வேண்டும் விடுதலை/இந்திய அரசு தன்நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது!

 
இந்திய அரசு, தன் நாட்டு மக்கள்
மீதே போர் தொடுக்கிறது!


ந்திய அரசு, தன் நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் உண்மையான உரிமை எழுச்சிகளை அடக்கவும், ஒடுக்கவும். முறியடிக்கவும் அதில் அவர்களை வெற்றி கொள்ளவும், போர் முயற்சிகளைக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்கள் வழியாகவும், போர், படைத்துறைகளை ஏவிவிட்டும், காவல் துறையைக் கட்டவிழ்த்து விட்டும், மக்களை அடித்தும், நொறுக்கியும், வன்கொடுமைச் சிறையிலிட்டும், சுட்டுப் பொசுக்கியும் அழித்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கொடுமையானது அரக்கத்தனமானது; குடியரசு கோட்பாட்டுக்கே முரணானது; அம் முறைக்கே உலைவைப்பது.

ஒப்போலை முறையில், அதுவும் பண மூட்டைகளையும், படை, காவல் துறைகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கவர்ச்சியால் உறுதி மொழிகளால் ஏமாற்றியும் விளம்பரங்களால் ஏமாற்றியும் அவை செல்லுபடியாகாத விடத்தில் மக்களை மிரட்டியும் கொடுமைப்படுத்தியும் தில்லுமுல்லுகள் செய்தும் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு மக்களின் உரிமைக் குரல்வளைகளைத் நெரிக்கும் வகையில், அவர்களைக் கொடுங்கோல் முறைகளில் அடக்கி யாண்டு வருகிறது நடுவண் அரசு எனப்படும் இந்திராப் பேராய ஆட்சி!

இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் இங்குள்ள பெரும்பான்மை மக்களைப் பட்டினி போட்டும் வாழ்வதற்குரிய வழிவகைகளை அமைத்துக் கொடுக்காமலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, இந்நாட்டு முதலாளிகளுக்கே ஆக்கமான பல சட்டதிட்டங்களை அமைத்துக் கொடுத்து, அவர்களின் நிழவிலேயே தன் வல்லதிகாரங்களை வளர்த்துக் கொண்டு வருகிறது, இந்திராப் பேராயம்.

வெள்ளையராட்சியைக் கொள்ளையராட்சி என்று குறை கூறினர், இந்நாட்டின் புரட்டல் தேசிய அரசியல்காரர்கள். ஆனால், அவர்கள் என்றுமே ஏழைகளைக் கொள்ளையடித்ததில்லை. கொடுங்கோலர்கள் என்று வண்ணித்தார்கள்; ஆனால் அவர்கள் என்றுமே பாட்டாளிகளுக்கும் உழவர்களுக்கும் எதிராகப் போர் தொடுத்ததில்லை. வெறும் வெற்றுத் தேசிய உணர்ச்சிகொண்ட போராட்டக்காரர்களையே வேளை வந்த பொழுது அடக்கி ஒடுக்கினார்கள். அதே வேளை முகிழ்த்தபொழுது இந்திய நாட்டின் ஆளுமை உரிமையை இவர்களிடம்தூக்கிக் கொடுத்து விட்டு இந்நாட்டை விட்டே நாணயமாகவும், பெருந்தன்மையாகவும் வெளியேறினார்கள். பொதுமக்களை நோக்கி ஒரு போதும் அவர்கள் தம் வல்லதிகாரப் போக்குகளைக் கையாண்டதில்லை. இதை வரலாறு பேசும் வாழ்வியல்கள் உறுதிப்படுத்தும் அவர்களுடைய ஆட்சி எச்சங்கள்தாம் இன்று நம் நாட்டில் கல்விக்கூடங்களாகவும், கலைக்கழகங்களாகவும் பாரளுமன்றங்களாகவும், கோட்டைகளாகவும் கொத்தளங்களாவும் ஏன் அரசியல் சட்டங்களாகவும், அறமன்றங்களாகவும் கூட ஒளி வீசி, அவர்களின் ஆட்சியின் மாட்சியை உலகுக்கே உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள்; ஆனால் என்றென்றும் ஆட்சி செலுத்த விரும்பியதில்லை. மக்களை ஆளவிரும்பினார்கள்; ஆனால், அடிமைப்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; அறியாமையைப் போக்கினார்கள்; ஆளுமையைச் சொல்லிக் கொடுத்தார்கள் அறநெறியை நிலைநாட்டினார்கள்! அவர்களுக்கு முன் இங்கே நால்வருணக் கோட்பாடும். மனு அதர்ம ஆட்சியும் முப்புரி நூலுந்தானே மக்களை ஆண்டு கொண்டிருந்தன! வெள்ளையர்களன்றோ மக்களுக்கு வாழ்வியலைக் கற்றுத்தந்த வள்ளல்கள் அறிவியலை ஆற்றுப்படுத்திய அறிஞர்கள்! அறவியலை நிலைநாட்டிய அறவோர்கள்! நாகரிகத்தை நல்கிய நயன்மையாளர்கள் பொதுமையை வித்திட்ட புதுமையாளர்கள்! அவர்களுக்கு முன்னர் இங்கு சாதிகள் தாமே ஒழுக்கம் சமயங்கள் தாமே ஆட்சி நெறி! பண்டாரங்கள் தாமே பள்ளியாசிரியர்கள் கோயில் தாமே கண்காட்சிகள்! திருவிழாக்கள் தாமே குமுகாய நெறிக் கருத்தரங்குகள்

ஆனால், இன்று, இங்கு, நிலைமைகள் மீண்டும் தலைகீழாக அன்றோ மாறிவருகின்றன. மதப்பித்தர்கள் ஆட்சிக் கட்டில் ஏறுகிறார்கள்; பண மூட்டைகள் பதவிகளில் அமர்கின்றன; கொடுமையாளர்கள் அதிகாரங்களைக் கைப்பற்றுகின்றனர்; பழமைக்கு மீண்டும் ஆலவட்டம் வீசப்படுகிறது! புதுமைக்கு மீண்டும் கதவடைப்பு செய்யப்படுகிறது! அறியாமை அறிவியலுடன் கைகோத்துக் கொண்டு, உலா வருகிறது. முதலாளியக் கோமான்கள் நாட்டையே விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்! மதங்கள் மெருகூட்டப் பெறுகின்றன! சாதிகள் சதிராட்டம் போடுகின்றன! கொள்ளையர்கள் திட்டங்கள் தீட்டுகின்றனர்! கொடுமையாளர்கள் சட்டங்களை உருவாக்குகின்றனர்! இங்கே இப்பொழுது அறமெங்கே? ஆட்சியெங்கே? ஆள்பவர்கள் தாம் எங்கே துமுக்கியும் குண்டுகளும், நச்சுப்புகைகளும், தகரிகளும் அன்றோ ஆட்சி செய்கின்றன! படைத்துறைகளும் காவல்துறைகளுமன்றோ அதிகாரங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டன! நாள்தோறும் எத்தனைத் துமுக்கிச் சூடுகள்! எத்தனைக் கொடுமைச் சாவுகள் ! எத்தனையெத்தனை உறுப்புச்சிதைவுகள்! எத்தனை யெத்தனைக் கற்பழிப்புகள்! இராசீவ் காந்தியின் மனைவியும் நடுத்தெருவில் காவலின்றிப் போக முடியாதே!- இது முடியாட்சியை வீழ்த்திய குடியாட்சி நாடு! இங்கு வாழ்க அன்னை (வந்தே மாதரம்) பாட்டு இசைகள்! தூ! இஃதொரு நாடா? இதற்கோர் அரசா? வெட்கம்! வெட்கம்!

