11

மேரியைக் கண்டதுமே அந்தத் தயாரிப்பாளர் படு உற்சாகம் அடைந்தவராகக் காணப்பட்டார்.

"ஏய் மேரீ! உன் சிநேகிதிக்குக் கொஞ்சம் அநாவசிமான கூச்சமும் பயமும், வீண் தயக்கமும் இருக்கு. அதெல்லாம் போயிட்டா இவ பிரமாதமா ஷைன் பண்ணுவா, இவளை அடிச்சுக்க எந்த முன்னணி ஹீரோயினாலேயும் முடியாது. நல்ல களையான முகம், அருமையான நிறம் கலர்ப் படத்திலே போட்டால் சும்மா லட்டு மாதிரி இருப்பா...".

அவருடைய புகழ்ச்சி அதிகமாக மிகைப்படுத்தி விரசமாகப் புகழ்கிற பாஷையில் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருப்பது சுமதிக்குப் புரிந்தது. ஆனாலும் சர்வ வல்லமை வாய்ந்த ஒரு புரொட்யூஸரை எப்படி எதிர்த்துப் பேசுவது? அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவர் தன்னைத் தொடுவது-தொட்டதை எல்லாம் பொறுத்துக் கொண்டாள். அபிப்ராயங்களுக்கு எல்லாம் தலையாட்டினாள். அவர் தன் பக்கம் திரும்பிய போதெல்லாம் கூழைச் சிரிப்புச் சிரித்தாள். மயக்குவது போல் பார்த்தாள்.

"அடி சுமதீ! உன்னுடைய யோக காலம்தான் நீ சாரோட கையாலே அறிமுகம் ஆயிருக்கே. நம்ம குபேரா பிலிம்ஸ்சார் இராசிக்கார மனுஷனாக்கும். இவர் காமி ராவுக்கு முன்னாலே கொண்டுவந்து நிறுத்தின எந்தப் பெண்ணும் சோடை போனதில்லே. அவங்கள்ளாம் இன்னிக்கு லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறாங்க" என்றாள் மேரி.

"சும்மாவா பின்னே? பேரே குபேரா பிலிம்ஸ்னு வச்சிருக்காரே?” என்று சுமதியும் மேரியோட சேர்ந்து கொண்டு அந்தத் தயாரிப்பாளரை உச்சி குளிரச் செய்தாள்.

"மேரீ! இன்னிக்கி இனிமே நம்ம கம்பெனி கால்ஷீட் எதுவும் இல்லே. நான் ஃப்ரீ, எங்கே போகலாம்னு சொல்லு, மகாபலிபுரம் டயமண்ட் பீச் ஹோட்டலுக்குப் போகலாமா? அல்லது வேறு எங்காவது போகலாமா? நீதான் சொல்லணும் : சுமதிக்கு எது பிடிக்கும்னு உனக்குத்தான் தெரியும். முதல்லே நம்ம புரொடக்ஷன் ஆபீஸுக்குப் போவோம். அங்கே டான்ஸ் மாஸ்டர் ரவிகுமார் வந்து காத்துக்கிட்டிருப்பாரு...”

"டான்ஸ் மாஸ்டரை இப்போ, இன்னிக்கு அவசியம் பார்த்தாகணுமா சார்?

"ஆமாம் மேரி! நம்ம கம்பெனியோட அடுத்த தயாரிப்பிலே ஹீரோயினே ஒரு டான்ஸ்காரிதான். அந்த ரோலுக்குத் தயாராகணும். இப்பவே உன்னோட தோழி சுமதிதான் அதுக்குத் தயாராகணும். இந்த டான்ஸ் இருக்கே, அது கடுகுமாதிரி. சமையல்லே எதைத் தயாரிச்சாலும் கடைசியிலே கொஞ்சம் தாளிச்சிட்டாப் பிரமா தமா வாசனை வரும். அதுமாதிரிச் சினிமா, டிராமா சங்கீதம் எல்லாத்துக்கும் கொஞ்சம் டான்ஸைத் தாளிக்கணும் இந்தக் காலத்திலே! என்னா நான் சொல்றது? என்று மேரியிடம் கூறிக் கொண்டே சுமதியின் பக்கம் திரும்பிக் கண்களைச் சிமிட்டினார் குபேரா பிலிம்ஸ் அதிபர். அந்தக் கண்சிமிட்டல் மிகவும் 'சீப்' எடிஷனாக இருந்தது.

