அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்

திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்
வைகுண்ட மேக மனதிலுற் றெம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
ஆங்கார மோக அம்புக் கணுவாலே
ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பிலன்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள அய்வருக்கு
மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல் நடந்துவாருமென்று மோட்சத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மை கேளம்மானை
அரிகோண மாமலையில் அயோதவமுர்த கெங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோப னமரமும்
ஆலமரமும் அகில் தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந்தன மரமும்
மாவு பலமரமும் வாய்த்த பிலாமரமும்
தாவு மரத்தின் தண்மை சொல்லக்கூடாது
சோலையிலே வீத்திருக்குஞ் சீர்பறவையின் பெருமை
தூலமின்ன தென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித்திருப்பது போல்
தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலை யிதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்பதவ் வனத்தில்
வைகுண்டங் காண வந்த தர்மியெல்லோரும்
மெய்குண்டங் கண்டோமென்று இருப்பாரவ் வனததில்
அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான்
புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேக்கு
வட்டமுள்ள ஶ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காக
தெற்கே திரிகோணஞ் செங்காவு நேர்வடக்கு
மிக்க வகைமேற்கு மிகுந்தவனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமுர்தவனம்
அவ்வனத் திலுள்ள அமுர்த கெங்கையானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக்கரங் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
மரகத வல்லி வள்ளி சலிகையெனும்
சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
ஏழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேல்முடியில் செய்தீ ரனுஷ்டானம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள்
அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார்
எப்போதுந் தானாய் இருப்பவர்க் கல்லாது
மாயவர்க்கு மற்றமுள்ள மயேசுரர் தன்தனக்கும்
எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற
ஒருவனுக்கே யல்லாது ஊழியங்கள் வேறில்லையே
கேட்டு ஶ்ரீகிருஷ்ணருங் கிளிமொழியோ டேதுரைப்பார்
ஓட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கே யல்லாது அரவணையிலே துயிலும்
காண்டிப னுக்கேவல் கருதோமென வுரைத்த
தோகையரே கெங்கையினிச் சுருட்டுவதைப் பார்போமென
ஆகட் டென்று அச்சுதருங் கோபமுற்று
மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
சாலோக மான சத்திபர லோகமதில்
ஆதி ரூபமில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீரு ரூபமான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று தானதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மியானதிலே
தர்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவரிஷி யொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
சகோதரரா யென்று தானெடுத்தா ரம்மானை
சொர்க்க லோகமதிலே ஶ்ரீராமர் தன்றனக்கு
பக்குவங் களாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்ல குலமான நயனவித்தொன் றெடுத்து
வெல்லமர்கோன் வாழும் வெற்றித் தெய்வலோகமதில்
சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
இப்படியே மேலோக ஏழு யுகமதிலும்
அப்படியே யுள்ள ஆர்க்கழுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்திலே யடக்கி
கொடுத்து நின்றதாதாவைக் குவித்துப்பதம் போற்றி
கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம் வேறில்லையென்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே