அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கௌரவர் பஞ்சவர் வரலாறு

உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலுக்குள் வீற்றிருந்தார்
கஞ்ச னிடுக்கங்கள் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர் காணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுகழ் ஐபேருந் தேசமதில் வாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவரும் மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும் வேளையானதிலே
இழிந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித் துரியோதனனும்
முடியை வினைசூடி உலகாண்டா னம்மானை
பாவி யிருந்து பாராண்டச் சிமையிலே
கோவுகள்க்கு நீர் குடிக்கக் கிடையாது
தர்மரவ் வீமன் விசையன் சகதேவன்
நன்மைபரி நகுலன் நாடான நாடதுதான்
குருநா டெனவே கூறுவா ரன்னகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக் கேளம்மானை
துரியோ தனாதி செலுத்தும் அஸ்தினாபுரத்தில்
பரி யொட்டகமும் பலமிருக மானதுவும்
பசியால் தகையால் பச்சி பறவைமுதல்
விசையாக் குருநகரில் மேவித் தகையாறிவரும்
அஸ்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
குருநாடு தன்னில்க் குழாங் கொண்டிருந்தனராம்
திருநாட்டுக் கொவ்வுஞ் சிறந்த குருநாடு
ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
பருநாடு பக்தியுள்ள பஞ்சவர்கள் தன்னாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியோடு சிங்கம் ஆனைறாஞ்சுப் புள்ளும்
வேளிசமா யுள்ள வெகுஐந்து தலையரவம்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் தன்னாடு
அன்னாடு நாடு அரநாட்டுக் கீடாகும்
பொன்னாடு நாடு புத்தியுளார் தன்னாடு
அரனருளைப் பெற்றிருக்கும் அய்வருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தன்னாடு
தாய்நாடு வான தழிழ்க்குரு நன்னாட்டில்
மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பூபாதி யாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காக
தாண்டவ ராயர் தண்மையா லம்மானை