அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்/005-006

இரண்டாம் பொழிவு
2. அறிவியல் நோக்கில் சமயம், தத்துவம்


“அறிவிலே தெளிவு நெஞ்சிவே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை அருளாய்!
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தளிப்பரம் பொருளே!”


“தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபவ காட்டஸ், கண்ணீர்த்
துளிவரஉள் உருக்குதல்இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்கள் அன்றோ?
ஒளிவளரும் தமிழ்வாணீ[1] அடியனேற்கு
இவையனைத்தும் உதவு வாயே!”[2]

- பாரதியார்

அறிஞர் பெருமக்களே!
மாணவச் செல்வங்களே!

இன்றைய பொழிவு ‘அறிவியல் நோக்கில் சமயம் தத்துவம்’ பற்றியது. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரையில் இதனை மனநிறைவு கொள்ளும்வரையில் ஆற்ற முயல்கின்றேன்.

சொற்பொழிவுத் தலைப்பில் நுழைவதற்கு முன்னர் ‘சமயம், தத்துவம்’ என்ற இரு சொற்களின் பொருளை நோக்குவோம்.



இவ்வுலகம் தோன்றிய நாள்தொட்டு மக்களிடையே ஏதோ ஒருமுறையில் சமய வளர்ச்சி நிலவி வருகின்றது. காலப்போக்கில் மக்களின் அறிவு முதிர்ச்சிக்கேற்ப இச்சமய வளர்ச்சியும் பல்வேறு திசைகளில் பல்வேறு கொள்கைகளுடன் கூடிய பல்வேறு பிரிவுகளாக விரிந்துவிட்டன. இங்ஙனம் பல்வேறு பிரிவுகளாக வளர்ந்த சமயம் ஏதோ ஒருமுறையில் மக்களின் உயிரோடும் உடலோடும் ஒன்றி நிற்கின்றது. பகலவனையும் கதிர்களையும் வெவ்வேறு வகையாகப் பிரித்தற்கியலாதது போலவே, சமயத்தையும் மக்களையும் தனித்தனியே பிரித்தற்கியலாது. அதனால் சமயம் என்பதற்கு நெறி, கொள்கை என்ற பெயர்களும் ஏற்படலாயின. மக்கள் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குடன் நடத்துவதற்கு அமைத்துக்கொண்ட நன்னெறிகளின் தொகுதியே சமயம் என்று வழங்கப்பெறுவதாகக் கொள்ளலாம்.

அடுத்து ‘தத்துவம்’ என்ற சொல்லின் பொருளை நோக்குவோம். தத் + துவம் = தத்துவம் என்றாகும். ‘தத்' என்ற வடசொல் 'அது' என்ற பொருள்படும்; ‘துவம்' என்பதற்குத் ‘தன்மை’ என்பது பொருளாகும். பிரபுத் தன்மை, சகோதரத்தன்மை என்னும் பொருளில் பிரபுத்துவம், சகோதரத்துவம் என்னும் சொற்கள் வழங்குதலைக் காணலாம். ‘துவம்’ என்னும் விகுதி பண்புப்பொருள் பயத்தலின், ‘தத்துவம்’ என்ற சொல் 'அதன் தன்மை’ எனப் பொருள்படும். ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் சமயந்தோறும் வேறு பொருளைக் குறிக்கும். ஆதலின், பொருள் தன்மைகளை ஆராய்ந்து மெய்ம்மையினை நிலை நாட்டும் அறிவுக்கலைக்குத் ‘தத்துவம்’ என்னும் குறியீடு வழங்கப்பட்டது என்று கொள்ளலே ஏற்புடையதாகும். இந்தச் சொல்லுக்கு இணையாய் மெய்ப்பொருள் (குறள்), சமயக் கணக்கு (மணிமேகலை) என்னும் குறியீடுகள் தமிழிலக்கியங்களில் பயின்று வருதலைக் காணலாம். வள்ளுவப் பெருந்தகையும்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள் - 335)

என்னும் தத்துவ ஞானந்தான் தலையாய அறிவு என்று சுட்டியிருத்தல் உளங்கொள்ளத்தக்கது. மெய்ப்பொருள் என்பது உள்பொருள் (Reality) எனவும் கொள்ளத்தகும். தத்துவ மேதைகளைச் ‘சமயக் கணக்கர்’ என்று சாத்தனாரும் (மணிமேகலை) கல்லாடனாரும் குறித்தனர். மணிமேகலை போதிசத்துவராகிய அறவண அடிகளிடம் அணுகி,

“அடிகள் மெய்ப்பொருள் அருளுக” (20 அடி 47)

என்று வேண்டுவதாய்க் குறிப்பிட்டிருத்தலைக் காணலாம். பெளத்த தருக்கமும் தத்துவமும் அறவண அடிகளால் அறச்செல்வர்க்குப் போதிக்கப்பெறுவதால் ‘மெய்ப்பொருள்’ என்பது, உண்மை காண்பதற்குக் கருவியாய்ப் பயன்படும் அளவை இலக்கணத்தையும், அளவைகளால் துருவிக் கண்ட உண்மைப் பொருளையும் உணர்த்துகின்றது எனக் கொள்ளலாம்.

இனி, இந்தப் பொழிவின் தொடக்கமாய் ஆதிமுதல் இன்று வரை அறிவியல் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சுருக்கமாய்க் கூறுவது பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன்.


1. அறிவியல் தோற்றமும் வளர்ச்சியும்

நினைப்பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னதாகவே - இலக்கியச்சுவையுடன் சொன்னால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்பாகவே - மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்திலேயே, வியப்பு அச்சம் காரணமாய் கண்காணா ஏதோ ஓர் இயற்கைச் சக்தியின்மீது வழிபாடு நடைபெற்று வந்துள்ளதாய் அறிகின்றோம். உயிரினங்கள் இவ்வுலகில் தோன்றிப் படிப்படியாய் வளர்ந்த பாங்கின் இறுதிக் கட்டமாய்த் தோன்றியது மனித இனம் என்பது தொல்லாசிரியர்களின் முடிந்த முடிபாகும். தொடக்க கால மனிதனின் வாழ்க்கை, விலங்கு வாழ்க்கைபோல் அமைந்திருந்தது. படிப்படியாய்க் கூட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இந்த வாழ்க்கையின் அநுபவத்தால், வளர்ச்சியின் முதிர்வால், சமுதாயக் கோட்பாடுகளை அமைத்துக்கொண்டு வாழத் தொடங்கினான். இந்த உலகப் பொருள்களுக்கும் உயிர்ப்பொருள்களுக்கும் தானே தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன் வசதிக்காகப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான்.

கற்காலத்திலிருந்தே மனித மூதாதையர்கள் உலகம், ஆன்மா, கடவுள் என்ற முப்பொருள்களால் தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்கள் அமைவதாய் எண்ணினர்; அநுபவத்தால் உணர்ந்தனர். இவற்றைப் பற்றிய உண்மைகளைத் தேடவும் முற்பட்டனர். இவற்றுள் உலகம்பற்றிய அறிவே அறிவியலாகவும், ஏனைய ஆன்மா, கடவுள் ஆகிய இரண்டும் சமயம், தத்துவங்களாகவும் கருதப்பெறுகின்றன.

உலகம் என்பது நாம் வாழும் பூமியை மட்டிலும் குறிக்காது. இந்த அண்டசராசரங்களையே குறிக்கும். அண்டங்கள் யாவும் அடங்கிய அகிலத்தைக் (Universe) குறிக்கும். தொடக்க காலத்தில் இந்த அகிலத்தைப் பற்றிய தவறான கருத்துகளே மனிதர்களிடம் இருந்தன. சந்திரன், சூரியன், நெருப்பு இவற்றைக் கடவுள்களாகக் கருதி வழிபட்டனர். கி. மு. 6ஆம் ஆண்டுமுதல் இத்தகைய நம்பிக்கைகளைத் தவிர்த்துப் பகுத்தறிவு முறையில் அறிஞர் சிந்திக்கத் தொடங்கினர். இதுவே அறிவியலின் தொடக்கம். ஆயினும், அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத சிந்தனை ஞானமும் தொழில் நுட்பத்திறனும் ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தன என்பதை அறிய முடிகின்றது. இந்த ஞானம் பொதுவாய் அநுபவ அறிவாகவும், மூடநம்பிக்கைகள் கலந்தும் தெளிவற்றுத் திகழ்ந்தது.

நீண்ட காலமாய்த் தனிமையாய் வாழ்ந்த மனிதன் நாளடைவில் சமுதாயமாய் வாழக் கற்றுக்கொண்டான். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதனே இறுதியாய்த் தோன்றியவன். சமுதாய வாழ்வில் அதன் வளர்ச்சியின் முதிர்ச்சியில் சமுதாயக் கோட்பாடுகளை வகுத்துக்கொண்டவன். இவ்வுலகப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் தானே தலைவன் என்பதையும், அவற்றை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் தன்னிடம் மட்டிலுமே உள்ளது என்பதையும் அறிந்து தெளிந்தான்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளாய் இருந்த உண்ணும் உணவு, ஒண்டும் உறையுள், சூழ்நிலையின் தட்பவெப்ப நிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உடை ஆகியவற்றைத் தக்க முறையில் அமைத்துக்கொண்டு வாழ்ந்தான். மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும் இவ்வுலக இயற்கைப் பொருள்களைச் சார்ந்து வாழ்ந்தான்.

அவற்றிடமிருந்து கிடைக்கும் பொருள்களைத் தனது அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டான். இயற்கைப் பொருள்கள் இல்லையேல் தனது வாழ்வும் இல்லை என்ற உண்மையை நன்கு உணர்ந்தான். ஒப்புரவுடன் வாழ்ந்த சமுதாய உணர்வால் உணவுப் பொருள்களை அவர்களது அன்றாடத் தேவைக்கு அதிகமாகவே இயற்கையிலிருந்து சேகரித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடிந்தது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குச் சிந்திக்கவும் அறிவின் அடிப்படையில் செயற்படவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திய முறைகளைச் சில தலைப்புகளாகப் பகுத்துக்கொண்டு விளக்க நினைக்கின்றேன். இங்ஙனம் பகுப்பு முறைகளாய் அவை வளர்ந்தன என்று நினைப்பது தவறு. அவை ஒட்டுமொத்தமாகவே வளர்ந்தன என்பதுதான் உண்மை. வசதிக்காக அவை தனித்தனியாகப் பிரித்துப் பேசப்பெறுகின்றன. தவிர, இவை யாவும் உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டிலும் வளர்ச்சியுற்றன என்று கருதுதலும் தவறு. பல பகுதிகளில் வளர்ந்தன என்பதுதான் உண்மை. அவற்றைத் தொகுத்து உங்கள் முன் வைக்கின்றேன். (i) வேளாண்மை : உயிர் வாழ உணவு முக்கியமானது. இயற்கையில் கிடைத்த உணவு போக, சில பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்து நிலத்தை உழவு செய்து பயிர்களை வளர்த்து உணவுப்பொருள்களைப் பெருக்கித் தன் அன்றாட வாழ்க்கையைச் சீர்செய்துகொண்டான். ஓட்ஸ், மரவள்ளி என்ற கிழங்குவகை, பீன்ஸ் என்ற துவரை வகை இவற்றில் முதன் முதலாக அவன் கவனம் சென்றதாய் அறியக் கிடக்கின்றது. பின்னர் நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் உற்பத்தியில் கவனம் சென்றிருத்தல் வேண்டும். இரும்பு கண்டறிந்த பிறகு கொளு முதலியவற்றைக் கொண்டு கலப்பை(ஏர்)யைச் சீர் செய்யக் கற்றுக் கொண்டதையும் களைக்கொட்டு, மண்வெட்டி முதலிய கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதையும் அறிய முடிகின்றது. இம்முயற்சி டிராக்டர் கண்டறியும்வரை கொண்டு செலுத்தியுள்ளது. தொடக்கத்தில் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளைத் தன் குடும்ப நண்பனாக்கிக்கொண்டு அவற்றை வேளாண்மைக்குப் பயன்படுத்திக்கொண்டான்.



(2) உறையுள் : மரநிழல்களிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் நாளடைவில், கோரை, தென்னங்கீற்று ஆகியவற்றால் குடிசை போட்டு வாழக் கற்றுக்கொண்டான். மண்ணாலும் கற்களாலும் சுவர் எழுப்பிக் கட்டடங்களைக் கட்டும் முறை, சூரிய வெப்பத்தாலும் நெருப்பாலும் சுடுமண் (செங்கல்) தயாரிக்கும் முறை வளர்ந்தது. சுண்ணாம்பு மணலைச் சேர்த்துக் காரை கண்டறியப்பெற்று கட்டடத்திற்குப் பயன்படுத்தப் பெற்றது. நாளடைவில் சீமைக்காரை (Cement) கண்டறியப் பெற்றது. கிடைப்படங்கள் வரைந்து, திட்டமிட்டு, கட்டடங்கள் எழுப்பும் முறை வளர்ந்து இன்று வானளாவும் பல்லடுக்கு மாளிகைகள் கட்டுவதுவரையான நாகரிகம் வளர்ந்துவிட்டது. கட்டடக்கலை ஒரு தனிப்பட்ட கலையாகவும் வளர்ந்துவிட்டது. பண்டைக் காலம்முதல் பறவைகள் ஒரே விதமாய்க் கூடுகள் கட்டிக்கொண்டிருக்க விலங்குகள் ஒன்றும் செய்யாமலிருக்க மனிதனின் கட்டடக் கலை வளர்ச்சி நம்மை வியக்க வைக்கின்றது.

(3) உடை : தழையாடையை அணிந்து வந்த மனிதன் தட்பவெப்ப நிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்தான். சணல், கற்றாழை, சணப்பை, பருத்தி முதலியவற்றை விளைவித்து, நார் அல்லது நூல் உண்டாக்கி, ஆடை நெய்யக் கற்றுக்கொண்டான். இதற்கு முன்னர், கோரை, ஈந்து முதலியவற்றுள் பாய் முடையக் கற்றுக்கொண்டான். பனை ஓலையைக்கொண்டு தடுக்கு முதலியவற்றை அமைக்கும் முறையை அறிந்தான். இப்போது நான் இச்செய்திகளைச் சொல்லச் சில மணித்துளிகள்தாம் ஆயின. ஆயினும், இச்செயல்கள் படிப்படியாய் நிகழ, அதற்கு முன்னர் செய்து பார்க்க எத்தனையோ ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

(4) பாதுகாப்பு : கொடிய மிருகங்களிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேட்டையாடுவதற்குப் பயன்படும்பொருட்டும் சில ஆயுதங்களைச் செய்யவும் அவன் கற்றுக்கொண்டான்; கற்களால் ஆன ஆயுதங்கள், வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டான்.

(5) அணிகள் : சிறு கற்களையும், எலும்பு, மரம் முதலிய பொருள்களைக்கொண்டு செய்த அணிகள், கைவிளக்குகள், தந்தத்தில் ஊசி செய்தல் போன்ற கைவினைப் பொருள்களைச் செய்யும் கைத்திறனை வளர்த்துக்கொண்டான். கைவினைத் திறனின் அடிப்படையில் தொழில் நுட்ப அறிவு வளர்ந்திருக்க வேண்டும்.

(6) உயிரியல், மருத்துவம் : உடற்கூறுபற்றிய கருத்து தெளிவாய் இல்லையாயினும் உடலைப்பற்றிய சிறிய அநுபவ அறிவு இருந்தது. உணவு செரிமானம் இல்லாதபோது பட்டினி போடுதல், சில வகை கஷாயம் தயாரித்து அருந்துதல், இலேகியம் முதலிய சத்துப்பொருள் செய்து உண்ணல், சூர்ணம் போன்ற பொடி செய்தல் முதலிய முறைகள் தோன்றின. நம் நாட்டு மருத்துவ முறைகளாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி முறை ஆகியவை யாவும் அநுபஅறிவின் அடிப்படையில் தொகுக்கப்பெற்ற முறைகளாகும். காலப்போக்கில் சில நோய் உயிர் அணுக்கள்தாம் (Bacteria) நோய்களுக்கும் காரணம் என்பது தெளிவாய் அறியப்பெற்றது. இன்று தொற்று நோயைத் தோற்றுவிக்கும் நச்சுக் கிருமிகள் (Virus) தாம் பல்வேறு நோய்கட்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். உயிரியல் துறையின் வளர்ச்சியால் மருத்துவத்துறையில் மேலும் வளர்ச்சி காணப்பெற்றது.

(7) தொழிலியல் : ஆதியில் எல்லாப் பொருள்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை என்று மனிதன் கருதினான். காலப்போக்கில் அவன் கைவினைப்பொருள்களைப் படைத்துப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினான். வில், அம்பு போன்ற சில ஆயுதங்கள், சிலவகை அணிகள் செய்யத் தெரிந்து அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். காகிதம் செய்தல், மரத்தாலாய ஏர் முனையில் பொருத்தும் இரும்பினாலாய கொளு செய்தல், எண்ணெயில் எரியும் விளக்குகள் செய்தல், அச்சிடும் முறை, நெருப்பினாலும் பகலவன் வெப்பத்தாலும் சுடுமண் (செங்கல்) செய்தல், சாயம் தயாரிக்கும் முறை, ஓவியம் வரைதல், மண்பாண்டங்கள் செய்தல், தந்தத்தில் ஊசி செய்தல், பாய் முடைதல், துணி நெய்தல், கோணி நெய்தல், நாணயம் செய்தல் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டிருந்தான். இந்த அறிவியல் அறிவுக்கான அடிச்சுவடுகள் மொகஞ்சதாரா, ஹரப்பா என்ற இந்திய நாகரிகத்திலும், தென் அமெரிக்காவில் உள்ள மாயா, மத்திய ஆசியா போன்ற இடங்களில் கண்டறியப்பெற்ற நாகரிகங்களால் அறியக் கிடக்கின்றன. நம் நாட்டுத் திருமறைக்கால

நாகரிகத்திலும், சிந்து வெளி நாகரிகத்திலும் இத்தகைய அடிச்சுவடுகள் காணப்பெறுகின்றன.

அசோகர் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) இரும்பை உருக்கும் தொழில் வளர்ந்திருந்தது. இன்றும், அவர் அமைத்த ‘அசோகர் தூண்’ நிலைத்து, சான்று பகர்வதாய் உள்ளது.

தொழில் நுட்பத்தைக் கூற வேண்டுமானால் அச்சிடும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். உலக வரைபடங்கள், காலங்காட்டிகள் (Clocks), அகலம், நீளம், உயரம் போன்ற அளவை முறைகளும், கடலின் ஆழத்தை அளக்கும் பாதம் (= 6 அடி) அளவுகளும், எடை முதலியவற்றைத் துல்லியமாய் அளக்கும் முறைகளும் பையப் பைய வளர்ந்தன.

(8) கணிதம் : மனிதர்கள் எண்ணும் முறையில் முதன் முதலாய் மணிகளைப் பயன்படுத்தக் கற்றனர். தமிழர்கள் க, உ, ங, ச, ரு, சர, எ, அ, கூ, ய (க)

என்ற எண் முறைகளைப் பயன்படுத்தினர். நாளடைவில், கணிதத்தில் 1, 2, 3, 4...... 10 என்ற அரேபிய எண்களைப் பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. நம் நாடுதான் சூனியக் குறியீடு (சுழி) கண்ட பெருமையைப் பெற்றதாய் வரலாறு குறிக்கின்றது. பாபிலோனியாவில் இயற்கணிதம் (Algebra) தோன்றியதாய் வரலாறு உண்டு. உறையுள் அமைத்துக்கொண்ட காலத்திலேயே வடிவ கணிதத்திற்கு (Geometry) வித்திட்டுவிட்டதாய்க் கருதலாம். தொடர்ந்து கோண கணிதமும் (Trigonometry) தோன்றலாயிற்று. எண்ணிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடும் முறை வளர்ந்த காலத்தில் பின்னக்கணக்கும் தோன்றியது. நம் நாட்டு ‘எண் சுவடி’ என்ற நூலில் பின்னக் கணக்கில் முந்திரி அரைக்காணி போன்ற கணக்கிடும் முறைகள் இருந்தன என்பதை அறிகின்றோம்.

பிற்காலத்தில் கூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (x), வகுத்தல் (+) குறிகளும் பிற பல குறியீடுகளும் வழக்கத்திற்கு வரலாயின; இவை கணித வளர்ச்சிக்கு அடிப்படைகளாயின. தொலைநோக்கி, நுண்நோக்கி போன்ற கருவிகள் புனையப்பெற்று வானியல், உயிரியல் போன்ற துறைகளின் வளர்ச்சியை ஓங்கச்செய்தன. உரோமன் எண்கள், இந்திய அரேபிய எண்கள் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. இக்கால கட்டத்தில் இந்திய நாட்டின் பங்காய் அறிவியல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதொன்றுமில்லை. (9) வானியல் : சூரியன், சந்திரன் முதலிய கோள்களின் இயக்க அடிப்படையில் காலத்தைக் கணக்கிடும் முறை தோன்றியது. காலத்தை ஆண்டு, மாதம், வாரம், நாள் என்ற அடிப்படையில் பஞ்சாங்கம் {Almunac) எழுதும் முறை முகிழ்ந்தது. பல நட்சத்திரங்களையும் கணிக்கும் முறை அரும்பியது. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றைக் கணிக்கும் முறையையும் (இதுவே பஞ்சாங்கம் எனப்படுவது), கிரகணங்களைக் குறிக்கும் முறையையும் அறியத் தொடங்கினர். இக்காலத்தில்தான் சிலர் மூடப்பழக்கங்களாய்க் கருதும் இராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியவற்றையும் கணக்கிட்டனர். அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம் முதலியவற்றையும் குறித்தனர். இவையெல்லாம் சேர்ந்து சோதிடச் சாத்திரமாய் வளர்ந்தது. சோதிடக்கலையிலிருந்து தான் வானியல் (Astronomy) தனி இயலாய் வளர்ந்தோங்கியது. தாலமி (Ptolemy), கலிலியோ, காப்பர்னிகஸ் போன்றார். இதன் வளர்ச்சியில் பங்கு பெற்றனர். இனி, தனியாக சேய்போல் வளர் நிலையிலும் தாயாகிய சோதிடக்கலை இன்றளவும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் தனித்தன்மையுடன் திகழ்கின்றது.