"ரொம்ப நைஸ் ஐடியா. அதைப் பிரமாதமாகச் சொல்றீங்க. கடுகு உவமை இருக்கே அது டாப்” என்றாள் சுமதி. தயாரிப்பாளருக்குத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சுமதியை மாதிரி அந்நியமான இளம்பெண் ஒருத்தி திடீரென்று தன்னைப் புகழ ஆரம்பித்தது, அவருக்குப் போதையூட்டியது. வெறியூட்டியது.

காரில் மேரியையும், சுமதியையும் அழைத்துக் கொண்டு ஹபிபுல்லா ரோடில் இருந்த தன் புரொடக்ஷன் ஆபீசுக்குச் சென்றார் தயாரிப்பாளர். காரில் போகிறபோது சுமதி மேரியிடம் தான் ஒரு மணிக்குள் யூனிவர்ஸிடி லைப்ரரிக்கு வருவதாக விமலாவிடம் காலையில் சொல்லி அனுப்பியிருந்ததைச் சொன்னாள்.

"சரிதான். நீ போகாட்டாப் பரவாயில்லே. உன்னாலே வரமுடியலேன்னு விமலா புரிஞ்சிப்பா. இன்னிக்கு இந்த ஆளை விட்டுவிடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்' என்று சுமதியின் காதைக் கடிக்கிறாற் போல நெருக்கமாக மெல்லிய குரலில் சொன்னாள் மேரி.

முன் ஸீட்டில் டிரைவர் அருகே அமர்ந்திருந்த தயாரிப்பாளர், "என்னது? ரெண்டு பேருமா எனக்குத் தெரியாம ஏதோ ரகசியம் பேசிக்கிறீங்க?" என்று சிரித்துக் கொண்டே திரும்பிக் கேட்டார்.

மேரி சொன்ன வாக்கியம் கேட்பதற்கு என்னவோ போலிருந்தது சுமதிக்கு, இந்த ஆளை விட்டு விடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்' என்று மேரி எதை நினைவூட்டுகிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. அந்தச் சொற்களும் அதை அவள் வெளியிட்ட விதமும் மிகவும் கொச்சையாக இருந்தன, குழப்பமாகவும் தோன்றின.

கார் அபிபுல்லா ரோடில் முன்புறம் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஒரு பங்களா கேட்டுக்குள் புகுந்து நின்றது. பங்களா முகப்பில் குபேரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஒரு போர்டும் இருந்தது.

உள்ளேயிருந்து ஒரு பையன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

"வாங்க! உள்ளே போகலாம்” என்று மேரியையும், சுமதியையும் அழைத்தார் அவர்.

"டேய் பையா ரூம்லே ஏ.ஸி.யைப் போட்டு வச்சிருக்கியா ? மறந்துட்டியா?” என்று படியேறிக் கொண்டே கேட்டார் தயாரிப்பாளர். 

'நீங்க ஃபோன்ல சொன்னப்பவே போட்டு வச்சிட்டேன் சார்!’ என்று பையனிடமிருந்து பதில் வந்தது.

தயாரிப்பாளரை முதலில் படியேறிப் போகவிட்டு விட்டுப் பின்னால் சிறிது தயங்கி நின்ற சுமதி, மேரியிடம், "இவர் பேரு என்னடி? புரொட்யூஸர் புரொட்யூஸர்னே எத்தினி தரம்தான் சொல்றது?’ என்று கேட்டவுடன், "பேரு கன்னையா! ஆனால் பேரைச் சொல்லிடாதே, புரொட்யூஸர் சார் என்ன சொல்றீங்க? புரொட்யூஸ்ர் சார் தூங்கறாரா? புரொட்யூஸர் சார் வந்தாச்சான்னு இந்த மாதிரியே கேட்டுக்கோ, அதுதான் பெரிய மரியாதைன்னு இந்த ஸினி பீப்பிள் நினைப்பாங்க" என்று மேரி அவளுக்குப் பதில் சொன்னாள். அந்த ஏ.ஸி. ரூமில் டேபிள், சேர் அலுவலகச் சாமான்கள், படுப்பதற்கு மெத்தை தலையணையோடு கூடிய பெரிய கட்டில், சோபாக்கள் எல்லாமே இருந்தன. சுமதி மேரியின் காதருகே கேட்டாள்:

'என்னடீது இங்கே ஆபீஸ் ரூம்லேயே படுக்கையையும் போட்டு வச்சிருக்காரு?"

"சினிமாக்காரங்களுக்கு ஆபீஸ், படுக்கை அறை எல்லாமே ஒண்ணுதான்! இன்னும் நல்லாச் சொல்லணும்னாப் படுக்கையறையிலேதான் பல ஆபீஸ் விஷயங்கள் கூட ஸெட்டில் ஆகும்” என்று சொல்லிவிட்டபின் இத்தனை பட்டவர்த்தனமாக அதை ஏன் சுமதியிடம் சொன்னோம் என்று சிறிது தயங்கியவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் மேரி.

சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாள். அதற்குள் உள்ளே அந்த ஏ.ஸி. ரூமிலேயே இருந்த அட்டாச்டு பாத்ரூமுக்குப் போயிருந்த தயாரிப்பாளர் தொண்டையைச் செருமிக் கனைத்தபடியே திரும்பி வந்து சேர்ந்தார். மணியை அமுக்கி பையனைக் கூப்பிட்டபடி, குரலை சிறிது குறும்புத்தனமாகத் தணித்து, "என்ன மேரீ, சுமதிக்குப் பிராந்தியா? விஸ்கியா' என்றார். சுமதி துணுக்குற்றாள்.

"ரெண்டுமே இல்லே அவளுக்கு எதுவுமே பழக்கம் கிடையாது” என்று மேரி இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஒரு விநாடி பொறுத்து, "அதெல்லாம் இனிமே நீங்கதான் பழக்கித்தரணும். உங்க கைதான் ராசியான கை” என்று சொல்லி வைத்தாள். சுமதிக்கு அது விரசமாகப்பட்டது. மேரி மிகவும் வெளிப்படையாகவே கீழிறங்கி வந்து பேசத் தொடங்கி விட்டாளோ என்று சந்தேகமாயிருந்தது. சென்னையைப் போன்ற ஒரு நவநாகரிக ஊரில் ஆண் தரகர்களைவிடப் பெண் தரகர்கள் மோசமானவர்களாகவும் மட்டமானவர்களாகவும் இருப்பார்கள் போலிருந்தது. ஆனாலும் மேரியை ஏறிட்டுக் கோபமாக உறுத்துப் பார்க்க முடியாதபடி 

சுமதியை ஏதோ தடுத்தது. அவளால் மேரியைக் கண்டிக்க முடியவில்லை. கோபிக்க முடியவில்லை. எதிர்த்து விரோதித்துக் கொள்ளவும் இயலவில்லை.

தயாரிப்பாளர் பிரிஜ் டோரைத் திறந்து பாட்டில்களை யும் கிளாஸ்களையும் மேஜை மேலே வைக்கத் தொடங்கினார். சுமதி மெல்லக் குறுக்கிட்டு, "யாரோ டான்ஸ் மாஸ்டரைப் பார்க்கணும்னிங்களே?” என்று கேட்டு வைத்தாள். அதுதான் சமயமென்று "இவள் மாடி யிலே டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக் கட்டுமே பையனோட அனுப்பி வச்சிடலாமா?” என்று மேரி தயாரிப்பாளரை நோக்கிச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஏன் சுமதிக்கு எதுவும் வேண்டாமா ?” என்று தயாரிப்பாளர் மேஜை மேலிருந்த கிளாஸ்களைக் காட்டி மறுபடியும் கேட்டார். மேரி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். தயாரிப்பாளர் மறுபடியும் மேஜை மேலிருந்த மின்சார மணிக்கான பொத்தானை அமுக்கினார். பையன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். .

"டேய்! இவங்களை மாடியிலே டான்ஸ் மாஸ்டரிட் டக் கொண்டு போய்விடு” என்று சுமதியைக் காட்டித் தயாரிப்பாளர் பையனுக்கு உத்தரவு போட்டார்

பையன் பின்தொடரச் சுமதி எழுந்து சென்றாள். மாடிக்குப் படி ஏறுகிற வழியில் ரவிகுமார்-டான்ஸ் மாஸ்டர் என்று பெயர் எழுதி அவரைச் சந்திக்கும் நேரமும் எழுதப்பட்டிருந்தது.

டான்ஸ் மாஸ்டரைச் சுற்றி நாலைந்து இளம் பெண்கள் இருந்தார்கள். பைஜாமா, ஜிப்பா அணிந்த பாகவதர் கிராப்புடன் கையில் வைர மோதிரமும், பற் களில் வெற்றிலைக் காவியும் மின்ன அவன் உற்சாகமாக இருந்தான். சுமதியை அழைத்துச் சென்ற பையன், "புரொட்யூஸர் சார் அனுப்பிச்சாருங்க” என்று சுமதியைச் சுட்டிக் காட்டினான். அப்புறம் சுமதி பக்கமாகத் திரும்பி “உள்ளே போங்கம்மா” என்று அவளுக்கு உள்ளே போக விலகி விழி விட்டான்.

