மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/9. விலங்குகளும் பறவைகளும்

9. விலங்குகளும் பறவைகளும்

மனிதனுக்கு முன் தோன்றிய விலங்குகள்

உலகம் தோன்றியபோது மனிதனுக்கு முன் தோன்றியவை விலங்குகளே என்பது உயிர்நூற் புலவர் முடிபு. முதலில் தோன்றிய மனிதன் இவ்விலங்குகட்குப் பயந்தே மலைக் குகைகளில் வாழ்ந்து வந்தான்; அவற்றைக் கொல்ல வில்லையும் கற்கருவிகளையும் பயன்படுத்தினான்; தான் வசதியோடு குடிசைகளைக் கட்டி வாழ அவ்விலங்குகளை ஒழிக்க வேண்டியவனானான். அவ்பொழுது அவன் வேட்டையாடலை மேற்கொண்டான்; கொடுமையற்ற விலங்குகளை உணவாகக் கொண்டான்; இங்ஙனம் மனிதன் விலங்குகளை வேட்டையாடியதாற்றான் ‘வேட்டுவன், வேடன்’ என்னும் பெயர்களைப் பெற்றான். அவனே மனித நாகரிக வரலாற்றின் முதற் பகுதிக்கு உரியவன்.

காலத்திற்கேற்ற மாறுபாடு

இவ்வாறு முதல் மனிதன் கண்டு அஞ்சியவிலங்குகள் பல இன்று இல்லை. அவை பல லக்ஷக்கணக்கான ஆயிரக்கணக்கான யாண்டுகட்கு முன்னரே இறந்து விட்டன. அவற்றின் எலும்புக் கூடுகள் மண்ணுள் மறைந்திருந்தன. உயிர்நூல் அறிஞர் அவற்றைச் சோதித்துப் பல அரிய செய்திகளை வெளியிட்டுள்ளனர். சிந்துப் பிரதேச நாகரிக காலத்தில் இருந்த விலங்குகள், சில இன்று இல்லை. அதற்கு முன் இருந்த விலங்குகள், சில சிந்துப் பிரதேச காலத்தில் இல்லை. குழந்தைகளையும் மனிதரையும் தூக்கிச் செல்லும் பெருங் கழுகுகள் இப்பொழுது இல்லை அல்லவா? மிகப் பழைய காலத்தில் அவை இருந்தன என்று உயிர் நூற் புலவர் கூறுகின்றனர். அவை இருந்தன என்பதை இராமாயணம் - பாரதம், பிருஹத் கதை போன்ற பெருநூல்களில் உள்ள செய்திகளும் மெய்ப்பிக்கின்றன. இவை நிற்க, சிந்துப் பிரதேச விலங்குகளைக் காண்போம்.

சிந்துப் பிரதேச விலங்குகள்

ஆராய்ச்சியிற் கிடைத்த சில விலங்குகளின் எலும்புக் கூடுகளை அறிஞர் ஆராய்ந்துள்ளனர்; விளையாட்டுக் கருவிகளுள், பல விலங்குப்பதுமைகள் காணப்படுகின்றன. விலங்குகள் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் சில கிடைத்துள்ளன. இம் மூன்றைக்கொண்டும் சிந்துப் பிரதேசவிலங்குகள் இன்னவைதாம் என்பதை ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

யானை

சிந்துப் பிரதேசத்தின் மேற்கெல்லை கீர்தர், இந்துகுஷ், சுலைமான் முதலிய மலைத் தொடர்களும் அவற்றைச் சேர்ந்த காடுகளுமே ஆதலின், காட்டு விலங்குகளாகிய யானை, புலி, கரடி, காண்டாமிருகம், காட்டு எருமை முதலியவற்றைச் சிந்துப் பிரதேச மக்கள் அறிந்திருந்தனராதல் வேண்டும். இவற்றுள் யானை முதன்மை பெற்றதாகும். விலங்கினத்தில் இணையற்ற பருவுடல் பெற்றுள்ள இவ்விலங்கு, அதன் தந்தம் பற்றிப் பெரு மதிப்புப் பெற்றிருந்தது. தந்தத்தால் இயன்ற சில பொருள்கள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளமையால், சிந்துப் பிரதேச மக்கள் யானைகளை வளர்க்கவும் வேட்டையாடவும் அறிந்திருந்தனர் என்னல் தவறாகாது.