(10) அறிவியல் : கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் அணுக் கொள்கைபற்றிய பேச்சு எழுந்தது. ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டே போனால், பிரிக்க முடியாது நிற்கும் பொருளே அடிப்படை, அதற்கு அணு என்று பெயரிட்டனர். அந்த அணுவால் ஆனதுவே இந்த உலகம்; இந்த அகிலமும் அப்படியே. பூக்களைச் சேர்த்தால் பூமாலையாதல் போல, அணுக்களைச் சேர்த்தால் அண்டமாகிறது. பலபல வடிவமான பூக்கள் பலபல வடிவமான மாலையாவது போல, பலபல விதமாய் அணுக்களும் பலபல வடிவமான உலகப் பொருள்களாகின்றன என்று வேறு சிலர் கூறி வந்தனர். இதுதான் அணுவாதம், ஆரம்பவாதம். பழங்காலத்ததாகிய சமண மதம் பேசியதும் இந்த அணுக்கொள்கையைத்தான். மணிமேகலை என்ற நூலில்,

“எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்புஇல் அறிவன் இறைநூற் பொருள்கள் ஐந்து
உரம்தரு உயிரொடு, ஒருநூல் வகைஅணு
அவ்வணு உற்றும், கண்டும் உணர்ந்திட
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்;

நிலம்நீர் தீகாற்று எனநால் வகையின
மலைமாம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்;
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்:
அவ்வகை அறிவது உயிர்எனப் படுமே”3.[3]

என ஆசீவகவாதி4[4] தன் சமயத்தை எடுத்துரைப்பதைக் காணலாம். நியாயமதம், வைசேடிகமதம் என்பனவும் இதனையே பேசின. அணுக்கொள்கையை வற்புறுத்தியதன் பயனாய் வைசேடிக மதத் தலைவரான கணாதருக்கு ‘அணு விழுங்கியார்’ என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. சமணர்கள் நான்கு பூதக் கொள்கையை வற்புறுத்தியது போல, மேலை நாட்டினரான அரிஸ்டாட்டிலும் (Aristotie) இதே கொள்கையை வற்புறுத்தினார். அவர் பேயாய்ப் பிடித்து எல்லோரையும் ஆட்டி வந்தார் எனலாம். அவர் கீறிய கோட்டிற்கு அப்பால் எவரும் தாண்டக்கூடாது. அப்படித் தாண்டினால், தாண்டினவர் தலை வெடித்துப்போகும் என்று அஞ்சினர். அவர் காலத்தில் நிக்கலஸ் (Nicholus) என்பவரும் அணுவாதம் பேசினார். அதைக் கேட்பார் யார்? எவரும் இலர். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் அல்லவா? அரிஸ்டாட்டில் வழிவழி வந்தவர்களின் பேச்செல்லாம் ஒரே பேச்சுதான். அடுப்பங்கரைவரையில் அரிஸ்டாட்டிலின் கொள்கை உண்மையாய் நிலவுவதைக் காணலாம் என்றனர். பச்சை விறகு எரியும்போது எவற்றைக் காண்கின்றோம். அவர் கூறிய நான்கு பூதங்களையும் காணலாம்.

(i) நெருப்பு சுடர்விட்டு எரிவதைக் காணும்போது புகை

காற்றாய் மேல் எரிவது தெரிகிறது.

(ii) ஆறு கடலில் கலப்பது போலப் புகை காற்றில் போய்க் கலக்கின்றது.

(iii) சிடுசிடு என நீர் ஆவியாய் மாறுவதனைக் கண்டும்

கேட்டும் வருகின்றோம்.

(iv) மிகுதி நிற்கும் சாம்பல் அங்கு மண் இருப்பதனைக் காட்டுகின்றது.5[5]

மேலைநாட்டில் அணுக்கொள்கையை முதன்முதலாய் எடுத்துக்கூறியவர் டெமாக்டரிடஸ் (Democritus) என்பவரே. இவரே மேலை நாட்டு அணுக்கொள்கையின் தந்தையுமாவார். இவருடைய கொள்கையினை டிண்டால் (Tyndall) என்பார் அடியிற்கண்டவாறு சுருக்கிக் கூறுகின்றார்.

(i) இல்லது வாராது; உள்ளது போகாது. அணுத்திரளைகள் (Molecules) கூடியும் பிரிந்தும் வரும் மாறுதலை உள்ளது. வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை. கீழும் இல்லை.

(ii) காரணம் இன்றி ஒன்றும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் உண்டு. அந்தக் காரணத்திலிருந்து அது நியதியாய் விளைகின்றது.

(iii)உள்பொருள் எல்லாம் இரண்டேயாம். ஒன்று, அணு; இரண்டு, வெட்டவெளி. மற்றவையெல்லாம் கருத்துப் பொருளேயாகும்.

(iv) அணுக்களோ எண்ணற்றவை. அவற்றின் வகைகளும் எண்ணற்றவையே. அவை ஒன்றையொன்று தாக்கும். அப்போது எழுகின்ற பக்கவாட்டு இயக்கமும் (Lateral movement) சுழற்சிகளுமே அண்டங்களின் பிறப்பாகும்.

(v) உலகத்துப் பொருள்கள் பலவகையாய் இருப்பது எதனாலே? அவற்றின் அணுக்கள் பலபல வகையாம். எண்ணிக்கையும் பலபலவாம். அளவிலும் பலபல வகையாம். கூட்டுறவு அமைப்பிலும் பலபலவாம். இதனாலேயே பொருள்களும் பலவாகின்றன.

(v) ஆன்மா தீ அணுப்போன்றது. அதுபோல, இதுவும் நுண்ணியது. இழுமென ஒழுகுமாறு வழுவழுப்பாய் அமைவது. முழுவடிவாம் வடிவினது. எல்லா அணுக்களிலும் இதுவே இயக்கம் மிக்கதாம். இஃது உடல் முழுவதும் உள்ளும் புறமும் எள்ளுக்குள் எண்ணெய்போல் இடையீடு இன்றிப் பரவி நிற்கின்றது. இதன் இயக்கத்தின் வழியே உயிர் வாழ்க்கை என்னும் காட்சி புலப்பட்டுத் தோன்றுகின்றது.


(11) போக்குவரத்து முறைகள் : இந்த நாகரிக வளர்ச்சியில் போக்குவரத்து முறையிலும் சிந்தனையைச் செலுத்தினான், மனிதன். சக்கரங்களைக்கொண்ட வண்டிகள் அமைக்கும் முறையைக் கண்டான். மாடுகளையோ குதிரைகளையோ பூட்டித் தான் ஏறிச் செல்லவும், பொருள்களை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குக் கடத்திச் செல்லவும் பயன்பட்டன. இந்த வண்டிகள் தரைவழிப் பயணத்திற்குப் பயன்பட்டவை. தோணிகள், கப்பல்கள் ஆகியன செய்து கடல் பயணத்திற்கும் வழிவகுத்த பெருமை நம் மூதாதையருக்கு உண்டு. நாணயங்கள் தங்காது ஓடிக்கொண்டிருப்பனவாதலால் அவற்றிற்கு வட்டவடிவம் அமைத்தனர் போலும்.

கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டர் படையெடுப்பால் மேலை நாட்டிற்கும் கீழை நாட்டிற்கும் தரைவழிப் பயணத் தொடர்பு ஏற்பட்டது. கிரேக்க, மேற்கு ஆசிய நாடுகளுடன் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிக காலத்திலேயே தரைவழித் தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தரை வழியாய் ஐரோப்பாவிலிருந்து சீனாவிற்குச் செல்லும் பட்டு வழி (Silk route) ஏற்பட்டதாய் அறிகின்றோம். ஐரோப்பியர் கப்பலில் உலகைச் சுற்றிய காலத்தில் கடல்வழித் தொடர்பும் ஏற்பட்டது. கொலம்பஸ் (Columbus) மேற்கிந்தியத் தீவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்றமை, வாஸ்கோடாகாமா (vascoda Coma) இந்தியாவிற்குப் போந்தமை போன்ற நிகழ்ச்சிகளால் கடல்வழித் தொடர்பு உறுதிப்பட்டது. இதனால் மேலை சீன நாடுகளுடன் இந்தியத் தத்துவக் கருத்துகளிலும், அறிவியல், கைவினை ஞானங்களிலும் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் தோன்றி வளர்ந்தன.

(12) அறிவியல் வளர்ச்சி : கடவுள், ஆன்மா, உலகம் என்ற முப்பொருள் ஆராய்ச்சிகளுள் மேலை நாட்டினர் உலகம்பற்றிய ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால் அறிவியல் அங்கு அதிகமாய் வளர வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலை நாடுகளில் தொடக்கத்தில் அறிவியலைப் போற்றி வளர்த்த பெரியார்களாய் தேல்ஸ் (துருக்கி), பித்தகோரஸ் (கணிதம்), அனெக்சினேஸ், அனெக்சி மேண்டர், எம்பிடோக்கின்ஸ் (கிரேக்கம்), ஃபில்லிலோனஸ் (வானியல்), மோக்கிராட்ஸ் (அணுக்கொள்கை), பிளேட்டோ, சாக்கிரடிஸ், ஹிப்போகிராட்ஸ், தியோஃபிஸ்டஸ் (உயிரியல்) என்போர் குறிப்பிடத்தக்கவர்களாய்த் திகழ்ந்தனர். அலெக்சாண்டர் நம் நாட்டின்மீது படையெடுத்து வந்து, வெற்றியுடன் தம் நாடு திரும்பியபோது, இந்தியத் தாவர விலங்கினங்களைக் கொண்டுசென்று தம் ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் உயிரியல் ஆய்விற்கு வழங்கியதாய் வரலாறு உண்டு. மேற்காசிய கிரேக்க நாடுகளில் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் தோன்றின. தத்துவச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அரங்குகளும் அமைக்கப்பெற்று அவற்றின் மூலம் உலகப் பொருள்கள் ஆராயப்பெற்றன. கிறித்துநாதர் மரித்த பிறகு ஒவ்வொரு கிறித்து தேவாலயமும் ஒரு பள்ளியை நடத்தும் பணியில் ஈடுபட்டது. இதனால் கல்வி பரவத் தொடங்கியது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகமும் பிரான்சு நாட்டில் பாரிஸ் பல்கலைக் கழகமும் நிறுவப்பெற்றன. காலப்போக்கில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பல்கலைக் கழகங்கள் அமைந்து அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாய்த் திகழ்ந்தன.

நாளடைவில் கணிதம் மேலும் வளர்ந்தது. வானியல்பற்றிய கருத்துகள் தொகுத்த தாலமி (Ptolemy) பற்றிய சிந்தனைகளும் அணுக்கொள்கையும் வளர்ச்சி பெற்றன. காலக்கணக்கீடு செய்யும் முறையிலும் நாட்குறிப்புக்கான தேதிகளை அறுதியிடுவதிலும் முன்னேற்றங்கள் காணப்பெற்றன. எரிமலைகள் இறைவனின் சீற்றத்தால் வெடிப்பவை என்ற நம்பிக்கையிலிருந்து விடுபட்டு முறையான விளக்கம் தரப்பெற்றது. வேதியியல், இரசவாதம் (Alchemy) என்ற மாயக்கிரியை என்ற நம்பிக்கையிலிருந்து மீண்டு சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக்கூடிய வேதியியல் துறையாய் மாறியது. வானியல், மருத்துவம் மேலும் வளர்ச்சி பெற்றன.

கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவியல் வளர்ச்சியில் ஒரு புதிய போக்கு நேரிட்டது. கிரேக்க, அரேபிய அறிவியல் நூல்கள் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பெற்றன. ஒரு காலத்தில் கிறித்தவ சமயம் அறிவியல் போக்கை எதிர்த்துப் போர்க்கொடி காட்டிக்கொண்டிருந்தது. அறிவியல் வரலாற்றில் கண்ட சான்று ஒன்றால் இதனை அறியலாம். ஒரு சமயம், குதிரைக்குப் பல் எத்தனை என்ற வினா எழுந்ததாம். ஒரு சிந்தனையாளன் ஒரு குதிரையைப் பிடித்து எண்ணிக் கணக்கிடலாமே என்றானாம். அப்படிச் செய்யக்கூடாது, நூலகத்திலுள்ள அறிஞர் நூல்களிலிருந்து தேடிப் பெற வேண்டும் என்று சமய குருமார்கள் கூறி, அந்தச் சிந்தனையாளனுக்குத் தண்டனையும் விதித்தனராம். காலப்போக்கில் சமயப் பெரியார்கள் அறிவியலின் தாக்கத்திற்குச் சமயம் ஏற்ற முறையில் அமைய வேண்டும் என்ற கருத்திற்கு இசைந்து அப்போக்கினை ஏற்றுக்கொள்ளலாயினர்.

14-15ஆம் நூற்றாண்டுகளில் உயிரியல் வளர்ச்சியில் பல புதிய அணுகு முறைகள் தோன்றலாயின. மருத்துவம் வியத்தகு முறையில் வளர்ந்தது. மூலிகைகள் மருந்துப் பொருள்களாயின. கஞ்சா, அபினி, கந்தகம். பாதரசம், அமிலங்கள் போன்ற வேதியியற் பொருள்கள் மருத்துவ முறையில் இடம் பெற்றன.

சீனாவில் அறிவியல் அறிவு மேலை நாடுகளுக்கும் மேலானதாய் ஓங்கி நின்றது. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மற்றெல்லா நாடுகளை விடச் சீன அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் காகிதம் செய்யும் முறையைக் கண்டறிந்த நாடு இதுவே. காந்தம்பற்றிய விளக்கத்தை அறிந்திருந்தனர். வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்களே. நான் தொடக்க நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில் (1921-29) சீன வெடி புகழ் பெற்றிருந்தது. இன்று அந்தப் புகழைச் சிவகாசி வெடி ஏற்றுக் கொண்டுவிட்டது. சீன நாகரிகம் இயந்திர இயக்கம்பற்றிய பல கோட்பாடுகளை அறிந்திருந்தது. சீனர்களின் வானியல் அறிவு வியக்கத்தக்க முறையில் அமைந்திருந்தது. மனிதன் அறிவியலைக் கொண்டு இயற்கையை ஆட்சி புரியலாம் என்ற கருத்தைக் கொண்டவர்கள் அல்லராதலால், அவர்களது கருத்துகள் மலடாகவே நின்றுவிட்டன. சோதனை செய்து பார்க்கும் அறிவியல் அணுகு முறையையும் தொழில் மயமாக்கும் முயற்சியையும் மேற்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தில் பின்தங்கியவர்களாயினர்.

(13) அறிவியல் மறுமலர்ச்சி : 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 200 ஆண்டுகாலம் (கி.பி.1450-1650) அறிவியல் மறுமலர்ச்சிக் காலமாய்த் திகழ்ந்தது. சோதனை மூலம் அறிவியல் உண்மைகளை அறுதியிடும் அணுகுமுறை பொதுவாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. கிறித்தவ சமயத்தில் புராட்டஸ்டண்டு பிரிவு தொடங்கப்பெற்றது. ஐரோப்பாவில் மேலும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பெற்று அவை யாவும் அறிவியல் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோல்களாய் அமைந்தன.

கலிலியோ பூமியைச் சுற்றிக் கதிரவன் வலம் வருவதான கருத்தினைக் கொண்டவர். பின்னர் வந்த காபர்நிக்கஸ் கதிரவனை மையமாய்க் கொண்டுதான் பூமி முதலிய கோள்கள் வலம் வருவதாய் நூல் ஒன்றையும் வெளியிட்டார் (கி.பி. 1543). வசாலியஸ் எழுதிய உடற்கூற்று நூலும் வெளிவந்தது. இவையிரண்டும் அறிவியல் மறுமலர்ச்சிக்குத் திருப்பு முனைகளாய் அமைந்தன. ஐரோப்பா முழுவதும் பல ‘அறிவியல் கழகங்கள்’ நிறுவப்பெற்றுப் பல அறிவியல் கருத்துகள் ஆராயப்பெற்றன. 

இதற்கு அடுத்த கட்டத்தில் (கி.பி. 1660 - 1735) அறிவியல் வளர்ச்சியில் பல சாதனைகள் படைக்கப்பெற்றன. நியூட்டனின் பொருள்களைப்பற்றிய விதிகள் ஏற்கப்பெற்று அரிஸ்டாட்டிலின் கருத்துகள் ஒதுக்கப்பெற்றன.

அறிவியல் அணுகுமுறைகளில் மேலும் வளம் சேர்ந்தது. இயற்பியலின் இயக்க விதிகள் (Laws of Motion), ஒளித்தன்மை, மின்ஆற்றல் முதலிய பல துறைகளில் முன்னேற்றம் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. நீராவி எந்திரங்கள் புனையப்பெற்று நடைமுறைக்கு வந்ததும் இக்காலத்தில்தான்.

19ஆம் நூற்றாண்டில் மின்னாற்றல், காந்தம் முதலியவை அறியப்பெற்று இயற்பியல்துறை முன்னேற்றம் கண்டது. உயிர்களின் கூர்தல் அறக்கொள்கை (Theory of Evolution) நிறுவப்பெற்றது. வேதியியல் துறையில் அங்கக வேதியியல் (Organic Chemistry) தனித்துறையாய்ப் பிரிந்து வளர்ந்தது. இதனால் உயிரினங்களின் வேதியியல் அமைப்பு தெளிவாயிற்று. உயிரியலில் உடல்கள் யாவும் செல்களால் (Cells) ஆனவை என்பதும், அத்தகைய செல்களைப்பற்றிய விளக்கங்களும் தெளிவாயின. வெப்ப ஆற்றல் பற்றிய உண்மைகள் தெளிவடைந்தன.

(14) அறிவியலும் வாழ்க்கையும் : 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அறிவியல், வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தொழில் புரட்சி ஏற்பட்டுத் தொழிற்சாலைகள் பெருகின. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் வளர்ந்தன. மின்னணுவியலில் (Electronics) பல முன்னேற்றங்கள் தொடர்ந்தன. தொலைபேசியால் பரந்துபட்ட நாடுகள் நெருங்கி வந்தன. விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பெற்றன. ‘சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்’6[6] என்ற பாரதியின் கூற்று அம்புலியில் மனிதன் இறங்கியதால் நனவாகிவிட்டது. மருத்துவத்தில் பல வியத்தகு முன்னேற்றங்கள், லேசர் போன்ற புதிய ஆற்றல் வாய்ந்த ஒளி அலைகளின் பயன் நடைமுறைக்கு வந்தன. இன்று கணிப்பொறி அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது.

2. சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, தீர விசாரிப்பது என்ற போக்கில் அறிவியல் தொடங்கி வளர்ந்து; நம்பிக்கையில் தோன்றி


வளர்ந்தது சமயம் என்பதை நாம் அறிவோம். உலகமெங்கும் வாழும் நம் மூதாதையர், மனிதகுலம் - உலகம், ஆன்மா, கடவுள் என்ற முப்பொருள்களைப்பற்றி ஆய்ந்தனர் என்றும், உலகம் பற்றிய ஆய்வை மேலைநாட்டார் அதிகமாய்ச் செய்து அறிவியலாய் உருவம் பெற்றது என்றும், நம் நாட்டார் ஆன்மா, இறைவன் என்ற இருபொருள்களை ஆய்ந்து சமயமாய் வளர்ந்தது என்றும் கருதலாம். ஆன்மா, இறைவன்பற்றிய எண்ணத் தெளிவுகளே சமயமாகவும் ஆன்மிகமாகவும் வளர்வதற்குக் காரணமாயின.

ஆன்மா, கடவுள் போன்ற கருத்துகள் மக்களின் வழிபாட்டு முறைகளோடு பிணைக்கப்பட்டு இருந்தன. அதனால் ஆன்மிகக் கருத்துகள் சமயங்களாய் மலர்ந்தன. ஆன்மிகத் தத்துவங்கள் என்பன ஆன்மா, இறைவன் என்ற இரு கருத்துகளையும் அளவை முறையில் (Logic) அமைத்த விளக்கங்கள் ஆகும். சமயங்கள் என்பன ஆன்மா, இறைவன் என்ற இரண்டையும் இணைத்து வழிபாட்டுச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும். (அஃதாவது தோத்திரங்களையும்) அமைத்துக்கொண்ட வாழ்க்கை முறைகளாகும். இவற்றை உற்று நோக்குங்கால், ஆன்மிக விளக்கங்கள் முற்றிலும் சமய விளக்கங்களில் அமைந்துவிட்டன என்று சொல்ல முடியாத நிலை உண்டாயிற்று. எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளியலாம்.

(1) பல்வேறு சமயங்கள் : நம் நாட்டுச் சமயங்கள் நடைமுறையில் பல கடவுள்களை (Polythesim) வழிபாட்டு முறையில் ஏற்றுக்கொண்டுள்ளன. சிவன், திருமால், முருகன், கலைமகள், திருமகள், விநாயகர் என்பவை இதற்கு எடுத்துக்காட்டுகள். ‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத கடவுளுக்கு ஆயிரம் திருநாமங்கள்’ ஏற்பட்டுள்ளன. ஆனால், நம் நாட்டு ஆன்மிகத் தத்துவங்கள் ஒன்றே கடவுள் (Monothesim) என்ற தெளிவு கொண்டவை. ‘ஒன்றே குலம்: ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் திருவாக்கு இதற்குச் சான்று. ஆன்மிகத் தத்துவங்கள் பல கடவுளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையினின்று வளர்ந்து, ஒரு கடவுள் என்ற நிலைக்கு மாறி இறுதியில் முதற்பொருள் ஒன்றே என்ற கருத்திற்கு வந்தவை.

“பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
        பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே;
        தத்து வமஸி; தத்வமஸி,7[7] நீயே அஃதாம்;


“பூமியிலே நீகடவுள் இல்லை யென்று
        புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை:
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கிச்
        சதாகாலம் ‘சிவாஹோ’ மென்று சாதிப் பாயே.”8[8]

என்று இக்கருத்தைப் பாரதியார் வலியுறுத்துவதைக் காணலாம். இதில் சர்வ சமய சமரசத்தையும், முழுமுதற்பொருள் ஒன்றே என்ற கருத்தையும் வலியுறுத்துவதையும் காணலாம். இக்கருத்துகளுக்கு இசைவாய்.

