வேங்கடம் முதல் குமரி வரை 4/002-032

2. விஜயாலய சோழீச்சரம்

தமிழ் நாட்டின் சரிதமே, அங்கிருந்து அரசு புரிந்த சேர சோழ பாண்டியர்கள் சரிதம்தானே? அதிலும் தமிழ் நாட்டில் பெரிய கோயில்களைக் கட்டி கலை வளர்த்த பெருமையெல்லாம் சோழ மன்னர்களையே பெரிதும் சேரும். சங்க இலக்கியங்களில் இச்சோழ மன்னர் புகழ் பரக்கப் பேசப்படுகிறது புலவர் பெரு மக்களால். இமயத்தைச் செண்டாலடித்த கரிகாலன், தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன், குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், போர்வைக்கோப பெருநற்கிள்ளி, வேல் பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலிய அரசர் பெருமக்களுக்குப் பின் சோழப் பேரரசு அவ்வளவு புகழ் வாய்ந்ததாக இல்லை, திரும்பவும் சோழர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்களில் முதல்வனாக விளங்குபவன் விஜயாலயச் சோழனே.

இவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்தவன். குமராங்குசன் என்பவனது புதல்வன். கி.பி. 846-ம் ஆண்டில் இவன் முத்தரையர் மரபினனான ஒரு குறுநில மன்னனைத் தாக்கி, அவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தஞ்சையைக் கைப்பற்றியிருக்கிறான். இவன் தன் பகைவர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர்களோடும் நிகழ்த்திய போர்கள் பல. இப்போர்களினால் இவன் மார்பில் 96 புண்கொண்ட தழும்புகள் இருந்தன என்று புலவர்கள் இவனைப் பாடியிருக்கிறார்கள்.

எண் கொண்ட தொண்ணூற்றின்
மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலன்

என்றே விக்கிரம சோழன் உலாவில் இவன் புகழ் பேசப்படுகிறது. இவனே தஞ்சையைச் சோழ சாம்ராஜ்யத் தலைநகராக ஆக்கியவன். புதுக்கோட்டை ராஜ்யத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கே உள்ள குன்றின் மேல் ஒரு கோயிலைக் கட்டித் தன் பின் வந்த ராஜராஜன் முதலிய சோழ மன்னர்களுக்கு எல்லாம் கோயில் கட்ட வழி காட்டியிருக்கிறான். அந்தக் கோயிலையே சரித்திர ஏடுகள் விஜயாலய சோழீச்சரம் என்று குறிக்கின்றன. அது சோழர்கோயில் கட்டிடக் கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதன் சரித்திரப் பிரசித்திக்காகவே அதனையும் இத்தொடரில் சேர்த்திருக்கிறேன். இன்னும் இந்தப் புதுக்கோட்டை, வட்டாரத்தில் சரித்திரப் பிரசித்தி உடைய சில கோயில்களையும் காட்டலாம் அல்லவா? அதற்காகவே இந்த நார்த்தாமலை விஜயாலய சோழீச்சரத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

தொண்டைமான் புதுக்கோட்டை லயனில் நார்த்தா மலை ஸ்டேஷனில் இறங்கி இரண்டு மைல் நடந்தால் நார்த்தாமலைக்கு வந்துசேரலாம். இங்கு எட்டுக் குன்றுகள் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கின்றன. மலையடிவாரத்தில் ஊர் இருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற போது, அந்த மலையினின்றும் பெயர்ந்து விழுந்த ஒரு சிறு துண்டே இம்மலைச் சிகரம் என்பர். இந்த மலையில் சிறந்த மூலிகைகள் கிடைப்பதே இதை வலியுறுத்துகிறது. நாரதர் மலையே நார்த்தா மலையாயிற்று என்றும் ஒரு கூற்று. இது எல்லாம் இல்லை. நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் காலிரிப்பூம்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி வந்தபோது முதல் முதல் தங்கிய இடம் ஆனதால் இது நகரத்தார் மலை என்ற பெயரோடு விளங்கி, பின்னர் நார்த்தாமலை என்று குறுகியிருக்கிறது என்றும் ஒரு வழக்கு.

