அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/266-383

262. இந்திய வியாபாரத்திற்குக் கேடு கலவை சரக்குகளேயாம்

இத்தேச வியாபாரிகள் அரிசிவியாபாரஞ்செய்ய ஆரம்பித்தவுடனே பெருமுதலாளிகளாகிவிட வேண்டுமென்னும் பேராசையால் உயர்ந்த அரிசிகளுடன் மட்டவரிசிகளைக் கலந்து உயர்ந்த அரிசி விலைக்கே விற்க ஆரம்பிக்கின்றார்கள். அக்கலப்பு தினுசை ஒருமுறை, இரண்டு முறைக் காணும் மற்றதேச வியாபாரிகளும் குடித்தனக்காரர்களும் அவனது கடையின் வியாபாரத்தை விடுத்து வேறு கடையை நாடுகின்றார்கள். அரிசியுடன் வேறு அரிசிக் கலப்பினும் பாதகமில்லை, அரிசிகளுடன் சாம்பலையுந் தவிடையுங் கலந்து விற்பதாகவும் வதந்தி.

நெய் தினுசுகளிலோ எறுமெய் கொழுப்பு, குசும்பாதைலம் முதலியவைகளைக் கலந்து விற்பதாக விளங்குகின்றது. இத்தகைய கலப்பும் போதாது சில படுபாவிகள் மலைப்பாம்பின் கொழுப்புகளை நெய்யுடன் கலந்து விற்றதாகவும் அவற்றை அறிந்த அதிகாரிகள் விசாரிணைக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் சில பத்திரிகைகளில் வாசித்துள்ளோம். இவைகள் யாவற்றிலும் மேலாய பஞ்சு வியாபாரத்திலோ நீர்சேர்த்து எடையதிகரிக்கச் செய்தும், பசுந்தழைகளையுஞ் சுள்ளிகளையுங் கலந்து எடை அதிகரிக்கச் செய்வதும், கருங்கல் தூசுகளைக் கலந்து எடை யதிகரிக்க செய்வதுவுமாகிய மாறுபட்டச் செயல்களால் பஞ்சுதினுசுகளுக்கு விலை குறைவாவதுடன் அந்தந்த வியாபாரிகளின் நாணயங்களுங் கெட்டு நம்பிக்கையற்று அலைகின்றார்கள். நாளுக்குநாள் இந்திய தேச வியாபாரங்களும் வியாபாரிகளும் க்ஷீணமடைவதற்குக் காரணம் நல்ல சரக்குகளுடன் கெட்ட சரக்குகளை கலந்து செய்யும் மோச வியாபாரங்களினாலேயாம். ஏக காலத்திலேயே பெருமுதலாளிகளாகி விடலாமென்னும் பேராசையால் மாறு சரக்குகளைக் கலப்பது தீவினையென்றுணராது செய்யுஞ் செய்கையால் பைய பைய அதன் பயனை அநுபவித்துப் பாழடைகின்றார்கள்.

நீதியிலும் நெறியிலும் நின்று வியாபாரஞ் செய்யும் அமேரிக்கர்களும் அஸ்டிரேலியன்களும் சீனர்களும் ஜப்பானியர்களும் இலட்சக் கணக்காக வியாபாரங்களைப் பெருக்குவதுடன் கோட்டீஸ்வரர்களென்றும் குபேரர்களென்றும் சொல்லத்தக்க சிறந்த பெயர்களைப் பெற்று ஆணும் பெண்ணும் பட்டாடைகளை யுடுத்தி அனைவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குகிறார்கள். “மனம்போல வாழ்க்கைப் பெறுவது மாங்கல்யசுகமென்றும், குணம்போல் வெளுப்பது குங்கல்யநிறமென்றும்” வழங்கும் பழமொழி போலும் வியாபாரா துரோகசிந்தனா வென்னும் மெய்மொழிக்கு ஆதரவாக இத்தேசத்தோர் கலப்பு வியாபாரங் கனக்கச் செய்வதுடன் மூசுகருண்டைக்காரர்களின் முழு மோசங்களோ வென்னில் ஏழைக்குடிகள் ஓர் பலகாரத்தில் கையை வைத்துவிட்டாலோ தாழ்ந்தசாதியாள் தீண்டிவிட்டாள் என அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களையும் ஆதரவாகச் சேர்த்துக் கொண்டு அவ்வேழையை மிரட்டி இரண்டணா பலகாரத்தையோ, மூன்றணா பலகாரத்தையோ அவள் தலையிலேற்றி பணத்தைப் பெற்றுக்கொண்டு அநுப்பிவிடுவார்கள். அக்கடைகளுக்கோ மூசுவுருண்டை கடைகளென்றே பெயர். அதாவது நாலுநாள் மூசடைந்தபலகாரம் ஐந்துநாள் மூசடைந்த பலகாரங்களை வைத்துக்கொண்டு ஏழைகள் தொட்டுப்பார்த்து நல்ல பலகாரங்களை எடுத்துக்கொண்டு மூசடைந்த பலகாரங்களை நீக்கிவிடுவார்கள் என்னும் கெட்ட எண்ணத்தால் தொடப்படாது என வழங்கிவருவதுடன் அவன் கொடுக்கும் துட்டிற்கு மூச்சுருண்டையை எடுத்துக்கொடுத்து வாங்கினவள், இஃது பழையபலகாரம் மூச்சடிக்கின்றதே வேறு பலகாரங்கொடுவென்னில் நீ தீண்டி விட்ட பலகாரத்தை நாங்கள் மறுபடியும் வாங்கலாமோ வென்னும் மூசுருண்டை மாமோச வியாபாரம் மெத்தக்கொடிது கொடிது. இத்தகையக் கருணையற்றப் படுபாவிகளும் வன்நெஞ்சர்களும் வாசஞ்செய்யுந் தேசத்தில் வியாபாரம் எவ்வகையால் விருத்தி பெரும். கலப்புசரக்கைக் கலந்து கைகாட்டுவதும் மூச்சவுருண்டைகளை வித்து மோசஞ்செய்வதுமாகிய வஞ்சக வியாபாரிகளை அடக்கி தேசத்தை சீர்படுத்த கருணைதங்கிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களே அதனதன் மேற்பார்வைக்கு சீர்த்திருத்தக்காரர்களாகத் தோன்றுவார்களாயின் தேசமும், வியாபாரமும், சீர்பெறும். ஏழைகளும் சுகம் பெறுவார்கள். அங்ஙனமின்றி வஞ்சகக் கூற்றரை அடக்கற்கு வஞ்சகக் கூற்றர்களையே நியமிப்பதாயின் உள்ள வியாபாரமுங் கெட்டு ஊரும் பாழடைய வேண்டியதேயாம்.

- 6:6; சூலை 17, 1912 -