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்
        விளங்குபரம் பொருளே!நின் விளையாட் டெல்லாம்
மாறுபடும் கருத்தில்லை, முடிவில் மோன
        வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!”9[9]

என்ற தாயுமான அடிகளின் கருத்து அமைந்திருப்பதையும் கண்டு மகிழலாம்.

“மூர்த்திகள் மூன்று பொருள்ஒன்று - அந்த
மூலப் பொருள்ஒளியின் குன்று”10[10]

என்று அண்மையில் பாரதியார் கூட சொல்லிப் போந்தார். இங்ஙனம் அருளாளர்கள் முழுமுதற்பொருள் ஒன்றே என்ற கருத்திற்குக் கொண்டு செலுத்தினாலும், இந்திய சமயங்கள் இத்தகைய ஆன்மிகத் தத்துவக் கருத்துகளை இன்னும் தங்கள் வழிபாட்டு முறைகளிலும் ஏனைய சடங்குகளிலும் ஏற்று அதற்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்ளவில்லை என்ற நிலையைத்தான் காண்கின்றோம். சடங்குகளும் தோத்திரப் பாடல்களும் நமது வழிபாட்டுப் பண்பாடாய் வளர்ந்தோங்கியுள்ளன. ஆன்மிகத் தத்துவத் தாக்கங்கள் நமது சமய நெறிமுறைகளில் கணிசமாய்ப் பிரதிபலிக்கப்பெறாமல் இன்றும் இருந்து வருவதைத்தான் காண்கின்றோம். பல கடவுளர்களின் வழிபாடு பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காணப்பெறுகின்றது. ஆயினும், இறைவன் ஒருவனே என்ற கருத்து மக்களிடம் பரவலாய்க் காணப்பெறுகின்றது.


இந்தக் கருத்தினை அருளாசிரியர்களும் ஒரோவழி சுட்டியும் சென்றுள்ளனர்.

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிதாம் தெள்ளேணம் கொட்டாமோ?”
- திருவா. திருததெள்-1

என்று மணிவாசகப்பெருமான் சுட்டியுரைத்துள்ளதை நினைக்கின்றார்கள்.

“வணங்கும் துறைகள் பலபல
        ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
        ஆக்கி, அவை அவைதொறும்
அணங்கும் பலபல ஆக்கிநின்
        மூர்த்தி பரப்பி வைத்தாய்”
- திருவிரு.96

என்று நம்மாழ்வாரும் தெளிந்துரைப்பதையும் அவர்கள் நினைவு கூராமல் இல்லை. ஆயினும், அவர்தம் ஆசாபாசங்களையும் இன்பதுன்பங்களையும் ஆசை நிராசைகளையும் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒரு குறிப்பிட்ட உருவ வழிபாடு தேவைப்படுகின்றது. நம்பிக்கைக்கு ஏற்ப ஏதோ கடவுள் உருவகப்படுத்தப்பெறுகின்றார். பல்லாயிரக்கணக்கில் வழிபாட்டுத் தெய்வங்கள் அமைந்துவிடுகின்றன. கொள்கையளவில் யாவற்றிற்கும் அடிப்படை ஒரு பொருள் (Monotheism) ஏற்றுக்கொள்ளப்பெற்றாலும் நடைமுறையில் - வழக்கில் - பல கடவுள் முறை (Polytheism) பேணி வளர்க்கப் பெறுகின்றது; பயன்படுத்தவும் பெறுகின்றது. அதிகம் பேசுவானேன்? பல்லாண்டுகளாய்ச் சமயங்களையும் தத்துவங்களையும் ஆய்ந்தவன் அடியேன். ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற திருமூலர் கருத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டு தெளிந்தவன். எனினும், திருவேங்கடவன், பழநிமுருகன், விநாயகப் பெருமான் இவர்களிடம் கொண்டிருக்கும் பற்றினைக் கழற்றிவிட முடியவில்லை.

(2) சமயங்களின் ஒருமைப்பாடு : “எல்லாச் சாலைகளும் உரோமாபுரியை நோக்கிச் செல்லுகின்றன” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இதனை நம் நாட்டுப் பழமொழி, “ஆறுகள் யாவும் ஆழ்கடலை நோக்கிச் செல்லுகின்றன” என்று கூறும். இக்கருத்தைக் குலசேகரப் பெருமாளின்,

“தொக்கு இலங்கி யாறுஎல்லாம்
        பரந்து ஓடித் தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க
        மாட்டாத” (பெரு.திரு. 5 : 8)

என்ற வித்துவக்கோட்டு அம்மானின் பாசுரப் பகுதியில் கண்டு மகிழலாம். ‘சாலைகளும்’, ‘ஆறுகளும்’, ‘உரோமாபுரியும்’, ‘ஆழ்கடலும்’ குறியீடுகளாய் நின்று ஒரு பேருண்மையை உணர்த்துகின்றன. சமயங்கள் யாவும் ஆண்டவனை அடைய வழிகாட்டுகின்றன என்பதுதான் அந்தப் பேருண்மை. நாம் இருப்பது அறிவியல் காலம்; எல்லாவற்றையும் அறிவியல் நோக்கில் காண்பதற்கு மனம் விழைகின்றது.

அநுபவ அறிவு : ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கின. மனிதனுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. ஒன்றாய் இருந்த விதை பின் வேராய், அடிமரமாய், கிளையாய், கொம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாய் மாறுவது போலவே, வித்தென, அருவமாய் இருந்தவை மரம் என்று உருமாறியது என்று அவன் நினைத்தான். இக்கொள்கையைப் பரிணாம வாதம் - கூர்தல் அறம் என்று வழங்கினர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர் சிலர்; நீர் என்றனர் பிறர்; தீ என்றனர் ஒரு சாரார்; காற்று என்றனர் பிறிதொரு சாரார். வேறுசிலர் வான் என்றனர். இந்தப் பூசலில் கலந்துகொள்ள அஞ்சி, சிலர் ‘தென்காசி வழக்காக’, கோமுட்டி சாட்சி போல், ஐந்தும் அடிப்படை என்றனர். இக்கொள்கையை வற்புறுத்தியவர் அரிஸ்டாட்டில் என்பார். இதனை முன்னரும் குறிப்பிட்டோம்.

(3) அகிலத் தோற்றம் : இந்திய தத்துவ தரிசனம் இவ்வுலகம் - ஏன் இந்த அகிலமே (Universe) - ஐம்பெரும் பூதங்களால் ஆகியதாய்க் கூறுகின்றது. பண்டைய இலக்கணமாகிய தொல்காப்பியம் இதனை,

“நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்....”11[11]

என்ற நூற்பாவால் குறிப்பிடுகின்றது. ஈண்டு, உலகம் என்பது அகிலத்தினையும் குறிப்பதாய்க் கொள்ளலாம்.

இந்த நூற்பாவில் உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும் குறிக்கும் என்பது இளம்பூரணரது கருத்தாகும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி,


ஆகாயம் என விரவி நிற்கும் என்றும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும் என்றும் அவர் கூறுவார். இவ்விரண்டனையும் உலகம் கொண்டிருத்தலால் ‘கலந்த மயக்கம்’ என்றாராயிற்று.

இந்த நூற்பாவின் கருத்தினை அடியொற்றியது போல் கம்பநாடன்,

“அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
        அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
        வேறுபாடு உற்ற வீக்கம்”12[12]

என்று இராமர் தோத்திரமாய்க் கூறி விளக்குவான். அலங்கலைக் கண்டு அரவு என மருளுதல் திரிபுணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஐந்து பூதங்களும் தனித்தனியாய் இருக்கும் தன்மையினின்றும் நீங்கி ஒன்றாய்ச் சேர்வதனாலும், அங்ஙனம் சேர்ந்து சேர்க்கை அறுவகையாய் விகாரப்படுவதனாலும் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என்ற பாகுபாடு கொள்வதனாலான இந்த உலகத் தோற்றம் திரிபுணர்ச்சியை உண்டாக்குதல் கூடும். இந்தத் திரிபுணர்ச்சி உண்மைப் பொருளைக் கண்டமாத்திரத்தில் ஒழிந்துவிடும் என்பது கவிஞன் உணர வைக்கும் கருத்தாகும்.

“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு” (மெய்யுண்ர்தல் - 1)

என்ற குறளின் கருத்தையும் இதில் காணலாம். “விபரீத உணர்வாவது மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுள் இல்லையெனவும், மற்றும் இத்தன்மையன சொல்லும் மயக்கநூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்குகள் எனத் துணிதல், குற்றியை மகன் என்றும், இப்பியை வெள்ளி என்றும், இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாய்த் துணிதலும் அது” என்பது பரிமேலழகரின் விளக்க உரையாகும். மேலும், வள்ளுவப்பெருந்தகை,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
(மெய்யுணர்தல் -10).

என்று உணர்த்துவர். வைணவ தத்துவமும் இத்திரிபுணர்ச்சியை விளக்குகின்றது. உயிரல்லாத உடம்பை உயிர் என்ற எண்ணமும்,


கடவுளுக்கு அடிமைப்பட்ட உயிரைச் சுதந்தரம் உடையது என்று எண்ணுதலும், பிறருக்கு அடிமையல்லாத உயிரைப் பிறருக்கு அடிமையாகக் கருதுதலும், தலைமைத் தேவர் அல்லாதார் பக்கல் தலைமைத் தேவர் என்ற நினைப்பும் தலைமைப்பேறு (புருஷார்த்தம்) செல்வம் முதலியவற்றினிடத்துப் பரம புருஷார்த்தம் என்ற நோக்கமும் உபாயமாக மாட்டாத கர்மம் முதலியவற்றில் உபாயம் என்ற சிந்தனையும் தொடக்கமானவை என்பதாம்.

ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயம் மிகப்பெரியதாகலின். அவற்றுள் ஏனைய நான்கும் - அஃதாவது காற்று, தீ, நீர், பூமி ஆகியவை - அடங்கும். இந்தியத் தத்துவ தரிசனத்தின்படி நமது ஐம்பொறிகளின் வாயிலாய் ஐம்பெரும் பூதங்களாலாகிய உலகம் பொருள்படுத்தப்படுகின்றது; நம்மனத்திற்கு இலக்காகின்றது. ஐம்புலன்களாலன்றி உலகம் நமக்குப் புலனாகாது.

இதனை,

“சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்(று) ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.”13[13]

என்று குறிப்பர், வள்ளுவப் பெருந்தகையார்.

காது கேட்கின்றது. ஓசைக்கு ஏதுவாயிருப்பது, ஆகாசம் (வானம்). உடல் ஊற்றுணர்வால் உணர்கின்றது. அதற்கு ஏதுவாயிருப்பது, காற்று, கண், வடிவத்தைப் பார்க்கின்றது. ஒளிக்கு ஏதுவாயிருப்பது, நெருப்பு (தீ அல்லது தேஜஸ் - தேயு). நாக்கு சுவைக்கின்றது. சுவைக்கு மூலகாரணம், அப்பு (நீர்). மூக்கு, நாற்றத்தை உணர்கின்றது. அதற்குக் காரணம் பிருதிவி (பூமி). ஆக, உலகாக அறிவதற்கு மூலப் பொருள்களாய் இருப்பன பூதங்கள் ஐந்தாகும்.

இந்த ஐம்பெரும் பூதங்களும் சூக்குமம், தூலம் என்று இரு நிலைகளில் உள்ளன. சூக்குமப் பூதங்கள் தூலவமாக வடிவெடுப்பதற்கு ஒரு கணக்கு முறை உண்டு.

ஆகாயம் வாயு


தேயு அப்பு

 பிருதிவி


சூக்கும பூதம் ஒவ்வொன்றும் இரு செம்பாகங்களாய்ப் பிரிகின்றன. ஒரு பாதி தன்னுடைய தூல அமைப்புக்கு நின்றுவிடுகின்றது. மற்றொரு பாதி, நான்கு அரைக்கால் ஆகி, ஏனைய நான்கு பூதங்களுக்குச் சமனாய்ப் பங்கிட்டுக் கொடுக்கப்பெறுகின்றது.


இங்ஙனம் சூக்கும பூதங்கள் தூல பூதங்களாய் மாறுவதைப் ‘பஞ்சீகரணம்’ என்று திருநாமம் இட்டு வழங்குவர்.

கீதையில் கண்ணன் “மண், நீர், தீ, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று இங்ஙனம் எட்டு விதமாய் என் பிரகிருதி பிரிவுபட்டு உள்ளது.”14[14] என்கின்றான்.

முதல் ஐந்தனை மேலே விளக்கினேன். உணரும் தன்மை மனத்திற்கு உண்டு. நல்லது, தீயது என்று புத்தி


பாகுபடுத்துகின்றது. தன்னைக் கருத்தா என்று கருதுவது, அகங்காரம். அகங்காரமின்றிக் கருமம் ஒன்றும் நடைபெறாது. மண்ணோடு மண்ணாய் விதை புதைந்து கிடப்பது போன்று வாசனா சொரூபமாய் அகங்காரம் முதலிய அந்தக்கரணங்கள் மூலப்பிரகிருதியுள் புதைந்துள்ளன. தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்கவல்ல இயல்புக்கு வாசனை என்று பெயர். இந்த எட்டு விதப் பிரகிருதியையே இருபத்துநான்கு தத்துவங்களாய் விரித்துச் சொல்வது வழக்கத்தில் உள்ளது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கு. மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஞானேந்திரியங்கள் ஐந்து. ஞானேந்திரியங்களின் செயல்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து. இவையே தன்மாத்திரைகள். வாக்கு, கால், கை, கருவாய், எருவாய் என்ற கருமேந்திரியங்கள் ஐந்து. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்து. புருடன் எனப்படும் ஆன்மா இருபத்தைந்தாவது தத்துவம். பரமபுருடன் - புருடோத்தமன் - எனப்படும் பரம்பொருள் என்ற பரமாத்மாவுடன் சேர்த்து வைணவ தத்துவம் இருபத்தாறாகின்றது.

அணுக்கொள்கையின் கரு : பொருள்களை ஆக்கும் அடிப்படையான துகளே அணுவாகும் என்பது இன்றைய அணுவியல். இந்த உலகமும் இதனையொத்த வேறு அண்டங்களும் அணுவினால் ஆகியவையே. பூக்கள் சேர்ந்து பூமாலையாதல்போல, அணுக்கள் சேர்ந்து அண்டங்கள் ஆகின்றன. பழங்கால அணுவாதம் இதுதான்.

“செகத்தையெல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை;அணுத் திரளை எல்லாம்
மகத்துவமாய் பிரம்மாண்ட மாகச் செய்யும்
வல்லவா நீநினைத்த வாறே யெல்லாம்”15[15]

என்று இரத்தினச்சுருக்கமாய்க் விளக்குவர் தாயுமான அடிகள். நேற்றைய பொழிவிலும் இதனைச் சுட்டி விளக்கினேன்.

‘அசித்து’ என்ற வைணவ தத்துவமும் அணு அண்டமாதலை விளக்குகின்றது. அசித்து என்பது அறிவில்லாத பொருள். இஃது எம்பெருமானுக்கு உடலாய் (சரீர - சரீரி பாவனை) இருப்பது.



“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவைய வைதொறும்
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன.”16[16]}}

என்ற நம்மாழ்வார் பாசுரம் இதனை விளக்கும்.

“திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
        செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களும்ஆய் நின்றவன்.”17[17]}}

என்பர் திருமங்கை மன்னன்.

“மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
        வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீ
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்
        தரணிதலத் தஞ்சாகி”18[18]

என்று கூறுவர், அப்பர் பெருமான். மணிவாசகப்பெருமானும்,


“நிலம்நீர் நெருப்புயிர்
        நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைத்தனோ
        டெண்பகையாப்ப் புணர்ந்துநின்றான்.”19[19]

என்று இவற்றோடு வேறு சிலவற்றையும் சேர்த்துப் பேசுவர்.

பஞ்சபூதங்களால்தான் உலகம் உண்டானது என்பது பண்டைய சமய நூலாரின் கருத்து. இதனை அப்படியே பின்பற்றி,

“வானின்று இழிந்து வரம்பிகந்த
        மாபூ தத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வுபோல்
        உள்ளும் புறனும் உளன்என்ப.”20[20]

என்று கூறுவான் கம்பநாடன். வான் என்பது மூலப்பிரகிருதி. ‘சுரர் அறிவு அருநிலை’ (திருவாய் 1.1:8) என்ற பாசுரத்தில் ‘விண்முதல் முழுவதும்’ என்ற தொடரில் உள்ள விண் என்னும்


சொல்லுக்குப் பூர்வாசிரியர் மூவப்பிரகிருதி என்று பொருள் கொண்டதையொட்டிப் பொருள் கொள்ளப்பெற்றது. வரம்பு கடந்து பரந்த ஐம்பெரும் பூதங்களின் காரியமாய் பரவியிரா நின்றுள்ள பெளதிகப் பதார்த்தங்கள்தோறும் (ஜகமெங்கும்) உயிரும் உடலும் போலவும், உயிரும் உணர்வும் போலவும் உள்ளும் புறத்தும் உளன் என்று சொல்லுவர். ஞானிகள். இங்கு உணர்வு என்பது தர்மபூத ஞானம். ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து அப்புவும், அப்பி லிருந்து பூமியும் தோன்றும் முறையை அருமறை கூறுதலால் ‘வானின்றிழிந்து.....மாபூதம்’ என்றார் எனினும் பொருத்தும்.

ஐம்பெரும் பூதங்களைப்பற்றிய செய்தி ‘அநுமன் துதி’ யில் அற்புதமாய்க் காட்டப்பெறுகின்றது.

“அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றுஆறுஆக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்றான் அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன்எம்மை அளித்துக் காப்பான்.”[21]

முதல் ஒன்று - வாயு; இரண்டாவது ஒன்று - அப்பு (சமுத்திரம்); மூன்றாவது ஒன்று - ஆகாயம்; நான்காவது ஒன்று - பூமி ஐந்தாவது ஒன்று - நெருப்பு.

ஐம்பெரும்பூதங்களுள் ஒன்றாகிய வாயு தேவனால் பெறப்பட்டு (1), பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தின் வழியாக (3), ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய அப்பைக் (கடலைக்) கடந்து (2), இராமன்பொருட்டு ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய பூமிதேவி பெற்ற பெண்ணாகிய பிராட்டியைச் சேவித்து (4), அயலார் ஊராகிய இலங்கையில் ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பை வைத்துச் சென்றான் (5). அநுமன் கருணை செய்து எம்மைப் பாதுகாப்பான். - ஆதலால் அவனை வணங்குவோம் என்பது குறிப்பு.

(4) உலகத்தோற்றம் (சமயக்கருத்து) : (உலகத் தோற்றத்தில் - உலகம் உண்டாதலாகிய காரியத்தில் - ஈகவரனே முதற் காரணம், நிமித்த காரணம், துணைக்காரணம் என்ற மூவகைக் காரணங்களாய் உள்ளான் என்ற வைணவ தத்துவம் கொண்டு அண்டம் உண்டாதவை விளக்கலாம். அசித்து சூக்குமமாய் (நுண்மையாய்) இருக்கும் நிலையில் - அஃதாவது, உலக உற்பத்திக்கு முன்னர் - அதனுள் இறைவன் அந்தர்யாமியாய் சங்கற்பத்தோடு நின்று இருக்கும் நிலையில் இறைவன் உலகிற்கு முதற்காரணமாகின்றான். இங்ஙனம் நுண்ணிய நிலையில் இருக்கும் அசித்தை வெளிப்படுத்த 'உலகப்படைப்பு செய்வோம்' என்று இறைவன் எண்ணுகின்ற நிலையில் இறைவன் உலகிற்கு நிமித்த காரணமாய் அமைகின்றான். இறைவனுடைய ஞானம், சக்தி முதலியவையே துணைக்காரணமாகின்றன. ஆக, இம்முறையில் இறைவன் உலகப் படைப்பிற்கு மூன்று காரணமாய் உள்ளான் என்று மெய்விளக்க அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இக்கருத்தினை ஆழ்வார் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

“நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
        வித்தும்ஆய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞாலத்து உன்பெருமை
        மாசு ணாதோ மாயோனே.”22[22]

“தானோர் உருவே தனிவித்தாய்த்
        தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
        மற்றும் மற்றும் முற்றுமாய்.”23[23]

என்கின்ற பாசுரப்பகுதிகளிலும் வேறு பல பாசுரப்பகுதிகளிலும் இதனைக் கண்டு தெளியலாம்.

மேற்குறிப்பிட்ட மூன்று காரணங்களுள் இறைவன் உலகிற்கு முதற்காரணம் என்பது மிகவும் முக்கியமானது. காரணப்பொருள் பின் காரியப் பொருளாய் மாறுவது முதற்காரணம் என்பது பொது விதி. இங்கு இறைவனே இவ்வுலகப் பொருளாய் மாறினான் என்றால், அங்ஙனமன்று. இவ்வுலகப் பொருள்களுக்கு அவற்றின் நுண்ணிய நிலை, முதற்காரணம்; பருப்பொருளாய் மாறிய நிலை, காரியம்; ‘இல்லது வாராது, உள்ளது சிதையாது’ என்பது தத்துவம். வேதியியல் உண்மையும் இதுவே, இறைவன் நுண்ணிய நிலையிலுள்ள அசித்தின் உள்ளேயும் அந்தர்யாமியாய் உள்ளான்; பருப்பொருளாய் உள்ள நிலையிலும் அந்தர்யாமியாய் உள்ளான். நுண்மையான அசித்தில் இறைவன் அந்தர்யாமியாய் இருக்கும் நிலை முதற்காரண நிலையாகும்.


பருப்பொருளாயுள்ள அசித்தில் இறைவன் அந்தர்யாமியாய்யுள்ள நிலையே காரிய நிலையாகும். அதனால் இறைவன் முதற்காரணமாயுள்ள நிலையிலும் காரியமாயுள்ள நிலையிலும் சிறிதும் வேறுபடுவதில்லை.