இந்தக் கேடுட்ட நாட்டில்தான், வறுமையைப் போக்கச் சட்டங்கள் இல்லை; வலிந்துகேட்பவர் (வன்முறையாளர்) களுக்குச் சாவுத் தண்டனையாம்! மக்கள் குடியிருப்புக்கு வக்கில்லை; கோரிக்கையாளர்களுக்கு வாணாள் சிறையாம்! படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை; பதவி வெறியர்களுக்குப் பல்வேறு அதிகாரங்களாம்! காந்தி பிறந்த நாடாம் இது விளம்பரப்படுத்துகிறார்கள்! ஆனால் கயமைக்கும். களியாட்டத்துக்குமே இங்கு வாழ்க்கை, ஆனால், இவர்கள் சுட்டியுரைக்கும் வன்முறையாளர்களும், கொடுமையாளர்களும் யார்? அவர்கள் எங்கே தோன்றினர்? ஏன், அவர்கள் கருவிகளைக் கையிலெடுத்தார்கள்? அவர்களின் கோரிக்கைகள் என்ன? போராட்டங்களை ஏன் செய்கிறார்கள்? மீண்டும் இந்தப் புனித(!) நாட்டை வெள்ளைக்காரனிடம் ஒப்படைக்கக்கேட்டார்களா? ஆளுநரும் (கவர்னரும்) அரசப் பகராளரும் (வைசிராயும்) மீண்டும் இந்நாட்டை ஆளுமை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனரா? இல்லை, நாணயம் அடிக்கத்தான் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். என்று வழக்காடினார்களா? இல்லை, இல்லை. அவர்கள் கேட்பது மொழி உரிமை! இனநல உரிமை வாழ்வியல் உரிமை தன்னாட்சி உரிமை! வறுமைக்கு மருந்து உரிமைக்கு விடுதலை! அவர்கள் ஏன் அவற்றை வேண்டினர்?

அனைத்து இனங்களுக்கும், அனைத்து நாகரிகங்களுக்கும், பண்பாடுகளுக்கும். அனைத்து மொழிகளுக்கும் பொதுவான இந்நாட்டை, ஓரினமே, ஒரு நாகரிகமே ஒரு பண்பாடே, ஒரு மொழியே ஆள்வதற்கு முற்றாட்சி உரிமை கேட்கிறது. அதனால் பிற இனங்களை, பிற தேசிய இன நாகரிகம் பண்பாடுகளை அழிக்கிறது; பிற தேசிய இன மொழிகளைச் சிதைக்கிறது! இவையனைத்தும் மதத்தின் பெயரால். ஒருமைப்பாட்டின் பெயரால், ஒற்றுமையின் பெயரால் துமுக்கிகளின் துணையைக் கொண்டு குண்டுகளின் வலிமைகளைக் கொண்டு படையாளிகளையும் காவலாளிகளையும் சார்பாக வைத்துக் கொண்டும் செய்யப்படுகின்றன. சீரழிக்கப்படுகின்றன!

பேசிப் பார்த்தார்கள் மக்கள்! கோரிக்கை விடுத்துப் பார்த்தார்கள், தங்கள் வாழ்வைப் பறிகொடுத்தவர்கள்! எழுதிப் பார்த்தார்கள், அறிஞர்கள்! ஏனென்று கேட்கவில்லை அரசு! அணியணியாகத் திரண்டு, மாநாடுகள் கூட்டி, அமைதியான , மென்மையான, வேண்டுகோள்கள், தீர்மானங்கள் முழக்கங்கள் முதலிய அனைத்தும் இந்நாட்டு ஆட்சியாளர்களை மேலும் மேலும் வலிந்த ஊமையர்களாக்கின; செவிடர்களாக்கின; செருக்குடையவர்களாக மாற்றின. இறுதியில் இறுமாப்புடையவர்களாக மாறினர் அரசினர்; நெருக்கடி நிலைகள் வந்தன கருப்புச் சட்டங்கள், உருவாக்கப்பட்டன! மிசாக்கள் தோன்றின; சிறைச் சாலைகள் நிரப்பப்பட்டன. தலைவர்கள் சிறைக்குள்ளே வைக்கப்பட்டார்கள்; வெளியே அடிதடிகள்; கண்ணீர்ப்புகைகள் குண்டு வெடிப்புகள்; அடாவடித்தன அடக்குமுறைகள்; கொடுமைக் கொலைகள்; தீ வைப்புகள்:- இவற்றை ஆட்சியாளரின் கைக்கூலிகள் செய்தனர். அரம்பர்கள் (ரெளடிகள்) செய்தனர்; அவர்களால் ஏழைகளின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டன. அவர்களின் குடியிருப்புகள் பற்றியெரிந்தன: அவர்களின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டன ஊர்விட்டு ஊர். மாநிலம் விட்டு மாநிலம் என்று அந்த ஏழைக் குடிமக்கள், வாயில்லாப் பூச்சிகள், புன்மைத் தேரைகள் - ஓடியும் ஒளிந்தும், உயிர்களைக் காத்துக் கொள்ள முயற்சி செய்தனர் ஆனால், பல இடங்களில் பல நேரங்களில், பல காலங்களில் அவ்வேழை உயிர்கள் அவ்வெலும்புக்கூடுகள், இந்நாட்டு மண்ணில் கிளர்ந்த மண் புழுக்கள். ஒட்டு மொத்தமாகப் பிடிக்கப்பட்டன: உயிரோடு புதைக்கப்பட்டன; உயிர்த்துடிப்புள்ளவை சாகடிக்கப்பட்டன; உடலோடும் உணர்வோடும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன!

