வளர்ப்பு மகள்/வளர்ப்பு மகள்

வளர்ப்பு மகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள, ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே மேக்கப் போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலுஷ்ம் 'நாட்டுக்கட்டை' இளம்பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.

பழைய கொத்தனாரும், ‘டிகிரி வாங்கிய’ புதியப் பொறியாளரும் கலந்து ஆலோசித்துக் கட்டி முடித்தது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாக போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

மேல்மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு 'குடித்தனம்' புரிந்தன. கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.

‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள், ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு அதேசமயம் பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே கோணி மூட்டைகளும் பூனைக்குட்டிகளும் தகர டப்பாக்களும் ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து வெளியே வந்து வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாடநூலுக்குள் மறைந்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு போரடித்தவள். போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள். உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு. முகத்தைத் திருப்பி, லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

உள்ளே. குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி, யானை குளிப்பது மாதிரி, 'டப்'பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வதுபோல ஒரு சத்தங்கேட்டது ஒருவேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலியே என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, "நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்

கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் கம்பீரம் கலையாமல் சொக்கலிங்கம் நின்றுகொண்டு இருந்தார்.

நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்தச் சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி மொத்தத்தில் சொல்லப்போனால், ஆசாமி, அழகாகவே இருப்பார்.

அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர் மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக்கொண்டு நின்றார். அவர் கண்முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்துவிட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள். ஏதோ இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.

மல்லிகாவைப் பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று. 'டப்பும்' டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, "நான் சொன்னது. உன் காதுல விழலியாம்மா" என்றார்.

"என்னப்பா சொன்னீங்க?"

"இந்தாபாரு... ஒண்ணு 'என்ன அப்பா'ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நான் என்னமோ உனக்கு பேரன் மாதிரியும். நீ எனக்குப் பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?..."

மல்லிகா சிரித்துக்கொண்டே சொன்னாள் - "நீங்களும் பண்ணவில்லையா 'அம்மா'ன்னு பிரித்துச் சொல்லுங்க. இல்லன்னா..."

"சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படும் முன்னால. அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைகூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேடத்துக்குத்தான் போகமுடியும். இன்னுமா குளிக்கிறாள்..? குளித்து முடித்துட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்..."

மல்லிகா சிரித்துக்கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக்கொண்டு. மார்புக்கு மேலே சேலையைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, "மல்லி... நீ போய் குளிம்மா" என்றாள்.

"நான் அப்புறமா குளிக்கேன்."

"கல்யாணத்துக்கு நேரமாகுது."

"நான் வரல... தல வலிக்குது."

சொக்கலிங்கம் பதறினார். "உனக்கு வயது வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா. நாலு பேரு என்ன நினைப்பாங்க."

பார்வதி, அவளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டே "நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள்தான் ஒன்னைத் தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்..." என்றாள்.

"முதல்ல அப்பா குளிக்கட்டும்."

"உங்க அப்பா குளிக்குறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போறாரு..."

"நான் மிஷின்ல புரளாட்டா - நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு. பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள். நீதான் - மறந்துடாதே."

"நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையிலதான் நனையும்!"

"போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி."

மல்லிகா சிரித்துக்கொண்டே குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளேபோய். ஒரு நாட்டுப் புடவையை தேடிப் பிடித்து எடுத்து சொக்கலிங்கத்திடம் தவறிப்போய் "மல்லிகாகிட்டே கொடுங்க" என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக்கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும். பின்பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, சுய அலங்காரம் செய்துகொள்ள தனது தாம்பத்திய அறைக்குள் போனாள்.


2

சொக்கலிங்கம், டெலிபோனைச் சுழற்றினார்.

"அலோ... செட்டியாரா... காரு ரெடியா... பரவாயில்ல. அரைமணி நேரம் கழித்தே அனுப்புங்க. அப்புறம் வேளச்சேரி விவகாரம் பழம். நேர்ல பேசலாம். சரி. காரை அரை மணிக்கு அப்புறமாகவே அனுப்புங்க. மூவாயிரம் ரூபாய் குப்பன்கிட்டே கொடுத்து அனுப்புறேன். அதை முடிச்சிடுங்க. வச்சிடட்டுமா. வச்சிடுறேன்."

சொக்கலிங்கம் டெலிபோனை வைத்தபோது, பார்வதி கண்ணாடி பொருத்திய பீரோவைத் திறந்து. வைர நெக்லஸ், ஏழு பவுன் இரட்டைவடச் சங்கிலி முதலியவற்றைக் கழுத்திலும், நான்கைந்து தங்கக் காப்புகளை கைகளிலும், மூன்று மோதிரங்களை விரல்களிலும் போட்டுக் கொண்டாள். நகைகளைப் போடப்போட கல்யாண வீட்டிற்கு எப்போது போவோம் என்று அவளுக்கு அவசரம், ஆவேசமாகும் அளவிற்கு வளர்ந்தது.

குளித்துவிட்டு வந்த மல்லிகாவிற்கு பார்வதி தலைவாரி விட்டாள். "போங்கம்மா நான் குழந்தையில்லே... எனக்கும் கையிருக்கு" என்று அந்த கல்லூரிக்காரி சிணுங்கியபோது, பார்வதி "இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எப்படி டிரஸ் பண்றது என்கிறதைவிட எப்படி எப்படிப் பண்ணாமல் இருக்கலாம் என்கிறதுதான் அதிகமாய்த் தெரியும். சும்மா தலையைக் கொடுடி... அப்படி இப்படி ஆட்டாதே..." என்று சொல்லிக்கொண்டு. அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டே இரட்டைப் பின்னல் போட்டாள். பிறகு கண்ணுக்கு மை போட்டாள். அதன்பின் பீரோவைத் திறந்து நகைகளை நீட்டினாள்

மல்லிகா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். எம்மா... முதுகில அடிக்கணுமுன்னு சொல்லுங்க... குனியுறேன். கன்னத்துல முத்தங் கொடுக்கணுமுன்னால், முகத்தை நிமிர்த்துறேன். ஆனால் நகை போடுறதுக்கு கழுத்தையோ கையையோ நீட்டமாட்டேன். போங்கம்மா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது..."

"உனக்கு பிடிக்காட்டால் போகட்டும்... எனக்குப் பிடிக்கிறதுக்காவது போடக்கூடாதா. இன்னைக்கு மட்டும் போட்டுக்க ராசாத்தி..."

"இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடுங்க... ப்ளீஸ். இதுங்கள நீங்களே போட்டுக்குங்க... உங்க அழகை எடுப்பாக் காட்டும்."

பார்வதி யோசித்தாள்.

கணவனிடம் இருந்து இதுவரை வராத, "அழகு. எடுப்பாய் இருக்கும்" என்பன போன்ற வார்த்தைகளின் வசீகரங்களில் சிக்குண்ட பார்வதி, மல்லிகாவுக்கு என்றே செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலானவற்றை எடுத்துப் போட்டுக்கொண்டாள். தோளும், கழுத்தும் தொடும் இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட குரல்வளை வரைக்கும், நகையடுக்குகள்.

இதற்குள், குளியலறையில் இருந்து, "ரெடியாயிட்டீங்களா" என்று கூவிக்கொண்டே வந்த சொக்கலிங்கம், மனைவியைப் பார்த்து கிண்டலடித்தான்.

"இந்த ரெண்டு கம்மலையும் கழட்டிட்டு அவளோட ரிங்கை போட்டுக்கோயேன்... கொப்பரைக்கு வளையம் போட்டது மாதிரி இருக்கும். வேணுமானால் காம்பவுண்டு கதவுச் சங்கிலியைக் கழட்டித் தரட்டுமா... அதையும் தங்கச் சங்கிலி மாதிரி போட்டுக்கோ. ஆளைப் பாரு! நாற்பது வயதுக்குமேல உடம்பைக் குறைக்கதுக்கு பார்க்காமல், நகைகளை கூட்டப் பார்க்காள்..."

"நான் வேணுமானால் தடியா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்ன நஷ்டம்? ஏண்டி இப்படிச் சிரிக்கிற?"

சிரிக்கலம்மா அப்பா. அம்மாவை நீங்கள் ஓவரா பேசுறீங்க."

"நாம இப்போ அவரு கண்ணுக்கு அப்படித்தாண்டி தெரியும்! இவரு இவ்வளவு பேசுறாரே. இவரு காலப்பாரு, குளிச்சாராம், காலுல தண்ணியே படல..."

"தண்ணி போடுற உன் ராமனைவிட நான் தேவலடி."

"என்னப்பா நீங்க. அம்மா அக்கறையோடு பேசுறாங்க. நீங்கள் சீரியசா எடுத்தா எப்படி?"

"விளையாட்டு வினையாகுமுன்னு சொல்லுடி."

"வினைகூட என்கிட்டே விளையாட்டாகுமுன்னு சொல்லும்மா..."

"நான் ஒண்னும் சொல்லப் போறதுல்ல. அதோ, கார் வந்துட்டு. போயிட்டு சீக்கிரமா வந்துடணும்..."

மூவரும் காரில் ஏறினார்கள்.

மல்லிகா இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

உரித்த வாழைத்தண்டு போன்ற கால்கள். ஆமணக்குச் செடியைப் போன்ற சிவப்பும் ஊதாவும் 'கலந்த' நிறம். அது ரத்தச் சிவப்பும் இல்லை. குங்குமச் சிவப்பும் அல்ல. அழகான சிவப்பு. தாமரைத் தண்டு போன்ற கழுத்து, நளினமும், கம்பீரமும் கலந்த பார்வை. எவர் சொல்வதையும், உண்மையிலேயே உன்னிப்பாகக் கேட்பதுபோல், முதுகை வளைத்து, முகத்தை முன்பக்கமாய் கொண்டு வரும் நேர்த்தி. குட்டையென்றோ, நெட்டையென்றோ சொல்ல முடியாத உயரம். பல்வேறு டிசைன்கள் போட்ட அந்த 'மோஷி மோஷி' சேலையில், இரட்டைப் பின்னல்களில் ஒன்று தோளின் முன்பக்கம் தொங்க, சேலைக் கடையின் முன்னால் நிற்கும் மெழுகுப் பெண்ணைப்போல, அதேசமயம், ஆபாசம் இல்லாத கவர்ச்சியுடன், பாலுணர்வைத் தூண்டாமல், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற பாங்குடன் மல்லிகா தோன்றினாள். அவளையே இமை விலகப் பார்த்த திரு-திருமதி சொக்கலிங்கங்கள், ஒருவருக்கு ஒருவர் புன்முறுவலைப் பரிமாறிக்கொண்டே, புளகாங்கிதமானார்கள்.

டிரைவர் எஞ்ஜினை 'ஆன்' செய்தபோது, ராமசாமி வந்தார். பார்வதியின் பெரியண்ணன். அந்த உறவுக்கு ஏற்ற உருவம் உருவத்திற்கு ஏற்ற பணம் உள்ளவர். பணத்திற்கு ஏற்ற 'பாவலா' மனிதர்.

"கல்யாணத்துக்குப் புறப்பட்டாப் போல இருக்கு?"

சொக்கலிங்கம் முகத்தைச் சுழித்தார். காலங்காத்தால வந்துட்டான்! இவன் வாடை பட்டாலே, மூச்சு முட்டும். இனிமேல் போன காரியம் உருப்பட்டாலத்தான்!

'அண்ணன் கேட்டதுக்கு எதாவது சொல்லுங்களேன்' என்பது மாதிரி. பார்வதி, கணவனின் இடுப்பை ரகசியமாக இடித்தபோது, சொக்கலிங்கம், தன் மூத்த மைத்துனருக்குப் பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார். கனகச்சிதமாகவே பதில் சொன்னார்.

"பின்ன என்ன மச்சான்... உங்க தங்கச்சி இவ்வளவு நகை நட்ட சுமக்க முடியாம போட்டிருக்கும்போது. நான் இந்தப் பட்டு வேட்டியை கட்டியிருக்கும்போது நல்ல காரியமான கல்யாணத்துக்குத்தான் போவோம். கருமாந்தரத்துக்கா போவோம்?"

ராமசாமி சளைக்கவில்லை.

"அடடே... நம்ப மல்லிகா அக்காவோட கல்யாணமா? எனக்கு மறந்தே போயிட்டு நானும் கார்ல ஏறிக்கிறேன்."

"முடியாது சாமி... நாங்க வழில ஓர் இடத்துக்குப் போயிட்டு வரப்போறோம். நீங்கள் முன்னால போய் அங்க இருக்கவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க. டிரைவர் அவரு மறிச்சிக்கிட்டு நிற்கிறாரேன்னு யோசிக்க வேண்டாம் வண்டியை எடு. அவரு தானா துள்ளுவாரு வண்டிக்கு சேதம் வருமேன்னு பார்க்கியா? சீக்கிரமாய் விடுப்பா..."

கார் சீறிக்கொண்டு புறப்பட்டது. ராமசாமி, அப்போதைக்கு ஒதுங்கிக் கொண்டார்.

பார்வதியால் தாளமுடியவில்லை. மல்லிகாவை விட்டு சிறிது விலகி உட்கார்ந்துகொண்டே, "எங்கள் அண்ணங்கன்னால் ஏன் உங்களுக்கு இப்படி பற்றி எரியுது?" என்றாள்.

"வத்தி வச்சால் பற்றித்தான் எரியும்."

"உங்கள் தங்கை புருஷனைவிட எங்க அண்ணன் தம்பிங்க மோசமில்ல. கல்யாணம் நிச்சயிக்கறதுக்கு முன்னால, உங்கள்கிட்ட பெண்ணுக்குத் தாய்மாமனாச்சேன்னு, 'இந்த இடம் பிடிக்குதா அத்தான்னு' ஒரு வார்த்தை கேட்டாரா? சரி. கேட்கல. கல்யாண நோட்டிசை நேரிலயாவது வந்து கொடுத்தாரா? சரி. கொடுக்கல. கல்யாண வீட்ல யார் யாருல்லாமோ வாழ்த்துரையோ மண்ணாங்கட்டியோன்னு போட்டிருக்கே, உங்கள் பெயரையும் போடுறது? சரி போடல. பெண் வீட்டார்னு சொல்லி. ஏறிட்டுப் பாக்காத அவரோட அண்ணன்மாருங்க பெயருங்களை போட்டிருக்காரு... பிள்ளைகளோட பெயருங்களை போட்டிருக்காரு... தாய்மாமா பெயரை ஏன் போடல? இவள் பெயரைக்கூட போட்டிருக்காரு. இவளை எடுத்து வளர்த்த உங்கள் பேரு எங்கேயாவது இருக்கா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க? அரவ மிஷின் மாதிரி கத்துவீங்களே. இப்போ ஏன் பேசமாட்டேங்கிறீங்க?"

சொக்கலிங்கம் பட்டும் படாமலும் பதிலளித்தார்.

"இதனால அவங்களுக்குத்தான் நஷ்டமே தவிர நமக்கில்ல. நாலு பேரு நாலு விதமாய்ப் பேசப்படாதேன்னு போறோம். அவ்வளவுதான். உங்க அண்ணன்மாரு தாழ்த்தின்னோ இல்லை என் மச்சான் உசத்தின்னோ எதுவும் கிடையாது. எல்லாருமே காலச் சுத்துன பாம்புங்க. டிரைவர்! நீ ஏய்யா நாங்க பேசுறதக் கேட்கிறது மாதிரி வண்டியை மெதுவா விடுற? சீக்கிரமா விடுப்பா. இன்னொண்ணும் சொல்றேன், கேளுடி அண்ணன் தம்பிங்களானாலும் சரி... அக்கா தங்கைகளானாலும் சரி. அம்மா வயித்துல இருந்து ஒருவரோடு ஒருவர் சொல்லிட்டுப் பிறக்கல. ஒண்ணா பிறக்குறதுனாலேயே ஒண்ணா ஆயிட மாட்டாங்க, கூடப் பிறக்கறதுனாலேயே கூடி வாழ்ந்துட மாட்டாங்க. உறவைவிட நட்பு இருக்கே, அதுலயும் பால்ய சிநேகிதம் இருக்கே, அதுக்கு இணையாய் எதுவும் ஆக முடியாது. சொந்தக்காரங்கிட்ட உடம்புல ஒடுற ரத்தம் துடிக்கலாம். ஆனால், சிநேகிதங்கிட்ட அந்த உடம்புக்குள்ள இருக்கிற ஆன்மா துடிக்கும். இந்தச் செட்டியாரையே எடுத்துக்கோ. அவரு எங்கே பிறந்தாரோ, நான் எங்கே பிறந்தேனோ, அவரு செட்டியார்ல நாட்டுக்கோட்டையா, வாணியச் செட்டியா, வளையல் செட்டியான்னு கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவரைவிட, எனக்கு நெருக்கமான மனுஷன் யாருமே இல்ல."

"ஆயிரம் சொல்லுங்க, என்கூடப் பிறந்தவங்க... உங்கள் தங்கை புருஷன் மாதிரி நடக்க மாட்டாங்க. எங்கள் அண்ணனை நாயை நடத்துறதவிட மோசமாய் நடத்துனீங்க கார்ல ஏறப்போனவரக்கூட முகத்துல அடிச்சதுமாதுரி பேசுனீங்க. அப்போகூட அவரு கோபப்பட்டாரா? சிரிக்கிறத விட்டாரா..?"

"கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுசண்டி, அதோட, ரோஷம் இருந்தால்தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்."

"சரி சாமீ! எங்கள் ஆட்கள் ரோஷங்கெட்டவங்கதான். ஆபத்தானவங்கதான். இவள் அப்பாதான் ரோஷக்காரர் - யோக்கியர். போதுமா..?

"உனக்கு அறிவு இருக்காடி? இவள் நம்ம பொண்ணு, நம்மைத் தவிர வேற யாரையும் நினைக்காத பொண்ணு, நம் மடியிலேயும், தோளுலேயும் புரண்ட பொண்ணு. இவளையும் அந்தக் குடிகாரனையும் எதுக்காகடி சம்பந்தப் படுத்திப் பேசுற? பாரு, அவள் முகம் போற போக்க..."

பார்வதி. அப்போதுதான் உணர்ந்தவள்போல் திடுக்கிட்டு, மல்லிகாவைப் பார்த்தாள். அவள் அருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டு அவளை தனது வலத்தோளில் படும்படியாய் அணைத்துக் கொண்டாள் மல்லிகா, சிரித்துக்கொண்டே இருவர் தோளிலும் கைபோட்டபடி "நான் ஒண்ணும் கோபமும் படல. வருத்தமும் படல. நீங்கள் யாரைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும். எனக்குக் கவலையில்லை. என் கவலையெல்லாம் நீங்கள் சண்டை போடக்கூடாது என்கிறதுதான்" என்று சொல்லிக்கொண்டே அவர்களின் இருவரின் கைகளையும். தன் இரு கரங்களால் பலமாகப் பிடித்துக்கொண்டாள்.

அந்தப் பிடியின் பலத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால், மல்லிகா, ஏதோ பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பதுபோல் தோன்றியது.

அவர்களின் கைகளைப் பிடித்திருப்பது, "என்னை கைவிட மாட்டீர்களே" என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.


3

வடசென்னையில், 'வண்ணாரப்பேட்டை' என்று வாயாலும், 'வண்ணையம்பதி' என்று எழுத்தாலும் அழைக்கப்படும் பகுதி; அதில் நெருக்கமான வீடுகள் கொண்ட ஒரு சுருக்கமான தெரு. அந்தத் தெருவை, கிராமத்துப் பாணியில் சொல்வது என்றால், 'முக்கடி - முடங்கடி' என்று சொல்லலாம். சென்னைத் தமிழில் சொல்வது என்றால் 'முட்டுச் சந்து' உள்ளே போகிற காரும், வண்டிகளும் நேராக, அந்தத் தெரு முழுசையும் பக்கத்தையும். குறுக்காக அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் போய்த்தான் முட்டவேண்டும். அந்த வீட்டை முட்டாமல் வண்டிகள் திரும்பவும் முடியாது. இந்த இலட்சணத்தில், அங்கே, ஒரு லாரியும், இரண்டு மூன்று 'டிரக்' வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

முகவரி தெரியாமல், மெயின்ரோட்டில் இருந்து வருபவர்களை, இங்கே கொண்டுவந்து. "இந்தா, முட்டு," என்பது மாதிரி, செயலற்றதாக்கும் வல்லமை, இந்தத் தெருவுக்கும் உண்டு. இந்தப் பகுதி மக்களுக்கும் உண்டு. "செல்லும் செல்லாததுக்கு செட்டியார்" என்பதுபோல், முகவரியில் உள்ள தெருவின் விவரம் தெரியாமலும், அதேசமயம் விவரம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் மனப்பான்மையுடனும், கேட்பவரிடம், "லெப்ட்ல கட் பண்ணி... ரைட்ல திரும்பி... அப்புறம் சீரா போய். ரைட்ல திரும்பி..." என்று சொல்பவர் சொன்னதும், அப்படிக் கேட்டுத் தொலைத்தவர்கள். இறுதியில் இங்கே வந்து தங்களைத் தாங்களே தொலைத்தவர்கள்போல், தடுமாறியதும் உண்டு.

என்றாலும். எப்போதும் கலகலப்புக்குப் பெயர் போன அந்த-அதாவது. அந்த முனுசாமித் தோட்டத்தின் மூன்றாவது சந்து. இப்போது கலகலப்பான கலகலப்புடன் காட்சியளித்தது. குறுக்கே மறித்து நின்ற அந்த வீட்டின் வாசலில், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. வாழைவிலை அதிகம். வாங்கி, கட்டப்படவில்லை ஒலி பெருக்கியில், "ஓரம் போ.. ஓரம் போ" என்று பாடல் ஒலித்தது. எந்த ஒரத்திலும் இடம் இல்லாத அளவுக்கு அளவுக்கு மீறிய மக்கள் நெரிசல், மணமகளின் தந்தையும் சொக்கலிங்கத்தின் தங்கை கணவனுமான பெருமாளும், எதைச் சம்பாதிக்கவில்லையானாலும். நண்பர்களைச் சம்பாதித்து, தானும் அவர்களின் தோழமைச் சம்பாதனைக்கு உட்பட்டவர்போல் தோன்றியது.

மணமேடையில் மணமக்கள், ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். சுற்றி நின்றவர்கள், ஏதாவது சத்தங்கேட்டு, வேறுபக்கமாகத் திரும்பும்போதெல்லாம். இவர்கள் தைரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணமகன் பேசக் கூடப் போனான். மணமேடைக்கு முன்னால், இவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்ப்பதற்காகவே, சினிமாவை 'தியாகம்' செய்துவிட்டு அங்கே, முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த 'ரெண்டுங்கெட்டான்' வயதுப் பயல்கள் சிரித்துக் கொண்டார்கள்.

கெட்டிமேளம் முழங்கியது. வெற்றிலை, தேங்காய் வகையறாக்களுக்கு மேலே இருந்த தாலியை சுமந்த ஒரு தாம்பளத் தட்டை எடுத்துக் கொண்ட பெருமாள் கூட்டத்தினருக்கு இடையே போய், அவர்களின் ஆசீர்வாதத்தை பூச்சொறிதல் மூலம் பெற்றுக் கொண்டு மணமேடைக்கு வந்தார். உடனே மாப்பிள்ளையின் சகோதரி ஒருத்தி அந்தத் தாலியை வாங்கி மணமகனின் கையில் திணித்து. அந்தக் கையை மணமகளின் கழுத்தை நோக்கி ஒப்புக்கு உரசிவிட்டு பின்னர் அவளே தாலிக்கு முடிச்சு போட்டாள்.

அது ஒரு 'சீர்திருத்த'க் கல்யாணம். அய்யர். அமாவாசை கிடையாது. அக்கினி குண்ட வகையறாக்களும் இல்லை. ஆனாலும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து. பக்குவமான சமயத்தில் நடத்தப்பட்ட திருமணம் அப்படியும் ஆகாமல், இப்படியும் ஆக முடியாமல்போன ஒரு 'கலப்படக்' கல்யாணம். இந்தக் கல்யாணத்திற்குப் பெயர் 'வாழ்க்கை ஒப்பந்தம்', ஆனாலும் தாலி கட்ட மறக்காத ரெண்டுங்கெட்டான் கல்யாணம், நெல்லை மாவட்டத்தில், அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம்பேர் குடியிருக்கும் இந்த சென்னைப் பகுதியில். இப்படிப்பட்ட கல்யாணங்கள்தான் நடக்கின்றன.

பெருமாளின் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவுமுறைச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பணக்காரர்கள் ஆட்டிப் படைக்கும் இந்தச் சங்கத்தில், ஏழைகள் வீட்டுத் திருமணங்களில், சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியாக வேண்டும். இது, ஒரு கட்டாய 'இன்வைட்டேஷன்'. இல்லையானால், அந்த ஏழைகள், தள்ளி வைக்கப்பட்டு விடுவார்கள்.

நிர்வாகிகள், ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். கோளாறே அங்கேதான் இருக்கிறது. முதலாவதாக ஆளுக்கொரு வார்த்தை பேசாமல் 'ஊமைக்கு உளறுவாயன் சண்டப் பிரசண்டன்' என்பதுபோல், ஒவ்வொரு பணக்கார நிர்வாகியும், தன் பவுன்கார மோதிரங்களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும், ஏளை பாளைகள் தொடாமலே பார்க்கவேண்டும் என்பதுபோல், அரைமணிநேரமாவது பேசுவார். இந்த அரைமணிக்குள். "அதாவது. அதாவது" என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும். இரண்டாவதாக, பணக்காரர்கள் மட்டும்தான் நிர்வாகிகளாக இருப்பதா என்று பேச்சு வந்தபோது, அந்த தந்திரக்கார பணக்காரப் புள்ளிகள், 'போர்ட் ஆப் ரெவின்யூ' என்பது மாதிரி, வருவாய்க் குழு, மலர்க் குழு, விழாக் குழு, ஒழுங்குக் கட்டுப்பாட்டுக் குழு என்று குழு குழுவாய்ப் போட்டு, சில வாயாடி ஏழைகளை அவற்றில் நிரப்பிவிட்டார்கள்.

இப்படி அந்த வ.கு.உ. (வருவாய்க் குழு உறுப்பினர் - இப்படித்தான் அழைப்பிதழில் போட்டிருந்தது. ம.கு.உ. மலர்க் குழு உறுப்பினர் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், உதவிச் செயலாளர் நிர்வாகச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர். உதவித் தலைவர், நிர்வாகத் தலைவர். பொருளாளர். நிர்வாகப் பொருளாளர், இணைப் பொருளாளர். நிர்வாகப் பொருளாளர் என்று இருபது பேர் பேசி, நேரம் இருந்தால் இன்னும் பத்துப்பேரும் பேசவேண்டும் இவர்கள் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருப்பது என்றால் மணமக்களுக்கு முதல் இரவு வருவதற்கே மூன்று மாதம் ஆகும்.

மணமக்களை வாழ்த்தி, தலைவரும், இதர நிர்வாகிகளும் பேசிமுடித்த பின்னர் ஒரு வ.கு.உ. பேச எழுந்தார். மணமக்களுக்கு தாங்க முடியாத எரிச்சல். பேசி முடித்தவர்களுக்கும். பேசப் போகிறவர்களுக்கும் அதே எரிச்சல். பேசுகிறவர் மட்டும். எவரையும் கண்டுகொள்ளவில்லை. கூட்டத்தினருக்கோ பசித் தொல்லை. சாப்பாடு பக்கத்திலேயே இருந்தபோதும், பசி, வயிற்றுக்கு வெளியேயே வந்தபோதும். ஒரு பேச்சை - அதுவும் உருப்படாத பேச்சைக் கேட்பது என்றால்...

செவிக்கு உணவு திகட்டியதால், வயிற்று உணவை தியாகம் செய்துவிட்டு, ஒருசிலர் வெளியே வந்தபோது. சொக்கலிங்கம் மனைவி-மகள் சகிதமாகக் காரில் இருந்து இறங்கினார்.

உள்ளே இருந்து ஓடிவந்த அவருடைய தங்கை செல்லம்மா. "வாங்கண்ணா... கொஞ்சம் முன்னாலேயே வரப்படாதா..." என்று கெஞ்சுவதுபோலக் கேட்டாள். அண்ணனின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

பார்வதியால் பொறுக்க முடியவில்லை. "இவரு என்ன மேடையிலயா உட்காரப் போறாரு சீக்கிரமாய் வாரதுக்கு" என்றபோது, மல்லிகா சிரித்துக்கொண்டே, "மேடையில் பேசுறவங்கதான் கடைசில வரணும். அப்பா... நீங்க லேட்டா வந்ததனால, தலைவரா ஆயிட்டிங்க அதனாலே மேடைல போய் உட்காரனும், இடம் இருந்தால்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

"ஆமாண்ணா... அவரு அப்போதே உங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தார்" என்றாள், செல்லம்மா.

செல்லம்மா அவர்களை வரவேற்பதுபோல், திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே முன்னால் நடக்க, மூவரும் உள்ளே போனார்கள். கூட்டத்தில் லேசான பரபரப்பு. சொக்கலிங்கத்தின் உதவி தேவைப்படலாம் என்று கருதிய இரண்டுபேரும், அவர் ஒரு காலத்தில் செய்த உதவியை இன்னும் நன்றியுடன் பாராட்டும் ஒருவரும், நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.

சொக்கலிங்கம் குடும்பத்தினர் உட்கார்ந்தபோது, செல்லம்மா. அண்ணனைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டே கணவனிடம் போய். கெஞ்சினாள்.

"அண்ணன் வந்துட்டாரில்ல. போய், 'வாங்கத்தான்'னு ஒரு வார்த்தை கேளுங்க... போங்க."

"போடி! உன் அண்ணன்... தாலி கட்டுற நேரத்தில் வந்துட்டாரு பாரு... காலுல விழுந்து கும்பிடணும்! அவருகிட்ட பணம் இருந்தால் அவரு வரைக்கும். நான். ஒரு குதிரை காலுல கட்டுன பணத்துக்குட் பெறுமா...?"

"அவரு பணக்காரருன்னு உங்களை கூப்பிடச் சொல்லல. உங்கள் பெண்டாட்டியோட கூடப்பிறந்த அண்ணன் என்னை வருஷத்துல முன்னூற்று அறுபத்தஞ்சு நாளைக்கும் அடிச்சி தொலைச்சிங்க. இன்னைக்காவது, நான் சொல்றத கேட்கப்படாதா? உங்களைத்தான்... போய் கூப்பிட்டு, மேடையில் உட்கார வையுங்க. நீங்கள் பெத்த பெண் மல்லிகாவை, எவ்வளவு பேரும் புகழுமா வைத்திருக்கார், பார்த்தீங்களா. போங்க..."

செல்லம்மா மன்றாடினாள்.

பெருமாள், வேண்டா வெறுப்பாக, சொக்கலிங்கத்திடம் பேசினார்.

"மேடைக்கு வாங்கத்தான்..." என்றார், இவர் "பரவாயில்லை... இங்கேயே இருக்கேன்" என்றார், அவர். பிறகு பெருமாள் மச்சானை வற்புறுத்தவில்லை. சொக்கலிங்கமும் எழவில்லை.

"நம்ம - மல்லி காலேஜ்ல பேசுறவள்தானே. இங்கே பேசச் சொல்லலாமா?" என்று சொக்கலிங்கம் சொன்னபோது, பார்வதி, அவரை சூடாகப் பார்த்தாள். சொக்கலிங்கம், அடங்கிப் போனபோது, அடக்க ஒடுக்கம் இல்லாத பெருமாள், 'சரிதான் போய்யா...' என்பதுபோல் போய்விட்டார்.

மணமகள் சந்திரா, தன் தங்கை மல்லிகாவையே பார்த்தாள். அவள் வருவது வரைக்கும், கணவன் தன்னை ஓரக்கண்ணால் பார்க்கிறானா என்று கவனித்துக்கொண்டு இருந்தவள். இப்போது தங்கை தன்னை கவனிக்கிறாளா என்று பாசத்தோடு நோக்கினாள். கணவன், தன் முதுகைக் கிள்ளுவது தெரியாமலே- உணராமலே பார்த்தாள்.

மல்லிகாவும், அக்காவையே பார்த்தாள். உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்த பாசத் துடிப்பு, அவள் நெஞ்சத் துடிப்பை அதிகமாக்கியது. பிறகு, மணமக்களின் இடத்தில், தானும், சரவணனும் அமர்ந்து இருப்பதுபோல் ஒரு பிரமை, அமரவேண்டும் என்ற ஓர் ஆசை "இங்கே இருக்கிற குண்டு குழி வீட்டில் அல்ல; ஆபர்ட்ஸ்பரியில் அல்லது. ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் வேண்டாம்... சரவணனோடு எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காரலாம்; உட்காரணும்"

கூட்டத்தின் பெரும்பகுதி, மல்லிகாவையும் பார்வதியையுமே மாறி மாறிப் பார்த்தனர். மல்லிகாவை, கொஞ்சம் அழுத்தமாகப் பார்த்தனர். "எங்கே இருக்க வேண்டியவள். எங்கே இருக்கா. பாத்திங்களா? ஆனாலும் நல்ல பொண்ணு... கர்வமே கிடையாது."

மணமேடையில் "ம.கு.உ' மலர்க்குழு உறுப்பினராம் ஒருவர். இடம், பொருள். வயிறு தெரியாமல் பேசிக்கொண்டே போனார். எரிச்சல் தாங்க முடியாமல், மல்லிகா சரவணனோடு. தன்னை இணைத்துக் கொண்ட இன்பக் கோட்டையைக்கூட சிறிது தகர்த்துக்கொண்டு. கைகளை நெறித்தாள். பேசுபவர் வார்த்தைகள் முட்டாமல், மோதாமல் இருப்பதற்காக காதுகளைக்கூட, கைகளால் அடைத்துக்கொண்டாள். பிறகு மேடை அநாகரிகத்தை ஆட்சேபிப்பதற்கு. இது நாகரிகமான எதிர்ப்பு அல்ல என்று நினைத்தவள்போல், கைகளை எடுத்துவிட்டு, முகத்தைச் சுழித்தாள்.

அப்போது, ஒரு மாதத்துக்கு முன்புதான் வயதுக்கு வந்த அவளுடைய இரண்டாவது தங்கை, இரண்டு மூன்று தம்பிகள், அவள் அருகே வந்தார்கள். "அக்கா" என்று அந்த வார்த்தையை வாய் வழியாக மட்டும் விடவில்லை. முகமலர நின்று, கண்கள் விரிய அந்தப் பாசத்தை உதடு துடிக்கக் காட்டினார்கள். செல்லம்மாவும், அங்கே வந்து மகளை, மலைப்போடும், மலையில் ஏறிவிட்ட அலுப்பு கலந்த அமைதியோடும் பார்த்தாள். பெற்ற வயிற்றைத் தடவிக்கொண்டே பார்த்தாள்.

மல்லிகா எல்லோரையும் பொதுவாகப் பார்த்துவிட்டு, லேசாகப் புன்முறுவல் செய்தாள். அம்மாவுக்கு மட்டும், சற்று அதிகமாகப் புன்முறுவல் செய்தாள். அவ்வளவுதான். ஆனால், அவளைப் பார்த்த அந்த ஏழைப் 'பாசிகள்' அவளது பாசத்தின் பதில் வெளிப்பாட்டை கண்டுபிடிக்கும் அளவுக்கு மனதைச் சிதறவிடவில்லை. அவளை முழுமையாகப் பார்த்ததால், மல்லிகாவின் பாசக்குறைவு, அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்தச் சமயத்தில், சொக்கலிங்கம் எழுந்தார். நேரே, மேடையைப் பார்த்துப் போனார். வாழ்த்துரை வழங்கியவர். இவர் தாக்க வருகிறாரா அல்லது மைக்கைப் பிடுங்க வருகிறாரா என்று பயப்படும் அளவுக்கு பாய்ந்து போனார். நேராகப் போய், மணமகளின் கையை எடுத்து, ஆள்காட்டி விரலைத் துக்கி, ஒரு பவுன் மோதிரத்தைப் போட்டுவிட்டார். மணமகன் கையில், ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்துவிட்டார். இந்தப் பரிசை சற்றும் எதிர்பாராத மணமக்கள், மேடையிலேயே எழுந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மணமக்கள் எழுந்ததும், இதுதான் சாக்கு என்று. கூட்டத்தினரும் சொல்லிவைத்ததுபோல் எழுந்தார்கள். "ஒரு வரைமுறை வேண்டாம்? எவ்வளவு நேரமுய்யா வெறும் பேச்சைக் கேட்கிறது? ஒருவனாவது முன்னால் பேசுனவன் சொல்லாத விஷயத்தைச் சொல்றானா? சீச்சீ!"

கூட்டம் எழுந்து பந்தியில் உட்காரப் போனபோதுகூட, 'ம.கு.உ பேசிக்கொண்டு இருந்தார். இறுதியில், மைக் வலுக்கட்டாயமாக ஆப் செய்யப்பட்டது. அவரது பேச்சு, பாதியில் கோவிந்தா! இன்னும் பேச இருந்த பத்துப் பேர்வழியினர் அடியோடு கோவிந்தா.

பேச வேண்டியவர்கள் தவிர. மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டபோது. சொக்கலிங்கம் மனைவியிடம் வந்து "சரி... நான் டாக்சியில் போறேன். செட்டியார் காத்திருப்பார். நீங்கள் சாவகாசமா சாப்பிட்டுவிட்டு, கார்ல வாங்க" என்று சொல்லிக்கொண்டே, சட்டைப் பித்தானைப் பூட்டினார். புறப்படுகிறாராம்.

மல்லிகாவும் எழுந்தாள்.

"நானும் வரேம்பா. எனக்கு போரடிக்குது. நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கு. ப்ளீஸ்... நானும்..."

சொக்கலிங்கம், சிறிது யோசித்துவிட்டு, அப்புறம் யோசிக்காமலே பேசினார்.

"என்னம்மா நீ, சின்னப்பிள்ளை மாதிரி பேசுற? நாலுபேரு என்ன நினைப்பாங்க? அம்மா, அப்பாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறமா வா. நீ செய்யுறது தப்பு. அவங்கதான் உன்னைப் பெத்தவங்க. உன்னைப் பார்த்து, அவங்க மனசு குளிரணும்; கொதிக்கப்படாது. பார்வதி, நான் வரட்டுமா? இவள் அவசரப்படுத்துறாள்னு நீயும் அவசரமாய் வந்துடாதே. நகை பத்திரம். எவனாவது கத்தரி போட்டுடப் போறான்..."

சொக்கலிங்கம் போய்விட்டார்.

மல்லிகாவிற்கு லேசாகக் கண்ணீர்கூட வந்தது. எவ்வளவு நேரம் இந்த வீட்டில் இருப்பது? ஒரே புழுக்கம்... ஒரே வாடை... ஒரே எரிச்சல்... சீச்சீ...

மல்லிகாவும், பார்வதியுடன் பந்தியில் உட்கார்ந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை . இந்நேரம், தியாகராய நகர் வீட்டில், இடியாப்பம்-குருமா சாப்பிட்டு இருப்பாள்! மிக்சியில் ஆரஞ்சுப் பழங்களையோ அன்னாசிப் பழங்களையோ பிழிந்து ஒரு கிளாஸ் சாறு குடித்து இருப்பாள். சாப்பாடா இது? உருளைக்கிழங்கு அளவிற்கு அரிசி! அதுவும் பாதி வேகாத அரிசி. காம்பு போகாத கத்தரிக்காய்-பொறியலாம்... ரசமாம்... சரியான குழாய்த் தண்ணீர்.

மல்லிகாவால் சாப்பிட முடியவில்லை. பார்வதி, சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்துகொண்டும். மற்ற பந்தி ரசிகர்கள் முந்தியடித்து. ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தபோது, மல்லிகா அத்தனை பேரின் கண்களும் தன்னை மொய்க்கும்படியாக எழுந்தாள். அவள் அம்மா செல்லம்மாவுக்கு. என்னவோ போலிருந்தது. இருந்தாலும் எங்கே போய் கைகழுவது என்று தெரியாமல் மல்லிகா திகைத்து நின்றபோது. செல்லம்மா, அவளுக்கு அருகே இருந்த அண்டாப் பாத்திரத்தில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு தன் முந்தானையால், மகளின் வாயைத் துடைக்கப் போனாள். மல்லிகா, முகத்தைச் சுழித்துக்கொண்டே ஒதுங்கிக் கொண்டாள்.


4

பந்தி முடிந்து, பெரும்பாலானவர்கள், 'ஐந்தோ பத்தோ' மொய் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். மணமக்களும், பார்வதியும், பெருமாளும், இந்தப் பிள்ளைகளும், அந்த 'முக்கு வீட்டுக்குள்' உட்கார்ந்து இருந்தார்கள்.

சின்ன அறை. சிக்கலான அறை. தட்டுமுட்டுச் சாமான்கள் மறைத்த இடம் போக, மற்ற இடத்தில் மூன்று ஆழ்வார்கள் பாடியதுபோல, அந்த முப்பெரும் ஆழ்வார்களும் உட்கார்ந்து இருந்த திண்ணையைப்போல, "மூவர் நிற்க -இருவர் உட்கார ஒருவர் படுக்கும்படியான" இடம் போதாக்குறைக்கு அன்றைக்கு மழை பலமாகப் பெய்வதுபோல் தோன்றியது. வெளியே படுக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் படுக்க வேண்டும். அப்படியானால், முதலிரவை எங்கே வைப்பது? புது ஜோடியை, எந்த இடத்தில் தூங்கச் சொல்வது? மாப்பிள்ளை வீட்டிலும் வைக்கமுடியாது. அங்கேயும் இதே மழை பெய்யும். இதே மாதிரியான சின்ன அறைதான் இதே மாதிரியான குழந்தை குட்டிகள். போதாக்குறைக்கு கிழடு கட்டைகள்.

பெருமாள், மோவாயைப் பிடித்து யோசித்துக்கொண்டு இருந்தார். மூத்த மகளின் திருமணத்தை நடத்திவிட்ட திருப்தி, அந்த முகத்தில் இல்லை. ஒன்றும் இல்லாத அவருக்கு, அவரைப் போலவே ஏழையாய் உள்ள ரத்த உறவு இல்லாத நண்பர்கள். ரேஸ் சகாக்கள், பட்டைச் சாராயப் பங்காளிகள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேலேயே மொய் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் மனதில் தெம்போ, திராணியோ இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும். தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்.

எப்படியெல்லாம் வாழ்ந்தேன்! ஒரு வீட்டுக்கு மூன்று வீடு வைத்திருந்தேன். மோட்டார் பைக் ஒட்டினேன். சொந்த மோட்டார்பைக்... எண்ணூரில் பத்து ஏக்கர் நிலம்... எல்லாம். கிண்டிக் குதிரை மாதிரி ஓடிட்டு. என்னோட முதலிரவு வெல்வெட் மெத்தை போட்ட கட்டிலில், பங்களா மாதிரி இருந்த வீட்டில் நடந்தது. ஆனால் என் பொண்ணுக்கு, கட்டிலுக்குப் பதிலாக வெறும் பாய்தான். பாயாவது பரவாயில்லை - அந்தப் பாய் விரிக்க இடம்கூட இல்லீயே என்ன செய்யலாம்? - கையில் ரூபாய் இருக்கு ஓர் ஏர்கண்டிஷன் லாட்ஜ் பார்க்கலாமா? சீச்சீ இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு அங்கே நடக்கிற விவரங்கள் தெரியக்கூடாது...'

