மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/5. கட்டிடங்கள்

5. கட்டிடங்கள்

கட்டிட அமைப்பு முறை

மொஹெஞ்சொ-தரோ மக்கள் அகன்ற காற்றோட்டம் மிக்க தெருக்களை அமைத்து, நகர அமைப்பில் தங்கட்கிருந்த பண்பட்ட அறிவை உலகத்திற்கு உணர்த்தியது போன்றே, கட்டி அமைப்பு முறையிலும் தங்களுக்கு இருந்த பண்பட்ட அறிவைத் தங்கள் கட்டிடங்களின் வாயிலாக விளக்கியுள்ளனர். அப்பெருமக்கள், தங்கள் கட்டிடங்கட்குச் சுட்ட செங்கற்களையும் உலர்ந்த செங்கற்களையும் பயன்படுத்தி உள்ளனர். மழை, வெயில், வெள்ளம், புயற்காற்று இவற்றுக்கு எளிதில் ஆட்படுபவை கட்டிடங்களின் புறச் சுவர்களே ஆகும். ஆதலின் அவ்வறிஞர்கள், அப்புறச் சுவர்களைச் சுட்ட செங்கற்களாலேயே அமைத்துள்ளனர். மேற் சொன்னவற்றால் துன்புறுத்தப்படாத உட்புறச் சுவர்களை உலர்ந்த சூளையிடப்படாத செங்கற்களால் அமைத்துள்ளனர். அவர்கள் இக்காலத்திய சிமென்டை அறியார்: கான்க்ரீட் என்பதையும் அறியார். ஆதலின், அக்கால முறைக்கு ஏற்றபடி களிமண் சாந்தையே சுவர்களின் மேற்பூச்சாகப் பயன்படுத்தினர். சில இல்லச் சுவர்களைத் தவிடு கலந்த களிமண் சாந்தால் மெழுகியுள்ளனர். சுவர், தரை, கூரை இம்மூன்றும் களிமண் சாந்தால் ஆனவை. அவர்கள் மர உத்திரங்களைப் போட்டு அவற்றின் மீது நாணற்பாய் பரப்பி, அப்பாய்கள் மீது களிமண் சாந்தைக் கனமாய்ப் பூசிக் கூரை அமைத்து வாழ்ந்தனர்; உத்திரங்களை நுழைப்பதற்கென்றே சுவர்களின் தலைப்புறங்களில் சதுர வடிவில் சிறிய துளைகளை விட்டிருந்தனர். நாம் அவற்றை இன்னும் தெளிவுறக் காணலாம். கட்டிடப் புலவர்கள் சுவர்களையும் தரையையும் மேற்கூரையையும் ஒழுங்குபடுத்த மட்டப் பலகையைப் பயன்படுத்தினர். அப்பலகைகள் பல மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. அவை பல அளவுகள் உடையனவாக உள்ளன. வீட்டுச் சுவர்கள், சாளரங்கள் வாயிற்படிகள் முதலியன ஒழுங்காக அமைந்திருந்ததிலிருந்து, அக்காலத்துக் கொத்தர்கள் கட்டிட அமைப்பில் நிறைந்த அறிவுடையவர்களாகத் திகழ்ந்தனராதல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.

அணி அணியான கட்டிடங்கள்

ஒவ்வொரு தெருவிலும் வீடுகள் ஒன்றுக்கொன்று இடைவெளியின்றிச் சேர்ந்தாற்போலவே அமைந்துள்ள . ஆயின் பிற்காலததில் சிந்துநதியில் வெள்ளம் உண்டாகி, அதனால் ஒரு முறை நகர அமைப்புக்குப் பங்கம் ஏற்பட்டதும், அணி அணியாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் சில மாறுதல் களைப் பெற்றன. அவற்றின் தரைமட்டம் உயர்த்தப் பட்டது. இங்ஙனம் மும்முறை தரை மட்டம் உயர்த்தப்பட் டுள்ளது. இவ்வாறு தரைமட்டம் உயர்த்தப் பட்டபின் கட்டப்பட்ட எழுப்பப்பட்ட சுவர்களோ வீடுகளோ அணி அணியாக இன்றிச் சிறிது உயர்த்தும் தாழ்ந்தும் முன்னும் பின்னுமாக மாறியுள்ளன. நகர அடிமட்டம் உயர்த்தப் பட்ட பின் போதிய இடம் இன்மையின், இவ்வாறு தாறுமாகக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டனவாதல் வேண்டும். தொடக்கத்தில் அமைந்துள்ள கட்டிட அமைப்பும், பின்னர் அமைந்துள்ள கட்டிட அமைப்பும் காண்போர்க்கு நன்கு காட்சியளிக்கின்றன. அகன்ற நெடுந்தெருக்களில் உள்ள இல்லங்களை விடக்குறுந் தெருக்களில் உள்ள இல்லங்களே நன்னிலையில் இருக்கின்றன.