எருதுகள்

எருது மிகப் பழைய காலம் முதலே பயிர்த் தொழிற்குப் பயன்பட்ட விலங்காகும். ஏலம், சுமேர் முதலிய இடங்களிலும் இவ்விலங்கு உழுதொழிற்குப் பயன்பட்டது என்பதை அவ்வந் நாட்டு முத்திரைகள் வாயிலாக உணரலாம். இது வண்டியிழுக்கவும் பயன்பட்டது. இதன் பேருதவி கண்டே சிந்துப் பிரதேச மக்கள் இதனைத் தெய்வத்தன்மை வாய்ந்ததாக நினைத்தனர். சிவபிரான் யோகத்தில் இருப்பதுபோலவும், அவரைச் சுற்றிலும் சில விலங்குகள் நிற்றல் போலவும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரையில் எருதும் ஒன்றாக உள்ளது. சிவபிரான் பசு (விலங்குகட்கு பதி (தலைவன்) எனப்படுவதையே அம்முத்திரை குறித்ததாதல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. அப்பழங்கால முதலே எருது சிறப்புடை விலங்காகக் கருதப்பட்டமையாற்றான் போலும், அது சிவனார்க்குரிய ஊர்தியாகப் பிற்றை நாளில் கருதப்பட்டது; ‘நந்தி’ என்னும் பெயர் இடப்பட்டது.

வேறோர் இனத்தைச் சேர்ந்த எருதும்[1] சிந்துப் பிரதேசத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அஃது இன்றைய ஐரோப்பிய எருதுகட்குத் தந்தை என்று அறிஞர் தீக்ஷத் கருதுகின்றார்; ‘இவ்வெருது உருவங்கள் ஏராளமாகச் சுமேரியர் முத்திரைகளில் காணப்படுகின்றன.இவற்றைச் சிந்துப் பிரதேச மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; இவை இந்தியாவிலும் இருந்தன’, என்று அவர் கூறுகின்றார்.

நாய்கள்

வீட்டு விலங்குகளுள் நாயும் ஒன்று அன்றோ? நாய் இல்லாத ஊர் ஏது? நகரம் ஏது? செங்கல்லைக் காயவைத்திருந்த போது அதன்மீதுநாய்கள் நடந்துசென்றமையால் உண்டானஅடிச்சுவடுகள் அப்படியே இருக்க, அக்கற்கள் சூளையிடப்பட்டு, வீடுகள் கட்டப் பயன்பட்டுள்ளன. அக்கற்களில் இன்றும் காணப்படும் அடிச்சுவடு களைக் கொண்டும் பதுமைகளைக் கொண்டும் அறிஞர், மொஹெஞ்சொ-தரோவில்நாய்கள் இருந்திருத்தல்வேண்டும் என்று கருதுகின்றனர். சாதாரண நாய்கள் அன்றி வேட்டை நாய்களும், இக்காலத்துப் ‘புல்-டாக்’ (Bull-dog) போன்ற நாய்களும் அங்கு இருந்தனவாம். ஓரின நாய்கள் குட்டை கால்களுடனும் சுருண்ட வாலுடனும் இருந்தன. மற்றோர் இன நாய்கள் நீண்ட அகன்ற காதுகளுடனும் நீண்ட வாலுடனும் இருந்தன. சில நாய்கள் கழுத்தில் பட்டைகள் கட்டப்பெற்று இருந்தன. “இறுதியிற் கூறப்பட்ட நாய்கள், இந்திய ஓநாய் இனத்திலிருந்து தோன்றியவை; சாதாரண நாய்கள் இந்திய நரி இனத்திலிருந்து தோன்றியவை’, என்று அறிஞர் பய்னி பிரசாத் அறைகின்றனர். இத்தகைய நாய்களின எலும்புகள் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. இந்திய நாய்கள் மரக்கலங்கள் மூலம் பாபிலோனியாவுக்கு அனுப்பப்பட்டன என்பதிலிருந்து, நாய்களை வளர்க்கும் வழக்கம், பண்டைக்கால முதலே இந்தியாவில் இருந்ததென்பது தெளிவாம்.