இவற்றுக்கெல்லாம் அரசு என்ன காரணம் சொன்னது? அவர்கள் தீவினையாளர்கள்; வன்முறையாளர்கள்; கொடுமையாளர்கள்; குமுகாயப் பகைவர்கள்; அரசுக்கு எதிரானவர்கள்; ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் நாட்டு இரண்டகர்கள்; அயல் நாட்டுக் கையாள்கள்; ஒற்றுமைக் கேடர்கள்; ஒருமைப்பாட்டின் எதிரிகள்; இந்தியத் தேசியத்திற்கு மாறானவர்கள்; இவ்வாறெல்லாம் அவர்களின் மேல் குற்றச் சாட்டுகளைப் பொழிந்து தள்ளியது பார்ப்பனிய முதலாளிய வல்லாதிகார மதக்கேடர்களின் கைகளில் உள்ள தில்லியரசு!

எனவே, பல்வேறு காரணங்களுக்காக, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக மலைவாழ் மக்களின் சார்பாக, தேசிய இன எழுச்சியாளர்களின் சார்பாக, மொழியுரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, கொடுமையான கருப்புச் சட்டங்களின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, மத வல்லாண்மைக் கொடுமையாளர்களின் எதிர்ப்பணிகளின் சார்பாக, பார்ப்பனியத்தின் எதிராளிகள் சார்பாக முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, உள் நாட்டுத் தரகு முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, தொழிலாளர்களின் அடக்கு முறைக்கு எதிராக, உழவர்களின் உரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, இலங்கையில் அழிக்கப்படும் தமிழீழத் தமிழர்களின் சார்பாக, ஆங்காங்கு, இந்திய நாடு முழுவதும் உத்திரப்பிரதேசம், பஞ்சாப் , அசாம், மிசோரம், ஒரிசா, காசுமீர், குசராத், மகாராட்டிரம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், தமிழ்நாடு, பீகார், நாகாலாந்து முதலிய மாநிலங்ககளில் ஏதோ ஒரு வகையில் மக்கள் போராட்டமாக, எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் போராட்டங்களும், வன்முறைகளும், சிறை நிரப்பும் போராட்டங்களுமாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

தில்லியரசும், மாநில அரசுகளும் இவ்வெதிர்ப்புகளைப் பல வேறு வகைகளில் அடக்கியும் ஒடுக்கியும் வருகின்றன. ஒவ்வோரிடத்திலும் வெவ்வேறு வகையான உத்திகளும், பாணிகளும் கையாளப்படுகின்றன. போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால், அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சிலவிடங்களில் மாநிலக் காவல் துறையினரைக் கொண்டே எழுச்சிகள் அடக்கி யொடுக்கப்படுகின்றன. சிலவிடங்களில் படைத்துறைகள் அழைக்கப்படுகின்றன. சிற்சில விடங்களில் ஆளுங் கட்சிகளில் உள்ள குண்டர்களைக் கொண்டும், குமுகாயக் கொடியவர்களைக் கொண்டும் அரசுகளே எதிர்ப்போராட்டங்களை நடத்தி, நேர்மையான உரிமைப் போராட்டக் காரர்களை முறியடிக்கின்றன. இவ்வாறாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இக் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நாளுக்கு நாள் உள்நாட்டுப் போர்களாகவே நடந்து வருகின்றன.

