23

ன்றைய நிகழ்ச்சிக்குப் பின் யோகாம்பாள் அத்தை வீட்டுக்கு இனிமேல் போகக்கூடாது என்று சுமதியின் உள்ளத்திற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. தன் தாய் தன்னை அதிகமாகத் திட்டியபோதெல்லாம், 'ரொம்பத்தான் திட்டாதீங்கோ. இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்' என்றெல்லாம் நிதானமாகப் பேசிய யோகாம்பாள் அத்தையின் கணவரா இப்போது தன்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசினார் என்று சுமதியாலேயே நம்ப முடியாமல் இருந்தது. தாயும் உறவினர்களும் தன்னை வெறுத்து அவமானப்படுத்திய தன் விளைவு தன்னை வெறுக்காத கன்னையா, மேரி போன்றவர்கள் மேல் அவள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் சொன்னதை எல்லாம் அவள் கேட்டாள். ஒரு விரக்தியில் நல்லது கெட்டது பிரித்துணரும் சக்தியே அவளிடமிருந்து போய்விட்டிருந்தது. கன்னையா இழுத்த இழுப்பு அவள் தங்கக் கம்பியாக வளைந்தாள். அவர் சொன்னதை எல்லாம் தட்டாமல் தயங்காமல் செய்தாள்.

பரந்த இந்த உலகில், அவரும் மேரியும்தான் தன்னைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வுகூட அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. மேரியும் கன்னையாவும் கற்பித்த வாழ்க்கை அவளுக்குப் பழகிவிட்டது. மேலும் சில மாதங்கள் சுலபமாக ஓடிவிட்டன. கவலை இன்றியும் ஓடி விட்டன.

"நான் வாங்கின அந்தப் பணத்தை முழுக்க அப்படியே அடுத்த வாரம் மறுபடி உன் அக்கெளண்டிலே டெபாசிட் பண்ணிடறேன் சுமதி ! உனக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கேன். நீதான் சமயத்திலே கை கொடுத்துக் காப்பாத்தினே" என்று கன்னையாவே ஒருநாள் ஞாபகமாக அவளிடம் வாங்கியிருந்த கடன் பற்றிப் பிரஸ்தாபித்தார். சுமதி அதைப் பெரிதுபடுத்தவில்லை. "எங்கே ஒடிடப்போகுது? மெல்லக் குடுங்க. அத்தனையும் நீங்க சம்பாதிச்சுக் குடுத்த பணம்தானே? உங்ககிட்ட இருந்தா என்ன? எங்கிட்ட இருந்தா என்ன?” என்று சுமதி கன்னையாவுக்கு மிகவும் ஆறுதலாகப் பதில் சொன்னாள். நாளடைவில் சுமதியிடம் கன்னையா கடன் வாங்கியிருக்கிறார் என்பது எப்படியோ மேரிக்குத் தெரிந்து அவள் ஒருநாள் சுமதியைக் கடிந்து கொண்டாள். படத் தயாரிப்புத் தொழிலைக் கன்னையா அறவே விட்டுவிட்டாற் போல ஒதுங்கியிருந்தார். மாடியில் குடியிருந்த டான்ஸ் மாஸ்டரைக் கூடக் காலி செய்யச் சொல்லி அனுப்பிவிட்டார். சுமதியின் டான்ஸ் பாடங்கள் அரைகுறையாக நின்றன.

டான்ஸ் மாஸ்டர் போனதும் சுமதியைக் கூப்பிட்டு, "சுமதி? நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா? மாடியிலே ஏ.ஸி. போட்டுத் தந்துடறேன்” என்று கன்னையா கேட்டபோது சுமதி கீழேயே இருக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டாள். அடுத்த நாளே மாடிக்கு டிஸ்டம்பர் பூசி ஒழுங்குபடுத்தினார்கள். மாடியில் ஒரே ஹாலாக இருந்த பகுதிகள் இரண்டு மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டன. மாடிப் படியேறுகிற பகுதியில் வெளிப் பக்கத்திலிருந்தும் உட்பக்கத்திலிருந்தும் திறக்கவும், பூட்டவும், முடிந்த மாதிரி ஒர் இரும்புக் கம்பி வெளிக் கதவு வேறு புதிதாகப் போடப்பட்டது.

