வேண்டும் விடுதலை/தேசியம் பேசும் திருடர்கள்

தேசியம் பேசும் திருடர்கள்


நிலம் பரவலாக இருந்தால் கொள்ளையடிப்பவர்களுக்குத் தங்கள் வேலை எளிதாக முடியும்; சிறப்பாகவும் நடைபெறும். அரசியல் கொள்ளையர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் பகலில் கொள்ளையடிப்பவர்கள். இவர்கள் தேசியம் பேசுகிறார்கள் என்றால், உண்மையில் நாட்டு மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டுதான் அப்படிப் பேசுகிறார்கள் என்று எவரும் தவறாக எண்ணிவிடக் கூடாது, மெய்யாகவே இப்பொழுதுள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற கருத்துகளில் பற்பல வகையான உள்நோக்கங்கள் உள்ளன. என்பதைப் போகப் போகத்தான் கண்டு கொள்ள முடியும். மேலும் இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் என்ற உயர்ந்த தகுதியுடைய தலைவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தேசிய நலன் கருதிக் கூறுவதாக இவர்கள் வெளிப்படுத்தும் பேச்சுகளில் எவரும் நம்பிக்கை வைக்கவும் தேவையில்லை. இக்கால் இந்தியத் தேசியம் பேசும் தலைவர்களை இந்த அளவில் தான் நாம் மதிப்பிட முடியும்.

இந்தியா, பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்த நாடு என்றாலும் இங்கு இரண்டு வகையான அடிப்படைக் கோட்பாடுகள் நிலவுவதை எவரும் மறுத்திடவியலாது. ஒன்று, மிகமுன்பே இங்குத் தோன்றி வேரூன்றி நிற்கும் திரவிடக் கோட்பாடு. அஃதாவது பழந்தமிழ்க் கோட்பாடு. இரண்டு, இந்தக் கோட்பாட்டை உள்ளடக்கிச் செரித்துக் கொண்டு பரவி நிற்கும் ஆரியக் கோட்பாடு. இந்த இருவகை நீரோட்டங்களை மக்களின் ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். இங்குப் பேசப்பெற்று வரும் தொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி; இங்குள்ள நாகரிகம் பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி: அல்லது இங்குள்ள கலைகள், கல்வி நிலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி; அவை அத்தனையுள்ளும் திட்டுத் திட்டான இவ்விரண்டு திரவிட ஆரிய இன மெய்ம்மக் கூறுகள் இழையோடுவதை வெளிப்படையாகக் காணலாம். இவை காலப் போக்கில் ஒன்றினோடொன்று அல்லது ஒன்றினுள் ஒன்று அல்லது ஒன்று போல் ஒன்று கலந்து ஊடாடுவதாகத் தெரிந்தாலும், எத்தனைக் காலத்திற்குப் பின்னும், இவ்விரண்டு தன்மைகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துச் தேர்ந்து கொள்ளும்படியாகவே, இவற்றின் அடிப்படைகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. எனவே, எத்துணை தான் தேசியப் பூச்சுகளை இவற்றின் மேல் பூசினாலும், அல்லது இவையிரண்டையும் ஒட்டவைப்பதற்கான பற்றவைப்புகளைச் செய்தாலும் இவையிரண்டும் அகத்தும் புறத்தும் ஒட்டாமலே வேறுபட்டுத்தான் காட்சியளிக்கும் தன்மையுடையன.