பெருமாள், தலையைப் பிடிக்காத குறையாக, சிந்தித்துக்கொண்டு இருந்தார். மணமகனை ரசித்துக்கொண்டு இருந்த சந்திரா. திடீரென்று ஏதோ நினைவில் பட்டவளாய் வெளியே வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து. மாடிப் போர்ஷனில், டி.வி.காட்சியாக வாழும் வீட்டுக்கார அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்த மல்லிகாவின் கையைப் பிடித்து, வலுக்கட்டாயமாக எழுப்பி, வீட்டுக்குள் கொண்டுவந்தாள். வீட்டுக்கார அம்மா என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த படித்த 'ரீசண்டான' பொண்ணையா, முகத்துல அடிக்கறது மாதிரி கூட்டிக்கினு போற. இரு இரு. உன்ன கவனிச்சுக்கிறேன்' என்று மனதுக்குள் கருவிக்கொண்டாள்.

மல்லிகாவிற்கு அந்த வீட்டிற்குள் இருக்கப் பிடிக்கவில்லை. மூட்டைப் பூச்சிகள், கடித்த இடங்களை விட்டுவிட்டு, பிடித்த இடங்களைக் கவ்வின. சந்திரா, மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே தன் கணவரையும் பார்த்தாள். "நானும் பெரிய இடந்தான். பெரிய இடத்துக்காரியோட அக்காவாக்கும் நான்" என்று, அவனிடம் சொல்வதுபோல், கண்கள் விரிந்தன. உதடுகள் லேசாகப் பிரிந்தன.

மூத்த மகளின் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு இருந்த பெருமாளும், மல்லிகாவை பெருமிதத்துடன் பார்த்தார். "இவளாவது நல்லா இருக்கட்டும். எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தியாவது நல்லா வாழனும் கடவுளே! அவளை நல்லா வாழ வை..."

அங்கே, எதுவுமே நன்றாக இல்லாததுபோல் தோன்றியதாலோ என்னமோ. மல்லிகா, பார்வதியைப் பார்த்து "வீட்டுக்குப் போகலாம்மா..." என்றாள். பார்வதி, அதைப் பொருட்படுத்தாததுபோல. மாப்பிள்ளைப் பையனிடம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள். விசாரித்துப் பார்த்ததில் அவன், அவளுக்கு தொலைவாய்ப் போன நெருங்கிய உறவு என்பது தெரிய வந்தது. அதில் அவளுக்கு மகிழ்ச்சி. மல்லிகாவுக்கோ. அதற்கு எதிர்மாறான உணர்ச்சி.

மற்றவர்கள் கேள்விக்குப் பதிலையும். பதிலுக்குக் கேள்வியையும் போட்டு பேசிக்கொண்டிருந்போது நொடிக்கு ஒரு தடவை வீட்டுக்குப் போகலாம்மா, வீட்டுக்குப் போகலாம்" என்று சிடுசிடுப்புடன், செல்லக் கிறுக்குபோல் முணுமுணுத்துக்கொண்டு இருந்த மல்லிகா திடீரென்று எழுந்து, "சரி, நீங்கள் இருந்துட்டு காலையிலே வாங்க. நான் பஸ்ல போறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்படப் போனாள். உடனே, செல்லம்மா, கண்ணில் பெருக்கு எடுத்து விழப்போன நீரை நிறுத்தி வைத்துக்கொண்டே, "நீயும் இந்த வீட்லதாம்மா பிறந்தே. இங்க இருக்கவங்கெல்லாம் உன் கூடப் பிறந்தவங்கம்மா. கொஞ்சநேரம் இருக்கப்படாதா?" என்றாள்.

அப்படியும் மல்லிகா புறப்படப் போனபோது, அவள் கையை கீழே உட்கார்ந்து கொண்டே பார்வதி இழுத்தபோது, பெருமாள், தன்னை மீறிவிட்டார். குழந்தைங்க எல்லாம் எவ்வளவு பாசமாய் பார்க்குதுங்க. மருமகப்பிள்ளைகூட எவ்வளவு மரியாதையாய்ப் பார்க்கிறார். இவளைப் பார்த்ததும், எதுக்கும் மசியாத என் மனங்கூட எப்படி கலங்குது? இவளுக்கு ஏன் புரியல..? புரியாட்டால் போகட்டும்.'

இயல்பிலேயே துடிப்புக்காரரான, நாற்பத்தெட்டு வயது பெருமாள் கத்தினார்:

"இவள் எனக்கு பிறந்திருக்க மாட்டாள். சனியன் போனால் போகட்டும். அவளோட கையை விடு... மூதேவி போனால் போகட்டும்..."

எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். மேற்கொண்டு ஏதோ பேசப்போன பெருமாள், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, வெளியே போய் நின்றார். பார்வதி, பிரமித்தவளாய், ஆகாயத்தையே பார்த்தாள். செல்லம்மா கைகளை நெறித்தாள். பிள்ளைகள் கலங்கிப்போய் நின்றன.

எவரிடம் இருந்தும், இந்த மாதிரியான வார்த்தைகளையோ, அதட்டல்களையோ கேட்டு அறியாத மல்லிகாவிற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. 'ஏன்... இந்த 'ஆளு' இப்படிப் பேசுறாரு... ஏன் இப்படி மூதேவின்னு சொல்றாரு..?'

மல்லிகா, தன் கைகளைப் பிடித்த உண்மை அம்மாவை உதறிக்கொண்டே, மடமடவென்று வெளியே வந்து, காரில் உட்கார்ந்துகொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுதாள். உள்ளே இருந்த பார்வதி, அதுவரைக்கும் சிரித்துக்கொண்டே பேசியவள். "அவள் போனபிறகு, எனக்கு மட்டும் என்ன வேலை இருக்கு? நாகரிகம் தெரியாத வீட்டுக்கு வந்தால் அவமானந்தான் கிடைக்கும். அவள் வரமாட்டேன்னுதான் சொன்னாள். நான்தான் நாலுபேரு தப்பா நினைப்பாங்களேன்னு கூட்டி வந்தேன். கடைசில, நாலு பேரு முன்னாலேயே அவளை அவமானப் படுத்திட்டிங்க..." என்று சொல்லிக்கொண்டே காருக்குள் வந்து, மல்லிகாவை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள். "காரை எடு தம்பி. இந்த இடத்துக்கு வாரது இதுதான் கடைசித் தடவை..." என்று அவள் கத்த. கார். கத்திக்கொண்டே ஓடியது.

நடைவாசலில் நின்று, நடப்பதை நம்பாதவர்கள் போல் கவனித்துக்கொண்டு இருந்த செல்லம்மாவும், அவள் பெண்டு பிள்ளைகளும், கட்சி பிரிந்து விவகாரத்தை வாதாடப் போனார்கள். இதற்குள் குழாய்ப் பக்கமாக நின்ற பெருமாள் அங்கே வந்து, "எல்லாம் உன்னால வந்த கோளாறுடி, தத்து கொடுக்காதடி... கொடுக்காதடின்னு எவ்வளவோ தடவை சொன்னேன். நீதான் கேட்கல. இப்போ நான் பெத்த மகளே. ஏன் பெத்தோம் என்கிறது மாதிரி நடந்துக்கிறாள். இனிமேல், மகளைப் பார்க்கப் போறோம்னு போ... அப்புறம் பாரு வேடிக்கையை. ஒரு கையையாவது, காலையாவது ஒடிக்காட்டால் 'என்னடா நாயே'ன்னு கேளு..." என்றார்.

தொலைவில் போன காரையே செல்லம்மா வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கணவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். மீறிப்போனால், சொன்னபடி செய்யக்கூடிய அரிச்சந்திரன், அவர்.

செல்லம்மா மனதுக்குள்ளே புலம்பினாள்.

'நான் பெற்ற என் செல்ல மகளோட பழகத்தான் முடியல. இனிமேல் பார்க்கவும் முடியாதோ? கண்ணை, கண்ணே பார்க்க முடியாதது மாதிரி, இனிமேல், என் கண்ணாட்டியை என் கண்ணால பார்க்கக்கூட முடியாதோ... முடியாதோ...'

அன்னம்மா. எதேச்சையாக பெற்ற வயிரைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு தலை சுற்றாமலேயே சுற்றியது- புறமாக அல்ல... உள்ளுக்குள்... தலைக்குள் இருந்த மூளையும். எலும்பும். நரம்புகளும் முரண்பட்டுப் போனது போன்ற உளைச்சல்.

 5

சொக்கலிங்கமும், பெருமாளும் ஒரு காலத்தில் பிராணச் சிநேகிதர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஒன்றாகவே சுவரேறிக் குதித்தவர்கள் நெல்லை மாவட்டத்திலிருந்து, இருபது வயதிலேயே 'பஞ்சம்' பிழைப்பதற்காக, ஒரே டிக்கட்டை எடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் எப்படியோ மாற்றி மாற்றிக் காட்டி, சென்னை வந்தார்கள்.

இந்தியா விடுதலையான சமயம் அது. அந்தச் சுதந்திரம் கொடுத்த சந்தர்ப்பங்களால், பல்வேறு வியாபாரங்களைச் செய்த இருவரும், பலமாகச் சம்பாதித்தார்கள். சொக்கலிங்கம், பெருமாளின் சார்பில், பல இடங்களுக்குப் போய், அலைந்து, அவருக்கு இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தார். பெருமாள், சொக்கலிங்கத்திற்காகச் சுற்றியலைந்து, மூன்று வீடுகளை வாங்கிக் கொடுத்தார். இப்போது சொக்கலிங்கத்திடம் இருக்கும் அரவை மிஷினுக்கு முன்பணம் கொடுத்ததுகூட இந்தப் பெருமாள்தான். நட்பை, உறவுக் கயிற்றால் நன்றாகக் கட்டவேண்டும் என்று கருதிய சொக்கலிங்கம், கிராமத்தில் இருந்த ஒரே தங்கை செல்லம்மாவின் கழுத்தில், பெருமாள், மஞ்சள் கயிற்றை கட்டும்படிச் செய்தார். சொக்கலிங்கமும், சென்னையில், ஓரளவு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதியைக் கட்டிக்கொண்டார். சொல்லப் போனால், இந்தப் பார்வதியை கட்டிவைத்த பெருமையோ அல்லது சிறுமையோ, இந்தப் பெருமாளுக்குத்தான் சேரும்.

கால வேகத்தில் பெருமாள், குதிரை வேகத்தைக் கணக்கிடப் போனார். தொழிலில் மட்டும் குறியாக இல்லாமல், எல்லோரிடம் சகஜமாகப் பழகும் அவருக்கு. பல்வேறுபட்ட சகவாசங்கள் கிடைத்தன. குதிரைக்குப் பந்தயம் கட்டும் சுந்தரம், இவருக்கு பிராணச் சிநேகிதன். கள்ளுக்கடை கந்தப்பன், இவரிடம் நிஜமான அப்பன் மாதிரியே பழகினான். பருத்திச் சூதாட்டக்காரன் ஒருவன். இவர்மேல் வேட்டி மாதிரி பின்னிக்கொண்டான். போதக்குறைக்கு சோடா பாட்டல்களை எடுத்து வீசும் சோமாறிகளின் பேரன்பும் இவரைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பிடியில், இரண்டு வீடுகளும், போடுபோடென்று ஓடிக்கொண்டிருந்த எண்ணெய் கடையும் எண்ணூர் நிலமும். இவர் பிடியை விட்டு, மீண்டும் பிடிகொடுக்காத அளவுக்குப் போய்விட்டன. பெருமாள். தெருவுக்கு வந்தார்.

சொக்கலிங்கமும். எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவ்வப் போது தங்கையிடம் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும், பணம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை பெருமாள். மனைவியை உதைத்துப் போட்டுவிட்டு, எடுத்துக்கொண்டு போகிற செய்தி. சொக்கலிங்கத்திற்கும் கேளாமலே போய்ச் சேர்ந்தது தங்கை அடிபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தோடு, இன்னும் பல காரணங்களும் சேர, அவர் பணத்தை நிறுத்தினாரே தவிர, பாசத்தை நிறுத்தவில்லை.

அந்தப் பாசத்திற்கும் ஒருசமயம் பங்கம் வந்தது. தங்கையின் வீட்டுக்குப் போயிருந்த அவரை அப்போது குடித்துவிட்டு வந்த பெருமாள், "ஏண்டா... சோமாறி... என் பெண்டாட்டிக்கிட்ட வத்தி வைக்கவாடா வந்தே..." என்று சொல்லி, கையைக் காலை ஆட்டினார். அது ஒரு பாவலாதான் என்பதை சொக்கலிங்கம் புரிந்து கொண்டாலும் அன்று முதல் தங்கையின் குடும்பத்திடம் இருந்து, கிட்டத்தட்ட அடியோடு ஒதுங்கிக் கொண்டார். போதாக்குறைக்கு, பார்வதியின் அண்ணன்கள், கழுதைகூட சேர்ந்தால், கவரிமானும் எதையோ தின்னும் என்கிறது மாதிரி ஆயிடப்போகுது. பெருமாள் உங்களை மாதிரி ஆக முடியாட்டாலும் கவலை இல்லை. நீங்க அவனை மாதிரி ஆகிடக்கூடாது பாருங்க. அதனால..." என்று மேற்கொண்டு பேசாமல் விட்டபோது, சொக்கலிங்கம் "அதனால" என்பதற்கு உண்டான அர்த்தங்களைப் புரிந்துகொண்டார். பார்வதியும் ஒத்துப் பாடினாள். சொக்கலிங்கம் தங்கை வீட்டை எட்டிப் பார்ப்பதே இல்லை. உயிருக்குயிராய் நேசித்த தன் தங்கையை, தன் உயிருக்குள்ளேயே சங்கமித்துக் கொண்டவர்போல், அவளிடமும், அவர் பாராமுகமாய் இருந்தார். செல்லம்மாதான் எப்போதாவது, அண்ணனின் நினைவு வரும்போதெல்லாம். அவர் வீட்டுக்குப் போவாள். அதுவும் அவளுக்குக் குழந்தை குட்டிகள் அதிகமாக அதிகமாக, அவள் வரவும் குறைந்துகொண்டே வந்தது.

பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில், சொக்கலிங்கம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது, பெருமாள், பிள்ளைகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். 'துள்ளி' விளையாட பிள்ளை பிறக்காததில், சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். சிலர். அவருக்கு மறுமண யோசனையைத் தெரிவித்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட, அப்போதைய இளம்பெண்ணான பார்வதி. தூக்கில் தொங்கப்போவதாகச் சப்தத்தையும். சபதத்தையும் சேர்த்துப் போட்டதோடு நில்லாமல் ஒரு கயிற்றை - அவள் தொங்கினால் அறுந்து விழக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கயிற்றை, கையில் வைத்துக்கொண்டாள்.

அவள் அண்ணன்மார்கள், சொக்கலிங்கத்தை "அடிப்பேன் பிடிப்பேன்" என்றார்கள். இவ்வளவுக்கும், அவருக்கு, மறுமண ஆசை ஏற்படவே இல்லை. யாரோ சொன்னார்கள். இவரும் யாருக்கோ என்பது மாதிரி கேட்டார். அவ்வளவுதான்.

டாக்டர்கள் தனது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டாலும், பார்வதி அசரவில்லை. ஓர் ஆயுர்வேத டாக்டரின் யோசனைப்படி கணவனுக்கு, பாயாசத்தில், பச்சை முட்டையை உடைத்தும், பாதாம் பருப்பைப் பாலில் கலந்தும் கொடுத்தாள். விளைவு, சொக்கலிங்கம் வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கினார். இந்த விவகாரங்களை, ஜன்னல்களை எட்டிப்பார்த்துப் புரிந்துகொண்ட பார்வதி, கணவனுக்கு, பாதாம் பருப்பு வசதிகளை நிறுத்தியதோடு, இரவில் தலைவலி என்று சாக்குச்சொல்லி, புருஷனை பட்டினிப் போட்டாள். சொக்கலிங்கம் சரியானார். ஆனால் எப்படியாவது ஒரு பிள்ளை வேண்டும் - எந்தப் பிள்ளையையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார்.

விவகாரத்தை, தங்கை சொல்வதற்கு முன்பாகவே, 'அரவை மில்' ஒற்றர்கள்மூலம் புரிந்துகொண்ட, பார்வதியின் சகோதரர்கள், தத்தம் பிள்ளைகளைக் காட்டி, "இந்தா பிடி" என்றார்கள். யார் பிள்ளை தத்துக்குப் போவது என்ற விவகாரத்தில் அந்த சகோதரர்களே, ஒருவருக்கொருவர் மனங்கோணி, அடிக்காத குறையாகப் பேசிக்கொண்டார்கள். இறுதியில், தங்களுக்குள்ளேயே சமாதானப்பட்டு, தங்களின் அக்காள் பிள்ளையான ஆறுவயது ராமனைக் காட்டி "இந்தாங்க..." என்றார்கள்.

சொக்கலிங்கம் யோசித்தார். மைத்துனன்மார்கள், தனது திரண்ட சொத்துக்களைத் திரட்ட நினைத்தே, இப்படி உருப்படாத பிள்ளைகளைக் காட்டுவதுபோல் தோன்றியது. அதோடு, மறுமணம் என்ற யோசனையை யாரோ சொல்ல. இவரையே, "அடிப்போம்-பிடிப்போம்" என்ற பயல்கள். இவன்களிடம் தத்துகித்து எடுத்தால், அப்புறம் கழட்டிக்க முடியாது. ஜென்மாந்திர தண்டனைக்குச் சமமானது. அவருக்குத் தங்கையை கண்ணால் பார்க்காமல் இருக்க முடிந்ததே தவிர, உள்ளத்தால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளது இரண்டாவது மகளான இந்த மல்லிகா மீது அவருக்கு அளவற்ற பாசம் அவள் பிறந்த பிறகுதான், ஜோதிடர் ஒருவர் சொன்னதுபோல், தாய் மாமனான தனக்கு, யோகத்திற்குமேல் யோகம் அடிப்பதாக நம்பினார்.

எனவே, தங்கையின் வீட்டுக்குப் போய் மூன்று வயதுக்கேற்ற லாகவத்துடன், மான்குட்டி மாதிரி கவர்ச்சியாய், மீன்குட்டி மாதிரி சுறுசுறுப்பாய் விளங்கிய மல்லிகாவை தத்தாகக் கேட்டார். தங்கைக்காரியோ, தன் மகளைத் தரமுடியாது என்பதை தயக்கத்தோடு வெளியிட்டபோது, "உன் பிள்ளை என் பிள்ளை இல்லியா? எப்படியோ... ஒருவரை ஒருவர் பாராமல் இருக்கும்படியாய் ஆயிட்டுது. உன் பிள்ளையைப் பார்த்தாவது உன்னைப் பார்க்கிற ஆறுதல், எனக்கு வேண்டாமா" என்று அவர் கேட்டபோது, செல்லம்மாவால், தாள முடியவில்லை. "இவள் பிறக்கதுக்கு முன்னாலேயே நாம ஒருதாய் வயித்துல பிறந்தவங்க அண்ணா" என்று சொல்லிக்கொண்டே மல்லிகாவை, அவரிடம் நீட்டினாள்.

சொக்கலிங்கம், நேராக வீட்டுக்கு வந்து, மனைவியிடம் குழந்தையை நீட்டினார். அப்புறந்தான், அவளுக்கு விஷயமே புரிந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாள். அசந்துபோன அண்ணன்களின் பேச்சைக்கேட்டு, சிலசமயம் குழந்தையை அடித்திருக்கிறாள். சொக்கலிங்கம் குழந்தையைக் கொஞ்சும்போது, பொறாமைகூட ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் குழந்தையின் மேலான சிரிப்பில், கள்ளங்கபடமற்ற கையாட்டும் லாவகத்தில், பார்வதி, தன் எரிச்சலை அடக்குவது தெரியாமலே அடக்கினாள். அந்தக் குழந்தை அவளை, ஒருசமயம் "அம்மா. அம்மா." என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது, அவள் இதயத்தைத் தொட்டுவிட்டது.

ஒருசமயம், கணவனிடம் ஏதோ மனத்தகராறில், சாப்பாட்டுத் தட்டை முன்னால் வைத்துக்கொண்டே, சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், அவள், கோபத்தாலும், அந்தக் கோபத்தை மீறிய பசியாலும் சுவரில் தலையைத் தேய்த்துக்கொண்டே இருந்தபோது, இந்தக் குழந்தை, தன் வெள்ளரிப் பிஞ்சு விரல்களால், சோற்றை எடுத்து. அவள் வாயில் ஊட்டியபோது, பார்வதியின் வயிறு நிறைந்ததோ இல்லியோ, இதயம் நிறைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, குழந்தை எங்கிருந்து வந்ததோ, அங்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஆசைக்கு, நிராசை கொடுத்துவிட்டு, இயல்பான தாய்மையினால் உந்தப்பட்டு, மல்லிகாவை, அவள், தாய்க்குத் தாயாக வளர்த்து வருகிறாள்.

சகோதரர்களின் சகவாசத்தால், அவ்வப்போது அவளுக்கு "நான் அனாதையாயிடுவேனோ.. மல்லிகா கைவிட்டுவாளோ" என்கிற எண்ணமும், பீதியும் எட்டிப் பார்த்தனவே அன்றி. இதுவரை, அவை எகிறவில்லை. அப்படியே. அண்ணன்மார்களின் உபதேசத்தால், மல்லிகா கல்யாணம் ஆனதும் மாறினாலும் மாறலாம் என்ற எண்ண உளைச்சலில் அவள் சிக்கித் தவித்து. ஓரளவு சினந்தவளாய் இருப்பதுண்டு.

கல்லூரிக்குப் போகும் மல்லிகா. எப்போதாவது "சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒண்னுந் தெரியாது" என்று சொல்லுவாள். பார்வதி உடனே ஒன்றும் தெரியாத தன்னை. மல்லிகா, சொந்த அப்பாவுடன் சேர்ந்துகொண்டு. ஏமாற்றப் போகிறாள் என்றும். இன்றைக்கே சொத்து பற்றி இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்றும், நாள் முழுதும் துடிப்பாள். என்றாலும் கல்லூரியில் இருந்து மல்லிகா திரும்பியதும், நினைத்ததை மறந்து "பக்கடா போடட்டுமாம்மா... ஆரஞ்சு வேணுமா... ஆப்பிள் வேணுமா..." என்று கேட்பாள்.


6

வாசல் அருகே நின்ற ஆட்டோ ரிக்ஷாவின் டிரைவர் உள்ளே எட்டிப் பார்த்தார். மல்லிகா இன்னும் வராதது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையில், வாடகைக்கு. அமர்த்தப்பட்டிருக்கும் ஆட்டோ அது. மல்லிகாவை, கல்லூரியில் கொண்டுபோய் விடவேண்டும். மாலையில் கூட்டிக்கொண்டு வரவேண்டும்

குளியலறைப் பக்கமாய்ப் போன பார்வதி, ஆட்டோவைப் பார்த்ததும், மல்லிகாவின் அறைக்கு வந்தாள். மல்லிகா, எதுவுமே புரியாதவள்போல், மேஜையில் முன் கைகளை ஊன்றி, முகத்தை அவற்றில் வைத்து, நெற்றியை, கோடுகள் விழும் வண்ணம் சுழித்தாள். எங்கேயும் போகப் போவதில்லை என்பதுபோல், படுக்கும்போது உடுத்திருந்த பருத்தி ஆடையோடு இருந்தாள். பார்வதி, அவளருகே வந்து. முகத்தை நிமிர்த்தினாள்.

"பைத்தியம். இன்னுமா அந்த மனுசன் பேசினது மனசில நிக்குது? இதுக்கு வருத்தப்படுறவள். எதுக்குத்தான் வருத்தப்படமாட்டே? சொந்த அப்பாதானே பேசினார்? பேசினால் பேசிட்டுப் போகட்டும். இனிமேல் வேணுமுன்னால், அங்கே போகவேண்டாம். சரி. ஆட்டோ வந்துட்டுது. புறப்படுடி.."

"சொந்த அப்பா. சொந்தமில்லாத அப்பான்னு பேசுனிங்கன்னால், எனக்கு கோபங்கோபமாய் வரும். அப்பா பேசிட்டார்னு நான் வருத்தப்படல.. அந்த ஆள். நாலு பேரு மத்தியில் சனியன்னு பேசிட்டார்னுதான் வருத்தமாய் இருக்கு. ஏம்மா. படிக்காதவங்களுக்கு நாகரீகமாய் பேச வராதோ..."

"நான் கூடத்தான் படிக்கல. நாகரிகமாய் பேசாமலா இருக்கேன்..."

"நான் படிக்காத ஆண்களைச் சொன்னேன்."

சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

"நான் கூடத்தான் படிக்கல. எப்போதாவது அநாகரிகமாகப் பேசியிருக்கேனா? இழவு எடுத்த பயல். பேசினால் பேசிட்டுப் போறான். ஏதாவது பட்டச் சாராயம் போட்டிருப்பான். பன்னாடப் பயல். அவனுக்காவவா இப்படி உட்கார்ந்திருக்கே? பெருமாள் மாதிரி ஆட்களையும் அவங்க பேசறதையும், நாம அவங்களை மனுஷனாய் எண்ணி மதிப்புக் கொடுத்தால், அப்புறம் நாம எண்ணுறதெல்லாம் மனுஷத்தனமாய் இருக்காது விடு கழுதையை.. சீக்கிரமா புறப்படு.. நானும் நுங்கம்பாக்கம்வரை ஆட்டோவுல வரணும்... உம் புறப்படும்மா. நான் மட்டும் அவன் பேசும்போது இருந்திருக்கணும்... சரி.. ஜல்தியாய் புறப்படும்மா.."

அந்த 'ஆளை' மனதில் இருந்து கட்டாயமாக விலக்கிக் கொண்டே, மல்லிகா புறப்பட ஆயத்தமானாள். புடவையை எடுப்பதற்காக அவள் பீரோவைத் திறந்தபோது, சொக்கலிங்கமும் வெளியே வந்தார்.

சொக்கலிங்கமும் மல்லிகாவும், ஆட்டோவில் ஏறியபோது பார்வதியின் அண்ணன், அந்த ஆட்டோவை வழிமறிப்பது மாதிரி வந்து நின்றுவிட்டு, பிறகு "காலேஜூக்கா... இல்ல செட்டியார் வீட்டுக்கா... எப்படியோ. நீங்க காலேஜூக்கும், மல்லிகா செட்டியார் வீட்டுக்கும் தெரியாமல் போயிடப்படாது. டிரைவர், யார் யார் எங்கு இறங்கணும் என்கிறதை ஞாபகப் படுத்துங்க..." என்று சொல்லிக்கொண்டே வாசல் படிக்கட்டில் கால் வைத்தார்.

வாசலில் நின்ற பார்வதி, "வாங்கண்ணா" என்றாள்.

சொக்கலிங்கம், திடீரென்று. ஆட்டோவில் இருந்து இறங்கி, "நீ போம்மா... நான் செட்டியார் வீட்டுக்குப் போகல... இவரு முகத்துல விழித்த பிறகு எங்கேயும் போகப்படாது. நீகூட ஜாக்கிரதையா போயிட்டுவா" என்று மல்லிகாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனங்கிக்கொண்டே, மச்சான்காரரைத் திரும்பிப் பாராமல் நடந்து. அரவை மில்லை நோக்கிப் போனார். காலங்காத்தால... என்னடா சாமி இது... யாரை வேணுமுன்னாலும் அனுப்பு... ஆனால் இவரை மட்டும் அனுப்பாத...

சொக்கலிங்கம் வெளியே போனபோது. பார்வதியும் அவள் அண்ணனும் வீட்டுக்குள் மெள்ள மெள்ள வந்தார்கள். ராமசாமி பெருமூச்சு விட்டுக்கொண்டே பேச்சைத் துவக்கினார்.

"உன்னை அடிக்கடி வந்து பார்க்கணும் போலத் தோணுது. அதேசமயம், மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டான்னு சொன்ன பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கு."

"என்னாண்ணா. புதுமொழியாய் பேசுறீங்க."

"பின்ன என்னம்மா. மச்சான் என்னை நாயை பேசுனது மாதிரி பேசுறாரு எத்தனை நாளைக்குத்தான் வாலைச் சுருட்டிக்கிட்டு வாரது?"

"அவரைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. மனசில ஒண்ணுங் கிடையாது."

"மனசில ஒண்ணுமில்லாம இருக்கவங்களுக்கு தலையில் ஏதாவது இருக்கும். உன் வீட்டுக்காரருக்கு அங்கேயும் ஒண்ணுங் கிடையாது. இல்லன்னால், நோட்டிஸ்ல வெறும் பெயரைக்கூடப் போடாத வீட்ல போய், ஒரு பவுன் மோதிரமும், நூறு ரூபாயும் கொடுப்பாரா? என் வீட்ல ஒரு கல்யாணம் காட்சி நடந்து, நான் அவரு பெயரைப் போடலன்னு வச்சுக்கோ. மனுசன் சும்மா இருப்பாரா... நீதான் சும்மா இருப்பியா?"

"எப்படியோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அவங்க படிவாசல்கூட மிதிக்கப் போறதுல்ல..."

"அங்கதான் நீ தப்புப் பண்ற."

"எங்க?"

"சின்னப் பிள்ளையில எப்படி இருந்தியோ... அப்படியேதான் இருக்கம்மா. பெருமாள் மல்லிகாவை திட்டி அனுப்புன பிறகு, அப்புறம் என்ன பேசுனான்னு தெரிந்தா, இப்படிப் பேசுவியா?"

"என்ன பேசுனாராம்?"

"நீ மல்லிகாவை மிரட்டி, அவங்ககூடப் பேசக்கூடாதுன்னு வைத்திருக்கியாம். எல்லாம் சொக்கலிங்கம் மச்சானோட முகத்துக்காகப் பார்க்கானாம். அவரு மண்டையைப் போட்டதும். மல்லிகா மூலம் உன் கண்ணுல விரல் விட்டு ஆட்டுவானாம்."

"குடிகாரன். அப்படித்தான் பேசுவான்... விட்டுத் தள்ளுங்க.."

"விட்டுத் தள்ளக்கூடிய சமாச்சாரமில்லம்மா. நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... பெருமாள் சொன்னபடி செய்யமாட்டார்னு எப்படிச் சொல்லமுடியும்?"

"மல்லிகா, அதுக்கு இடம் கொடுக்க மாட்டா. நல்ல பொண்ணு. என்மேல் உயிரையே வச்சிருக்காள். ஏண்ணா சிரிக்கிங்க?"

"தான் பெறணும் பிள்ளை. தன்னோட பிறக்கணும் பிறவி என்கிறது பழமொழி. ஆயிரம் பிள்ளைகள எடுத்து வளர்த்தாலும், ஒரு சொந்தப் பிள்ளைக்கு இணையாகுமா?"

"அதுக்குத்தான் எனக்குக் கொடுத்து வைக்கலியே..."

"கொடுத்து வைக்கலன்னு சொன்ன பிறகு... கெடுத்து வைக்காமலாவது இருக்கணுமில்லையா? நம் சொத்தை நாமே கட்டிக் காப்பாத்தணும் இல்லியா... பெருமாள்கிட்ட மாட்டி, செக்குமாடு, சமாச்சாரமாய் ஆகி, சொத்து போயிடக் கூடாதே."

"அப்படியெல்லாம் ஆகாதுண்ணா. மல்லிகா சொத்துக்கு ஆசைப்படுகிறவள் இல்ல... நேத்து, கல்யாணத்துக்குப் போகும்போதுகூட நகைங்களை போடமாட்டேன்னுட்டாள்."

"அப்படி நீதான் நினைக்கிற, நீ அவளை அருமை பெருமையாய் வளர்க்கிறது, பிறத்தியாருக்குத் தெரியக்கூடாது என்கிறதுக்காக அப்படிச் செய்திருக்கலாம் இல்லியா. சும்மா பேச்சுக்குத்தான் சொல்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால, செல்லம்மா, 'கல்யாணப் பெண்ணுக்கு போட்டுட்டு, கழட்டித் தாரேன்னு சொல்லி இவளோட நகையைக் கேட்டாள். நீ முடியாதுன்னு சொன்னே. இந்த மல்லிகா, ஒரு வார்த்தை, உன்னோட சேர்ந்து முடியாதுன்னு சொன்னாளா? பீரோ நகைகள சொந்த அம்மாகிட்ட எடுத்துக் குடுக்கலியா, கடைசில அவள் நல்லவளாயும்... நீ பொல்லாதவளாயும் ஆகிப்போச்சு. 'உங்களுக்கு ஒண்ணுந் தெரியாதும்மா'ன்னு அவள் அடிக்கடி சொல்றத நீ தாராளமா நினைக்கிற... எனக்கு அப்படிப் படல..."

"இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது போலிருக்கே..."

"இதுதான் உண்மை... யாரையும் நம்பக்கூடாது. என்னைக்கூட நம்பக்கூடாது. மச்சான்கூட... ஒரு பவுன் மோதிரம் வாங்குனாரு மல்லிகாவைக் கூட்டிக்கிட்டுப் போய். கடை கடையாய் அலைந்து. இந்த மோதிரத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க... அவரோ... இல்ல இந்த மல்லிகாவோ... ஒரு வார்த்தை சொன்னாங்களா.. எதுக்காக இந்த மூடுமந்திர வேலைன்னு கேக்குறேன். மல்லிகா எனக்கு என்னமோ. பசப்புக்காரியா தெரியுது."

"எனக்கு தலை குழம்புதுண்ணா... வேற விஷயத்தைப் பேசலாம். காபி போடட்டுமா, டீ போடட்டுமா..?"

"நீ எதுவும் போடாண்டாம். நான் இப்போ சொல்றதுதான். இனிமேல். என்கிட்ட நீ கேட்டாலும். நான் பேசப் போறதில்லை சத்தியமாய் உட்கார்ந்த இடத்துல இருந்து சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. மல்லிகா. நல்ல பெண்ணாவே இருக்கலாம். ஆனால் பெண்புத்தி பின்புத்தி... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... சும்மா பேச்சுக்கு. இப்போ நல்லா இருக்கிற மல்லிகா, அப்போவும் நல்லா இருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? நாளைக்கு, மல்லிகாவுக்குக் கல்யாணம் நடக்கப்போகுது. அவள் புருஷனோ இல்ல மாமன் மாமியாரோ, அவளை குரங்காய் ஆட்டிப் படைக்க மாட்டாங்க என்கிறது என்ன நிச்சயம்? இவள் பெருமாள்கிட்டே போகமாட்டாள் என்கிறது என்ன நிச்சயம்? தான் ஆடாட்டாலும், சதை ஆடாதோ? நான் உன்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி, இவளும், அப்பன்கிட்ட பாசத்தைக் காட்டமாட்டாள்னு எப்படிச் சொல்லமுடியும்? அப்படியே காட்டினாலும், அதுல என்ன தப்பு?"

"நீங்க எப்பவுமே இப்படித்தாண்ணா... எதையாவது சொல்லிக் கோளாறு செய்வீங்க.. ஆனால் வழி மட்டும் காட்ட மாட்டிங்க."

"இதுக்கு ஒரே வழி இருக்கு."

"சொல்லுங்க... அவரு வந்துடப் போறாரு."

"உன்னால மல்லிகாவை விட்டுட்டு இருக்கமுடியாது. அதேசமயம், மச்சானுக்குப் பிறகு உன் கையே ஓங்கி இருக்கணும். இதுக்கு ஒரே வழி, நம்ம ராமனுக்கு, மல்லிகாவை கட்டிப் போட்டால்தான் முடியும்."

"அது எப்படிண்ணா முடியும்? சின்ன வயசுலே உருப்படி இல்லாமல் போயிட்டான். நீங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எட்டாவது வகுப்புக்கு மேல தாண்டல தாகம் எடுக்கும்போதெல்லாம் பட்டைச் சாராயத்தைப் போடுறான். இதுல வேற ரவுடித்தனம்."

"இந்தக் காலத்துல ரவுடித்தனம் செய்கிறவன்தான். இந்த மெட்ராஸ்ல பிழைக்க முடியும். பட்டச் சாராயம் இப்போ குடிக்கான். நாளடைவில் அதையே காய்ச்சி. கார் பங்களா வாங்க மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்? அதோடு உன்னோட சொந்த அக்காள் மகன். ரத்தத்துக்கு ரத்தம். உன்னோட கடைகண்ணிகளை கட்டிக் காப்பாத்த இப்படிப்பட்டவன்தான் லாயக்கு பெருமாள் இவன்கிட்ட வாலாட்ட முடியுமா? அவன் கேடிதான். ஆனால், நம்ம பயல் ரவுடி!"

"நூறாண்டுப் பயிருண்ணா."

"என்னவோ... இப்பவே கல்யாணத்துக்கு நிச்சயமானது மாதிரி பேசுறியே. என் மூத்த மகளை ராமனுக்குக் கொடுக்கலாமுன்னு நினைத்தேன். ராசிப் பொருத்தம் இல்ல. இரண்டாவது பெண்ணை கொடுக்கலாமுன்னு நினைக்கேன். ஒரு வாரம் டயம் கொடுக்கேன். யோசித்துச் சொல்லு, உன் அக்காள் மகன்மேல உனக்கில்லாத பாசமா? உனக்கில்லாத பொறுப்பா? ஒரே ஒரு வாரந்தான் டயம். நீ, மல்லிகாவை கொடுக்கலன்னா. நான் என் இரண்டாவது மகள் நளினியை கொடுக்கப் போறேன். அப்புறம் என்மேல வருத்தப்படப்படாது. நான் வரட்டுமா?"

பார்வதி, அண்ணனைப் 'போய் வாருங்க' என்று சொல்ல முடியாத அளவுக்கு, பித்துப் பிடித்தவளாய் இருந்தாள்.

ராமசாமி போய்விட்டார். ஆனால், அவர் கோள்மூட்டிய வார்த்தைகள் காதுகளிலிருந்து போகவில்லை. ஒலித்துக் கொண்டே இருந்தன. பார்வதி, தன் உள்ளத்தையே போர்க்களமாக்கிவிட்டாள்.

"மல்லி ஒருவேளை... அவருக்குப் பிறகு, அப்பாகூட சேர்ந்திடுவாளோ அந்த குடிகாரன் சொன்னபடி எல்லாம் ஆடுவாளோ? அப்படியானால் என்கதி. என்கதி? அனாதையாக ஆயிடுவேனோ? சொத்தெல்லாம் போயிடுமோ? மல்லி நல்லவளாய் இருந்து, அவள் புருஷன் மோசமாய் இருந்தால் என் கதி என்னாகிறது? அண்ணன் என்கிட்ட சூதாய் பேசமாட்டாரு. என் நன்மைக்காகத்தான் பேசுவாரு. அதோட இந்த ராமன், என்னோட சொந்த அக்காள் மகன். ஊரில் ரவுடித்தனம் செய்தாலும், என்னை 'சித்தி'ன்னு வாய்நிறையக் கூப்புடுற பிள்ளை, அவனும் நல்லா இருக்கணும், மல்லிகாவும் நல்லா இருக்கணும். குடிகாரன் பெருமாள்கிட்டே வரப்படாது. அதுக்காக, பொருத்தம் இல்லாத கல்யாணத்தைப் பண்ண முடியுமா? முடியணும். எப்படியோ முடியணும். இந்த மல்லிகா பெருமாள் பெண்தானே... அப்பன் புத்தியில் கால்வாசியாவது இருக்காதா?"

ராமசாமி போனதில் இருந்து மல்லிகா கல்லூரியில் இருந்து திரும்புவது வரைக்கும் பார்வதிக்கு ஒன்றும் ஓடவில்லை. வயிற்றுக்கு எப்போதும் வஞ்சகம் செய்யாத அவள், அன்று சரியாகச் சாப்பிடக்கூட இல்லை.

துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே வந்த மல்லிகா, "அம்மா, நான் கட்டுரைப் போட்டியில் இரண்டாவதாக வந்திருக்கேன் அம்மா" என்றாள்.

பார்வதி அப்போதைக்கு. அண்ணனையும். அவர் சொன்னதையும் மறந்துவிட்டுக் கேட்டாள்.

"என்ன போட்டிம்மா..?"

"கட்டுரைப் போட்டி"

"அப்படின்னா?"

"சும்மா கிடங்கம்மா... உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது. உங்ககிட்ட சொன்னதே தப்பு துளைத்து எடுத்துடுவீங்க, கட்டுரை என்றாலே என்னன்னு தெரியாது. அதை விளக்கிட்டு, அப்புறம் போட்டியைப் பற்றி விளக்க இரவு மணி பன்னிரண்டாயிடும். பசிக்குதும்மா. அப்பா வரும்போது, விவரமாய் சொல்றேன். நீங்கள் அப்போ கேளுங்க. இப்போ பசிக்குது."

பார்வதிக்கும், இப்போது மனதுக்குள் பசியெடுத்தது. அண்ணன் சொன்னது சரிதான். நான்தான் ஒண்ணும் தெரியாதவளாய் வெளுத்ததை எல்லாம் பாலுன்னு நினைக்கிறேன்.

பார்வதி சற்று காரமாகவே பதில் சொன்னாள் இப்போ நான் உன் கண்ணுக்குப் பிடிக்குமா? என்னைப் பார்த்தால் மனுவியாய்த் தெரியுமா? எல்லாம் தலைவிதி."

பார்வதி சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய்விட்டாள். மல்லிகா, அவளை விநோதமாகப் பார்த்தாள். அம்மா ஏன் இப்படிச் பேசுறாங்க? மல்லிகா உள்ளே போய் அவளின் கையைப் பிடித்துக்கொண்டு, உடம்புக்கு எதுவும் பண்ணுதாம்மா என்று கேட்டாள்.

அவளையே வைத்தகண் வைத்தபடி பார்த்தாள் பார்வதி. அண்ணன் சொன்னதையெல்லாம் அவளிடம் சொல்லலாமா என்றுகூட நினைத்தாள். பிறகு அந்த அருமை அண்ணன், "எனக்கென்னமோ மல்லிகா பசப்புக்காரியா தெரியுது" என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

பார்வதி எதுவும் பேசாமல், அவளுக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். மல்லிகாவும் மறு பேச்சுப் பேசாமலே, எந்திரம்போல் தந்ததை வாங்கிக் கொண்டாள்.

இரவு சொக்கலிங்கம் வந்தார். மல்லிகாவால் தன் வெற்றி விவரத்தை அடக்கி வைக்க முடியவில்லை. அப்பாவிடம் கட்டுரைப் போட்டியின் விவரத்தை விவரமாகச் சொன்னாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே. பார்வதி தனது தாம்பத்ய அறைக்குள் போய்விட்டாள்.

முன்பெல்லாம் காதுவிரியக் கேட்கும் அம்மா இப்படிப் போவதில் மல்லிகாவிற்கு வருத்தந்தான் தன்னையே ஆறுதல் படுத்திக்கொண்டாள். அம்மாவுக்கு உடம்புக்குச் சுகமில்லைபோலும். உடம்பு சரியில்லன்னா மனசும் சரியா இருக்காது. அம்மாகிட்ட போய் பேசலாமா? வேண்டாம் எரிச்சல் இருக்கிற சமயத்தில் போனால் தப்பு. காலையில் பார்த்துக்கலாம்.

சொக்கலிங்கம் மகளிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தார்.

"என்னடி ஒரு மாதிரி இருக்கே?"

"ஒண்ணுமில்ல."

"ஓ... உன் அண்ணன் வந்துட்டுப் போனாரோ... இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படித்தான் இருப்பே. அடுத்துக் கெடுக்குறதுல்ல நிபுணனாச்சே."

"ஆமாம்... அவரு அடுத்துக் கெடுக்கவரு. நீங்க அரிச்சந்திர பிரவு ஒரு பவுன் மோதிரம் வாங்குனதை சொன்னீங்க பாருங்க."

"தற்செயலாய் வாங்குனேன்டி அதுல அர்த்தம் பார்க்காதே."

