விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி தொகு

மெய்க்கீர்த்தி 01 தொகு

  1. பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப்
  2. பாமாலை மலிந்த பருமணித் திரள்புயத்
  3. திருநில மடந்தையொடு ஜயமக ளிருப்பக்
  4. கனவரை மார்வந் தனதெனப் பெற்றுத்
  5. திருமகளொருதனி யிருப்பக் கலைமகள்
  6. சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி
  7. விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறுந்
  8. திகிரியொடு செங்கோல் நடப்ப அகில
  9. புவனமுங் கவிப்பதோர் புதுமதி போல
  10. வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி
  11. யொளித்துவன் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத்
  12. தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவுங்
  13. கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
  14. ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கியும்
  15. வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
  16. வடதிசை யடிப்படுத்தருளித் தென்றிசை
  17. தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப
  18. வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலத்
  19. தலைத்தலை சிறப்பவந் தருளி வெலற்கரும்
  20. போர்ப்புலி யாணை பார்த்திவர் சூட
  21. நிறைமணி மகுடம் முறைமையிற் சூடி
  22. மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்
  23. தண்ணளி பரப்பித் தனித்தனி பார்த்து
  24. மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத்தன்
  25. கோயிற் கொற்ற வாசல் புறத்து
  26. மணிநா வொடுங்க முரசுகள் முழங்க
  27. விசையமும் புகழும்மேன்மே லோங்க
  28. வாழி வாழிஇம் மாநிலங் காக்கத்
  29. திருமணி பொற்றோட் டெழுதுபத் தாண்டு
  30. வருதிறை முன்னே மன்னவர் சுமந்து
  31. திறைநிறைத்துச் சொரிந்த செம்பொற் குவையால்
  32. தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ்
  33. செம்பொன்னம் பலஞ்சூழ் திருமா ளிகையும்
  34. கோபுர வாசல் கூடசா லைகளும்
  35. உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக்
  36. குலவரை உதைய குன்றமொடு நின்றெனப்
  37. பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும்
  38. விசும்பொளி தழைப்ப விளங்குபொன் வேய்ந்து
  39. இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப்
  40. பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும்
  41. உயர்பூரட் டாதி உத்திரட் டாதியில்
  42. அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர்
  43. இம்பர் வாழ எழுந்தருளு வதற்குத்
  44. திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து
  45. பருத்திரண் முத்தின் பயி்ல்வடம் பரப்பி
  46. நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன்
  47. திருவளர் பெயராற் செய்துசமைத் தருளி
  48. பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
  49. செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும்
  50. அளவில் லாதன வொளிபெற வமைத்துப்
  51. பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள்
  52. அத்தம் பெற்ற ஆதிவா ரத்துத்
  53. திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து
  54. இன்ன பலவும் இனிதுசமைத் தருளி
  55. ஒருகுடை நிழற்கீழ்த் தலமுழுதுங் களிப்பச்
  56. செழியர்வெஞ் சுரம்புகச் சேரலர் கடல்புக
  57. அழிதரு சிங்களர் அஞ்சிநெஞ் சலமரக்
  58. கங்கர் திறையிடக் கன்னடர் வென்னிடக்
  59. கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாயமற்
  60. றெத்திசை மன்னருத் தத்தமக் கரணெனத்
  61. திருமலர்ச் சேவடி உரிமையி லிறைஞ்ச
  62. அங்கவன் மகிழுங் கங்கையொப் பாகிய
  63. தெரிவையர் திலகம் தியாக பதாகை
  64. புரிகுழல் மடப்பிடி புனிதகுண வநிதை
  65. திரிபுவன முழுதுடையா ளெனவுட னிருப்ப
  66. ஊழி அந்நெடு மாலா கத்துப்
  67. பிரியா தென்றுந் திருமக ளிருந்தென
  68. மாதர் மடமயில் பூதலத் தருந்ததி
  69. அரணியல் கற்பிற் றரணிமுழு துடையா
  70. ளிவன்திரு மார்வத் திருளொடு மிருப்பச்
  71. செம்பொன் வீர சிம்மா சனத்து
  72. திரிபுவன முழுதுடையா ளோடும்
  73. வீற்றிருந் தருளியகோப் பரகேசரி வர்மரான
  74. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு...


மெய்க்கீர்த்தி 02 தொகு

  1. பூமாது புணரப் புவிமாது வளர
  2. நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
  3. தன்னிரு பதமலர் மன்னவர் சூட
  4. மன்னிய வுரிமையால் மணிமுடி சூடிச்
  5. செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப
  6. வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப
  7. கலிங்க மிரியக் கடமலை நடாத்தி
  8. வலங்கொ ளாழி வரையாழி திரிய
  9. இருசுட ரளவு மொருகுடை நிழற்ற
  10. விஜயாபிஷேகம் பண்ணி வீரசிம் ஹாசனத்து
  11. முக்கோக் கிழானடிக ளோடும்வீற் றிருந்தருளிய
  12. கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
  13. ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு...


மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]] :[[]]