ஏனெனில், இவையிரண்டும் நேர் எதிரான தன்மைகள் உடையன. ஒன்றையொன்று அழித்துத் தன்னுள் அடக்கும் வலிமை சான்றன. அந்த வகையில் இங்குள்ள திராவிட இன மரபுத் தன்மைகள் ஆரிய இனமரபுத் தன்மைகளால் காலச்சூழலில் வலிமை குறைக்கப்பட்டன; பதவியதிகாரங்களால் சிதைக்கப்பட்டன. இந்தச் சிதைவே பின் வந்த ஆரிய இனமரபுக் கொள்கைக்கு வலிவாக அமைந்து விட முடியாதெனினும், தெரிந்தோ தெரியாமலோ, இந்தியாவுக்கு விடுதலை தந்து அதனைக் குடியரசு நாடாக ஆக்கிவிட்டுச் செல்லும் வேளையில் வெள்ளைக்காரர்கள் அதன் இறைமை முழுவதையும் ஆரிய இனத்தவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த நிலை அவர்களின் இனமரபை இன்னும் ஒருபடி வலிமைப்படுத்திக் கொள்ளும் படியான வாய்ப்பை அவர்களுக்குத் தந்து விட்டது. இதன் வழி, அவர்களின் மேலாளுமை மிக்கோங்கி பழந்திரவிட இனமரபு நிலைகள் அனைத்தும் சிறிது சிறிதாகச் சிதைக்கப் பெற்றும் வலுக் குறைக்கப் பெற்றும் உருமாற்றப்பெற்றும், தாழ்த்தப்பெற்றும் வரலாற்று அடிநிலைகள் திரிக்கப் பெற்றும், இன்று இந்தியாவே ஆரிய நாடு என்னும் வகையில் வெளி உலகத்தவர்களுக்குப் பறைச்சாற்றப்படும் அளவில் பொய்களையும், புரட்டுகளையும் புனைகருட்டுகளையும் கருவிகளாகக் கொண்டு, நிலைகள் தலைகீழாக்கப்பட்டு விட்டன. இந்நிலை அவர்களுக்குத் தேசியம் பேசுவது எளிதாகி விட்டது. இந்தியத் தேசியம் என்பது ஏதோ, அரசியல் படிநிலை வளர்ச்சி போலும், பொருளியல் நாகரிக முதிர்ச்சி போலும் திட்டமிட்டுப் பேசிக்காட்டப் பெறுகிறது. வெளியுலகத்தவர்களும் இவர்களின் கரவான பேச்சையும். ஒரு மிகப்பெரும் தேசிய இனத்தையும் வழிவழியாய் மிக்கூர்ந்து வரும் அதன் கலை, கல்வி, பண்பாட்டு நலன்களைக் கட்டழிக்கும் கொடுஞ் செயலையும் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பின்றி, இத் தேசியம் பேசும் திருடர்களின் உயர்ந்த தேசிய இன முன்னேற்ற முயற்சிகளே என்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை தகர்த்தெறியப்பட வேண்டும். அதற்கு இத்திரவிட இன வழி முனறயினர்தாம் பெருமுயற்சி செய்ய வேண்டும்.

இம் முயற்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள், இத்திரவிட இனத்திலேயே பிறந்து, இவ்வின நலன்களையே உண்டு கொழுத்து, இங்குள்ளவர்களுக்கே பகைவர்களாகவும் காட்டிக் கொடுப்பான்களாகவும் மாறித் தேசியம் பேசி, வடநாட்டுத் திருடர்களின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் சில்லறைத் திருடர்களே. இவர்களைத்தாம் நாம் முதலில் இனங் கண்டு கொள்ள வேண்டும். கடந்த கால இனநல முன்னேற்ற முயற்சிகளும், நாட்டு விடுதலை முனைப்புகளும் சாணேறி முழஞ்சறுக்கும் வீணான வெற்று ஆரவாரக் கூத்துகளாகவே போயின. பெரியார் ஈ.வெ. இரா. அவர்களின் பின்பற்றிகளும் தங்கள் பெயர் முத்திரைகளை மாற்றிக் கொள்ளவில்லையானாலும் அவற்றிலுள்ள சொல்லகங்களை மாற்றிக்கொண்டனர். அவர்களினின்று வெளியேறிய முன்னேற்றங்களோ, திசைமாறித் தங்கள் கட்சிக் கப்பல்களை வலித்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் திரவிட இன மரபை நிலைநாட்ட விரும்பும் எஞ்சிய தமிழர்கள் என்ன செய்வது? இந்தியத் தேசிய நீரோட்டத்தில் நீந்திக் கொண்டுள்ள அரசியல் கொள்ளைக்காரர்களை இனங்கண்டு, அவர்களின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிந்து, அவர்களின் கைகளைப்பிடித்து வெளியே இழுத்துவிடுவதே முதலில் செய்ய வேண்டுவது, இந்தியத் தேசியமும், அதற்கப்பால் உலகத் தேசியமும் பேசப் புறப்பட்டிருக்கும் மக்கள் கட்சியினர், இந்திரா பேராயத்தார், அரசு பேராயத்தார் முதலிய அனைத்திந்தியக்கட்சி அமுக்கர்களையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தல் வேண்டும். தென்னாட்டு அரசியலில் அவர்களின் பங்கு இங்குள்ள திராவிட இனமரபுக் கட்சிகளிடம் குட்டை குழப்புவதும் குழிகள் பறிப்பதுமே!

-தென்மொழி, சுவடி :16, ஓலை 9, 1980