ஒருவாரம் கழித்து ஒருநாள் பிற்பகல் முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரம் இருக்கும்போது நாலைந்து தெலுங்குப் பெண்களோடு காரில் வந்து இறங்கினார் கன்னையா. சுமதி தான் வசித்துக் கொண்டிருந்த போர்ஷனில் இருந்து தற்செயலாக முன்பக்கம் வந்தவள் இந்தக் காட்சியைப் பார்த்தாள். கன்னையாவே ஓடிவந்து, "இனிமே இவங்கதான் இங்கே டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போறாங்க. பழைய ஆளு ஆம்பிளையா இருந்து தொலைச்சதாலே ரொம்பப் பொண்ணுங்க டான்ஸ் படிக்க நினைச்சாக்கூடப் பயந்து கூச்சப்பட்டாங்க, அதான் பொம்பிளைங்களாகக் கொண்டாந்துட்டேன். இவங்க 'குச்சுப்புடி' டான்ஸ்லே எக்ஸ்பர்ட். இங்கே நிறைய ஆந்திராக்காரர்களும் இருக்காங்க. அவங்க வீட்டுப் பெண்ணுங்கள்ளாம் படிக்க வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப நல்ல மாதிரி” என்று சுமதியிடம் தானே வலிந்து முந்திக் கொண்டு விவரங்களைச் சொன்னார். சுமதி இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சொன்னதை முழுமையாக அவள் நம்பவும் இல்லை. ஏதோ அவசரம் அவசரமாக இட்டுக் கட்டிச் சொன்னது மாதிரி பட்டது. அதற்கு அடுத்த நாள் கன்னையாவின் வேலைக்காரப் பையனை எதற்காகவோ கூப்பிட்டபோது அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள் சுமதி. "நீங்க கேட்டா டான்ஸ் கத்துக் குடுக்க வந்திருக்காங்கன்னு ஐயா உங்ககிட்டேச் சொல்லச் சொல்லியிருக்கு” என்றான் அவன். தமிழ் தெளிவாகப் பேச வராத மலையாளத்துப் பையனாகிய அவன் உள்ளதை அப்படியே வாய் உளறிப் போய்ச் சொல்லி விட்டான். சுமதி இரண்டாவது முறையாக அவனை அழுத்திக் கேட்டதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசாமல் போய்விட்டான். சுமதிக்குச் சந்தேகம் தட்டியது. இது மாதிரி விஷயங்களில் பெண்மைக்குள்ள மோப்ப சக்தி அவளுக்கு அப்போது உதவியது.

அன்று பிற்பகலில் மேரி வந்தாள். கன்னையாவும், மேரியும் சேர்ந்தே மாடிக்குப் போய் அந்த ஆந்திர அழகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தனர். கன்னையாவின் புரொடக்‌ஷன் ஆபீஸின் வெளிவாசல் அருகே, ’இங்கே கைதேர்ந்த பெண் ஆசிரியைகள் குச்சிப் புடி நடனம் கற்பிக்கிறார்கள்’ என்ற புதிய விளம்பரப் பலகை வேறு வைக்கப்பட்டுச் சந்தனம் குங்குமம் தெளிக்கப்பட்டுப் பூச்சரம் சூட்டப்பட்டது. சுமதிக்கு என்னவென்று ஒரளவு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகவே புரிந்தது. அந்த ஆந்திர அழகிகள் வந்திருப்பது தங்கியிருப்பது எதுவும் நல்லதற்கில்லை, என்பதை அவள் உணர்ந்தாள்.

சுமதி மேரியைத் தனியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளிடமே இதுபற்றிக் கேட்டாள்.

"என்னடீ மேரி? இந்தத் தெலுங்குப் பொம்பளைங்கள்ளாம் யாரு? இவங்களைக் கன்னையா எதுக்காக இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காரு? கேட்டால் குச்சிப்புடி அது இதுன்னு புளுகறாரு? என்னடி இதெல்லாம்?"