பூனைகள்

சிந்துப் பிரதேசத்தில் நாய்களைப் போலப் பூனைகள் இருந்தன என்பது கூறக்கூடவில்லை. என்னை? சில எலும்புகளே பூனைகளைக் குறிப்பனவாகக் கிடைத்திருத்தலால் என்க. மேலும், பூனைகள் அபிசீனியாவிற்றாம் தோற்றம் எடுத்தவை. ஆதலின், அப்பண்டைக் காலத்தில் இந்தியாவில் மிகச் சிலவே கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் நாளடைவில் பூனைகள் இந்தியாவிற் பெருகிவிட்டன.[2]

பன்றிகள்

பன்றிகளின் எலும்புகள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. இவை அக்காலத்தில் மிக்கிருந்தன. ஆதலின், அம்மக்கள் இவற்றின் இறைச்சியை உண்டு வந்தனர். இவை அன்றிக் காட்டுப் பன்றிகளும் உணவுக்குப் பயன்பட்டன.

ஆடுகள்

மலையாடுகள், வெள்ளாடுகள் என்பவற்றைக் குறிக்கும் பதுமைகள் பலவாகும். வெள்ளாடுகள் சிந்துப் பிரதேசத்தில் மிக்கிருந்தன. காஷ்மீரப் பகுதிகளில் இன்றும் மலையாடுகள் உள்ளன. அவற்றைப்போன்ற ஆடுகளின் எலும்புக்கூடுகளே மொஹெஞ்சொ - தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. அவ்வாடுகள் சிந்துப் பிரதேசத்தின் மேற்குமலைப் பிரதேசத்துக் காடுகளில் ஏராளமாக இருந்தனவாதல் வேண்டும். மலையாடுகளைப் போன்றே ஒவியங்கள் தீட்டப்பெற்ற மட்பாண்டங்கள் சிந்துப் பிரதேசம் முதல் சுமேரியா வரையுள்ள சிறப்பான இடங்களில் கிடைத்துள்ளன. எனவே, அள்வரையாடுகளின் இறைச்சி சிந்துப் பிரதேச மக்களின் உணவுப் பொருள்களுள் ஒன்றாகச் சிறந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

கழுதைகள்

மொஹெஞ்சொ-தரோவில் கழுதைகள் இருந்தனவாகத் தெரியவில்லை; ஆனால், ஹரப்பாவில் இருந்தன. என்னை? அங்குக் கழுதைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்தன ஆதலின் என்க. ஆயினும், சிந்துப் பிரதேசத்துக் கழுதைகள் பயன்பட்ட விதம் உணருமாறில்லை. என்னை? பொதி சுமக்கவும் வண்டி இழுக்கவும் எருதுகளே பெரிதும் பயன்பட்டன. ஆதலின் என்க. சுமேரியாவிலும் இங்ஙனமே எருதுகள் பயன்பட்டன.

மான்கள்

பலவகை மான்களின் கொம்புகளும், எலும்புகளும் சிந்துப் பிரதேசத்திற் கிடைத்துள்ளன. அங்குப் புள்ளிமான்களும் கலைமான்களுமே மிக்கிருந்தன. இவற்றின் கொம்புகட்கும் இறைச்சிக்குமே சிந்துப் பிரதேசத்தவர் இவற்றை வளர்த்து வந்தனர். வேட்டையாடி வந்தனர். மான் கொம்பும் குளம்பும் மருந்துக்கும் பயன்பட்டிருத்தல் வேண்டும்.

எருமைகள்

மண்ணாலும் செம்பாலும் இயன்ற எருமைப் பதுமைகள் சில கிடைத்துள்ளமையால், சிந்துப் பிரதேசத்தில் எருமைகள் இருந்தன எனக் கூறலாம். ஆயின், சிந்துப் பிரதேசத் தட்ப வெப்ப நிலைகள் காரணமாக, அங்கு அவை நீண்டநாள் உயிர்வாழக் கூடவில்லை என்று அறிஞர் அறிவிக்கின்றனர்.