“சாணிலும் உளன்ஓர் தன்மை
        அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன்மா மேருக்
        குன்றினும் உளன்இந் நின்ற
தூணினும் உளன்நீ சொன்ன
        சொல்லினும் உளன்;இத் தன்மை காணுதி.”24[24]

என்று இரணியனுக்குப் பிரகலாதன் கூறுவதாய் அமைந்த பாடலில் ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற உண்மையைக் காணலாம். இதனால், ஈசுவரன் விகாரமற்றவன் - நிர்விகாரன் - என்று சொல்லுவதில் தவறில்லை. இக்கருத்தை ஆழ்வார் பாசுரத்தில் ‘வித்தாய் முதலில் சிதையாமே’ (திருவாய் 1-5 : 2) என்ற தொடர் அழகுடன் விளக்குவதைக் கண்டு தெளியலாம். உலகத்துப் பொருள்கள் போலன்றி இறைவன் தன்னிலையில் சிறிதும் சிதைவின்றி இருந்துகொண்டே எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் உள்ளான் (முதற்காரணமாகின்றான்) என்பது கருத்தாகும். இங்ஙனம் இருத்தல் இவனுடைய ஆச்சரிய சக்தியாகும். இதனையே திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரும்,

“சின்னூல் பலபலவாயால் இழைத்துச்
        சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவதுபோல்
        அரங்கர் அண்டம்
பன்னூறு கூடி படைத்துஅவை
        யாவும் பழம்படியே
மன்னூழி தன்னில் விழுங்குவர்
        போதமனம் மகிழ்த்தே.”25[25]

என்ற மிக அழகான உவமை கலந்த பாடலால் விளக்குவர். ஒரு சிலந்திப்பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண்டாக்கித் தான் அதனை விழுங்குகின்றது. நூல் உண்டாதற்கு முதற்காரணமா


யுள்ள அப் பூச்சி அந்நிலையில் அழிவதில்லை. ஒரு சிலந்திக்கு இச்செயல் கூடுமேல், தன் நிலையில் சிதைவின்றித் தான் உலகிற்கு முதற்காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அரிதாகுமோ?
"ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசக்திக்குக் கூடாதொழியா திறே" 29

என்ற தத்துவத் திரய வாக்கியமும் ஈண்டு நோக்கி உன்னற்பாலது.

மகாகவி பாரதியாரும் இவ்வுலகப் படைப்பையும், அதில் ஆருயிர்கள் துய்ப்பதையும்,

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!'

என்று எக்களிப்புடன் போற்றுகின்றார். இதனை,

"சித்தினை அசித்துடன்
இணைத்தாப் - அங்கு
சேரும்ஜம் பூதத்து
வியனுவ கமைத்தாய்
அத்தனை உவகமும்,
வண்ணக் களஞ்சியம்
ஆகப் பலப்பலதல்
அழகுகள் சமைத்தாய்”

என்று மேலும் விளக்கி உரைக்கின்றார். மேட்டுர் அணை, கிருஷ்ணராஜ சாகர், கல்லணை முதலானவை கட்டுவதற்குக் கல், சீமைக்காரை (Cement) முதலான பொருள்கள் (அசித்து). தேவை. வினையாற்றுவதற்குத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் (சித்து) தேவை. சித்து, அசித்து ஆகிய இரண்டையும் இணையச் செய்தவன் கட்புலனுக்குக் காணப்பெறாத - காணமுடியாத - இறைவன் - மேற்பார்வை பார்க்கும் பொறியாளன். இதில் பங்கு பெறுபவை நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள். இவற்றின் விளைவு புன்செய் நன்செய் ஆனது: நெல்வயல்கள், பழத்தோட்டங்கள் முதலியவை அடங்கிய வியன் உலகு காணும் நமக்கு வண்ணக் களஞ்சியமாய்த் தோற்றமளிக்கும். இந்த விளக்கம் கொண்டு பாடலை நோக்குக.


26. தத். ஈசுவரப் - 29 இத்துணைப் பொருள்களையும் ஆருயிர்கள் உடல்களைப் பெற்று நுகருகின்றன: துய்க்கின்றன; அநுபவிக்கின்றன. அறம் பொருள், இன்பம் ஆகிய மூன்று செயல்களையும் புரிகின்றன. பிறவிப் பயனாய்ப் பெற வேண்டியது, முக்தி - வீடுபேறு. அதனை அடையும் உணர்வையும், அதனை அடையும் வழிகளையும் ஆருயிர்களுக்குக் காட்டுகின்றான், ஆண்டவன். இதனை,

"முக்தியென் றொருநிலை
சமைத்தாப் - அங்கு
முழுதினையு முனரும்
உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒருநிலை
வகுத்தாய் - எங்கள்
பரமா!பரமா! பரமா!"27

உலகிலுள்ள சமயங்கள் : உலகில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பாரதியார் இவற்றை,

"பூமியிலே கண்டம்ஐந்து, மதங்கள். கோடி!
புத்தமதம், சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுமதம் போற்றும் மார்க்கம்
சநாதனமாம் இந்துமதம் இஸ்லாம்! யூதம்
நாமமுயர் சீனத்துத் 'தாவு' மார்க்கம்
நல்ல'கன் பூசி' மதம் முதலாம் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே."28

என்ற பாடவில் குறிப்பிடுவார். நம் நோக்கம் இவற்றை யெல்லாம் விளக்குவதன்று. இவற்றுள் சிலவற்றை மட்டிலும் ஈண்டு விளக்கலாம் எனக் கருதுகின்றேன்.


27. பா.க : தோ.பா. - இறைவா! இறைவா! என்ற பாடலில் அமைத்துக் காட்டுவதில் முக்தி என்ற ஒரு நிலையையும் அமைத்துக் காட்டிய பேருத வியையும், அதனை அடைவதற்கான பக்தி என்ற வழியை வகுத்துக் காட்டிய அற்புதத்தையும் வியப்புடன் நினைத்து நன்றியுடன் போற்றுகின்றார், கவிஞர். 28. பாரதியார் - சுயசரிதை - 85 நம் நாட்டில் தோன்றி வளர்ந்த பழைய சமய நெறிகளை மூன்றாய்ப் பகுத்துரைக்கலாம். அவை : (1) ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்து வெளி மக்களின் சமயநெறி, (ii) வேத நெறிகள் அல்லது வைதிக நெறிகள், (iii) வேதங்களைப் புறக்கணித்த நெறிகள் என்பனவாகும். சிந்துவெளி நாகரிகம் மறைந்த பின்னர் எழுந்த வேதநெறியினர் சிந்துவெளி சமயக் கருத்துகள் சிலவற்றை மேற்கொண்டிருக்கலாம். எனவே, வேத நெறியினர் தமக்கெனச் சில வேள்விகளையும் சடங்குகளையும் தெய்வங் களையும் வழிபாட்டு முறைகளையும் அமைத்துக்கொண்ட போக்கினை உபநிடத நெறியினர் ஒருபுறமும்; உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகியவற்றைப் பின்பற்றுவோர் மறுபுறமும் கண்டனம் செய்தனர். வேதநெறி கரும மார்க்கத்தை வற்புறுத்தும்; உபநிடத நெறியோ ஞானநெறியை வலியுறுத்தும்; உபநிடதங்கள் ஆரியரல்லா தாரின் சிந்தனைகளைக் கொண்டவை என்றும், வினைக் கொள்கை ஆரியர்க்கு முற்பட்டது என்றும் டாக்டர் A.L. பாஷம் என்பார் ஆய்ந்துள்ளார். ஆகவே, உபநிடதங்கள் வேதங்களின் சாரமாய், முடித்த முடிபாய் அமைந்தவை எனக் கருதப்பெறுவதால், உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகிய நான்குமே வைதிக நெறிகளை முழுமையாகவே புறக்கணித்த புரட்சி நெறிகள் எனலாம். இவை புறச்சமய நெறிகள்என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றன.

வரலாற்று முறையில் சமயங்களை நோக்கினால், மன அமைதிக்காய், மனித நேயத்திற்காய், வாழ்க்கையை வளமாக்கு வதற்காய் அருளாளர்களால் (prophets) இவை தோற்றுவிக்கப் பெற்றன என்பது புலனாகும். ஆனால், பிற்காலத்தில் அவற்றை நெறிப்படுத்தி வழக்கத்திற்குக் கொண்டுவந்த குருமார்கள் (Priests) அரசர்களை மயக்கித் தம் வசமாக்கிக்கொண்டு மதத்தின் பெயரால் கொடுமைகளை இழைத்த செய்திகளும், வரலாற்றில் உள்ள சைவ-வைணவப் போராட்டங்கள், சமண சைவப் போராட்டங்கள், சிலுவைப் போர்கள் (Holy wars), நூற்றாண்டுப் போர்கள் போன்ற நிகழ்ச்சிகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. போகிற போக்கில் இவற்றையும் சிந்திக்கின்றோம். பாரதியார் இவற்றையெல்லாம் இலக்கியச் கவையுடன் தம் சுயசரிதையில் பதிய வைத்துள்ளார்.


29. History and Doctrines of the Ajivakas - pp.4-5.

2 (அ) வைதிக சமயத் தத்துவங்கள்

இந்து சமயத் தத்துவங்களுக்கு அருமறைகளே முதற்காரணமானவை என்று பகர்வார்கள். வேதங்களின் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால், அருமறைகளினின்றும் தெள்ளி எடுத்த உபநிடதங்கள் காப்பாற்றப்பெற்றுள்ளன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிடதங்களின் போக்கு எத்தகையது என்று விளக்குவது. பாதராயணரால் இயற்றப்பெற்ற பிரம்மசூத்திரம். இதனை வேதாந்த சூத்திரம் என்று மற்றொரு திருநாமத்தாலும் வழங்குவதுண்டு. உபநிடதங்களில் அடங்கியுள்ள கருத்துகளையெல்லாம் மேலும் தெளிவு பெற விளக்குவது, பகவத்கீதை. இது பாரதப் போர்க்களத்தில் பார்த்தனுக்குப் பரந்தாமனால் புகட்டப்பெற்றது. மாபாரத வீடும பர்வத்தில் 25வது இயல்முதல் 42ஆவது இயல்வரையில் இந்த நூலைக் காணலாம்.

உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத் கீதை ஆகிய இந்த மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாய் அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை இல்லை; முரண்பாடுகளும் இல்லை. அருமறைகளைச் (வேதங்களைச்) சார்ந்த வைதிகத் தத்துவங்கள் சாங்கியம், வைசேடிகம், நியாயம், யோகம், மீமாம்சை, வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவையாகும்.

(1) சாங்கியம் : இந்து சமய தத்துவங்களுள் - தர்சனங்களுள் - மிகவும் தொன்மையானது, சாங்கியம். இந்தத் தத்துவத்தை முறைப்படுத்தி முதலில் வெளியிட்டவர், கபிலர். (கி.மு.7, 8 நூற்றாண்டு). முதலில் தோன்றியதால் இதற்கு முதன்மைச் சிறப்பு எப்பொழுதும் உண்டு. சாங்கியம் என்றால் பூரண அறிவு என்பது ஒரு பொருள். ‘சாங்கியா’ என்ற தாதுவிலிருந்து ‘சாங்கியம்’ என்ற சொல் தோன்றியது. இத்தாதுவிற்குப் பகுத்தறிதல், எண்ணுதல் (Reasoning, Number) எனப் பல பொருள் உண்டு. உலகத் தோற்றத்தில் காணப்பெறும் கூறுகளைச் சிந்தித்துத் தெளிந்து பல வகை மூலப்பொருள்களாய் அடைவு செய்து, கண்டறிந்த தத்துவங்கள் 25 என்று எண்ணுதலால் அகிலத்தைப்பற்றி (Universe) பூரண அறிவைத் தருவது இந்தத் தத்துவம்.

சாங்கியம் இந்த அகிலத்திற்கு மூலப் பொருள் இரண்டு என்று பேசும். அவற்றுள், ஒன்று, அறிவு சொரூபமானது. அது புருடன் (Soul)[26] மற்றது, அறிவற்றது. அது பிரகிருதி. இவை இரண்டும் என்றும் உள்ள தத்துவங்கள் (மெய்ப்பொருள்கள்). இவற்றை யாரும் உண்டாக்கவில்லை. மூலப்பகுதி (பிரகிருதி) என்ற விதைத் தத்துவத்தினின்றுதான் இவ்வுலகப் பொருள்கள் உண்டாயின. பின்பு அவை அழிந்துபோய் சேரும் இடமும் பிரகிருதியே. புருடன் என்னும் அறிவுடைய பொருள் மாற்றம் அடையாதது. புருடன் உலகத்தோற்றத்திற்குக் காரணமும் அன்று; காரியமும் அன்று. பிரகிருதியே இந்த அகிலத் தோற்றத்திற்கான காரணம் (மூலப்பொருள்). இவ்விரு மூலப்பொருள்களின் அடிப்படையில்தான் இந்த அகிலத்திற்கும் அதில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் விளக்கம் தருகின்றது, சாங்கியம்.

புருடன் - ஆன்மா - பல என்ற கருத்தையுடையது, சாங்கியம். ஆன்மா ஒன்றேயானால் இறப்பு என ஒன்று வரும்போது யாவரும் ஒரே நேரத்தில் இறக்க வேண்டும். அப்படி ஒன்றும் நிகழாததிலிருந்து ஆன்மா பல என்ற முடிவுக்கு வந்தனர், சாங்கியர். சாங்கியம் வேதத்தை ஏற்றாலும் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற கருத்தையுடையது. பிரகிருதிதானே இயங்கவல்லது என்பது இதன் கொள்கை. இச்சமயத் தத்துவக் கணக்குப்படி மொத்தம் 25 தத்துவங்கள்தாம் உலகப் பொருள்கள் யாவற்றிற்கும் அடிப்படை.

(ii) யோகம் : சாங்கியத்துடன் ஒன்றெனக் கருதக்கூடியது இத்தத்துவம். சாங்கியத்தின் பெரும்பாலான கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொண்டது. பிரகிருதி, புருடன் என்ற இருதத்துவங்களுடன் கடவுள் (ஈசுவரன்) என்ற மூன்றாவது தத்துவத்தையும் கொண்டது யோக தரிசனம்[27] இறைவன் என்றும் உள்ளவன்; படைப்பிற்கு உதவுபவனேயன்றி முக்தியைக் கொடுப்பவன் அல்லன்: இறைவனும் ஒரு புருடனே. தொடக்க காலம் முதல் பிரகிருதியோடு கட்டுண்டு கிடக்காமல் தனித்திருக்கும் ஒரு புருடன். யோக தரிசனத்தை நிறுவியவர், பதஞ்சலி. இவருக்கு முன்பே இதன் தத்துவங்கள் வளர்ந்திருப்பினும் இவர் எழுதிய யோக சூத்திரம் என்ற நூல்தான் இவற்றிற்கு அடிப்படை.

சித்தத்துாய்மை பெற்று, ‘யான்’, ‘எனது’ என்ற அகப்பற்று புறப்பற்றுகளை அறவே நீக்குதலே யோக தரிசனம். பிரகிருதியின் பிடியிலிருந்து விடுபட்டு அறிவுமயமான தனது உண்மை நிலையை அடைவதே புருடனின் (ஆன்மாவின்) குறிக்கோள். பரம்பொருளாகிய பிரம்மத்துடன் சேர்வது என்னும் வைதிகச் சமயங்களின் குறிக்கோளை யோக சமயத்தினர் ஏற்பதில்லை. பிரகிருதியிலிருந்து தனியாய்ப் பிரிந்து அறிவு மயமாய்த் தனித்திருப்பதுதான் ஆன்மாவின் குறிக்கோள் என்பது யோக சமயத்தினர் தரும் விளக்கமாகும். இதற்கு இவர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் (புலன்களைக் கட்டுப்படுத்தல்), தாரணை (மனத்தை ஒருநிலைப்படுத்தல்), தியானம் (தத்துவ உண்மைகளை ஊன்றி எண்ணல்) சமாதி என்ற எட்டுப்படிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்று கூறுவர். இவ்விதிகளை நடைமுறையில் கடைப்பிடித்தால்தான் முக்தி அடைய முடியும். அஃதாவது ஆன்மா, ஆசை, துன்பம், கேடு முதலியன நீங்கப்பெற்று பிரகிருதியிலிருந்து விடுபட்டுத் தனது ஆநந்த ஞான நிலையை எய்தும். சீவன் முக்தி என்பது இந்த வையத்தில் இப்பிறவியில் இறப்பதற்கு முன்பாகவே முக்தி அடைவது.

(3) வைசேடிகம் : இதுவும் வேதத்தைச் சார்ந்த தரிசனம். வேதக்கருத்துகளை ஒரு பரிமாணமாய் ஏற்றாலும், தனக்கென ஒரு சிந்தனையுடன் தத்துவங்களை அமைத்துக்கொண்டது, வைசேடிகம். இத்தரிசனத்தின் அடிப்படை நூல், கணாத முனிவரால் எழுதப்பெற்ற வைசேடிக சூத்திரம். கணாதர் என்ற சொல்லின் பொருள் அறியத்தக்கது. கணம் - அணு; அதி - உண்ணுதல்; ஆதலின், அணு விழுங்கியார் (Atom Swallower) என்று ‘கணாதர்’ என்ற சொல்லுக்குப் பொருள் உரைப்பர். மிக நுண்ணியதும், பிரிக்கவொண்ணாததுமான அணுவினை உள்பொருளாய் (Reality) மதித்ததால் இப்பெயர் இவருக்குப் பொருந்தும் என்பர்.32 இவருடைய இயற்பெயர், காசியபர் என்பது.

இவர் உருவாக்கிய வைசேடிகத் தத்துவத்திற்கு ஒளலூக .33 என்ற பெயரும் உண்டு. ஒளலூகம் என்ற சொல் உலூகம் (= கூகை. 0wl) என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது. பகற்பொழுது முழுதும் தியானத்தில் பழகி, இரவில்மட்டிலும் உணவு கொள்ளுதலின், இரவில் மட்டிலுமே விழித்திருக்கும் கூகை போன்றவர் என்ற கருத்தில் இப்பெயர் ஏற்பட்டது. அக்காலத்து முனிவர் பலரின் நடைமுறையினைக் கணாதரிடம் காண முடிகின்றது.

பெயர்க்காரணம் : வைசேடிகம் என்ற பெயர்க்காரணத்தையும் காட்டுவேன். வைசேடிகர் காட்சிப் பொருள் உண்மை வாதிகள் (Realists). இவர்கள் கண்ட அறுவகைப் பொருள்களுள் (ஷட்பதார்த்தங்கள்) விசேடம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 'விசேடம்' என்ற சொல்லின் அடியாய்த் தோன்றியது வைசேடிகம். குறிப்பிட்ட ஒரு பொருள் ஏனைய பொருள்களினின்றும் வேறுபடுத்தற்குரிய விசேட இயல்புகள் அல்லது சிறப்புத்தன்மைகளை ஆராய்தலின், இத்தத்துவம் வைசேடிகம் எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவர். ஏனைய தத்துவங்களுக்கில்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. பொருள்களின் விசேடத் தன்மைகள்தாம் அவற்றின் உண்மைகளைச் சாதிப்பன என்பது இத்தத்துவத்தின் கருத்தாகும்.

உலகப் பொருள்களின் ஆக்கத்திற்கு அணுக்களே மூலப் பொருள்கள். அவை ஒன்றுசேர்ந்து மூலப்பொருள்களாகின்றன. அவற்றை அழிக்கும்போது மீண்டும் அணுக்களாகிவிடுகின்றன. இந்த அணுக்கொள்கையைத் தீவிரமாய் நிலைநிறுத்தியது வைசேடிகத் தத்துவம். இத்தகைய நுண்பொருள்களை அணுக்கள் என்றும், பரமானுக்கள் என்றும் குறிப்பிடுகின்றது, இத்தத்துவம். அணுக்களை மேலும் பிரிக்க முடியாது என்பது இத்தத்துவம். இக்கொள்கையே இத்தத்துவத்தின் மிக முக்கியமானது.34


32. Rathakrishman, S.Dr. indiam Philosophy, Vol. II, P. 178 33. மாத்துவர் இப்பெயரினால்தான் இத்தத்துவத்தைச் சுட்டினர். 34. நம் நாட்டுச் சமணமும் இக்கொள்கையுடையது. பெளத்தத்தின் ஒரு பகுதியினர் இக்கொள்கையை ஏற்பர். மேலைநாட்டு டெமாகிரிட்டஸ், எபிகியூரஸ் போன்றவர்களும் இதனை ஏற்பர். ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயத்தைத் தவிர நிலம், நீர். காற்று, நெருப்பு என்ற நான்கும் அணுக்களால் ஆனவை. அணுக்களின் சேர்க்கையால் இப்பூதங்கள் உண்டாகின்றன. இவ்வைந்து பூதங்களால்தாம் இந்த அகிலம் முழுவதும் தோற்று விக்கப்பெற்றுள்ளது என்பது இத்தத்துவம். இந்த ஐந்து பூதங்களோடு காலம், இடம், மனம், ஆன்மா என்ற நான்கும் சேர்ந்து, ஆக மொத்தம் ஒன்பது திரவியங்களாலாகியது, இந்த அகிலம் என்பது இத்தத்துவத்தின் கருத்து. இவ்வாறு மாறுவதற்குக் கடவுள் காரணமாகின்றார் என்பதையும் இத்தத்துவம் ஏற்கின்றது.

(4) நியாயம் : இதனை நையாயிகம் என்றும் வழங்குவர். 'நியாயம்' என்ற சொல் 'நய' என்ற வேர்ச் சொல்லின் அடியாய்த் தோன்றியது. மெய்ப்பொருள் முடிபிற்கு உய்க்கும் வழிகளை ஆராயும் அறிவியற்கலைதான் நியாய தத்துவம் ஆகும். உயர்ந்த தர்க்க ஞானத்தினால் ஆராயப்பெற்ற உண்மைகளைக் கூறுவது இது. பிரடத்தியட்சப்பிரமானத்தையும்35 தர்க்க நியாயத்தையும் அடிப்படையாய்க் கொண்டது, இந்தத் தத்துவம்.

நியாய தத்துவம் உலகில் உள்ள பொருள்கள் யாவும் உண்மை என்று கூறும். உலகப் பொருள்களின் ஆக்கத்திற்கு அணுக்களே மூலப்பொருள் என்ற வைசேடிகர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, இத்தத்துவம். ஆன்மாவும் உண்மைப் பொருள். சைதன்யம் அல்லது அறிவுடைமை அதன் சிறப்பியல்பு. இந்தச் சிறப்பியல்பு ஆன்மா உடலோடும் மனத்தோடும் ஒட்டியிருக்கும் போதுதான் ஏற்படுகின்றது. உடலும் மனமும் இல்லையேல் ஆன்மாவிற்குச் சைதன்யம் இராது என்பது இத்தத்துவத்தின் விளக்கம். உணர்வுகளற்ற ஆன்மாவாய் மாற முயல்வதே முக்தியாகும். கடவுள் உண்டென்பது இத்தத்துவத்திற்கு உடன்பாடு. கடவுளும் ஓர் ஆன்மா என்று கூறுகிறது, இத்தத்துவம். ஆன்மாவைச் சீவான்மா என்றும், கடவுளைப் பரமான்மா என்றும் குறிப்பிடுகிறது. உலகைப் படைத்தல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் கட்வுளது கடமைகளாகின்றன. கடவுள் நியமித்த காரணன் என்று விளக்குகின்றது, இத்தத்துவம்.


35. உண்மையினை அளக்க உதவும் கருவியினைப் 'பிரமாணம்' என்பர், வடநூலார். அழகிய தமிழில் இதை அளவை என்று கூறுவர் (சாத்தனார்). இவண் கூறப்பெற்ற நான்கும் மக்களால் பின்பற்றப்படாமல் ஏட்டுச் கரைக்காயாய் இருப்பவையாகும்.

5 மீமாம்சை : அருமறைக் கூறுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சமயங்களுள் மீமாம்சை முன்னோடியானது. மீமாம்சை என்ற சொல் 'முறையாய் ஆராய்தல்' என்ற பொருளுடையது. மீகாம்சை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்ற இருபிரிவுகளையுடையது. முன்னது, வேதத்தின் முதற்பகுதியாகிய பிரமானத்தை அடிப்படையாய்க் கொண்டது. பின்னது, வேதத்தின் இரண்டாம் பிரிவான உபநிடதத்தை அடிப்படையாய்க் கொண்டது. மீமாம்சைபற்றிப் பல நூல்கள் உன்னன. அவற்றுள் மிகவும் பழைமையானது கல்ப சூத்திரம். எனினும், ஜைமினியால் இயற்றப்பெற்ற மீமாம்ச சூத்திரம் மிகவும் முக்கியமானது.

நியாய வைசேடிகர்களைப் போலவே மீமாம்சகரும் உலக ஆக்கத்திற்கான மூலப்பொருள்கள் பல என்ற கருத்தைக் கொண்டவர்கள். உலகப் பொருள்கள்யாவும் உண்மைப் பொருள்கள் என்பதை ஒத்துக்கொள்பவர்கள். இவர்கள் அணுக் கொள்கையை ஏற்பவர்கள். ஐம்பெரும் பூதங்கள் அணுக்களால் ஆனவை என்பதை ஏற்றுக்கொண்டாலும் கண்ணுக்குப் புலப்படும் கூட்டனுக்கனைளத்தாம் அணு என்கின்றனர். ஒற்றை அணுக்கள் இரண்டாகவும் மூன்றாகவும் இணைந்திருக்கும் அணுத் தொகுப்புகளுங்கூட கண்ணுக்குப் புலனாகாமல் உள்ளன என்ற லைசேடிகர்களின் கூற்றை இவர்கள் ஏற்பதில்லை. வேதத்தில் இவர்கள் அழுத்தமான நம்பிக்கையுடையவர்கள்.

ஆன்மாக்கள் பனி என்பதும், அவை என்றும் இருப்பவை என்பதும், எங்கும் நிறைந்தவை என்பதும் இவர்தம் கொள்கை, ஆன்மாவை மனத்தில் உணர முடியும் என்ற கருத்தையுடையவர்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் தலைமையான பரமான்மா என்ற ஒன்றில்லை என்பது இவர்தம் கருத்தாத லால் பல கடவுள்கள் உள்ளன என்பதும், முழுமுதற்கடவுள் ஒன்றில்லை என்பதும் இவர்தம் கொள்கைகளாகும். இதற்கு இவர்கள் கூறும் பல விளக்கங்களுள் மிக முக்கியமானது பிரத்தியட்சம், அனுமானம், ஆப்த வாக்கியம் என்ற மூன்றாலும் அறுதியிட முடியாது என்பதாகும். வேள்வி புரிவதில் நம்பிக்கை மிக்கவர்கள் : வேள்வியால் விரும்பிய பலனை என்பதும், அவற்றால் தெய்வங்களில் ஆற்றல் நின்று என்பதும் இவர்தம் அதிராத நம்பிக்கை

2(அ) க. வேதாந்தம் : பிரஸ்தானதிசயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று கூறுவது முறை.வேதாந்தத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம். இம்மை என்று துவலப்பெறும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை எனப்படும் கவர்க்கம், மோட்சம் (வீடுபேறு) ஆகியவற்றைப் பற்றியும் பகர்வது. வேதம். இந்தக் கோட்பாட்டை வேறு விதமாய்க் கூறினால் இத்திரியங்கள் மூலம் நுகர்கின்ற அகில வாழ்க்கையைப்பற்றிப் பேசுவது. வேதம். இந்திரியங்களுக்கும் மனத்திற்கும் அப்பாற் பட்ட பரத்தைப் பற்றிப் புகட்டுவது, வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தால் ஒழிய பரம் என்னும் நிலை கைவரப்பெறாது.

நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லாச் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்தக் சமயத்திலும் இல்லை என்று உறுதியாய் உரைக்கலாம். ஆகவே, சமயங்களுக்கெல்லாம் தாய்ச் சமயமாய் இருப்பது, வேதாந்தம். மெய்ப்பொருளுக்கு எப்பெயர் இட்டு அழைப்பதும் வேதாந்தத்திற்கு உடன்பாடு. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் சண்டையிட்டுக்கொள்கின்றன, அடிப்படையில் உள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது, வேதாந்தம். வேட்கையைத் தனிப்பது ஜலமா, தன்னிரா, நீர்த்தமா, பானியா, வெள்ளமா என்று வாதாட வேண்டா.ஜலம், தண்ணீர், தீர்த்தம், பாணி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்பதை ஆராய்ந்து பார்த்தலே அறிவுடைமை. இப்படி நோக்கினால் வேற்றுமையும் வீண் வாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலான நிலை ஐயம் திரியின்றிப் புலனாகும். வேதாந்தம் இதற்கு வழி காட்டுகின்றது.

வேதாந்தத்தில் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவற்றைச் சுருக்கமாய் அறிந்துகொள்வோம்.

(1)அத்வைதம் : இது சங்கர வேதாந்தம் என்றும் வழங்கப் பெறும். ‘அத்வைதம்’ என்று சொல் இரண்டற்றது என்று பொருள்படும். சுகம், சிவன் என்று சொல்பவை வேறு. பரம் வேறு அல்ல உள்ளது ஒரே பொருள். அஃது அகண்ட சத், சித், ஆனந்தம். தன்னைச் சகமாகவும் சீவனாகவம் காட்டிக் கொள்ளுகின்ற வல்லமை அதனிடத்து உள்ளது. அந்த வல்லமைக்கு மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரம்மத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. சீவனிடத்துள்ள அஞ்ஞானத்தால் (அறிவின்மையால்) சகம் என்றும் சீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகின்றது. பிரம்ம ஞாலத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உள்ளது. ஆறு ஆழியில் கலப்பது போன்று. ஞானம் அடைந்த சீவன் பரத்தில் கலந்து விடுகின்றான். இஃது அத்வைதம் புகட்டும் முக்தி.

கேரளத்தில் காலடி என்ற ஊரில் தோன்றிய ஆதிசங்கரர், அவர் ஆசிரியர் கோவிந்தர். கோவித்தர், ஆசிரியர் கௌடபாதர் ஆகியோரின் எண்ணங்களில் உதித்தது இந்தத் தத்துவம். பிரம்ம சூத்திரத்திற்கு ஆதிசங்கரர் வரைந்த ‘சங்கர பாஷியம்’ (சங்கரப் பேருரை) உலகப்புகழ் பெற்றது. தாயுமானவர் பாடல்களில் உள்ள ‘பரமசிவ வணக்கப்’ பாடல்கள் அனைத்தும் அத்வைதக் கருத்துகள் கொண்டவை.

(2) விசிட்டாத்வைதம் : இஃது இராமாநுசருடைய வேதாந்தம் என்றும் பெயர் பெறும். இத்தத்துவத்தை இராமாநுசர் எங்கும் பரவச்செய்ததனால் இஃது இராமாநுசர் தரிசனம் என்ற பெயரும் பெற்றது. திருக்கோட்டியூர் நம்பி இதற்கு எம்பெருமானார் தரிசனம் என்றும் சிறப்புப் பெயரிட்டார் என்பது வரலாற்று உண்மை பொதிந்தது.

‘விசிட்டாத்வைதம்’ என்ற தொடர் மொழி விசிஷ்டய்ய + அத்வைதம் என விரியும். விசிஷ்டம் - விசேஷம். சித்து, அசித்து இவற்றை உடலாயுடைய விசேஷத்தை உடையது. அஃதாவது, உலகும் உயிரும் பிரம்மத்திற்கு விசேஷணங்கள்; இறைவன் விசேஷியம், இவை இரண்டும் சேர்ந்ததே விசிஷ்டம் என்பது. சித்து, அசித்து இவற்றின் சேர்க்கையால் விளங்கிடும் இரண்டற்ற ஒன்றானதே பிரம்மம். அத்வைதம் = அ + த்வைதம் என விரியும். இங்கு துவி + இரண்டு = துவைதம் என்றாகின்றது. அ - இல்லை + துவைதம் இரண்டற்றது என்று பொருள் படுகின்றது.

இராமாதுசரின் கருத்துப்படி உலகம் (அசித்து) உயிர் (சித்து). இறைவன் (ஈசுவரன் )/யாவும் உண்மை : உலகமும் உயிரும் பிரம்மத்திற்கு உடல். அது சரீர - சரீரி பாவனை (உடல் உயிர் உறவு) என்று வழங்கப்பெறும். பிரம்மத்தின் பகுதிகளே என்பதும், ஆன்மாவையும் உடலையும் இயக்கும் உயிரே இறைவன் என்பதும் இவருடைய 'உடல்மிசை உயிரெனக் சுரந்தெங்கும் பரந்துனன்' (திருவாய்1.1:7) என்று விளக்குவர், நம்மாழ்வார்.

"தனிமாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாய்த் தான்தோன்ற
முனிமாப் பிரம்ம முதல்வித்தாப்
உலகம் மூன்றும் முளைப்பித்த

தனிமாத் தெய்வம்" -
திருவாய் 8.10.7

என்று மேலும் விளக்குவர்.

இறைவனின் திருமேனிகள் : இறைவனுடைய திருமேனி பரத்துவம், வியூகம், விபவம். அத்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐந்து வகையோடு கூடியிருக்கும்.

பரத்துவம் : பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவி இவர்களும் நித்திய முக்தர்களும் சூழ வைகுத்தத்தில் இருக்கும் இருப்பு, வியூகம் : பல்வேறு வகையில் இவ்வுலகைப் படைத்தல் முதலிய தொழில்களை நடத்துவதற்கும் பிறவற்றிற்கும் வியூகவாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருந்தரன் என்ற பெயர்களுடன் நான்கு நிலைகளில் இருக்கும் இருப்பு. விபவம்: இராமகிருஷ்ணாதி அவதாரங்கள் உட்பட எண்ணற்ற அவதாரங்கள் அடங்கியது. அந்தர்யாமித்துவம் : சேதநர்களின் உள்ளே புக்கிருந்து எல்லாச் செயல்களுக்கும் ஏவுபவனாய் இருக்கும் இருப்பு. அர்ச்சை : அன்பர்கள் எதைத் தமக்குத் திருமேனியாய்க் கொள்கின்றனரோ அதனையே தம் வடிவமாய்க் கொண்டுள்ள நிலை.

ஆன்மாக்கள் நித்தியமானவை, எண்ணற்றவை. சீவான் மாக்கள் பத்தர் - தளைப்பட்டிருப்பவர், முத்தர் - முன்னர்க் கட்டுண்டு, பின்னர் விடுபட்டு முக்தி நிலையை அடைந்தவர், நித்தியர் - என்றுமே கட்டுண்டு இருந்திராத முத்தி நிலையில் உள்ளவர் என மூவகைப்படும். ஆன்மாவின் முக்கிய குணம் ஞானம் உடைமை. இதுவே தர்மபூத ஞானம் என்பது, பரமான்மாவின் ஞானம் முழுமையானது; ஆன்மாக்களின் ஞானம் முழுமையுடையதன்று. இந்த ஞானத்தின் துணையின்றி ஆன்மாக்கள் இயங்க முடியாது. இன்பம், துன்பம், ஆசை, நிராசை போன்றவை தர்ம்பூத ஞானத்தின் வடிவங்கள்.

ஆன்மா முத்தியடையக் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று வழிகள் உள்ளன. பக்தி, உயர்ந்த வருணத்தார்க்கே உரியது. எல்லோரும் எளிதில் அனுட்டிக்ககூடிய வழி, பிரபத்தி! இதுவே சாணாசக்தி என்பது. இவற்றிற்கெல்லாம் பெரிய பிராட்டியார் புருஷகாரமாய் (பரிந்துரைப்பவளாய்) இருப்பதாய்க் கொள்வது வைணவ தத்துவத்தின் சிறப்பாகும். இது சக்தியின் செயற்பாடு.

இராமாநுசம் தமிழகத்தில் ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். சங்கரரைப்போல இவரும் பிரம்மசூத்திரத்திற்கும் கீதைக்கும் விளக்க உரைகள் எழுதியவர். பிரம்மசூத்திரத்தின் விளக்கவுரையே மிகுபுகழ் பெற்ற ஶ்ரீபாஷியம் ஆகும். வைணவம் பற்றிய கருத்துகள் அனைத்தும் விவரமாய் இந்நூலில் விளக்கப்பெற்றுள்ளன. [28]

(iii) துவைதம் : இது மத்துவ வேதாந்தம் என்றும் வழங்கப்பெறும். ஆன்ம வேறு, இறைவன் வேறு; இரண்டும் என்றுமே ஒன்றாவதில்லை என்பது இவர் தரும் விளக்கம். இத்தத்துவப்படி ஈசுவரன், சீவன், சடம் ஆகிய மூன்றும் அநாதியானவை; உண்மையானவை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை. திருமாலே பரம்பொருள். பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்னும் பிரமாணங்களையே ஒப்புக்கொள்வது இத்தத்துவம். உபநிடதங்களைவிடப் புராணங்களையே அடிப்படையாய்க் கொள்வது. சீவன் முக்தி என்ற கருத்து இவர்களிடம் இல்லை; அதைப்பற்றி அதிகமாய்ப் பேசுவதும் இல்லை. சில ஆன்மாக்களுக்கு உய்தி பெறும் வழியே இல்லை. எப்பொழுதும் இவை நரகத்தில் உழலும் என்ற கருத்தைக் கொண்டது. வீடுபேற்றிலும் ஆன்மாக்களின் வாழ்வு அவர்தம் இயல்புகளுக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வுகளோடுதான் ஆனந்த நிலையைப் பெற முடியும் என்பதும் இக்கொள்கையின் ஒப்ப முடிந்த முடிவு.

நம் நாட்டைப் பொறுத்தவரையில் தத்துவமும் சமயமும் வேறு வேறாய் இருப்பினும் இரண்டிற்கும் அடிப்படை, வேதங்களும் ஆகமங்களும் ஆகும். தத்துவஞானம் என்பது அறிவு நிலையில் இந்த அகிலத்தின் மூலத்தையும், அது வளர்ந்த வழியினையும், மற்ற இயல்புகளையும் ஆராய்வது. சமயம் மக்களின் வாழ்விறகு ஒரு நோக்கத்தையும், அதனை அடையும் வழியையும் வகுப்பது. அதற்காக முழுமுதற்கடவுளை அடிப்படையாய் முன்வைத்து வாழ்க்கை முறையை நெறிப்படுத்ததுவது சமயமாகும். தத்துவ ஞானத்தில் அனுமானிக்கப்பெற்ற முழுமுதற்பொருளுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட இறைவனுக்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டனர் பலர். இவர்களில் முக்கியமானவர்களை மேலே கண்டோம்.

2(அ) ௳. சைவ சித்தாந்தம் : சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாய்க் கொள்ளப்பெறும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்ற மூன்றாகும். பதி - இறைவன், பசு - ஆன்மா, பாசம் - உலகம் (தளை). இம்மூன்றும் நிலையான பொருள்கள். இவை அநாதியாய் இருப்பவை.


“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின்

பதியினைப் போற்பக பாசம் அனாதி.”[29]

என்று தெளிவுபடுத்துவர், திருமூலர். இவை நித்தியமாய் இருப்பினும் ஒன்றற்கொன்று சமமாய் இருப்பது அன்று.

இத்தத்துவப்படி இறைவனுடைய எட்டுக் குணங்கனைக் குறுக்கி சத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் என்று கூறுவர். இறைவன் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் வழிபடப்படுபவன். உருவத்திற்குத் தில்லைச் சிற்றம்பலவனும், அருவத்திற்குச் சிதம்பர இரகசியமும், அருவுருவத்திற் சிவலிங்கமும் எடுத்துக்காட்டுகள். பதி (இறைவன்) தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் காணப்படும் இயல்புகள் பதியின் சொரூப இலக்கணமாகும். பதி, உலகை நோக்கியிருக்கும் போதுள்ள இயல்புகள் தடத்த இலக்கணமாகும். சொரூப நிலையில் இறைவன் ‘பரமசிவன்’ என வழங்கப்பெறுகின்றான். தாயுமான அடிகளின் பரமசிவ வணக்க முதற்பாடலில் சிவத்தின் ‘சொரூப இயல்பு’ நுவலப்பெற்றிருத்தலைக் காணலாம்.

பதி, பரமசிவம் என நிற்குங்கால் அதன் சக்தி ‘பராசக்தி’ என வழங்கப்பெறும். இதன் ஒரு சிறுகூறு உலகத்தைத் தொழிற்பட முற்படும். அப்பொழுது அஃது ‘ஆதிசக்தி’ என வழங்கப்பெறும். ‘திரோதான சக்தி’ எனப்படுவதும் இதுவே. இதுவே திரோதானம் - மறைப்பது. இச்சக்தி உலகத்தைத் தொழிற்படுத்த நினைக்குங்கால் அஃது ‘இச்சாசக்தி’ எனப் பெயர் பெறுகின்றது. அதற்குரிய வழிகளை அறிதலால் ‘ஞானசக்தி’ என்ற திருநாமத்தையும் ஏற்கின்றது. அவ்வழியே தொழிற்படுத்தி நிற்றலால் ‘கிரியா சக்தி’ என்ற திருப்பெயரையும் கொள்கிறது. இவ்வைந்து சக்திகளும் ‘பஞ்ச சக்திகள்’ என வழங்கப்பெறும். இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒன்றாகவும். வேறாகவும், உடனாகவும் இருப்பதாய்க் கூறப்பெறும்.

பசு - ஆன்மா. இது மூன்று வகைப்படும்; மூன்று நிலையில் இருக்கக்கூடியது. ஆணவ மலத்தோடு மட்டும் கலந்திருக்கும் நிலை ‘கேவலம்’ என்று வழங்கப்பெறும். கேவலம் - தனிமை. இந்நிலை இருள்நிலை. இந்த ஒருமலம் உடைய ஆன்மாக்கள் ‘விஞ்ஞானகலர்’ எனப் பெயர் பெறுவர். ஆணவத்தை அடுத்து நிற்பது கன்மம். ஆணவம், கன்மம் என்ற இருமலங்களையும் உடைய நிலை மருள்நிலை. இந்நிலை ஆன்மாக்கள் ‘பிரளயாகலர்’ என வழங்கப்பெறுவர். மூன்றாவது மலம் மாயை. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் உடைய நிலை ‘அருள் நிலை’ இந்த நிலை ஆன்மாக்கள் சகலர் எனப்பெயர் பெறுகின்றனர்.

ஆன்மா எப்போதும் தனித்திருப்பதில்லை. ஒன்று, ஆணவத்தோடு சார்ந்திருக்கும்; அல்லது இருமலம், மும்மலங்களோடு சார்ந்திருக்கும்; அல்லது இறைவனோடு சார்ந்திருக்கும். அஃதாவது, ஆன்மா அஃது அடையும் பொருளின் தன்மையாய் மாறிவிடும். இதனைச் சித்தாந்தம் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று பேசும். ‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்’ (குறள் - 452 - சிற்றினஞ்சேராமை) என்று வள்ளுவரும் உவமையால் விளக்கிப்போந்தார். சைவசமயக் கருத்துகள் அனைத்தும் என் நூலில் விரிவாய் விளக்கப்பெற்றுள்ளன.[30] 

ஆன்மா வீடுபேறு அடைவதற்குச் சைவத்தில் நான்கு வழிகள் உண்டு. முதலாவது, கிரியை எனப்படும் தாச மார்க்கம் அல்லது தொண்டுநெறி. நாவுக்கரசர் கடைப்பிடித்த நெறி இது. இரண்டாவது, சரியை எனப்படும் சற்புத்திர மார்க்கம் அல்லது மகன்மை நெறி. இது ஞானசம்பந்தர் பின்பற்றிய நெறி. மூன்றாவது, யோகம் எனப்படும் சகமார்க்கம் அல்லது தோழமை நெறி. சுந்தரமூர்த்தி இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றார். நான்காவது சன்மார்க்கம் எனும் ஞானநெறி. இஃது ஈசுவரனைப்பற்றிய அறிவு சார்ந்த நெறி. மணிவாசகப்பெருமான் இதற்கு எடுத்துக்காட்டாகின்றார்.

பாசம் என்பது மூன்றாவது தத்துவம். இதில் ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று பொருள்கள் அடங்கியுள்ளன. இவை ‘மும்மலங்கள்’ என வழங்கப்பெறும். மனம் - அழுக்கு. ஆணவமும் கன்மமும் ஆன்மாவைப் பற்றுவன. கன்மம் - வினை. மாயையால்தான் உலகம் உண்டாகின்றது. மாயை கண்ணுக்குப் புலனாகாதது. சைவம் 36 தத்துவங்களைப்பற்றிப் பேசுகின்றது. மாயையிலிருந்து 24 தத்துவங்கள் தோன்றுகின்றன. பஞ்சபூதங்கள் இவற்றில் அடங்கும். 36 தத்துவங்களை 36 மூலப்பொருள்களாகவும் (Elements), அவற்றின் அணுக்களாகவும் (Atoms) கொள்வது அறிவியல் பார்வை. ஆகவே, மாயை என்பது அணுவிற்குள் உள்ள பகுதிகளைக் (Sub-tonic particles) கட்டுவதாய்க் கொள்ளலாம். இன்றைய அறிவியல் உண்மைகள், சமயங்களின் சில விளக்கங்களோடு முழுவதுமாய்ப் பொருந்துவதைக் காணமுடிகின்றது.

2 (ஆ) புறச்சமயத் தத்துவங்கள் : அருமறைகளைச் சாராமல் தனிப்பட்ட முறையில் நம் நாட்டில் வளர்ந்த தத்துவங்கள் ‘புறச்சமயத் தத்துவங்கள்’ என்று வழங்கப்பெறுகின்றன. வேதங்களைச் சாராத இத்தத்துவங்களை அவைதிகத் தத்துவங்கள் என்றும் வழங்கலாம். இவற்றுள் முக்கியமானவை, நான்கு: உலகாயதம், ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பனவாகும்.

(1) உலகாயதம் : ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்ற இத்தத்துவம் வேத விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம். இத்தத்துவவாதிகள் கண்ணாலும் மற்றப் புலன்களாலும் உணரக்கூடியவற்றை மட்டும் ஒப்புக்கொள்பவர்கள். அனுமானிக்கக்கூடிய பொருள்களிலும் ஆப்த வாக்கியங்களிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். கடவுள், ஆன்மா என்பவை புலன்களால் உணர முடியாதவையாதலாலும் அனுமானிக்கமட்டிலும் கூடியவையாதலாலும் உலகாயதர் அவற்றை நம்புவதில்லை. இவர்கள் உலகப்பொருள்களைமட்டிலும் விளக்கியுள்ளனர். இவர்களது விளக்கங்கள் இக்கால அறிவியலறிஞர்கள் மெய்ப்பித்த விளக்கங்களோடு ஒத்திருப்பவை. உலகப் பொருள்களின் உற்பத்தி, அவற்றின் அழிவு, உயிர்பற்றிய கருத்து இவற்றை பன்னெடுங்காலத்துக்கு முன்னரே விளக்கியுள்ளனர்.

உலகப்பொருள்கள் யாவும் நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற நான்கு அடிப்படை பொருள்களாலானவை என்றும், அவை அழியும் போது மீண்டும் அந்த நான்கு பூதங்களாய் மாறிவிடுகின்றன என்றும் இவர்கள் விளக்குவர். ஐந்தாவது பூதமாகிய ஆகாயம் நேரடியாய் உணர முடியாதாதலாலும் அனுமானத்தால் மட்டிலும் உணரக்கூடியதாதலாலும் இதன் இருப்பை இவர் ஒப்புக்கொள்வதில்லை. இன்றும் அறிவியலால் விளக்கப்பெறும் நூற்றுக்கு மேற்பட்ட தாதுப்பொருள்கள் யாவும் இந்தத் நான்கு பூதப் பொருள்களின் வெவ்வேறு விகிதச் சேர்க்கையால் ஆனவை என்றும் அவை இயல்பாகவே அவ்வாறு சேரக்கூடியவை என்றும் விளக்கமும் தந்துள்ளனர். இத்தகைய சில வகை பூதப்பொருள்கள் ஒன்று சேருங்கால் இயல்பாய் ஏற்படும் கூடுதல் குணந்தான் உயிர் என்பது இவர்தம் கருத்தாகும். கர்மம் (புண்ணியம், பாவம்) மறுபிறவி என்பவற்றையெல்லாம் இவர்கள் நம்புவதில்லை. ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்’ என்ற கொள்கையை இவர்கள் ஏற்பதில்லை. உலகில் உயிருடன் வாழும்போது கிடைத்தவற்றை அநுபவிப்பதே நன்று என்பது இவர்தம் கொள்கை. மேலைநாட்டார் கூறும் சிற்றின்ப கோட்பாட்டாளர் (Epicureans) களோடு ஒப்ப வைத்து எண்ணக்கூடியவர்கள் இவர்கள்.

இன்றைய அறிவியலறிஞர்கள், உலகிலுள்ள அடிப்படைப் பொருள்களை 92 வகையான தனிமங்களில் அடக்கிக் காட்டியுள்ளனர். இவை தம்மொடு தாமும் பிறிதுமாய்க் கலந்து அணுத்திரளைகள் (Molecules) ஆகின்றன. இத்தகைய கலவைகள் உலகில் ஏழு இலட்சத்திற்கு மேல் உள்ளனவாம். இத்தனை வகையாகப் பல்கிப் பெருகியுள்ள உலகம் 92 தனிமங்களில் (Elements) அடங்கிவிடுவது வியப்பினும் வியப்பே. 

உலகிலுள்ள அடிப்படைப் பொருள்கள் 92 ஆனாலும் வழக்கில் வருபவை பன்னிரண்டுக்குமேல் இல்லை. ஆகையால் இந்தக் கணக்கை உற்று நோக்கல் வேண்டும். உலகில் 1000 பாகத்தில் ஏறக்குறைய பாதி ஆக்சினென் என்ற உயிரியம் 492/1000 பங்கு. இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு. நீரில் ஒன்பதில் எட்டுப் பங்கு, இது கல்லிலும் உண்டு. சிலிகன் (Silicen) என்பது 257/1000 பங்கு, இது தரையில் கால் பங்கு. மணல் என நாம் வழங்குவது சிலிகனோடு உயிரியம் சேர்ந்த கலவையாகும். உலகில் அலுமினியம் 74/1000 பங்கு. இது மண்ணில் உண்டு. உலகில் இரும்பு 47/1000 பங்கு உயிரியத்தோடு கலந்தே கலவையாய்க் கிடக்கின்றது. கால்சியம் என்ற சுண்ணாம்புச்சத்து உலகில் 34/1000 பங்கு. சோடியம் என்பது உலகில் 26/1000 பங்கு. இது சோற்றுப்பிலும் உள்ளது. பொட்டாசியம் என்ற உப்பு அபிரேகம் முதலியவற்றிலும் உண்டு. இது உலகில் 24/1000 பங்கு. மக்னீஷியம் என்பதனை பெட்ரோமாக்ஸ் விளக்கின் திரியாய் எரிவதற்கு வெள்ளைச் சல்லடை உறையாகப் போட்டிருக்கக் காணலாம். இது கடல் நீரிலும் உண்டு. இஃது உலகில் 19/1000 பங்கு. ஹைட்ரஜன் நீரிய ஆவி நீரில் உள்ளது என அதன் பெயரே கோள் சொல்கிறது. (Hydrogen = hydro - water;gen - generated) இஃது உலகில் 9/1000 பங்கு. இது மண்ணிலும் மணலிலும் உண்டு. குளோரின் என்பது 2/1000 பங்கு. இது சோற்றுப்பில் நாம் மேலே கூறிய சோடியத்தோடு கலவையாய்க் கிடக்கின்றது. பாஸ்வரம் என்பது எரிகந்தகம். இது 1/1000 பங்கு. இஃது எருவுக்கு இன்றியமையாதது. இஃது நாம் உண்ணும் வெண்டைக் காயில் உண்டு. மூளைக்கு நல்லது என்று சொல்லுவார்கள். இந்த 12 பொருள்களே உலகில் 991/1000 பங்கானால் மிகுதி நிற்கும் 80 அடிப்பொருள்களும் 9/1000 பங்கு அளவே இருக்கக் காண்கின்றோம். பொன், வெள்ளி, ஈயம் என்றெல்லாம் பேசுகின்ற நாம், உலகில் பரந்து கிடக்கும் பொருள்களை விட்டு எங்கெங்கெல்லாமோ ஓடி அலைகின்றோம். ஆதலின், இதில் வாராத பொருள்களைப்பற்றியும் அறிய வேண்டும். ஆனால் அது முழு அறிவியலுக்கு இட்டுச் சென்றுவிடுமாதலால் அதனை இத்துடன் நிறுத்துவோம். இதனை வைணவம் அசித்து என்று வழங்கும்; சைவ சித்தாந்தம் பாசம் என்று குறிப்பிடும். பாதம் அல்வாவைச் சுவைக்கின்றோம். இஃது அசித்துதான். ஆண்டவன் படைப்பில் அசித்தும் எவ்வளவு சுவையாகப் பயன்படுகின்றது, பாருங்கள். சித்தாந்தம் பாசம் என்கின்றது. உண்மைதானே!

(2) ஆசீவகம் : அழிந்தொழிந்துபோன இந்தச் சமயம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டுவிட்டது. இது வடஇந்தியாவில் மகத நாட்டில் தோன்றியது. இச்சமயத்தை நிறுவியவர் மற்கலி ஆருக மதத்தை என்பவர்[31] (சமணத்தை) நிறுவிய மகாவீரரும், புத்த மதத்தை நிறுவிய கௌதம புத்தரும் வாழ்ந்த காலத்தில் இருந்தனர். மகாவீரர் ஆருக மதத்தை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி, அவரிடம் சென்று தம்மை ஆட்கொள்ள வேண்டினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட போக்குகளை அறிந்த மகாவீரர் அதற்கு முதலில் உடன்படவில்லை. ஆயினும், எவ்வாறோ உடன்பாடு பெற்றுச் சில காலம் அவரிடம் தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்து சென்று, ஒரு புதிய சமயத்தை உண்டாக்கினார். அதுதான் ஆசீவகம் என்பது. ஆருகத சமயக் கொள்கைகள் சிலவற்றையும் தாம் உண்மை என்று கண்ட சிலவற்றையும், திரட்டி, முன்னதனுடன் சேர்த்து இந்தப் புதிய ஆசீவக மதத்தை நிறுவினார் எனக் கூறப்பெறுகின்றது.

மகாவீரரும் புத்தரும் இவர் காலத்தவர்களாயினும் இவர்கள் இருவருக்கும் முற்பட்டவர் மற்கலியே என்பது பாலிபீடகங்களாலும் சமண சூத்திரங்களாலும் அறியப்பெறுகின்றது. மற்கலி சற்றேறெக்குறைய கி.மு. 500 இல் காலமானதாய்க் கருதப்பெறுகின்றது. இதற்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் மகாவீரர் வீடு பெற்றார் என்பர்.இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் பெருமான் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர், பெளத்தர், சமணர், வைதிகர் ஆகிய இந்த சமயத்தவர்களுள் எப்போதும் சமயக்காழ்ப்பு இருந்துகொண்டிருந்ததாய் அறியக் கிடக்கின்றது. பாலி, பாகதம், சிங்களம், தமிழ் ஆகிய நான்கு மொழிநூல்களிலும் ஆசீவகம்பற்றிய செய்திகள் மிகுதியாய்க் காணப்பெறுகின்றன.

ஆசீவகம் - பொருள் : ‘ஆசீவகம்’ என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்களைப் பகர்ந்துள்ளனர்.

(i) சீவ - வாழ்க்கை; அ - சீவ - வாழ்வின்மை. ஆதலின், பிறர் தயவில் (ஐயமேற்று) வாழும் துறவி எனப் பொருள் கண்டார் பர்னோவ் (Burnouf).

(ii) சீவனை உண்ணாதார் (புலால் மறுத்தவர்) ஆசீவகர் எனப் பொருள் உரைத்தார் லேசன் (Lassen) என்பார்.

(iii) ‘ஆசீவ’ என்ற சொல் வாழும் முறை - இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையினை உரைக்கும் என்று விளக்கம் காண்பார் ஹார்ன்லே (Hoernle) என்பார்.

ஆசீவகக் கொள்கைகள் : இந்தச் சமயத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்தச் சமயத்தின் பகைவர்களால் எழுதப்பெற்றவை. ஆகவே, இவை நடுநின்று கூறாமல் சார்புபற்றிக் கூறியுள்ளன என்று கருதப்பெறுகின்றது. மணிமேகலை என்ற பௌத்த நூலிலும் (சமயக்கணக்கர் தந்திறம் கேட்ட காதை), நீலகேசி என்ற சமண நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்), சிவஞானசித்தியார் என்ற சைவ சாத்திர நூலிலும் (பரபக்கம் - ஆசீவக மதம்) இந்தச் சமயக் கொள்கைகள் எடுத்துக்காட்டப்பெற்று மறுக்கப்பெற்றுள்ளன. இக்கொள்கைகளின் சுருக்கம் ஈண்டு, சில தலைப்புகளில் காட்டப்பெறுகின்றது.

(i) அணுக்கொள்கை : இக்கொள்கையினை முதன்முதலில் அறிந்துரைத்த சிறப்பு ஆசீவகர்க்கு உரியது. நிலம், நீர், தீ, வளி, இன்பம், துன்பம், உயிர் என்ற ஏழுவகை அணுக்களால் அமைந்தன என்பது மற்கலியின் கொள்கையாய்ப் பிடகம் பேசுகின்றது. ஆகாயபூதம் ஆசீவகர்க்கு உடன்பாடில்லை. மணிமேகலையில் வரும் ஆசீவகவாதி ‘மற்கலி நூலின் வகை’ இதுவென எடுத்துரைக்கும்போது, ‘துரந்தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு’ (மணிமேகலை 27:113) என்றும், ‘இன்பமும் துன்பமும் இவையும் அணுவெனத்தகும்’ (மேலது 27:163) என்றும் பாலிபிடகத்தின் வழிநின்று தம் கருத்தினை உரைத்தல் உளங்கொள்ளத்தக்கது. அணுவின் இயல்புகளை,


“ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா…
…………………முளைக்கும்” (மேலது 27 : 126 - 136)

என்று இயம்புதலைக் காணலாம். ஓர் அணு ஓர் அணுவில் புகாவிடினும் அணுத்திரளைகளாய் இணைதல் உண்டு என்பது ஆசீவகரது கொள்கையே (மேலது 27:116-17), ஆசீவகசின் கருத்துப்படி தனித்த ஓர் அணு தெய்வக் கண்ணுக்குத்தான் புலப்படும். அணுத்திரளைகளான பொருள்தான் (Molecule) அனைவருக்கும் புலப்படும். இக்கருத்தினை,

“ஓர்அணு தெய்வக் கண்ணோர் உணர்குவர்
மாலைப் போதில் ஓர்மயிர் அறியார்
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்” (மேலது 27:146-9)

என்று ஆசீவகவாதியின் விளக்கமாய் அமைகின்றது. சாத்தனார் காலத்தில் ஆசீவகத்தில் அணுக்கொள்கை தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆசீவகரைப் பின்பற்றியே சமணர்களும் அணுக்கொள்கையை வளர்த்துக்கொண்டனர்.

(ii) நியதிக்கொள்கை : தன் இச்சைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களால் செயல்கள் தீர்மானிக்கப்பெறுகின்றன என்ற கருத்தில் ஆசீவகர் நியதிக் கொள்கையினைக் கடைப்பிடித்தனர். உலகாயதத்தைத் தவிர, எல்லாச் சமயங்களும் வினைக் கொள்கையினை ஏற்கின்றன. ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி கோகாலர், வினைகள் மனிதனின் இன்பதுன்பங்களை ஆக்கவில்லை என்றும், ஒத்த ஆற்றலுடைய இருவர் புரியும் ஒரே வினை ஒருவர்க்கு இன்பமும் மற்றவர்க்குத் துன்பமும் தருதலால், வினைகள் பயன்தரவில்லை என்றும், நியதிப்படிதான் இவை விளைகின்றன என்றும், உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் நியதியின் ஆற்றலால்தான் நடைபெறுகின்றன என்றும் கருதுகின்றார். “எவ்வளவு முயன்றாலும் உளதாதலைப் போக்கவோ இலதாதலை ஆக்கவோ இயலாது; எந்தச் செயலும் வினைகளால் தீர்மானிக்கப்படவில்லை; நியதியால்தான் முடிவு கட்டப்பெறுகின்றது; ஆதலின் மனித முயற்சிகள் பயனற்றவை. வலியார் மெலியார் அனைவருமே நியதிக்கும் அதன் வெளிப்பாடாகிய எதேச்சை (Chance) சுபாவங்கட்கும் முழுமையாய்க் கட்டுப்பட்டவர்கள். நியதி வெளிப்படுமிடத்து எதேச்சையாகவும் சுபாவமாகவும் தோன்றும்” என்பது இவர் கருத்து. ஆதலின், ஆசீவகம் எல்லா உயிர்களும், ஒரு கால எல்லைவரையில் நன்மை தீமைகளைக் கட்டாயம் நுகர்ந்து, பின்னர் வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட கால இறுதியில் விடுதலை அடையும் என்ற பரந்த நியதிக் கொள்கையினைத் தெளிவுறுத்துகின்றது. நியதிக் கொள்கையும் வினைக்கொள்கைகளும் அருமறைகளில் காணப்பெறவில்லை. இவ்விரண்டும் திராவிடப் பெருமக்களுக்கு உரியன என்று மேலை நாட்டு இந்தியத் சிந்தனையாளர்கள் (Indologists) ஆய்ந்து கூறிய முடிவு.

ஆசீவகரின் நியதிக் கொள்கையின் கருத்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம் - 192) என்ற கணியன் பூங்குன்றனாரின் புறப்பாடலில்,

“தீதும் நன்றும் பிறர்தர வாரா
..................................
கல்பொரு திரங்கும் மல்லற்பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் (அடி 28-11)

என்ற அடிகளில் காணலாம். இவ்வடிகளில், ஓடும் வெள்ளத்துடன் ஒத்தோடும் மிதவையினை, நியதிப்படி செயலாற்றும் உயிர்க்கு உவமையாய்ச் சொல்லப்பட்டிருத்தல் காணத்தக்கது. நியதியை ‘முறை’ என்று அழகு தமிழால் சுட்டுவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. மனிதச் செயல்கள் நியதியாய் முடிவு கட்டப்பெறுபவை என்பதும், நியதியை மீறியோ எதிர்த்தோ செல்லுதல் இயலாது என்பதும் இவ்வுவமையால் கவிதைச்சுவை கொப்புளிக்கக் கணியன் பூங்குன்றனார் தெளிவுறுத்தல் அறியப்பெறும்.

(iii) சுபாவக் கொள்கை : இக்கொள்கையும் ஆசீவகர்க்குரியது. அண்டம் சுபாவத்தால் தோன்றப்பெற்றது என்றும் ஒவ்வொன்றும் சுபாவம் ஒன்றனால்தான் வெளிப்படும் என்னும் ஆசீவகர் கருதினர். மனித முயற்சி பயனற்றது என்பது இவர் தம் உறுதிப்பாடு. இதனால் ஆசீவகம் மனித முயற்சியைப் புறக்கணித்தது என்று கருதுதல் கூடாது. மனிதன் தான் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புரிந்துகொண்டுதான் இருத்தல் வேண்டும்; ஆனால், அவையெல்லாம் இயல்பாய் நிகழ்வன என்று எண்ணுதல் வேண்டும். சுபாவ வாதத்தைத் தமிழ்ச் சமயக் காப்பியமாகிய சீவகசிந்தாமணியில் காணலாம்.

(iv) உய்யும் வழி : பிறப்பு இறப்புகளினின்றும் உய்வதற்குரிய ஆசீவக முறை ‘சம்சார சுத்தி’ என்று குறிக்கப்பெறும் (பாலிபிடகம்). “உய்தி பெற குறுக்கு வழி இல்லை. நியதிக்காக காத்திரு. ஒருவன் நுகரும் இன்பமும் துன்பமும் நியதியால் கிடைப்பன. எல்லா உயிர்களும் மாறிமாறிப் பிறத்தலால் தூய்மை பெறுகின்றன. ஆதலின், வருவது குறித்து ஆவலுற வேண்டாம் அது தானே வரும்” என்பதே ஆசீவகரின் கொள்கையாகும்.

(V) மண்டல மோட்சம் : ஆசீவகக் கொள்கைக்குத் தீங்கு நேரின் அவ்வப்பொழுது அதனைக் காக்கவும் பரப்பவும் தீர்த்தங்கரர் அவதாரம் எடுப்பார் என்பது ஆசீவகரின் நம்பிக்கை. அவதாரக் கொள்கை என்பது இந்தியச் சமயங்கள் பலவற்றிலும் காணப்பெறும் ஒரு பொதுக் கூறு ஆகும். இத்தீர்த்தங்காரை மண்டலர் என்று குறிப்பிடுவர். இங்ஙனம் மீண்டும் தீர்த்தங்கரர் தோன்றுவதற்குக்கூட நியதியே காரணமாகும்.

உலகில் இவ்வளவு ஆன்மாக்கள் இருத்தல் வேண்டும் என்னும் வரம்பினைக் காக்கவும், விடுபட்ட உயிர்களை மீண்டும் பிறக்கவும் நியதிதான் வகை செய்யும். நியதியின்படி திரும்பாத விடுதலை பெற்ற சில ஆன்மாக்களும் உண்டு. அவர்கள் ‘செம்போதகர்’ என்ற திருநாமத்தால் வழங்கப்பெறுவர். அவர்கள் அண்டத்தின் அப்புறத்தில் இருப்பர் என்றும், அவர்கள் சமண தீர்த்தங்கரருக்குச் சமானமானவர் என்றும் சிவஞான சித்தியார் பரபக்கம் பகர்கின்றது (பா.175, 164). மகாயான பௌத்தத்தில் போதிசத்துவரும் வைணவத்தில் அவதாரபுருடரும் ஆசீவகத்தில் மண்டல புருடரும் ஒரு வகையில் ஒரு நிலையினர் என்று கருதலாம். ஆசீவக நிர்வாணப்பேறுகூட நியதிக்குக் கட்டுப்பட்டதேயன்றி மற்றைய சமயங்கள் மொழிவன போலக் கட்டற்ற நிலையன்று. மண்டல மோட்சக் குறிப்பு மணிமேகலை கட்டும் ஆசீவகத்திலும் உண்டு (27:158).