"நான் நடக்கிறதை எல்லாம் கவனிச்சிட்டுதான் பேசுறேன். மல்லிகா மேல உங்களைவிட எனக்குப் பாசம் அதிகம். அதனால்தான் கேக்கறேன். என் அக்காள் மகன் ராமனுக்கு நம்ம மல்லிகாவை கல்யாணம் பண்ணலாமுன்னு நினைக்கேன்."

"என்னடி இது? காது கொடுத்தால், எதையும் பேசலாமுன்னு நினைக்கிறியா? பேசறதுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்? உனக்கு அறிவிருக்கா? அந்த ஓணான் பயலுக்கா இவளை கொடுக்கச் சொல்ற. இனிமேல், இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால், நான் பொல்லாதவனாய் மாறிடுவேன். ஜாக்கிரதை."

பார்வதி புரண்டு படுத்தாள். மல்லிகா ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும்போது, அவள்மீது ஏற்பட்ட வெறுப்பு, இதுவரை அவளுக்குத் தெரியாமலே அடிமனதில் பதிந்து இருந்தது. அந்த உளைச்சல் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. ராமன் இருக்க வேண்டிய இடத்தில் தத்துப் பிள்ளையாக தன் அக்காள் மகன் இருக்கவேண்டிய இடத்தில், இன்னொருத்தியின் மகள் - ஒரு குடிகாரன் பெற்ற பெண் இருக்காள்!

பார்வதி பேயாக மாறிக் கொண்டிருந்தாள்.

 7

நாலு மாத காலம் கடந்தது. பார்வதி பழைய பார்வதியாக இல்லாதது மல்லிகாவிற்கு தெளிவாகத் தெரிந்துபோய் விட்டது. அடிக்கடி அரவை மில்லில் வேலைபார்க்கும் பையன்களைத் திட்டும் சாக்கில் "ஊர்ப்பயல் பிள்ளைகள். ஊர்ப்பயல் பிள்ளைகள்தான்" என்று ஜாடைமாடையாகத் திட்டத் துவங்கினாள்.

இப்போது மல்லிகாவிற்கு தலைவாரி விடுவதில்லை. கண்ணுக்கு மை போடுவதில்லை. அதேசமயம் எதுவுமே நடவாதது மாதிரியும் பல சமயங்களில் மல்லிகாவிடம் நடந்து கொள்கிறாள். ஒருதடவை ஆட்டோ ரிக்ஷாவில் ஏறும்போது மல்லிகா கால் தவறி கீழே விழப்போனபோது பார்வதி பதறிப்போய் "பார்த்துப் போம்மா. நீ வாரது வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு" என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அம்மா, பழைய அம்மாவாக மாறிவிட்டாள் என்று மகிழ்ந்துபோன மல்லிகா, மாலையில் துள்ளிக் குதித்து ஓடிவந்து 'அம்மா' என்றபோது, அண்ணனுடன் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அம்மாக்காரி "அம்மா இன்னும் சாவாமல்தான் இருக்கேன்" என்று சொன்னாள்.

உடனே மல்லிகா. 'நாம சாவாமல் இருக்கோமே' என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டாள். அண்ணன் ராமசாமியின் வருகை அதிகரிக்க அதிகரிக்க, அம்மாக்காரியின் வெறுப்பின் வேகம் ஏறிக்கொண்டிருப்பது. கல்லூரிக்காரிக்குத் தெரியாது.

ராமனும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.

"உன் சித்திக்காரியை கெட்டியாகப் பிடித்துக்கடா... அவ்வளவுதான் நான் இப்போ சொல்ல முடியும்" என்று பெரிய மாமா ராமசாமி சொன்னதன் உள்ளர்த்தம் புரியாவிட்டாலும் வெளியர்த்தம் புரிந்தவன்போல். சித்தி வீட்டுக்கு வரத் துவங்கினான்.

"இங்கே எதுக்குடா வந்தே" என்று கேட்கிற சித்தி, "ஏண்டா. அடிக்கடி வரமாட்டேங்கிற" என்று சொன்னதில் அவனுக்கு பட்டைச் சாராயத்தைக் குடிக்கும்போது ஏற்பட்ட 'கிக்'கைவிட் அதிகமான 'கிக்' கிடைத்தது சொக்கலிங்கம்தான் அவன் வருகையை அறவே அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவன் 'சித்தப்பா... சித்தப்பா..." என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவர் கொண்டுவரும் டிரம்களையும், தகர டப்பாக்களையும் எடுத்து. வீட்டிற்குள் வைத்தபோது, சொக்கலிங்கம் அவனை விரும்பவில்லையானாலும், வெறுக்காமல் இருந்தார்.

ஒருசமயம் அவர் அரவை மில்லில் ஏதோ கலாட்டா, மிளகாயைச் சரியாக அரைக்கவில்லை என்று ஒரு பட்டாக் கத்தி மைனர் சொக்கலிங்கத்தை மிரட்டினான். பயந்துபோன சொக்கலிங்கம். அவனிடம் வாங்கிய காசைத் திருப்பிக் கொடுத்தார்.

பட்டாக்கத்திக்கு மேலும் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. "என்னோட மிளகாயை கஸ்மாலமா பண்ணிட்டே அதுக்கு 'மாலு' வெட்டுறியா... இல்லே மவனே... குடல உருவட்டுமா... நம்மகிட்டயா டபாய்க்கிற நய்னா..." என்று சொன்னது. சொக்கலிங்கத்திற்கு அதிகபட்சமாகத் தெரிந்தது. "செய்யுறதைச் செய்டா" என்றார். அவனும் செய்ய வேண்டியதைச் செய்தான். அவரது சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, "இன்னாய்யா சொன்னே... விட்டேன்னா ஒரு குத்து" என்று, எச்சில் துளிகளில் சாராயத் துளிகள் தெறிக்கும்படி கத்தியபோது, எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ராமன், விட்டான் ஒரு குத்து, பட்டாக்கத்தி சுருண்டு விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்குமுன்னால், விட்டான் ஒரு உதை. பட்டாக்கத்தி படுத்துக்கொண்டே, "விட்டுடு வாத்தியாரே... இவரு... உன்னோட தோஸ்துன்னு தெரியாமப் பூட்டு... அப்பா விட்டுடு... அம்மா விட்டுடு" என்று புரண்டு கொண்டே புலம்பினான்.

"அவரு என்னோட தோஸ்து இல்லடா... சொந்தமான சின்ன நய்னாடா... அவருகிட்ட மன்னாப்புக் கேள்டா கயிதே..." என்று ராமன் கழுதை மாதிரி கனைத்து, ஆள்காட்டி விரலால், சித்தப்பாவைச் சுட்டிக் காட்டியபோது, அந்த 'கயிதே'யும் சொக்கலிங்கத்தின் கையிலும், காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு. திரும்பிப் பாராமல் ஓடியது.

சொக்கலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. அந்தத் தெருவுக்கே எஜமானனாகவும். திண்ணைப் பொறுக்கியாகவும் வாழும் ஆனானப்பட்ட பட்டாக்கத்தியையே. இந்த ராமன் அடக்கிவிட்டான் என்றால். இவன் சாதாரண ராமன் அல்ல. ரவுடி ராமன். இவன் நமக்கு எப்போதும் தேவை!

அந்த நன்றிப் பெருக்கில், அவனுக்கு தன் வீட்டுக்குள் சகல உரிமைகளையும் கொடுத்தார் சொக்கலிங்கம்.

இதை பெரியண்ணன் மூலம் புரிய வைக்கப்பட்ட பார்வதி ஒருநாள், மல்லிகாவைப் பார்த்து. "ராமன்கிட்ட ஏம்மா சிடுசிடுன்னு பேசுற. கொஞ்சம் சிரித்துத்தான் பேசேன். நீன்னா அவனுக்கு உயிரு" என்று. பட்டும் படாமலும் பேசினாள்.

அம்மாவின் அபிலாஷை புரியாத மல்லிகா, 'இவருகிட்ட சிரித்துப் பேசுறவள், யாருகிட்டயும் சிரித்துப் பேசுறவளாத்தான் இருப்பாள். இதுவும் இது மூஞ்சும். அப்பா சொன்னதுமாதிரி சரியான ஓணான் மூஞ்சி" என்று எரிச்சலோடு சொன்னபோது, பார்வதிக்கு படுஎரிச்சலாக இருந்தது. அண்ணன் வந்ததும் வராததுமாக "நான் பூடகமாய்ப் பேசிப் பார்த்தேன். இவள், சம்மதிக்க மாட்டாள் போலிருக்கே" என்றபோது, ராமசாமி, ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்துக்கொண்டார்.

"பாரு... பக்குவமாகச் சொல்லிப் பாரு. மாட்டேன்னுட்டாள்னா, கழுதையை வீட்டை விட்டுத் துரத்து..."

"அது எப்படியண்ணா..."

"சிலசமயம்... ஆபரேஷன் செய்யணுமுன்னா செய்துதான் ஆகணும். ராமனைக் கட்டிக்கச் சம்மதிக்கலன்னா, அவள் இங்க இருக்கறது அர்த்தமில்லை... இது உன்னோட சொந்த விஷயம். கேட்டாக் கேளு. விட்டால் விடு. ஆனால் ஒண்னு அப்புறமாய் பெருமாள் திட்டுறான்... மல்லிகா புருஷன் அடிக்க வரான்னு என்கிட்ட வரப்படாது. சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியணும். இல்ல... என் ரெண்டாவது மகள் இருக்கவே இருக்காள்..."

"ஏண்ணா கோபப் படுறீங்க? நான் பொம்பள. எனக்கு என்ன தெரியும்? உங்ககிட்ட யோசனைதானே கேட்டேன்."

"அதைத்தான் சொல்றேன். மல்லிகா, இந்த வீட்ல இருக்கிறதாய் இருந்தால், நம் ராமன் பயலோட இருக்கணும். இல்லன்னா எங்கேயும் போகட்டும். நீ, ராமனையே சுவீகாரமாய் எடுத்துக்கலாம். என் ரெண்டாவது பொண்ணு, உனக்கே மருமகளாய் வந்துடலாம். நீ கண் மூடுறது வரைக்கும், கண்கலங்காமல் பார்த்துக்குவாங்க..."

சிறிது திடுக்கிட்ட பார்வதிக்கு, மல்லிகாவை என்னதான் வெறுத்தாலும் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுவது என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. அதேசமயம், அண்ணன் சொன்னதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல், லேசாகச் சிரித்துக் கொண்டாள். சோகச் சிரிப்பு.

பார்வதியின் அண்ணன் போய்விட்டார் என்பதை. அரவை மில் பையன் ஒருவனை அனுப்பி நிச்சயப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

அந்தச் சமயத்தில், மல்லிகாவும் கல்லூரியில் இருந்து வந்தாள். வந்தவுடனேயே, அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டே, "அப்பா... சபையர் தியேட்டரில் ஒரு நல்ல ஆங்கிலப் படம் வந்திருக்கு. என்னை கூட்டிக்கொண்டு காட்டுங்களேன்" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

"நாளைக்குப் போகலாண்டா” என்று தனக்கு அவள் ஆண்பிள்ளை என்பதுபோல் சொக்கலிங்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பார்வதிக்குப் பற்றி எரிந்தது. காக்கா பிடிக்கிறாளோ.. அப்பாவைக் கையில் போட்டுக்கிட்டு, ராமனை கட்டமாட்டேன்னு சொல்லி விடுவாளோ... கடைசியில், அந்த குடிகாரன் பெருமாள்கிட்ட அவஸ்தைப்பட வேண்டியதிருக்குமோ. இதுக்கெல்லாம் யார் காரணம். இவள்தான்... இவளே தான்...

கணவன், காது கேட்காத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை, வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பார்வதி, அங்கிருந்தபடியே, "பொம்புளன்னா... ஒரு அடக்கம் வேணும். இங்கிலீஷ் படம் பார்க்கப் போறாளாம்... எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம். கொடுப்பாரைக் கண்டால், பேயிகூட குழஞ்சி குழஞ்சி ஆடுமாம்" என்று தள்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே, சமையலறையைப் பார்த்துப் போனாள். இப்படிப் பேசினாலும், மல்லிகாவிற்கு டிபன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை விரும்பாதவள்போல.

இப்படி, பாசத்தைக் கொட்டிக்கொண்டே, தன்னையும் 'கொட்டுவதை' உணர்ந்த மல்லிகாவால், அவளை அம்மா இல்லை என்று உதறவும் முடியவில்லை. அம்மாதான் என்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. தனக்குள்ளேயே, சமாதானம் செய்துகொண்டாள். பெத்த பொண்ணுங்கள அவங்க அம்மாக்கள் எப்படித் திட்டுறாங்க. சிலசமயம் அடிக்கக்கூடச் செய்றங்களே... இந்த அம்மா அப்படி இல்ல. நான் ஆங்கிலப்படம் பார்த்து, குச்சிக்களியா மாறிடக் கூடாதுன்னு நிஜமாகவே பயப்படுறாங்க... இதுல தப்பில்ல...

என்றாலும் மல்லிகா அந்நியப்பட்டவள் போல் உணர்ந்தாள். அப்பாவிடம் கூட. அவளால் முன்பு பழகியது மாதிரி பழக முடியவில்லை. அவரிடம் பேசும்போதெல்லாம், அம்மாக்காரி கண்களை உருட்டுவதுபோல் அவளுக்குத் தோன்றியது.

8

இந்தச் சமயத்தில் ஒருநாள் சொக்கலிங்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.

டாக்டர், உடனடியாக வந்துவிட்டதால், கருப்பு பார்டர் போட்ட ஈமப் பத்திரிகைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. என்றாலும் மனிதர் ஆடிப்போய்விட்டார். இது, இரண்டாவது முறை. மூன்றாவது எப்படி இருக்குமோ...

பார்வதியும், மல்லிகாவும், அவரை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள். செல்லம்மாவும் வந்து பார்த்தாள். கல்யாணமாகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்திராவும், அவள் புருஷனும் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். ஆனால் பெருமாள் மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

எப்படியோ, சொக்கலிங்கம் தேறி வந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் பார்வதி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். கணவர், பதறிப்போனார்.

"ஏம்மா அழுவுறே... எனக்குத்தான் சுகமாயிக்கிட்டே வருதே!"

"ஏதோ ஆண்டவன் புண்ணியத்தால, இந்தத் தடவை என் தாலி கெட்டியாய் இருக்கு. இன்னொரு தடவை. இப்படி வந்து, நடக்கக்கூடாதது நடந்துட்டால், என் கதியை நினைச்சிப் பார்த்தேன். நாய்கூட திரும்பிப் பாராது."

"பைத்தியம்... அப்படியெல்லாம் பேசப்படாது. உனக்கு ஒரு குறையும் வராது. மல்லிகா நல்ல பொண்ணு."

"மல்லி நல்லவள்தான்... அவளுக்கு வாய்க்கிறவன் நல்லவனாய் இருக்கணுங்கறது என்ன கட்டாயம்? அவள் அப்பன்... என்னை மிரட்ட மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்?"

"சரி, கவலைப்படாதே. உடம்பு சுகமானதும். அவளுக்கு நல்ல பையனாய் பார்க்கேன்!"

"கையில வெண்ணெயை வைத்துக்கிட்டு எதுக்காக நெய்க்கு அலையணும்?"

"என்ன சொல்றே?"

"நம்ம ராமன்."

"நெஞ்சு லேசா வலிக்குது... மருந்தை எடு."

"என்னை குழந்தை மாதிரி வச்சிருக்கிங்க. இனிமேல் வேலைக்காரியாய் ஆகப்போறேன்."

சொக்கலிங்கம், நான்கைந்து நாட்களாக, தலையை உருட்டிக்கொண்டே யோசித்தார். மனைவி சொல்வதில் ஓரளவு நியாயம் இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. அவர் காலத்திற்குப் பிறகு, அவள் காலம் எப்படி ஆகுமோ... அவள் சொல்வது மாதிரி... பெருமாள் ஏடாகோடம் செய்தால்...? போன உயிரை டாக்டர் மீட்டிருக்காரு... ஆனால் இந்த பெருமாள் 'இருக்கியா செத்தியான்னு' கூட கேட்கல. போதாக்குறைக்கு, "உன் மச்சான் மண்டையை போடட்டும், அப்புறந்தான் விவகாரமே இருக்கு" என்று இரண்டாவது மைத்துனன் கிட்ட சொல்றானாம். சொன்னபடி செய்றவனாச்சே. பார்வதிக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிடக் கூடாதே... நமக்கோ இந்த மாரடைப்பு எப்போ வேணுமுன்னாலும் வரலாம்... நீரிழிவு... இரத்த அழுத்த நோய்... இதுல ஒவ்வொண்ணும் முறை வைத்தது மாதிரி, நெஞ்சை அடைக்குது. திடீர்னு செத்து... விவகாரம் தீராமல் போனால், எல்லோருக்குமே தொல்லை... இந்த மல்லிகா வேற. வரவர ஒதுங்கி ஒதுங்கிப் போறாள். இவளையும் நம்ப முடியாது போலிருக்கு... எப்படியாவது பார்வதிக்கு பாதுகாப்பு வேணும்... மல்லிகாவுக்கும் பாதுகாப்பு வேணும். ராமனை மாதிரி ரவுடியாலதான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும்... அதுக்காக... மல்லிகாவை... அவனுக்கு..."

ஒருநாள் பார்வதி அவருக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்தபோது, அவர் சில சந்தேகங்களைக் கேட்க, பார்வதி அவற்றைத் தீர்த்து வைத்தாள்.

"ராமன் படிக்காதவனாச்சே."

"படிச்சவங்க மட்டும் என்னத்த பெரிசா கிழிச்சிட்டாங்க... நம்ம எதிர்வீட்டு கமலா டாக்டருக்குப் படிச்சவள். புருஷன், எஸ்.எஸ்.எல்.சி. பெயில் அவங்க குடும்ப உறவு, எப்போதாவது பெயிலாகி இருக்கா? மூணாவது தெருவுல இருக்காளே. முனுசாமி மகள் சரோஜா. பி.ஏ. படித்துட்டு, ஆபீசரா வேலை பார்க்காள் ஒரு பஸ் கண்டக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கிறாள்? எப்பவாவது அந்த கண்டக்டர். பஸ்ல முறைக்கது மாதிரி... அவளை முறைக்கிறானா... படிப்பு... இந்தக் காலத்தில் தண்ணி பட்டபாடு. மரியாதை கிடையாது."

"அதிகமாய் குடிக்கானடி"

"இப்போ நாட்டுல எவன் குடிக்கல? குடிக்கிறது என்ன... பெரிய பாவமா? நான்கூட ஜூரத்துல துடிக்கையில... எங்க டாக்டர் சொன்னார்னு, இரண்டு ஸ்பூன் விஸ்கியையோ, கிஸ்கியையோ நீங்க எனக்கு கொடுக்கலியா? அதோட இப்போ கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறதை விட்டுக்கிட்டு வாரான். கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பழக்கத்தையும், மல்லிகாவைக் கட்டுனதும் மறந்துடுவான். அவளும் அவனைத் திருத்திடுவாள்."

"அவள்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்."

"நாம வளர்த்த பொண்ணு நம்மை மீறிப் போவாளா? ஒரு தடவை, ஒரு கிழவர் 'யாரையாவது காதலிக்கியாமா' என்று கேட்டதுக்கு 'காதலாவது... கீதலாவது... அப்பா எவனையாவது காட்டி கட்டுன்னால் கட்டுவேன். வெட்டுன்னால் வெட்டுவேன்னு' அவள் சொன்னது ஞாபகம் இருக்கா?"

"எதுக்கும் நானே ஒரு வார்த்தை..."

"நீங்க கேட்க வேண்டாம். வெட்கப்படுவாள். நானே கேக்கிறேன். அப்புறம் அவள் இஷ்டம்."

"சரி, எனக்கு மூளை குழம்புது. நாலையும் யோசித்து, நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு நீங்க எல்லாரும் நல்லா சந்தோஷமாய் இருக்கணுங்கிறதுதான்."

"நீங்க நினைக்கிறது மாதிரியே நடக்கும்."

பார்வதி ஆனந்தப் பரவசமாக வெளியே வந்தாள். அப்போது, அத்தானைப் பார்க்க அங்கே வந்த இரண்டாவது அண்ணன் சுப்பையாவிடம் "அவரு... ராமனுக்கு, மல்லிகாவை கொடுக்கச் சம்மதிச்சிட்டாரு. பெரியண்ணன் போட்ட குறி பலிச்சிட்டு" என்றாள்.

சுப்பையா வெளியே ஓடினார். பெரியண்ணன் போட்ட குறி பலித்தால், இவர் எப்படி பெரிய மனிதனாவது? அவர் பொறுப்பில் கல்யாணம் நடக்க வேண்டாமா? அவரை 'குள்ளப் பயலே' என்று சொல்லி அடிக்கப்போன ராமனுக்கா, மல்லிகா? கூடாதுய்யா கூடாது.

சுப்பையா ஓடினார். பெருமாள் வீட்டைப் பார்த்து ஓடினார்.

9

மல்லிகா, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். காலை நேரம் கல்லூரிக்குப் போக, இன்னும் நேரம் இருந்தது. புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, அன்று கல்லூரியில் நடக்க இருந்த பேச்சுப் போட்டி நினைவுக்கு வந்தது. பெயரைக் கொடுத்துவிட்டாள். முதல் பரிசு சரவணனுக்கே போய்ச் சேரும் சந்தேகமே இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசாவது அவள் வாங்கியாக வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரி வாசலில் சைக்கிள் பெடலில் ஒரு காலை வைத்துக்கொண்டு நன்ற சரவணனிடம், அவன் நண்பன் ஒருவன் "எங்கேடா புறப்பட்டுட்டே?" என்று கேட்டதும், அதற்கு அவன், "தி.நகரில் எங்க மாமா வீட்டுக்குப் போய்விட்டு வரணும்' என்று சொன்னதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே, 'என் வீடும் அங்கேதான் இருக்கு' என்று அவனிடம் சொல்லவேண்டும் என்பதுபோல் துடித்தாள். துடித்தது. வாயில் வராத வார்த்தையாகி, இதயத்துள் எழுந்து, இனம்புரியாத இன்பதுன்ப எல்லையைக் கடந்த ஒருவித மோன உணர்வாய் முகிழ்த்தது.

மல்லிகா, ஊஞ்சல் பலகையில், இரண்டு நாட்களாக வந்து உட்காருவதற்குக் காரணமே, இந்த சரவணன்தான். ஒருவேளை அவனது மாமா வீடு, இந்தத் தெருவிலேயே இருக்கலாம். மாமா வீடு என்றாரே... அந்த மாமாவுக்கு பொண்ணு எதுவும் இருக்கலாமோ? அவனைக் காதலித்துத் தொலைத்திருக்கலாமோ?

மல்லிகாவிற்கு, தாபமாக இருந்தது. அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அடுத்த தெருவிலேயே ஒரு கூட்டம் நடந்து - அது எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும், அவன் அதில் பேச வேண்டும் அவள் முன்வரிசையில் உட்கார்ந்து, முன்பல் தெரியச் சிரித்துக் கைதட்ட வேண்டும் என்று நினைத்தாள். திடீரென்று அவள் மனதில் இன்னொரு எண்ணம் சீச்சீ... இந்த மாதிரி எண்ணம் வரக்கூடாது. அவரே பேச முயற்சி செய்யாதபோது. நான் ஏன் அவரைப் பற்றி நினைக்க வேண்டும்? எனக்கேன் தன்மானம் தலைகீழாகப் போகவேண்டும்?

மல்லிகா. சரவணனை, மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு, கையில் இருந்த புத்தகத்தில். கண்களைப் படர விட்டாள்.

வாசலில் சத்தம் கேட்டு, புத்தகத்தில் இருந்த கண்ணை விலக்கிய மல்லிகா, வாசல்பக்கம் நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் நின்ற செல்லம்மாவைப் பார்த்துவிட்டு, பின்னர் சமையலறைக்குள் அடுப்போடு சரசமாடிக் கொண்டிருந்த பார்வதியை பின்நோக்கித் திரும்பி. கண்களை வீசிக்கொண்டே, "அம்மா. உன் நாத்தனார் வந்திருக்காங்க.." என்று கூறிவிட்டு. மீண்டும் புத்தகத்தின் முனையில் முன்தலை மோத, குனிந்தாள்.

செல்லம்மாவிற்குப் பற்றி எரிந்தது. ஒட்டிப்போன வயிற்றின் ஒரமாகக் கிடந்த 'அச்சடி' புடவையை இழுத்து வயிற்றை மூடிக் கொண்டாள். வயிறாரப் பெற்ற மகள், மூணாவது மனுஷியைச் சொல்வதுபோல், 'உன் நாத்தனார்' என்றதுமே, அவள் ஒரு கணம் செத்துப் போனாள். மறுகணம் "ஆமாண்டி... நான் நாத்தனார்தான். பெத்த தாயையே நாத்தனாரா ஆக்கின உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால்தான், உனக்கு என் நிலைமை புரியுண்டி" என்று சொல்லப் போனாள். பிறகு, தான் பெற்ற பிள்ளைக்கு, தன்னைப் போன்ற நிலைமை வரக்கூடாது என்று நினைத்தவள் போலவும், மகளைத் திட்ட நினைத்ததற்கு அபராதம் செலுத்துபவள் போலவும் "மல்லிகா, உங்க அப்பாவை... எங்கம்மா?" என்று கேட்டாள்.

மல்லிகா, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அந்த நடுத்தர வயதுக்காரியின் உதட்டுத் துடிப்பும், உட்குழி கண்ணும். அவளை என்னவோ செய்தது. ஊஞ்சல் பலகையில் இருந்து இறங்கி, "உள்ளே வாங்க" என்று சொல்லிக்கொண்டே அவள்மீது கருணைப் பார்வையை வீசிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

நான் பெத்த பெண்ணே "நீ உள்ளே வாங்கன்னு சொல்லாமல், வெளியே போங்கம்மான்னு ஒரு தடவையாவது அம்மான்னு சொன்னா நான் சந்தோஷ் ப் பட்டிருப்பேனடி" என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்ட செல்லம்மா உள்ளே வந்தாள். பார்வதி. அவளை வழக்கம்போல் எதிர்கொண்டு அழைக்கவில்லை.

செல்லம்மா. சமையலறைக்குள் ஓடிப்போய் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கபோன பார்வதியிடம் "நான் இறக்குறேம்மா" என்று சொல்லிவிட்டு மட்டும் நிற்காமல், பாத்திரத்தையும் இறக்கி வைத்தாள். பின்னர், நாத்தனாரிடம் செயலில் பேச நினைத்தவள்போல். பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்து சமையலறையைப் பெருக்கினாள். எச்சிக் காபித் தம்ளர்களை துப்புறப்படுத்தி குலுக்கி, அவற்றைக் கழுவி வைத்தாள். ஜொலித்துக் கொண்டிருந்த எவர்சில்வர் தம்ளர்களை தன் புடவையை வைத்துத் துடைக்கப் போனாள். அந்த அழுக்குப் புடவையால் எவர்சில்வர் அழுக்காகும் என்று நினைத்தோ அல்லது எவர்சில்வர் அதில் ஒட்டிக்கொண்டு எடைகுறையும் என்று எண்ணியோ, "தம்ளருங்க நல்லாத் தானே இருக்கு" என்று பார்வதி முகத்தை அந்தப் பெயருக்குரிய லட்சணம் இல்லாமல் சுருக்கிக் கொண்டே கேட்டாள்.

பெருமாள் பேசிய பேச்சு. அவளுக்கு அப்போது முழுதாகக் கேட்டது.

சிறிதுநேரம் மெளனம்...

செல்லம்மா திக்கித் திணறிப் பேச்சைத் துவக்கினாள்.

"பார்வதி... நான் கேள்விப்பட்டது நிசந்தானா..?"

பார்வதிக்கு, எரிச்சலுக்கு மேல் எரிச்சல், தமாஷாகப் பேசுவதுபோல், திமிராகச் சொன்னாள்.

"நீங்க எதைக் கேள்விப்பட்டிங்கன்னு, எனக்கென்ன ஜோசியமா தெரியும்...?"

"இல்ல... நம்ம மல்லிகாவிற்கு. மாப்பிள்ளை..."

"ஆமாம், பார்த்துகிட்டு இருக்கோம்..."

"முடிச்சுட்டதா கேள்விப்பட்டேன்..."

'முடிஞ்சது மாதிரிதான்..."

"நம்ம ராமன்தான் மாப்பிள்ளையாமே..."

"ராமனேதான்..."

செல்லம்மா லேசாகக் கூனிக் குறுகினாள். மேற்கொண்டு பேசினால் அவள் பத்ரகாளியாவாள் என்று தெரியும். ஆகையால் அவள் தன் உணர்வுகளை 'பத்திரமாக' வைக்க நினைத்தாள். இருந்தாலும் பெற்ற பாசம் கேட்கவில்லை.

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது..."

'நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க... தப்பா நினைக்கக்கூடிய விஷயமா என்கிறதை சொன்ன பிறகு... சொல்றேன்..."

"உனக்கு இல்லாத உரிம இல்ல... நான் பெத்துத்தான் போட்டேன் அப்புறம் வளர்த்ததெல்லாம் நீதான். இருந்தாலும்... எனக்குக் காபி வேண்டாம்மா... வர வர... காபி குடிச்சால் வாந்தி வந்துடுது. இருந்தாலும், ராமனுக்குக் கொடுக்கிறதுன்னா..."

"ஏன் இன்னா போடுறீங்க, அவனுக்கு என்ன குறைச்சல்?"

"உனக்கே தெரியும். இவள் படித்தவள். அவன் படிக்கல. படிக்காட்டியும் பரவாயில்ல. குடிக்குறான். குடிச்சாலும் பரவாயில்ல. பட்டச் சாராயமா குடிக்கறான்."

"உங்க புருஷன் குடிக்காததையா இவன் குடிக்கான்?"

"என் நிலைமை. என் பொண்ணுக்கும் வரக் கூடாதுன்னுதான் உன்கிட்ட பிச்சை கேட்க வந்தேன். என் வீட்டுக்காரர் குடிச்சதும் அப்படியே படுத்துக்கிறார். ஆனால், உன் ராமன், குடிச்சிட்டு சோடா பாட்டில எடுக்கறான். இதுக்குள்ள மூணு தடவை... ஜெயிலுக்கு வேற..."

இதற்குப் பிறகும் பார்வதியால் மேற்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. கழுத்தில் கிடந்த நெக்லசை, நைலக்ஸ் புடவையின் முந்தானை முனையால் துடைத்துக்கொண்டு, உள்ளத்து உணர்வுகளையும் அப்படியே துடைப்பவள்போல், வார்த்தைகளைப் பெருக்கிக்கொண்டே போனாள்.

"நீங்க காலங்காத்தால.. வந்ததை பார்த்தவுடனே நினைச்சேன். இந்தக் கல்யாணத்துல தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது. பிறந்ததுல இருந்து, வளர்ந்தது வரைக்கும் கவனிக்கிறவள் நான். பெத்துடுறது பெரிசல்ல. பெத்ததை வளர்க்கிறதுதான் பெரிசு, நாங்க யாருக்குக் கொடுத்தால் உங்களுக்கென்ன?"

"நான்... எதுக்கு சொல்றேன்னா..."

"நீங்க.. எதுவும் சொல்லவேண்டாம் அவள் என் வீட்ல இருக்கிற வரைக்கும் என் பொறுப்பு மல்லிகா உங்க பொண்ணு இல்லன்னு நான் சொல்லல. சொல்லவும் மாட்டேன். மகராசியா உங்க மகளை வேணுமுன்னா உங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய், எந்த அர்ச்சுன ராசதுரைக்கு வேணுமுன்னாலும் கொடுங்க. ஆனால் ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கதை வேண்டாம் இப்பவே வேணுமுன்னாலும் கூட்டிக்கிட்டுப் போங்க இவள் பண்ற கூத்துக்கு நான் ஒருத்திதான் சரிக்கட்டிக்கிட்டுப் போகமுடியும்..."

செல்லம்மா, அண்ணன் இல்லாத சமயத்தில், அவன் மனைவியிடம் மாட்டிக் கொண்டதற்காக வருந்தினாள். மீளவேண்டும் என்று நினைத்தவள்போல். அண்ணன் வருகிறாரா என்று வெளியே பார்த்தாள். போகலாமா என்று அடியெடுக்கப் போனாள் ஆனால் பாழும் கால்கள் நகர மறுத்தன. பெற்ற மனம் பெயர மறுத்தது. அந்த நல்ல ராமனைக் கட்டியே சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மவள் கட்டினால்? அட பகவானே. இதுக்கா அவளைப் பெத்தேன். இதுக்கா என் கிளியை, இவள்கிட்ட விட்டேன். இதுக்கா என் மாலையை... இவள் கையில் கொடுத்தேன். அட கடவுளே..."

செல்லம்மாவால் பேச முடியவில்லை. தொண்டை கட்டியது. கண்களும் கொட்டியது. விம்மல் சத்தம், வெடிச்சத்தம்போல் கேட்டதால், பார்வதியே சிறிதுநேரம் திகைத்துப் போனாள் பிறகு சமாளித்துக் கொண்டாள்.

"இந்தா பாருங்க... இந்த நீலி மாதிரி.. அழுகுற வேலை வேண்டாம். நான்தான் சொல்லிட்டேனே... மல்லி என் வீட்ல இருக்கிற வரைக்கும்... என் அக்கா மகன்தான் மாப்பிள்ளை. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் இப்பவே, இந்த கணமே அவளை பெட்டிப் படுக்கையோடு கூட்டிக்கிட்டுப் போகலாம். ஏய் மல்லி... ஏய்..."

செல்லம்மா, நாத்தனாரின் வாயைப் பொத்தினாள். ஏற்கெனவே ஏழு பிள்ளைகளோடு அவதிப் படுகிறவள். ஒருத்தி கரையேறி விட்டாள். இன்னொருத்தி கரையேற வேண்டும். பையன்களில் கடைசிப் பையன் படிக்கிறான். ஒருவன் மாமாவுடைய மளிகைக் கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் வெட்டி கடைசியாக உள்ள பத்து வயது மகளும் ஏழு வயது மகளும் வீட்டில் இருபது குடித்தனங்கள் உள்ள காம்பவுண்டு வீட்டுக்குள், பத்தடி - ஐந்தடி பரப்பிற்குள் கக்கூஸ் பக்கம் உள்ள முதல் அறையில் குடியிருக்கும் அவளால் மல்லிகாவை அங்கே கொண்டு போக முடியாது. இரவில், அறைக்குள் படுத்தால் மூட்டைப் பூச்சியோடு, புழுக்கம். வெளியே படுத்தால் கொதிக்கும் தரை ஒன்று மாற்றி ஒன்றாக அழும் குழந்தைகள்.

"இந்த சகாரா சாகரத்துக்குள் மல்லிகாவால் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தவளால் கழிநீர் 'கால்வாய்' திட்டில் உட்கார முடியாது. மெத்தையில் படுப்பவளால், மேடை போல் இருக்கும் அடுப்புத் திட்டில் படுக்க முடியாது. மின்விசிறிக்குள் அமர்ந்து, தலைமுடி ஒயிலாக ஆடி அசைய. ஒய்யாரமாக இருக்கும் அவளால், ஒண்டிக் குடித்தனத்தில் கை விசிறிகூட இல்லாத புழுக்க லோகத்தில் புகமுடியாது. இவள் இங்கேயே இருக்கட்டும். இங்கேயே இருக்க வேண்டியவள். வேண்டியவளோ இல்லியோ... இருக்க வேண்டும், அட... மாரியாத்தா... ஏழையின் பிள்ளை பணக்காரப் பிள்ளையாய் வாழ்ந்தாலும் அது ஏழைதானோ? ஏழையின் பிள்ளை ஏழையாக இருந்தால்தான் நல்லதோ?"

செல்லம்மா நாத்தனாரிடம் மீண்டும் மன்றாடிப் பார்க்கலாமா என்று யோசித்தாள். அது வீண் என்பதுபோல், பார்வதி, "தராதரம் தெரியாத பய பிள்ளைகளை... வீட்டுக்குள் சேர்க்கிறதே தப்பு... ஊர்ல சோறு தண்ணி கிடைக்காம... திரிஞ்ச... இந்த மாடசாமிப்பயல்... சாப்பிட்ட தட்டை கழுவாம போயிட்டான். வரட்டும். ஊருக்கே அவனை அடிச்சி விரட்டுனாத்தான் பன்னாட பயமவனுக்கு புத்தி வரும். ஒவ்வொருத்தரையும் வைக்க வேண்டிய இடத்துல வைக்கனுமுன்னு சொல்றது சரிதான்..." என்று தன்பாட்டுக்குள் புலம்பினாள்.

அவளின் பரிபாஷை செல்லம்மாவுக்குப் புரிந்துவிட்டது. 'கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவியாம்மா.. என்று சொல்லிக்கொண்டே, அதற்குக் காரணமான பதில் வருமுன்னே, செல்லம்மா சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

மல்லிகா, சமையலறைக்கு வெளியே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமில்லாமல், முகமே அழுது கொண்டிருப்பது போன்ற தோற்றம்.

அம்மா, மகளை ஏறிட்டுப் பார்த்தாள். செவ்வாழை நிறத்தில், சிவந்திப்பூ நிறத்தில், அளவெடுத்து வார்த்தெடுத்த சிலைபோல் விளங்கிய மேனியையும், ஆடாத வண்டுபோல் இருந்த கண்களையும், அசைகின்ற சங்கு போன்ற கழுத்தையும், முன் நெற்றி சுருங்க, முழுமேனி சுவரில் சாய, நின்ற மகளை அழாமல் அழுதுகொண்டே பருகினாள். அவளருகே, உடம்பெல்லாம் பச்சை குத்தி, உடலெல்லாம் பட்டைபோல், படைபடையாய் அடுக்கடுக்கான தோலோடு அருவருப்பான உருவத்தோடு, ஆடி இளைத்த பருவத்தோடு, ஆட நினைக்கும் கர்வத்தோடு உள்ள ராமனைப் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். செல்லம்மாவால் அங்கே நிற்க முடியவில்லை. அழ முடியாமல் அழுதாள். ஓட முடியாமல் ஓடினாள்.

மல்லிகா, இப்போது இதுவரையில் உதாசீனம் செய்யப்பட்ட செல்லம்மாவை, 'போகிறாளே' என்பதுபோல் பார்த்தாள். காய்ந்து, உலர்ந்து, தேய்ந்துபோன சுரைக்காய் போல உள்ள அவள் மார்பில்தான், தான் பால் அருந்தியிருக்க வேண்டும். இனிமேல் கிழிய முடியாது என்பதுபோல் கிழிந்துபோன புடவைகொண்ட அவள் மடியில்தான், தான் புரண்டிருக்க வேண்டும். வயிறெரிந்து ஓடும் அவள் வயிற்றில்தான். தான் ஜனித்திருக்க வேண்டும் என்ற சாதாரண உண்மை. இப்போது பேருண்மையாக, முதல் தடவையாக "அம்மா... அம்மா..." என்று லேசாகக் கேட்குமளவிற்குப் பேசினாள்.

"ஏய் மல்லி" என்று 'பார்வதி' கூப்பிட்டபோது, அங்கே ஓடிவந்தவள். உள்ளே அடிபட்ட பேச்சு, தன்னை அடிக்கும் பேச்சு என்று தெரிந்ததும். அவள் இங்கே இந்த சுவரில் சாய்ந்தாள்.

மல்லிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ராமனுக்கா அவள்? தெரு முழுதும் புரண்டுகொண்டு போவானே அவனுக்கா நான்? குடித்துக்கொண்டு புரள்வது மோசம் என்று நினைத்து புரண்டுகொண்டே குடிப்பானே, அந்த ராமனுக்கா நான்? கெட்ட வார்த்தை தவிர, எந்த வார்த்தையும் பேசாத அந்த கெட்டவனுக்கா நான்? முடியவே முடியாது.

என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்தவாறு அவள், தலையை சுருட்டியபோது, பார்வதி வெளியே வந்து "சுவர்ல தலைய வைக்கிறியே அறிவிருக்கா உனக்கு? இந்தாப் பாரு! சுவருல்லாம்... எண்ணெய்க் கசடு... உன் அம்மா புத்திதானே உனக்கும் இருக்கும். வேணுமுன்னா அவள் கூட போயேண்டி. ஏண்டி, அழுவுறாப்போல நிக்கறே?" என்று அதட்டினாள்.

ராமனை, அவள் கல்யாணம் செய்துகொள்ள மாட்டாள் என்ற உள்ளுணர்வு பார்வதியை, இதுவரை பேசாத வார்த்தைகளைப் பேச வைத்தன.

மல்லிகா திடுக்கிட்டாள். என்னதான் அம்மா என்றாலும், முகம் பார்த்துப் பேசியறியாத அந்த அன்னை வாழும் வீட்டுக்குள் அவளால் போகமுடியாது. அவளால் எப்படிப் போகமுடியும்? போனாலும், எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டை விட, அந்த ஜனங்களைவிட ராமன் தேவலையோ... ஒவ்வொருத்தர், அண்ணன் தங்கைன்னா உயிரை விடுறாங்க. சினிமாவுலகூட காட்டுறாங்க. நம்மால் அப்படி இருக்க முடியலியே... இந்த வீட்டையும் சிலசமயம் சொந்த வீடாய் நினைக்க முடியலியே. ஏன்... ஒருவேளை... நான் தனிப் பிறவியோ... இல்ல தனிப்படுத்தப்பட்ட பிறவியோ...

மல்லிகா, தன் வசப்பட்டு நின்றபோது. பார்வதி உணர்ச்சி வசப்பட்டாள்.

“ஏண்டி... பித்துப் பிடித்து நிக்கறே? உன் அம்மா... மருந்து தடவிட்டுப் போயிட்டாளோ? வேணுமுன்னா போயேண்டி. நான் வேணுமுன்னா... கொண்டுவிடட்டுமா?"

அந்த சின்னஞ்சிறிசுக்கு சுய உணர்வு வந்தது. அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாளோ? அந்த 'ஆளிடம்' பேச்சு வாங்க வேண்டியது வருமோ?

மல்லிகாவுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.

திடீரென்று பார்வதியைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவள் இவளை விலக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு. அவள் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு புரண்டு, "என்னை அங்கே அனுப்பிடாதிங்கம்மா... அனுப்பாதிங்க... அம்மா அம்மா" என்று அரற்றினாள். விம்மினாள்.

பார்வதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தாய்மைப் 'பேறு' அடையவில்லையானாலும், இப்போது அது பெயர் சொல்லும்படி, விழித்துக்கொண்டது. மல்லிகாவின் தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டே, "அழாதடி... நானிருக்கையில் ஏண்டி அழுவுறே? ராமன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்..." என்றாள்.

இப்போதும் மல்லிகா அழுதாள். 'என்னை ராமன்கிட்ட, அனுப்புறதை விட, 'அவங்க' வீட்டுக்கே அனுப்பிடுங்கம்மா' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, வெளியே மறுமொழி கூறாமல் தனக்குள்ளேயே அழுதாள்.


10

கல்லூரி மாணவ-மாணவிகள் அந்த அறையில் கூடிவிட்டார்கள்.

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அங்கே நடைபெறப் போகிறது.

சரவணன் பேச்சில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும். அதேசமயம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றும். எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம்விட்டுப் பேசுவது போன்ற பாணி. இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி-பரிசுக்காக பரபரப்படையாத இயல்புத்தன்மை. இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற்பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். ஆனாலும் அவன் பேசுவதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்துடனும், ஒருசில வண்ணப் பூச்சிகள் மேடையில் நாக்காடுவதைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர். நடுவர்களை அறிமுகம் செய்துவிட்டு. பெண்ணுரிமை என்ற தலைப்புதான் போட்டியின் தலைப்பு என்று சொன்ன பிறகும். அவர் மைக்கை விட மனமில்லாமல், பெண் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்துவிட்டு, உரிமைக்கு வந்தபோது, 'உட்காருய்யா சுக்குத் தண்ணி' என்றது ஒரு குரல். ஆசிரியர் குரலடங்கி உட்கார்ந்தார்.