ஒட்டகம்

மிகச் சில ஒட்டக எலும்புக்கூடுகளே சிந்துப் பிரதேசத்திற் கிடைத்தன. எனவே, அவை அங்குப்பலவாக இருந்தில எனக் கூறல் மிகையாகாது. மேலும் இவை அரேயியாவிலிருந்தே அப் பழங்காலத்தில் கொண்டு வரப்பட்டன எனக் கூறுதல் பொருத்தமானது.

முயல்கள்

முயல் மிகப் பழையகால விலங்கு என்பது உயிர் நூற் புலவர் முடிபு. முயல்களின் எலும்புகள் பல சிந்துப் பிரதேசத்திற் கிடைத்தன ஆதலின், முயல் உணவு சிறந்த உணவாகக் கருதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் எண்ணுகின்றனர்.

ஆமை முதலியன

ஆமை ஒடுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஆமை இறைச்சி உணவாகக் கொள்ளப்பட்டது. ஆமை ஒடுகள் வேறு காரியங்கட்கும் பயன்பட்டன. அங்கு முதலை இறைச்சியும் பயன்பட்டது. அங்குக் கீரி, குரங்கு, அணில், எலி இவை மிக்கிருந்தன என்பது விளையாட்டுப் பதுமைகள் மூலம் உணரக்கிடக்கிறது. எலிப்பொறிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அங்கு எலிகள் துன்பம் பொறுக்க முடியாதபடி, இருந்தது புலனாகிறது.

பறவைகள்

இவற்றுள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் பெரு விருப்பமுற்று வளர்த்தவை கிளிகளே ஆகும். என்னை? கிளிகள் போலச் செய்யப்பட்டுள்ள பதுமைகள் அங்குப் பலவாகக் கிடைத்துள்ளமையால் என்க. பல பதுமைகளும் ஊது குழல்களும் கேர்ழி வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளமையால் கோழிகளும் பலவாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளியலாம். கோழிச் சண்டை[3] அக்காலத்தில் இருந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். எனவே சண்டைக்கு என்றே கோழிகள் தயாராக்கப்பட்டன என்பதும் அறியத்தக்க செய்தியே ஆகும், ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் மீது மயிலே சிறப்புறத் திட்டப்பட்டிருத்தலால், பண்டை மக்கள் மயிலை நன்கு அறிந்திருந்தனர் என்பது தெளிவாம். புறாக்களின் பதுமைகளைக் கொண்டு சிந்துப் பிரதேசத்தில் புறாக்கள் இருந்தன என்பதை அறியலாம். இப்பதுமைகள் மெசொபொட்டேமியாவில் கிடைத்த பறவைப் பதுமைகளை ஒத்துள்ளன. ஒரு பெண் பதுமையின் தலை மீது இரண்டு புறாக்கள் இருப்பதுபோலச் செய்யப் பட்டுள்ளன. இவை அன்றி மைனாக்கள், பருந்துகள் போன்றவையும் அங்கு இருந்தன என்னலாம்.

நாகங்கள்

ஹரப்பாவில் பாம்புப் பதுமைகள் கிடைத்துள்ளன; சில முத்திரைகள் பாம்பு படம் விரித்தாற் போலச் செதுக்கப் பட்டுள்ளன. சில பாண்டங்கள் மீதும் பாம்பு உருவம் தீட்டப் பட்டுள்ளது. அக்கால மக்கள் பாம்பை வணங்கி வந்தனர்; பாம்பிற்குப் பால் வார்த்தனர் என்று எண்ணுதற்குரிய குறிகள் காணப்படுகின்றன.


  1. Bostauras (parent of the modern European cattle) K. N. Dikshit in his ‘Pre - historic Civilization of the Indus Valley’, p.39.
  2. Pre-historic Civilization of the Indus Valley, p.41.
  3. கோழிச்சண்டை மிகப் பழைய காலமுதலே தமிழகத்தில் உண்டு என்பதைப் புறப்பொருள் நூல்களால் உணர்க.