அன்னப் பறவைகள்/அரசகுமாரியும் பட்டாணிக் கடலையும்

 முன் ஒரு காலத்தில் அரச குமாரன் ஒருவன் இருந்தான். அவன் ஒர் இளவரசியை மணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அவள் உண்மையான அரசகுமாரியாக இருக்க வேண்டும் என்பது அவன் கருத்து. அப்படி ஒருத்தி கிடைப்பாளா என்று அவன் உலகம் முழுதும் பல நாடுகளில் சுற்றிப் பார்த்தான். எத்தனையோ அழகிய இளவரசிகளை அவன் கண்டான். ஆனால் அவர்கள் உண்மையான அரசகுமாரிகளா என்று பார்க்கும்பொழுது, அவர்களில் எவளும் இளவரசனுடைய மனத்திற்கு இசைந்திருக்கவில்லை.

கடைசியாக அவன் தன் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான். எப்படியாவது ஓர் இளவரசியைக் கண்டுபிடித்து அவளைத் நிருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவன் கவலையில் ஆழ்ந்திருந்தான். ஒருநாள் இரவில் பெரும்புயலும் மழையும் சேர்ந்து வந்தன. இடியும் மின்னலும் பயங்கரமாயிருந்தன. வானமே பொத்துக் கொண்டு பொழிவதுபோல் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழைக்கு நடுவே நகரக் கோட்டை வாயிலின் கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டது. அரசர் தாமே கதவைத் திறப்பதற்காக எழுந்து சென்றார்.

வெளியே நின்று தட்டியது ஓர் இளவரசி. அவள் கூந்தலி லிருந்தும், உடைகளிலிருந்தும் மழைநீர் வடிந்து கொண்டிருந்தது. உடல் முழுதும் நனைந்திருந்தது. அவள், தான் ஓர் உண்மையான இளவரசி என்று தெரிவித்துக் கொண்டாள்.

'இவள் உண்மையான இளவரசிதானா என்பதை நாம் விரைவில் பார்த்து விடுவோம்! என்று மகாராணி சிந்தனை செய்தாள். அவள் படுக்கை அறைக்குள்ளே சென்று கட்டிலின்மேல் ஒரு பட்டாணிக் கடலையை வைத்தாள். அதன்மேலே இருபது சவுரி மெத்தைகளை அவள் மெதுவாக அடுக்கி வைத்தாள். அந்த மெத்தைகளுக்கு மேலே நேர்த்தியான இருபது இறகு மெத்தைகளும் விரிக்கப்பட்டன. இந்த காற்பது மெத்தைகளுக்கு மேலே இளவரசி அன்று இரவு படுத்துறங்க வேண்டும் என்று அரசி ஏற்பாடு செய்தாள். மெத்தைகளுக்கு மேலே ஏறுவதற்கு ஒர் ஏணியும் வைக்கப்பட்டது.

மறுநாள் காலையில் நீ இரவில் நன்றாக உறங்கினாயா? என்று எல்லோரும் இளவரசியிடம் கேட்டனர்.

"துக்கமே பிடிக்கவில்லை! இரவு முழுதும் நான் கண் மூடவே யில்லையே' என்று அவள் கூறினாள். ஏதோ கடினமான பொருள் ஒன்று என் உடலை உறுத்திக்கொண்டேயிருந்தது. அதனுல் உட லெல்லாம் நொந்து போய்விட்டது" என்றும் அவள் தெரிவித்தாள்.

கட்டில்மீது இருந்த ஒரு சிறு பட்டாணிக் கடலை இருபது சவுரி மெத்தைகள், இருபது இறகு மெத்தைகளுக்கும் மேலே அவளை உறுத்தியது என்பதைக் கண்டவுடன், எல்லோரும் அவள் உண்மையான இளவரசிதான் என்று தீர்மானித்தனர். உண்மை இளவரசியைத் தவிர வேறு யாருக்கு அத்தகைய மென்மையான உடல் அமைந்திருக்கும்?

உண்மையான இளவரசியைத் தேடிப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த இளவரசன், கடைசியாக அப்படி ஒருத்தியைக் கண்டு பிடித்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கும் இளவரசிக்கும் சிறப்பான முறையில் திருமணம் நிறைவேறிற்று.

பட்டாணிக் கடலை அரண்மனைப் பொருட்காட்சியில் வைக்கப்பட்டது. எவரும் அதைத் திருடாமல் இருந்தால், அது இன்னும் அங்கேதான் இருக்கும்.

இது உண்மையாக நடந்த கதை.