இம்மலையின் மேல்பகுதி மேலமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. ஒன்று சமணர் குடைவு என்றும் மற்றொன்று பழியிலி ஈச்சரம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. இரண்டும் பல்லவமன்னன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்த குடைவரைகள் போலவே இருக்கின்றன. சமணர் குடைவை பதினெண்பூமி விண்ணகரம் என்றும் கூறுகிறார்கள். பாறையில் குடைந்த மூலக்கிருஹமும் அதற்கு முன்னால் அர்த்த மண்டபமும் இருக்கின்றன. நான்கு தூண்களோடு அக்குடைவரை வெட்டப்பட்டிருக்கிறது. கருவறையில் மூர்த்தி இல்லை. அர்த்த மண்டபத்தில் பன்னிரண்டு கோலங்களில் மகாவிஷ்ணு உருவாகியிருக்கிறார். பிரயோக சக்கரமும் சங்கமும் ஏந்திய திருக்கோலங்கள் அவை. குடைவரையின் முன் பகுதியில் யானைகள், யாளிகள் முதலியவை சிறிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இது ஆதியில் ஜைன ஆலயமாக இருத்து பின்னர்தான் மாணிக்க ஆழ்வார் கோயிலாகியிருக்கிறது.

பழியிலி ஈச்சரமும் குடைவரைக் கோயிலே. எட்டு அடி நீளமும் ஏழு அடி அகலமும் ஆறரை அடி உயரமும் கொண்ட சிறிய குடைவரையே இது. பல்லவ நிருபதுங்கனது ஆட்சியில் விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி இக்குடைவரையைக் குடைவித்தான் என்று சாஸனம் கூறுகிறது. சாத்தன் பழியிலி பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவன். இக்குடைவரையில் துவாரபாலகர் உருவங்களும் பூதகணங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

பதினென் பூமி விண்ணகரம் என்னும் சமணர் குடைவுக் கெதிரேதான், விஜயாலய சோழீச்சரம் காட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் ஒரு பிரதான கோயிலையும் உடையதாய் இருந்திருக்கிறது. பிரதான கோயில் மேற்கே பார்த்தது. இக்கோயிலின் கர்ப்பகிருஹம் ஓங்கார வடிவத்தில் இருக்கிறது. குறுக்கில் ஒன்பதடியும் உயரத்தில் எட்டு அடியும் உடையதாக இருக்கிறது. சுவரின் கனமோ ஐந்து அடிக்குக் குறைவில்லை. நான்கு மூலைகளும் சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. இது முழுதும் 29 அடி சதுரம் உள்ள ஒரு மண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. கருவறைக்கு மேலே அதே மாதிரி இரண்டு தளங்கள் வேறே இருக்கின்றன. சிகரம் வரவரக் குறுகிக் கடைசியில் ஒரு ஸ்தூபியுடன் விளங்குகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தது மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதம்தான். இந்தக் கட்டிட முறையைப் பின்பற்றியே ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு விமானம் எழுப்பியிருக்கிறான்.

இக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் நான்கு சிம்மலாடங்கள் இருக்கின்றன, அவைகளுக்கு இடையில் கீழ்வரிசையில் நான்கு திக்கிலும் நான்கு ரிஷபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலைச் சுற்றிய நான்கு புரைகளில் {Nlches} கற்சிலைகள் உண்டு. மேற்கில் சிவனும் பார்வதியும் தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபம். அங்கு சுவரில் அடங்கிய அரைத் தூண்களில் இருக்கின்றன. இதன் வெளிப்புறத்தில் புரைகள் இல்லை. மண்டபத்தைத் தாங்க நல்ல கற்றூண்கள் இருக்கின்றன, தூண்களின் மேலுள்ள போதிகைகள் எல்லாம் பல்லவர் காலத்தியவைபோல் வெகு சாதாரணமாகவே இருக்கின்றன.

அந்த மண்டபத்தின் வாயிலில் துவார பாலர்கள் ஐந்து அடி, உயரத்தில் கம்பீரமாய் எழுந்து நிற்கிறார்கள். ஒரு கையில் கதை இருக்கிறது. மற்றொரு கையில் விஸ்மயக்குறி-அதாவது லியப்புக்குறி இருக்கிறது. சடாமகுடம் தரித்தவர்களாக இருக்கும் அவர்கள் தலையில் கொம்புகள் போல் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. காதில் மகர குண்டலம், உடம்பில் கடிபந்தம், உதரபந்தம், சலங்கை போன்ற குஞ்சலத்துடன் முறுக்கிய யக்ஞோபவீதமும், கையில் கடகங்களும் அணிந்தவர்களாக அவர்கள் கானப்படுகிறார்கள். பின்னர் சோழர்கள் கட்டிய கோயில்களின் துவாரபாலகர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அமைந்தவர்கள் இவர்களே என்று தெரிகிறது.

