அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/பாரத போர்

மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்கு
தீய துரியோதனனுந் திருமாலைப் பாராமல்
தாள்போற புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
எள்போலிடங் காண் ஈயேனென்று ரைத்தான்
மாயனையும் பாவி வாபோவெனப் பேசி
ஈயே னெனவுரைத்த இயல்புகேட்டு எம்பெருமாள்
கர்ணன் பிலமுங் கடியவிதுரன் பிலமும்
மன்னன் ஶ்ரீ பீஷ்மர் வாழுந் துரோணர்பிலமும்
தென்னன் துரியோதனன் பிலமுந்தானழித்து
வன்ன விசயனுக்கு வாளிபல கொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்து
தாமன் சகாதேவனுக்குச் சக்திசூலங் கொடுத்து
நகுலனுக் காயுதமும் நல்லபரியும் கொடுத்து
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்து
செங்கையில் பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட வொன்றாய் ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடியோன் படையும்
கைப்போரும் வில்போரும் கணையோடு வாள்ப்போரும்
அம்புப் போருங்கருவி அச்சுப்போரும் பொருது
கர்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
மன்னன் ஶ்ரீ பீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந்தன் வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
இத்தனைபேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனை பேரை அறுத்தா னருச்சுனனும்
துரியோதனன் படைகள் சேரமடிந்த பின்பு
விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பி லிறந்தாச்சே வாழ்வதே னென்றுசொல்லி
எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவெ
விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்சுனனை
இன்றுகொல்ல வேணுமென்று எழுந்தான் படைக்கெனவெ
அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்தார்
இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
அதினா லுன்மேல் அரவக் கொடியோனும்
வாரான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உந்தனக்கு நல்ல உறுவேட்டை யின்றிடவா
எந்தனக் கின்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்ற்டவா
என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டத்துக்கு விசைமால் விசைகொடுத்து
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச் சகாதேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லுமென்று
வீமனை யுங்கூட்டி வெளியில் அரிவந்திடவே
காமக்கனல் மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சநதான மான தழிழ்வீமன் தான்அறிந்து
எதிர்த்தார் இருவர் எனக்கெனக் கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
திண்திண் ணெனப்பூமி தெய்தொ மெனவதிரும்
மலைக ளசைந்து மடமடென ஓசையிடும்
கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சிதறி அங்குமிங் கோடிடவே
இலைகளு திர்ந்து இடிந்துவிழும் மாமரங்கள்
தூளெழும்பிச் சுரியனைத் தோன்றாமலே மறைக்க
வேளெழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நெட்டை தானழிந்து தட்டழிந்து
திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினனே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்த மோதும் நல்மறையோன் தான்பதற
துரியோதனன் போரும் சுத்தவீமன் போரும்
எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்கு வொண்ணு விலகிப்புறஞ் சாயாமல்
மண்ணும் விண்ணுமதிர மண்டியுத்த மிட்டார்கள்
துரியோதனன் அடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறிய வனடிக்க
அடிக்கயிவன் பிடிப்பான் அப்படியே சண்டையிட்டு
சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான் கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாள னான துரியோதன னுரைப்பான்
இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டு
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பதினால்
உன்பலமு முன்னுடைய உயிர்ப்ப்பலமும் நியுரைத்தால்
என்பலமு முன்னோடு இயம்புகிறே னென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
தப்பாமலே யுரைத்தான் சகலோ ரறிந்திடவே
கேட்டுத் துரியோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறேன் என்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
கள்ளன் கவுசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எள்ளளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடக்க முடனே சென்றவ்வீமன் பேரில்
மாறி யவனடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தைதனில் நினைக்க
திலர்தமுள்ள மாயன் செயவீமனை நோக்கி
வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே
அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
துடித்தான் கிடாய்போலத் துரியோதனன் விழுந்து
மூடத்த மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடத்த உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
அப்போது மாயன் அரவக் கொடியோனிடத்தில்
தப்பாமல் வார்த்தையொன்று தான்கேள்க்கப் போயினரே
முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய்
தென்னனி ராவணனாய்ச் சிரசு பத்தாயிருந்தாய்
அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால்
செப்போடு வொத்த ஶ்ரீ ராமனாய் நான்தோன்றி
பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
உத்து ஒருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில்
தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது
எம்பிராணன் வதைக்க ஏலாது வென்ற்னையே
தம்பியொரு நூறோடே தான்படைத்து உன்னையுந்தான்
கொம்பிலொ ராளைவிட்டுக் கொன்றேனே வுன்னையென்றார்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது
தண்டுகொண்டே யடித்த தழிழ் வீமனல்லாது
இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே
அப்போது மாலும் அதிகக்கோபம் வெகுண்டு
துப்புரைகள்தான் கேட்ட தீயனுக்கங் கேதுரைப்பார்
உன்னையின்ன மிந்த உலகில் ஒருபிறவி
சின்ன வன்னமாகச் சிரசொன்றதாய் படைத்து
அறிவு புத்தியோடும் ஆணுபங்கள் தன்னோடும்
செறியுங் கலையோடுங் சிற்ப்போடுந் தான்படைத்து
என்பே ரிலன்பு இருக்கவெகு சாஸ்திரமும்
தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே
முன்னே யுனக்கு உற்ற பிறப்பாறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை
ஏழாம் பிற்ப்பில் என்னை நினையாதிருந்தால்
பாழாவாய் மேலும் பகையில்லை யெந்தனக்கு
என்று திருமால் இயம்பித் துரியோதனனை
அன்றவனைக் கொன்று அய்வரையுந்தான் வருத்தி
கர்மச்சடங்கு கழிக்க விடை கொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்திலுள்ள முறை
எல்லாச் சடங்கும் இருவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாசமுள்ள தர்மர் ஒக்கமுறை செய்தனராம்
முறைசெய்து கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே
அப்போது வேத வியாகரவ ரங்குவந்து
செப்பொடு வொத்த திருமாலோடே துரைப்பார்