பருத்த சுவர்கள்

பெரும்பாலும் எல்லாக் கட்டிடங்களின் சுவர்களும் பருத்தவையாக இருக்கின்றன. அவை 105 செ. மீ. முதல் 180 செ.மீ. வரை தடித்தவையாக இருக்கின்றன. சிந்து நதியின் வெள்ளத்தை எதிர்நோக்கியே இச்சுவர்கள் இவ்வளவு கனமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிற்கு மேற்பட்ட மேன் மாடங்களை அமைக்கும்பொழுது அவற்றின் பாரத்தைத் தாங்க வல்லவையாக இவை அமைந்திருத்தல் வேண்டும் அன்றோ? அந் நோக்கம் பற்றியும் இச்சுவர்கள் இங்ஙனம் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறலாம். ஒரு பெரிய கட்டிடத்தின் புறச் சுவர் 172.5 செ. மீ. கனமுடையதாகவும், பிற சுவர்கள் 105 செ. மீ, 145 செ. மீ, 132.5 செ. மீ. கனம் உடையன வாகவும் அமைந்துள்ளன. இவை அவ்வப்போது புதுப்பிக்கப் பட்டன. ஆதலின், இங்ஙனம் வேறுபட்டுக் காண்கின்றன.

நெடுஞ்சுவர்கள்

கட்டிடச் சுவர்கள் ஓரளவில் இல்லை. பெரிய தெருக்களில் உள்ள கட்டிடச் சுவர்கள் 540 செ. மீ. உயரம் உடையனவாக இருக்கின்றன. குறுந் தெருக்களில் உள்ள கட்டிடச் சுவர்கள் 540செ.மீ. முதல் 750 செ. மீ. வரை உயரம் உடையனவாக உள்ளன. இந்நகரம் தோண்டப்பட்ட பொழுது, ஆராய்ச்சியாளர் மிகுந்த கவனத்துடன் மேற்பார்வை செலுத்தி வந்தமையின், இக்கட்டிடச் சுவர்கள் சிறிதும் பழுதுக்கு உள்ளாகாமல் காண்கின்றன. இவற்றை நன்கு கவனிப்பின், தரைமட்டம் உயர்த்தப் பட்டபோதெல்லாம் இவையும் உயர்த்தப்பட்டு வந்தன என்பதை எளிதில் உணர்தல் கூடும்.

பலவகைக் கட்டிடங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் பல திறப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. சில இரண்டு அடுக்கும் இரண்டிற்கு மேற்பட்டவையும் உடைய மாடிவீடுகள் சில அகன்ற முற்றங்களை உடைய ஒரே அடுக்கு உடையவை. இவ்வில்லங்கள் எல்லாம் மேலே தளம் இடப்பட்டவை; சுற்றிலும் கைப்பிடிக் சுவர்களை உடையவை; மேல்தளத்தில் பெய்யும் மழைநீர் உடனுக்குடனே கீழே விழக் குழைகளையுடையவை.இக் குழைகள் மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்டவை. சில கட்டிடங்கள் அங்காடிகளாக இருந்தவை; சில கோவில்கள் என்று கருதத் தக்கவை: பல எளியவர் இல்லங்கள்.

எளியவர் இல்லங்கள்

சிறிய இல்லங்கள் என்பன நான்கைந்து அறைகள் கொண்டுள்ளன. இவை 900 செ.மீ நீளமும் 810 செ. மீ. அகலமும் உடையன. இவை அனைத்தும் செங்கற்களைக் கொண்டே அமைத்தவை ஆகும். இவற்றின் தரை சாணத்தால் மெழுகப்பட்டு வந்தது. இங்ஙனம் செங்கற்களைக் கொண்டு உறுதியுடைய இல்லங்கள் கட்டி வாழ இயலாத மக்கள், நகரத்தின் வெளிப் புறத்தில் உறுதியற்ற பொருள்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்ந்தனராதல் வேண்டும்.

பெரிய முற்றமுடைய இல்லங்கள்

சில பெரிய கட்டிடங்களின் நடுவில் பெரிய-அகன்ற முற்றம் இருக்கின்றது. அதனைச் சூழப் பல அறைகள் அமைந்துள்ளன. அவ்வறைகள் இக்காலத்துப் பெரிய அறைகள் போன்றவை அல்ல; எனினும் காற்றோட்டம் கொண்டனவாகவே அமைந்துள்ளன. ஒவ்வோர் அறையிலும் காற்றும் வெளிச்சமும் புகத் தக்கவாறு சாளரம் அமைந்துள்ளது. காற்றோட்டம் நன்கு அமைந்திருக்கத் தக்கவாறு வீட்டின் வாயிற்படியும் கூரையும் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. இத்தகைய இல்லங்கள் சென்னையில் வண்ணாரப்பேட்டையிலும் இராயபுரத்திலும் காணலாம். சிந்து மாகாணத்திலும் பல இடங்களில் இத்தகைய அகன்ற முற்றமுடைய இல்லங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.

பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள்

பெரிய வீடுகளிற் சில இடையே நெடுஞ்சுவர்கள் வைத்துப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய இல்லங்கள் உடன் பிறந்தோர் பிரிந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டவை ஆகும். சில இடங்களில் சிலவீடுகள் அவற்றின் தாய்ச் சுவர்களுக்கும். அடுத்த வீட்டுச் சுவர்களுக்கும் இடையில் சிறு இடைவெளி விட்டுக் கட்டப்பட்டுள்ளன. இவற்றால் அக்கால மக்கட்குள் சுவர்களால் ஏற்படும் தொல்லை இருந்தது என்பதும், அதனை நீக்கவே இம்முறை கையாளப்பட்டது என்பதும் எளிதிற் புலனாகின்றன. இத்தகைய பெரிய வீடுகளில் கூலங்களைச் சேமித்துவைக்கும் களஞ்சியங்கள் தரையிற் பதிக்கப்பட்டு இருந்தன. சில இல்லங் களில் மாடங்களும் சுவர் அறைகளும் அமைந்துள்ளன. சில வீடுகளில் 1ற் கலன்கள் வைத்தற்குரிய மரப் பெட் கங்கள் (Cup boards) சுவர்களிலேயே இணைக்கப்பட்டுள்ளன.

செல்வர் தம் மாட மாளிகைகள்

இவை, இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட அடுக்குகளு - முடைய மாளிகைகள் ஆகும். இவை பெரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், இடை கழிகள், சிறிய பெரிய வாயில்கள், பல அறைகள் இவற்றை உடையனவாகும். இவற்றின் மேன்மாடங்கள் செங்கல் தள வரிசை உடையன. சில மாளிகைகளில் உள்ள மேன்மாடங்களில் படுக்கை அறைகள் உள்ளன; வேறு சில மாடங்களில் படுக்கை அறைகள், நீராடும் அறைகள், மலங்கழிக்க ஒதுக்கிடம் முதலியன அமைந்துள்ளன. மேன்மாடங்கட்குச் செல்லும் படிக்கட்டுகள் பல இன்றும் நன்னிலையிற் காண்கின்றன. அவை இன்று நம் வீடுகளில் உள்ள படிக்கட்டுகள் போலவே இருக்கின்றன. படிக்கட்டு இல்லாத மாடங்கள் சில காணப்படுகின்றன.அவற்றுக்கு மர ஏணிகள் பயன் பட்டனவாதல் வேண்டும். படிக்கட்டுகள் பெரும்பாலான வீடுகளில் தெருப்புறமே அமைந்துள்ளதை நோக்க கீழ்க் கட்டிடத்தில் வேறு பலர் குடியிருந்தனர் என்று எண்ண வேண்டியிருக்கிறது. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறத் தாகவே அமைந்துள்ளன. ஒரு மாளிகையில் இரண்டு படிக்கட்டுகள் ஒன்றுக்கொன்று அண்மையிலேயே அமைந் துள்ளன. படிக்காக விடப்பட்ட பலகை ஒவ்வொன்றும் 21 செ. மீ அகலமும் 5.5 செ. மீ. கனமும் உடையது.  படிக்கட்டின் அகலம் 100 செ.மீட்டராகும். இங்ஙனம் இரண்டு படிக்கட்டு வைத்துள்ள இல்லம் பெருந் தலைவனுடைய இல்லமாகவே இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. வேறொரு பெரிய மாளிகையின் முன்புறம் 2550 செ. மீ. அகன்றுள்ளது பின்புறம் 290 செ மீ அகன்றுள்ளது. இங்ஙனம் இல்லத்தின் இருபுறமும் பரந்த இடம்விட்டுக் கட்டும் முறை அப்பண்டைக் காலத்திலேயே வழக்கில் இருந்ததென்பது பெரு வியப்புக்குரிய செய்தியே அன்றோ?

அரசனது அரண்மனையோ?