போட்டிக்கு முதலாவதாகப் பேசவந்த பையன் ஒருவன், "பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால்" என்று பாரதியாரை மேற்கோள் காட்டியபோது, "ஆஹாஹா... ஆஹாஹா... அப்பனே பாரதி பேரா... அடச்சீ" என்றது இன்னொரு குரல். உடனே மாணவிகள் கூட்டத்தில் பலத்த சிரிப்பு. அந்த சிரிப்பு மேலும் பலக்க வேண்டும் என்பதற்காக பலதடவை "அடச் சீக்கள்." 'பட்டறிந்த' பேச்சாளன் பட்ட மரமானான்.

மூன்றாவதாக வந்த மாணவி "பெண்கள் என்றால்..." என்று தொடங்கவும், "அது நீ இல்லே, நீ.... இல்லே..." என்று. அந்தப்பெண்ணை டாய்த்தார்க்ள். அவளும் ஓய்ந்த பிறகு நடுவர் "மல்லிகா" என்றார்.

மல்லிகா எழுந்திருக்கவில்லை. கோர்ட்டில் அழைப்பதுபோல இரண்டாவது தடவையாக "மல்லிகா!" என்றபோது, கூட்டத்தின் கண்கள், அவளை மொய்த்தன.

மல்லிகா மரியாதையாக எழுந்து "நான் பேசப்போவதில்லை" என்று சைகை செய்தாள். அவளைக் கோட்டா செய்யப்போன மாணவர்கள், அவள் முகத்தில் படர்ந்திருந்த துயரத்தையும், கலைந்திருந்த முடியையும், கவிழ்ந்திருந்த தலையையும் பார்த்து, பரிதாபப்பட்டதுபோல் சும்மா இருந்தார்கள். ஒரே ஒரு ஆகாதவன் மட்டும், "சரவணனின் பியூட்டியே... அடிமே உன் லூட்டியே" என்று சொன்னபோது, "மக்குப் பையா.. கொக்குத் தலையா... மரியாதி போயிடும், சும்மா இருய்யா" என்றான் இன்னொரு பையன். அவனுக்கு மல்லிகா தன்னைக் காதலிப்பதாக ஒரு பிரமை. அப்படியே காதலிக்கவில்லை என்றாலும், இப்படிச் சொன்னதால், இனிமேலாவது காதலிப்பாள் என்கிற தன்னம்பிக்கை. காதல், பாதி நிறைவேறிவிட்டதில், அவனுக்கு ஒரு திருப்தி. அதாவது அவன் ரெடி

பல மாணவர்கள் கவர்ச்சியாகவும், கழுத்தையறுத்தும் பேசிய பிறகு, சரவணன் பேசினான். பொருளாதார உரிமை வந்தால்தான் பெண்ணுரிமை வருமென்றும், "பொருளா? தாரம்" என்ற நிலை இருக்கும் வரை பெண்ணுரிமை வெறும் மேடைப் பேச்சே என்றும், பன் செய்து அவன் பேசியபோது. பலத்த கைதட்டல் "தாய்மார்களே" என்று விழிக்கும் ஒவ்வொருவனும். பதினெட்டு வயதுப் பெண்ணைப் பார்க்கையில், "இந்த வயதில் என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பாள்" என்றும், எண்பது வயதுக் கிழவியைப் பார்க்கையில், "என் அம்மாவும் இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள்" என்று நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் காலந்தான் பெண்ணின் விடிவுகாலம். உரிமையைப் பற்றிப் பேசத் தேவையில்லாத அளவிற்கு ஏற்படும் பொற்காலம் என்று அவன் சாதாரணமாகப் பேசியபோது, கைதட்டிப் பாராட்டினார்கள்.

இந்தத் தடவையும் முதற்பரிசு சரவணனுக்கே. வழக்கமாக இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு பெறும் மல்லிகாவுக்குப் பதிலாக இன்னொருத்தி வாங்கினாள்.

மல்லிகா, சக தோழிகள் "ஏன் பேசவில்லை" என்று கேட்டால் எப்படிப் பதிலளிப்பது என்று புரியாமல், அந்த தர்ம சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழ் உதவிப் பேராசிரியர். நன்றி சொல்லிக் கொண்டிருந்தபோது, அவள் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள். ஆட்டோ ரிக்ஷாக்காரரை சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்லவேண்டும் என்று முந்திய இரவு நினைத்தவள். தான், ராமனுக்கு ஒருவேளை மனைவியாகலாம் என்ற அவலத்தில் அதை மறந்துவிட்டாள்.

மெள்ள நடந்து கொண்டிருந்தாள்.

"நீங்கள் ஏன்... இன்றைக்குப் பேசல..." என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

சரவணன்

சைக்கிளை மெதுவாக விட்டுக்கொண்டு, பெடலை லேசாக அழுத்திக்கொண்டு, அவளுக்கு இணையாக வந்தான். பிறகு, அவளுக்கு மதிப்புக் கொடுப்பவன்போல், சைக்கிளை விட்டு இறங்கினான்.

"சொல்லுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"

மல்லிகா. அவனை நிமிர்ந்து பார்த்தாள். மானசீகமாக அவனருகிலேயே அந்த ராமனையும் நிறுத்திப் பார்த்தாள் வேறுபக்கமாகத் திரும்பி, கண்ணீரை உதிர்த்துக் கொண்டாள். அவளுக்கு சரவணன்மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அழகில் சாதாரணமானவன்தான். ஆனால், பேச்சாற்றலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைத்து மனம்விட்டுப் பழகும் பாங்கும் அதேசமயம் அழுத்தமான சுயமரியாதையும். அவனுக்கு ஊன அழகு கொடுக்காத ஒரு ஞான அழகைக் கொடுத்திருந்தது. குறைந்தபட்சம், அப்படி இருப்பதாக பல பெண்கள் நினைத்தார்கள் மிதவாதியான மல்லிகா, இந்த நினைப்பைப் பொறுத்த அளவில் ஒரு தீவிரவாதி. தன்னை மீறிய, தன்னையே அறியாத ஒரு காதல் தீவிரவாதி.

"சொல்லுங்க... ப்ளீஸ்... எதற்காகப் பேசவில்லை? பசங்களோட கலாட்டாவுக்குப் பயந்துட்டீங்களா?"

மல்லிகா, பேசப் போனாள். அப்படி பேசப் போனால், அழுகை வந்திடும்போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள். பிறகு, தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள். அவனிடம் ஒராண்டு காலமாக சாதாரணமாகப் பேசிப் பழகுபவள். அந்த உரிமையில்தான், அவனும் கேட்டான். ஆகையால் இப்போதும் சாதாரணமாக ஆனால் உள்ளர்த்தத்துடன் பேசினாள்.

"பெண்கள். பொருளாதார விடுதலை இல்லாததாலே... கணவன்மார் செய்யும் கொடுமையை... சகிச்சிக்கிறதாச் சொன்னீங்க... உண்மைதான். அதேசமயம். கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும், பொருளாதாரப் பாதுகாப்புக்காக... ஏதோ ஒரு இனம்புரியாத பயத்தால், வேண்டப்படாத இடத்தைப் பிடிச்சுக்கிட்டே இருக்கலாம், இல்லையா?"

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நான் கேட்கிறது. பொருளாதார, சமூக நிர்ப்பந்தத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கும் ஏதாவது செயல்திட்டம் இருக்கா?"

"நீங்கள் பேசுவதைப் பார்த்தால். சொந்த அனுபவம் மாதிரி..."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொடுத்து வச்சவள். எல்லாப் பெண்களுக்கும் ஒரு அப்பா அம்மா, எனக்கு ரெண்டு அப்பா அம்மா என் பிரச்சினை கிடக்கட்டும். அது... வேண்டாம். விட்டுடுங்க். குறிப்பிட்ட ஒரு பழக்கவழக்கத்தில் ஆட்பட்ட பெண். அந்தப் பழக்கவழக்கமாக சமூகத் தட்டுலே இருந்து தாழ்ந்து போகாமல் இருக்க, அவளோட உரிமையை மட்டும் கேட்டால் போதாது. ஒரு பணக்கார இளைஞன் அவளைக் கல்யாணம் பண்றதினாலும் முடிந்து விடாது. இதுக்கு வேறே வழி இருக்கா?"

"கொஞ்சம் யோசிக்கிறேன். ஒரு நிமிடம்... கொடுங்க வந்து... ஒரு பெண். சமுதாயத் தட்டில் இருந்து கீழே இறங்கிடுவோமோன்னு பயப்படாமல் இருக்கணுமுன்னா. கீழ் தட்டுன்னு ஒண்ணு இருக்கப்படாது. அதாவது எல்லாம் பொருளாதார சமத்துவம் பெறணும். பெண்களோட வெறும் பிரச்சின்ன தனியானப் பிரச்சினை அல்ல். இதரப் பிரச்சினைகளோட ஒரளவுக்குச் சேர்ந்தது. அரிஜனப் பிரச்சினையைப் போல, அது ஒரு சமூகப் பிரச்சினை. சரி, ஒட்டலில் ஒரு காபி குடித்துக்கொண்டே பேசலாமே?"

மல்லிகா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பயந்துபோய் சிறிது விலகிக்கொண்டாள். சரவணன் புரிந்துகொண்டான்.

"நான் நீங்க நினைக்கிற இனத்தைச் சேர்ந்தவன் இல்லை. வரதட்சணைக் கொடுமைன்னு மனைவிகள அடிக்கிறாங்களே, அதைப் பேசலாமுன்னு எண்ணிக் கேட்டேன். உங்களிடம் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாளைக்கு கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற ஒரு பேச்சுப் போட்டிக்கு நீங்கள் பாயிண்ட்ஸ் கொடுத்தால், பரிசு வாங்கிடுவேன்."

"இங்கேயே நின்று பேசலாமே?"

"வரதட்சணைக் கொடுமையால பல பெண்களுக்குக் கல்யாணம் நடக்கலேன்னு மேடையில பேசறோம். கட்டுரையாய் எழுதறோம். கதையாய்ச் சொல்றோம். ஆனால் இந்தப் பெண்கள், பெரிய பெரிய ஆபீசருக்கு மனைவியாய்ப் போகிற ஆசை நிறைவேறாமல் போவதைத்தான் வரதட்சணைக் கொடுமைன்னு சொல்றாங்க. இவங்க ஏன் ஒரு பியூனைக் கல்யாணம் பண்ணப்படாது? ஏன் ஒரு ரிக்ஷா தொழிலாளியைக் கல்யாணம் பண்ணணுமுன்னு சொல்லவில்லை. பண்ண முடியாதுன்னும் தெரியும். ஏன் தெரியுமா?"

"சொல்லுங்க..."

"இந்த சமூக அமைப்பிலே. பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபிசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாச்சாரம் வேறே. பணக்காரன் கலாச்சாரம் வேறே. இவை போய். கலாச்சார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால்தான். வரதட்சணைப் பிரச்சினையும் தீரும் இல்லை என்றால், அது அன்பளிப்பு பிரச்சினையா மாறுவேடம் போடும்..."

"நான் வரட்டுமா?"

"போரடிக்கிறேனோ?"

"இல்ல. சில பிரச்சினைகள். சில விஷயங்கள் புரியப் புரிய பயமாய் இருக்கு."

"என்னால உதவி பண்ண முடியுமா?"

"பொருளாதார சுதந்திரம் இல்லாத உங்களாலே, எனக்கு சுதந்திரம் வராது. அதுக்காக உங்கள் மூலம் வரக்கூடாதுன்னு நினைக்கவில்லை. சொல்லப்போனால் வரணுமுன்னு நினைக்கிறேன்!"

சற்று நேரத்திற்கு முன்பு, ஓட்டலில் சும்மா காபி குடிக்கக் கூப்பிட்டபோது முகத்தைச் சுழித்து, கழுத்தை கேள்விக்குறி போல் வளைத்த இந்தப் பெண், ஏன் நாணத்துடன் தலைகவிழ்கிறாள் என்பது புரிய, அவன் மலைத்தும், மகிழ்ந்தும் நின்றபோது, மல்லிகா மெல்ல நடந்தாள். சரவணன் சிறிதுநேரம் நின்றான். பிறகு சைக்கிளை வேகமாக உருட்டிக்கொண்டு, அவளருகே போய், "நான் ஒட்டலுக்குக் கூப்பிட்டதை தயவுசெய்து தப்பா நினைக்காதம்மா. எத்தனையோ பெண்கள் 'போகலாமா காபிக்கு' என்று சொல்வதை பொழுதுபோக்கா வைத்திருக்கிறாங்க. ஆனால் நீங்க அப்படிப்பட்ட இனம் இல்லை. உங்களைப் பார்த்தாலும் தப்பாக் கூப்பிடத் தோணாது." என்றான்.

"பொழுதுபோக்கும் பெண்களைப் பற்றி நல்லாத்தான் தெரிந்து வச்சிருக்கீங்க. சொந்த அனுபவமா?"

"உண்டு. பிறர் சொல்வதைக் கேட்ட அனுபவமும் உண்டு. உன்கிட்ட பேசிட்டேனா... இனிமேல் நாலு நாளைக்கு எந்தப் பெண் கூடேயும் காபி குடிக்கப் போகமாட்டேன். போகத் தோணாது. செக்ஸ் கிளாமரை, ஒரு குடும்பப் பெண்ணாலதான் விரட்ட முடியும், நான் வரேன்."

சரவணன் சைக்கிளை சுற்றி வளைத்துக்கொண்டு அவளுக்கு எதிர்த் திசையில் உருட்டினான். "கடவுளே. இவரு, நாலு நாளைக்கு மட்டுமல்ல. எப்போதும் காபி குடிக்க, 'நாலு பேரோடுதான் போகணும். ஜதையாய் போகப்படாது' என்று மனதுக்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டு மல்லிகா நடந்தாள். இனிமேல் திரும்பி வந்தாலும் வருவாரோ சூதுவாது இல்லாதவர்... வந்தாலும் வருவார். அய்யோ, அப்படி வந்தால், நாலுபேர் தப்பா நினைப்பாங்களே?

சரவணன் 'வரக்கூடாது' என்று வெளிமணம் ஒப்புக்குச் சொல்ல, இன்னும் ஒரு தடவை வரப்படாதா? சைக்கிள்தான் இருக்கே என்று உள்மனம், அவளை மீறித் துடிக்கும்படி நடந்து கொண்டிருந்த அவளை, பலதடவை பின்னால் திரும்ப வைத்தது. பிறகு அவள் மடமடவென்று நடக்கத் துவங்கினாள். சரவணனுடன் பலதடவை பேசியிருக்கிறாள். ஆனால் இன்று அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுப்பொருள் இருப்பதுபோல் இருந்தது. எட்டாவது வகுப்பில் படித்த அதே குறளை, கல்லூரியில் வேறு கோணத்தில் படிப்பது மாதிரி.


11

திடீரென்று தன்னருகே ஒரு சைக்கிள் நடனமிட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து அவள் மகிழ்ச்சியோடும் நாணத்தோடும் ஏறிட்டுப் பார்த்தால் -

ராமன் பிரேக் இல்லாத ஒரு சைக்கிளில், சவாரி வந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்பவன். ஏதாவது அவசியத்தால் பேச வேண்டியது ஏற்பட்டால் "பாப்பா... மச்சானுக்கு காபி வேணுமாம்" என்று ஒதுங்கி நின்றே கேட்பவன். ஆனால் இன்று...

மல்லிகா, வேக வேகமாக நடந்தபோது, அவனும் சைக்கிளை வேக வேகமாய் மிதித்துக்கொண்டு "சைக்கிள்லே ஏறிக்கமே. அந்த ரிக்ஷா கஸ்மாலம் எங்க பூட்டான்" என்றான்.

மல்லிகா அவனைக் கோபத்தோடு பார்த்தாள்.

"நான் என்ன எருமை மாடா 'மே'ங்றீக?"

"கோவிச்சுக்காதமே. அக்காள். ஒன்ன கையோட ஏத்திக்கினு வரச்சொல்லிச்சு."

"எனக்கு நடக்கத் தெரியும்."

ஒரு கஸ்மாலம் உன்கிட்ட பேசுனானே, அவன் யாரு?"

"கஸ்மாலம் கண்ணுக்கு எல்லாம் கஸ்மாலமாத்தான் தெரியும். அவரு... என்னோட நண்பர்..."

"அக்காவண்ட சொல்லட்டுமா?"

"சொல்லேன். சரி... வழியை விடுங்க..."

ராமன் எதிர்த்திசையில் சைக்கிளை உருட்டினான். ஒருவேளை. சரவணனை வழிமறித்துத் தாக்கப் போகிறானோ என்று மல்லிகா நினைத்தாள். பின்னாலேயே ஓடலாமா என்றுகூட எண்ணினாள். அவரை 'அடிக்காதே... அடிக்காதே' என்று கத்துவதுபோல் முகத்தைக் கொண்டு போனாள். தலைதெறிக்க சைச்கிளை மிதித்த ராமனையும் தொலைவில் போய்க் கொண்டிருந்த சரவணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

மல்லிகா வீட்டுள் நுழைந்தபோது. பார்வதியின் அண்ணன்மார்கள் இருவர் மச்சானோடு ஊஞ்சல் பலகையிலும், ஒருவர் சாய்வு நாற்காலியிலும் அமர்ந்திருந்தார்கள். ராமன் ஒரு ஓரமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. சரவணனை இவ்வளவு சீக்கிரம் ராமன் அடித்திருக்க முடியாது...

மகளைப் பார்த்ததும், சொக்கலிங்கம் பதைத்துப் போனார். "ஆட்டோ ரிக்ஷாவை வரச்சொல்லி போன் பண்ணினால், என்னம்மா? இப்படியா. வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வாரது?"

பார்வதியின் வாய் பல்லாக மாறியது.

"நான் ராமனை சைக்கிளில் அனுப்பி வச்சேன். இவள் பின்னால ஏறிக்க மாட்டேன்னு சொல்லி விட்டாளாம்."

ஊஞ்சல் பலகையில் இருந்த பெரிய மைத்துனர் ராமசாமி, இடிஇடியென சிரித்துக்கொண்டே பேசினார்.

'நீ என்ன பார்வதி... கல்யாணம் ஆகும் முன்னால், கட்டிக்கப் போறவனாய் இருந்தாலும் சைக்கிள்லே ஏறலாமா? மல்லிகா அப்படிப்பட்டவளாய் இருந்தால், உன் மகளை அவனுக்குக் கேட்பேனா? கல்யாணம் ஆகட்டும்... அப்புறம் பாரு அவள் ராமன் சைக்கிள்ல. பின்னால உட்கார மாட்டாள். முன்னால்தான் உட்காருவாள். இல்லியா மல்லிகா?"

'இல்லை. இல்லவே இல்லை என்று கத்தவேண்டும் போலிருந்தது மல்லிகாவுக்கு. ஆனால் அப்படிக் கத்தவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு. அப்பாவையும் இறங்கப் பார்த்துவிட்டு, தனது அறைக்குள் போனாள். தலை திடீரென்று கணத்தது. "நாளைக்கே வெத்திலைப் பாக்கு மாத்திடலாம்" என்று வெளியே கேட்ட பார்வதியின் சத்தம், அவளுக்குத் தன் தலையே வெடித்து. அப்படி ஒரு சத்தத்தை எழுப்புவதுபோல் தோன்றியது.

பேசாமல், அந்த ஆளோட வீட்டுக்குப் போயிடலாமா? அம்மாவோட 'நாத்தனார்', நல்லவங்கதானே. சீ... அங்கே... அந்த குண்டு குழி விழுந்த வீட்டுக்குள்ள. எப்படி இருக்க முடியும்? அப்பாவை விட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருக்க முடியும்? அதோட அந்த ஆளு வேற குடுச்சிட்டு திட்டுவாரு. அதுக்காக இந்த நொள்ள ராமனை கட்டிக்க முடியுமா? இப்படியெல்லாம் எண்ணினாள். மல்லிகா, வெறித்த கண்களுடன், கடித்த உதடுகளுடன் அவள் கலங்கினாள்.

கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எந்த மேளத்தை அமர்த்த வேண்டும், யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வெளியே பலமாக விவாதங்கள் எழுந்தன.

மல்லிகா குப்புறப் படுத்தாள். அவள் மனத்திரையில் சரவணன் வந்தான். வந்த வேகத்திலேயே போய் விட்டான். ஆனால் கிழிந்த புடவையும், மஞ்சள் கயிற்றுக் கழுத்தும், தனித்தனியாக வந்து பின்பு மருண்ட பார்வையோடு, மிரண்ட முகத்தோடு, கூனிக்குறுகிய தோற்றத்தோடு, ஒரு உருவம் வந்தது. அது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது. அவள் செல்லம்மா... மல்லிகாவின் நிஜமான அம்மா. அவளால் இதுவரை ஒதுக்கப்பட்ட அவளைப் பெற்ற பாவி!


12

செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. "கடைசியில் ராமனுக்குத்தான் கட்டப் போகிறார்களா? இதுக்கா பெத்தேன்? அவரு, 'தத்து கொடுக்காதே கொடுக்காதே'ன்னு சொன்னாரே, நான் பாவி, தூரத்தில் நின்னாவது, மகள் உயரத்துல இருக்கறதை தலைநிமிர்ந்து பார்க்கலாமுன்னு நினைச்சேன். இப்போ பள்ளத்தில் விழப்போறவளை, நான்தானே தலைகுனிந்து பார்க்கணும் போலிருக்கு, அட கடவுளே. இங்கே கூட்டி வந்துடலாமா? எப்படி முடியும்? ராணி மாதிரி இருக்கிற அவளால், இந்த தேனீக் கூட்டில் இருக்க முடியுமா? இருக்கத்தான் சொல்லலாமா?"

செல்லம்மா, முழங்கால்களுக்குள் தலையை வைத்து. முட்டிக்கொண்டும். மனதுக்குள் மோதிக்கொண்டும் இருந்தபோது, அவளுடைய கடைசி மகள் முறைவாசல் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு குடித்தனமும்தத்தமக்குள்ளே முறை வைத்துக்கொண்டு, சதுரமாக அமைந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். பொதுஇடமான களத்தைப் பெருக்க வேண்டும். இதற்கு முறைவாசல் என்ற பரிபாஷை இன்னொரு மகன் சரியாய் எட்டு மணிக்கு. ராஜாதி ராஜ கம்பீரத்துடன், தோழி சகிதமாய் வரும் வீட்டுக்கார அம்மாவுக்கு குழாயை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவசரமாகத் தண்ணீர் பிடித்தான். ஒரு பையன் தெருவில் நின்ற ஒரு டிராக் வண்டியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

செல்லம்மாளின். பித்துப் பிடித்த தலைக்குள்ளும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

கணவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த கல்யாணத்தைத் தடுத்து ஆகவேண்டும். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெருமாள் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார். கோணி வியாபாரம் செய்பவர். கோணிக்கடையில் கோணிகளை லைட்டீஸ் கோணி, உப்புக் கோணி, அஸ்கா கோணி என்று பிரிவுபடுத்தி, பிரிவுப்படியான பணத்தை ஒன்றுபடுத்தி பத்து ரூபாய் லாபத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் வராததுமாக, செல்லம்மா, அவரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நேரமோ ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாதியில் நிச்சயத் தாம்பூலம் ஆகிவிட்டால் பாதிக் கல்யாணம் முடிந்தது மாதிரி. வேறு எவனும் கல்யாணம் செய்ய முன்வர மாட்டான்.

கணவன், தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு, தன்னை அடித்தாலும் அடிக்கலாம் என்று நினைத்து, அப்படி அடித்தால் முகத்திலோ தலையிலோ படக்கூடாது என்று எண்ணியவள்போல், செல்லம்மா, ஒருபுறமாக தோளைக் காட்டிக்கொண்டு, ஜாக்கிரதையான இடைவெளி கொடுத்துப் பேசினாள். கணவனுக்கு இதுவரை விஷயம் தெரியாது.

"உங்கள் மகள் மல்லிகாவை கூட்டி வாறீங்களா?"

"அவளை என் மகள்னு சொல்லாதடி இங்க வந்தவுடனேயே வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்றவள். என் மகளாய் இருக்க மாட்டாள்."

"நீங்க அப்படிச் சொல்றதுனால்தான். நாம் பெத்த பொண்ணு சீரழிறாள்."

"என்ன சொல்றே?"

"பார்வதியோட அக்காள் மகன் ராமனுக்கு அவளை கொடுக்கிறதுன்னு நிச்சயம் பண்ணிட்டாங்களாம்"

"என்ன... இன்னொரு தடவை சொல்லு"

செல்லம்மா, இன்னொரு தடவை சொல்லிவிட்டு, விஷயத்தை ஆதியோடு அந்தமாக விளக்கிவிட்டு. நாத்தனார்க்காரியிடம் போய் தான் மன்றாடியதையும். அவள் தன்னை உதாசீனப் படுத்தியதையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டு. "செத்தாலும், வாழ்ந்தாலும் நம்மோடயே அவள் சாகட்டும். போய் மகளைக் கூட்டிக்கொண்டு வாங்க" என்றாள்.

செல்லம்மா எதிர்பார்த்ததுபோல். பெருமாள் கோபப்படவில்லை. அடிக்க வரவில்லை. பித்துப் பிடித்தவர்போல் அப்படியே தலையில் கை வைத்தபடி 'குத்துக்கால்' போட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார்.

'என்னை, பாசத்தோடு பார்க்காதவள் படட்டும்' என்று பழிவாங்கும் நெஞ்சத்தோடு கணவன் மதர்ப்பாக உட்கார்ந்திருக்கிறாரோ என்றுகூட செல்லம்மா நினைத்தாள். "உடனே நீங்கள் போய் கூட்டி வாறீங்களா... நான் போகட்டுமா? எல்லாம் என் தலைவிதி. நீங்க சொன்னதை நான் அப்பவே கேட்டிருந்தால், இப்படி வந்திருக்காது" என்று முனங்கினாள்.

அப்போது, செல்லம்மா எதிர்பாராத ஒன்று நடந்தது. பெருமாளின் கண்களில் நீர் முட்டியது.

"என்னங்க இப்படி?" என்று செல்லம்மா அவர் கையைப் பிடித்ததும், அவரால் தாள முடியவில்லை. கேவிக் கேவி அழுதார். மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து, "என் பெண்ணுக்கா இந்த கதி. என் பெண்ணுக்கா" என்று அவர் புலம்பிய சத்தம் கேட்டு, குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்துவதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதும் 'வீட்டுக்கார அம்மா'கூட மேல்மாடி பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் அங்கே, "அப்பா. அப்பா" என்று சொல்லிக்கொண்டே கூடினார்கள். இதுவரை அழவைத்த அப்பா. இப்போது அழுவதைப் பார்த்ததும். ஏதோ பயங்கரமான ஒன்று நடந்திருக்கும் என்பதைப் பாவித்துக் கொண்ட பிள்ளைகள். ஆளுக்கொரு பக்கமாகப் புலம்பினார்கள். அதைரியப்பட்ட செல்லம்மாவே இப்போது, அவருக்கு தைரியம் சொன்னாள்.

"என்னங்க சின்னப் பிள்ளை மாதிரி. நம்ம பொண்ணு நம்மகிட்ட வாரதுக்கு சந்தோசப்படுறதை விட்டுப்புட்டு..."

பெருமாள், அவள் குரலை மேலும் பலமாக அழுது தடுத்தார். பின்னர் கேவிக்கொண்டே "நீயும் புரிஞ்சிக்காம இருக்கியேடி விதம் ஒரு புடவை கட்டி, தினம் ஒருவகை சாப்பாடு சாப்பிட்டு வாழ்ற என் ராஜகுமாரியால. இந்த வீட்டுக்குள்ள எப்படி இருக்க முடியும்? அய்யோ, அவள் இங்கே வந்து கஷ்டப்படுவதை இந்தக் கண்ணால பார்க்கிறதவிட நான் செத்துப் போகலாம்டி" என்று சொல்லிக்கொண்டே, அவர் அழுகையை நிறுத்தியபோது, அத்தனைக் குடித்தனக் காரர்களும் வாயடைத்துப் போனார்கள். வீட்டுக்குள் அடிதடி நடத்தினாலும் வெளியே வருவது போவது தெரியாமல் சாதுவாக இருக்கும் பெருமாளின் அழுகை, எல்லோரையுமே ஒரு குலுக்குக் குலுக்கியது. ஒரு எழுபது வயது ஆயாதான், நிதானமாகப் பேசினாள்.

"இன்னா பெருமாளு அய்யோ இப்படியா அழுவுறது? உன் வீட்டுக்காளி செல்லம்மாக் கூடத்தான் ராசாத்தி மாதிரி வாழ்ந்தாள். இப்போ இருக்கறத சரிக்கட்டி பூறாளே... அதான் வாழ்க்கப்பா. உன்னோட மவளும் சரிப்பண்ணுவா, சீக்கிரமா போய் பொண்ணை கூட்டிவா நாய்னா மனுஷனுக்கு மானந்தான் முக்கியம் நாய்னா, இஷ்டப்படி வசதி இருந்தாலும் இஷ்டப்படி வாழ முடியாதுன்னா, அது வாழ்வா நாய்னா? தூ! கூழ் குடிச்சாலும், சொந்தக் கூழக் குடிக்கோணும். சீக்கிரமா போய் கூட்டி வா நாய்னா... அய்யே... எய்ந்திரு... எய்ந்திரு..."

பெருமாளுக்கு மூளை வேலைசெய்யத் துவங்கியது. பெண்ணைப் போல் பெண்கள் மத்தியில் அழுததற்காக சற்று வெட்கப்பட்டு, விரக்தியாகச் சிரித்துக்கொண்டார். எழுந்து, துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். "இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த உன் அண்ணனை, என்ன பண்ணினாலும் தகும்டி" என்று மனைவியிடம் மீண்டும் பழைய முகத்தைக் காட்டிக்கொண்டு, ஆவேசமாகப் புறப்பட்டார்.

"கடவுளே! என் அண்ணனை இவரு ஏதாவது பண்ணிடப் படாதே"ன்னு செல்லம்மாள் கைகளை நெறித்துக் கொண்டாள்.


13

விடிய விடியத் தூங்காமல், கொட்டக் கொட்ட விழித்ததால் மல்லிகாவின் கண்கள் கரித்தன. லேசாகத் தலைசுற்றியது. ஒன்பது மணிவரை பித்துப் பிடித்தவள்போல் உட்கார்ந்திருந்தாள். அன்று கல்லூரி விடுமுறை ஆகையால் அப்பா கண்டுக்கவில்லை. அம்மா. மணப்பெண்ணை திட்ட விரும்பவில்லை.

மல்லிகா, குளியலறைக்குப் போய் ஷவரை திறந்துவிட்டாள் சாரல் மழைபோல், கம்பி மத்தாப்புபோல் விழுந்த நீர்க் கற்றைகள் முடிக் கற்றையோடு மோதி. முதுகு வழியாக இறங்கியபோது அவளுக்கு ஓரளவு இதமாக இருந்தது. அதேசமயம் ராமன், சரவணன் இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் மாறி மாறி வந்து போனார்கள். தெருப் பொறுக்கியாக வாழும் ராமனை அவளால் கட்டிக்க முடியாது. அப்படி கட்டாமல் அந்த வீட்டில் அவளால் இருக்கவும் முடியாது. இருந்தாலும், முகமறியாப் பருவத்திலேயே பார்த்துப் பழகிய, இந்த அப்பாவையும் அம்மாவையும் விட்டுவிட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது.

மல்லிகா சிந்தித்து சிந்தித்து சிந்தனையே இல்லாமல் போனாள். இந்த ராமன் இல்லாமலே இந்த அம்மாவுடனும் இந்த அப்பாவுடனும் வாழணும். எப்படி? எப்படி?

அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கும் வந்துவிட்டாள். ராமனைக் கட்டிக்க முடியாது என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லவேண்டும்.

குளித்துவிட்டு, பீரோவில் இருந்த புதுப்புடவையைக் கட்டாமல் உடுத்திய புடவையையே கட்டிக்கொண்டு சமையல் அறைக்குள் நின்ற பார்வதியின் பக்கம் வந்தாள். "அம்மா’ என்றாள் குழைந்தும் இழைந்தும்.

பார்வதி. அவளை வினா நெற்றியோடு பார்த்தபோது, மல்லிகா தயங்கித் தயங்கி, தத்திக் கொண்டே பேசினாள்:

எனக்கு ராமன் வேண்டாம்மா... வேண்டாம்மா..."

மல்லிகாவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அம்மாவின் மார்பில் தலை வைக்கப் போனாள். அதற்குள் அவள் முகம் போன போக்கிற்கும். சிவந்த கண்களுக்கும் பயந்துபோய் சுவரில் முகம் புதைத்து அழுதாள்.

நடித்துப் பழகிய பெரிய அண்ணனின் சகவாச தோசத்தால், மல்லிகாவின் அழுகையையும் ஒரு நடிப்பாகக் கருதி ஒரு நடிப்புக்காகக்கூட ஆறுதலாகப் பேசாமல், பார்வதி பொறிந்தாள்.

"நீ எதுக்கு அழுவுறேன்னு எனக்குத் தெரியும். எவனோ ஒரு கஸ்மாலத்துக்கிட்ட இது ராமன் கடன் கொடுத்த வார்த்தை ரோட்டுல தளுக்கிப் பேசிக்கிட்டு நின்னதை, ராமன் சொன்னான். ரோட்டுல காதல்... வீட்டுல... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறது மாதிரி நடிக்கிறியாக்கும். எல்லாம் அவரு கொடுத்த இளக்காரம்."

மல்லிகாவிற்கும், லேசாகக் கோபம் வந்தது.

"எதுக்கும்மா வீண் பேச்சு? ராமனை என்னால் கட்டிக்க முடியாது அவ்வளவுதான்."

"எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு வந்திட்டியா? எதிர்த்தாப் பேசுறே? இந்த வீட்டுல இருக்கணுமுன்னா ராமனைக் கட்டியாகணும். இல்லைன்னா. மரியாதையாய் உன் அப்பன் வீட்டைப் பார்த்துப் போ..."

மல்லிகா பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் நின்றாள். அதேசமயம் அப்பாவிடம் வாதாடி, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடும் இருந்தாள். எது நடந்தாலும் அம்மாவை விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது. அப்பாவைப் பார்க்காமல் இருக்கவும் முடியாது. அதோடு அவளால் அந்த ஆள் வீட்டிற்குப் போய் இருக்கவும் முடியாது.

பார்வதி பேசினால் பேசிக்கொண்டே போகிறவள். அதுவும் 'எதிரி' பேச்சை நிறுத்திவிட்டால், எகிறிப் பேசக் கூடியவள், பேசினாள்.

"வாயைத் திறந்து சொல்லுடி. ராமனைக் கட்டிக்க முடியுமா? முடியாதா? ஏண்டி பேச மாட்டேங்கிறே? நீதான் சரியான கள்ளியாச்சே... உன் அம்மாவுக்கு இருக்கிற திமிரு உனக்கில்லாம போகுமா? போகுமான்னேன்? சரியான நரிக்குறத்தியாச்சே உன் அம்மா."

மல்லிகாவால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"உன் நாத்தனாரை அப்படிப் பேசாதேம்மா."

"இன்னுமாடி எதிர்த்துப் பேசறே? உன் அம்மாவைப் பேசினால் ரோஷம் வருதோ? அந்த மேனா மினுக்கியைப் பேசினால், கோபம் வருதோ? எச்சி இலைக்காரிக்குப் பிறந்தவளுக்கு எச்சிக்கலை புத்திதானே இருக்கும்?"

மல்லிகா கண்களை உருட்டிக்கொண்டே பார்வதியைப் பார்த்தாள். ஏதோ ஒரு உண்மை அவளுக்குத் தட்டுப்பட்டது. இவள் அம்மா இல்லை. ஆயிரம்தான் எடுத்து வளர்த்திருந்தாலும். இவள் அம்மாவாக மாட்டாள்... அம்மாவாக மாட்டாள்.

"என்னையாடி மொறைக்கிறே? உன் அம்மா புத்தி போகுமா?"

"எங்க அம்மாவை அப்படிப் பேசாதீங்க. அத்தை."

பார்வதி உச்சி முதல் உள்ளங்கால்வரை அதிர்ந்து போனாள். இதுவரை அவள் கேட்டறியாத வார்த்தை. இதுவரை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தும் சொல்ல மறுத்த வார்த்தை ஒரே வார்த்தையில் எத்தனை விஷயங்களைக் கொட்டிவிட்டாள்? அவளுக்கே தன்னை அவள். அம்மா என்று சொல்லாமல் போனதில் ஒரு ஆத்திரம் வளர்த்த பாசம் குலுக்கிய ஆத்திரம் அந்த ஆத்திரத்தை அவள் வார்த்தைகளாக்க நினைத்தபோது அருகாமையிலேயே ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது

"மல்லிகா... சைக்கிள் ரிக்ஷா கொண்டு வந்திருக்கேன். வாம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்."

பெருமாள். மீசை துடிக்க நின்றார்.

மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. 'அந்த ஆளைப்' பார்த்தாள். அவர், தன் கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டாள். அவர் கைகால்கள் தாமாக ஆடுவதை அவள் உணர்ந்தாள். எதோ ஒரு உணர்வு உந்த, மெள்ள மிக மெள்ள, அவரை நோக்கி நடந்தாள். மெள்ள நடந்த மகளை, அவர் வேகமாகப் போய் அணைத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தைபோல் கேவிக்கேவி அழுதார். பிறகு தன் அழுக்காடை பட்டு. மகளின் மேனி மாசுபடக் கூடாது என்று நினைத்தவர்போல் சற்றே விலகிக் கொண்டு, அவள் இரு கரங்களை மட்டும் பற்றிக்கொண்டு. "வாம்மா போகலாம். உனக்கு எந்தக் குறை வச்சாலும், இந்தப் பாவி. அன்பில் மட்டும் குறை வைக்க மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவர் நடக்க, மல்லிகா, அம்மாவை மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே நடந்தாள். அவள் மடியில் புரண்டு அழவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது. தன்னை வளர்த்தவளைக் கட்டிப்பிடித்துக் கதறவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. என்றாலும் தந்தையின் பின்னால் நடந்தாள். ஒரு கையில் போட்டிருந்த தங்க வளையலையும், கழுத்தில் தொங்கிய செயினையும் கழற்றி, ஊஞ்சல் பலகையில் போட்டுவிட்டு நடந்தாள். ராமனுக்காக நடந்தாள். சரவணனுக்காக நடந்தாள். வளர்த்த அப்பா வரட்டும் என்று காத்திருக்கும் உணர்வில்லாமலே நடந்தாள்.

இதற்குள், வெளியே இருந்து வந்த ராமனுக்கு, முதலில் விஷயம் புரியவில்லை. பேயடித்தவள் போல் நின்று கொண்டிருந்த சித்தியையும், கலங்கியபடியே போகும் மல்லிகாவையும் பார்த்ததும், அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. பெருமாளை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஆசாமியை அடித்து விடலாம்.

"யோவ்... இன்னதான்யா உன் மனசிலே நெனைப்பு? இது உன் பெண்ணாவே இருக்கட்டும். அதுக்கினு ஒரு 'கொல்கை' இல்லையா? சின்ன நய்னா இல்லாத சமயத்துல. வூட்டுக்குள்ள பூந்து, கலாட்டா பண்ணிட்டு ஒரு பொண்ண கடத்திக்கினு போனால், இன்னாய்யா அர்த்தம்? யோவ். அவள விடுறியா இல்ல செமத்தையா வாணுமா?"

பெருமாள். சற்று நின்று அவனை முறைத்தார். மல்லிகா, அப்பாவின் முதுகுப் பக்கம் பதுங்கிக் கொண்டாள். அவனை கால்கள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து. தலைகீழாகத் தூக்கி, நெற்கதிரை அடிப்பது போல் அடிக்கலாமா என்றுகூட நினைத்தார். இருந்தாலும், மகள் கணக்கில் தானும் ஒரு ரவுடி என்பது தெரியக்கூடாது என்பதுபோல். "உனது வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்யா..." என்று கத்திவிட்டு. அப்படி படித்த மகளுக்கு எதிராகக் கத்தியிருக்கக் கூடாது என்பதுபோல், லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே நடந்தார்.

ராமனுக்கு அவர் 'வீக்'காக பதில் கொடுத்தது. பலத்தைக் கொடுத்தது. "யோவ், கஸ்மாலம், மல்லிகாவை விடுறியா, இல்ல வயித்தக் கீறட்டுமா?" என்று சொல்லிக்கொண்டு அவரை நெருங்கியபோது, வெளியே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரர் உள்ளே வந்தார். பெருமாள் கூட்டிவந்தவர்.

அவரும் மேனியெங்கும் 'பச்சை'க்காரர். ராமனை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே “ஏண்டா... சோமாறி.. சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்தியாசம் வாண்டாம்? அவரோட பொண்ணை அவரு கூட்டிக்கினு போனா, உனக்கென்னடா, கயிதே. இன்னொரு வாட்டி அவரைத் திட்டு பார்க்கலாம். மவனே, நெஞ்சில கீறி, மஞ்சாச் சோத்தை வெளில புட்டுப் பூட்றேன்" என்று கர்ச்சித்தபோது, "படா கில்லாடிங்கதாய்யா. பிளான்ல வந்திருக்கிங்கோ" என்று கூறிவிட்டு, ராமன் 'சைட்' வாங்கியபோது பெருமாளும், மல்லிகாவும். ரிக்ஷாவிற்கு அருகே வந்து விட்டார்கள். "ஏறும்மா" என்றார் அவர்.

மல்லிகா வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். உள்ளே ஊடுருவிப் பார்த்தாள். வாசல் படிக்கட்டில் பார்வதி, திக் பிரமையுடன். பின்தலையில் இரண்டு கைகளையும். பின்னி, விழி ஆடாமல், வெறித்த பார்வை மாறாமல், பைத்தியக்காரிபோல் நின்றதைப் பார்த்த மல்லிகாவால் தாள முடியவில்லை. "அம்மா, அம்மா" என்று கேவிக்கொண்டே அழுதாள். அந்த அழுகையைப் பார்த்ததும், பார்வதியும், நெருங்கி வந்து நின்றுகொண்டு அவளைப் பார்த்தாள். 'வந்திடும்மா. வந்திடும்மா' என்று இதயம் வாய்க்கு ஆணையிட, மூளை அதற்குத் தாளிட்டது. ஆனால் கண்கள் மட்டும் யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட விரும்பாதது போல், நீரைக் கொட்டின.

எப்படி இருந்த மகள். எப்படியெல்லாம் இருக்கப் போகிறாளோ என்று கடந்த காலமும் எதிர்காலமும் நிதர்சனமான நிகழ்காலத்தில் சந்திக்க, பெருமாள், மகளை கைத்தாங்கலாக ரிக்ஷாவில் அமர்த்திவிட்டு, "நீ ஏம்மா அழுவுறே? உன்னை இந்த கதிக்கு விட்டவங்களை நான் சும்மா விடப் போறதில்லை. மளிகைக்கடையும் அரிசி மாவு மில்லும் உன் பேர்லதான் இருக்கு! வழக்குப் போட்டு வாங்குறேனா இல்லியான்னு பாரு" என்று சபதம் போட்டுவிட்டு, ரிக்ஷாவில் ஏறினார். ரிக்ஷாக்காரர் பெடலை மிதிக்கப் போனார்.

மல்லிகா, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "நீங்கள் அப்பா மேல வழக்குப் போடுறதா இருந்தால், நான் உங்களோட வரமாட்டேன் வரமாட்டேன்" என்று குழந்தைபோல் விம்மினாள்.

