வேங்கடம் முதல் குமரி வரை 4/022-032

22. மன்னார் கோயில் வேதநாராயணன்

வெங்கண் திண்களிறு அடர்த்தாய்
வித்துவக் கோட்டம்மானே!
எங்குப்போய் உய்கேன் உன்
இணைட்டியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரைகாணாது
எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம் பேறும்
மாப்பறவை போன்றேனே.

என்று ஒரு பாசுரம். மிக அருமையான பாசுரம். ஒரு கப்பல் புறப்படுகிறது கடலில், அக்கப்பலின் கொடிமரத்திலே ஒரு பறவை இருக்கிறது. கப்பல் நடுக்கடலுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது பறவை பறக்க ஆரம்பிக்கிறது. நிலத்தை விட்டு நெடுந்தூரம் கப்பல் வந்துவிட்டதால் பறவையால் திரும்ப நிலத்துக்குச் செல்ல முடியவில்லை, கடலிலோ பறவை சென்று தங்க வேறு இடமும் இல்லை. ஆதலால் பறந்த பறவை திரும்பவும் கப்பலின் கொடி மரத்துக்கே வந்து சேருகிறது. நாமும் வாழ்வு ஆகிய கடலிலே இறைவனாகிய கப்பலின் கொடி மரத்தில் உள்ள பறவை போன்றவர்கள்தாமே? எப்படி எப்படிப் பறந்தாலும் கடைசியில் இறைவனிடத்துக்கே திரும்பி அவனது தாள்களையே பற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையல்லவா? இந்த அற்புத உண்மையைத்தான் நல்லதோர் உவமையோடு பாடல் கூறுகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் குலசேகரர்.

ஆம்! பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார்தான். சேரமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். கொல்லிகரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டு வருகிறார். எம்பெருமானிடம் தீராத காதல் கொள்கிறார். அது காரணமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு நெருங்கி வாழ்கிறார். இது மந்திரி பிராதானிகளுக்குப் பிடிக்கவில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களிடம் இருந்து பிரிக்க ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள். பெருமான் திருஆபரணப் பெட்டியிலிருந்து ஒரு நவரத்தின ஹாரத்தை எடுத்து ஒளித்து வெத்து விட்டு அதனை வைஷ்ணவர்களே எடுத்திருக்க வேண்டுமென்று மன்னரிடம் புகார் செய்கிறார்கள். மன்னருக்கோ லைஷ்ணவர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை. அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்க, ஒரு மண் குடத்தில் விஷப் பாம்புகளைப் போட்டுக் கொண்டு வந்து வைத்து. 'அந்த ஹாரத்தை வைஷ்ணவர்கள்தாம் எடுத்திருக்கிறார்கள்' என்று சொல்கிறவுரை, குடத்தில் கைவிட்டுப் பிரமாணம் செய்யச் சொல்கிறார். மந்திரி பிரதானிகள் ஒருவரும் முன்வரவில்லை. உடனே மன்னராம் குலசேகரரே, 'பரன் அன்பர் அக்காரியம் செய்யார்' என்று சொல்லிக் கொண்டே பாண்டத்தில் கையை விட்டுச் சத்தியம் செய்கிறார். பாண்டத்தில் உள்ள பாம்பு ஒன்று அவர் கை வழியாக ஏறித் தலையில் வந்து அவருக்குக் குடை. பிடிக்கவும், மற்றொன்று வெளியே வந்து ஹாரத்தை மறைத்தவர்களைச் சீறி விரட்டவும் செய்கின்றது. மறைத்தவர் மன்னர் காலில் விழுந்து மன்னிப்புப் பெறுகிறார்கள். குலசேகரர் பரமபக்தராக, ஆழ்வாராக வாழ்கிறார். பரந்தாமன் மீது பல பாடல்களைப் பாடுகிறார். இந்தத் தகவலையெல்லாம்.

ஆரம் கெடப், 'பரன் அன்பர்
கொள்ளார்' என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில்
கையிட்டவன்-மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல்
கொல்லி காவலன், வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி
வேந்தர் சிகாமணியே

என்ற பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குலசேகரர் பலதலங்களுக்கும் சென்று. கடைசிக் காலத்தில் வந்து தங்கியிருந்த இடம்தான் வித்துவக்கோடு. இந்த வித்துவக்கோடு மலை நாட்டில்
குலசேகரர்

