அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தரும நீதம்

ஆதிப்பொருளை அனுதினமும் தானோதிச்
சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை
தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்
அன்னமடம் வைத்து அகம் களிகூர
எந்நேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும்
எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
மாறி ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்
பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறை இறுத்தால்
பின்னிரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை
இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம்வாழும் நாளில்
செல்வகைத் திருவேயான திருவுளக்க் கிருபை கூர்ந்து
தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே