்லமோ? ஆதலால், முன் சொன்ன தென்பகுதிகளில் ஆராய்ச்சி செய்தல் இன்றியமையாததாகும். மேலும், தமிழகத்தை ஆண்ட முடியுடை மூவேந்தர் தம் தலைநகரங்களில் பேராராய்ச்சி நடத்தல் மிகவும் இன்றியமையாததாகும். சோழநாட்டில் உறையூர், திருவாரூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன மிக்க பழைமை வாய்ந்தன. காவிரிப்பூம்பட்டினம் நெடுங்காலமாக மேனாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் வாணிபம் செய்து வந்த நகரமாகும். அது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடலுக்கு இரையானதென்று மணிமேகலை கூறுகின்றது. திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் பழைய காலத்தில் ஒரு துறைமுகப் பட்டினமாக இருந்தது. அந்த இடத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெடுந்துரமில்லை இன்றும் சிறுவணிகர் தம் பொருள்களைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு யாழ்பாணத் தீவுகட்குச் சென்று வாணிபம் செய்கின்றனர். அத் துறைமுகப்பட்டினமும் ஆராய்ச்சிக்குரியதாகும். அதைப் போலவே பாண்டியர் பழம்பதியாகிய அலைவாய் (கபாடபுரம்) கடல் கோளால் அழிவுற்றதென்று இறையனார் களவியல் உரையும், சிலப்பதிகார உரையும் செப்புகின்றன. இப்பட்டினம் சிறந்த நாகரிகத்தோடு இருந்த பாண்டியர் பழம்பதி என்று வான்மீகி இராமாயணம் கூறுகின்றது. இராமாயணத்தின் காலம் ஏறக்குறைய கி.மு.1000க்கு முற்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எனவே, இராமனது சம காலத்தவராகிய வான்மீகி முனிவர் சொன்ன கி.மு.1000க்கு முற்பட்ட ‘அலைவாய்’ இருந்த இடம் எங்கே? என்பதை அறிஞர் தேடிப்பார்த்து, அவ்விடத்தை ஆராய்தல் அவசியமன்றோ? கொற்கை, முத்துக்குப் பெயர்போன பழம்பட்டினமாகும். இங்கிருந்துதான் வேதகால ஆரியர்க்கு முத்துக்கள் அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்’ என்பர் திரு.பி.டி.சீனிவாச ஐயங்கார். எனவே, கொற்கையும் மிக்க ப்ழைமை வாய்ந்த பகுதியாகும்.

சேர நாட்டில் அரபிக்கடலில் துறைமுகப் பட்டினங்களாக விளக்கமுற்று இருந்தவை முசிறி, தொண்டி முதலியன. அங்கிருந்து உரோமப் பெருநாட்டிற்கும் பிற இடங்கட்கும் மிளகு, தந்தம், தேக்கு, அகில், வாசனைப்பொருள்கள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமார் கி.மு.1000இல் வாழ்ந்திருந்த சாலமன் மன்னர்க்கு மயில் முதலியன அளித்த இடம் சேர நாடாகும். எனவே, இத்துறைமுகப் பட்டினங்களும் பழைமை வாய்ந்தனவே ஆகும். கொச்சி நாட்டில் அழிந்த நிலையில் உள்ள வஞ்சி மாநகரம் பழைய சேரர் தலைநகரமாகும். அது கி.மு.-விலேயே பெருஞ் சிறப்பு வாய்ந்த நகரமாக இருந்தது. அதனையும் அகழ்ந்து ஆராய்ச்சி புரிதல் நற்பலனை அளிக்கும். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள மஹாபலிபுரம் ஒரளவு பழைமை வாய்ந்த துறைமுகப் பட்டினம். அங்கு அரேபியாவிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இவையெல்லாம் கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பெருஞ் சிறப்புப்பெற்ற பண்டை நகரங்கள் ஆகும். இவ் விடங்களில் விரிவான ஆராய்ச்சி நிகழ்த்தல் சிந்து வெளி ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிவதாகும்! தமிழகத்துப் பழைமையையும் கணிக்கப் பேருதவி புரிவதாகும்.

சங்கு சான்று பகரும்

சிந்து ஆற்றுப் பாய்ச்சல் பெற்ற பகுதிகளில் நிகழ்த்திய ஆராய்ச்சியிலிருந்து, அங்கு வாழ்ந்திருந்த மக்கள் சங்கைப் பெரிதும் பயன்படுத்தி வந்தனர் என்பதை அறிகிறோம். ‘இந்தச் சங்குகள் சிந்துவெளி மக்களுக்கு எங்ஙனம் கிடைத்தன? இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சங்கைப் பயன்படுத்தும் முறை எங்குப் பெருகி இருந்தது? என்பவற்றைக் கவனித்தோமாயின், சிந்து வெளி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருந்த தொடர்பு தெற்றெனத் தெரியும்.