(3) சமணம் : அருமறைக் கூறுகளை ஒப்புக்கொள்ளாத தத்துவங்கள் கொண்டது, சமணம் : இதனை நிறுவியவர், மகாவீரர். சங்க காலத்திலிருந்தே தமிழகத்தில் ‘சமணம்’ பரவி இருந்தது. வைதிக ஆகம நெறியினரைப் போலச் சமணர்கள் பரம்பொருள் வழிபாடு கொண்டிலர். பிறப்பினின்றும் விடுபட்ட ஆன்மாவை ‘அருகன்’ எனக் கொண்டு அவனையே முழுமுதற்பொருளாய்ப் பணிந்தேத்தும் மரபு சமணர்க்குரியது. இவர்கள் வழிபடும் திருக்கோயில் நிக்கந்தக் கோட்டம், ஶ்ரீகோயில் என்று குறிப்பிடப்பெறும். இளங்கோ அடிகள் (சமணர்) தங்கியிருந்த இடம் ‘குணவாயிற்கோட்டம்’ என்பது சிலப்பதிகாரத்தால் அறியும் செய்தியாகும். அக்காலத்தில் கடவுட்கோயில்களையும் ‘கோட்டம்’ என்ற பொதுச்சொல்லால் குறித்தனர். புறநானூற்றில் (299) பொன்முடியார் முருகன் கோயிலை ‘அணங்குடை முருகன் கோட்டத்து’ குறிப்பிட்டிருத்தலால் இதனை அறியலாம். சென்னையில் கந்தசாமிக் கோயிலை வள்ளல் பெருமான் ‘கந்தகோட்டம்’ என்று வழங்குதல் காண்க.

அருகன் கோயிலை ‘நிக்கந்தக் கோட்டம்’ என்று குறிப்பிடுவர். இளங்கோ அடிகள், ‘நிர்க்கிரந்த’ என்ற வடமொழியின் பாகதச்சிதைவாய் ‘நிக்கந்தன்’, ‘நிகண்டன்’ என்ற சொற்கள் வழங்கும். இச்சொல் ‘கிரந்தம் இல்லாதவர்’ எனப் பொருள்படும். சமண மரபுவழிச் செய்தியின்படி அங்கம் 12, உபாசங்கம் 12, பிரகீரணம் 10, சேத சூத்திரம் 6, மூலசூத்திரம் 4. தந்தி, அனுயோகதாரம் ஆகிய நூல்கள் சித்தாந்தம் அல்லது ஆகமம் எனப் பெயர் பெறும் என்றும், இவற்றை மகாவீரர் அருளிச் செய்தனர் என்றும் அறியப்பெறும். ‘அங்கம் பயந்தோன்’ என்பது இளங்கோ அடிகளின் திருவாக்கு.

மகாவீரரின் (24ஆவது தீர்த்தங்கரர்) வாய்மொழிகளுக்கு நூல் வடிவம் தந்தவர்கள் அவரது உத்தம சீடர்கனான கணாதரர் பதினொருவர். இந்நூல்களேயன்றி 14 பூர்வங்களும் மகாவீரரால் கணாதரர்களுக்குப் புகட்டப்பெற்றன என்றும், கி. பி. 4ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் பாடலிபுரத்திலிதத்து ஆண்ட காலத்தில் நேரிட்ட பஞ்சம் காரணமாய் இவை அழிந்துபட்டன என்றும் அறிஞர் கருதுவர். இம்மன்னன் காலத்தில்தான் பத்திரபாகு என்ற சமணப்பெரியாரின் தலைமையில் எண்ணாயிரம் சமணர்கள் தென்னாடு போந்து ‘சிரவண பெல் கொள’ (கர்நாடகம்) என்ற இடத்தில் தங்கினர் என்றும், தென்னாட்டிலும் இலங்கையிலும் சமணம் பரவியதற்கு இவர்களே காரணம் என்றும் அறிகின்றோம்.

தாயகத்தில் தங்கிவிட்ட சமணத்துறவியர் அனைவரும் தூலபத்திரர் என்ற பெரியாரின் தலைமையினை ஏற்றனர். பஞ்சம் தணிந்ததும் பாடலிபுரத்தில் தூலபத்திரரின் தலைமையில் சமணச் சான்றோர் அனைவரும் கூடி மேற்கூறிய அங்கம், உபாங்கம் முதலிய நூல்கள் பலவற்றையும் தொகுத்தனர். எனினும் தாயகம் திரும்பிய பத்திரபாகுவின் கூட்டத்தார் இந்நூல்களை மகாவீரரின் வாய்மொழிகளாய் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அன்றியும் துறவியார் வெள்ளாடை உடுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தூலபத்திரர் குழுவும் ஆடையும் மிகை என அம்மணமாய் நின்ற பத்திரபாகுவின் குழுவும் முறையே கவேதாம்பர, திகம்பரப் பிரிவுகளுக்கு வித்திட்டன என்பதையும் அறிய முடிகின்றது. இக்கொள்கை வேறுபாடு பழமையானதுதான். 23 ஆவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் வெள்ளாடை உடுத்தலையும், 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரர் ஆடையின்மையையும் (தர்க்கிரந் தத்துவம்) வற்புறுத்தினர். கி. பி. 79 (அல்லது 82) இல் திகம்பர, சுவேதம்பரப் பிரிவுகள் நிலைபெற்றன. சுவேதம்பரர்களின் கிரந்தங்களை உடன்படாத திகம்பரர்களுக்கு நிர்க்கிரந்தர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. மேலும் ‘கிரந்தம்’ என்ற சொல் நூல், ஆடை என்ற பொருள் தருதலின் ஆடையற்ற திகம்பரருக்கு ‘நிர்க்கிரந்தர்’ என்ற காரணப் பெயர் வழங்கியதாகவும் கருதலாம்.

சமணர்களின் கொள்கைகள் : உலகப் பொருள்கள் உண்டாதற்கு - அஃதாவது, அவற்றின் தோற்றத்திற்கு மூலப் பொருள் ஒன்றன்று, பல என்பது சமணர்களது கொள்கை. பிரம்மம் அல்லது கடவுள் என்ற ஒன்றுதான் அனைத்துத் தோற்றத்திற்குக் காரணம் என்ற கருத்தைச் சமணர்கள் ஒப்புக்கொள்வதில்லை. சமணக் கொள்கைப்படி உலகிலுள்ள பொருள்கள் யாவும் (1) உயிருள்ளவை (2) உயிரற்றவை (சீவன், அசிவன்) என்ற இருபிரிவுகளில் அடங்கும். ஆன்மா என்ற ஒன்று உண்டு என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், ஒவ்வொரு சீவனிடத்தும் ஒவ்வோர் ஆன்மா உள்ளது என்று கூறுவர். சீவன் (ஆன்மா) ஓர் உயிருள்ள உடலில் சார்ந்திருக்கும்போது அஃது அந்த உடல் முழுவதும் பரவி இருக்கும். அஃது உடலுடன் இருக்கும்போது கட்டுண்டு அறிவு மழுங்கி இருக்கும்; உடலை விட்டுப் பிரிந்திருக்கும்போது தெளிவாகவும், ஞானத்துடனும், சாந்தமாகவும், புலன்களால் கட்டுப்படாமலும் இருக்கும். உடலுடன் சார்ந்திருக்கும் ஆன்மாவைப் பெத்தநிலையிலுள்ளது என்றும், உடலை விட்டுத் தனித்திருக்கும்போது ஞானநிலையில் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுவர். ஆசீவகத் தொடர்பால் மழுங்கிய ஞானத்தை ஒளியூட்ட முயல்வதே வாழ்க்கையின் நோக்கம். உடலில் சிக்குண்டு அறிவு மழுங்குவதற்குக் காரணம், கன்மம்; வினை. இதனைப் போக்க வழி காணல் வேண்டும். இந்நூல் ஆன்மாவைப்பற்றிய சமணதத்துவம், உலகிலுள்ள எல்லாப்பொருள்களுக்கும் சீவன் உண்டு மரம், உலோகம், கற்கள் முதலிய யாவும் சீவத் தன்மையுடையவை ஆனால், அவற்றின் சீவத்தன்மை சற்றுக் குறைவாகவே இருக்கும் என்பதுவே அவர்களுடைய சித்தாந்தம். கடவுள் என்ற ஒன்று உண்டு என்ற கருத்தைச் சமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆன்மாக்களின் வகைகள் : சமணர்கள் உயர்நிலை ஆன்மாக்களை மூன்று வகைகளாகப் பகுத்துரைப்பர்.

(i) சித்தர்கள் எனப்படும் விடுபட்ட ஆன்மாக்கள். இவர்களுள் தீர்த்தர் அல்லது தீர்த்தங்கரர் முதன்மையர். சாமானிய சித்தர்கள் அடுத்த நிலையினர்.

(ii) எல்லாக் குணங்களிலும் அறிவிலும் முழுகைத்தன்மை எய்திய அருகர்கள் (தீர்த்தங்கரர்கள்)[32]

(iii) சிரமணர் எனப்படுவோர். இவர்களும் மூவகையினர்.

(அ) ஆசாரியர் அல்லது கணாதரர்.

(ஆ) உபாத்தியாயர் அல்லது அத்யாபகர்.

(இ) சாதுக்கள்

குந்தகுந்தாச்சாரியர் தென்னாட்டவர் என்றும், இவருக்கு ஏலாச்சாரியர் என்ற மறுபெயரும் உண்டென்றும், திருக்குறளின் ஆசிரியர் இவரே என்றும் சமணர்கள் சாற்றுவர். இவர்தம் பிரவசன சாரத்தின் 41ஆம் பாடலில் அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவர்க்கும் வணக்கம் கூறியுள்ளார். ஆதலின், இதே நூலின் முதற்பாடலில் குறிக்கப்பெறும் கணாதரர் என்பார் ஆசாரியர் என்றும், அத்யாபகர் என்பார் உபாத்தியாயர் என்றும் அறிகின்றோம். மகாவீரரின் பதினொரு தலையாய சீடர்தாம் சமண கணங்களுக்குத் தலைவர்களாய் விளங்கினர். இவர்கள் இந்திர பூதி, அக்கினிபூதி, வாயுபூதி முதலியோராவர். தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் இடபதேவர், நேமிநாதர், மகாவீரர் முதலியோரின் வழிபாடு பெருவழக்காய் இருந்தது. கணாதாரரேயன்றி ஆசாரியர் தலையினை அடைந்த பெருமக்களையும் ஆதாரங்களை அறிவுறுத்தி உய்திக்கு உறுதுணையாய் நின்ற ஏனைய மூலனாயும் அத்திசையில் நினைத்துத் திகம்பரர் வணங்கினதாகச் சொல்வர். இதற்குச் சிலப்பதிகாரத்திற்கு முன்னும் பின்னும் எழுந்த பாகத தமிழ்ப் பனுவல்கள் சான்று பகிர்கின்றன.

உலகம் - படைப்பு : கடவுளே இல்லை என்னும்போது அசின் என்ற உயிரத்த பொருள்கள் எவ்வாறு தோ ஆேகின் உதவுகின்தது. தம் புலனாள் அதிபவை உலகப் பொருள்கள். அவை பல பொருள்கள் சேர்க்கையால் ஒன்றாகின்றன: ஒன்று - து பல பொருள்களாகின் அழியும்போது துண்ணி: .ெ

தி மாதி :ைத்துகொண்டே உள்ளன. அத்தகைய சிறிய ன் புற்கலம் எனக் குறித்தனர். இவை

மனை அடையும் பொருள்களை ஸ்கத் றன. அவை மீண்டும் ள்களாகின்றன. இந்த வட்டங்கள்

ஒன் ஒசேர்ந்து முழுப் தங்கள் என்ற பெயரால் வழங்கினர். ஸ்கந்தங்களின் சேர்க்கையே ம். இதனை ககாஸ்கந்தம்’ என்று குறிப்பிடு


இவர்தம் அஜக்கொள்கை : ஒரு பொருளை மீண்டும் த்துக்கொண்டே போனால் கண்ணுக்குப் புலனா காத துகள்களாகும். இத்துகள்களே அணுக்கள். இந்த அணுக்கள் தசமாகவே ஒன்றுசேர்பவை: புதுப்பொருள்களாய் மாறுபவை. இதுவே இவர்தம் அணுக்கொள்கையின் சுருக்கமாகும். அணுக்களின் கூட்டுப் பொருள் اகளே ஐம்பெரும் பூதங்களாகும். இவையே உலகம் உண்டாக:தத்கு மூலப் பொருள்களாகும். உலகத் தோற்றத்திற்குப் புற்கலங்களும் ஸ்கந்தங்களும் மட்டிலும் போதா: காலம், இடம் (Time and Space) என்பவை பும் தேவை என்ற எண்ணமும் கொண்டவர்கள். இந்த 41. இந்த அனுக்கொள்கையை வைசேடிகர்களும், நியாய சமயத்தினரும், கிரேக்ஸ் தாட்டுத் தத்துவ ஞானிகளாகிய லெயுசிபஸ், டெமாகிரிட்டஸ் என்:ே கும் ஆதரித்துள்ளனர். இவர்களது கொள்கையே இன்று மேலைதாட்டு அறிவியல் விளக்கமாய் இயற்பியல், வேதியியல் இதைகளில் அதுக்கொன்கை (Atomic theory) என்ற திருநாமத்தில் வளர்ந்து ஓங்கியுள்ளது. உன்னதமான எண்ணத் தெளிவு. மிக உன்னதமான அனுமானம், உயர்ந்த சிந்தனைத் தெளிவு. காலமும் இடமும் அணுக்களாலானவை அல்ல என்பதும் இவர்தம் கருத்து. சுருங்கக்கூறின் உலகத்தோற்றத்திற்கு அணுக்களாலான ஸ்கந்தங்களும் (பஞ்ச பூதங்களும்) அணுக்களைச் சாராத கால, இடப் பரிமாணங்களும் இன்றியமையாதவை என்று உணர்த்தியவர்கள் சமணர்கள். இவர்களது விளக்கம் பற்றிய அறிவியலோடு ஓரளவு பொருந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகாயம் எனப்படும் விண்வெளிபற்றிய இவர்தம் கருத்தையும் காண்போம். இவர்கள் விண்வெளியை இருபகுதிகளாய்க் காண்பர். ஒன்று, இயற்பியல்பற்றிய பகுதி, இதனை லோகாகாசம் என்பர். மற்றொன்று, அலோகாகாசம் என்பது. இது லோகாகாசத்திற்குமேல் அமைந்திருப்பது. உடலாகிய தளைகளினின்றும் வினைகளினின்றும் விடுபடும் ஆன்மா, அலோகாகாசத்தை ஞானானந்த இருப்பிடமாய்க்கொண்டு தங்கும் என்பது இவர்தம் தத்துவக் கருத்தாகும்.

சக்திகள் : உலகத் தோற்றத்துக்கு மூலப் பொருள்கள் மட்டுமேயன்றிச் சக்தியும் இன்றியமையாதது என்று உணர்ந்தவர்கள் சமண பெருமக்கள். இந்தச் சக்திகளுள் ஒன்று இயக்கு சக்தி; மற்றொன்று நிறுத்து சக்தி, இவற்றை இவர்கள் முறையே தர்மம், அதர்மம் என்ற பெயர்களால் குறிப்பிடுவர். தர்மம், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருளை இயக்க வல்லதேயன்றி நிலையான ஒரு பொருளை இயக்காது. இம்முறையில் அதர்மமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருளை நிறுத்தாது. இது நின்லையானவற்றை அதே நிலையில் இருக்க உதவுவது.

உலகம் அணுக்களாலாவதற்குத் துணைநிற்பவை. காலம், இடம் (ஆகாயம்), தர்மம், அதர்மம் என்பவை : இங்ஙனம் அணு, காலம், இடம், தர்மம், அதர்மம் என்ற ஐம்பொருள்களின் அடிப்படையில் தோன்றும் பொருள்களே அசீவன் என்பது. சீவன் என்பது ஞானமாகிய முற்றறிவின் நிலை.

வினைக்கொள்கை : சமணத்தில் வினைக்கொள்கை சிறப்பிடம் பெறுகின்றது. காப்பியப் பாவிகங்களுள் ஒன்று ‘ஊழ் வினை உருத்து வந்துாட்டும் என்ற உண்மையாகும். சமணர்க்கு ஆழமுதற்கடவுள் உடன்பாடில்லையாதலின். ஊழ்வினை தானே உருவெடுத்துக் கருத்தாவைப் பயன் நுகரச்செய்யும் என்று எண்ணினர். சிலம்பில் சாரணர் கூறும் சமயப் பேருரையில்,

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை இட்ட வித்தின் எதிர்த்துவத் தெய்தி ஓட்டும் காலை ஒழிக்கவும் ஒன்னாது." (10:171-3)

என ஆகும் பகுதியால் அறியலாம். ஒருவர் புரியும் செயல்களின் விளைவு அவருக்கு வந்து சேருங்கால் யாவராலும் நீக்க முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதுதான் விளையும். 'வல்வினை' என்றதால் வினையின் வலிமை போதரும். ஒழிக்கவும் ஒண்ணாது என்பதால் அதன் பிடியினின்றும் தப்ப முடியாது. பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்ததை 'வல்வினை அனைத்த கோல்' என்றார். இளங்கோ அடிகள். வள்ளுவரும் ஊழிற் பெஇவலி என்றார். செய்த வினையை போக்க 4. விசாலும் முடியாது, அதுபவித்தே தீர வேண்டும் என்ற உறுதியான வினைக்கொன் கையினைச் சமணத்தில் காண்கின்றோம்.

கன்மமும் ஓர் இயற்பியல் பொருள் என்பது இவர்களது முடிவு. கன்மமும் ஒரு புத்கலம் போன்றது. அதன் அணுக்கள் உலக முழுவதும் பரவியுள்ளன. சீவனைச் சார்ந்திருக்கும் கன்மம் வேறு. உடலோடு சார்ந்திருக்கக்கூடிய கன்மம் வேறு. இவை இரண்டும் பால கன்மம். திரவிய கன்மம் என முறையே குறிப்பிடப்பெறுகின்றன. உடலை விட்டுச் சீவன் நீங்கும் போது கன்மம் அதனைத் தொடர்ந்து செல்லும். இறுதியாய், சீவன் வீடுபேறு அடையும்போதுதான் அது நீங்கும். வீடுபேறு அடையாமல் மறுபிறப்பிற்கு வந்தால் சீவனோடு கன்மமும் தொடரும்.

விடுதலைக்கு வழி : பற்றுதான் பிறப்பிற்குக் காரணம்: பாசம் நீக்கினால் பற்று அகன்று போகும். "அற்றது பற்றெனின் உற்றது வீடு"(திருவாய் 1:2:5) என்பது திருவாய்மொழி. அருகதேவன் அருளிய ஆகமங்களைக் கற்றுணர்ந்து மெய்யுனர்வாகிய ஒளியினைப் பெற்றால்தான் பிறவிச் சிறையினின்றும் விடுதலை பெற வழி அமையும். இதனைச் சாரணர்,

பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விசைத்தொனி
ஒதிய வேதத்து ஒளியுறின் அல்லது
போதார் பிறவிப் பொதியதையோ.........'4?

எனக் கவுந்தியடிகளுக்குத் தெளிவுறுத்தல் காணலாம். இத்தியத் தத்துவங்களுள் பலவும் அவா அறுத்தலை விடுதலைக்கு வழியாய் வகுத்திருத்தலின் இக்கருத்தின் பொதுமை உணரப்படும்.

மானிடர் வீடுபேறு அடைய வேண்டுமாயின், புதிய கன்மங்கள் மேலும் சேர விடாதபடி செய்யவும், சேர்ந்த கன்மங்களைக் கழிவு செய்யவும் முற்பட வேண்டும். முன்னதைச் சமணர்கள் 'சமுவரம் என்பர்; பின்னதை "திர்ச்சரம் என்து வழங்குவர். வீடுபேற்றை அடைய (1) சரியான கொன் கை (சம்யக் தரிசனம்), (2) சரியான ஞானம் (சம்யக் ஞானம்), (3) சரியான சீலம் (சம்யக் சாரித்திரம்), (4) சரியான தவம், (5) சரியான விரியா சாரம் என ஐவகை ஆசாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதல் மூன்றும் 'திரி ரத்தினங்கன்’ என வழங்கப்பெறும். சரியான சீலத்தைப் பெற ஐந்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை தனித்தனியே துறவிகளுக்கென்றும் இல்லறத்தார்க்கென்றும் (சம்சாரிகன்) அறுதியிடப் பெற்றுள்ளன. இவை முறையே மகாவிரதம், அனுவிரதம் என்று உரைக்கப்பெறும்.

சாவக நோன்பு : சமணச் சான்றோர் கூறுவன அத்தைக் கேட்டு நடப்பவர், சிராவகர்; இவர்கள் இல்லறத்தார். சிராவகர் என்ற சொல் பாகதச் சிதைவாய்ச் சாவகர் எனத் தமிழின் வழங்கும். இவர்களுக்குரிய அணுவிரதங்கள் சாவக நோன்பு என்று வழங்கப்பெறும். இவை உலக வாழ்க்கையை ஒட்டி திற்றலின் உலக நோன்பு என்று வழங்குதலும் உண்டு. இவர்களைச் சாவக மாக்கள் (15:195), சாவக நோன்பிகள் (16:18), உலக நோன்பிகள் (10:24, 15:153) எனச் சிலம்பு செப்பும். இவர்கட்குரியது சாவக நோன்பு. இதில் கொல்வாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை விரும்பாமை, பொருள் வரைதல் (தேவைக்குமேல் பொருள் சேர்க்காமை), கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் என்ற பத்தும் அடங்கும். பட்டினி நோன்பு : துறவியருக்கு உரிய மகாவிரதம் என்பது இது. துறவியர் பின்பற்ற வேண்டிய மகாவிரதங்கள் என்பவை அனுவிரதங்களின் முற்றிய நிலையாகும். இல்லறத்தார்க்குப் பிறனின் விழையாமை என்று ஓதப்பெற்ற விரதம் துறவறத்தார்க்கு மாணிநிலை (பிரம்மச்சரியம்) என்ற உறுதி வாய்ந்த புலனடக்க நிலையாய் உரைக்கப்பெற்றுள்ளது. பிரம்மச்சரியம் காத்தலை 'ஒருதனி வாழ்க்கை' என்றும். விரதியரை 'உரவோர்' என்றும் சிலம்பு ஒலிக்கும் (14:38) உலகாயதக் கருத்தைக் கண்டிக்கும் பாங்கில் காமம் கடிதலைச் சிலம்பில் காணலாம். (14:39-45).