உள்ள தலம் என்று கருதுபவர்கள் பலர். இல்லை, கரூரை அடுத்த வித்துவக் கோட்டக் கிரகாரமே என்பார் சிலர், இன்னும் சிலர் இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோயிலே என்பர். எந்தத் தலமாக வேணும் இருக்கட்டும். வங்கத்தின் கூம்பு ஏறிய மாப்பறவை போல் பல தலங்களுக்கும் சென்ற குலசேகரர் கடைசியில் வந்து தங்கிய இடம் மன்னார் கோயில் என்பதில் விவாதம் இல்லை. அந்த மன்னார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டத்திலே அம்பாசமுத்திரம் என்னும் ஊருக்கு வடமேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கு செல்ல அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு செல்லவேணும். காரில் வந்தால் நேரே ஊரில் போய் இறங்கலாம். அம்பாசமுத்திரம் - தென்காசி ரோட்டில் பஸ்ஸில் வந்தால் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இறங்கி நடந்து ஒரு மைல் வடக்கு நோக்கிச் செல்ல வேணும். ஊரை அடுத்துக் கருணை நதி ஓடுகிறது. கோயில் வாயிலில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதனைப் பந்தல் மண்டபம் என்பர். இம்மண்டபத்தில் முத்துகிருஷ்ன நாயக்கருடைய சிலையும் அவனுடைய தளவாய் ராமப்பய்யனுடைய சிலையும் இருக்கின்றன. பாண்டியர்கள் சின்னமாக மீன்கள் மண்டப முகட்டில் காணப்படுகின்றன. ஆதலால் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் யாரோ ஒரு பாண்டியன் கட்டியிருக்க வேணும்.

இதனை அடுத்தே கோயிலின் பிரதான வாயில், அந்த வாயிலை ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரம் அணி செய்கிறது. இதனை அடுத்தது ஒரு பெரிய மண்டபம், இம்மண்டபத்தில் குமார கிருஷ்னப்ப நாயக்கர் சிலை இருப்பதால் அவரே இம் மண்பம் கட்டியிருக்க வேணும், இங்கேயே செண்டலங்கார மாமுனிகள், பராங்குசர் முதவியோரது சிலைகள் . இருக்கின்றன. மற்ற மண்டபங்களையும் கடந்து அந்தாரளம் சென்றால் அதை அடுத்த கருவறையில் மூலவரான வேத நாராயணனைத் தரிசிக்கலாம். இவருக்கு இரு பக்கத்திலும் ஸ்ரீதேவியும் பூதேவியும் நிற்கிறார்கள். வேதநாராயணனும் நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கிறான். பக்கத்திலேயே பிருகு மகரிஷியும் மார்க்கண்டேயரும் இருக்கிறார்கள்

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இத்தலம் ஏற்பட்டதே, பிருகு மகரிஷியால்தான். பிருகு மகரிஷியின் பத்தினி கியாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். இதனால் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தால் கியாதியைச் சேதிக்கிறான். மனைவியை இழந்த பிருகு கோபங்கொண்டு, 'நான் மனைவியை இழந்து தவிப்பது போல் இந்தப் பரந்தாமனும் மனைவியை இழந்து தவிக்கட்டும்' என்று சாபமிடுகிறார். கோபம் தெளிந்த பின், பரந்தாமனைச் சபித்துவிட்டோமே என்று வருந்தி, தவம் கிடக்கிறார். ஆனால் பரந்தாமனோ, 'மகரிஷியின் வாக்கும் பொய்க்கக்கூடாது' என்று பின்னர் ராமனாக அவதரித்து சீதையைப் பிரிந்து துயர் உறுகிறார் இராவண வதம் முடித்துத் திரும்புகின்ற போது, பிருகு வேண்டிக் கொண்டபடி, அவருக்குச் சேவை சாதிக்கிறார். பிருகுவும் அந்த வேத நாராயணனைப் பொதிய மலைச் சாரலிலே இந்த இடத்திலே பிரதிஷ்டை பண்ணுகிறார். தாமும் தம் கொள்ளுப் பேரனுமான மார்க்கண்டேயனுடன் அத்தலத்தில் தங்கி, வேதம் ஓதிக் கொண்டு வாழ்கிறார். அதனாலே வேத நாராயன் சந்நிதியில் பிருகுவம் மார்க்கண்டரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

மன்னார்கோயில் விஷ்வக்சேனர்

வேதநாராயணனும், வேதவல்லித் தாயாரும் புவனவல்லித் தாயாரும் உத்சவ மூர்த்திகளாக அமர்ந்திருக்கின்றனர். இத்தாயார்களுக்குத் தனிக் கோயில்கள் வேறே இருக்கின்றன. அந்த மண்டபத்திலே குலசேகரரது திரு ஆராதனை மூர்த்தியான ராமன் சீதா லக்ஷ்மண சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். இன்னும் இங்கேயே காட்டுமன்னார், கண்ணன், சக்கரத் தாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ராமானுஜர். மணவாள மாமுனிகள் எல்லோரும் இருக்கின்றனர். இந்த மண்டபத்திலிருந்து வேத நாராயணனைச் சுற்றி ஒரு பிரதக்ஷிணம் இருக்கிறது. அதனை அடைத்து வைத் திருக்கின்றனர். இதற்கு அடுத்த மண்டபமே மகாமண்டபம். இத்தலத்தில் இதனைக் குலசேகரன் மண்டபம் என்று அழைக்கின்றனர். இதில் ஓர் உள் மண்டபமும், வேதிகையும் இருக்கின்றன. இந்த வேதிகையை விசுவநாதன் பீடம் என்கின்றனர். இந்த வேதிகையில் ராஜகோபாலன். ஆண்டாள், கருடன் எல்லோரும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ராஜகோபாலன் பக்கத்திலே குலசேகராழ்வார் உத்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

