அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/343-383

14. ஆரியன் என்னும் ஓர் மனிதன் இருந்ததுங் கிடையாது
அவன் மறைந்ததுங் கிடையாது

ஆரியமென்னும் ஓர்பாஷை இருந்ததுங் கிடையாது, அதன் அட்சரமுங் கிடையாது, அவற்றால் வரைந்துள்ள நூற்களுங் கிடையாது. ஆரியமென்னும் ஓர் மதமுங் கிடையாது, அதன் ஆக்கியோனுங் கிடையாது, அதன்தருமம் இன்னது இனிய தென்பதுங் கிடையாது.

ஆரியமென்னும் பெயர் எத்தகையாய் தோன்றியதென்பீரேல்,

1,500 வருடங்களுக்குப் பின் இந்திரர்தேசமாகும் இந்திய தேசத்துள் மிலேச்ச அல்லது நீசச்செய்கெயுள்ள ஓர் கூட்டத்தார் வந்துசேர்ந்து கொல்லா விரதமுள்ள தேசத்தில் பசுமாடுகளையும், குதிரைகளையுஞ் சுட்டுத்தன்று சுறாபானமென்னும் மயக்கவஸ்துவைக் குடிப்பதை அறிந்த மேன்மக்களாம் பௌத்தர்கள் இவர்களை ஆரியர்களென்றும், மிலேச்சர்களென்றுங் கூறியுள்ளதை, பௌத்தர்கள் முன்கலை நூலாகும் திவாகரத்திலும், பின்கலை நூலாகும் நிகண்டிலும், பெளத்தவரச சீவகன் சரித்திரமாகும் சீவகசிந்தாமணியிலும், மணிவண்ணன் என்னுங் கிரீடினன் சரித்திரமாகும் சூளாமணியிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

நிகண்டு - திவாகரம்

மிலேச்சாரியார்

மிலேச்சராமாரியர்ப் பேர் மிலைச்சரென்றுரைக்கலாமே.

சீவகசிந்தாமணி

செங்கட்புன் மயிர்த்தோல் திரைச்செம்முக / வெங்கணோக்கிற் குப்பாய மிலேச்சனை செங்கட்டீவிழியாற் றெரித்தான்கையு / ளங்கட்போது பிசைந்திடு கூற்றனான்.

சூளாமணி

தேசமிலேச்சரிற் சேர்வுடையாரவர் / மாசின் மனிதர் வடிவினராயினுங்
கூசின் மனத்தச் கொடுந்தொழில் வாழ்க்கையர் / நீசரவரையு நீரினிழிப்பாம்.

மத்திய ஆசியாகண்ட முழுவதும் ஆதியாகவிருந்தது மகடபாஷை என்னும் பாலிபாஷை ஒன்றேயாம். அதன்பின் சாக்கையச் சக்கிரவர்த்தித் திருமகனாகும் புத்தபிரானால் இயற்றியது சகடபாஷை என்னும் சமஸ்கிருதமும், திராவிடபாஷை என்னும் தமிழுமாகும்.

இத்தமிழ் பாஷையை புத்தபிரான் வடநாட்டில் இயற்றிய ஆதாரங் கொண்டு மகதநாட்டருகே தமிழுக்கென்னும் நாடு நாளதுவரையிலுள்ளதுமன்றி மகதநாட்டுள் தமிழர்ச் சேரியென்று வழங்கிவந்ததையும் உதயணன்காதையிற் காணலாம்.

மகடபாஷையாம் பாலியினின்றே பதிநெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது.

முன்கலை திவாகரம்

மகதங், கோசல, மராட்ங், கொங்கணஞ், சிந்து, சோனகந், திராவிட, சிங்களம், அங்கம், வங்கங், கலிங்கம், கெளசிகந் துளுவஞ், சரவகஞ், சிநங், கம்போஜ, மருணம், பப்பிர, பதிநெண்பாடையாம். இவற்றுள் ஆரியமென்னும் பாஷையேனும் சப்தமேனுந் தோன்றியது கிடையாது.

பாலிபாஷையாம் மகடத்தினிற்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாந் தமிழ் மொழிகள் பலபாஷைகளிலுங் கலப்புற்றிருக்கின்றது.

அவலோகிதராம் புத்தபிரானால் இயற்றி அகஸ்தியர் வசமளித்து தென்னாடெங்கும் மிக்க பரவியபடியால் தமிழை தென் மொழியென்றும்,

சாவகஞ் சகடமென வழங்கும் சமஸ்கிருத பாஷை வடநாட்டில் வழங்கிவந்தபடியால் வடமொழியென்றும் வழங்கலாயினர்.