இந்த மூலக்கோயில்களைச் சுற்றித்தான் ஏழு சுற்றுக் கோயில்கள் இருந்திருக்கின்றன, இன்று இருப்பவை ஆறு கோயில்களே, சூரியன், சப்த மாதர், சுப்பிரமணியர், கணபதி, ஜேஷ்டாதேவி, சண்டீசர், சந்திரன் இவர்களுக்கு எனத் தனித்தனிக் கோயில்கள். எல்லா கோயில்களும் கல்லால் கட்டிய கோயில்கள். அஸ்திவாரம் முதல் ஸ்தூபி வரையில் முழுக்க முழுக்க கருங்கல்லே. சுண்ணாம்பு கூட உபயோகிக்காமல் செவ்வையாக இணைக்கப்பட்டிருக்கின்ற இக்கற்களைப் பார்க்கும்போது அக்காலத்திய கட்டிடக் கலைஞர்களது மேதாவிலாசம் நன்கு விளங்கும். கோயில் கட்டிடக் கலையை ஆராய விரும்புபவர்களுக்கு, இந்தக் கோயில் ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். விஜயாலய சோழீச்சரம் என்னும் இக்கோயிலை உள்ளடக்கிய நார்த்தா மலையில் வேறு பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்லைதான். என்றாலும் ஊரை விட்டுக் கிளம்புமுன் கிராமத்தின் நடுவில் உள்ள ஜம்புகேசுவரர் கோயிலுக்கு, மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தே திரும்பலாம். மாரியம்மன் சிறந்த வரப்பிரசாதி. அங்கு நடக்கும் திருவிழாவும் மிகப் பிரபலமானது அந்த வட்டாரத்திலே.

புதுக்கோட்டை வட்டாரத்தில் இன்னும் சில கோயில்கள் உண்டு.

புதுக்கோட்டைக்கு மேற்கே பத்து மைல் தூரத்தில் அன்னவாசல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு சென்று ஓர் ஆளைத் துணை கூட்டிக்கொண்டு கொஞ்சம் காட்டுவழி எல்லாம் கடந்தால் தமிழ்நாட்டின் அஜந்தாவான சித்தன்னவாசல் மலையடிவாரம் வந்து சேரலாம். இங்கே வடகிழக்காகப் பரவியுள்ள ஒரு பெரிய குன்றில் ஏழடிப்பட்டம் என்னும் சமணக்குகைகள் இருக்கின்றன. அந்தச் சமணர்கள் சித்தர்களாக இருந்திருக்கிறார்கள் இங்கு மேற்கே பார்க்க அமைக்கப்பட்ட குடைவரையில்தான் அஜந்தா சித்திரங்களைப் போல அழியாத சித்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் மலைமேல் ஏறித்தான் இக்குடைவரையை அடைய வேணும்.

பின்புறம் ஒரு கருவறையும் முன்புறம் ஒரு மண்டபத்துடலும் கூடியது அது. முன் மண்டபத்திலே இரண்டு பார்சவ நாதரது உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்துத் தூண்களிலே மகேந்திரவர்மனும் நாட்டியப் பெண் ஒருத்தியும் சித்திரத்தில் தீட்டப்பட்டிருக்கிறார்கள், முன் மண்டப விதானத்திலே ஜைனர்கள் சொல்லும் பரமபதம் என்னும் சாமவ சரவணப் பொய்கை எழுதப்பட்டிருக்கிறது. அங்கு தாமரை இலைகளும்

விஜயாலய சோழிச்சரம்

மலர்களும் காயாமமலர்ந்து கிடப்பது கண் கொள்ளாக் காட்சி, வித்தகர் இயற்றிய கைவினைச் சித்திரம் அது. உள் மண்டபத்திலே உள்ளலிதானத்திலே அழகான ரத்தினக்கம்பளம் விரித்திருக்கும். ஆம் சித்திரத்தில்தான். அழியா வண்ணங்களால் ஆக்கப்பட்டவைதாம் என்றாலும் இன்று மங்கி மறைந்தே வருகின்றன. இச்சித்திரங்கள் தமிழன் சித்திரக்கலையில் அடைந்திருந்த தேர்ச்சியை விளக்கப் போதுமானதொன்று. இக்குடைவரையும் இங்குள்ள சித்திரங்களும் மகேந்திரவர்மன் சமணனாக இருந்த காலத்தில் உருவாகியிருக்க ளவேணும். ஆதலால் இவை மாமல்லபுரத்தின் பொற்காலத்துக்கு முந்தியவை. ஆகவே சென்று கண்டு மகிழ வேண்டியவை.