பெருமாள், தான் பெற்ற மகளை பெருமிதத்தோடும் பாசத்தோடும் பார்த்துவிட்டு, அவள் முதுகில் தட்டினார். பிறகு "பிச்சைக்காரப் பயலுவ காசு, நமக்கெதுக்கும்மா" என்று சொன்னார். அதற்கு அவள், "அப்பாவை அப்படியெல்லாம் திட்டப்படாது" என்று கலங்கியவாறே சொன்னபோது, பெருமாள் குழந்தையானார். குலுங்கி அழுதார்.

"இன்னாய்யா... நீ குயந்த மாதிரி, அழலாமா? சரியான ஆளய்யா" என்று சொல்லிக்கொண்டே, ரிக்ஷாக்காரரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ரிக்ஷா நகர்ந்தது. பதினாறு ஆண்டு காலமாக அவள் பார்த்து உணர்ந்து உய்த்த இடத்தைவிட்டு நகர்ந்தது. ரிக்ஷா சக்கரங்கள் சுழலச் சுழல, பார்வதியின் தலையும் அதேவேகத்தில் சுழன்றது.


14

கணவன், அண்ணனை எதுவும் செய்துவிடப் போகிறாரோ என்று கண்கலங்க, வாசல் திண்ணையைப் பிடித்துக்கொண்டு நின்ற செல்லம்மாவுக்கு, மனம் மரண அவஸ்தைப் பட்டாலும், லேசான ஆறுதல். அண்ணனைச் சுற்றி எப்போதும் ஆள் இருக்கும். இவரால் அடிக்க முடியாது. அதோடு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் இவரும், அண்ணனைக் கண்டதுமே, பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறவர். ஒருவேளை, இவர் கலாட்டா செய்து, இவரையே, அண்ணன் போலீசில் பிடித்துக் கொடுத்து... இருக்காது... இருக்காது... என் அண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அடிப்பதற்கு முதுகைக் காட்டினாலும் காட்டுவாரே தவிர, முதுகில் குத்த மாட்டார். ஒருவேளை, அண்ணன் இல்லாமல். வேறு யாராவது இருந்து... அட கடவுளே...

தவித்துக் கொண்டிருந்த செல்லம்மாவுக்கு முதலில் எதிரே வந்து கொண்டிருந்த ரிக்ஷா மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பிறகு அதிலிருந்த உருவங்களைப் பார்க்கப் பார்க்க ரிக்ஷா மறைந்து, பெருமாளும். மல்லிகாவும் மட்டுமே தெரிந்தார்கள். பின்னர் மல்லிகா மட்டுமே அவள் கண்களில் நிறைந்தாள்.

ரிக்க்ஷா வந்து நின்றவுடனேயே, செல்லம்மாவின் கண்களில் நீர் கீழே விழுந்தது. மல்லிகாவை, முதுகோடு சேர்த்து அணைத்து. தன் கைகளாலேயே இறக்கிவிட்டு, பின்னர் அவளை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு "என் ராசாத்தி... என் ராசாத்தி... வந்துட்டியாம்மா..." என்று கதறினாள்.

சத்தங்கேட்டு, அவளின் பையன்களும், பெண்களும் வந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருக்கும் அவள் மூத்த மகள் சந்திரா, தங்கையின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஏழைகள், தங்களுக்கு இஷ்டப்பட்டவர் வேதனையில் வேகும்போது, தங்களால் செய்யக்கூடிய ஒன்று, அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்வது போல், அழத் தான் முடியும் என்பதுபோல், அத்தனைபேரும் அழுதார்கள். இதனால், தெருக்கூட்டம் அங்கே திரண்டு வந்தது. உள்ளே இருந்த இருபது குடித்தனக்காரர்களும். அங்கே குழுமினார்கள். 'டிக்னிட்டி' பார்க்கும் 'வீட்டுக்கார அம்மா' கூட தெருவுக்கே - அதுவும் நடுத் தெருவுக்கே வந்துவிட்டாள்.

பெருமாளுக்கு, என்னவோ போலிருந்தது. படித்த பெண் முன்னால இப்படியா, 'ரீசன்ட்' இல்லாமல் அழுவது? அவள் என்ன நினைப்பாள்? அதோடு, இந்தச் சமயத்தில் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அழுதால்... அவர், வழக்கமாகக் கத்தாமல், படித்த மகளுக்கு மரியாதை கொடுப்பவர்போல், பேசினார்.

"நம்ம பொண்ணு... நம்மகிட்ட வந்திருக்காள். எங்கே வரணுமோ... அங்கே வந்துருக்காள். சந்தோசப் படாமல் அழுதால் எப்படி..."

மல்லிகா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் அனைவரும், அவளுக்கு முன்பு பார்த்தறியாத புது மனிதர்களாகத் தெரிந்தார்கள். அந்த எலும்புக் கூடுகளுக்குள்ளும், இதயங்கள் இருப்பதை அவள் தேடாமலே கண்டாள். அக்காளின் தோளில் கைபோட்டுக் கொண்டு, அம்மாவின் கண்களை இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டை எடுத்து துடைத்தாள்.

எப்படியோ, மல்லிகா, அந்த முட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் அக்காள். அவள் உட்காருவதற்கு முன்பே, தனது கல்யாணப் புடவையை. நான்காக மடித்து. அடுப்புத் திட்டை ஒட்டியிருந்த மண்திட்டில் அதைப் போட்டு பரப்பிவிட்டு, தங்கையை உட்காரச் சொன்னாள். தம்பி ஒருவன். மல்லிகாவிற்கு வெளியே இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு ஓலை விசிறியை எடுத்து வீசினான். செல்லம்மா, தன் புது மகளையே பார்த்தாள். அவள் பிறந்தபோது. குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலில் பிரசவ மயக்கம் தீர்ந்த மறுநிமடமே. எப்படிப் பார்த்தாளோ, அப்படிப் பார்த்தாள். பெருமாள். தலையில் கைவைத்து, யோசித்துக் கொண்டிருந்தார். இனிமேல் குதிரையை விடணும்... 'பட்டையை' ஒழிக்கணும்...

மல்லிகாவும், அவர்கள் அன்பில் கட்டுண்டு, மெய்மறந்து இருந்தாள். அந்த வீட்டைப் பார்த்து முன்பு முகஞ்சுழித்த அவளுக்கு, அந்த வீட்டு மனிதர்களைப் பார்க்கப்யார்க்க நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சிறிதுநேரத்திற்குப் பிறது, அவரவர்; தத்தம் வேலைகளைப் பார்க்கத் துவங்கியபோது, அவளுக்குத் தனிமை வாட்டியது. தான் செய்தது சரியா என்று கூடத் தோன்றியது. எங்கேயோ போய்விட்டதாக நினைத்த அவள் அம்மா, ஒரு மசால் தோசையுடன் வந்து மகள் முன்னால் காணிக்கை செலுத்துபவள்போல் நின்றதைப் பார்த்ததும், அவள். தாயாகி தாயாகாமல் போன அந்த காய்ந்தவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு, மசால்தோசையை வேண்டாமென்று சைகை செய்தாள்.

வருவோர் - போவார், "இப்படியா செய்துட்டாங்க" என்போர், "இருந்தாலும் நீ வரப்படாது" என்போர் - இப்படியாக பலர் வந்து பேசியதைக் கேட்டுக்கேட்டு, எதோ ஒரு பெரிய ஜனச் சங்கிலியில், தான் ஒரு வட்டமாக இருக்கும் லேசான - மிக லேசான பெருமிதத்தில் மல்லிகா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

இரவு வந்தது. எங்கே படுப்பது? உள்ளே மூட்டைப் பூச்சிகள். வெளியே கொசுக்கள். "டன்லப் பில்லோ" கட்டில் கிடையாது. மேலே மின்விசிறிக்குப் பதிலாக, ஒரு பெருச்சாளிதான் சுற்றிக்கொண்டு வந்தது. மல்லிகா தயங்கிக் கொண்டே நின்றபோது. 'பிள்ளைத் தாய்ச்சியான' அவள் அக்காள் சந்திரா, கோரம்பாயை விரித்து தன் கல்யாணப் பட்டுப் புடவையை, இரண்டாக மடித்து. கைகளால் தேய்த்து பாயில்மேல் விரித்தாள். செல்லம்மாள். ஒரு கிழிந்த தலையணையை எடுத்து, வீட்டுக்காரரின் துண்டால் அதைச் சுற்றி, பாயின் விளிம்பில் வைத்தாள். பையன்கள். அக்காளுக்கு யார் விசிறி வீசுவது என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். ஒருவனுக்கொருவன். அடித்துக் கொண்டிருப்பான். வெளியே அப்பா இருப்பது தெரிந்து, வெறும் சர்ச்சையில்தான் இருந்தார்கள். பெருமாளோ, இவர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும், கண்டிக்க மாட்டார். அவர் பிரச்சினை அவருக்கு. மல்லிகாவின் எதிர்காலத்தை நினைக்க நினைக்க, அவருக்கு, தனக்கு. நிகழ்காலமே இல்லாததுபோல் தோன்றியது. தாங்கமுடியாத இதயச் சுமை. ஒரு கிளாஸ் போட்டுட்டு வரலாமா... ஒரே ஒரு கிளாஸ்... இன்னைக்கு மட்டும்... நாளையில் இருந்து நிறுத்திடலாம்.

லாந்தர் விளக்கு அணைக்கப்பட்டது. அந்த இரவில், மல்லிகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த குடித்தனக்காரர்கள். வெளித்தளத்தில், கணவன் மனைவி சகிதமாய், ரெட்டை ரெட்டையாகவும், பிள்ளைகள் சகிதமாகவும், வரிசை வரிசையாகப் படுத்தார்கள். மல்லிகாவும் படுத்தாள். அப்படியே தூங்கிப் போனாள். பட்டு மெத்தை கொடுக்காத சுகத்தை அந்தப் பாய் கொடுத்தது. தப்பு... பாய் கொடுக்கவில்லை. அந்தப் பாயை விரித்த ஜீவன்களின் பாசம் கொடுத்தது.

நள்ளிரவு.

குடித்தனக்காரர்களின் குழந்தைகளில் ஒன்றோ, இரண்டோ ஒப்பாரி போட்டபோது, திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள் மல்லிகா கட்டில் மெத்தையில் படுத்திருப்பதாக நினைத்து எழுந்தவள். பாயைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அன்றைய தினம் நடந்தவை அனைத்தும், உறக்கம் கலைந்து ஒரு கணம் நிர்மலமாக இருந்த அவள் மனதில், உலுக்கிக்கொண்டே வந்து உட்கார்ந்தது. தலையில் இருந்த வந்ததா, வயிற்றில் இருந்து வந்ததா என்று வந்த இடம் தெரியாத அந்த சுமை நிகழ்ச்சிகளின் - அனலான நெருப்புக் கட்டிகள் அவள் இதயத்தில் சட்டென்று பட்டு, சரியாகப் பிடித்துக்கொண்டது.

மல்லிகா, அம்மா பார்வதியை நினைத்தபோது, முடங்கிக் கிடந்த செல்லம்மாவின் முகமே தெரிந்தது. அப்பா சொக்கலிங்கத்திற்குப் பதிலாக, பெருமாள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு. தியாகராய நகரில் இருக்கும் அப்பாவையும், அம்மாவையும் உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்கள் கால்களைக் கட்டிக்கொண்டு கதறவேண்டும் போலவும், அவர்கள். இவள் தலையை ஆதரவாகக் கோதிவிட வேண்டும் என்பது போலவும் துடித்தாள். எதையும் எதிர்பார்க்காத பாசத்தின் உச்சகட்டத்திற்கு வந்தவளாய், அவள் செல்லம்மாவை எழுப்பினாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்த செல்லம்மா என்னம்மா என்றாள்.

"அம்மாவிடம் போகணும். அப்பாவைப் பார்க்கணும். இப்பவே பார்க்கணும்."

"இப்போ எப்படிம்மா முடியும்..."

"அப்பாவைப் பார்க்கணும்... அம்மாகிட்ட போகணும்..."

"இன்னைக்கு மட்டும் பொறும்மா..."

முடியாது. இப்பவே பார்க்கணும்..."

"கவலைப்படாதம்மா... நாளைக்கு... எப்பாடு பட்டாவது ஒரு கட்டில் வாங்கிடுறோம். ரெண்டு நாளையில்... மெத்தை வாங்கிடுறோம்..."

"அய்யோ... நான் கட்டில் மெத்தைக்காக.. அவங்களைப் பார்க்கணுமுன்னு சொல்லல... தெருவுல நின்றாவது நான், என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும். பார்த்தே ஆகணும்... இப்பவே பார்க்கணும்..."

"இப்போ எப்படிம்மா முடியும்... நடு ராத்திரி..."

"பரவாயில்ல. பார்க்கணும்..."

"அது எப்படிம்மா..."

"அப்பா... அம்மா..."

"ஏம்மா அழுகிற?"

"அப்பா... அம்மா... வாங்கப்பப்பா... வாங்கம்மா.. என்னால அங்க வரமுடியல... நீங்களாவது வாங்க..."

"மல்லிகா... அம்மா சொல்றதக் கேளும்மா..."

"அப்பா... அம்மா... அம்மா... அப்பா..."

மல்லிகா போட்ட கூச்சல் அழுகையில், அப்போது அழுதுகொண்டிருந்த சின்னப் பிள்ளைகள், தாங்கள் அவளைவிட பெரிய பிள்ளைகள் என்பதுபோலவும், அவள், தங்களை பெரிய பிள்ளைகளாய் ஆக்கிவிட்டது போலவும், அதுகள் அழுகையை நிறுத்தியபோது, அவள் மேலும் பலமாக அழுதாள்.

"அப்பா... அம்மா... அப்பா.. என் அப்பா... என் அம்மா..."

எல்லோருமே, அங்கே கூடிவிட்டார்கள். வேறுவேறு வீடுகளில் இருந்தவர்கள்கூட வெளியே வந்து, நடைக்கதவைத் தட்டினார்கள் மல்லிகா. அழுகையை நிறுத்தவில்லை.

"அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவைப் பார்க்கணும்... யாராவது கூட்டிட்டுப் போங்க... அய்யோ.. எங்க அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவை..."

பெருமாள், மகளையே பார்த்துக்கொண்டு நின்றார். உள்ளம் கலங்கியதால், கண் கலங்கியது. பிறகு, இந்தக் கலக்கத்திற்குக் காரணமான சொக்கலிங்கத்தின்மீது கொலைத்தனமான கோபம் ஏற்பட்டது. கோபத்தை சிறிது குறைத்துக்கொண்டே பேசினார்.

"உன் இஷ்டம்... உனக்கு இங்க இருக்கது பிடிக்கலன்னா, இப்பவே கொண்டுவிடத் தயாராய் இருக்கேன். என் மானத்தைவிட்டு, உன்னை... அங்கே கொண்டு விட்டுட்டு, அவன்கிட்ட மன்னிப்பு வேணுமுன்னாலும் கேட்கேன். ஏன்னா... இந்த அம்பது வருஷமா மானத்தோட வாழ்ற எனக்கு, அந்த மானத்தைவிட நீதான் முக்கியம். ஆனால் ஒண்ணு. உன்னை, அந்த கேடுகெட்ட ரவுடிப்பயலுக்கு கட்டிக் கொடுக்கத் துணிந்தவங்க, எதுக்கும் துணிந்த பாவிகளாத்தான் இருப்பாங்க... நீ மட்டும் அவங்க சொந்த மகளாய் இருந்தால், இப்படி அந்த சோதாப் பயலுக்குக் காவு கொடுக்கிற எண்ணம் வருமா? இனிமேல், அந்த வீட்ல, நீ ராமன் பயலை கட்டிக்காம இருக்க முடியாது. இனிமேல் நீ அங்கே போனால், அவளுக்கு இளக்காரமாய் போயிடும். உன்னை... எப்படி வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற தைரியம் வந்துடும் என்னாலயம் தட்டிக்கேட்க தகுதியில்லாமல் போயிடும்.

பெருமாள், முதன்முதலாக தனது தகுதிக் குறைவை நினைத்து வெட்கப்பட்டவர் போல் சிறிது தலையைத் தாழ்த்திவிட்டு மீண்டும் நிமிர்ந்து பேசினார்.

"இவ்வளவு நீ அழுறே... சொக்கலிங்கத்துக்கோ... அவன் பொண்டாட்டிக்கோ... நிஜமாவே உன்மேல் பாசம் இருந்தால், இங்கே வந்து கூட்டிட்டுப் போகலாமே? என்னை, ரெண்டு அடி அடித்துட்டு கூட கூட்டிட்டுப் போகலாமா... நான் திருப்பியா அடிப்பேன்? உன்னை இங்கே கொண்டு வந்ததுல... நான் சந்தோஷப் படுறேன்னு நினைக்கிறியா... நீ நல்லா இருக்கணும் என்கிறதுதான் எனக்கு முக்கியம்மா... நான்... பாவி... நான் பாவி..."

பெருமாள். தன் தலையிலே அடித்துக்கொண்டார். ஆனால் அழவில்லை.

மல்லிகா, அப்பாவையே பார்த்தாள். அவருக்குள்ளே எவ்வளவு பாசம்... எவ்வளவு அன்பு... தியாகராய நகருக்குப் போனால், அப்பா அம்மாவோடு. ராமனையும் பார்க்க வேண்டியதிருக்குமே...

மல்லிகா முடங்கிப் படுத்தாள். செல்லம்மா. மகள் தலையை எடுத்து. தன் மடியில் போட்டுவிட்டு. குழந்தையை குலுக்குவதுபோல் குலுக்கினாள். மல்லிகா. கை கால்களைச் சுருட்டிக்கொண்டு. முடங்கிக்கொண்டே இருந்தாள்.


15

தியாகராய நகர் வீட்டுக் கதையும், இதே கதைதான்.

மல்லிகா, தந்தையுடன் வெளியேறிவிட்ட செய்தியை, கடைப் பையன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட சொக்கலிங்கம், கல்லாவில் போடப் போன காசுகளை, சிறிதுநேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தார். பின்பு கடையில் இருந்து, மேலே ஒரு கம்பி வட்டத்தில் கட்டப் பட்டிருந்த கயிற்று வளையத்தைப் பிடித்துக்கொண்டே, கீழே இறங்கி ஓடாக்குறையாக நடந்தார்.

வாசலுக்கு வந்ததும். "என் மகளை துரத்திட்டியாடி பாவி... எங்கே இங்கே... இங்கே வாடி... அவள் போன பிறகு உனக்கென்னடி இங்கே வேல..." என்று குரல்கொண்ட மட்டும் கத்திக்கொண்டே படியேறினார். இப்படி மனைவியை. அவர் எப்போதும் பேசியதில்லை. கடைப்பயல், விவகாரத்தை 'ஊர்ப்பய பிள்ளை' என்று தன்னை அடிக்கடி திட்டும் பார்வதிக்குப் பாதகமாக அழுத்தியழுத்திச் சொன்னதால். சொக்கலிங்கம் மனைவியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற உறுதியுடன்தான் கத்தினார்.

பார்வதி, வெளியே வரவில்லை. பயங்கரமான நிசப்தம். களையான ஒன்று. அங்கே இல்லை என்பதைக் காட்டுவதுபோல் ஒரு வெறுமை. நடக்கக்கூடாத ஒன்று நடந்து. அப்படி நடந்ததை மாற்ற முடியாதபடி இன்னொன்று புகுந்துவிட்டது என்பதுபோல், ராமன், தன் தோள்களை வளைத்துக்கொண்டே அங்கே நின்றான். சின்ன 'நாய்னா'வைப் பார்த்ததும். ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டான்.

ஊஞ்சல் பலகையில், மல்லிகா விட்டுவிட்டுப் போன ஸ்கேலை எடுத்துக்கொண்டே வாயில் தகாத வார்த்தைகளை வீசிக்கொண்டே சொக்கலிங்கம். சமையலறைக்குள் போனார். போனவர் வாயடைத்துப் போய் நின்றார். பார்வதி. சமையலறை மூலையில், தலையை வைத்துப் புரண்டுகொண்டே "போயிட்டியாடி... போயிட்டியாடி என் ராசாத்தி எங்கள விட்டுட்டுப் போக உனக்கு எப்படியடி மனம் வந்தது" என்று புலம்பிக் கொண்டிருந்தவள். கணவனைப் பார்தததும். கட்டிப் பிடித்து அழுதாள். ஒருநாளும் தரக்குறைவாகப் பேசாத கணவன். கடந்த இருபத்தைந்தாண்டுகால தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக, வட்டியும் முதலுமாக திட்டித் தீர்க்க. சுரணை இல்லாதவளாய். அவரது காலில் தலைபட புரண்டாள்.

மனைவி நடிக்கிறாளோ என்றுகூட சொக்கலிங்கம் முதலில் நினைத்தார். இல்லை. நடிக்கவில்லை. அப்படி இருந்தால், இப்படிப் பித்துப் பிடித்தவளாய் இருக்க மாட்டாள். இப்படி காலில் புரண்டு கதற மாட்டாள். அவளையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு "அவள் மெய்யும், மெய்மையும், உடலும் உள்ளமும் ஒருங்கிணைய அழுகிறாள்" என்பதை, அவருக்குரிய அனுகூலங்களாக வைத்து "என்னம்மா நடந்தது. எதுக்காவ அந்த குடியன்கூட போயிட்டாள்" என்று படபடப்பாகவும், அதேசமயம் மனைவிமீது பரிதாபம் சொட்டும்படியாகவும் கேட்டார். மனைவியை இந்த மாதிரி அழ வைக்கிற நிலைமைக்கு அடித்துப் புரள்கிற அளவுக்கு, மல்லிகா கொண்டுபோய் விட்டுவிட்டாளே என்று அவருக்குத் தன் வளர்ப்பு மகள் மீதும் கோபம் ஏற்பட்டது.

பார்வதி அவரைப் பார்த்து அழுதுகொண்டே விளக்கினாள்.

"ராமனைக் கட்டிக்க முடியாதுன்னாள். உன் அம்மா வீட்டுக்குப் போயிடுடின்னு, ஒரு பேச்சுக்குச் சொன்னேன். எங்கேயாவது போயிடுன்னு, ஒரு தாய்க்காரி கோபத்துல சொல்றது மாதிரி சொன்னேன். சொல்லியிருக்கக் கூடாதுதான். நான்... பாவி... எந்த நேரத்துல அப்படிச் சொன்னேனோ... அந்த நேரத்துல... அந்த குடிகாரப் பாவி வந்திருக்கான். என் செல்லக்கண்ணை கூட்டிக்கிட்டுப் போயிட்டான். போயேண்டி போயேண்டி.. நான் செத்தாடி போயிடுவேன். அய்யோ, என் மனசு கேட்க மாட்டேங்குதே... கேட்க மாட்டேங்குதே...!

"இப்ப அழுது என்னடி பிரயோஜனம். இந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும்..."

"என் புத்திதான். இரப்பாளப் புத்தி. நான் படியாத முண்டம். அவளுக்குப் புத்தி. எங்க போச்சு? 'இது என் வீடு. நீ வேணுமுன்னா போ நான் போகமாட்டேன்'னு அவள் சொல்லக்கூடாதா? இது, அவள் வீடுதானே. அவள் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாமுன்னேன்..."

"சரி எழுந்திரு. எல்லாம் இந்த ஓணான் பயலால் வந்த வினை. நாம ரெண்டுபேரும் போய். அவளைக் கூட்டிக்கிட்டு வருவோம். முகத்தைக் கழுவுடி. ராமனுக்கு உன்னைக் கொடுக்க மாட்டோமுன்னு சொல்லி, கூட்டிக்கிட்டு வரலாம். கிளம்புடி..."

பார்வதி, பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தாள். அவள் முகம் திடுக்கிடுவதைப் பார்த்து சொக்கலிங்கம். அந்த முகத்திற்கு எதிர்த் திசையைப் பார்த்தார். அவளின் மூத்த அண்ணன் ராமசாமி பல்லைக் கடித்துக்கொண்டு நின்றார். இருவரும், தன் பிரசன்னத்தைப் பார்த்துவிட்டார்கள் என்பது நிச்சயமானதும், வில்போல் கோணியிருந்த தன் வாய் வழியாக சொல்லம்புகளைத் தொடுத்தார்.

"ஏய்... பார்வதி அவருக்குத்தான் அறிவில்லை. உனக்குமா இல்லை? உங்க சொந்த மகளாய் இருந்தால் வாசல்படியைத் தாண்டுவாளா? சரி. போனதே போனாள், தோளோடு தோளாய் வளர்த்த மச்சான் கிட்ட சொல்லாமல் போவாளா? சரி, அப்படியே போகட்டும்; போற வழியில், இவருகிட்ட சொல்லிட்டுப் போகலாமில்ல? ஏன் போகல? எல்லாம் திட்டம், அப்பனும் அவளும் போட்டத் திட்டம். ஏதாவது சாக்குச் சொல்லி வெளியேறி, அப்புறம் வழக்குப்போட்டு, சொத்தைப் பிடுங்கி, என் தங்கச்சியை மொட்டையடிக்கணும் என்கிற திட்டம்."

சொக்கலிங்கம் மைத்துனரை உதாசீனப்படுத்துபவர்போல் மனைவியிடம், "சரி, நேரமாகுது. உன் அண்ணன் பிரசங்கத்தை அப்புறமாய் கேட்கலாம். இப்போ புறப்படு" என்றார்.

பார்வதி புருஷனையும் அண்ணனையும் மாறிமாறிப் பார்த்தாள். இடது காலை நகர்த்தாமல், வலது காலை மட்டும் நகர்த்தினாள். ராமசாமி உபதேசம் செய்பவர் போல் பேசினார்.

"எனக்கென்ன, போகணுமுன்னா போங்க. அங்கே போனதும், அந்த குடிகாரன் வாயில் வந்தபடி பேசப்போறான். அரிவாளத் தூக்கிக்கிட்டு இவரை வெட்டினாலும் வெட்டுவான். எனக்கென்ன. போயிட்டு வாங்க. உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்..."

இப்போது சொக்கலிங்கம் தயங்கினார். தங்கையின் கணவர் அவரை நேருக்கு நேராக நின்று திட்டமாட்டார். இருந்தாலும் இவரு சொல்றது மாதிரி, அரிவாளை கிரிவாளைத் தூக்கினால்? இவளை மானபங்கமாய் பேசிவிட்டால்..?

சொக்கலிங்கத்தின் மனதில் உதித்த அச்சமும் சந்தேகமும் அவர் பேச்சில் நன்றாக ஒலித்தது.

"என்ன பார்வதி... போகலாமா. வேண்டாமா... சொல்லு"

பார்வதி சொல்லுவதற்கு முன்னால், அண்ணனை நோக்கினாள்.

"என்னை ஏன் பார்க்கறே? போறதுன்னால் போ. ஆனால் ஒண்ணு. என்னை அண்ணன்னு சொல்லப்படாது. உன்னை தூசி மாதிரி நினைச்சிட்டுப் போனவளை நீ கூட்டிக்கிட்டு வந்தால், எங்களை தூசின்னு நினைச்சதா அர்த்தம். அவளை சேர்க்கிறதாய் இருந்தால், எங்களைத் தள்ளி வச்சிடு, அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சால், நாங்க கால் வைக்க மாட்டோம். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. இவரு காலத்துக்குப் பிறகு, 'மல்லிகா திட்டினாள். அவள் அப்பன் அடிக்க வரான்'னு எங்ககிட்ட வந்து கண்ணைக் கசக்கக்கூடாது. நாங்க ஒண்னும் கேட்க மாட்டோம். உன் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அதை என்னால மாத்த முடியுமா? வேணுமுன்னால் போ..."

பார்வதி பயந்துவிட்டாள். தள்ளாத வயதில், மல்லிகா, தான் இப்போது அவளிடம் எப்படி நடந்து கொண்டாளோ அப்படி தன்னிடம் அவள் நடந்துகொள்வது போலவும், அம்மா என்று சொல்லாமல் அத்தை என்று சொல்வது போலவும், அவள் அப்பா பெருமாள், தன்னை 'நாயே பேயே'ன்னு திட்டுவது போலவும், அழுதுகொண்டு அண்ணன் வீட்டுக்குப் போனால் அங்கே கதவு சாத்தப்படுவது போலவும் கற்பனை செய்தாள். பயத்தில் அவள் உடலெல்லாம் ஆடியது. அண்ணனைப் பார்க்கும்போது, அதிகமாக ஆடியது. இறுதியில் திட்டவட்டமாகப் பேசினாள்.

"எங்க... அண்ணியைப் பார்த்துட்டு வாரேன்... அண்ணி... வீட்லதான அண்ணா இருக்காங்க."

ராமசாமி, 'பிளஸ்' மாதிரி தலையாட்டினார். பார்வதி புறப்பட்டாள். அண்ணியிடம் நடந்ததைச் சொல்லி அழவேண்டும் ராமசாமி, தங்கையுடன் போய்விட்டார்.

சொக்கலிங்கம், தனிமையில் தவித்தார். கடைக்குப் போக மனமில்லை. யாருக்காகச் சம்பாதிக்க வேண்டும்?

16

ஓரிரு நாட்கள் ஓடின.

"இந்தாங்கப்பா" என்று சொல்லி, இரவில் மாத்திரையை நீட்டும் மகளில்லை. "இதை மருந்துன்னு நினைக்காமல், நாம் சாப்பிடுகிற ஆகாரத்தில் ஒன்றுன்னு நினையுங்கப்பா" என்று. தாயாக, மகளாக, பாட்டியாக, பரம்பொருளாகச் சுற்றிவந்து சொல்லும் மகளைப் பார்க்கத் துடித்தார். எப்படிப் போவது? பெருமாள் ஏதாவது பேசினால்... மகளின் செல்லக் கையில், செல்லமாகக் கொண்டுவரும் பாலை, ஆனந்தமாகக் குடித்த வாய், தானாக உளறியது. மாத்திரை கொடுத்த மல்லியை நினைத்த அவர் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைக் கூட மறந்தார். விளைவு...

சொக்கலிங்கம் படுக்கையில் விழுந்தார். ஆஸ்பத்திரியில் சேரும் அளவிற்கு, சீரியஸ் இல்லை. அதேசமயம் அரவை மில்லுக்குப் போகும் அளவிற்கு லேசாகவும் இல்லை. எப்படியோ தேறிக் கொண்டிருந்தார்.

நண்பகலில் தூங்கிவிட்டு கண்விழித்த சொக்கலிங்கம், மனைவி, வியர்த்துக்கொட்ட வெளியில் இருந்து வருவதைப் பார்த்துவிட்டு, "அண்ணன் வீட்டுக்குப் போனியா?" என்று கேட்டபோது, பார்வதி அழுதுவிட்டாள்.

"அவளைப் பார்க்காமல் இருக்க முடியல. அவள் முகத்தையாவது பார்த்துட்டு வரலாமுன்னு அந்தத் தெரு வழியா நடந்தேன். வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வந்தவள் என்னைப் பார்த்துட்டு. முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிட்டாள். சொல்லுங்க. நான் அந்த அளவுக்கு பாவியா..?"

சொக்கலிங்கம் எதுவும் சொல்லவில்லை. கண்களை மூடிக்கொண்டார். அப்படியும் நினைவுகளை மூட முடியாததால், மீண்டும் கண்களைத் திறந்து சூனியமாகப் பார்த்தார். மல்லிகாவைப் பார்ப்பதற்காக, 'தற்செயலாகப்' போவதுபோல் போன பார்வதியின் கண்களில், மல்லிகா தட்டுப்பட்டதுபோல் மல்லிகாவின் கண்களில் பார்வதி அகப்படவில்லை. இது பார்வதிக்குத் தெரியாது

பார்வதி பொருமிக்கொண்டிருக்க சொக்கலிங்கம் சூடான கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க, அவள் அண்ணன் ராமசாமி இன்னொரு பணக்காரத் தம்பியான சுப்பையாவோடு அங்கே வந்தார். முதலில் அத்தானுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தார். அப்புறம்...

"மல்லிகா வந்து பார்த்தாளா?" என்றார்.

"அவள் என்ன எங்க பிள்ளையா, வர்றதுக்கு" என்றாள் பார்வதி.

"ஒருவேளை, என்க்கு சுகமில்லாதது அவளுக்குத் தெரிந்திருக்காது" என்றார் சொக்கலிங்கம்.

இப்போது ராமசாமியையே தோற்கடிப்பதுபோல் சுப்பையா எகிறினார்.

"தான் பெறணும் பிள்ள, தன்னோட பிறக்கணும் பிறவி என்கிற பழமொழி சும்மாவா? மல்லிகாவிற்கு தெரியாதுன்னு எங்களை நம்பச் சொல்றீங்களாக்கும். அவள் தம்பிகிட்ட மூணு நாளைக்கு முன்னால கடைப் பயல்கள் சொன்னாங்களாம். அவன் சொல்லாமலா இருப்பான்? உம் மகளாய் இருந்தால் வராமல் இருப்பாளா? போதாக்குறைக்கு, உம் தங்கச்சி புருஷன் உம்மை கோர்ட்டில நிறுத்தப் போறானாம்... கோர்ட்டுல நிக்கறதுக்கு உமக்குப் பலம் வரதுவரைக்கும் காத்திருக்கப் போகிறானாம். அப்புறம் வழக்காம். மல்லிகாவும் நோட்டீஸ் அனுப்பறதுக்கு கையெழுத்துப் போடுறேன்னு சொல்லிட்டாளாம்."

சொக்கலிங்கம் பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை. பெரிய மைத்துனர் ராமசாமி, முறையோடு பேசுபவர்போல் எல்லோரையும் முறைத்துக்கொண்டே பேசினார்.

"எதுக்குப்பா வீணா கத்துறே? இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடனும் அத்தானுக்கு ஒரு லாபத்தைப் போல. நஷ்டம் வந்துட்டால், பெருமாள். பார்வதியை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் போறான். இப்போதே ஒரு முடிவுக்கு வரணும்."

"அத்தானுக்கு ஆயுசு நூறு. அப்படிச் சொல்லாதே" என்றார் சுப்பையா.

"நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா. பார்வதிக்கும் ஒரு துணை வேணும். ராமன் பயலை நம்ப முடியாது. முந்தாநாள் பாரு. என்னையே சோடா பாட்டிலை வச்சி அடிக்க வந்துட்டான். அதனால என் சின்ன மாமா பேத்தி இருக்காள்பாரு கிராமத்துல. அவளை அத்தானுக்கு கட்டி வச்சிடலாமுன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?"

யாரும் எதுவும் சொல்லவில்லை. பார்வதி பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். சொக்கலிங்கம், 'முறைகெட்ட பயகிட்ட' என்ன பேச்சு என்பதுபோல் குப்புறப் படுத்தார்.

அப்படியும், ஒரு இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துக் கொள்ளும் இதயத் துடிப்பை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைக்க நினைக்க, வயதான சொக்கலிங்கத்திற்குச் சுவையாக இருந்தது.


17

ஒரு வாரம் செத்து, மறுவாரம் பிறந்தது.

எந்த நிலைக்கு ஒருவர் வந்தாலும், அந்த நிலைக்கு ஏற்ப ஐம்புலன்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன என்ற தத்துவத்தை அல்லது விஞ்ஞான உண்மையை, மல்லிகா நம்பத் துவங்கினாளோ இல்லையோ, உணரத் துவங்கினாள்.

அந்தச் சூழல், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை. ஆதரிக்க முடியவில்லை என்றாலும், அனுசரிக்க முடிகிறது. அவள் வந்த நான்கைந்து நாட்கள் வரை, செல்லம்மா மகளுக்குப் பிடித்தமான இடியாப்பத்தையும், ரவா தோசையையும், தினந்தோறும் ஒரு உடுப்பி ஓட்டலில் இருந்து வாங்கிக் கொடுத்தாள். பிறகு கையில் காசில்லாததால், அந்த வீட்டின் திண்ணையிலேயே, இட்லி கடை போட்டிருந்த ஒரு ஆயாவிடம், கல்லைவிடக் கடினமான, பல்லை உடைக்கும் இட்லிகளை, அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, இரண்டு கைகளையும் பின்பக்கமாய் வளைத்துப் போட்டு, பின்னிக்கொண்டு ஒன்றோடொன்று மோதிய தாய்மையையும், இயலாமையையும் இணைக்க முயற்சித்தாள். அவை இணைபட முடியாமல் போகவே, வாசல்படியில் சாய்ந்து, வெளிக்கூரையை பற்றற்ற யோகிபோல் உற்றுப் பார்த்தாள்.

மல்லிகா புரிந்துகொண்டாள். மறுநாள், அம்மா இட்லி வாங்கக்கூட காசில்லாமல், தன் மூத்த மகள் சந்திராவிடம் "உன்கிட்ட ஏதாவது..." என்று இழுத்தபோது மல்லிகா ஒரு ஈயத்தட்டை எடுத்து, பழைய பானையைத் திறந்து, பழைய கஞ்சியை போட்டு சிரித்துக்கொண்டே ஒரு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டாள். செல்லம்மாவுக்கு அந்த வெங்காயம் படாமலே கண்ணீர் வந்தது. மல்லிகா அம்மாவை அதட்டினாள்

என்னம்மா நீங்க! நேற்று உங்கள்கூட மார்க்கெட்டுக்கு வந்தபோது எத்தனை ஜனங்கள் தெருவில் அடுப்பு வைத்திருக்கிறதைப் பார்த்தேன். மழைபெய்யும் போது, தாங்க நனைந்தாலும் பரவாயில்லை, அடுப்பு நனையக்கூடாதுன்னு நினைத்து பாவாடையோட நின்னுக்கிட்டு புடவைங்களால அடுப்பை மூடின எத்தனை பெண்களைப் பார்த்தேன்! நாமாவது நாலு பேருக்குத் தெரியாமல் வறுமையை மறைக்க முடியுது. அவர்களால அதுகூட முடியவில்லை. மழை பெய்தாலும் ஒண்டுவதற்கு ஒரு இடமும், ருசியா இல்லாவிட்டாலும் சாப்பிடுவதற்கு ஒரு உணவும் இருக்கிற நீங்கள், நான் பழைய கஞ்சியை குடிப்பதற்கா அழுவது? பழைய கஞ்சியிலும் ஊசிப்போன கஞ்சியாப்போன அந்த ஜனங்களை அவமானப்படுத்துறது மாதிரி இருக்குது."

செல்லம்மா, மகளைப் பார்த்து, ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தாள். உலகத்தில் பலர் கஷ்டப்பட்டாலும், தன்னை மாதிரி யாருமே கஷ்டப்படவில்லை என்று. இதுவரை நினைத்து, அதனாலேயே அதிகமாகச் சோகப்பட்டு, அந்த சோகத்திலேயே ஒருவித சுகத்தைச் சுவைத்துவரும் அந்த அன்னைக்கு, மகள் சொன்ன சாதாரண உண்மை அசாதாரணமாகத் தோன்றியது. மகள் வந்த பிறகு, கணவன் குடிக்காமலேயே வருவதையும், வழக்கம்போல், பேச்சுக்குப் பேச்சு குதிரைகளை உதாரணமாகச் சொல்லாமல் இருப்பதையும், தன்னை அடிக்காமல் இருப்பதையும், சொல்லப்போனால், ஒருநாள் தன் கன்னத்தைப் பிடித்து "சொல்லத்தகாதபடி' கொஞ்ச வந்ததையும், இவள், 'இருந்த வயசுல எங்கேயோ போயிட்டு, இல்லாத வயசுல இப்படியா' என்று சொல், அவரை அப்புறப் படுத்தியதையும் நினைத்துக்கொண்டாள்.

உண்மைதான். மல்லிகா அந்த புறச்சூழ்நிலைக்கு ஏற்ப மாறியும் மாற்றியும் வந்தாள். அவள் தந்தை பெருமாள். இப்போது வீட்டுக்கு இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுப்பதைக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தாள். தந்தை, தனக்கு, இரவில் வந்ததும் ரகசியமாகக் கொடுக்கும் 'கேக்'குகளையும் இதர ஸ்வீட்டுகளையும், அவள் பகிரங்கமாக, பிள்ளைத் தாய்ச்சியான சந்திராவிற்கும். இதர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். "என்னால் இது கட்டுப்படியாகாதுப்பா சாமீ! இந்த முட்டாப் பய மக்களும்.மிட்டாய் தின்ன ஆரம்பித்தால் யானைக்கு அல்வா வாங்கிட்டு வந்த கதையாத்தான் முடியும்" என்று பெருமாள் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு, எங்கேயோ போனார். நிச்சயமாக வாய்க்குப் பட்டை தீட்ட அல்ல.

ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்களும். பெண்களுமாகச் சேர்ந்து தாயப் பாஸ் ஆடுவதை முதலில் தொலைவில் இருந்தும், பிறகு பக்கத்தில் இருந்தும், ரசித்துவிட்டு, இப்போது மல்லிகாவும் சேர்ந்து ஆடத் துவங்கினாள். சாப்பிடுவதற்கு மட்டும் 'போர்ஷன்களை' வைத்துவிட்டு, மீதி சகலத்திற்கும் களத்தை (முற்றம்; பொதுத்தளம்) பயன்படுத்தும் ஏழை எளியவர்கள், இளம் பெண்கள். இளைஞர்கள் முதலியோர் ஆயிரக்கணக்கான சினிமாக்களின் காதல் காட்சிகளை அலசிவிட்டு அருகருகே படுத்தாலும், எந்தவித இச்சைக்கும் தங்களை விருந்தாக்காத பெரும் பண்பு, அவளைப் பெரிதும் கவர்ந்தது. கல்லூரிகளில் பெண்களைப் பார்த்தவுடனேயே விசிலடிக்கும் பையன்களையும், மாணவிகள் மொத்தமாகப் போகும்போது தனியாக அகப்படுபவனைப் பார்த்துப் பேசும் கிண்டல் கேலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க, இந்த நாகரீக மைனர்களும், 'மைனி'களும், அவளுக்கு நாட்டின் எச்சங்கள் போலத் தோன்றின.

மல்லிகா பார்வையாளராக மட்டும் நிற்கவில்லை. அந்த ஏழைபாளைகளின் பிரச்சினைகளில் பங்காளியாகவும் மாறினாள்.

'இட்லிக்கடை' ஆயா தங்கம்மாவுக்கு இட்லிக் கணக்கை எழுதிக் கொடுத்தாள். கொத்தனார் வேலைக்குப் போகும் ராக்கம்மாவுக்கு கடிதங்களை எழுதிக் கொடுத்தாள் வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒன்றை ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு கடிதங்களாகச் செலவழிப்பவள், அந்தப் பெண். தபால்காரர். குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் கடிதங்களைப் படித்துக் காட்டி, இப்போது, துறைமுகத்தில் மூட்டை சுமக்கும் கந்தசாமி, ஆட்டோ ரிக்ஷா ஒட்டும் சண்முகம், கோணி தைக்கும் அருணாசலம், சுக்குகாபி விற்கும் சுந்தரம், பீடி சுற்றும் மாரியம்மாள் முதலியாரின் குடும்ப விபரங்கள் அவளுக்கு அத்துபடி முதலில் பள்ளிக்கூடம் போகும் தம்பிக்கு, பாடம் சொல்லிக் கொடுத்தபோது, சிம்மாட்டுடன் வந்த ராக்கம்மா. "எங்களுக்கும் கையெழுத்துப் போடயாவது சொல்கிக் கொடும்மா" என்றாள்.

அன்றே, ஒரு போர்டில்லாத முதியோர் கல்வித் திட்டம் துவங்கியது. பல பெண்கள். அவளைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு. 'ஆனா, ஆவன்னா' எழுதத் தொடங்கினார்கள். கணவன்மார்களை நச்சரித்து. சிலேட்டு. 'பல்பங்களை' வாங்கிக் கொண்டார்கள். மத்தியானம் பானையில் இருப்பது வயிற்றுக்குள் போனதும். மல்லிகாவின் மூளைக்குள் இருப்பது அவர்களின் செவிக்குள் போகத் துவங்கியது.

