அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/312-383

308. இந்தியதேச சீர்திருத்தப்பற்று இந்தியருக்கு உண்டாமா அன்றேல் வந்தேறியக் குடிகளாம் இந்துக்களுக்குண்டாமா

இந்திய தேசஞ் சிறப்படையவேண்டுமென்னும் பற்றும் மக்கள்யாவரும் சுகமடைய வேண்டுமென்னும் அன்பும் இந்தியர்களுக்கே உண்டாம்.

அதன் காரணமோ வென்னில் அவர்களுக்குள் பாஷை பேதமிருப்பினும் மக்கள் பேதமின்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிலைத்து விவசாயத்தை நோக்குவார் உழைப்பிற்கு அஞ்சாது பூமிகளை உழுது பண்படுத்தி தானிய விருத்திசெய்யும் பற்றும், வித்தையை நோக்குவோர் அந்தந்தக் கைத்தொழில்களில் சிற்பமும் நெசிவும் காருகமும் கமகமும் சித்திரமும் மற்றுங்கைத்தொழில் பற்றும், புத்தியை நோக்குவோர் மூலிகை குணாகுணங்களையும் உபரசகுணா குணங்களையும் பாடாண குணாகுணங்களையும் கண்டறிந்து உலகோபகாரமாக எழுதிவைப்பதுடன் நீதி சாஸ்திரம், ஞான சாஸ்திரம், சிற்பசாஸ்திரம், சோதிட சாஸ்திரம், அறிவை விருத்தி செய்யக்கூடியக் கலைக்கியான சாஸ்திரங்களை வரையும் புத்தியின் பற்றும், ஈகையை நோக்குவோர் தனக்குள்ளவற்றை இல்லாத யேனையோருக்குப் பகுந்து கொடுத்து சகல சீவர்களும் சுகசீவிகளாக வாழ்கவேண்டுமென்னும் பற்றும், சன்மார்க்கத்தை நோக்குவோர் நீதியிலும் தொழிலிலும் ஞானத்திலும் நிலைத்து மனோசுத்தம், வாக்குசுத்தம், தேகசுத்தமுடையார்களாகும் சமணர்களாகி மனமாசுகளகற்றி பிறவியை ஜெயித்து தண்மெயடையும் அந்தணர் பிராமணரென்னும் அறஹத்துக்களாகும் நித்தியானந்தப்பற்றும் உடையவர்களாகி யார் எத்தொழிலை செய்யினும் ஒத்த மனமுடையவர்களாய் தேச சிறப்பையும் மக்கள் சுகத்தையுங் கருதுவதுடன் சருவசீவர்கள் சுகத்தையும் நாடி நின்றார்கள்.

அத்தகைய சருவமக்களும் ஒற்றுமெயும் அன்பும் பொருந்தி வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பற்றுடையவர்களாயிருந்ததற்கு ஆதாரமியாதெனில் “ஆய பொருட்கள் கணத்தி லழியுமென்று தூயவ சோகமுதி யுரைத்த” மலைவு படாவமுதவாக்கியத்துள் க்ஷணத்திற்குச் சணம் காடுகளெல்லாம் நாடாவதும் நாடுகளெல்லாங் காடாவதும் பெருங்குடும்பத்தோன் சிறுங் குடும்பமாவதும் சிறுங் குடும்பத்தோன் பெருங்குடும்பமாவதும் தனவான் ஏழையாவதும் ஏழை தனவானாவதும் உயர்ந்தோலெல்லாம் தாழ்வதும் தாழ்ந்தோரெல்லாம் உயர்வதும் உருசியும் பரிமளமாக உண்ட பொருள் யாவும் துற்கந்தமாக வெளிவருதலும் துற்கந்தமாக வெளிவந்த பொருளால் நற்கந்தப் பொருள் தோன்றுவதுமாய பொருட்கள் யாவும் அநித்தியமென்றும் அவ்வனித்தியத்தினின்று நீங்கள் நித்தியர்களாகவும், அத்துக்கத்தினின்று நீங்கி சதா சுகம் பெறவேண்டுமாயின் சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குங்கள் உங்கள் நற்கிருத்திய செயல்களே உங்களை நற்சுக வழிக்கு கொண்டுபோகும். உங்கள் துற்கிருத்தியச் செயல்களே உங்களை மிக்கத் துக்க வழியிற் கொண்டுபோய் விடுமென்று போதித்துள்ள புத்த தன்மமாம் சத்திய தன்மத்தையே சிரமேற்கொண்டு சாதித்து வந்தவர்களாதலால் இந்திய தேச சீர்திருத்தப்பற்று பூர்வக் குடிகளாம் இந்தியர்களுக்கே உரியதாம் என்பது கருத்து.

இந்துக்களென்போர்களோ நூதனமாக இத்தேசத்திற் குடியேறி நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் நூதன சாமிகளையும் அதற்கு ஆதாரமாய நூதன சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக்கொண்டு அவைகள் சோர்வுறா நோக்கமும் அவைகள் சோர்வுறா பற்றும் விடாமுயற்சியும் உள்ளவர்களாதலால் பொதுவாய தேச சீர்திருத்தப்பற்றும் தேச மக்கள் சுகமடைய வேண்டிய பற்றும் அவர்கள் கனவினுங் கிடையாவாம். மதப்பற்று சாதிபற்று சாமி பற்றோடுங் கூடவே மற்றும் இருபற்றுக்களில் நிலைத்திருத்திருக்கின்றார்கள். அவைகள் யாதென்னிலோ இரவும் பகலும் ஆங்கிலப்படிப்பிலுருபோட்டு ஆங்கிலங்கற்று இராஜாங்க உத்தியோகத்தில் அமர்ந்துக் கொள்ள வேண்டுமென்பது ஒரு பற்று. அவ்வுத்தியோகத்திலிருந்து கொண்டே ராஜாங்கத்தையே தங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டுமென்பது ஒரு பற்று. ஆக இரு பற்றுக்களே அவர்கள் இதயத்திற் குடிகொண்டிருக்கின்றதேயன்றி தேச சீர்திருத்தப் பற்றும் தேச மக்கள் சுகமடையும் பற்றுங் கிடையவே கிடையாது என்பது துணிபு.

ஆதலின் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் தேச சீர்திருத்தக்காரர்களை அறிந்து அவர்களை சீர்திருத்தி முன்னேற்றும்படி வேண்டுகிறோம்.

- 7:23: நவம்பர் 12, 1913 -