நடுவணரசும் இவற்றை ஒடுக்கவும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவென்று புதுப்புதுக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்களை, வெள்ளைக்காரர்கள் மக்களின் உரிமைக் கிளர்ச்சிகளை ஒடுக்க எவ்வளவு கொடுமையான சட்டநடைமுறைகளைக் கையாண்டார்களோ, அவற்றைவிட மிகமிகக் கொடுமை வாய்ந்த சட்டங்களை, அயலவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக் குடியரசுமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியல் உரிமைக் கிளர்ச்சிகளுக்கெதிராக, இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வல்லாளுமைக் காரர்கள், போட்டுப் பலவகையானும் மக்களுக்கெதிரான உள்நாட்டுப் போரைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதுவன்றி, மக்கள் தங்கள் உரிமை உணர்வுகளில் மனம் செலுத்தாத வண்ணம், இதுநாள் வரையில் இல்லாத மத விழா நாள்களை நடைமுறைப் படுத்தியும், கலை, பண்பாட்டியல் என்னும் பெயர்களில், ஆரவார அருவருப்புத்தனங்களைப் புகுத்தியும், பற்பல தேசிய விளையாட்டுகளைப் புகுத்தியும் அனைத்துலக அரசியல் , கலை, பண்பாட்டியல், பொருளியல் மாநாடுகளை நடத்தியும், அவற்றின் செயல்பாடுகளை யெல்லாம் இந்தியாவிலுள்ள அனைத்து வானொலி நிலையங்களின் வழியாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் வழியாகவும், ஒலி ஒளி பரப்புதல்களைச் செய்தும், இங்குள்ள வல்லதிகாரக் கொடுமை அரசு, மக்களை மூளைச் சலவை செய்தும் திசைதிருப்பியும் வருகிறது. இவ்வகையில், நாட்டின் மிகு பொருளியலைச் சீரழித்தும் சிதைத்தும், வீணாக்கியும் வருகிறது. இன்னும், 1962இல் சீனத் தாக்குதலும், 1985இல் பாக்கித்தான் வன்வரம்பு(ஆக்ரமிப்பும்), 1971-இல் வங்காளப் போரும் தவிர இன்று, எந்தவகையான வெளிநாட்டுப் போரும் நடைபெறாத நிலையில், அயல்நாடுகளான பாக்கித்தான், சீனா முதலிய நாடுகள் போர் மூட்டங்கள் இட்டிருப்பதாக மக்களிடத்தில் ஓர் அச்சத்தையும் செயற்கையாகப் பரப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னிருந்த தன் பாதுகாப்புச் செலவை நான்கு மடங்கு பெருக்கிப் படைத்துறைகளை மக்களுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்காகக் கருவிகளாலும் ஆட்களின் எண்ணிக்கையாலும் வலுப்படுத்தி வருகின்றது. 1975 -76ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 2.000 கோடி. ஆண்டுக்கான, அண்மையில் வகுத்த வரவு- செலவுத் திட்டப்படி இச்செலவு 1985-86ஆம் ஆண்டு 8,000 கோடியாக உயர்ந்திருக்கிறது) இவ் வகையில் இந்நாட்டின் மொத்த வருமானத்தில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்கை, அஃதாவது 15 விழுக்காட்டைச் செலவு செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், இத்தனை முன்னெச்சரிக்கைகளும், அண்மையில் அது கொண்டுவந்த, வன்முறை யொடுக்கத் தனிச்சட்டம், நாட்டின் பாதுகாப்பிற்கெதிராகக் கருவிகளை உருவாக்குவதும் கொள்முதல் செய்வதும் ஆகியவற்றுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டம் போடுவதும், கொடிய வன்முறையாளர்களுக்குச் சாவுத் தண்டணை, வாணாள் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் ஆகிய கொடிய சட்டங்களை நடைமுறைப்படுத்த விழைவதும், தன் நாட்டு மக்கள் மீதே அது போர் தொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.

ஒரு நாடு, தன் சொந்த நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களை உள்நாட்டுப் போராகக் கண்டு அஞ்சுவதும் அவற்றுக் கெதிராகத் தானே அம்மக்கள் மேல் போர் தொடுக்க முற்படுவதும் நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறிகள் அல்ல. அது நாடு, உள் உடைவுகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியே ஆகும். உள்நாட்டுச் சிக்கல்கள் எத்தகையனவானாலும், அவற்றைப் போர் முனைப்புக்களாக ஒரு நாடு அல்லது ஓர் அரசு கருதி அவற்றை அடக்குகின்ற முனைப்புகளில் போர் வேகம் காட்டுவது எந்த நாட்டு அரசுக்கும் அழிவை தேடிக் கொடுப்பதாகும். என்றமட்டில் இப்பொழுது எச்சரிக்கை விடுக்கிறோம். இனி, போகப் போகப் பார்ப்போம்!

- தென்மொழி சுவடி 21, ஓலை 7, 1985