புதுக்கோட்டையிலிருந்து செல்லும் வழியாக மேற்கே பன்னிரண்டு மைல் சென்றால புல்வயல் அடவியின் மத்தியிலுள்ள குடுமியான்மலை வந்து சேருவோம். இங்குள்ள சிகாநாதர் கோயில் மிகப் பழைய கோயில், இங்குள்ள மூர்த்திக்குச் சிகாநாதர் என்ற பெயர் எப்படி வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ளலாமே.

மதுரையிலிருந்து ஆண்ட மன்னன் சுந்தரபாண்டியன் அர்த்தசாம காலத்துக்குப் பின்னேயே இக்கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலில் நீண்ட நேரம் இருந்த அர்ச்சகர் அர்த்த சாமம் முடிந்ததும், இறைவனுக்கு அணிந்திருந்த மாலைகளை எடுத்துச் சென்று தம் காதல் கிழத்தியான கணிகை ஒருத்திக்குக் கொடுத்து விடுகிறார். அரசன் வந்திருக்கிறான் என்பது அறிந்த - அர்ச்சகர் அந்த மாலைகளைப் போய் எடுத்து வந்து அதில் ஒரு மாலையை மன்னனிடம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு மயிர் இருப்பதைக் கண்டு கோபங்கொண்ட அரசனிடம் அர்ச்சகர் தைரியமாகவே,

கொடும்பாளூர் கோயில்

'இறைவனுக்குச் சிகை உண்டு. அந்தச் சிகை மயிரே அது' என்று சொல்லியிருக்கிறார். அர்ச்சகர் சொல்லைக் காக்கவே இறைவன் அன்று முதல் சிகையையும் ஏற்றுச் சிகாநாதர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.

சிகாநாதர் இருக்கும் கோயிலே குடுமியான் மலைக்கோயில். இங்கு பெரிய பெரிய மண்டபங்கள், மச்சாவதாரம் முதலிய சிற்ப வடிவங்கள், ஆஞ்சநேயர், வாலி, சுக்ரீவன் எல்லோரும் வேறே வந்து இடம் பிடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள் சிலைவடிவங்களில், சிகா நாதரும் அவரது துணைவி அகிலாண்டேசுவரியும் குடைவரைக்குள் இருக்கிறார்கள். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் எல்லாம் பின்னால் எழுந்திருக்கின்றன. இக்கோயில் மேல் பிராகாரத்திலுள்ள மலையைச் செதுக்கிச் சுவர்போலாக்கி அதிலே மன்னன் மகேந்திரவர்மன் ஒரு சிறந்த சங்கீத சம்பந்தமான தகவலை வெட்டி வைத்திருக்கிறார். இது கிரந்த எழுத்தில் இருக்கிறது. வெட்டிய மன்னன் தன்னை ருத்ராச்சாரியார் சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதினால் அவனை மகேந்திரவர்மன் என்று கூற முடிகிறது. பரத நாட்டிய நூலுக்கும் சாரங்கதேவர் சங்கீதரத்னாகரத்துக்கும் இடைப்பட்ட கல்வெட்டு இதுதான், மகேந்திரவர்மன் சித்திரக்காரப் புலி மாத்திரம் அல்லவே? சங்கீர்ண ஜாதியின் ஆதிகர்த்தா ஆயிற்றே.

குடுமியான் மலையைவிட்டு மேற்கு நோக்கிப் பத்து மைல் நடந்தால் கொடும்பாளூர் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊருக்கு வந்து சேருவோம். வேளிர் தலைவர்களது பிரசித்திபெற்ற ஊர் ஆயிற்றே. சோழ மன்னர்களுக்கு வலக்கை போல் இருந்து போர்களில் உதவியவர்கள் அவர்கள். கொடும்பாளூரில் நாம் காண வேண்டிய இடம் இரண்டு. ஒன்று மூவர் கோயில், மற்றொன்று ஐவர் கோயில், மூவர் கோயிலில், இன்று இருப்பது இரண்டு கோயில்களே. அதுவும் இடிந்து கிடந்ததைத் திரும்பவும் எடுத்துக்கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முழுதும் கல்லாலே கட்டியிருக்கிறார்கள். அழகான சிற்ப வடிவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள், இந்த மூவர் கோயிலிலாவது இரண்டு கோயில்கள் உருப்படியாக இருக்கின்றன. 'ஐவர் கோயிலில் அதுவும் இல்லை. ஐந்து தளிகளையுமே காணோம். இடிந்த அடித்தளம், அங்கு சிதறிக் கிடக்கும் சில கற்சிலைகள் அவ்வளவுதான். கொடும்பாளூர் வேளிர்களில் ஒருவரான பூதி விக்கிரமகேசரி காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவன் இரண்டாம் பராந்தகச்சோழன் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் என்று தெரிகிறது.