லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அண்ணல் காந்தியின் அறவுணர்ச்சி ஆசான்!


1. அண்ணல் காந்தியின் அறவுணர்ச்சி ஆசான்!

னித இனம் நல்வாழ்வு வாழ, எண்ணற்ற மனித குல மேதைகள் தங்களது சொந்த வாழ்வினையே பலியாக்கிக் கொண்டார்கள். அத்தகைய மாமேதைகளில் ஒருவர் லியோ டால்ஸ்டாய் என்ற எழுத்துலகச் சிற்பி.

வளர்ந்து வரும் புதிய மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ‘நல்லவராக இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர் மட்டுமன்று டால்ஸ்டாய், என்னென்ன புத்திமதிகளை அவர் உலகுக்கு கூறினாரோ அதற்கேற்ப நல்லவராகவும் வாழ்ந்து காட்டிய நல்வழி நல்லறிஞராகவும் இருந்தவர்;

புகை மனிதனுக்குப் பகை என்று அவர் அறிவுரை கூறினார்! அதற்குத் தக்க, அபினி, கஞ்சா, சாராயம் மற்றும் பணக்காரர்களின் மதுபானபோதை வகைகள் முதலியவற்றால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்லி, அவற்றைத் தன் சொந்த வாழ்க்கையிலே அறவே கையாளாமல் நல்ல பழக்கங்களையே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் லியோ டால்ஸ்டாய்!

மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவரா டால்ஸ்டாய் என்றால், அவற்றின் சிகர போதையாளராக வாழ்ந்து கொண்டிருந்தவர்; ஆனால், இவற்றின் கேடுபாடுகளை விளக்கி எழுத என்று எழுதுகோல் எடுத்தாரோ அன்றே பழக்க வழக்கங்களைத் தனது புலனடக்கங்களால் கொன்று அழித்து, நல்ல சமுதாய வளர்ச்சிக்கான பழக்க வழக்கங்களை வளர்த்து அதன்படி வாழ்ந்து காட்டினார் டால்ஸ்டாய்!

இரஷிய நாட்டிலே புலால் உண்பதே பிறவிப்பயன்! அவர்கள் இடையே மாமிசம் உண்பதை அறவே கைவிட்டு, ‘இறைச்சி உண்ணாதே’ என்றுதான் கூறியதற்கு எடுத்துக்காட்டு இலக்கணமாகத் திகழ்ந்தவர் லியோ!

தமிழ்மக்களிலே வாழும் சில வீர சைவர்களைப் போல கம்பீரமாக சைவ உணவுகளைப் பற்றித் தனது கட்டுரைகளிலே எழுதியவர் அவர். ருஷ்ய நாட்டிலேயும் சில வீரசைவக் குடும்பங்களைத் தோற்றுவித்து உடலோம்பலின் வழிகாட்டியாக நின்றவர் டால்ஸ்டாய்!

பொழுதுபோக்குக் குடிபோதைக் களியாட்ட மன்றங்களிலே ஆடிப்பாடி ஆடம்பரமாக வாழ்ந்து பெரும் போதையெனும் பள்ளத்தாக்குக்குள்ளே வீழ்ந்து கிடந்த அவர், என்று அது சமுதாயத் தீமைகளிலே ஒன்று என்று நிலை நாட்டி எழுதினாரோ, அன்று முதல் அவற்றின் போக முகங்களை ஏறெடுத்தும் பாராமல், மிக மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டு சமுதாய மேன்மைக்குச் சான்றாக விளங்கினார்.

இந்திய நாட்டிற்கு அரும்பாடு பட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த அண்ணல் பெருமான் காந்தியடிகளை, பாரதப் பெருமக்கள் தேசப்பிதா என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும், பேருணர்ச்சி யோடும் எப்படி அழைக்கின்றோமோ, அந்த மனிதப் பண்பாட்டு ஒழுக்க உணர்வோடு, காந்தியடிகள் லியோ டால்ஸ்டாயை “எனது குருநாதர்” என்று வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது.

காந்தியடிகள் தனக்கு குரு என்று இரண்டு மாமனிதர்களை ஏற்றுக் கொண்டார். அவர்களிலே ஒருவர், கோபால கிருஷ்ண கோகலே என்பவர். அவரை உத்தமர் காந்தியடிகள் தனது அரசியல் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக் கொண்டார்.

மற்றொருவர் லியோ டால்ஸ்டாய், உலக மக்களுக்கு என்ன ஒழுக்க உணர்வுகளை எடுத்தோதினாரோ, அதே நற்குண சீலங்களோடு தனது மரணம் வரை அவர் வாழ்ந்து காட்டி மறைந்தவர் என்பதால், காந்தியடிகள் அவரை, தனது அறவுணர்ச்சிகளுக்குரிய ஆசானாக ஏற்றுப் பெருமைப்பட்டு வாழ்ந்து மறைந்தார்.