இந்திய நாட்டின் தென்கிழக்குக்கோடியில்(தமிழ் நாட்டில்) வாழ்ந்திருந்த தமிழ் மக்களிடமிருந்தே சங்குகள் சிந்துப் பிரதேசங்களில் வாழ்ந்திருந்த மக்களுக்குப் போயிருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[14] ‘சங்கு அறுக்கும் குலத்தவர் என்றே ஒரு பகுதி மக்கள், தமிழ் நாட்டில் மிகப் பிற்பட்ட காலம் வரையிலும் இருந்திருக்கின்றனர். சங்குகளும் முத்துக்களும் தமிழ்நாட்டின் சிறந்த வாணிபப் பொருள்களாக இருந்தன என்பதைச் சங்க நூல்களாலும் பிற சான்றுகளாலும் அறியலாம்.

“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்து”

என்னும் அகநானூற்று அடிகள் சிந்திக்கற்பாலன.

மேனாட்டார் முயற்சி

இத்தகைய ஆராய்ச்சித் தொண்டில் நம்நாட்டுச் செல்வர்கள் விருப்பங் கொள்வதில்லை. மேனாடுகளில் உள்ள செல்வர்களோ இங்ஙனம் இருப்பதில்லை, புதுமைகளைக் காணுவதில் ஒரு சாரார் ஈடுபட்டால், தொன்மைச் செய்திகளை அறிவதில் பிறிதொரு சாரார் ஈடுபடுகின்றனர். இவ்வுலகின் பல மூலைகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள வியத்தகு விவரங்களை எல்லாம் கண்டறிந்து, அப்போதைக்கப்போதுவெளியிடுதற்கு என்று மேனாட்டுச்செல்வர் சிலர் கூடி ஓர் இயக்கம் தோற்றுவித்துள்ளனர். அவ்வியக்கத்தினர், தாங்கள் கண்டுபிடிக்கும் புதுமைகளையெல்லாம் அவ்வாறு ஆங்காங்கே படம் பிடித்துச் சென்று, அவற்றிற்கு உரிய விவரங்களுடன் திங்கள்தோறும் ஒர் இதழாக வெளியிட்டு வருகின்றனர்.மற்றொரு பிரிவினர் உலகிலுள்ள உயர்ந்த மலைகள் மீதேறி ஆங்குக் கிடைக்கும் அற்புத விவரங்களைச் சேர்த்து வெளியிட்டு வருகின்றனர். உலகில் மிக உயர்ந்ததும், இதுகாறும் எவராலும் அதன் உச்சியில் சென்று காணுதற்கு இயலாததுமாக விளங்கிப் பெருமை பெற்றிருக்கும் இமயமலைமீது ஏறுதற்கு மேனாட்டு அறிஞர் பலர் முயன்றுள்ளனர்; இன்றும் முயன்று வருகின்றனர். மற்றும் ஒரு கூட்டத்தினர் கடலின் அடிப்பகுதிகளிற் சென்று, அங்கு வாழும் உயிர்களின் அற்புதச் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்து, அவற்றினை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்ஙனமே நிலத்தை அகழ்ந்து மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் பல பண்டைப் பொருள்களை வெளிப்படுத்தி ஆராய்ச்சி செய்வதிலும் அம்மேனாட்டு மக்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

நம்மவர் கடமை

மேனாட்டாரைப் போல நம் நாட்டுச் செல்வர்களும் அறிஞர்களும் இத்தகைய துறைகளில் ஆர்வங் காட்டி உற்சாகமும் ஊக்கமுங் கொண்டு உழைத்தால், பிற நாடுகளைவிட நம் நாடு பல வகையான அற்புத விவரங்களை உலகுக்கு விளக்கி வியக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.


  1. P.T.S.Iyengar’s ‘Stone Age in India’, p.51
  2. இப்பண்டை மக்கள் யாவர் என்பதை இறுதிப் பகுதியில் ஆராய்வோம்.
  3. L.A. Waddell’s ‘Report on the Excavations at Pataliputra’.
  4. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, pp.54, 55.
  5. M.M.Ganguly’s ‘Orissa and her Remains’.
  6. புலியின் பல்லைக் கயிற்றில் கோத்து அணிதல் பண்டைத் தமிழர் மரபு. அது புலிப்பல் தாலி எனப்படும்.
  7. இதே கூந்தல் அலங்காரமும் சிப்புச் செருகலும் சிந்து வெளி மாதரிடம் இருந்த பழக்கங்கள் ஆகும் என்பது இங்கு அறியத் தக்கது.
  8. P.T.S.Iyengar’s ‘Stone Age in India’, pp. 19-40.
  9. Megalithic Monument.
  10. ‘Annual Reports of the Archaeological Survey of India’ for the year 1930-1934; PartI, pp. 112, 113.
  11. P.T. Srinivasa Iyengar’s ‘Stone Age in India’; pp. 14, 24.
  12. P.T.S.Iyengar’s ‘Stone age in India’, P43 இதே ‘ஸ்வஸ்திகா’ வடிவம் மைசூரிலும் திருநெல்வேலியிலும் கிடைத்துள்ள செம்பு நாணயங்களிலும் காணப்படுகின்றன.
  13. P.T.S.Iyengar’s ‘Stone age in India’ p.43.
  14. Dikshit’s ‘Pre-historic Civilization of the I. V’, pp. 12, 13.