இதுகாறும் தோண்டிக் கண்ட கட்டிடங்கள் அனைத்தினும் மிகப் பெரியதாயுள்ள மாளிகை ஒன்றே அறிஞர் கவனத்தை மிகுதியும் கவர்ந்ததாகும். அம்மாளிகை 7260 செ.மீ நீளமும் 3360 செ.மீ. அகலமும் உடையது. அதை அடுத்துச் சற்றுக் குறைந்த அளவு 350 செ.மீ.நீளமும் 3480 செ.மீ அகலமும் உடைய பெரிய மாளிகை ஒன்று உள்ளது. அதற்கு அடுத்தாற்போல் மற்றொரு மாளிகை இருக்கின்றது. அதன் வடபுறச் சுவர் 2610 செ. மீ நீளம்: தென்புறச் சுவர் 2800 செ. மீ நீளம் மேற்குப்புறச்சுவர் 140 செ.மீ. நீளம் கிழக்குப்புறச் சுவர் 1465 செ. மீ நீளம் அக்கட்டிடத்துள் பல அறைகளும் ஒரு கிணறும் இருக்கின்றன; ஒவ்வொரு புறத்தும் 125 செ. மீ அகலமுள்ள சதுரத் துண்கள் சில இருக்கின்றன. இத்தூண்கள் அக்கட்டிட வாயிலின் வளைவுகளைத் தாங்குபவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அக்கட்டிடத்திற்கு மேன் மாடி இருந்திருத்தல் வேண்டும். அஃது இன்று காணுமாறில்லை.

அக்கட்டிடங்களை அடுத்துச் சிறு விடுதிகள் பல உள்ளன. அவை 1680 செ.மீ நீளமுடையன. அவை ஒவ்வொன்றிலும் நடுவில் நெடுந்துண்களைக் கொண்ட மண்டபமும் பல கூடங்களும் உள்வழிகளுடன் கூடிய பல அறைகளும் இருக்கின்றன. அந்த அறைகள் சாமான்களை வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும், படுக்கைக்கும், உணவு உட்கொள்ளவும், பிற தேவைகட்காகவும் தனித்தனியே அமைக்கப்பட்டவை ஆகும். இங்ஙனம் அமைந் துள்ள பெரிய மாளிகை ஆட்சி உரிமையுடைய பெருந்தலைவனது அரண்மனையாகவும், அதனை அடுத்த மாளிகைகள் அவனுக்கு அடுத்த உத்தியோகத்தர்களின் மாளிகைகளாகவும், இம்மாளிகை களின் வெளிப்புறம் உள்ள விடுதிகள் காவலாளர் ஏவலாளர் இல்லங்களாகவும் இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.

தையலார்க்குத் தனி அறைகள்

இல்லங்கள் சிலவற்றில் கால்நடைகளைக் கட்டுவதற்குத் தனி இடங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆதலால் அம்மக்கள் வீட்டு முற்றுளிலேயே ஒரு மூலையில் அவற்றைக் கட்டியிருத்தல் வேண்டும். ‘சமையல் அறைகள் இல்லாத இல்லங்களில் சமையல் வேளையும் முற்றத்திலே நடைபெற்றிருத்தல் வேண்டும்’, என்று அறிஞர் சிலர் அறைகின்றனர். ஆயின் கராச்சி விக்டோரியாக் கண்காட்சிக் சாலையின் காப்பாளராகிய அறிஞர் சி.ஆர்.ராய் என்பார், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் வாயிற்படி உண்டு. அதனை அடுத்துத் திறந்த சிற்றறை ஒன்று வாயிற் காவலனுக்காகக் கட்டப்பட்டுள்ளது. அதன் பின்புறம் அமர்ந்து பேசுதற்குரிய கூடங்கள் உண்டு. அவற்றிற்குப் பின்புறம் படுக்கை அறைகள், சமையல் அறைகள், தையலார் இருக்கத் தனி அறைகள் முதலியன இருக்கின்றன என்று கூறுகின்றனர்.[1]

நீராடும் அறைகள்

ஒவ்வோர் இல்லத்திலும நீராடத் தனி அறை இருக்கிறது. மாளிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நீராடும் அறைகள் இருக்கின்றன. இவை தெருப்பக்கம் அமைந்துள்ளன; மெல்லிய செங்கற்களால் தளவரிசை இடப்பெற்றுள்ளன; இவற்றிலிருந்து கழிநீர் ஓட வடிகால்கள் நன்முறையில் அமைந்துள்ளன. இவ் வடிகால்கள் தெருக் கால்வாயுடன் இணைக்கப் பெற்றுள்ளன. இவ்வடிகாலுக்கு உரிய புழிையுள்ள இடம் நோக்கி நீராடும் அறையின் தரைமட்டம் சரிந்து செல்வது குறிப்பிடத் தக்கது. இத்தகைய நீராடும் அறை ஒன்று எஷ்னன்னாவில் இருந்த அக்கேடியர் அரண்மனையுள் இருந்தது. அக்கேடியர் நீராடும் அறை அமைப்பதைச் சிந்துப் பிரதேச மக்களிடமிருந்தே கற்றிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.[2]

சமையல் அறைகள்

ஒவ்வொரு வீட்டாரும் பெரும்பாலும் முற்றத்தண்டை சமையல் செய்து வந்த போதினும், சமையலுக்கென்று தனி அறையையும் வைத்திருந்தனர். அந்த அறையில் விற்கு வைக்கவும் பிற சமையற் பொருள்களை வைக்கவும் தனி மேடைகள் கட்டப்பட்டுள்ளன. சில பெரிய வீட்டுச் சமையல் அறைகள் அகன்று இருக்கின்றன. அவற்றுள் பெரிய தாழிகள் பதிக்கப்பட் டிருந்தமைக்குரிய அடையாளங்கள் இருக்கின்றன. அத்தாழிகள் நீரைச் சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்கலாம். மேலும், சமையல் அறையில் சமையலுக்குரிய சாமான்களை வைக்கப் பல மண் சாடிகள் பயன்படுத்தப்பட்டன. இப்பழக்கம் இன்றும் மொஹெஞ்சொ-தரோவைச் சுற்றியுள்ள கிராமத்தாரிடம் இருப்பதைக் காணலாம். சமையல் அடுப்புகள் சிலவே காணப்பட்டன. அவை மெசொபொட்டேமியாவில் கிடைத்த அடுப்புகளைப் போலவே இருத்தல் வியப்புக்கு உரியதே.[3]

அங்காடியோ? அம்பலமோ?

ஓரிடத்தில் மிகப் பெரிய மண்டபம் ஒன்று காணப்பட்டது. அது 76500 ச. செ. மீ. பரப்புடையது. அதன் கூரையை இருபது செங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவை நான்கு நான்காய்ச்சதுரம் சதுரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அப்பெரிய மண்டபம் பொது அங்காடியாக இருந்திருக்கலாம் என்று அறிஞர் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலர், ‘பொது மக்களின் இறைவணக்கத்திற்குரியதாகவும், பொது வினைக்கு உரியதாகவும் இருந்திருக்கலாம்’, என்று கருதுகின்றனர். ஆயிரக்கணக்கான யாண்டுகட்கு முன் பயன்படுத்தப்பட்ட ஒன்றைப்பற்றி இங்ஙனம் பலதிறப்பட்ட கருத்துக்கள் எழுதல் இயல்பன்றோ?

சில இடங்களில் அறைக்குள் அறையாகப் பல இல்லங்கள் காண்கின்றன. அவை அங்காடிகளாக இருத்தல் வேண்டும் என்றும், உள்ளறைகள் கடைச் சாமான்கள் வைத்தற் குரியவை என்றும், அறிஞர் எண்ணுகின்றனர். வேறு சில இல்லச் சுவர்களைச் சுற்றி 120 செ. மீ. அகலம் தளவரிசை இடப்பெற்ற மேடைகள் காணப்படுகின்றன. அவை சில்லறைக் கடைகள் வைக்கப் பயன்பட்டவை என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். சிலர், ‘அவை வெள்ளப் பாதுகாப்புக்கென்றே உயர்த்தப் பட்டவை’ என்று எண்ணுகின்றனர்.

கள்ளுக்கடையோ? தண்ணீர்ப்பந்தலோ? உண்டிச்சாலையோ?

சில இடங்களில் பெரிய அறைகளைக் கொண்ட கட்டிடங்கள் சில நிலத்தில் அழுந்திப் பதிந்துள்ளன.இவை பெரும்பாலும் தெருக் கோடிகளிற்றாம் அமைந்துள்ளன.இவற்றுள் களிமண்ணால் செய்து சூளையிடப்பட்ட பெரிய தாழிகள் பல தரையிற் புதைந்து கிடந்தன. இவை கள்ளுக் கடைகளாக இருந்திருத்தல் வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். தீக்ஷத் போன்றோர், ‘இவை நீர் மோர், தண்ணிர் முதலிய பானங்களை வழிப்போக்கர்க்கு விலையின்றி வழங்கும் அறச்சாவடிகளாக இருந்திருத்தல்வேண்டும்’, என்று கருதுகின்றனர். ‘இவை நகர மாந்தர் ஒன்றுகூடி அளவளாவுதற்கமைந்த உண்டிச் சாலைகளாக இருக்கலாம்’ என்று டாக்டர் மக்கே கூறுகின்றார்.