"அவங்களுக்குள் ஆயிரம் இருக்கும்? அதெல்லாம் உனக்கு எதுக்குடீ தெரியணும் ? உன் பாட்டைப் பார்த்துக்கிட்டு நீ சும்மா இரு போதும்” என்றுதான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் "உன் லோனை அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு! அதிலே மெத்தனம் வேண்டாம். ஒருபிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்" என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ’எங்கேடீ போகுது பணம்?’ என்ற வார்த்தைகளைத் தன்னாலேயே இப்போது சொல்ல முடியவில்லை என்பதைச் சுமதி உணர்ந்தாள். அவள் உள்ளுணர்வு விழிப்படைந்திருந்தது.

இந்த அதிர்ச்சி போதாதென்று வேறோர் அதிர்ச்சியும் சுமதிக்கு அன்று ஏற்பட்டது.

மேரியின் இரகசிய ஏற்பாட்டின் படியும், அறிவுரையின் படியும் தன் உடல்நிலை குறித்து மாதவிடாய்க் காலம் தப்பிவிடாமல் பேணுவது குறித்தும் சுமதி அருகிலேயே ஒருலேடி டாக்டரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.

“இங்கே வந்தாச்சு! இனிமேத் தாறுமாறா யார்யாரோடவோ எப்பிடி எப்பிடியோ இருக்கறாப்பல ஆயிடும். லேடி டாக்டரைத் தவறாமப் பார்த்துக்கோ. இல்லாட்டி வயிறும் புள்ளையுமா நிற்பே. ஜாக்கிரதை” என்று கொஞ்சம் பச்சையாகவே மேரி ஒருநாள் அவளை இது விஷயமாக எச்சரித்திருந்தாள். கன்னையா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த ஒரு லேடி டாக்டரிடம் கூப்பிட்டுக் கொண்டு போய் மேரியும், கன்னையாவுமே சுமதியை அந்த டாக்டரம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். சுமதியும் இரவுகளையும், பகல்களையும், நிகழ்ச்சிகளையும் ஞாபகம் வைத்திருந்து அந்த டாக்டரம்மாவைச் சந்தித்து ஊசிகள் போட்டுக் கொண்டு மாத்திரைகளை விழுங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாடியில் ’குச்சிப்புடி’ என்கிற பெயரில் ஆந்திர அழகிகள் குடியேறிய பின் அவள் டாக்டரம்மாவிடம் போகவேண்டிய முதல் முறை நாளன்று டாக்டரம்மா மேற்படிப்புக்காகப் பிரிட்டனுக்குப் புறப்பட்டுப் போய் விட்டாளென்று தெரிந்தது. அன்று போட வேண்டிய இன்ஜெக்‌ஷனையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. 'மெடிக்கல் செக்-அப்’ பையும் செய்து கொள்ள முடியவில்லை. வேறு டாக்டர்களிடம் போகலாம் என்றால் இந்த மாதிரி இரகசிய விஷயங்களுக்கு யாரை நம்பிப் போவது என்பது சுமதிக்குப் புரியவில்லை. கன்னையாவைப் போய்க் கேட்கலாம் என்றால் மாடியில் ஆந்திர அழகிகள் வந்த நாளிலிருந்து சுமதிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது. இரண்டொரு தடவைகள் கன்னையா வலிந்து தாமாகப் பேச முன்வந்தபோது கூடச் சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். ஆகவே அவரிடம் போய் லேடி டாக்டர் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கச் சுமதிக்கு விருப்பமில்லை.