தமிழ்பாஷையிலுள்ள உண்டி யென்னும் மங்கலபொருத்தத்தில் அமுதவெழுத்தென்றும், நஞ்செழுத்தென்றுமுள்ள அட்சரங்களின் ஆதாரங் கொண்டு,

அமுதவெழுத்தால் தமிழென்றும், தீராவிடமாகும் நஞ்செழுத்தால் திராவிடமென்றும் அப்பாஷைக்குப் பெயருண்டாயிற்று.

மற்றப்படி திராவிடபாஷையை ஒருவன் துரத்தியதுங்கிடையாது. அது ஓடியதுங்கிடையாது, அதற்குக்காரணசரித்திரமுங்கிடையாது.

ஆரியரென்னும் மிலேச்சர்களை திராவிடர்களென்னுந் தமிழர்கள் துரத்தப்பட்ட சரித்திரங்களை காவியங்களால் அறிந்துக்கொள்ளுவதுடன் நாளதுவரையில் துரத்தியடித்து சாணச்சட்டி உடைப்பதை அநுபவத்திலும் அறிந்துக்கொள்ளலாம்.

பண்டைகாலம் இத்தேசத்தில் பெரும்பாலும் வழங்கிவந்த பாலி பாஷையில் அரியவேத, அரியதன்ம, அரியகுண, அரியதேவனென்னுமொழிகள் வழங்கிவந்ததாக புத்தாகமங்களால் விளங்குகின்றதன்றி ஆரியரென்னு மொழி வழங்கியது கிடையாது.

பெளத்தசாஸ்திர கலை நூற்களாலும், பெளத்த அரசர்கள் சரித்திரங்களினாலும், நீதி நூற்களினாலும், அநுபவங்களினாலும், ஆரியர்களென்னும் மிலேச்சர்கள் இத்தேசத்துளிருந்ததாக விளங்குகிறதன்றி ஆரியர்களென்னும் சிறந்தோர்கள் இருந்ததாக் வேறாதாரமுங் கிடையாது.

சிலப்பதிகாரத்துள் இல்லாத சில ஆரியரென்னு மொழிகளை அதனுட் சேர்த்து அச்சிட்டிருக்கின்றார்கள். அத்தகைய மொழிகளை சேர்க்கையில்லா முன்னூற்களையும், சேர்த்துள்ள பின்னூற்களையும் விசாரிணை வருங்கால் விளக்கக் கார்த்திருக்கின்றோம்.

ஈதன்றி தற்கால சரித்திரக்காரர்கள் எழுதுவது யாதெனில்:-

கர்னல் சைக்ஸ் என்னும் சரித்திரக்காரர் சீனர்களுடைய (ரிகார்ட்டுகளை) ஆதாரமாகக்கொண்டு பௌத்தர்களுடைய தருமங்களுக்கு முன்பு பிராமணர்களுடைய சரித்திரங்கள் யாதொன்றுங் கிடையாதென வரைந்திருக்கின்றார்.

பிஷப்மினுயஸ் என்பவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் யாத்திரையாக வந்தகாலத்தில் இந்தியாவெங்கும் புத்ததர்மம் பரவியிருந்ததாகக் கூறுகின்றாரன்றி இந்த பிராமணர்கள் கூட்டமேனும் இவர்கள் சரித்திரங்களேனும் இருந்ததாகக் கூறவில்லை.

சீன யாத்திரைக்காரராகும் பாஹியான் என்பவர் இந்தியாவில் வந்து புத்தருடைய தன்மங்கள் யாவையும் பாலிபாஷையிலேயே எழுதிக் கொண்டு போயதாக கர்னல் ஸைக்ஸ் என்னுஞ் சரித்திரக்காரர் கூறுகின்றார். (Buddhism, Page 493.)

உலக சீர்திருத்தத்திற்கு உழைத்தவர்களின் அஸ்திகளின் பேரில் கட்டிடங்கள் கட்டியிருப்பது பழையத் தோப்புகளில் காணப்படுகிறதன்றி பிராமண குருக்களைப் பற்றியேனும், அவர்கள் சரித்திரங்களைப்பற்றியேனும் ஒன்றும் அகப்படவில்லை. (Buddhist India, Page 82.)

புத்தர்காலத்தில் ஜாதி உண்டென்று பேசுவது அதேகாலத்தில் இடலி அல்லது கிரீஸில் ஜாதி இருந்ததென்பதை ஒக்கும். ஜாதி என்பதற்கே பதமும் வார்த்தையுங் கிடையாது. (Buddhist India, Page 62.)

இத்தகைய சரித்திர ஆதாரங்களால் புத்தபிரானுக்கு முன்பு ஆரியர்களேனும் பிராமணரென்று சொல்லித்திரியுங் கூட்டத்தோரேனும் அவர்களின் வேத உபநிஷத்துக்களேனும் அவர்கள் ஜாதிகளேனும் இருந்தது கிடையாது. ஆதாரங்கள் இன்னும் வேண்டுமேல் பின்னும் எழுதக் கார்த்திருக்கின்றோம்.

- 3:2; சூன் 23, 1909 -