அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/224-383

220. நீதியும் நெறியும் கருணையும் அமைந்த அரசுக்கு நல்லமதி வாய்த்த மந்திரிகள்

நீதியும், நெறியும், கருணையும் அமைந்துள்ள அரசருக்கு மதியும் நல்லமதியும்வாய்த்த மந்திரிகளிருத்தல் வேண்டும். அதாவது, கோ னெவ்வழியோ குடிகளும் அவ்வழியென்னுங் குணத்திற்கு இயல்பாய் மந்திரிகளுமிருப்பார்களாயின் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்க்கையி லிருப்பார்கள்.

ஆதலின் சாதிபேதமில்லா பொறாமெ குணமற்ற அரசும், வஞ்சினமில்லா சமய பேதமற்ற அரசும், நீதியும் நெறியும் அமைந்த அரசும், கருணையும் கண்ணோக்கமும் அமைந்த அரசுமாகிய அரணில் சாதி பேதமற்ற மந்திரியும், சமபேதமற்ற மந்திரியும் நீதி நூற்களே நிறைந்த மந்திரியும், நீதிநெறி ஒழுக்கங்களமைந்த மந்திரியுமே இருத்தல் வேண்டும்.

அங்ஙனமிராது சாதிபேதமற்ற அரசாங்கத்தில் சாதிபேதமுள்ள மந்திரியும், சமயபேதமற்ற அரசாங்கத்தில் தன்னவ ரன்னிய ரென்னும் பட்சபாதமுள்ள மந்திரியும், நீதிநெறி வாய்மெயுள்ள ராசாங்கத்தில் நீதிநெறி வாய்மெயற்ற மந்திரியும், கருணை நிறைந்த ராசாங்கத்தில் கருணையற்ற மந்திரியுமிருப்பானாயின் அவ்விராஜாங்கத்தோர் அடிமடியில் விஷப் பாம்பையும், அண்டை வீட்டில் சத்துருவையும் வைத்திருப்பதற்கு ஒக்கும்.

ஆதலின் நீதியும், நெறியும், கருணையும் அமைந்த அரசர்கள் தங்களுக்கு வேண்டிய அங்கத்தினர்களாகும் அமைச்சர், காலக்கணிதர், சேனைத்தலைவர், தூதுவர், அரண்மனைக் கார்ப்போர், ஆடையாபரணம் வினைவோர், சிறந்த சுற்றத்தார், படைகாப்பாளர், நகரங் காப்போர், யானை வீரர், ஆயத்துரையோர், திரவியங் காப்போர், மருத்துவக் கலைஞர், மடைத்தொழிலாளர், நிமித்தக நிபுணர், சிற்றரசர், நெருங்கிய சுற்றத்தோராகும் அரச வங்கத்தினர் யாவரும் அரசரையொத்த சாதிபேதமற்றவர்களும், சமய பேதமற்றவர்களும், நீதியும், நெறியுங் கருணையும் அமைந்தவர்களுமாயிருத்தல் வேண்டும்.

இத்தகைய மேலாய குணநலமிகுத்தவர்கள், அரசவங்கத்தினராயிருந்து இராட்சியபாரம் தாங்குவார்களாயின் குடிகளால் அரசருக்கு யாதொரு பழிபாவமுஞ் சாராது நீடிய செங்கோல் நிலைத்து அரசரும் ஆனந்த சுகத்தில் வாழ்வதுடன் குடிகளும் பேரானந்த சுகத்தை அடைவார்கள்.

சாதிபேதம் சமயபேதமற்று நீதியும் நெறியுங் கருணையும் அமைந்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த அரசருக்கு சாதிபேத சமயபேதமுள்ளவர்களும் நீதிநெறி கருணையற்றவர்களும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமில்லாதவர்களுமானோரை அரச அங்கத்தினர்களாக சேர்ப்பதாயின் தங்களது பொருளாசை மிகுந்த மிலேச்ச புத்தியையே முன் தள்ளி தங்களது சுயப் பிரயோசனங்களுக்காய் குடிகளை வருத்தி துன்பப்படுத்தி குடிகளுக்கு அயிஷ்டமுண்டாகச்செய்வதுடன் அரயர்கள் ஏதேனுங் கண்டிக்க முயல்வார்களாயின் அடைந்துள்ள நன்றியை மறந்து அரசருக்கே தீங்கை விளைக்க முயல்வார்கள்.

இதனை அநுபவத்தாலறிந்துவரும் அரயர்கள் சாதிபேதமில்லாத ஆளுகையில் சாதிபேதமுள்ளவர்களும், சமய பேதமில்லாத ஆளுகையில் சமய பேதமுள்ளவர்களும், நீதியும் நெறியும் கருணையும் அமைந்த ஆளுகையில் நீதியும் நெறியும் கருணையற்றவர்களும், வித்தை புத்தி ஈகை சன்மார்க்கம் நிறைந்த வாளுகையில் வித்தை புத்தி யீகை சன்மார்க்கமற்றவர்களுமானோர்களை அரச அங்கங்களில் ஒவ்வொருவராக சேர்ப்பதாயின் தங்களது சுயகாரியங்கள் சரிவர நிறைவேறும் வரையில் அரசருக்கு மிக்க அபிமானிகளும் அன்புமிகுத்தவர்களும் அதிஜாக்கிரதையுள்ளவர்களும் போல் அபிநயித்து காரியாதிகளை நடத்திவருவார்கள். தங்களுக்கு ஏதேனும் வரவு குன்றி அரசநெருக்கம் விடுபடுமாயின் எவ்விதத்தேனும் அரசுக்கு தீங்கை விளைவித்து தாங்கள் சுகமடையும் வழிகளையே தேடுவார்கள்.

ஆதலின் அரச ஆளுகைக்கு உட்பட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் தங்களை ஒத்தவர்களாகவைத்துக்கொண்டு நடாத்துவதே அரசுக்கு ஆனந்தத்தையும் சுகவாழ்க்கையையுந் தரும். குடிகளால் நீதி மன்னரென்னும் பெயரையும் பெறும்.

- 5:7; சூலை 26, 1911 -