“பலே! பலே! டான்ஸுக்குன்னே செதுக்கி வச் சாப்ல உடம்பு, வாம்மா வா..” என்று அவளுடைய உடல் வனப்பைப் பாராட்டியபடியே வரவேற்றான் டான்ஸ் மாஸ்டர்.

சுமதி அவனை வணங்கிவிட்டு, நடு ஹாலில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் நின்றாள். "நீ தலையை ஒயிலாகச் சாய்த்துக் கும்பிடறதே டான்ஸ் மாதிரி இருக்கும்மா.

சுமதி புன்னகை பூத்தாள்.

“உன் பேர் என்னம்மா ?”

“சுமதி.”

“பலே! பலே! பேரும் பிரமாதம்தான்.”

சுமதி ஜமுக்காளத்தில் உட்காருவதா நின்று கொண்டே இருப்பதா என்பது தெரியாமல் தயங்கிய போது, "எங்கே இப்போ நான் அபிநயம் பிடிக்கிற மாதிரி நீயும் பிடி பார்க்கலாம். இன்னும் பாடம்லாம் நிறைய இருக்கு. இது சும்மனாச்சும் ஒரு டெஸ்ட்டுக்குத்தான்” என்றான் டான்ஸ் மாஸ்டர். சுமதி அவன் செய்த மாதிரியே செய்து நின்றாள். அவன் அருகே வந்து அவள் நின்ற பாணியைத் திருத்துவது போல் மோவாய், இடுப்பு, தோள் பட்டையை எல்லாம் தொட்டு, இப்படி இல்லேம்மா. இன்னும் கொஞ்சம் இடுப்பு வளையணும். முகபாவம் மாறணும்-ஏதேதோ சொன்னான். வேறு பெண்கள் முன்னிலையில் அவன் தன்னைத் தொட்டது என்னவோ போலிருந்தது. ஆனால் அந்த வேறுபெண்கள் அதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலக் குஷாலாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் துடுக்குக்காரியாகத் தோன்றிய பெண் ஒருத்தி ஏதோ ஹாஸ்யமாகச் சொல்வதுபோல், "மாஸ்டருக்குப் புது கிராக்கி வந்தாச்சு. இனிமே நம்மை எல்லாம் கவனிக்கவா போறாரு ?” என்றுகூட இரைந்து சொன்னாள். தயாரிப் பாளருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தயாரிப்பாளரின் அலுவலக மாடியில் டான்ஸ்மாஸ்டரே தனியே ஸ்கூல் நடத்துகிறார் என்பது புரிந்தது. ஆனால் அது உண்மை யில் டான்ஸ் ஸ்கூல்தானா, அல்லது அந்தப் பெயரில் அங்கு வேறு ஏதாவது இரகசியமாக நடந்து கொண்டிருக் கிறதா என்பது சுமதிக்குச் சந்தேகமாகவே இருந்தது. சூழ் நிலைகள் அப்படி இருந்தன. டான்ஸ் மாஸ்டர் சுமதியை லேசில் விடவில்லை. என்னென்னவோ சம்பந்தமுள்ள தையும், சம்பந்தமில்லாததையும் செய்யச் சொல்லி வேர்க்க விறுவிறுக்க கஸ்ரத் எடுத்தது போல ஆகியபின் "உனக்கு டான்ஸ் ஜோரா வரும் தங்கம்” என்று செல்லப் பெயர் கொண்டாடிச் சொன்னான். சிறிது பொறுத்து, “நீ நாளையிலேருந்து வந்துடும்மா! உனக்கு மாச ஃபீஸ் நூத்தம்பது போட்டுக்கறேன்” என்றான் டான்ஸ் மாஸ்டர்.

“சரி வரேன் மாஸ்டர் சார்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டு கீழே படியிறங்கி வந்தாள் சுமதி. ஏ.ஸி. அறை வாசலில் உட்கார எதுவும் இல்லை. சரி உள்ளேதான் போகலாமா என்று எண்ணிக் கதவைத் திறந்த சுமதி திறந்த கதவுக்கு உள்ளே பார்த்த காட்சி உடனே கதவை மூடிவிட்டுப் பின் வாங்கும்படி இருந்தது. மேரியும், தயாரிப்பாளரும் மேஜையருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்து சுமதி கதவைத் திறந்திருந்தாள். ஆனால் அவர்கள் இருவரும் கட்டிலில் படுக்கையில் இருந்தார்கள். சுமதி மறுபடி கதவைத் திறக்க முடியவில்லை. வெளியிலேயே அவள் தயங்கி நின்று கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/11&oldid=1146903" இலிருந்து மீள்விக்கப்பட்டது