வேட்கோவர் விடுதிகள்

நகரத்தின் ஒரு புறம் இருந்த இல்லங்கட்கு அருகில் பல காளவாய்களும் அரை குறையாகச் சூளையிடப்பட்ட மட்டாண்டங்களும் காணப்பட்டன. அவ்விடத்தில் மட்பாண்டத் தொழிலாளர் வேட்கோவர் பெரும்பான்மையினராக வாழ்ந்தனராதல் வேண்டும். தொடக்கத்தில் அம்மக்கள் நகரத்தின் புறம்பே இருந்திருத்தல் வேண்டும் என்றும் (காளவாய்கள் நகரில் இருத்தல் சுகாதாரக் குறைவாதலின்), நாளடைவில் சனத்தொகை குறையக் குறைய நகரத்தின் ஒரு பகுதியிற் குடியேறலாயினர் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.[4]

வீட்டு வாயில்கள்

மொஹெஞ் சொதரோ நகரத்து இல்லங்களின் வாயில்கள் பெரும்பாலும் பெருந் தெருக்களில் வைக்கப் படாமல் குறுக்குப் பாதைகளிலேயே அமைந்துள்ளன. இம்முறையால் தெருக்கள் அழகாகக் காணப்படல் இயல்பே அன்றோ? சில பெரிய மாளிகைகளிற்றாம் அகன்றும் உயர்ந்தும் உள்ள வாயில்கள் இருக்கின்றன. ஏனைய இல்லங்களில் எல்லாம் உயரத்திலும் அகலத்திலும் குறுகலாகவுள்ள வாயில்களே அமைந்துள்ளன. பெரிய வீட்டு வாயில் 235 செ.மீ. அகலமுடையது; ஆனால் 150 செ. மீட்டருக்கு மேற்பட்ட உயரமுடையதாக இல்லை. இப்பெரிய வாயில்களை உடைய வீட்டார் பல எருதுகளையும் கோவேறு கழுதைகளையும் பிற கால்நடைகளையும் வைத்திருந்தவர் ஆதல் வேண்டும். இவர்கள் அவற்றை வீட்டு முற்றத்திலேயே கட்டியிருந்தனர். இங்கு, அவை புல்லையும் வைக்கோலையும் தின்ன அமைக்கப் பட்ட இடங்கள் இருந்த அடையாளம் தெரிகின்றது. பெரும்பாலான வீட்டு வாயில்கள் 120 செ. மீ. உயரமே உள்ளன. இவை இங்கனம் அமைந்திருத்தற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்: ஒன்று வெள்ளம் வீட்டிற்குள் எளிதில் வராமல் தடுப்பதற்காக இருக்கலாம்; மற்றொன்று, மொஹெஞ்சொ-தரோ மக்கள் சுமேரியரைப் போலக் குள்ளமானவராக இருத்தல் வேண்டும். மேலும், அவர்கள் மேன்மாடிக்கு இட்ட உத்திரங்கள் தரைமட்டத்திலிருந்து 180 செ. மீ.க்கு உள்ளேயே இருத்தலும் கவனித்தற்குரியது. எனவே பின்னதே பெரிதும் பொருத்தமுடைய காரணமாகும்.[5] வீட்டுக் கதவுகள் எல்லாம் மரக் கதவுகளேயாகும். சிந்துப் பிரதேசத்தில் அப்பழங்காலத்தில் காடுகள் மிகுதியாதலினாலும் வீட்டுச் சுவரின் கனத்திற்கு ஏற்ற கதவு அமைத்தல் கடனாதலாலும் மரக்கதவுகள் மிக்க பருமன் உடையனவாக இருந்திருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

துண்கள்

மொஹெஞ்சொ-தரோவில் காணப்பட்ட துண்கள் எல்லாம் செங்கற்களால் ஆனவையே. அவை பெரும்பாலும் சதுரத் துரண்களேயாகும். சில அடியில் 2700 ச. செ. மீ. ராகவும், மேல் போகப்போக 2250 ச. செ.மீ.ராகவும் உள்ளன. பல முற்றும் 2700 ச. செ மீ பரப்புடையனவாகவே உள்ளன. சுமேரியாவில் அதே காலத்தில் வட்டத்துண்கள் பயன்பட்டன. சுமேரியரோடு நெருங்கிய வாணிபம் செய்துவந்த சிந்துப் பிரதேச மக்கள் அவ்வட்டத் தூண்களைத் தங்கள் இல்லங்கட்குப் பயன்படுத்தாமை வியப்புக்குரியதாகும். தூண்களைத் தாங்கும் கல்வளையங்கள் பல கிடைத்தன். ஆனால் அவை ‘யோனிகள்’ என்று தயாராம சஹனி கூறுகிறார்.[6]

இனி, ஹரப்பா நகரத்து இல்லங்களைப்பற்றிய சில விவரங்களைக் காண்போம்:

ஹரப்பாவில் கட்டிட அமைப்பு

மொஹெஞ்சொ-தரோ மக்கள் சுகவாழ்விற்கேற்ற கட்டிடங்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாற் போலவே ஹரப்பா மக்களும் மிகச் சிறந்த கட்டிடங்கள் கட்டி வாழ்ந்தனர். பெரிய கட்டிடங்களின் அடிப்படை மிக்க உறுதியாக இருத்தல் வேண்டி, நன்கு சூளையிடப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிறிய இல்லங்களின் அடிப்படை இங்ஙனம் உறுதியாக இல்லை. அவை உடைந்த மண் ஓடுகள், செங்கற்கட்டிகள், மட்பாண்ட ஒடுகள் முதலியவற்றையே கொண்டிருந்தன. பெரிய கட்டிடங்களின் சுவர்களும் தரைகளும் சாக்கடைகளும் ஒருவிதக் கல் கொண்டு நன்றாக வழவழப்பாகத் தேய்த்து இக்காலச் ‘சிமெண்ட்’ பூசப்பெற்றனபோல் அமைந்துள்ளன. தளவரிசையில் உள்ள கற்கள் அனைத்தும் ஒழுங்காகவும் வழவழப்பாகவும் அறுத்துச் சூளையிடப்பட்டவையாகும். மாடிப் படிக்கட்டுகள் மொஹெஞ்சொ-தரோவில் உள்ளவைபோலத் திறம்பட அமைந்துள்ளன. குப்பை கொட்டும் தொட்டிகள், கழிநீர்த் தேக்கங்கள், கால்வாய்கள், வடிகால்கள் முதலியன மொஹெஞ்சொ-தரோவில் இருப்பவற்றைவிட நல்ல நிலையில் உள்ளன. இவையன்றிக் கிணறுகள் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன. அவை வீட்டுக்கொன்றாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருவகை இல்லங்கள்

ஹரப்பாவில் உள்ள கட்டிடங்களை இருவகையினவாகப் பிரிக்கலாம்;அவை குடி இருத்தற்குரிய இல்லங்கள், பொதுக் கட்டிடங்கள் என்பன ஆகும். குடிக்கு உரிய இல்லங்கள் பெரும்பாலும் சிறந்தனவாயும் மாடிகள் உடையனவாயும் இருக்கின்றன. அவற்றில் விருந்தினர்க்குத் தனி அறைகளும் தையலார்க்குத் தனி அறைகளும் அகன்ற முற்றங்களும் இருந்தமை குறிப்பிடத் தக்கது. பொதுக் கட்டிடங்களில் செங்கற்களால் கட்டப்பட்ட வட்டவடிமான மேடைகள் அமைந்துள்ளன.

பெருங் களஞ்சியம்

அறிஞர் ஒரு மண்மேட்டைத் தோண்டியபோது அதன் அடியில் களஞ்சியம் ஒன்று இருக்கக் கண்டனர். இது 50-10 செ.மீ. நீளமும் 4050செ.மீ அகலமும் உடையது. இதன் சுவர்கள் 1560 செ.மீ. உயரமும் 270 செ.மீ. கனமும் உடையன. இவை இரண்டு வரிசை களாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு வரிசைகட்கு இடையே உள்ளதுரம் 690 செ மீ ஆகும். இந்த இடைவெளிக்குமேல் கூரை இருந்திருத்தல் வேண்டும் என்று அறிஞர் எண்ணுகின்றனர். இந்த இரு வரிசை நெடுஞ் சுவர்களுள் ஒவ்வொரு வரிசையிலும் ஆறு மண்டபங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ஐந்து இடைகழிகள் விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டபமும் மூன்று நெடுஞ்சுவர்கள் எழுப்பப்பெற்று நான்கு அறைகள் போலப்பிரிந்து உள்ளது. மண்டபங்களின் தரைப் பகுதியில் மரப்பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அற்புதமான வேலைப்பாட்டுடன் விளங்கும் இம்மண்டபங்கள் தானியங்கள் கொட்டிவைக்கப் பயன்பட்ட களஞ்சியங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இங்கிலாந்திலும் செர்மனியிலும் பண்டமாற்று முறையும், வரிகளைப் பண்டங்களாகவே வாங்கும் வழக்கமும் இருந்த பண்டைக் காலத்தில், அரசியலார், அப்பொருள்களைச் சேமித்து வைப்பதற்காகக் கட்டியிருந்த கட்டிடங்களைப் போலவே ஹரப்பாவில் கட்டப்பட்ட களஞ்சிய மண்டபங்கள் இருக்கின்றன. ஆதலால், இவை அரசியலார் அரசிறைக்காகத் திரட்டப்பெற்ற பண்டங்கள் வைக்கும் களஞ்சியங்களாகவே இருத்தல் கூடும் என்பது அறிஞர் எண்ணமாகும்.