எந்த வேகத்தில் வாய்ச் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்திலேயே உடனடியாய் கூடிக்கொள்ளும் குடித்தனக்காரர்களையும், குடித்துவிட்டு உதைக்கும் ஆம்புடையான்களுக்கு கால் பிடித்துவிடும் பெண்களையும் பார்க்கப் பார்க்க, அவளுக்கு. புதியதோர் உலகைக் கண்டுவிட்ட உவகை ஏற்படத் துவங்கியது. ஆனால், இந்த வீட்டுக்கார அம்மாவின் போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில், மல்லிகாவை மாடிக்கு வரவழைத்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பாள். ஒருநாள், மல்லிகாவிற்கு ஆர்லிசைக் கலந்து கொண்டே "இந்த வீட்டுல இருக்கறது எல்லாம் பீடைங்க. அதுங்ககிட்ட எதையும் வச்சுக்காதே" என்றாள்.

என்றாலும் மறுநாளே, மல்லிகா அந்த பீடைங்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதைப் பார்த்ததும், அவள், மல்லிகாவுடன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். அப்புறம் அவளைப் பார்த்து, முணுமுணுக்கத் துவங்கினாள். எதிர்க் கேள்வி போட முடியாத முணுமுணுப்பு. தான் ஒருத்திதான் பெண் என்கிற அகங்கார முணுமுணுப்பு. இது போதாதென்று. அவள் தம்பி ஒருவன் பெயர் ரமணனாம். இருபத்தோறு வயது முண்டம். டுட்டோரியல் காலேஜில் படிக்கிறானாம். மாடியில் நின்றுகொண்டே, மல்லிகாவைப் பார்த்த பார்வை, பாதகப் பார்வை. வயதுக்கேற்ற பார்வை என்றால் தொலைந்து போகிறான் என்று விட்டுவிடலாம். மல்லிகாகூட விட்டிருப்பாள். ஆனால், அவன் பார்வையோ, அவள் குடியிருக்கும் வீடு எப்படிச் சொந்தமோ, அதுபோல் அவளும் தனக்குச் சொந்தம் என்பதுபோல் பார்க்கும் பழைய காலத்து ஜமீன் பார்வை. அற்பத்தனமான அவனது உரிமைப் பார்வையை, அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அன்றும் அப்படித்தான்.

சேலையை மார்புவரைக்கும் கட்டிக்கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் இருந்த குழாய்க்கருகே, மல்லிகா குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு ஈயப் பாத்திரத்தில் பாதி தண்ணீர் இருந்தது. அவள் அக்காள் சந்திரா. குழாயருகே போய் ஒரு தவலைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

மாடியில் ரமணன் உருட்டுக் கண்களோடு, மல்லிகாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையைத் தடுக்க முடியாத ஆதங்கத்தில், தனது உடம்பைத்தான் மறைக்க முடியாது. முகத்தையாவது மறைக்கலாம் என்று நினைத்தவள்போல், மல்லிகா ஈயப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றி காலியாக்கிவிட்டு, கண்களை மூடி, முகத்திற்கு சோப்புத் தேய்த்துவிட்டு, பின்பு எரிச்சல் தாங்கமுடியாமல் "சீக்கிரமாய் தண்ணீர் புடிக்கா, முகமெல்லாம் எரியுது" என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவலையுடன் 'தவலை' மோதும் சத்தம் கேட்டது.

அப்போது, காலைப்பொழுது... மணி சரியாக எட்டரை இந்த மணி, அங்கே 'ஏழரை நாட்டான்' சனி மாதிரி 'வீட்டுக்கார அம்மாவின்' குடங்களுக்கு, குடித்தனக்காரர்கள் வழிவிட வேண்டும். அரைகுறையாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீர் பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி, குடங்கள் எடுக்கப்படவில்லையானால், படிக்கட்டுகளில் தூக்கி, 'டங்'கென்ற சத்தத்துடன் வைக்கப்படும். கேட்டால் "காலிபண்ணு."

அந்த வழக்கமான பழக்கப்படி, வீட்டுக்கார அம்மா மாடியில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டே உலா வந்தபோது, வீட்டு வேலைக்காரப் பெண், மடமடவென்று குழாய்ப் படிகளில் இறங்கி, சந்திரா பிடித்துக் கொண்டிருந்த தவலைப் பாத்திரத்தைத் தூக்கி, அங்கிருந்தபடியே சுவருக்கு மேலே தூக்கி, மேல் தளத்தில் வைத்துவிட்டு, எஜமானியின் எவர்சில்வர் தவலைப் பாத்திரத்தை வைத்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று சாதாரண தவலைப் பாத்திரங்களைக் கொண்டுவரப் போனாள். சந்திராவோ, வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றாள். அந்த வேலைக்காரப் பெண், உடம்பால் 'ரூபி' என்றாலும் குணத்தால் 'அரூபி'.

"இன்னுமா குழாய்ல தண்ணி பிடிக்கல? சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே கண் திறந்த மல்லிகா, எஜமானி பாத்திரங்களால், தங்கள் தவலைப் பாத்திரம் ஒதுக்குப்புறமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, தவித்தாள்.

அன்றைக்கு வேலைக்குப் போகாத ராக்கம்மா, அந்தப் பக்கமாக வந்து இந்த அநியாயத்தைக் கேட்டுதான் ஆகணும் என்று சொல்லிக் கொண்டே, முந்தானைச் சேலையை இடுப்பில் செருகியபோது, மல்லிகா அவளைக் கண்களால் கெஞ்சி, கால்களைப் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பெண்கள், ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு தங்கள் வாடகைப் பாக்கியை நினைத்தவர்களாய், வாய்க்குள்ளிருந்து வரப்போன வார்த்தைகளை அவை உதித்த நெஞ்சங்களுக்குள்ளேயே உலர்த்திக் கொண்டார்கள்.

எப்படியோ ஒருவழியாகக் குளித்துவிட்டு, அக்காள் கொடுத்த ஒரு அச்சடிப் புடவையை, உடம்பைக் காட்டிய ஈரப் புடவைக்கு மேலே சுற்றிக்கொண்டே, மல்லிகா வீட்டுக்குள் போனபோது. இன்னும் அதே மாடியில். அதே இடத்தில், அதே 'போஸில்' அதே பார்வையுடன் நின்ற ரமணன், "என்னக்கா நீ, அவங்க குளிக்கிறது வரைக்காவது பொறுக்கக் கூடாதா" என்றான். அவன் சொன்னது அக்காள்காரிக்குக் கேட்கவில்லை. மல்லிகாவிற்குக் கேட்டது. அக்காளுக்கு, தான் சொன்னது கேட்கவில்லை என்பதும், கேட்கக்கூடாது என்பதும் அவனுக்குத் தெரியும். தப்பித் தவறிக் கேட்டிருந்தால், அக்காள், அங்கேயே அவனை வறட்டியைக் காயவைப்பது மாதிரி காய வைத்துவிடுவாள் என்பதும் அவனுக்குப் புரியும்.

அடடே இவனுக்குக் கூட மனிதாபிமானம் இருக்கே என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு நினைப்பில்லாமலே அவனை ஒருகணம் பார்த்துவிட்டு, மல்லிகா உள்ளே போனாள். அப்படிப் பார்த்தது தப்பாய்ப் போயிற்று. பல சினிமாக்களிலும், கதைகளிலும், கதாநாயகன், பலரை அடித்துப் போட்டுவிட்டு, அவர்களிடம் சிக்கிக்கொண்ட அபலைப் பெண்ணைக் காப்பாற்றிய பெருமிதத்தில் பார்ப்பானே ஒரு பார்வை - அந்தப் பார்வை தோற்கும்படி ரமணன் ஒரு பார்வை பார்த்தான் பிறகு 'முதலில் சினிமாவுக்குக் கூட்டிப் போகணும். அப்புறந்தான் மகாபலிபுரம்' என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

கணக்குப் போட்டதோடு அவன் நிற்கவில்லை. கணக்கு நோட்டில் ஒரு தாளைக் கிழித்து, காதல் காவியம் ஒன்றை வரைந்தான். மேல்நாட்டுக் கதையைக் காப்பியடித்து ஒரு எழுத்தாளர் எழுதிய காதல் வரிகளை, அப்படியே அசல் காப்பியடித்து, கடைசியில் "கண்ணே. கலங்காதே. உனக்கு நான் எனக்கு நீ இருவருக்கும் இடையே யாருமில்லை. யாருமில்லாத சமயத்தில் பேசுவதற்கு நீ துடிப்பது போலவே, நானும் துடிக்கிறேன்" என்று எவனோ ஒருவன், எவளோ ஒருத்திக்கு எழுதி, அவள் படிக்குமுன்பே இவனுக்குப் படித்துக் காட்டிய வரிகளையும், எழுத்துப் பிழைகளோடு எழுதி, சிலாக் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

மாலை மயங்கி, மையிருட்டு வந்ததும், வீட்டுக்கார அம்மா மெயின் ஸ்விட்சை போடாத சமயத்தில் எதற்கோ நடைவாசலுக்கு வந்த மல்லிகாவின் அருகே ரமணன் போனான். அவள் கைக்குள் கடிதத்தைத் திணித்துவிட்டு, வெளியே போய்விட்டான். அநேகமாக சினிமாவுக்கு டிக்கட் 'ரிசர்வ்' செய்வதற்காக போயிருக்கலாம்.

முதலில் திகைத்துப்போன மல்லிகா, எதுவும் புரியாமல், குழம்பிப் போனாள். அதை தெருவிளக்கருகே போய்ப் படிக்கலாமா என்று நினைத்தாள். பிறகு, அதைப் படிக்காமலே அந்தப் பயல், பகவத் கீதையைப் பற்றி எழுதியிருக்கவா போகிறான்? என்று நினைத்து. அவன் என்ன எழுதியிருப்பான் என்பதை அனுமானித்து, அவன் வீட்டுக்குள் வந்ததும், எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி அவனைக் கிழித்துப் போடவேண்டும் என்று நினைத்தாள் அவனை, பாதி காயாத சாண வறட்டிகளாலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன். தனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான் என்பதைவிட, கஷ்டப்படுகிற ஒரு பெண், பணக்காரப் பையன் கூப்பிட்டால் போயிவிடுவாள் என்பதுபோல் அவன் நினைக்கிறான் என்று உணர உணர. அவள் பத்ரகாளியாகிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், தனக்கு இவ்வளவு கோபம் இருக்கிறதா என்றுகூட ஆச்சரியப்பட்டு அசந்து போனாள்.

அந்தச் சமயத்தில், அவள் தந்தை பெருமாள் வந்தார்.

"என்னம்மா இங்கே நிற்கே? இன்னைக்கு வியாபாரத்துக்குப் போன இடத்துல், ஒரு பயல் என்கிட்ட கேட்காம்லே, என் கோணிமூட்டையை பஸ்ல ஏத்திட்டான். கோபத்துல் ஒரு தட்டு தட்டுனேன். ஒரு பல்லு கீழே விழுந்திட்டுது. கழுதைப் பயலுக்கு. நான் அடிக்கு முன்னாலேயே பல்லு ஆடிக்கிட்டு இருந்திருக்குமுன்னு நினைக்கேன். அந்தச் சமயம் பார்த்து, ஒரு போலீஸ்காரன் ஓடி வந்தான். கோணிக் கட்டை அப்படியே போட்டுட்டு, எங்கெல்லாமோ ஓடி, எதிர்ல வந்த பீஸ்ல ஏறி எப்படியோ வந்துட்டேன். கடைசில, அவனுக்கு, பல் டாக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்காத அளவுக்கு லாபம். எனக்கு நூறு ரூபாய் கோணி நஷ்டம் காலத்தைப் பாரு நாம எட்டடி பாய்ந்தால், நம்ம தரித்திரம் பத்தடி பாயுது. ரேசுக்குப் போகும்போதுகூட இப்படி நஷ்டம் வரல".

ஒரு குழந்தை, பள்ளியில் நடப்பதை அம்மாவிடம் சொல்வதுபோல், தன்னிடம் சொல்வதைக் கேட்டு, அவர் நூறு ரூபாய் நஷ்டப்பட்டதற்காக ஆறுதல் சொல்வதா அல்லது ரமணன் பயல் கொடுத்த கடிதத்தைக் காட்டி ஆறுதல் பெறுவதா என்பது புரியாமல், அவள் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தாள்.

வேண்டாம். இந்த லட்டரை பெரிசாக்க வேண்டாம். அப்பா அவனைக் கொலை பண்ணினாலும் பண்ணிடுவார். அதோடு தெருவுக்கு மறுபக்கம் இருக்கவங்க "இவள் வாங்காமலா அவன் கொடுப்பான்னு"கூட கூசாமல் சொல்லலாம். விஷயத்தை அப்படியே விட்டு அவன் மேலும் மேலும் எழுதினால் அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்.

மல்லிகா. கைக்குள் கசங்கியிருந்த கடிதத்தை அப்பாவுக்குத் தெரியாமல் இடுப்பில் வைத்து ஒரு கையால் அதைப் பிடித்து. மறு கையால் அதைக் கிழித்து. பிறகு இரண்டு கரங்களையும் பின்னால் வளைத்து, முதுகுப் பக்கமாகக் கொண்டுபோய், கிழிசல்களை மேலும் கிழித்து, கீழே போட்டுவிட்டு, அப்பாவிற்குப் பின்னாலேயே வீட்டிற்குப் போனாள்.

இரவு ஏறிக்கொண்டே இருந்தது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். உண்ட களைப்பில் தூங்குபவர்களைவிட உழைத்த களைப்பில் தூங்குபவர்களே அதிகம். படுத்துக்கிடந்த அந்த உழைப்பாளிகள், மூட்டைப் பூச்சிகள் கடிக்க முடியாத அளவிற்கு இறுகியிருந்த அந்த உட்ம்புகள், உயிர் வேறு, உடல் வேறாய் போனவர்கள்போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாய் கோணிக்கட்டைப் பறிகொடுத்த பெருமாள், துண்டை முகத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டே, தூக்கத்தில்கூட வெளியே தலைகாட்ட விரும்பாதவர்போல், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், தூங்கிக் கொண்டிருந்தார்.

மல்லிகாவால் தூங்க முடியவில்லை. ரமணன் கடிதத்தைக் கிழித்துப் போட்டவள், இப்போது, தன் நெஞ்ச அணுக்கள் கிழிவதுபோல் புரண்டு கொண்டிருந்தாள் திடீரென்று அவளுள்ளே ஒரு நினைவு. இந்த சரவணன் ஒரு இளைஞன்தான். இவனை மாதிரி எப்போதாவது, இப்படிக் காட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறாரா? அவரோடு ஒன்றாக நடந்திருக்கிறேன். கை படும்படியாய் நடந்திருப்பாரா?

திடீரென்று. அந்த நினைவுகளோடு இன்னொரு நினைப்பு. இப்படி ஒரு கடிதத்தை, இந்த சரவணன் எழுதியதாய் நினைக்கையில், மேனியெங்கும் இப்படிப் பரவசமானால், அவர் எழுதியிருந்தால்... எழுதியிருந்தால்... எழுதவில்லையே. சொல்ல வேண்டியதை, சொன்னபிறகு கூட 'எப்படி இருக்கே?' என்று கூட அவர் எழுதவில்லையே அவர் எப்படி எழுதுவார்? பெண்ணியத்தின் பெயரால் என்னோட தர்மசங்கடமான பிரச்சனையை இலைமறைவு காய் மறைவாய் சொன்னபிறகு, அவர் என்னையோ நான் அவரையோ பார்க்கவில்லையே! நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் விரும்பியிருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்னடி இது? ஏதோ பீச்சுக்குப் போனது மாதிரியும் சினிமாவுக்குச் சேர்ந்து போனது மாதிரியும் அவர் கையிலடித்துச் சத்தியம் செய்து கைவிட மாட்டேன்னு சொன்னது மாதிரியும்...

அப்படியும். இப்படியுமாக நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, எப்படியும் அவனைப் பார்க்கவேண்டும் என்று துடித்தாள். எப்படிப் பார்ப்பது? எப்படியாவது பார்க்க வேண்டும். அவனை மட்டுமல்ல, அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும். அவரைப் பார்க்கக்கூட வேண்டாம். அவர்களைப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கக்கூட வேண்டாம். 'அவரை'ப் பார்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும், அப்பா எழுவதுவரைக்கும், அவள் தளத்திற்கும், வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவரோ, நூறு ரூபாய் போனதுக்கு, நூறுமணி நேரம் தூங்கப் போகிறவர்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பலாமா? கூடாது. அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவங்களையே அப்பாவிடம் சொல்லும்படி சொல்லி விட்டுப் போகலாமா?

ஒரு மாதமாகப் பொறுத்திருந்தவள். அந்த ஒரு மணி நேரமும் பொறுக்க முடியாதவளாய் தவித்தாள். அப்பா அனுமதி கொடுப்பார் என்ற தைரியத்தில், அதிகாலையிலேயே குளித்தான். அக்காளின் கல்யாணப் புடவையை வாங்கிக் கட்டிக் கொண்டாள். தம்பியின் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

பெருமாள் எழுந்தார். 'டீ' குடித்தார். சிகரெட் பிடித்தார். மல்லிகா பக்குவமாகச் சொல்வதாக நினைத்து, படபடவென்று பேசினாள்.

"அப்பா, காலேஜுக்குத்தான் போகமுடியாமல் போச்சு அங்கே போய் என்னோட பி.யூ.சி.சர்டிபிகேட்டையும், டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்துடுறேன். அப்பா லட்டர் கொடுத்தால்தான் பிரின்ஸ்பால் சர்டிபிகேட் கொடுப்பார். அதனால், அப்பாகிட்ட போய் ஒரு லட்டரை வாங்கிட்டு உடனே - உடனேயே புறப்பட்டு காலேஜில் போய் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்துடுறேன். பியூசியில் முதல் வகுப்பில் வந்த சர்டிபிகேட் என்கிட்ட இருந்தால் எப்போதாவது பிரயோஜனப்படும். இல்லியாப்பா?"

பெருமாள், மகளையே பார்த்தார். சரஸ்வதியே அவதாரம் எடுத்திருப்பது போன்ற தோற்றம் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியவள். அந்த 'அற்பப்பயல்' வீட்டிலிருந்தால் பி.ஏ. முடிச்சிட்டு, எம்.ஏ. படித்துட்டு கலெக்டராகூட போயிருப்பாள் முதல் வகுப்பு வாங்கியவள். முதல் வகுப்பு மட்டும் படித்த சொந்த அப்பன்கிட்ட வந்ததால் பிடிப்பு சொந்தமில்லாமல் போயிட்டுது. ஏன், நான் அவளைப் படிக்க வைத்தாலென்ன? அது எப்படி முடியும்? அதுலவேற ஒரு மாசம் ஆயிட்டுதே. இந்த கோணிக்கட்டு போனதுக்கே நான் இவ்வளவு வருத்தப்படுறேனே... அவள் கண்முன்னால படிப்பு போனதுக்கு எவ்வளவு வருத்தப்படுவா? அப்பனுக்கும் மகளுக்கும் எவ்வளவு பொருத்தம்! நான் போலீஸ்காரனுக்குப் பயந்து கோணியை விட்டேன். இவள், ராமனுக்குப் பயந்து படிப்பை விட்டாள். கண்முன்னாலேயே, இரண்டுபேரும் கண்ணாய் நினைத்ததை கைவிட்டுட்டோம். கோட்டை ஆளவேண்டிய என் மகள், படிப்பையே 'கோட்டை' விட்டுட்டாள்! எப்படி இருந்த மகள், எப்படி இருந்த என் ராசாத்தி, என்னோட ரேஸ் பைத்தியத்தால் அவளுக்கு உதவ முடியாமல் ஆயிட்டு, கடவுளே நீ பயங்கரமான ஜாக்கிடா, உன்னை நம்பி வாழ்க்கைக் குதிரையில் பந்தயம் வைக்க முடியாது.

கணவன், மகளை அனுப்பி வைக்கத் தயங்குவதாக நினைத்து, செல்லம்மா 'ஒரு மாதமாய் அடைந்து கிடக்காள். போயிட்டு வரட்டும்' என்றாள்.

பெருமாள், மனைவி சொல்வதை மவுனமாகக் கேட்டுவிட்டு, பிறகு "உன் இஷ்டம். போகணுமுன்னால் போயிட்டு வா. ஆனால் அந்த 'அற்பன்'கிட்ட அதிக நேரம் பேசாதே. அதுக்காக பேசாமலும் வந்துடாதே. ஆயிரந்தான் இருந்தாலும், அவன் உன்னை வளர்த்தவன். கேட்பார் பேச்சைக்கேட்டு கெட்டுப்போன பயல். ஆனால் ஒண்ணு. நீதான் அவனுக்கு எதையாவது வாங்கிட்டுப் போகனுமே தவிர, அவன் கொடுக்கிற எதையும் வாங்கப்படாது. இந்த நாலு ரூபாய்தான் இருக்கு..."

"ஒரு ரூபாய் ஐம்பது பைசா போதும்பா..."

"பரவாயில்லை. இதுதான் நான் செய்யுற உருப்படியான செலவு. வச்சுக்கோ."

மல்லிகா, பணத்தை வாங்கிக் கொண்டாள். மீதிக் காசில், அப்பாவுக்கு ரசகுல்லா வாங்கிட்டுப் போகணும். அம்மாவுக்கு மசால் தோசை, நல்லா தின்பாங்க, மிச்சக் காசிருந்தால் சரவணனுக்கு ஒரு கைக்குட்டை.

மல்லிகாவிற்கு வெட்கமாக இருந்தது. அவன் பதிலுக்கு என்ன கொடுப்பான்? என்ன கொடுக்கணும்? இந்த அப்பா, அந்த அப்பாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்றாரே. நான் சரவணனைப் பார்க்கப் போறதும் தெரிந்தால்... அவர்கிட்டேயும் எப்படி எப்படி நடக்கணுமுன்னு சொல்வாரா?

அப்பா-அம்மாவைப் பார்க்கப் போகிற பாசத் துடிப்போடு. காதலித்தவனை காணப்போகிற நேச நெஞ்சோடு. அவள் புறப்பட்டாள். இதற்குள் விஷயத்தைப் புரிந்துகொண்ட 'இட்லி' ஆயா தங்கம்மா "வந்துடு கண்ணு... இருந்துடாதே" என்றாள். ராக்கம்மாள். நீ மட்டும் இங்கே வர்ல... நான் வீட்டைக் காலிபண்ணிடுவேம்மா..." என்றாள்.

மல்லிகா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். பெருமாள் பஸ் நிலையம் வரைக்கும் வழியனுப்ப எழுந்தார். செல்லம்மா தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டே, 'அண்ணன் அவளை நாலு அடி அடித்தாவது அங்கேயே இருக்கச் சொல்லணும்' என்று நினைத்துக் கொண்டாள்.

பெற்றவனும், அவருக்குப் பிறந்தவளும், வாசலைத் தாண்டப்போகிற சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்து பெருமாளின் பதினேழு வயது மகன் பரமசிவம் படி வாசலை உட்புறமாய்த் தாண்டினான். சொக்கலிங்கத்தின் அரிசி மண்டியில் வேலை பார்ப்பவன். வேளச்சேரியில் இருக்கும் அந்த கடையைக் கவனித்துக்கொண்டு, அந்த கடைக்கருகே உள்ள ஒரு சின்ன அறையிலேயே தூங்கிக் கொள்பவன். மல்லிகா வந்த பிறகும், இன்றுவரை அங்கேதான் இருந்தான். சொக்கலிங்கமும், அவனைப் போகச் சொன்னதில்லை. பெருமாளும் அவனை வரச் சொன்னதில்லை.

பெருமாள், மகனை செல்லமாய் அதட்டினார்.

"என்னடா... காலங் காத்தால, இங்கே ஏதும் அரிசி மூட்டை கொண்டு வந்தியா..."

"ஒரேயடியா வந்துட்டேன்..."

"ஏண்டா?"

"நம்மளால் அங்கே இருக்க முடியாது."

"அதுக்கு என்னடா அர்த்தம்? சொல்றதைச் சீக்கிரமாய் சொல்லித் தொலையேண்டா."

"ஒண்ணுமில்ல. வழக்கமா வாரது மாதிரி மாமா. கடையில கணக்குப் பார்க்க வந்தாரு கூட அந்த சகுனி ராமசாமியும் வந்தாரு வந்ததும் வராததுமாய் அக்காவ. ராமசாமி நன்றிகெட்ட நாயின்னும், கள்ளின்னும் கண்டபடி பேசினாரு நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். முடியல. 'எங்க அக்காவை பேசினால், இடுப்பை ஒடிச்சிடுவேன்’னு கத்துனேன். உடனே அவன் உன் அக்காதான் போயிட்டாள். உனக்கு எதுக்குடா இங்கே வேலை? இங்கே நடக்கிறதை அங்கே சொல்றதுக்காக இருக்கியா? மானமுள்ளவனாய் இருந்தால் போயேண்டான்னான். நான் 'சரிதான் போய்யா'ன்னுட்டு வந்துட்டேன். சரி பசிக்குது. இட்லி இருக்கா?"

செல்லம்மா. பதறிப் பதறிக் கேட்டாள்.

"மாமா உன்னை பேசாதபோது. நீ எதுக்குடா வந்தே..."

"முதல்ல உன்னை உன் அண்ணன்கிட்ட அனுப்பணும்மா. அக்காவ ராமசாமி கண்டபடி பேசுறான், மாமா தட்டிக் கேட்கல. அப்புறம் என்னை போடாங்கிறான். அதுக்கும் அவரு பேசாமல் இருக்கிறாரு மவுனம் சம்மதமுன்னுதானே ஆகுது? அப்படிப்பட்ட மனுஷன் கடையில் எனக்கென்ன வேலை? கட்டுனவனுக்கு ஒரு கடை, கட்டாதவனுக்கு எத்தனையோ கடை. எங்க அக்காளை அவன் பேசினதுக்கு ஒரு நாளைக்கு. இந்த ராமசாமியை கவனிக்கத்தான் போறேன். என்னைப் பேசினால் பேசட்டும். அக்காவை எப்படிப் பேசலாம்? இவள் கால் தூசிக்கு அவன் பெறுவானா?"

மல்லிகா, தம்பியையே வெறித்துப் பார்த்தாள். அவனைப் போகச் சொன்ன இடத்திற்கு, நான் போகக்கூடாது. தனக்காக வந்த தம்பியை, அவள் அழப் போகிறவள் போலவும், அழுது முடித்தவள் போலவும் பார்த்தாள்.

மல்லிகா சிந்தித்தாள். "அதோடு என்னையும் அந்த ராமசாமி எதையாவது பேசி, அதையும் அந்த அப்பா சம்மதத்தோட கேட்டுக்கிட்டு இருந்தால், என்னால தாங்க முடியாது. சரி. சரவணனையாவது பார்க்கலாமா... வேண்டாம். கூடாது. முடியாது. என்னை தோளோடு தோளாய் எடுத்து வளர்த்த அப்பாவே என்னை ஒருத்தர் திட்டும்போது சும்மா இருந்தார் என்றால், பாசமேது? பந்தமேது? இந்த சரவணன் மட்டும், என் புதிய நிலையை தெரிந்ததும், என்னிடம் பாராமுகமாய் இருக்கமாட்டார் என்கிறது என்ன நிச்சயம்? எதுவும் இல்லாத ஏழைகளுக்கு இருக்கக்கூடிய ஒரே சொத்து தன்மானந்தான். அதையும் விட்டால் எப்படி? நூறு ரூபாய் நஷ்டப்பட்டாலும், எனக்கு நாலு ரூபாய் நீட்டிய இந்த அப்பா... எனக்காக வேலையை விட்டுட்டு, அதுவும் முதலாளி மாதிரி தனியா நடத்தின கடையை விட்டுட்டு வந்த தம்பி. அங்கே போகாதே என்று சொல்கிற ஆயா... ராக்கம்மா... இவர்கள் பாசத்தையே என்னால் முழுசும் உள்வாங்க முடியலை. தி. நகருக்குப் போய் அவங்க பாசத்தையும் வாங்கித் தின்னு வயிறு குமட்ட வேண்டாம். நல்ல பேருப்பா தி.நகர்..."

மல்லிகா வீட்டிற்குள் போய், பட்டுப் புடவையைக கொடுத்துவிட்டு, நூல் புடவையைக் கட்டிக் கொண்டாள். கண் மையை அழித்துக் கொண்டாள். அவளின் அலங்காரம் எதுவுமே உதவவில்லை. ஆனால் அங்கே போவதற்காக, அவள் வைத்திருந்த ஒன்றே ஒன்றுதான் அவளுக்கு உதவியது. தம்பியின் கைக்குட்டை!

இடுப்பில், இருப்பது தெரியாமல் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அப்போதும் துக்கத்தைத் துடைக்க முடியாமல், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள்.

மல்லிகா, தன்னை மறப்பதற்காக, அந்த ஏழைக் குடித்தனக்காரர்களை அதிகமாக நினைத்து, சேவையில் செயல்பட்டாள்.

ரமணனை, இரண்டு நாள்களாகக் காணவில்லை. அவளுக்கு அது ஆச்சரியமாகவும், ஆனந்தமான ஆறுதலாகவும் இருந்தது.


18

ஒவ்வொரு வாரமும் ஒரு குடித்தனப் பெண், பொதுத் தளத்தைப் பெருக்கி, மதில்போல் விளங்கும் 'காவாயைக்' கழுவி, குழாயடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி, குளியலறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கு 'முறைவாசல்' என்று பெயர்.

ஒருநாள், செல்லம்மாவின் 'முறை' வாசல். அவள், மார்க்கெட்டுக்குப் போய்விட்டாள். சந்திரா, தன்னைப் பார்க்க வந்த புருஷனை வழியனுப்ப பஸ்நிலையத்திற்குப் போய்விட்டாள். இதர பிள்ளைகள் எங்கேயோ போய்விட்டன.

மல்லிகா, அந்த மாலைப்பொழுதில், குடித்தனக்காரப் பெண்களுடன், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். கால்வாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. களத்தில் தூசிகள் படிந்து கிடந்தன. மார்க்கெட்டுக்குப் போன செல்லம்மா, உடனே திரும்பிவிடுவாள் என்பதும், திரும்பிய உடனேயே, கால்வாயைக் கழுவி, தளத்தைத் தெளித்து, சகல வேலையையும் செய்துவிடுவாள் என்பதும், வீட்டுக்காரிக்குத் தெரியும். தெரிந்துகொண்டே, அவள் தெரியாதவள்போல சீண்டினாள். மாடியில் நின்றுகொண்டே போர்ப் பிரகடனம் செய்தாள்.

"பேமானி ஜனங்க முறைவாசல் செய்யாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்தால் ஒழுங்கா இருக்கணும். இல்லாவிட்டால் எதுக்கு இருக்கணும்? சுத்தத்தோட அருமை இவங்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டாங்களே. இன்னைக்கு அந்தக் கிழவி வரட்டும்... தூ... சீ... சே..."

மல்லிகா, சக பெண்களைப் பார்த்தாள். அவர்கள். தங்களைப் போன்ற ஏழைகள் சாகாமல் இருப்பதே தப்பு என்பதுபோல், அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். பலவீனமாக நோக்கினார்கள். அந்த பலவீனத்தை தனது பலமாக எடுத்துக்கொண்ட வீட்டுக்காரி, இப்போது மல்லிகாவை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே, மேலிருந்தபடியே கேட்டாள்:

"மல்லிகா! இது என்ன, தியாகராய நகர் வீடுன்னு நினைக்கிறியா? அம்மாதான் முறைவாசல் பண்ணலன்னா, நீ கூட பண்ணப்படாதா? பெரிய ராணின்னு நினைப்போ? மரியாதையா துடைப்பத்தை எடுத்து சுத்தம் பண்ணு. இல்லன்னால், நாளைக்கே காலி பண்ணுங்கோ. சீச்சி பேமானி ஜனங்க. சேற்றுல புரள்றவங்களை வீட்டுல வச்சால் இப்படித்தான். சீச்சீ."

மல்லிகாவிற்கு, கோபத்தைவிட வருத்தமும், மற்ற பெண்களுக்கு வருத்தத்தைவிடக் கோபமும் ஏற்பட்டன. மல்லிகாவிற்கு, ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு வெறி மடமடவென்று எழுந்து, ஒரு மூலையில் கிடந்த பொதுச்சொத்தான ஒரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, குழாயடியருகே, அவளைப்போல் காதறுந்து போய்க் கிடந்த ஒரு 'பைட்டியையும்" எடுத்துக்கொண்டு, சக பெண்களைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கிய நீர் அந்தப் பெண்களின் கண்களில் நெருப்பாக மாறியது. அவளது தவிப்பு, அவர்களிடம் கோபத்தணலாகப் போனது. அவளது திகைப்பு, அவர்களிடம் ஒரு தீர்மானமான முடிவாகப் போனது.

'கொத்து' வேலைப் பெண்ணான ராக்கம்மாள், எல்லோருக்கும் பொதுவாக. வீட்டுக்கார அம்மாவிடம் நிதானமாகக் கேட்டாள்.

"வீட்டுக்காரம்மா, நீ பண்றது கொஞ்சமும் நாயமில்ல. யாரையும் இப்படி அட்டகாசமா பேசாதம்மா. அதான் சொல்லிப்புட்டேன்."

'இட்லி' ஆயா இன்னொரு எதிர்க் கேள்வியைப் போட்டாள்.

"குயந்தே, நீ செய்றது நல்லா இல்ல. குயந்தே நல்லா இருக்கோமுன்னு திமிரா பேசாதே குயந்தே நானுகூடத்தான் பர்மாவுல ஒரு பங்களா வச்சிருந்தேன். ஜப்பான்காரன் குண்டுக்குப் பயந்து ஓடிவரச்ச ஆம்புடையானையும் பிள்ளிகளையும் குண்டுக்குப் பறிகொடுத்துட்டு இங்கே வந்தவள் குயந்தே! பங்களாவும் மோட்டார் பைக்கும் வச்சிருந்தபோதுகூட நானு யாரையும் மதிக்காமல் பேசுனதுல்ல. எனக்கே இந்த கதின்னா உனக்கு எந்த கதின்னு நெனைச்சிப்பாரு குயந்தே. இந்தப் பச்சக் குயந்தையை இப்படி அடாவடியா பாய்றதுக்கு எப்படிக் குயந்தே மனசு வருது?"

வீட்டுக்காரிக்கு ஆணவப் பேய், ஆத்திரமாகியது. எப்படி கெடக்கிறதுகள் எப்படி பேசுதுங்க! இதுவரைக்கும், 'ஊட்டுக்காரம்மா. ஊட்டுக்காரம்மா'ன்னு வார்த்தைக்கு வார்த்தை பணிவோடு பேசுற சனியன்கள் எப்படிப்பேசுறது பாருங்க! இவள்களை இப்படியே விட்டு வைக்கப் படாது. முளையிலேயே கிள்ளணும். முளையோடு கிள்ளணும்.

வீட்டுக்காரி, அவர்களைப் கிள்ளுவதுபோல் பேசினாள்.

"இது நல்லா இல்லை. சொல்லிவிட்டேன். கூட்டமா நின்று, எதிர்த்துப் பேசுற அளவுக்கு தெனாவட்டா? மரியாதையா எல்லாரும் காலி பண்ணிடுங்கோ. அவளைப் பேசினால், உங்களுக்கு என்ன வந்துட்டுது?"

ராக்கம்மா, சற்று உரக்கவே பேசினாள் "மல்லிகாவை பேசினால், எங்களைப் பேசினது மாதிரி. எங்களைப் பேசினால் மல்லிகாவைப் பேசினது மாதிரி...!"

"யூனியன் போடுறீங்களா?"

"அப்ட்டித்தான் வச்சுக்கோயேன்."

"என்னடி நீங்க? உங்க மனசுல என்னதான் நினைக்கிறீங்க? உங்க ஒற்றுமைக்கு பணியுறவள் நானுல்ல. நாளைக்கே வீட்டை காலி பண்ணியாகணும் துடப்புக் கட்டை மூஞ்சிங்க வந்துட்டாளுங்க"

"டீ போட்டு பேசினே, செருப்பு பிஞ்சிடும்."

"என்னடி சொன்னே? இன்னொரு தடவை சொல்லுடி"

இப்போது இன்னொருத்தி சவாலிட்டாள்.

"கீழே இறங்குடி கஸ்மாலம் கீழே இறங்குறியா, நானு மேல வரட்டுமா... இன்னொருவாட்டி துடைப்பக்கட்டைன்னு சொல்லுடி பார்க்கலாம். உன்ன கட்டையால சாத்தாட்டால், நானு ஹார்பார் கந்தசாமியோட சம்சாரம் இல்ல. கஸ்மால முண்டைக்கு 'வாய்வு' வந்தாலும் வந்துது, இந்த வீடே கஸ்மாலமா பூட்டுது... "மல்லிகா! நீ முறவாசல் பண்ணாண்டாம் துடப்பத்தைக் கீழே போடு, நீ அந்த துடப்பத்த கீழே எறியாட்டால், எங்களை அதனால் அடிக்கிறதுக்குச் சமானம். நீ கிளின் பண்ண வேண்டாம். அந்த ராங்கிக்காரி செய்றதை செய்துக்கட்டும்"

"போனால் போகுதுன்னு. பொறுத்துப் பொறுத்துப் போனால், கடைசில. எங்க கண்ணாட்டியையே பேசுறாள் உன்னை இதுவரைக்கும் தெனாவட்டுல விட்டு வச்சதே தப்புடி மல்லிகா. சொல்றதக் கேக்கமாட்டே..."

கந்தசாமி மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவள்போல் மல்லிகா துடப்பத்தைக் கீழே போட்டாள். ஒரு பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த தூசிகளும், சருகுகளும், மண் துகள்களும், அப்போதைக்கென்றே, பலமாக அடித்த காற்றில், சற்று மேலே எழும்பி, வீட்டுக்கார அம்மாவின் கண்ணில் படும்படியாக நடனமாடின. அவள் திகைத்து, திக்குமுக்காடி, ஒரு வாய்க்கு ஒன்பது வாய்கள் பதில் சொல்வதால், அதுவே அவளுக்கு 'முதலிரவை'ப் போல் அல்லாது, முதல் அனுபவமாக இருந்ததால், கன்னத்தை உப்பி. கண்களை உருட்டி, மாடிச் சுவரில் கைகளைக் குத்தி, செல்லாக் கோபத்தை, செலவழிக்க முடியாமல் திண்டாடியபோது, இட்லி ஆயா, நிஜமாகவே சமரசம் செய்ய நினைத்துத்தான் பேசினாள்.

"நான் அதுக்குத்தான் குயந்தே அப்போ பிடிச்சே உனக்கு புத்தி சொல்றேன். நம்மோட மரியாதியை நாமதான் காப்பாத்தணும். ஏழைங்க யானை மாதுரி... உட்கார்ந்திருக்கிறது வரைக்கும், சும்மா குந்திக்கிட்டு இருப்பாங்க எழுந்துட்டாங்கன்னா, அப்பால... யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களும் உன்கிட்ட பொறுத்துத்தானே போகிறோம். நீ குழாயடிக்கு வந்துட்டால், நாங்கள் தொலவுல போயிடுறோம். நீ வாசலுக்கு வந்தால், நாங்கள் விலகி நிற்கோம் போன மாசம் முப்பது ரூவாய் வாடகைப் பணதத முப்பத்தஞ்சா ஏத்துனே, கொடுத்தோமா. இல்லையா? கார்ப்பரேஷன்காரன் வந்தப்போ, நீ முப்பத்தஞ்சு ரூபா வாங்குனாலும், நாங்க பதினைந்துன்னு சொன்னோம் நீயே சொல்லு குயந்தே... நீயே சொல்லு"

"அப்படியும் நீ இந்த கக்கூஸ் கதவுக்கு ஒரு தாழ்ப்பாள் போடல. ரெண்டு மாசமா கதவு ஆடுது. இங்கே வந்து இருபது வருஷமாவுது... இன்னும் இந்த வீட்டுல வெள்ளையடிச்சத கண்ணால பார்க்கல. வெற்றிலை போடும்போது சுவர்ல பட்ட சுண்ணாம்பைத் தவிர எந்த சுண்ணாம்பும் படல. இருபது வருஷத்துல ஒருக்காகூட ஓடு மாத்தல. இதெல்லாம் ஆயா. எதுக்காகச் சொல்றேன்னா, நீ ஒண்ணைச் சொன்னால், அவளுங்க ஒன்பது சொல்ல பாயிண்ட் இருக்கு அதனால எல்லாரும் அனுசரிச்சுப் பூடணும். நீயும்... அவர்களை... அப்படி தத்தேறித்தனமா பேசியிருக்கப் படாது... அதுகளும் உன்ன வீட்டுக்காரம்மாங்கிற மதிப்பில்லாம. புறம்போக்குத்தனமா பேசியிருக்கப்படாது... சரி. சரி... விட்டுத் தள்ளுங்கோ. வேலையைப் பாருங்கோ."

குடித்தனப் பெண்கள், விட்டுத் தள்ளுவதுபோல் தத்தம் வீட்டுக்குப் போய்விட்டார்கள். ஆனால், வீட்டுக்காரி விடத் தயாராக இல்லை. அவர்களை, அந்த வீட்டில் இருந்து தள்ளும் வரையும் அவள் விடத் தயாராக இல்லை. மனதுக்குள்ளே பேசினாள்:

'என்ன ஆனாலும் பார்த்துட வேண்டியதுதான்... என்னோட அண்ணன் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருக்கான். பெரியப்பா மகன், 'கோட்டையில' வேலை பார்க்கிறான். பெரிய அண்ணா, நாலு லாரி வச்சுருக்கார், சின்ன அண்ணா வக்கீலாய் இருக்கார். உங்களை மாதுரி கைவண்டி இழுக்கல. கட்டிடம் கட்டுற இடத்துல செங்கல் எடுத்துக் கொடுக்கல. கோணி வாங்கப் போகல. உங்களை.. .போலீஸ் மருமகன்கிட்ட சொல்லி உதைத்து... 'கோட்டை' அண்ணன்கிட்ட சொல்லி சிதைத்து... பெரிய அண்ணாவோட லாரிங்களை வைத்து... மோதியாவது... வக்கீல் அண்ணா மூலம் கோர்ட்டு கோர்ட்டா ஏற்றியாவது... உங்களை... தொலைக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்லை... வீட்டுக்காரியே இல்லை..."

இப்படி, தன் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் வேலைகளையும் நினைத்துப் பார்த்த அந்த வீட்டுக்காரி, தன் வீட்டுக்காரனை மட்டும் நினைக்கவில்லை.

சென்னைத் தமிழில் சொல்லப்போனால், அந்த ஆசாமி சரியான 'டப்பா'. அதுவும் வீடு அவள் பெயருக்கு இருந்ததால், அவர் வெறும் தகர டப்பாவாகப் போனவர். என்றாலும் அந்த தகர டப்பாவை வைத்தாவது, அவர்களுக்கு சலசலப்பைக் காட்டவேண்டும் என்பதுபோல், அப்போதுதான் உள்ளே வந்த அவரிடம், குடித்தனப் பெண்கள் சொன்னதை, கூட்டி தான் சொன்னதை அமுக்கி, அவரை ஊதிவிட்டாள்.

அந்த ஊதலில் பருமனாய்ப்போன அவர், ஒவ்வொருத்தியின் வீட்டு முன்னாலும் வந்து நின்று "என்ன நினைச்சீங்க தெரியாமத்தான் கேட்கிறேன். தொலைத்துப்புடுவேன். நாங்க மனசு வச்சால் நீங்கள் இந்த தெருவிலே இருக்க முடியாது” என்று கத்திவிட்டு, திரும்பிப் போய்விட்டார்.