சுமதி உடனே மேரிக்கு ஃபோன் செய்தாள். மேரி மாலையில் வந்து டாக்ஸியில் லஸ் சர்ச் ரோடில் யாரோ ஒரு டாக்டரம்மாவிடம் சுமதியை அழைத்துச் சென்றாள். அந்த லேடி டாக்டர் மிகவும் கறாராக இருந்தாள். 'மிஸ் சுமதி’, என்று மேரி பேர் சொல்லி இருந்ததனால், "இது மாதிரி இன்ஜெக்‌ஷன்களைக் கலியாணமாகாத பெண்களுக்கு நான் போட்றதில்லேம்மா! தப்புப் பண்றவங்களுக்கு நாங்க ஒத்தாசையா இருக்க முடியாது. தயவு செய்து இது விஷயமா நீங்கள்ளாம் இனிமே என்னைத் தேடி வரப்பிடாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

"எல்லா டாக்டர்களும் இதுக்கு ஒத்துவர மாட்டாங்க. சிலபேர்தான் ஒத்து வருவாங்க. அந்தச் சில பேருக்கும் நிறையப் பணம் குடுக்கணும். ஆம்பிளை  டாக்டரா இருந்து அந்த டாக்டர் ஆசைக்காரனா இருந்தா அவனோட ஆசையையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். அதுக்காகத்தான் நானும் கன்னையாவும் ரொம்பப் பாடுபட்டு அந்த மாம்பலம் லேடி டாக்டரைப் பிடிச்சு வச்சிருந்தோம். அவ மேற்படிப்புக்கு யூ.கே. போயிட்டா. போகணும்னு ரொம்ப நாளாச் சொல்லிக்கிட்டிருந்தா” என்று அதிலுள்ள சிரமங்களை மேரி விவரித்தாள். மறுபடி சுமதியும், மேரியும் திருவல்லிக்கேணியில் இன்னொரு டாக்டரம்மாவைப் பார்க்கச் சென்றார்கள்.

இந்த டாக்டரம்மாள் எல்லாப் பேஷண்டுகளையும் பார்த்து முடித்து அனுப்பிய பின் தனியானதும் இவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். எந்த முன் நிபந்தனையும் போடாமல் அந்த டாக்டரம்மாள் சுமதியைப் பரிசோதித்தாள்.

ஆனால் பரிசோதனை முடிந்ததும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டே, "உங்க ஹஸ்பெண்ட் என்னம்மா வேலை பார்க்கிறாரு?" என்று கேட்ட டாக்டரம்மாளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சுமதி பரக்கப் பரக்க விழித்தாள்.

டாக்டரம்மாள் எழுதுவதை நிறுத்தி விட்டுச் சுமதியை நிமிர்ந்து பார்த்து மறுபடியும் தன்னுடைய அதே பழைய கேள்வியைக் கேட்டாள்.

"... நாட் யெட் மேரீட்” என்று சுமதி தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிய மறுமொழியைக் கேட்டு அந்த டாக்டரம்மாள் திகைத்துப் போய் இவள் முகத்தையே இமையாமல் பார்த்தாள்.

"நாட் மேரீட்? தென் ஹெள...” என்று எதையோ கேட்க ஆரம்பித்து உதட்டைக் கடித்துக் கொண்டு பாதியிலேயே நிறுத்தினாள் டாக்டரம்மாள். சிறிது நேரம் கழித்து, "கர்மம்! கர்மம்! நீங்கள்ளாம் ஏம்மா இங்கே  என்னைத் தேடிவந்து கழுத்தறுக்கிறீங்க! என் பேரைக் கெடுக்கிறதுக்கா? போம்மா போ! கோடம்பாக்கத்திலே சினிமா எக்ஸ்ட்ராக்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டரம்மாக்கள் யாராவது இருப்பாங்க. ஐயாம் நாட் ஸோ சீப். அங்கே போய் யாரையாவது பாரும்மா” என்று பாதி எழுதியிருந்த ’ப்ரிஸ்கிரிப்ஷனை’ அப்படியே கிழித்துக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது.

"இது கெளரவமானவங்க வர்ர டிஸ்பென்ஸ்ரி ! இங்கெல்லாம் இனிமே நீ வராதே. இப்ப நீ வந்ததை நான் இரகசியமாக வச்சுக்கிறேன். யாரிட்டவும் சொல்லலே. ஆனா நீ இங்கே இனிமே வரப்பிடாது” என்ற கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது அந்தப் பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/23&oldid=1147403" இலிருந்து மீள்விக்கப்பட்டது