தொழிலாளர் இல்லங்கள்

ஹரப்பாவில் தொழிலாளர் இல்லங்கள் அமைந்துள்ள முறை கவனித்தற்குரியது. ஒரு வரிசையில் ஏழு வீடுகள் இருக்குமாறு இரண்டு வரிசைகள் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. இரண்டிற்கும் இடையில் நீண்ட குறுகிய பாதை ஒன்று செல்கின்றது. அப்பாதை இரு பக்கங்களிலும் பொதுத் தெருக்களில் கலக்கின்றது. இவ்வில்லங்கள் எகிப்தில் உள்ள கெல்-எல் அமர்னா[7] என்னும் இடத்தில் அமைந்துள்ள தொழிலாளர். இல்லங்களைப்போலவே இருத்தல் குறிப்பிடத் தக்கது. ஆனால், பின்னவை ஒரே வரிசையில் அமைந்துள்ளன; இடையில் பாதை விடப்பட்டில. மேலும், ஹரப்பாவில் உள்ள தொழிலாளர் இல்லம் ஒவ்வொன்றிலும் பெரிய முற்றமும் மூன்று அறைகளும் இருக்கின்றன. இங்ஙனம் எகிப்திய இல்லங்கள் அமைந்தில. மேலும், ஹரப்பாவின் இல்லங்கள் கி.மு.2500க்கு முற்பட்டன; ஆனால், எகிப்திய இல்லங்கள் கி.மு.2000க்குப் பிற்பட்டன. இப் பிற்கால இல்லங்களைவிட ஹரப்பாவில் உள்ள முற்கால இல்லங்கள் சுகாதார வசதியோடு பிற வசதிகளும் பொருந்தியிருக்கும்படி அமைக்கப்பட்டிருத்தல் பெருவியப்புக்கு உரியதே ஆகும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு உட்புறம் தோன்றாதவாறு இவ்வில்லங்களின் தலைவாயில் வளைந்த சுவர்களுடன் அமைந்துள்ளது. இவ்விடுதிகளில் பலவகைத் தொழில்புரி மக்கள் வாழ்ந்திருந்தனர் என்று எண்ணுதற்குரிய அடையாளங்கள் இருக்கின்றன.

வீட்டிற்கு உரிய வீடுகளே

‘அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறுகள் நான்கனுள், வீடு’ என்பது ‘இன்பம்’ அல்லது ‘மோக்ஷம்’ எனப் பொருள்படும். மனிதன் இவ்வுலகில் தன் உயிருக்குயிரான பெற்றோருடனும் மனைவி மக்களுடனும் நீண்ட நாள் கலந்து உறவாடி இன்பம் நுகரும் இடமாக உள்ளது வீடே அன்றோ? அவ்வில்லம் நல்ல சுகாதார முறைப்படி அமைந்திருக்குமாயின், நோய் நொடியின்றி உடல் வளம் குன்றாமல் சுறுசுறுப்பாக வினை யாற்றிப் பொருளிட்டி இல்லறமென்னும் நல்லறம் துய்த்து இன்ப வாழ்வு வாழலாம் அன்றோ? இங்ஙனம் இன்பம் (வீடு) தரத்தக்க இல்லம் அமைத்து வாழ்ந்தமையாற்றானோ, நம் முன்னோராய பண்டைத் தமிழ் மக்கள் மோக்ஷத்தை ‘வீடு’ என்னும் பெயரால் அழைத்தனர்? இப்பொருட் பொருத்தம் உடையனவாகவே ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ என்னும் இரண்டு நகரங்களிலும் இருந்த பண்டைக் கால வீடுகள் விளக்கமுற்றிருந்தன. எகிப்தியர், சுமேரியர் முதலியோர் பிரமிட் கோபுரங்களைக் கட்டுவதிலும் சித்திர வேலைப்பாடு மிகுந்த இல்லங்களை அமைப்பதிலும் தங்கள் கருத்தைச் செலுத்தினரே அன்றிச் சிறந்த சுகாதார முறைக்கு ஏற்றவாறு இல்லங்களை அமைத்து வாழ்ந்திலர். ‘வீடு’ (இல்லம்) என்பதை வீடு (மோக்ஷம்) ஆக்கிய பெருமை ஆரியர்க்கு முற்பட்ட சிந்துப்பிரதேச மக்கட்கே உரியதாகும்.




  1. C.R. Roy’s article in ‘The Indian World’ (1940)
  2. Patrick Cartleon’s Buried Empires’, p.148.
  3. Dr.Mackay’s; The Indus Civilization, pp.39, 40, 43.
  4. தமிழ்நாட்டு வேட்கோவர் பெரிய தாழிகளைச் செய்வதில் நிபுணர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களால் அறிக.
  5. Dr. Mackay’s ‘The Indus Civlilization’, p.202.
  6. Ibid. pp.37,38.
  7. Tel El Amarna’ in Egypt.