குடித்தனப் பெண்கள். குறிப்பாக ராக்கம்மாவும், கந்தசாமியின் மனைவியும் அந்தக் கிளிப்பிள்ளையைப் பார்த்து. சிரித்தார்கள். பிறகு, அவரை அனுதாபத்தோடு பார்த்தார்கள் பிறகு 'ஆம்புளைக்கு' மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து. அது 'தெரியாம கேக்குற' ஆம்புளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மேலும் நினைத்து, பயந்துவிட்டவர்கள்போல். தலைகளை கட்டாயப் படுத்திக் கீழே போட்டுக் கொண்டார்கள். தகர டப்பா, தேர்தலில் வெற்றி பெற்று விட்டவர்போல், மனைவியிடம், 'டிபன்' மன்றாடாமலே கிடைக்கும் என்று நினைத்து, அந்த வேகத்திலேயே, மாடிக்குப் போய்விட்டார். 'குடித்தனப்' பெண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் மல்லிகாவின் அம்மா செல்லம்மா வந்துவிட்டாள். நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பெண்களிடம் "அய்யோ ஆம்புளைங்களுக்கு தெரிய வேண்டாம். அப்புறம் எங்க வீட்டுக்காரரை கட்டுப்படுத்த முடியாது. என் மகன் பரமசிவம், ஒரே ஆட்டமாய் ஆடுவான்... விஷயம் நம்மோடேயே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டு, முறைவாசல் செய்யப் போனாள். வீட்டுக்காரி மாடியில் இருந்தே கத்தினாள்.

"செல்லம்மா உன் பொண்ணை அடக்கிவை, செட்டு சேர்த்துக்கிட்டு கலாட்டா பண்றாள்... இந்த பருப்பு இங்கே வேகாது... ஜாக்கிரதை."

செல்லம்மா அவளைப் பாராமல், அவள் பேசுவதுவரைக்கும் துடைப்பத்தையே பார்த்தாள். பிறகு, செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.


19

இரவு வந்தது. வேலைக்குக் சென்ற எல்லோருமே வந்துவிட்டார்கள்.

வெளியே உள்ள களத்தில் பாய்விரித்து, உட்கார்ந்துகொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். மல்லிகா, சந்திரா. ராக்கம்மா முதலியவர்கள் இன்னொரு பக்கத்தில் கும்பலாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாளும் இருந்தார்.

"என்ன நாய்க்கரே... எத்தன நாளைக்கு... இந்த சைக்கிள் ரிக்க்ஷாவை வச்சிக்கிட்டு அவஸ்தப்படப் போறீக? பேசாம ஒரு ஆட்டோ ரிக்க்ஷா வாங்கப்படாதா?”

"ரிக்ஷா மேல இருக்க 'டாப்பையே' சேஞ்ச் பண்ண முடியல... ஆட்டோவுக்கு காசுக்கு எங்க போறது? கேக்கேன்னு நீங்க தப்பா நினைக்கப்படாது... உங்ககூட மெட்ராசுக்கு வந்தவங்கெல்லாம் இன்னைக்கு வீடு வாங்கிட்டான். ஆனா நீங்க இன்னும் கந்தல் கோணிய கட்டிக்கினே கீறது நாயமா... குதிரையைக் குறையுங்கோ."

"குறைக்கிறதாவது. அடியோட விட்டுட்டேன். அப்படியும் கட்டல. பேசாம நம்ம செட்டியார் மாதுரி... துணி வாங்கி ஏலத்துல போட்டு விக்கலாமான்னு பார்க்கேன்"

அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக பேச்சு நடந்தது. தேர்தல், அரசியல்வாதிகள். சினிமா, எதையும் விடவில்லை.

'வீட்டுக்காரம்மா' மாடியில் இருந்து பார்த்தாள். வசதியே இல்லாத இந்த அசதிக்காரர்களால் எப்படி சிரிக்க முடிகிறது? எப்படி ஒற்றுமையாக இருக்க முடிகிறது? அவள் வயிறு எரிந்தது. அப்போது, சில சின்னப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இட்லி ஆயா, தன் நொள்ளைக் கண்ணுக்கு மருந்து போடப்போனாள். மல்லிகா, தோழிகளுக்கு ஒரு கைக்குட்டையை வைத்து, அதில் எப்படிப் பூ போடுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று விளக்குகள் அணைந்தன. வீட்டுக்காரி, மாடியில் இருக்கும் 'மெயின் ஸ்விட்சை' 'ஆப்' செய்தாள். அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். ஏதோ பேசப்போன ராக்கம்மாகூட, வம்பு வேண்டாம் என்பதுபோல். பேசாமல் இருந்தாள். வயிற்றில் எரிந்ததை விளக்கை அணைத்து, வீட்டுக்காரி ஆற்றிக்கொண்டாள். அப்படியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், அவள் வயிறு. மீண்டும் எண்ணெய் இல்லாத திரிபோல் எரிந்தது. அவள் உள்ளே போனாள். தகர டப்பா மச்சான் வெளியே வந்தார்.

"தூங்குங்களேய்யா. இப்படிப் பேசினால் எப்படி? நானு தூங்க வாணாமா. நாங்கல்லாம் மனசு வெச்சா ஒங்களால வாய முடியுமா... இன்னாயா பேச்சு..."

எதிர்ப்புக் குரல் கொடுக்காமலே, எல்லோரும் தூங்காமலே படுத்தார்கள். இருக்கிற பிரச்சினைகள் ஏராளம். இவன் பிரச்சினை வேறா? வேண்டாம். வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவான். அப்புறம். வீடு தேடி தெருத்தெருவாச் சுத்தனும் அவன் வீட்ல ரேடியோ பாடும்போதே நம்மை பேசக்கூடாதுன்னு சொல்றான் டப்பாப் பயல்.

அனைவரும் தூங்கி விட்டார்கள். அப்படியே தூங்கிப் யோனார்கள் ஆனால், 'வீட்டுக்காரியால் தூங்க முடியவில்லை. இவர்களுக்கு. நாம் யாரென்று காட்டனும் ஒருத்தியையாவது தொலைத்துக் கட்டணும் மல்லிகா சிக்கினால்... நல்லது.

இரண்டு நாட்களில், ரமணன் வந்துவிட்டான். அவனைக் காணாமல் கண்ணீர்விட்டு, கலங்கிக் கொண்டிருக்கும் மல்லிகாவை நிம்மதியில் ஆழ்த்துவதுபோல் வந்துவிட்டான். அதேசமயம். தான் எழுதிய கடிதத்தை அவள் யாரிடமாவது காட்டி, நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருக்குமோ என்று உள்ளுர உதறலுடன் வந்தான். எல்லோரும் உதாசீனம் செய்ததில் அவனுக்குச் சந்தோஷம். மல்லிகா சொல்லவில்லை. ஏன் மல்லிகா சொல்லவில்லை? இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படியாவது...

மத்தியான வேளை. 'ஹார்பார்' கந்தசாமி, வேலைக்குப் போகவில்லை. அங்கே வேலைநிறுத்தமாம். படுத்துக் கிடந்தான்.

மல்லிகா, அவன் மனைவிக்கும், இதர பெண்களுக்கும், சிலேட்டில், 'க, ங, ச' வை எழுதிக் காட்டிவிட்டு, பிறகு ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்காட்டிக் கொண்டிருந்தாள். இட்லி ஆயாவும் "பலமா படி குயந்தே... ஆயா காதுல நுழையல..." என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரி பார்த்தாள். பாடத்தைக் கேட்டாள். அவளும், மல்லிகாவைப் போல். 'பாடம்' புகட்ட நினைத்தாள். திடீரென்று ரேடியோவைப் போட்டாள். பலமாக அதைக் கத்தவிட்டாள். அவள் படிப்பது கேட்காதபடி உச்ச நிலையில் வைத்தாள். எல்லாப் பெண்களும், முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர, அவளை முறைக்கவில்லை.

மல்லிகா. சலிப்போடு எழுந்தாள். எழுந்தவள். நடைவாசல் பக்கமாய் போனாள். எதிரே, ரமணன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் போய்விட்டாள். இளித்துக்கொண்டே வந்த ரமணன், அவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. எப்படி நடந்துகொண்டானோ... புரியவில்லை. திடீரென்று மல்லிகா கத்தினாள்.

"முட்டாள் என்னைப் பற்றி என்னடா நினைத்தே? எருமை மாடு. செருப்பு பிஞ்சிடும்... ராஸ்கல்..."

எல்லாப் பெண்களும் அங்கே ஓடினார்கள். ரமணன் எந்தப் பக்கமும் ஓட முடியாமல், ஒளியவும் முடியாமல், எதிர்பார்த்த இனிமை, எருக்கம்பால் போல் அரிக்க திணறிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பார்த்ததும் மல்லிகா விம்மினாள். இதற்குள். செல்லம்மாவும். சந்திராவும் பதறிக்கொண்டே வந்தார்கள். 'ஹார்பார்' கந்தசாமியும். கண்ணைக் கசக்கிக்கொண்டே வந்தான். ஓடப்போன ரமணனை, ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரி இறங்கிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா.. என்ன பண்ணினான்..."

மல்லிகாவால், முதலில் பேச முடியவில்லை. முயன்றாலும் முடியவில்லை. திக்கித் திணறிவிட்டு, துள்ளும் வெட்டுக்கிளிபோல், விட்டு விட்டுப் பேசினாள். பிறகு வேகமாகப் பேசினாள்.

"இவன்... இந்த முட்டாள்... என் கையைப் பிடிச்சுக்கிட்டு பதில் லட்டர் எழுதிட்டியா'ன்னு கேக்குறான். இரண்டு நாளைக்கு முன்னால... ஒரு லட்டர் கொடுத்தான். நான் படிக்காமலே கிழிச்சிட்டேன். அநாவசியமான ரகளை வேண்டாமுன்னு சும்மா இருந்துட்டேன். இன்றைக்குக் காலையில்கூட இவனைப் பார்த்து காறித் துப்பினேன். (அவள் காறித் துப்பியதை ரமணன், அவள் தனக்கு முத்தம் கொடுக்கப் போவதாக சமிக்ஞை செய்வதாக நினைத்திருந்தான்.) அப்படியாவது இந்த தடிமாடு திருந்திடுவான்னு நினைத்தேன். கடைசியில, என் கையைப் பிடித்து"...

மல்லிகா மேற்கொண்டு பேச முடியாமல் ஒப்பாரி போட்டே அழுதாள்.

"அப்பா... அம்மா... என்னை எதுக்காகப்பா இங்கே இருக்க வைக்கிறீங்க..? என்னை வந்து கூட்டிட்டுப் போங்கப்பா என்னை கையைப் பிடிக்கலாமுன்னு ஒரு காலிப் பயல் நினைக்கிற அளவுக்கு ஆயிட்டேனே... ஆயிட்டேனே.. அய்யோ... யாராவது என்னை... தியாகராய நகர்ல கொண்டு விட்டுடுங்களேன்"... "அப்பா... அம்மா என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... முடியாதும்மா... அம்மா... அம்மா..."

சுற்றி நின்ற பெண்களால், கோபத்தை அடக்க முடியவில்லை. ஒருத்தி ரமணனின் சட்டைக் காலரையும், இன்னொருத்தி, அவன் கழுத்தையும் பிடித்துக்கொண்டு, “ஏழைப் பொண்ணுன்னால் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற நெனைப்பாடா கஸ்மாலம் காண்டாமிருகம் கோயக்கண்ணா... இருக்க முடியாட்டி உன்னோட அக்காள இஸ்த்துக்க வேண்டியது தானடா..." என்று.சொல்லிக்கொண்டே பெண்கள். அவனை ஆளுக்கொரு பக்கமா இழுத்தபோது, ஹார்பார் கந்தசாமி, "ஒத்திக்கங்கமே..." என்று சொல்லிக்கொண்டே ரமணன்மீது பாய்ந்தான். பல பளுவான மூட்டைகளைத் துக்கும் அவன். அவனை ஒரே தூக்காகத் தூக்கி, உள்ளே கொண்டுவந்து வீட்டுக்கார அம்மாவின் முன்னால் போட்டான். போடப்பட்டவனை மீண்டும் தூக்கி நிறுத்தி. கன்னத்திலும், காதுகளிலும், கும்மாங்குத்துக்களை விட்டுவிட்டு, பிறகு "ஒயுங்கா இரு... இல்லன்னா... உயிர எடுத்துடுவேன்..." என்று சொல்லி விட்டு. ஒரு தூணில் போய் சாய்ந்து கொண்டான்.

தம்பி, அடிபடுவது வரைக்கும் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, பிறகு அவன் விடுபட்ட பிறகு, வீட்டுக்காரி கத்தினாள்.

"எப்படியோ ஜோடிச்சி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, என் தம்பிய அடிச்சிட்டிங்க அவன் கையை இவள் பிடித்தாளா... இவள் கையை அவன் பிடித்தானான்னு தெரியாமலே அடிச்சிட்டிங்க இல்ல? ஒரடிக்கு ஒன்பது அடி கொடுக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்ல..."

கந்தசாமிக்குப் போன கோபம் மீண்டும் வந்தது. பேசாம போ... மே... பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். அந்த கம்மனாட்டிய அடக்கத் தெரியல.. பேசுறாள் பேச்சு."

"ஏய்... என்னையாடா. மேன்னு சொல்ற. நான் எருமை மாடாடா இந்த மல்லிகா... அவனைக் கண்ணடிக்கிறது... உனக்குத் தெரியுமா..."

"இந்த பாரும்மா! யாரை வேணுமுன்னாலும் பேசு. மல்லிகாவைப் பேசுன... வாய்... வெத்திலை பாக்கு பூட்டுக்கும். பொம்மனாடடியாச்சேன்னு பாக்கேன், நீ டா போட்டதக்கூட பொறுத்துக்கினேன்... மல்லியப் பேசுனே... நாறிப் போயிடுவே..."

வீட்டுக்காரி, கீழே கிடந்த தம்பியைத் தூக்கிக் கொண்டே, மாடிக்குப்போய், அங்கிருந்து பேசினாள், 'அம்மா' 'அம்மா' என்று சொல்லும் ஒருவன், 'மே' என்று சொல்லிவிட்ட திகைப்பிலேயே, சிறிதுநேரம் தடுமாறிவிட்டு, தாறுமாறாகப் பேசினாள்.

"என் தம்பிய கைவச்சுட்டல்ல? பாரு வேடிக்கையை... டேய்... ரமணா... இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு போன் பண்ணுடா... வக்கீல் அண்ணாவுக்கு டெலிபோன் செய்டா. பெரியப்பா மகனுக்கு தெரியப்படுத்துடா... ரெண்டுல ஒண்ணப் பார்த்துப்புடலாம். பழிக்குப்பழி வாங்காம விடப்போறதுல்ல..."

ரமணன் வெளியே ஓடினான்.

பத்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ வந்து அலறியது.

இருவரும். ஆட்டோவில் ஏறினார்கள். கந்தசாமி அலட்சியமாக இருந்தான். அவன் மனைவி அழப்போனாள்.

"அய்யோ... போலீஸ் வந்து உன்னைக் கூட்டிக்கினு போனால் நான் இன்னா பண்ணுவேன்? ஜாமீனுக்குக்கூட ஆளுங்க இல்லியே போலீஸ்காரன் உதைப்பானே, உனக்கு வேற ஜூரமாச்சே, பூட்ஸ் காலால மிதிப்பானே."

"சும்மா இரும்மே. போலீஸ்னா கொம்பா..."

மல்லிகா. கந்தசாமியையே பார்த்தாள். போலீஸ்காரர்கள் உதைத்தாலும் பரவாயில்லை என்பதுபோல் அவன் தைரியமாக இருந்தான்.

"அண்ணா... அண்ணா..." என்று விம்மினாள் மல்லிகா. கந்தசாமி அதிர்ந்து போனான்.

"என்னம்மா... நீ... பச்சைக் குழந்தை மாதிரி... இப்போ இன்னாதான் நடந்துட்டுது? உன் பேரு. அனாவசியமாய் கெடுமேன்னுதான் அந்த கம்மனாட்டிய அத்தோட விட்டேன். அயாதம்மா... இந்தாயாரு, நீ அயுறதப் பாத்துட்டு... அம்மா அயுவது. அப்பால எனக்கும் கண்ணீர் வருது."

எல்லோரும், ஒருவித திடுக்கிடும் எதிர்பார்ப்புடன் இருந்தபோது, ஒரு டாக்சியில் இருந்து, இரண்டு போலீஸ்காரர்களும், சப்-இன்ஸ்பெக்டரும். வீட்டுக்காரியும், ரமணனும் இறங்கினார்கள். வீட்டுக்காரி "இவன்தான். இவள் காலரைப் பிடித்தாள். அதோ அவள் கழுத்தை நெரித்தாள். இந்த செல்லம்மாதான் தூண்டிவிட்டது. இவளத்தான் மொதல்ல உதைக்கணும்" என்றாள், இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு.

சப்-இன்ஸ்பெக்டர். பேசாமல் கோபத்தோடு நின்றபோது. போலீஸ்காரர்களில் ஒருவர். கந்தசாமியை நெருங்கினார்.

"ஏண்டா சோமாறி... நீ என்ன பெரிய ரவுடியா..."

"நான் பெரிய ரவுடியும் இல்ல. சின்ன ரவுடியும் இல்ல. சாதாரண மனுஷன் சார்."

"எதிர்த்தா பேசுறே கயிதே."

"உன்னை என்ன பண்றோம் பாரு. இந்தாப்பா, இவன் கையை மடக்கிக் கட்டு," என்றார் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாக.

ஒரு போலீஸ்காரர் கந்தசாமியின் கைகளை வளைத்துப் பிடிக்கப் போனார்

மல்லிகா நடப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஏதோ ஒன்று. அவளுள் பிறந்து, அவளுள் வளர்ந்து. அவளுள் நின்று, அவளைவிட பெரிதானதுபோல் தோன்றியது. கல்லூரி மேடைப்பேச்சின் போது நிற்பாளே... அப்படிப்பட்ட கம்பீரம்... அப்படிப்பட்ட அஞ்சாப் பார்வை.

"எக்ஸ்கியூஸ் மீ... நீங்க சப்-இன்ஸ்பெக்டர்தானே..."

"பார்த்தால் எப்படித் தெரியுது?"

"சார்... இந்த அகங்காரமான பேச்சு வேண்டாம். நீங்கள் நடந்ததை விசாரிக்காமலே ஒருத்தரை மட்டும் உதைக்கப் போகிறது சட்ட விரோதம். இந்த அம்மாவோட அண்ணன் இன்ஸ்பெக்டர். அவரோட செல்வாக்குல நீங்கள் வந்திருக்கிங்கன்னு தெரியும். இவன்... என்னைக் கெடுக்க வந்தான். என் அண்ணா அவனை தற்காப்புக்காக அடித்தது உண்மைதான். நான் இப்பவே புகார் எழுதித் தாரேன். கெடுக்க முயற்சி செய்கிறவனை நீங்கள் பதினைந்து நாள் காவலில் வைக்கணும் நான் வேணுமுன்னாலும் ஸ்டேஷனுக்கு வாரேன். இப்படி இல்லாமல், அண்ணனை மட்டும் நீங்க கூட்டிக்கிட்டு போறதாய் இருந்தால், நான் போலீஸ் கமிஷனர்கிட்ட போயிட்டு, அப்படியே முதலமைச்சர் கிட்டயோ கவர்னர் கிட்டயோ போகவேண்டியதிருக்கும்."

மல்லிகா ஆங்கிலத்திலேயே பேசினாள் - தாய்மொழியில் பேசுவதை அதிகாரிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவல நிலையை உணர்கிறவள்போல.

சப்-இன்ஸ்பெக்டர் சிறிது யோசித்துவிட்டு, "மிஸ்டர் ரமணன். நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. யோவ்! கந்தசாமியோட கையை விடுய்யா." என்றார்.

ரமணன், அக்காளுக்குப் பின்னால் ஒளிந்தான். "அண்ணா போன் போட்டு சொன்ன பிறகும்... இவனையா கூப்பிடுறீங்க..." என்று வீட்டுக்காரி சொன்னபோது, மல்லிகா, பிடிக்கவேண்டிய இடத்தைப் பிடித்தாள்.

"பார்த்தீங்களா சார்... என் அண்ணா அவரை அடிச்சார்னு நீங்கள் வரவில்லை. யாரோ போன் பண்ணினாங்கன்னு. நீங்கள் வந்திருக்கீங்க..."

சப்-இன்ஸ்பெக்டருக்கு. வீட்டுக்காரி மீது கடுமையான கோபம். துப்புக்கெட்ட மூதேவி அப்பன், குடிலுக்குள் இல்லைங்கிறது மாதிரி... போன் சமாச்சாரத்தை சொல்றாளே..!

பிறகு சப்-இன்ஸ்பெக்டர் வந்த வேகம் எங்கேயோ போக, சிரித்துக்கொண்டே பேசினார்.

"நீங்கல்லாம் பெரியவங்க... ஒற்றுமையாய் இருக்கணும். ஒரு தாய் மக்கள் மாதுரி பழகனும், ரமணன்! உங்களுக்கும் சிஸ்டர் இருக்கும்! அதே மாதிரி இந்த பாப்பாவையும் பார்க்கணும். மல்லிகா நீங்களும், அவர் தற்செயலாய் பார்க்கிறதையும் தப்பா நினைக்கப்படாது. கந்தசாமி இனிமேல் கைநீட்டுற வேலையை வச்சுக்காதே. நாங்கள் எதுக்கா இருக்கோம்? இனிமேல் இந்த மாதிரி ரகளை வந்தால், லாக்கப்பில் தள்ளிடுவேன்."

"எல்லோரையுந்தானே சார்" என்றாள் மல்லிகா.

ஆமாம்... எல்லோரையுந்தான்... யாராய் இருந்தாலும்... எங்களுக்கு ஒரே மாதிரிதான்"

சப்-இன்ஸ்பெக்டர். கீழே விழுந்தாலும் மண்படாத லத்திக் கம்பைத் தட்டிக்கொண்டே போலீஸ்காரர்களுடன் போய்விட்டார். எல்லோரும் மல்லிகாவைப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். என்னமாய்... இங்iசுல விளாசுகிறாள்... அடேயப்பா.

வீட்டுக்காரி, அடைகாக்கும் கோழி மாதிரி, வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். வெளியே தலைகாட்டவில்லை.

அதேசமயம், 'இட்லி' ஆயா பேசுவது, காதுக்குள் விழுகிறது.

"நீ நிசமாவே... ராசாத்தி குயந்தே... ராசாத்தி... நீ காட்டியும் இல்லாட்டா நம்ம கந்தசாமியை... போலீஸ்காரங்க... கந்தரு கோலமா ஆக்கியிருப்பாங்க... நீ... தியாகராய நகர்ல... பெரிய வீட்ல இருந்து இங்கே வந்தப்பபோ... ஆயா அழுதேன் குயந்தே... அழுதேன்... ஆனால் ஆண்டவனாப் பாத்துத்தான் ஒன்னை... அனுப்பி இருக்கார் குயந்தே... அனுப்பி இருக்கார்"

மாலையில் வீட்டுக்கு வந்ததும், விஷயத்தைக் கேள்விப்பட்ட பெருமாள் "எடுடி... கத்தியை" என்றார். பரமசிவம் பாயப் போனான். செல்லம்மா புருஷனையும், மல்லிகா தம்பியையும் பிடித்துக் கொண்டார்கள்.


2O

ஒரு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.

எதிரிகள் ஒட்டுமொத்தமாகச் சேரும்போது அவர்களில் மிகவும் ஏலாத ஏழை மீதுதான். அதிகமாகக் கோபம் வரும் என்பார்கள் இதுபோல், வீட்டுக்காரிக்கும். ஊசிப்போன இட்லிபோல் தோன்றும், 'இட்லி' ஆயாவான தங்கம்மா மீதுதான் அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது. சமயத்தை எதிர்பார்த்திருந்தாள்.

அந்த வீட்டின் வெளித்திண்ணையில், ஆயா கடை போட்டிருந்தாள். கரிப்புகையாலேயே கறுத்துப்போன ஒரு ஸ்டவ் அடுப்பில் நெருப்பு மூட்டி, வாணலியில் உளுத்தம் பருப்பு மாவை, பிடித்துப் பிடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவை, 'கடுக்கன்கள்' கழட்டப்பட்ட காதுகள் மாதிரி, மெது' வடைகளாக மலர்ந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே சுடப்பட்டி இட்லிகள், ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் வளைவில் கட்டப்பட்டிருந்த கோணி, பாதி தூரம் தொங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து கண்ணாடிப் பாத்திரங்களில் பல்பம், நிலக்கடலை மிட்டாய் போன்ற வகையறாக்கள் நிரம்பி இருந்தன. சில பெண்கள், இட்லிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருசில சிறுவர்கள், வேர்க்கடலை மிட்டாய்களையும், கையில் இருந்த காசுகளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் எட்டு மணிக்கு எழும் வீட்டுக்காரி, அன்று சீக்கிரமாக துயில் கலைந்திருக்க வேண்டும். திண்ணைக்கு அருகே வந்து, அதனுடன் ஒட்டிப் போட்டிருந்த கம்புத் துணைப் பிடித்துக்கொண்டே முதலில் செருமினாள். ஆயா, திரும்பிப் பார்த்ததும் கர்ஜித்தாள்.

"ஆயா... ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது... போன வாரமே... இனிமேல் திண்ணையில்... கடை போடப் படாதுன்னு சொன்னேமுல்ல? ஒன் செவிட்டுக் காதுல விழலியா... நான் சொல்லியும்... திண்ணையை பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தமின்னேன்... ஒன்னால திண்ணையைக் காலி பண்ண முடியுமா... முடியாதா.. எனக்கு இப்போவே தெரியணும்...."

ஆயா, அவளையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தாள். மலர்ந்த வடைகள், வாணலியில் கருகிக் கொண்டிருந்தன.

"ஒன்னத்தான்... சொல்றது காதுல விழல? ஒனக்குல்லாம் சொல்றதோட நிறுத்திக்கிறது தப்பு..."

ஆயா மன்றாடினாள்.

"குயந்தே... நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே போட்ட கடை குயந்தே... ஒனக்குக்கூட அப்போ ஒசில வடை தந்திருக்கேன் குயந்தே. ஒன் நயினா... இந்த வீட்டை வாங்கு முன்னால... இருந்த புண்ணியவான்தான்... நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு. தங்கம். பேசாம திண்ணையிலேயே... இட்லி வடை போடு... நீ போட்டால்... திண்ணையிலே வழக்கமா உட்காருற ரெளடிப் பசங்களையும் பகைக்காமலே விரட்டிடலாமு'ன்னு சொன்னாரு... அந்த மவராசன்தான் கடைபோட காசு கூட கொடுத்தார். ஒன் நயினாவும் கண்டுக்கல... முப்பது முப்பத்தஞ்சு வருஷமா... இங்கேயே கடை போட்டிருக்கேன் குயந்தே... நீ காலி பண்ணச் சொல்றது நாயமா குயந்தே..."

'குயந்தே' இப்போது, கூப்பாடு போட்டது.

"ஒன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்டே... திண்ணைய... அசிங்கமா வைக்க முடியாது... மரியாதியா... இப்பவே கீழே இறங்கு... இறங்குறியா... இல்ல இறக்கட்டுமா?"

"இப்படிச் சொன்னா எப்படி குயந்தே... இந்த தள்ளாத வயசுல. எங்கே குயந்தே போவேன்..."

"எங்கேயாவது போ... எனக்கென்ன... தெருவுல போற நாய்க்கெல்லாம்... நான் இடம் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா..."

"எனக்கு எதுக்கு மரியாதி கொடுக்காட்டாலும்... வயசுக்காவது மரியாதி கொடு குயந்தே... நாயி நரியின்னு வாய்க்கு வந்தபடி பேசாத குயந்தே... அப்புறம் ஒன் வாய்தான் அழுவிப் போயிடும் குயந்தே..."

"அந்த அளவுக்கு திமுறு வந்துட்டா ஒனக்கு... பாத்துப்புடலாம்..."

வீட்டுக்காரி, பயங்கரமாக பல்லைக் கடித்துக்கொண்டு, கோணியை அறுத்தாள். ஆயாவின் ஸ்டவ் அடுப்பை, தரதரவென்று இழுத்து, திண்ணைக்குக் கீழே போட்டாள். இந்த முயற்சியில், வாணலியில் கொதித்த எண்ணெய். ஆயாவில் கை காலில் விழுந்தது. அவள் சதையை வேக வைத்து கொதித்தது. ஆயா, வலி பொறுக்க முடியாமல் கத்தினாள்.

"அய்யோ.. மாரியாத்தா... இந்த அநியாயத்த கேட்க ஆளில்லையா... ஆளில்லையா? குயந்தே... வீட்டுக்கார குயந்தே... இந்த எண்ணெய எடுத்து என் மேல வாணுமுன்னாலும் கொட்டு... ஆனால். என்னோட பொயப்ப கெடுத்திடாத குயந்தே... கெடுத்திடாதே..."

வீட்டுக்காரி விடவில்லை. ஆயாவின் இட்லி தட்டையும் எடுத்துக் கீழே போட்டுவிட்டு. கண்ணாடிப் பாத்திரங்களையும் இறக்கிவிட்டு, ஆயாவின் கைகளைப் பிடித்து "மொதல்ல கீழே இறங்கு... ஒங்களுக்குல்லாம் வாயால சொன்னால் பத்தாது” என்று கீழே இழுத்தபோது, ராக்கம்மா வந்தாள். வீட்டுக்காரியின் கை போகிற இடமெல்லாம். ஆயாவின் உடம்பு முழுவதும் ஒட்டுமொத்தமாக பூசணிப்பழம் மாதிரி அலைக்கழிவதைப் பார்க்கப் பார்க்க. அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வீட்டுக்காரியின் கையைப் பிடித்து மடக்கித் தள்ளினாள். அந்த வேகத்தில், வீட்டுக்காரி எதிரே இருந்த குறுந்திண்ணையில் நெற்றி மோத, அலங்கோலமாக விழுந்தாள். அதைவிட அதிக அலங்கோலமாக சத்தம் போட்டாள்.

"என்னையாடி... அடிச்சிட்டே... என்னையாடி... அடிச்சிட்டே... அய்யோ... எனக்குத் தலை சுத்துதே... தலை சுத்துதே..."

கீழே கிடந்த வீட்டுக்காரியை, ராக்கம்மா தூக்கி நிறுத்த முயற்சி செய்தபோது, தரையில் தேய்த்ததால் சிராய்ப்பாகி, மரத்தின் பட்டையைக் கீறினால், செக்கச் செவேலென்று வரும் மரச்சதை மாதிரி ஆயாவின் சதைப்பகுதியில் ரத்தம் கசிந்தது. ஆயா அதைக் கையால் பிதுக்கிப் பார்த்துக்கொண்டே மெளனமாகப் பார்த்தாள்.

இதற்குள் சத்தங்கேட்டு, மல்லிகா உட்பட எல்லோரும் வந்தார்கள். ரமணன் அக்காவை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீட்டுக்காரி, பிரளயப் புலம்பலை பிரசவித்தாள்.

"பிளான் போட்டாடி வந்தீங்க? என்னை கை நீட்டியாடி அடிச்சே... அடிச்ச கையில... காப்பு மாட்டுறேனா... இல்லியான்னு பாரு. ஒரு அடிக்கு... ஒன்பது அடி வாங்கித் தராட்டால்... என் பேரு... என்... பேரு..."

வீட்டுக்காரி, தன் பெயரையே ஞாபகப்படுத்த முடியாமல் திணறிவிட்டு, பிறகு "ஏ... ரமணா... போலீஸுக்கு... போன் பண்ணிட்டு வாடா... இன்னுமாடா நிக்கே... எருமை மாடு..." என்றாள்.

ரமணன், வெளியே ஓடினான். ராக்கம்மா, வீட்டுக்காரியை பயந்தவள் மாதிரியும், பயப்படுத்துகிறவள் மாதிரியும் பார்த்துக் கொண்டிருந்தபோது, மல்லிகா, ஆயாவின் குருதி படர்ந்த கால் பகுதியைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு. அக்காள் சந்திராவைப் பார்த்தபோது, அவள் வீட்டுக்குள் போய், எண்ணெயை ஊற்றி, ஆயாவின் காலில் தேய்த்தாள். கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் 'குண்டு'க்குக் கொடுத்துவிட்டு கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக, அன்பின் பரிச்சயம் கிடைத்தாலும், அதன் அரவணைப்புக் கிடைக்காமல் உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்த ஆயா. மல்லிகாவின் அன்பில் நெகிழ்ந்து குழைந்து மேனியெங்கும் பரவசமாக, ஆனந்தமும், சோகமும் மறைந்து, அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஞானிகளின் குறிக்கோள்போல் தோன்றும் அடையாளம் கண்டாலும் காட்ட முடியாத ஒரு பேருணர்வு ஆட்கொள்ளப் பட்டவளாய், விம்மினாள்.

இதற்குள், ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும், கீழே இருந்த ஸ்டவ்வை எடுத்துத் திண்ணையில் வைத்தார்கள். இட்லித் தட்டை ஒழுங்குபடுத்தி வைத்தார்கள். 'கோணிக் கதவை' கட்டி முடித்தார்கள்.

வீட்டுக்காரி, அவளைத் தடுக்கப் போனாள். கந்தசாமியின் மனைவி 'இனிமே... கொலை விழுண்டி' என்று அதட்டியபோது, வீட்டுக்காரி தெருவுக்கே வந்து, போலீஸ்காரர்களை எதிர்பார்த்து நின்றாள். தெருவெங்கும் கூட்டம்.

போலீஸ் வந்தது. 'வானோடு' வந்தது.

ஒரு போலீஸ்காரர் 'வான்' கதவை முற்றிலும் திறந்துகொண்டு வெளிப்படும்போதே "யாரும்மே... ராக்கம்மா... யாரும்மே தங்கம்மா..." என்று அதட்டினார்.

"நான்தான் ராக்கம்மா..." என்றாள் அந்தப் பெயருக்குரியவள் கம்பீரமாக.

"அந்த அம்மாவை எதுக்குமே அடிச்சே..."

மல்லிகாவிற்கு, விஸ்வரூபம் எடுத்தது போலிருந்தது... கல்லூரி மேடையில் சிலிர்த்து நிற்பாளே அப்படி.

"ஸார்... ஒரு விஷயம்... தெரியாமத்தான் கேக்குறேன். சட்டம் எல்லோருக்கும் சமமுன்னா.... சட்டத்தை அமல் செய்கிறவங்க... எல்லோரையும் சமமாய் நினைக்கணுமுன்னு அர்த்தம்... அவங்க... பணக்காரி... அதனால அம்மா... இவங்க... ஏழை. இதனால 'மே'. ஒருவேளை... பணக்காரியை ஒரு மாதிரியும்... ஏழையை இன்னொரு மாதிரியும் கூப்பிடணுமுன்னு சட்டத்துக்கு 'அமெண்ட்மெண்ட்' எதுவும் வந்திருக்கா... தெரியாமத்தான் கேக்கேன்..."

போலீஸ்காரர்கள், மல்லிகாவைப் பார்த்தார்கள். கம்பீரமாக நின்று ராக்கம்மாவைப் பார்த்தார்கள். பரிதாபமாகப் பார்த்த 'இட்லி' ஆயாவைப் பார்த்தார்கள். இது ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய விவகாரம்... இந்தப் பொண்ணு... இங்கேயே கலாட்டாவை உண்டு பண்ணினாலும் பண்ணிடுவாள்.

முன்கோபி என்று பெயரெடுத்த ஒரு போலீஸ்காரரே, இப்போது சாந்த சொரூபியாகப் பதிலளித்தார்.

"நாங்களும்... மனுஷங்கதாம்மா... விசாரிக்காம எதுவும் செய்யமாட்டோம்... ராக்கம்மா... 'வேன்ல' ஏறு... ஆயா. நீயும் வேன்ல ஏறு..."

"எக்ஸ்யூஸ் மி ஸார்... ஆயாவை... இந்த காலைப் பிடித்து வயலண்டா இழுத்ததுல... இதோ பாருங்க... ரத்தத்தை... இதோ பாருங்க... சதை பிஞ்சி வந்துருக்கதை... இந்த ராக்கம்மா மட்டும. சமயத்துல வராட்டால், எங்க ஆயா... கீழே விழுந்து.. போகவேண்டிய இடத்துக்குப் போயிருக்கலாம்... ஆயாவை, பலாத்காரமாய் இழுத்த... இந்த வீட்டுக்கார அம்மாவையும்... நீங்க 'வேன்ல' ஏத்தணும்..."

ஒரு போலீஸ்காரருக்குப் கோபம் வந்தது.

"நீ லிமிட் தாண்டிப் போறேம்மா..."

"நீங்கதான் தாண்டுறீங்க... கொண்டு போறதாய் இருந்தால்... எல்லாரையும் கொண்டு போகணும்..."

"இல்லன்னா..."

"நாங்க... எல்லாரும்... வேனுக்கு முன்னால... நிற்கப் போறோம்... எங்களை பிணமாக்கிட்டு வேணுமுன்னால்... ஒங்க வேன் போகட்டும். இதுல எல்லாருமே ஏளைபாளைங்க... செத்துப்போனால்... தேரெடுக்கக்கூட காசில்லாதவங்க... அதனால... இந்த வேனாலயே... எங்களை மோதிக் கொன்னுட்டு... அப்படியே எங்க பிணத்தையும் எடுத்துப் புதைச்சுட்டுப் போயிருங்க..."

மல்லிகா, சொன்னதுடன் நிற்காமல், வேனுக்கு முன்னால்போய் நின்றாள். இட்லி ஆயா, மெள்ள மெள்ள நடந்து, மல்லிகாவுடன் சேர்ந்து கொண்டாள். கந்தசாமியின் மனைவி, ஓடிப்போய் நின்றாள். தயங்கி நின்றபடி, கைகளை நெறித்துக் கொண்டிருந்த செல்லம்மாவை, சந்திரா தள்ளிக்கொண்டே போய். வேனுக்கு முன்னால் போய் நின்றாள். அந்த வீட்டின் அத்தனைப் பெண்களும், வழிமறிப்பதுபோல் நின்றபோது, வழியெங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தின் ஒரு பகுதியும், வேனுக்கு முன்னால் போய் நின்றது.

போலீஸ்காரர்கள், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள். அதாவது, யோசிக்கத் துவங்கினார்கள். ஒருவர். ஒயர்லஸ் மூலம், கமிஷனர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டார். 'லத்தி சார்ஜ் பண்ணலாமா' என்பது மாதிரித்தான் கேட்டார். ஆனால் அங்கிருந்து டெப்டி கமிஷனர் வந்து பார்க்கப் போவதாக தகவல் வந்தது. போலீஸ்காரர்கள் முகங்களிலும் கரங்களிலும் முறையே ஈயும், லத்திக் கம்பும் ஆடவில்லை. வேன் முன்னால் நின்ற கூட்டம். நேரம் ஆக ஆக, கம்பீரப் பட்டுக்கொண்டே வந்தது.

அரைமணிநேரத்திற்குள், வெளியே ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு. ஜீப் வந்தது. டெப்டி-கமிஷனர் இறங்கினார். போலீஸ்காரர்களின் சல்யூட்டுகள், அவரின் நடைக்குத் தாளமாக இருந்தது.

மல்லிகா, டெப்டிக்கு முன்னால் நின்றுகொண்டு "நீங்களே விசாரிங்க ஸார்... இதோ... இந்த ஆயாவைப் பாருங்க ஸார்... முப்பது வருஷமா... இந்த திண்ணையில.. கடைபோட்டு... வாழ்கிறவள். இந்தம்மா... ஆயாவை... கீழே இழுத்துப்போட முயற்சி செய்தபோது... இந்த ராக்கம்மா, ஆயா அடிபடாமல் இருக்க இந்த அம்மாவை தள்ளியிருக்காள்... இந்த அம்மா மேலே பட்ட காயம் தற்செயலானது... ஆயா மேலே பட்டது அடாவடித்தனமானது... ஆனால் ஒங்க போலீஸ்காரங்க... ஆயாவையும், ராக்கம்மாவையும் 'வேன்ல' ஏறச் சொல்றாங்க.. இந்த அம்மா ஏறக்கூடாதாம்... என்ன ஸார் நியாயம்? அதனாலதான் சொல்றோம்.. ஒண்ணு... எங்களையும் அந்தம்மாவையும் ஒன்றாய்க் கூட்டிக்கிட்டு போங்க... இல்லன்னா எங்கள மட்டும் கொன்னுட்டுப் போங்க... இதைத்தவிர ஏளைபாளைகளால என்ன செய்ய முடியும்... ஏழைகள் ஒற்றுமையாய் இருக்கக்கூடிய ஒரே விஷயம்... இந்த மாதிரியான அவல நிலையிலதான்..."

டெப்டி கமிஷனர், தன் பெல்ட்டைப் பிடித்துக்கொண்டே யோசித்தார். இரண்டு தரப்பையும், வேனில் ஏற்றாத போலீஸ்காரர்கள் மீது அவருக்குக் கோபம் வந்தது உண்மைதான். ஆனாலும், அந்த உண்மையை முகத்தில் கோரதாண்டவமாட விடவில்லை. அமைதியாகப் பேசினார்.

"நடந்தது நடந்துட்டு... இனிமேல் ஒற்றுமையாய் இருக்கதாய்... இரண்டு தரப்பும் எழுதிக் கொடுத்தால்... இத்தோடு விட்டுடுறோம். இல்லன்னா.." மல்லிகா பதிலளித்தாள்.

"ஸார்... எலியும், பூனையும் சண்டை போடுதுன்னு சொல்வது மாதிரி இது... ஏன்னா... சண்டையைத் துவக்குனது இந்த அம்மா.... அதனால அதை முடிக்கவேண்டியதும் அவங்கதான்... இருந்தாலும் பரவாயில்லை. பெரியவரான ஒங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்க தகராறை முதலில் துவக்கமாட்டோமுன்னு எழுதிக் கொடுக்கிறோம்... சந்திராக்கா... ஒரு பேப்பர் கொண்டு வா..."

மல்லிகா, சந்திரா கொடுத்த காகிதத்தில் மடமடவென்று எழுதினாள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள் ஆயாவால்தான் முடியவில்லை.

குயந்தே... நீ சொல்லிக் கொடுத்த கையெழுத்து இதுக்கா பயன்படணும் குயந்தே..."

"இதுக்குத்தான் பயன்படணும்... படிச்சு பட்டம் பெற்ற பலர். தங்கள் கையெழுத்தை... எது எதுக்குல்லாமோ போடும்டோது. நீங்க உரிமையை நிலை நாட்டுற போராட்டத்துக்காகப் போடுறதுக்கு பெருமைப்படனும் ஆயா"

வீட்டுக்காரம்மா, பேசாமல் நின்றாள். இன்ஸ்பெக்டர் அண்ணன் பெயரைச் சொல்லி எழுதாமல் இருந்துவிடலாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் இங்கிதம் தெரியாத ரமணன், அக்காவுக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதி, அவளிடம் கையெழுத்துப் போட நீட்டினான்.

மல்லிகா இடைமறித்தாள்.

“ஸார்... ஆயாவோட... திண்ணைக் கடையை ஒன்றும் செய்யமாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க சார்"

டெப்டி-கமிஷனர் தலையாட்டிக் கொண்டே பேசினார்.

"ஆமாம்மா... அதையும் எழுதிடுங்க... வேணுமுன்னா ஸிவில் கேஸ் போட்டு கடையை எடுங்க.. கிரிமினலா போகாதீங்க..."