இதற்கு வெளியே உள்ள கிளிக்குறடும் மண்டபமும் மணிமண்டபம் என்று பெயர் பெறும். இக்குறட்டிலிருந்து தென்பக்கத்துப் படிகள் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றால் அங்கு பரமபதநாதன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இவரைச் சுற்றியுள்ள பிரதட்சிணமே யானை முடுக்கு என்று சொல்லப்படுகிறது. அதன்பின் அந்த மண்டபத்தின் கீழ்ப்புறமுள்ள படியாக மேலும் ஏறிச் சென்றால் அரங்கநாதன் போல் பள்ளிக்கொண்ட பெருமானைக் காணலாம். இப்படி, வேத நாராயணனாக நின்று, இருந்து கிடந்த கோலத்தில் எல்லாம் சேவை சாதிக்கிறான். இந்தப் பள்ளிக்கொண்ட பெருமானைச் சுற்றியுள்ள பிரதட்சிணத்தைப் பூனை முடுக்கு என்கின்றனர், இனி படிகளின் வழியாகக் கீழே இறங்கி வந்து வடபக்கத்துக்குச் சென்றால் அங்கு புவனவல்லித் தாயாரைக் கண்டு வணங்கலாம். அங்கேயே விஷ்வக்சேனரையும் தரிசிக்கலாம். அதன்பின் அங்குள்ள சின்னக் கோபுர வாயில் வழியாகக் கொடி மண்டபத்துக்கு வந்தால் வடக்கு வெளிட்ட பிராகாரத்தில் குலசேசுராழ்வார் சந்நிதிக்கு வரலாம். இவருக்குத் தனிக்கோயில், கொடிமரம், தேர் எல்லாம் ஏற்பட்டிருக்கும் சிறப்பைப் பார்த்தால் இவர் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுவதின் அருமை தெரியும். இங்கு கருவறையில் ஆழ்வார் கூப்பிய கையோடு எழுந்தருளியிருக்கிறார்.

குலசேகரர் இத்தலத்துக்கு வந்து தங்கியிருந்ததைப் பற்றி எத்தனையோ கதைகள். இங்கு இவர் வந்து தங்கியிருந்த காலத்தில் தன் ஆராதனை மூர்த்திகளான சக்கரவர்த்தித் திருமகனையும், ராஜகோபாலனையும் இக்கோயிலில் எழுந்தருளச் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். அங்குள்ள அர்ச்சகர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. க்ஷத்திரியராம் குலசேகரரது ஆராதனை மூர்த்திகளைக் கோயிலுள் எழுந்தருளப்பண்ண இயலாது என்பது அவர்களது வாதம், அன்றிரவு திரு விசாகம் ஆனதும், கோயில் ஆழ்வாரைக் கொண்டு சந்நிதி முன் வைத்துப் பெருமாளைப் பிராத்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார் குலசேகரர். மறுநாள் விடியற்காலையில் கதவைத் திறந்தால் உள்ளே. சக்ரவர்த்தித் திருமகனும் ராஜகோபாலனும் எழுந்தருளியிருக்கிறார்கள். உடனே எல்லோரும் குலசேகரர் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவர் பக்திப் பெருமையை உணர்ந்திருக்கிறார்கள், குலசேகரர் பின்னர் அத்தலத்திலேயே தங்கித் தமது 87-வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார்.

ஆதியில் இத்தலம் வேத நாராயணபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கல்வெட்டுக்களிலிருந்து கன்ணனுக்கு ஒரு கோயில் இவ்வூரில் இருந்திருக்கவேணும் என்று தெரிகிறது. அக்கோயில் இப்போது இல்லை. உடைந்த வேணுகோபாலன் கற்சிலையும், ருக்மணியின் கற்சிலையமே கிடைத்திருக்கின்றன. கோயிலுள் ஒரு நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் மட்டும் இருக்கிறது. பிரம்ம வித்துவான்கள் நிறைந்த ஊராகையால், பிரம்ம வித்துவான்களுக்குப் பாண்டிய அரசர்களால் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊராகையால், இதனைப் பிரமதேயம் என்றும் அழைத்திருக்கின்றனர்.

இந்த ஊருக்கு மன்னார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்பதைச் சொல்லவில்லையே என்றுதானே குறைப்படுகிறீர்கள்? குலசேகரருக்கு ராஜகோபாலன் என்ற அழகிய மன்னனார் பேசும் தெய்வமாக இருந்திருக்கிறார். அத்துடன் குலசேகர மன்ளன் பெயரையும் தொடர்புப் படுத்தி மன்னனார் கோயில் என்று முதலில் வழங்கியிருக்கவேணும். பிறகு மன்னார் கோயில் என்று குறுகியிருக்க வேணும்.