வீட்டுக்காரி சார்பில், ரமணன் எழுதமாட்டாது எழுதியதில், ஆயா கடைக்குப் பாதுகாப்பு அங்கீகாரம் கொடுத்து எழுதி முக்கி முனங்கி கையெழுத்துப் போட்டாள்.

டெப்டி-கமிஷனர், அதை வாங்கிக் கொண்டு, ஜீப்பில் ஏறப்போனார். ஆயா பேசாமல் இருப்பாளா?

"போலீஸ் குயந்தைங்கா... என் கையால் சுட்ட இந்த வடையைத் தின்னுட்டுத்தான் நீங்க போகணும்..."

டெப்டி-கமிஷனர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

"பரவாயில்லை ஆயா... வடைங்கள விற்று... பணம் பண்ணு"

ஆயா. அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

"இனிமேல் யாரும் வாங்க மாட்டாங்க... குயந்தே. நாழியாயுட்டுது."

டெப்டி-கமிஷனர் சிரித்துக்கொண்டே மெதுவடைகளைச் சைகை காட்ட போலீஸ்காரர் அதை பொட்டணமாக்கினார். டெப்டி, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து. ஆயாவின் மடியில் போட்டுவிட்டு, ஜீப்பில் ஏறினார். வாங்குகிறவர்கள். கொடுத்துவிட்டுப் போவதைப் பார்த்து கூட்டம் ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டது.

வீட்டுக்காரி. மாடிக்கு ஓடினாள். சிறிதுநேரத்தில் ரமணனும் பின்னால் ஓடினான். அவனை அவள் திட்டுவது இன்னும் கும்பல் கலையாமல் இருந்த கூட்டத்திற்கு நன்றாகக் கேட்டது.

21

ஒருவாரம் ரகளை இல்லாமலே ஓடியது.

மல்லிகா, பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, வெளியே இருந்து வந்த அவள் தந்தை பெருமாள், வீட்டுக்குள் போனவுடனேயே, அம்மாவுடன் கோபமாகப் பேசுவது கேட்டது. மல்லிகா வீட்டுக்குள் போனாள் செல்லம்மா, புருஷனிடம் எதிர்க்கேள்வி போட்டாள்.

"எங்க அண்ணன் இப்படிச் செய்யமாட்டார்... மாட்டார்." செல்லம்மா திருப்பிக் கத்தினாள்.

"உங்க அண்ணனேதாண்டி.. சட்டாம்பட்டியில் லிங்க ராஜாவோட தங்கச்சியாம். வயசு பதினேழாம். இந்த சோம்பேறிப்பயல் கட்டிக்கப் போறான். 'நிச்சயத்தாம்பூலம் ஆயிட்டு. இந்த அநியாயத்தை முருகன் கோவிலுல வச்சு நடத்தப் போறாங்களாம்... பன்னாடப் பயலுக ..கட்டுறதே கட்டுறாங்க... கோயிலுல வச்சா கட்டணும்?"

"எங்கண்ணாவா.. அடக்கடவுளே..."

"உன் அண்ணனேதாண்டி... நீ அடிக்கடி சொல்லுவியே... 'எங்கண்ணா' உங்களை மாதுரி குடிகாரன் இல்ல... குதிரைக்காரன் இல்லே'ன்னு. இப்போ சொல்றதக் கேளுடி கெட்ட பழக்கம் உள்ளவன் அயோக்கியனும் இல்ல... அது இல்லாதவன் யோக்கியனும் இல்ல... ஒரு பதினேழு வயசுப் பெண்ணை... பெத்த மகள் மாதுரி நினைக்கவேண்டிய வெள்ளரிப் பிஞ்சை... இந்த கழுதப்பய திங்கப் போறானாம். பாவம்... அந்தப் பொண்ணு... சித்திக்காரியோட கொடுமை தாங்கமுடியாம... எப்படியாவது... ஊர்ல இருந்து ஒழிஞ்சா சரின்னு பேசாம இருக்காம். புலிக்குப் பயந்து ஓநாய்கிட்ட போன கதை... இப்போ... சொல்லுடி, 'பாயிண்ட்' இருந்தும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவன் மேல வழக்குப் போடாத உன் குடிகாரப் புருஷன் யோக்கியனா? இல்ல... சொத்து நமக்கு வரக்கூடாதுன்னு... ஒரு சின்னஞ்சிறிச அழிக்கிற உன் அண்ணனா? ஏன் வாய் மூடிவிட்டே? இவன் கெட்ட கேட்டுக்கு... கல்யாண நோட்டீஸ் அடிச்சிருக்கான்... மல்லி... உன் அம்மாவுக்கு.. இதைப் படித்துக் காட்டும்மா..."

பைக்குள் 'சஸ்பென்சாக' வைத்திருந்த கல்யாண அழைப்பிதழை, பெருமாள் மகளிடம் நீட்டினார். அதைத் தனக்குள்ளேயே படித்த மல்லிகா, அந்த எழுத்தை நம்பாதவள்போல், எழுத்தில்லாத பின்பகுதியைப் புரட்டினாள். ஒரு இளம்பெண்ணும், இளைஞனும் கைகோர்த்து நிற்பது போன்ற படம். 'இளைஞன்' படத்திற்கருகே ஐம்பதைத் தாண்டும், சொக்கலிங்கம் என்ற எழுத்துக்கள். அதற்குக் கீழே 'பேச்சியம்மாள்' என்ற வார்த்தை.

மல்லிகா, அழைப்பிதழை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டே, யோசித்தாள். பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்திலா இப்படி? ஒருத்தி, ஏழையாகப் போய்விட்டால், அவளை யாரும் வாங்கலாம் என்பது இன்னும் நடக்குதே மாமா சொத்தைக் காப்பாற்ற நினைத்தால், இந்த பேச்சியம்மாவையே தத்து எடுத்து மகளாய் வளர்க்கலாமே! அப்பாவா இப்படிச் செய்கிறார்? அப்பா அல்ல, அப்போவோட பணம்... பணத்தை, வாலிபமாய் பெண்கள் நினைக்கிறார்கள் என்கிற அகங்காரம் இதைத் தடுத்தே ஆகணும்... தற்காப்பு என்று எண்ண. தற்கொலைக்குச் சமமான ஒரு காரியத்திற்கு உடன்படும் பேச்சியம்மாவைக் காப்பாற்றியாகணும்...

மல்லிகா, அமைதியாக, ஆணித்தரமாகப் பேசினாள்.

"வாங்கப்பா... வக்கீலைப் பார்க்கலாம்."

"எதுக்கும்மா..."

"சொக்கலிங்கத்தோட அரவைமில் என் பேர்ல இருக்கு... மளிகைக்கடை என் பேர்ல இருக்கு... அதோட நான் அவரோட வளர்ப்பு மகள். தத்து எடுக்கதுக்கும் சட்டம் இருக்கு... வாங்கப்பா... வக்கீலிடம் போகலாம்."

செல்லம்மா பதறினாள்.

"மல்லிகா... என்னம்மா. இது?"

"இது உங்களுக்குப் புரியாதும்மா... இது ஒரு இளம்பெண்ணோட விவகாரம். விற்பனைக்கு வந்திருக்கிற ஒருத்தியோட எதிர்காலப் பிரச்சினை... வாங்கப்பா போகலாம். பணம் இருக்கா?"

"கோணி வாங்க ஐம்பது ரூபாய் இருக்கு"

"பரவாயில்ல... நாம பட்டினிகூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப்போவதை... நாம் பார்த்துட்டு நிற்கப்படாது வாங்கப்பா..."

மல்லிகாவும், பெருமாளும் புறப்பட்டார்கள். செல்லம்மாவுக்கு. ஒன்றும் ஓடவில்லை. குடித்தனப் பெண்களுடன் இரண்டறக் கலந்து, ஒருவித் சமூகப் பிரச்சினையில் தன்னைப் பிணைத்துக்கொண்ட பெருமிதத்தில் மகளும், அந்த மகளைப் பெற்ற பெருமிதத்தில் தந்தையும் நடந்தார்கள்.

பெருமாளுக்கு வக்கீலைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. குடித்துவிட்டு போலீசிற்குப் போய். கோர்ட்டில் நிறுத்தப்படும் போதெல்லாம், அவருக்கு வழக்கறிஞர் பரிச்சயங்கள் நிறைய ஏற்பட்டிருந்தன.

இருவரும், 'மண்ணடி'யில் இருந்த ஒரு வக்கீல் வீட்டுக்குப் போனார்கள். வக்கீல், பெருமாளைப் பார்த்து, "இன்னுமா... குடியை விடல" என்றார். மல்லிகா, "வணக்கம் சார்" என்றதும், பதிலுக்கு "வணக்கம்" என்றார். அறிமுகங்கள் முடிந்தபிறகு, மல்லிகா, 'அப்பா' வீட்டில் தான் வளர்ந்த விவரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லிவிட்டு, பேச்சியம்மாளின் கல்யாணத்தை நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகச் சொன்னார்.

"அது பாயின்ட் ஆகாதும்மா" என்றார் வக்கீல்.

"பாயின்டா பண்ணிப் பாருங்களேன் சார்."

வக்கீல் யோசித்துவிட்டுச் சொன்னார்.

"ஆல்ரைட் சொக்கலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ் விடுவோம். அந்த நோட்டிஸ்ல ஒரு நகலை. பேச்சியம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம். கல்யாணம் தானாய் நின்னுடும். பேச்சியோட சித்திக்காரி, மூச்சுப் பேச்சில்லாம போயிடுவாள்."

வக்கீல். மல்லிகாவிடம் வக்காலத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். குமாஸ்தாவைக் கூப்பிட்டு பாயின்டுகளைக் கொடுத்தார். அனுபவப்பட்ட குமாஸ்தா, "இந்த வழக்குல நிச்சயம் ஜெயிச்சுடுவோம் சார் எவ்வளவு பெரிய 'வீக்'கான வக்கீலாலும் இந்த கேஸ்ல ஜெயிச்சுடலாம்” என்றபோது, அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிட்டாத அந்த வக்கீலும் 'வீக்'காகச் சிரித்துக் கொண்டார்.

அப்போது, "கூப்பிட்டிங்களாமே அப்பா" என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று கேட்டு. தலைநிமிர்ந்த மல்லிகா. "நீங்களா" என்றாள் சரவணனும் 'நீங்களா' என்றான்.

சரவணனும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது. பெருமாளும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"காலேஜ்ல... இவங்க... சாரி... நான் படிக்கிற காலேஜ்ல இவங்களும் படித்தாங்க. ஆமாம். எதுக்காத காலேஜ் வரவில்லை? படிப்பை அரைகுறையாவா விடுவது?" என்று சரவணன் இழுத்தபோது, மல்லிகா சிறிது நிலை தடுமாறினாள். உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை சாய்வாகப் பார்த்தாள். பிறகு, "காலேஜ்தான் கண்ணுக்குள்ளேயே நிற்குது" என்றாள். "அவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படியம்மா தாங்கிக்கிறே" என்று வக்கீல் 'விட்' அடித்தபோது, அவளை விடாமல் பார்த்த சரவணன் அவர் சொன்னதைப் புரிந்துகொண்டவன்போல், தலையை ஆட்டினான். அவளுக்கு அது அழகாகத் தோன்றியது.

பெருமாளும், மல்லிகாவும் எழுந்தார்கள். சரவணன் பஸ்நிலையம்வரை வந்து, அவர்களை வழியனுப்பினான். பெருமாள், அவனிடம் குழந்தை மாதிரி நடந்த விஷயங்களை, ஏற்ற இறக்கத்தோடு சொன்னார்.

பஸ் புறப்பட்டது. பெருமாள் அவனைப் பார்த்து, "நம்ம வீட்டுக்கு ஒரு தடவ வா தம்பி" என்றார்.

மல்லிகா "எங்க வீடு... சின்ன வீடு" என்று சொல்லிச் சிரித்தாள்.

"எனக்கு வீடு முக்கியமில்ல... வீட்டில் இருக்கிற ஆட்கள்தான் முக்கியம்" என்று சரவணன் விடைபெற்றான்.

பஸ் இருக்கையில் இருந்தபடி, திரும்பித் திரும்பிப் பார்த்த மல்லிகா, அப்பா தன்னையே கவனிப்பதுபோல் தெரிந்ததால், லேசாக நாணப்பட்டுக் கொண்டாள்.


22

அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும்போது. சொக்கலிங்கத்தை சொக்க வைப்பது, மைத்துனர்மார்களுக்குச் சிரமமாகவில்லை. ஏற்கெனவே, சட்டாம்பட்டி இளம் பெண்ணுடன். தன்னை இணைத்துப் பார்த்து, லேசாகத் திருப்திப்பட்டுக் கொண்ட அவரிடம், "உமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தால்... இந்த மல்லிகா மாதுரி நடக்குமா? தான் பெறணும் பிள்ளை... தன்னோட பிறக்கணும் பிறவி" என்று சொல்லும்போதெல்லாம். சொக்கலிங்கம் "போங்கப்பா" என்று சிணுங்கி, மைத்துனன்மார்களின் வயிற்றில் நிஜமாகவே, 'கீச்சுக் கீச்சு' காட்டினார்.

பிறகு, ஒருசமயம் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகும் சாக்கில், அவரைச் சட்டாப்பட்டிக்குக் கூட்டிப்போய், பேச்சியம்மாவைக் காட்டினார்கள். "என்னை சித்திகிட்ட இருந்து காப்பாத்துங்க தாத்தா" என்பது மாதிரி பார்த்த பேச்சியின் பார்வையை, சொக்கு, காதல் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்.

அப்புறம் சென்னைக்கு வந்தபிறகு, சொக்கலிங்கமே "எனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்க வேண்டாமா..." என்று சொல்வதும், உடனே, மைத்துனன்மார்கள் அவருக்கு 'கீச்சுக் கீச்சு' காட்டுவதும், கடைப் பையன்களுக்கே, தங்களையே யாரோ 'கிச்சுக் கிச்சுக்' காட்டுவதுபோல் சிரிப்பைக் கொடுத்தது.

பார்வதிக்கு முதலில், அண்ணன்மார்களின் திட்டம் புரியவில்லை. அவர்களிடமே, அவள் சொன்னபோது "ராமன்... மல்லிகா இருந்தால்தான் உருப்படுவான். அவனை... சுவீகாரம் எடுத்தால், மச்சான் மண்டையைப் போட்ட உடனே கோவிந்தா. சட்டாம்பட்டிக்காரியைக் கட்டினால்... உனக்கு அடக்கமாய் இருப்பாள். கிராமத்துப் பொண்ணு பாரு" என்றார்கள்.

சொக்கலிங்கத்திற்கு, தன் சொந்தக்காரப் பெண்ணைக் கட்டிவிட்டால், அப்புறம் சொத்தை பரிபாலனம் செய்யலாம் என்று பார்வதியின் சின்ன அண்ணன் நினைத்தார்.

பெரிய அண்ணன், இதைப் புரிந்துகொண்டு "அது எப்படிடா?" என்றார். உடனே சின்னவர் "உன் பெண்ணை... என் மைத்துனன் என்ஜினியருக்கு முடிக்கலாமுன்னு இருக்கேன். இப்போதான் ‘எப்படி'ன்னு யோசிக்கிறேன்" என்றார். அதனால், எதிர்ப்பை அகற்றிக்கொண்டே "எப்போடா... அந்தக் கல்யாணத்தை வைக்கலாம். எப்போடா இந்தக் கல்யாணத்தை வைக்கலாம் என்றார்.பெரியவர். பொது எதிரியான மல்லிகாவைக் கழித்துக் கட்டியாகிவிட்டது. இன்னொரு பொது எதிரியான ராமனையும் கழட்டிவிட வேண்டும் என்ற பொது லட்சியம், அவர்களை ஒன்றுபடுத்தியது.

பார்வதி. இதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டாள். கணவனிடம். கதறிப் பார்த்தாள். அண்ணன்மார்களின் பாசம். வெறும் பாசாங்கு என்பதைப் புரியவைக்கப் பார்த்தாள். ஆனால், சொக்கலிங்கம். அவளிடமே பல தடவை "நான் எதுக்கு சொல்றேன்னா பேச்சி..." என்று பேச்சியம்மாவையே பேச்சுக்குப் பேச்சு சொன்னதால், அது முற்றிவிட்ட பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டாள். சகித்துக் கொள்ளப் பார்த்தாள். ஒருதடவை "என் மகள் மல்லிகா கிட்டேயே போயிடுறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். சொக்கலிங்கம் அவளைப் பிடித்துக் கொண்டார். அவள், மார்க்கெட்டுக்குப் போகும்போதுகூட கடைப் பையன்கள் மூலம் கண்காணித்தார். பார்வதியும் யோசித்தாள். எந்த முகத்தோடு என் மகளிடம் போகமுடியும்? அவளை என்ன பாடுபடுத்திவிட்டேன். அவள் மனம் எப்படிக் கலங்கியிருக்கும். அவள் இங்கே இருந்தால், இப்போ எப்படி இருக்கும்...!

பார்வதி யோசித்துக் கொண்டிருந்தபோது, பின்யோசனை இல்லாமலே, சொக்கலிங்கத்திற்கும் பேச்சியம்மைக்கும் கல்யாணம் நிச்சயமாகி, தேதியும் குறித்தாகிவிட்டது. சட்டாம்பட்டியில் இருந்து, சித்திக்காளி வந்து, வாயெல்லாம் பல்லாகப் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். இனிமேல் பேச்சியைப் பிடித்துக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

விஷயத்தைக் கேள்விப்புட்ட ராமன் கொதித்தான். ஒருநாள் சின்ன மாமா கடையில், ஏதோ 'தமாஷா' சோடா பாட்டில் வீசினால் சோமாறி மாமன்கள் இப்படியா பண்றது? அந்த 'கிழவன்' இன்னாதான் நினைச்சிருக்கான் ஒரே பூடு பூட்டாத்தான் புத்தி வரும்! எனக்கு சொத்து தாரதாய் சொல்லிட்டு, என்னண்டயே, வேலையைக் காட்டுறர்ன் கஸ்மாலம் என்று கொதித்தெழுந்தான். வயிறுமுட்டக் குடித்துவிட்டு, சொக்கலிங்கத்தின் முன்னால் வந்து கத்தினான்.

"கியவா! அந்தப் பொண்ணோட வயசென்ன. ஒன்னோட வயசென்ன... யோசித்துப் பாரு... அப்பாவிப் பொண்ணை ஏண்டா கெடுக்கிறே. கஸ்மாலம்? மவனே... இப்போ சொல்றதுதான் எப்போ சொல்றதும்... நீ எனக்கு சொத்து தராட்டியும் பரவாயில்லே... பேசாம மல்லிகாவை... கூட்டிக்கினு வா. அவள் எனக்கு வாணாம். ரீசண்டான மாப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் செய்து வை. இல்லே... ஏண்டா கஸ்மாலம் பேசமாட்டேக்கே சாவுற வயசுல ஆசயப் பாரு டேய்... ஏய்... டேய்... ஏய்..."

சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். அந்த ரவுடி சொன்ன வார்த்தை என்னும் சேற்றுக்குள்ளும். மனிதாபிமானம் என்ற செந்தாமரை பூத்திருப்பதைக் கண்டார். வீணான அவப்பெயருக்கு ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார். அதேசமயம் பேச்சியம்மாவையும் அவரால் மறக்க முடியவில்லை.

இப்படி என்ன செய்வதென்று அவர் தவித்துக் கொண்டிருந்தபோது, மல்லிகாவிடம் இருந்து சொத்துக்கு உரிமைகோரி நோட்டீஸ் வந்தது. அது அவருக்கு, தனது ஈமச்சடங்கிற்கான பத்திரிகைபோல் தெரிந்தது. அதில் கறுப்பு பார்டர் போட்டிருக்கும்! இதை, கறுப்புக் கவுன் போட்ட வக்கீல் அனுப்பியிருக்கார்.

"என் மகளா... இப்படிச் செய்துட்டாள்? என் மகள் என்றால் இப்படிச் செய்வாளா. செல்லக்கிளியே. இதுக்கா உன்னை வளர்த்தேன்... இதுக்கா உன்னை எடுத்தேன்? இதுக்கா... இதுக்காம்மா?"

சொக்கலிங்கத்திற்கு அழுகையே வந்துவிட்டது.

ஓரிரு நாட்கள் ஓடின.

சட்டாம்பட்டியில் இருந்து, கல்யாணம் கிடையாது என்று வந்த கடிதத்தை பார்வதி பிரித்துப் படிக்குமுன்னாலேயே, அந்தக் கடிதம், எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியும் முன்னாலேயே, சொக்கலிங்கம் மார்பைப் பிடித்துக் கொண்டே கத்தினார்.

"எய்யா... எம்மா... நெஞ்சை வலிக்கே... நெஞ்சு..."

சொக்கலிங்கம், மார்பைப் பிடித்துக்கொண்டே படுக்கையில் விழுந்தார். "என்னாங்க... என்னாங்க" என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்த பார்வதியின் வார்த்தைகள் தன் காதில் விழும் முன்பே, அவர் படுக்கையில் விழுந்தார்.


23

அப்பாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியது சரிதானா என்று யோசித்து யோசித்து, மல்லிகாவிற்குத் தலை குழம்பியது.

அப்போது, மல்லிகாவின் தம்பி பரமசிவத்திடம். சரவணன் ஒரு காகிதத்தை நீட்டி, விசாரித்துக் கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு நாடி நரம்பெங்கும் ஏதோ ஒன்று வியாபித்தது. சொல்லமுடியாத சொன்னாலும் விளங்காத அச்சத்தையும், அதேசமயம் அஞ்சாமையையும். துன்பத்தையும். அதேசமயம் இன்பத்தையும் ஏக்கத்தையும், அதேசமயம் எதிர்பார்ப்பையும். பலமுனைப் பார்வையும், அதேசமயம் ஒருமுனைப்பட்ட உள்ள உணர்வையும் கொடுக்கும். ஏதோ ஒரு சுகம்... ஏதோ ஒரு..

சரவணனிடம். உள்ளத்தை முன்னால்விட்டு. உவகைமுட்ட அவள் பின்னால் நடந்தாள். மெல்ல மெல்ல நடந்தாள். இருபதடி தூரத்தில் குடித்தனத் தோழிகளைப் பத்துத் தடவை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போனாள். பிறகு, "வக்கீல் அப்பா அனுப்பி இருப்பாங்க.. இல்லன்னால் வரவா போறீங்க.." என்று அவனுக்குக் கேட்கும்படியாகப் பேசுவதாய் நினைத்து, தனக்கே கேட்காமல் பேசினாள்.

சரவணன், அவளையே பார்த்தான். உல்லி உல்லிப் புடவைக்குப் பதிலாக, சின்னாளப்பட்டி காதில் 'ரிங்' இல்லை. கழுத்தில் செயின் இல்லை. கையில் வளையல்கள் இல்லை. ஆனால் இவற்றைவிட மேலான ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதுபோல் தோன்றியது. காதலா... கனிவா... சேவை கொடுக்கும் திருப்தியா...

தட்டுத்தடுமாறி சரவணன் ஏதோ பேசப் போனபோது, குடித்தனப் பெண்கள் 'ஏதோ இருக்கு' என்பதுபோல் பார்த்தபோது, மல்லிகாவின் அம்மாள் செல்லம்மா, "அய்யோ.. கடவுளே... எங்க அண்ணனுக்கா... என் உடன் பிறப்புக்கா" என்று தலையில் அடித்துக்கொண்டே வந்தாள். மல்லிகா துடித்துப்போய், அம்மாவின் கரங்களைப் பற்றியபோது, அவள், "உங்க அப்பாவ... தண்டையார்பேட்டையில். மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நர்சிங்ஹோமில் சேர்த்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம். அய்யோ... அண்ணா” என்று அரற்றினாள். பிறகு "மல்லிகா... மல்லிகா..."ன்னு சொல்லுக்குச் சொல்லு புலம்புறாராம்" என்று சொல்லிச்சொல்லிப் புலம்பினாள்.

மல்லிகா விக்கித்து நின்றாள். கல்லாகி, மீண்டும் பெண்ணான அகலிகை, உடனே கல்லானதுபோல, குளிர்ச்சியை விரும்புபவளை, கொட்டும் உறைபனிக் காலத்தில் பனிக்கட்டிக்குள் போட்டதுபோல். மலர்க்காடு பிணக்காடாய் ஆனது போல். துவண்டு நின்றாள். "மல்லிகா மல்லிகான்னு புலம்புகிறாராம்" என்று அம்மா சொன்ன வார்த்தைகள், மலைப்பாம்பாய் மாறி. அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. புலியாய் மாறி. அவள்மீது பாய்ந்து கொண்டிருந்தது.

மல்லிகா. சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள், கேட்டாள்.

"சைக்கிளில்தானே வந்தீங்க..."

"இல்ல, ஸ்கூட்டரில்..."

"என்னை ஸ்கூட்டரில் கொண்டுவிட முடியுமா?"

சரவணன், செல்லம்மாவைப் பார்த்தான். அவள். அந்தச் சமயத்திலும். ஊர் வாய்க்குப் பயந்தவளாய் "நாம ரெண்டுபேரும் போகலாம் மல்லிகா" என்றாள்.

மல்லிகா, வெறிபிடித்தவள்போல் கத்தினாள்.

"என்னால்... ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. சரவணன் உங்களால் என்னைக் கொண்டுபோய் விடமுடியுமா... முடியாதா... இவ்வளவுதானா நீங்கள்..."

மல்லிகா, வெளியே ஓடினாள் எந்தக் கால்களைப் பிடித்து, தத்தித் தத்தி நடந்தாளோ, அந்தக் கால்களைப் பிடித்துக் கதறவேண்டும்போல் இருந்தது. பெறாமலே பெற்று. கண்படும் என்று கட்டுப்படுத்தியும், கட்டுப்படுத்தினால் துவள்வாள் என்று விட்டுப் பிடித்தும், உயிரிலும் உயிராய் வளர்த்த அப்பாவை, உடனே பார்த்தாக வேண்டும்.

மல்லிகா, தலைவிரி கோலமாக ஓடிக்கொண்டிருந்தாள். அருகே வேகமாக வந்து நின்ற சரவணன் ஸ்கூட்டரைப் பாராமலே ஓடினாள். பிறகு அந்த ஸ்கூட்டர் சற்று முந்திப்போய், வழிமறிப்பதுபோல் நின்றபோது, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவனின் தோளைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அதில் எந்தவித ஸ்பரிசமும் ஏற்படவில்லை. முதன்முதலாக, கண்னெல்லாம் நிறைந்தவன்மேல் கைபட்ட நாணம் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டருக்கு முன்னால், சொக்கலிங்கம் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை இதனால் "பார்த்து... பார்த்து' என்றாள். சொக்கலிங்கம். அந்த ஸ்கூட்டருக்கு முன்னாலேயே ஓடுவது போன்ற இன்னொரு பிரமை, இதனால் "சீக்கிரம். சீக்கிரம்" என்றாள்.

சொக்கலிங்கத்தின் கால் பக்கம், பார்வதி சோகமாக உட்கார்ந்திருந்தாள். "எதுக்கும் ஒரு உயில் எழுதி வச்சிடுங்க' என்று மைத்துனன்மார்கள். சுற்றி நின்று உபதேசம் செய்துவிட்டு. பார்வதியைக் கூட்டிக்கொண்டு வெளியே எங்கேயோ போயிருந்தார்கள். வாசலில் வழிமறிக்கப் பார்த்த நர்சை தள்ளி விட்டுவிட்டு மல்லிகா உள்ளே ஓடினாள்.

"அப்பா... அப்பா.. என் அப்பா!"

மல்லிகா, அப்பாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டே விம்மினாள். அவர் காலில் தலைவைத்துப் புரண்டாள். கன்னத்தைத் தடவி விட்டுக் கதறினாள்.

"அப்பா... அப்பா.. என் அப்பா!"

மேகத்தைக் கீறிய இடியைப்போல், இடியைக் கீறிய மின்னலைப்போல், மின்னலைக் கீறிய ஒளியைப்போல், அவள் தன்னைக் கீறி, தன் இதயத்தையே வெளியே எடுத்து வைப்பவள்போல், "அப்பா... அப்பா..." என்றாள்.

சொக்கலிங்கம், மல்லிகாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “வந்திட்டியாம்மா... வந்திட்டியாம்மா" என்று அவரது வாய், வார்த்தைகளைத் தோற்றுவித்தபோது, அவர் "என்னை விட்டுட்டு... உன்னால எப்படிம்மா இருக்க முடிஞ்சுது? என்னால முடியல... அதனாலதான் இந்த கதி" என்று அவர் அடம்பிடிக்கும் சிறுவனைப்போல கோபமில்லாதக் கோபத்துடன், மிஞ்சுவதுபோல் கெஞ்சியும், கெஞ்சுவதுபோல் மிஞ்சியும், எழுந்து உட்கார்ந்தார். கட்டில் விளிம்பில் சாயப்போன அவரை, மல்லிகா தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

இதற்குள் உள்ளே வந்த டாக்டர் "கொஞ்சம் பேசலாம் என்று சொன்னால் இப்படியா பேசறது" என்றார். ஆனால், பேஷண்ட் கொலாப்ஸ் ஆகாமல், குத்துக்கல்லாய் ஆனதில் அவரை அப்படி ஆக்கியதில் பெருமைப்பட்டார்.

"மல்லி... மல்லிகா..." என்று சொல்லிக்கொண்டே பார்வதி உள்ளே ஓடிவந்தாள். இருவரில் யார் முதலில் அணைத்தது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

"அம்மா... அம்மா..."

"ஏண்டி அழுவுறே... ஏண்டி இப்படி இளைச்சிட்டே... என்னை நினைத்தியா... இனிமேல்... என்னை விட்டுப் போவியா... போவியாடி...?

"அழாதிங்கம்மா... அழாதிங்கம்மா..!"

மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

பார்வதி. மகளின் தலையை கோதிவிட்டுக்கொண்டே "டாக்டர் அய்யா! இனிமே ஒங்க மருந்து மாத்திர தேவையில்ல... எங்க பொண்ணு மல்லிகாவப் பார்த்த சந்தோசத்துல இவர் இப்பவே நடப்பார்" என்றார். உடனே டாக்டர் "ஆனந்தத்துலேயும் அதிர்ச்சி வரும்மா" என்றார்.

இதற்குள் பெருமாளும் செல்லம்மாவும் பிள்ளைக் குட்டிகளோடு வந்து நின்றார்கள். பெருமாள். உணர்ச்சிவசப்பட்டு. சொக்கலிங்கத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு. "எந்தப் பயலுவளோ நீங்கள்... சாகணுமுன்னு நான் சொன்னதாய் கோள் சொன்னாங்களாமே. சத்தியமாய் சொல்லுகிறேன்... உங்கள் சொத்துக்கு நான் ஆசைப்படல... அந்த பொருந்தாத கல்யாணத்தால.,, பேச்சியும்,,. என் தங்கை பார்வதியும் அவஸ்தப்படக்கூடாதுன்னுதான் நோட்டீஸ் அனுப்பினேன். மற்றபடி.."

சொக்கலிங்கம் சிரித்துப் பேசினார்.

"அதெல்லாம் எதுக்குடா பேசுற... ஆமாம்... உன்னை குடிக்கக்கூடாது... குதிரைகிட்ட போகக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அப்போ. நான் சொல்லும்போது கேட்கல. இப்போ மல்லி சொல்லாமலே நிறுத்திட்டியாம் என்னடா நியாயம்..."

பெருமாள் மகிழ்ந்து போனார். சின்ன வயதிலேயே 'டா' போட்டுப் பேசியவர்கள். கல்யாணம் ஆனபிறகும் 'டா' போட்டவர்கள். சொக்கலிங்கம் பகையை மறந்துட்டார்.

"அந்தப் பெருமை உனக்குத்தானடா... மல்லி உன்னோட பொண்ணுதானடா..."

இருவரும், 'டாட்டா' காட்டாமல், 'டா' போட்டுப் பேசியதைக் கேட்ட பார்வதியின் அண்ணன்மார்கள், முகஞ் சுழித்தார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், அருமைத் தங்கை என்னாவது? பெரியவர். அதட்டிக் கூப்பிட்டார்.

"பார்வதி... கொஞ்சம் வெளியில் வாரீயா... உன்கிட்ட தனியாய் பேசணும்."

மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்த பாாவ்தி, எரிச்சலோடு பதிலளித்தாள். "நான் உயிரோட இருக்கும்போதே, இன்னொருத்திக்கு ஏற்பாடு பண்ணுனவங்க... என்ன அண்ணன்? என்ன தம்பி? நான் வெளியில வரவும் வேண்டாம். நீங்கள் உள்ளே நிற்கவும் வேண்டாம்."

அண்ணன்மார்கள் அதிர்ச்சியுடன் போனார்கள். சொக்கலிங்கம். அப்போதுதான் ஒரு மூலையில் ஒதுங்கி நின்ற சரவணனையும். ஒரு பெண் பட்டாளத்தையும் பார்த்துவிட்டு. மல்லிகாவை அர்த்தபுஷ்டியாகப் பார்த்தார்.

மல்லிகா நாணிக்கொண்டே "அவர் பெயர் சரவணன் என்னோட நண்பர். அவங்க... என்னோட அந்த வீட்டுல இருக்கிற சகோதரிங்க... அக்காளுங்க.."

சொக்கலிங்கம். சரவணனைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்று கொண்டிருந்த 'குடித்தனக்கார' பெண்களையும் பார்த்தார் மாயையால். கடவுள் தன்னை அலங்கரித்துக் கொண்டாலும், அந்த மாயை எப்படி கடவுளாகாதோ, அதுபோல். அரவைமில்லும் மளிகைக் கடையும் வாழ்க்கைக்குத் தேவையென்றாலும், அவையே வாழ்க்கையாகாது என்பதை மரண விளிம்பில் நின்றபோது புரிந்துகொண்ட சொக்கலிங்கம், அந்தப் பெண்களைப் பார்த்து எதிர் நாற்காலியில் உட்காரச் சொன்னார்.


24

மல்லிகா, ஒரு வாரமும் நர்சிங் ஹோமிலேயே இருந்தாள் அப்பாவுக்கு, ஜூஸ் பிழிந்து கொடுத்தும், கால்களைப் பிடித்துவிட்டும், கைவிரல்களை நெட்டி முறித்தும் கவனித்துக் கொண்டாள். மாலை வேளையில், அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு அருகே இருந்த பூங்காவிற்குப் போனாள்.

சொக்கலிங்கம் தேறிக்கொண்டே வந்தார்.

அந்த ஒரு வார காலத்தில், சரவணன் இரண்டு தடவை வந்தான். முதலில் வரும்போது "இந்தா... நீ சொன்னது மாதுரியே... அப்பா டிராப்ட் போட்டிருக்கார். ஸ்டாம்ப் இருக்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டு வைத்துக்கோ..." என்றான். 'நீங்க'வை. அவன் 'நீ'யாக்கியதில் மல்லிகா தானும் அவனும் ஒன்றானது போல சிரித்தாள்.

மேலும் ஓரிரு நாட்கள் விடைபெற்றன.

வாழ்க்கையில் இருந்து விடைபெறாத அளவிற்கு, நன்றாகத் தேறிய சொக்கலிங்கம், நர்சிங் ஹோமிலிருந்து விடைபெறும் நாள் வந்தது. செட்டியார் காரும், வந்து நின்றது.

பார்வதி, மல்லிகாவிற்கு தலைவாரி. பின்னலிட்டாள். இரட்டைப் பின்னல் கண்ணுக்கு மையிட்டாள். தண்டையார்பேட்டையில் வாங்கிய, நைலக்ஸ் புடவையை கட்டாயப்படுத்தி, கட்டிக்கொள்ள வைத்தாள். மல்லிகாவிற்கு தியாகராயநகர் வீட்டை நினைக்கவே ஆனந்தமாக இருந்தது. எப்போது போவோம் என்பதுபோல் அவசர அவசரமாக பிளாஸ்டிக் கூடையை எடுத்து வைத்தாள். அப்பாவின் சூட்கேசை துக்கி டிரைவரிடம் கொடுத்தாள். தியாகராய நகர் போனதும். 'ஷவர் பாத்'தில் குளிக்க வேண்டும் டி.வி.யைப் போட்டு. கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டும்! என்ன... இந்த அப்பா.. இன்னுமா... டாக்டரிடம் பேசிக்கிட்டு இருக்கிறார்...

பெருமாளும், மனைவி மக்களோடு வந்துவிட்டார். பரமசிவம் பயல் மட்டும் மாமாவை சங்கடத்துடன் பார்த்தான்.கால்மணி நேரத்தில், குடித்தனப் பெண்களும் வந்துவிட்டார்கள். கந்தசாமியின் மனைவி ராக்கம்மா, கண்ணீர் விட்டுக் கொண்டே வந்தாள். யாரது... அடடே... இட்லி ஆயாவா..

மல்லிகா, இட்லி ஆயாவை, நைலக்ஸ் புடவையோடு போய் நின்று, அணைத்துக் கொண்டாள். ஆயா, அங்கே வந்த சொக்கலிங்கத்திடம் "இந்தப் பிள்ளையாண்டான் தான் சொக்கலிங்கமா.. பெரியபாளையாத்தாகிட்டே.. ஒருவாட்டி போயிட்டு வா நாய்னா.. உனக்கு ஒண்ணும் வராது" என்றாள்.

பிறகு, மல்லிகாவின் காதோடு காதாக "நீ நல்லா இருப்பே குயந்தே... நீ... இங்கேயே இருக்கணுமுன்னு சொல்லத் தோணினாக்கூட... சொல்ல விரும்பல குயந்தே... ஏன்னா. நீ இருக்க வேண்டிய இடம் அதுதான் குயந்தே. ஆனால் அடிக்கடி வந்து... முகத்த காட்டிட்டுப் போ குயந்தே... எங்களை மறந்துடாதே குயந்தே... நீ மறக்கமாட்டே குயந்தே..."

'இட்லி' ஆயா தன் பொட்டல் கண்களைத் துடைத்துக் கொண்டாள் தன் மடியில் கொண்டு வந்திருந்த ஒரு இட்லியை எடுத்து, மல்லிகாவின் வாயில் ஊட்டினாள் மல்லிகா, ஆயாவையே பார்த்தாள். கடந்த நாற்பது வருடமாய், பாசத்தைப் பார்த்திருக்க மாட்டாளோ...

பெருமாள் 'சத்தம்' போட்டார்.

"ராகு காலம் வரப்போவுது. சீக்கிரம்... மல்லி... இன்னுமா பேசி முடிக்கலே, வண்டில ஏறும்மா..."

தயாராக நின்ற காரில், சொக்கலிங்கம் ஏறிக்கொண்டார். பார்வதியும் ஏறிக்கொண்டாள். மல்லிகா போவதற்காக கார் கதவைப் பிடித்துக்கொண்டே, டிரைவர் நின்றார்.

காருக்குள் போகப்போன மல்லிகா, 'இட்லி' ஆயாவைப் பார்த்தாள். 'பீடி சுத்தும்' காமாட்சியைப் பார்த்தாள், சைக்கிள் ரிக்ஷாக்காரர் மனைவி மாரியம்மாளைப் பார்த்தாள். அங்கே இல்லாத ராக்கம்மாவைப் பார்த்தாள். இவர்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது... இவர்களை செல்வத்தில்தான் என்னால் புரள வைக்க முடியல. அவர்கள் வறுமையால் வாடும்போது, துணையாகவாவது நிற்கணும்... வீட்டுக்காரி மீண்டும் இட்லி ஆயாவை இம்சை செய்யப் பார்க்காள்னு மாரியம்மாள் சொன்னாள். இந்த ராக்கம்மா வேற கஷ்டத்துல இருக்காள்... இவர்கள் கொடுமைப்படுத்தப் படாமல் இருக்கணுமுன்னால். இவர்களை கொடுமைப்படுத்த முயன்றாலும் முடியாதுன்னு ஒரு எண்ணம் வரணும்.. அந்த எண்ணத்தின் சின்னமாக ..நான் இவங்களோடேய இருக்கணும்... பிறகு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள்போல், காரில் ஏறாமலே, குடித்தனப் பெண்களைப் பார்த்தாள். "அப்பா! நான் இவர்களோடேயே இருந்துடுறேன்."

சொக்கலிங்கம் பதறினார்.

"என்னம்மா சொல்றே... என்னம்மா சொல்றே?"

"கவலப்படாதிங்க அப்பா... நான் இனிமேல் உங்கள் பெண்தான். அடுத்த ஜென்மமுன்னு இருந்து, நினைக்கிறது நிறைவேறும் என்றால் நான் அப்பவும் உங்கள் பெண்தான்... இங்கே. நான் இருக்க வேண்டிய கட்டாயம். இதனால. அங்கே வராமல் போகமாட்டேன். காலையில், இங்கேன்னால், சாயங்காலம் அங்கே ஒரு நாளைக்கு தியாகராயநகர், இன்னொரு நாளைக்கு வண்ணாரப்பேட்டை பரமசிவம்.. கார்ல ஏறுடா..."

பார்வதி, கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

"என்னம்மா இது... இன்னுமா யோசிக்கிற... நான் பழைய பார்வதி இல்ல... அதோட உன்னை வளர்த்தவடி. மடியில் போட்டுத் தாலாட்டியவள். தோளில் தூக்கிக் கொஞ்சுனவள். இதைவிட, நீயே என்னைக் கொன்னுடுடி..."

"சத்தியமாய் சொல்றேன். நீங்கள்தான் என்னோட அம்மா... நீங்கள் சம்மதிக்காத எந்த விஷயத்திலேயும் ஈடுபட மாட்டேன். அது கல்யாணமாய் இருந்தாலுஞ் சரி.." என்றாள் மல்லிகா.

சொக்கலிங்கம் மல்லிகாவின் முகத்தைப் பார்த்தபோது, அவள், அவரிடம் "இந்தாங்கப்பா... சொத்துல உரிமை கிடையாதுன்னு. நான் எழுதியிருக்கிற பத்திரம்..." என்று சொல்லி, சரவணன் கொடுத்திருந்த காகிதத்தை நீட்டினாள்.

சொக்கலிங்கம், அதைப் பிரித்துப் படிக்கப்போனபோது பார்வதி, அதைப் பிடுங்கி, சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு "உன் மனசில் என்னடி நெனைச்சிக்கிட்டே... பல்லு உடைஞ்சிடும்" என்றாள் அழுதுகொண்டே.

மல்லிகா, மன்றாடினாள்.

“என்னை மன்னிச்சிடுங்க அம்மா... நான் செய்தது முட்டாள்தனந்தான். எனக்கு உங்கள்மேலதான் ஆசையே தவிர , மற்றதுல ஆசையில்லை என்கிறதை காட்டுறதுக்காகத்தான் எழுதினேன். தப்புன்னா மன்னிச்சுடுங்கள். இல்லன்னா, உங்கள் மகளை நல்லா அடியுங்கள்... இந்தாங்க கன்னம்.

மல்லிகா, முதுகைக் குனிந்து. முகத்தைக் காட்டியபோது, பார்வதி அதில் முத்தமிட்டாள். மல்லிகா, சமரசம் செய்தாள்.

"சரிம்மா. நீங்கள் இப்போ புறப்படுங்கள். நான் காலையில் அங்கே வந்துட்டு... சாயங்காலமாய் இங்கே வந்துடுறேன்."

கார் புறப்பட்டது. தங்கம்மா செல்லம்மாவையும் ஏற்றிக் கொண்டு ஏறிக்கொண்டாள். பெருமாள், "தங்கசாலை வரைக்கும் வாரேன். பள்ளிப்பட்டுல கோணி கிடக்குது" என்று சொல்லிக்கொண்டே காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்தார்.

கார் போய்விட்டது.

மல்லிகா, 'இட்லி' ஆயாவை தன்பக்கமாய் சேர்த்துப் பிடித்துக்கொண்டே இதர குடித்தனப் பெண்களுடன் சேர்ந்து இணைந்து, பிணைந்து நடந்தாள்.