காமம் கடிதற்கும் தவம் இயற்றற்குரிய ஆற்றலைத் தருவதற்கும் மாணிநிலை தேவையாகும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பார்க்கு ஐந்து கட்டளைகள் துவலப்பெற்றுள்ளன. அவை: (1) பெண்ணைப்பற்றிப் பேசாமை (2) பெண் வடிவத்தைப் பாராமை (3) இல்லறத்தில் இருந்தபொழுது நுகர்ந்த அநுபவங்களை நினைவு கூராமை, (4) ஊன் உணவினைக் கடிதல் (5) பெண் உறையும் இடங்களைத் தவிர்த்தல் என்பவையாகும். இவ்வைந்தும் வரும்பொழுது ஆண் பிக்குணிகளுக்கு தொடர்பு நீக்கமாய் அமையும்.

அபரிக்கிரக விரதம் மகாவிரதம் ஆகுங்கால் தனக்கேனும் தான் சங்கத்திற்கேனும் எப்பொருளையும் தேவைக்கு அதிகமாய்ச் சேமித்தலும் காத்தலும் கடியப்படும். உண்மைச் சமணத்துறவியர் இவண் நுவலப்பெறும் பண்புகள் படைத்தவராய்த் திகழ்தல் வேண்டும். (1) பஞ்சமகாவிரதங்களைக் கடைப்பிடித்தல், (2) இரவு உண்ணாமையை மேற்கொள்ளல், (3) எவ்வகை உயிருக்கும் இரக்கம் காட்டிப் பேணுதல், (4) புலன்களை அடக்கி ஆளுதல், (5) ஆசைகளை நீத்தல், (6) மன்னிப்பு உணர்ச்சியைப் பயிலுதல், (7) மேலான குறிக்கோள்களைப் பெற்றிருத்தல், (8) அற்பமாயினும் சிறிதாயினும் எவ்வுயிர்க்கும் எவ்வகையிலும் தீங்கு புரியாதிருத்தலில் உறுதியுடனிருத்தல், சிறந்த சமணத்துறவிகளின் இயல்புகளாகும். (9) தன்னிலை மறுப்புடன் திரிகரணத் தூய்மைக்குரிய காயகுப்தி (= உடலினால் தீமை புரியாமை), (10) வாக்குகுப்தி (= சொல்லினால் தீமை புரியாமை) (11) மனோகுப்தி (= மனத்தினால் தீமை புரியாமை; என்று மூவகை நெறிகளையும் பேணுதல், (12) வேதனைகளை உயிர்க்கிறிதி வரினும் சகித்துக்கொள்ளுதல் ஆகியவை துறவியரின் நல்லிணக்கமாகும். [33]இவற்றுடன் 14 குணத்தானங்கள். 13 சூள். 11 பிரதிமாக்கள் முதலியவற்றையும் அநுசரித்தல் வேண்டும்.

சமண மந்திரம் : சைவர்கள் ஐந்தெழுத்தினை மந்திரமாய் ஓதுதல் போல, திகம்பரர் ‘பஞ்சநமஸ்காரம்’ என்னும் மந்திரத்தை ஓதுவர். திருத்தக்கதேவர் இந்த மந்திரத்தினை ‘ஐம்பதம்’ என்று குறித்தனர் (சிந்தா. 951). மதுரைப்பயணம் மேற்கொள்ளும் கவுந்தியடிகள் “மொழித்துணைத் தெய்வம் வழித்துணையாக”ப் புறப்பட்டதாய்ச் சிலம்பு பேசும். கவுந்தியடிகள் ஓதியது பஞ்சமந்திரம் என்பதும். அஃது அ. சி. ஆ. உ. சா என்ற ஐந்தெழுத்தாலானது என்பதும் சிலம்பின் உரையால் தெளியலாம். இந்த எழுத்துகள் முறையே அருகர், சித்தர், ஆசாரியர், உவாத்தியாயர். சாதுக்கள் என்ற ஐவகைப் பெரியார்களை (பரமேட்டிகளை) [34] - குறிக்கும். இவர்களை வணங்குதல்தான் இம்மந்திரத்தின் உட்கிடையாதல் தெளிவாகும். திகம்பர நெறியினைக் கடைப்பிடிக்கும் துறவிக்குக் குரு முதன்முதலாய் இந்த பஞ்சநமஸ்கார மந்திரத்தை ஓதுவிப்பார் என்று சமண நூல்களால் அறிகின்றோம். காலைக் கதிரவன் கீழ்த்திசையில் எழுங்கால் திகம்பரத்துறவி பஞ்சநமஸ்காரம் கட்டும் பரமேட்டிகள் ஐவைரையும் வழிபடுதல் கடமையாகும்.[35] சீவகன் இம்மந்திரத்தினை ஓதியே நாயினைத் தேவனாய் உருக்கொளச் செய்தான் (சிந்தா. 951). அரவு தீண்டி உயிர் துறந்த பதுமையினையும் சீவகன் இம்மந்திரத்தால்தான் உயிர்பெறச் செய்தான் (சிந்தா.1289). ஆதலின், சமணர்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் இம்மந்திரப் பொருளாய் விளங்கும் பரமேட்டிகள் ஐவர்க்கும் வடிவம் அமைத்து வழிபாடு புரிந்தனர் என்பது வரலாறு. இவர்களை வழிபடுவோர் கோரிக்கைகளை முன்வைத்து விண்ணப்பிப்பதில்லை; வரம் வேண்டுதலும் இல்லை. இவர்தம் நிலையினைத் தாமும் பெறுவது ஒன்றே வழிபடுவோரின் குறிக்கோளாகும். சமணர்கள் வழிபடும் 'கடவுள்' இவர்கள்தாம். தனித்தத்துவமாய்க் கடவுளை அவர்கள் ஏற்பதில்லை.

கிறித்துப் பெருமான் பிறப்பதற்கு முன்பு (சுமார் கி.மு. 560) வர்த்தமானர் என்பவரால் சமண தத்துவம் விளக்கப்பெற்றது. மகாவீரர் என்பவரும் இவரே. ஆனால், இவர் காலத்திற்கு முன்பே சமணத்தத்துவம் வழக்கில் இருந்திருப்பதாய் வரலாற்றறிஞர்கள் கூறுவர்.

(4)பௌத்தம் : பௌத்த சமயம் பாரத நாட்டுப் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று. இது நம் நாட்டில் தோன்றியதானாலும் இங்கு பின்பற்றப்பெறாமல் பிற நாடுகளில் நன்கு பரவி வழக்கிலிருப்பது. இது கௌதம புத்தரால் நிறுவப்பெற்றதாய்ச் சொல்லப்பெற்றாலும். (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்) அவருக்கு முன்னதாகவே பல புத்தர்கள் இருந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. அப்பெருமக்கள் கூறிய தத்துவங்களை ஒருமைப்படுத்தித் தம்மிடம் உதித்த ஞான ஒளியினால் விளக்கம் தந்தவர், புத்தர் பெருமான். புத்தரே இச்சமயத்தை நிறுவியதாய் ஏற்றுக்கொள்ளப்பெற்ற கருத்தும் உண்டு.

இஃது ஒரு காலத்தில் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. மணிமேகலையை இயற்றிய கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் எட்டுத்தொகை நூல்களில் காணப்பெறுகின்றன. இனம் போதியார் இயற்றிய ஒரு பாடல் நற்றிணையில் (பாடல் 72) காணப்பெறுகின்றது. திருக்குறளிலுள்ள ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’, ‘வாலறிவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘ஐந்தவித்தான்’, ‘எண்குணத்தான்’ ‘பற்றற்றான்’, ‘வகுத்தான்’ என்பன போன்ற சொற்கள் புத்தரைக் குறிப்பதாய் ஆய்வாளர்கள் கூறுவர்[36]. திருக்குறள் கருத்தாகிய கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, கள்ளாமை போன்ற கருத்துகள் பெளத்த சமயத் தாக்கத்-


தால் விளைந்தவை என்பதாகவும் கூறுவர். அசோகர் காலத்துக் கல்வெட்டுகள் பெளத்த சமயம் கடைச்சங்க காலத்திற்கு, முன்பிருந்தே தமிழகத்தில் பரவியிருந்தமையைப் பறைசாத்துகின்றன. பல ஆண்டுகள் உடலை வகுத்தித் தவங்கிடத்து இறுதியாய்ப் போதி மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்த பொழுது பூரண ஞான ஒளி பெற்றதாய் வரலாறு.

திரிபிடகம் : புத்தர் தமது கருத்துகளை கொள்கைகளை நூல் வடிவில் எழுதி வைக்கவில்லை. அவர் சீடர் கன்தாம் அவர் போதித்த கருத்துகளைப் பாலி மொழியில் இரு தொகுப்புகளாய்த் தொகுத்து வைத்துள்ளனர். புத்தர் பெருமான் நிர்வாண மோட்சம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர் மகத நாட்டுத் தலைநகரான இராசகிருகம் என்ற நகருக்கு அருகில், ஒரு மலைக்குகையில். கார்காலத்தைக் கழிப்பதற்காக ஐந்நூது தேரர்கள் - வயது முதிர்ந்த பிட்சுகள் ஒருங்கு கூடினர். இதுவே பிட்சுகள் கூடிய முதல் மாநாடாகும். இம்மாநாட்டிற்குப் புத்தருடைய முக்கிய சீடர்களுள் ஒருவரான மகா காசிபர் என்பார் தலைமை தாங்கினார். உபாலி என்ற மற்றொரு சீடர் புத்தர் பெருமான் அருளிய விநய போதனை களைத் தொகுத்து ஓதினார். இவை பிட்சுகளும் பிட்கனிகளும் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைப்பற்றியவை. இன்னொரு முக்கி: சீடராகிய ஆநந்தர், புத்தர் அருளிய தம்ம போதனைகளை ஓதினார்: இவை அறநெறிகள்பற்றியவை. இவை முறையே விதய பிடகம், தம்ம பிடகம் அல்லது அபிதம்ம பிடகம் என்து பெயர் பெற்றன. பிற்காலத்தில் அபிதம்ம பிடகத்திலிருந்து சூத்திர பிடகம் என்ற மூன்றாவது பிடகம் தொகுக்கப்பெத்தது. இந்த மூன்றும் இன்று திரிபிடகம் என்று வழங்கப்படுகின்றன. இவையே பெளத்த மதைகளாகும். பிடகம் என்தால் பாலி மொழியில் கூடை என்பது பொருள். திரிபிடகம் என்றால் மூன்று கூடைகள் என்று பொருள்படும். அஃதாவது மூன்து தொகுப்புகள் என்பது கருத்து. ஒவ்வொரு பிடகத்திலும் பல பிரிவுகள் உள்ளன. திரிபிடகங்கள் தொகுக்கப்பெற்ற பிறகும் அவை இறையனார் களவியல் உரை போலவும், வைணவ வியாக்கியானங்கள் போலவும் எழுதா மறைகளாகவே இருந்து வந்தன; ஆசிரியர் - மாணாக்கர் வழி முறையாகவே நெடுங் காலமாய் ஓதப்பெற்று வந்தன. பௌத்த சமயப் பிரிவுகள் : எல்லாச் சமயங்களிலும் தீர்க்கதரிசிகள்(Prophets) கண்ட உண்மைகள் போதித்த கருத்துகள் #433 j *** เส#3; :##. 44 รfร์: #; இருப்பதில்லை. சில பழக்கவழக்கங்கள் நடைமுறைக் கோட்பாடுகள், கருத்து மாறுபாடுகள் புகுந்து பிளவுகள் உண்டாகிவிடுகின்றன. இன்றைய அரசியல் கட்சிகளிலும் இந்தப் பிளவுகளை காணலாம். பெரும்பாலான மக்கள் சில தலைவர்களின் கீழ் செம்மறியாடுகள்போல் திரண்டு செயற்படுகின்றனர்.

பௌத்த சமயத்திலும் பிற்காலத்தில் பிளவுகள் ஏற்பட்டன; பல பிரிவுகள் உண்டாயின. பிட்சு சங்கத்தில் புதிதாய்ச் சில பழக்கவழக்கங்கள் புகத் தொடங்கின. அவற்றைக் கண்டிக்கும் பொருட்டு வைசாலி நகரத்தில் 700 பிட்சுகள் மாநாடு கூடி, எட்டு மாதம் ஆராய்ந்தனர். கண்டிக்கப்பெற்ற 10,000 பிட்சுகள் தனிப்பிரிவாய்ப் பிரிந்து போய்விட்டனர் என்று தீப வம்சம் என்ற நூலால் அறிய முடிகின்றது. புத்த பகவானின் ஆதிக் கொள்கைகளைப் பின்பற்றி வரும் பெளத்த மதத்தைத் தேரவாத பௌத்தம் என்றும், புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்தத்தை மகாயான பௌத்தம் என்றும் வழங்குவர். தேரவாத பௌத்தமே பிற்காலத்தில் ஹீனயான பௌத்தம் என்ற திருநாமம் பெற்றது. ஹீனயான பௌத்தம் பர்மா நாட்டிலும் இலங்கைத் தீவிலும் பரவியுள்ளது. மகாயானம் நேபாளத்திலும் (புத்தர் அவதரித்த மாநிலம்) திபேத், மங்கோலியா, கொரியா, சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. தேரவாத பௌத்த நூல்கள் யாவும் பாலி மொழியில் எழுதப் பெற்றவை. மகாயான பௌத்த நூல்கள் வடமொழியில் வரையப்பெற்றவை. மணிமேகலையில் கூறப்பெற்ற சமயக் கருத்துகள் யாவும் தேரவாதபௌத்தத்தைப்பற்றியவையாகும். இவற்தைச் சாத்தனார் திரிபிடகத்திலிருந்து மிக அழகாய்ச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

புத்தர் உலகம், ஆன்மா, இறை என்பவற்றை ஆய மேற்கொண்ட வழிமுறைகள் முக்கியமாய் இரண்டு. அவை, பிரத்திபட்சமும் அதுமானமும் ஆகும். அருமறைகளிலுள்ள கருத்துகளை அவர் ஏற்கவில்லை. ஆகவே, கடவுள் உண்டு என்ற கொள்கை அவருக்கு உடன்பாடு இல்லை. பெளத்தம், பிறப்பு பல உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றது. கன்ம பலன்களின் வழி மறுபிறப்பு அமையும் என்பதற்கும் உடன்பாடு தெரிவிக்கின்றது. அந்தக் கன்மம் ஆன்மாவை அடைவதற்க்கு கடவுள் என்ற ஒன்று வேண்டா தானாகவே, நேரக்கூடியது என்ற கருத்தையுடையது. பெளத்தம் ஆன்மா கன்மங்களிலிருந்து வீடுபேறு அடைவதற்கும் கடவுள் வேண்டா என்பதும் அச்சமயக் கொள்கை. மனித முயற்சியாலும், ஒழுக்க முறைகளாலும் பிறரது துன்பங்களை நீக்குவதன் மூலமும் வீடுபேறு எய்த முடியும் என்பது இச்சமயத்தின் முடிந்த முடியாகும்.

பெளத்த சமயக் கொள்கைகள் : புத்த பெருமானின் கொள்கைகளாவன: “இவ்வுலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அழியக்கூடியவை; யாவும் நிலையற்றவை. மிகவும் நெருங்கியுள்ள பொருள்களினின்றும் நாம் நம்மை விலக்கிக் கொள்ளவேண்டும். அதுவே பேரின்பத்தை அடைவதற்கான வழி” என்பதாகும். இக்கருத்து.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”

(குறள் - 341)

என்ற வள்ளுவப் பெருமான் கருத்தோடு ஒப்புமை உடையதாகும்.

புத்தர் பெருமான் கூறியது: “நாம் விதைப்பது, அன்பு தூய பணிகளே அதனை வளப்படுத்தும் மழை; ஞானமும் அடக்கமும் உழுபடைகள்”. மாறிமாறிப் பிறக்கும் பிறவிகள் பல உள என்பது புத்தரின் கொள்கையாகும். உலகமே துன்ப மயம்: அதிலிருந்து ஒருவர் விடுபடுவதே நிர்வாண மோட்சம்.

நான்கு உண்மைகள் : நிர்வாண மோட்சம் அடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை அறிதல் வேண்டும். அவை : (i) துக்கம், (ii) துக்கோற்பத்தி, (iii) துக்க திவாசனம், (iv) துக்கதிவாரண மார்க்கம் என்பனவாகும். புத்தர் பெருமான் போதி மரத்தடியில்48[37] மெய்ஞ்ஞானம் பெற்ற பொழுது இவற்றை அறிந்தார். இந்த நான்கன் அடிப்படையில்தான் அப்பெருமான் எழுப்பிய சமயக் கருத்துகளாய் மாபெரும் கட்டடங்கள் யாவும் நிற்கின்றன. இவை நான்கும் மணிமேகலையில் தெளிவாய் விளக்கப்பெற்றுள்ளன.



  1. பாரதி : சுயசரிதை - 49
  2. பாரதியார் : பாஞ்சாலி சபதம் சூதாட்டச் சருக்கம் 154
  3. 3. மணிமேகலை - சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை - அடி 110 - 19.
  4. |4. ஆசீவகம் : இச்சமயத்தை நிறுவியவர் மற்கலி என்பார். மகத நாட்டவர் (பீகார் மாநிலம்). மகாவீரரும் புத்தரும் மற்கலி காலத்தவர். ஆயினும் இருவர்க்கும் மூத்தவர் மற்கலியே என்பது பாலிபிடகங்களாலும் சமண சூத்திர நூல்களாலும் அறியப்பெறுகின்றது.
  5. 5 உபநிடதத்தில் உயிர், போனபின் உடலானது முடிவாகப் பஞ்சபூதங்களோடு சேர்வதனைப்பற்றி மைத்ரேயியும் யாஞ்ஞவல்கியரும் பேசுகின்ற பேச்சை இது நினைப்பூட்டுகின்றது.
  6. 6. பா.க : தே.கீ : 5. பாரததேசம் - 11
  7. 7. தத்வமஸி - வேதத்திலுள்ள மகாவாக்கியங்களுள் மிகச்சிறப்புடையது இது. இது மூன்று சொற்களையுடையது. துவம் - நீ, தத்- அதுவாக, அணி - இருக்கின்றாய் என்பது பொருள். சீவான்மாவாகிய நீ பரமான்மாவாகிய அதற்கு வேறுபட்டவன் அல்லன் என்பது இதன் பொருள். இக்கோட்பாட்டை எல்லாச் சாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் இயம்புகின்றன.
  8. 8. பாரதி அறுபத்தாறு - 66
  9. 9. தாயு. பாடல்கள் - 630
  10. 10. பா.க-தோ.பா - 23, சக்தி விளக்கம் - 7
  11. 11. தொல் - பொருள் - மரபு - 91
  12. 12. கம்பரா - சுந்தர. காப்பு}}
  13. 13. நீத்தார் பெருமை - 7 (27)
  14. 14. கீதை 7 : 4
  15. 15. தாயு. பாடல் - தந்தைதாய் - 6
  16. 16. திருவாய் 1-1-7
  17. 17. பெரி.திரு. 4.3:3
  18. 18. அப்பர் தேவாரம் 6.54:5
  19. 19. திருவா, திருத்தோணோக்கம் - 5 (317)
  20. 20. கம்பரா. அயோத்தி - காப்பு.
  21. கம்பரா. பாலகாண் - அநுமன் துதி - 2.
  22. 22. திருவாய் 1.5 : 2
  23. 23. திருவாய் 1.5 : 4
  24. 24. கம்பரா - யுத்த இரணியன் வதை - 124
  25. 25. திருவரங்க மாலை - 18
  26. சாங்கியரது பிரகிருதியும் புருடனும் சமணர் கூறும் அசீவன், சீவன் என்ற கருத்தை நினைவுகூரச் செய்கின்றன.
  27. இந்தக் கருத்தினால் இத்தரிசனம் சாங்கியத்தினின்றும் மாறுபட்டது.
  28. முத்தி நெறி - சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் (டி.டி. கே. சாலை, சென்னை - 18)
  29. 37.திருமந் - முதல் தந். உபதேசம் - 3
  30. 38. சைவ சமய விளக்கு - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் (டி. டி. கே. சாலை, சென்னை -18)
  31. மற்கலிக்குப் பூரணர் என்ற பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின் அவருக்கு இப்பெயர் உண்டாயிற்று என்பர். (பூரணருடைய இயல்பு. ‘நீலகேசி’ ஆசீவகவாதச் சுருக்கம், 15ஆம் பாடல் - உரை காண்க.)
  32. 40. தீர்த்தங்கரர் - ‘தீர்த்த’ என்ற சொல்லிற்கு (பிறவிப் பெருங்கடலினின்னும் விடுபட்டு ஏறும்) கரை என்பது பொருள். இக்கரையினை அடைந்தவர்கள் தீர்த்தங்கரர் எனப்படுவர். அன்றியும் இக்கரையினை எய்தத் துணையாய் இருத்தலின் இப்பெயர் எய்தினர் எனலாம்.
  33. 43. Misra Umesha, Dr : History of Indian Philosophy.
  34. 44. Deo. S.B. : History of Jaina Monachism (From inscriptions & literature)
  35. 45. பரமேட்டிகள் - பக்குவம் பெற்ற பவ்விய சீவன்கள் ஆன்மிக முதிர்ச்சியின் அடிப்படையில் ஐந்து வகையாகப் பாகுபாடு செய்யப்பெறுவர். அனைவராலும் வணக்கத்தக்க இவர்களைப் பரவுதல் சமணர் மரபாகும்.
  36. 46. கந்தசாமி, சோது.(டாக்டர்) : தமிழும் தத்துவமும் (மணிவாசகர் வெளியீடு).
  37. 48. 1969ஆம் ஆண்டு அக்டோபர்த்திங்களில் இந்தப் போதிமரத்தடியில் யானும் என் துணைவியும் இருக்கும் பேறு பெற்றோம். புத்தர் பெருமான் பெற்ற அநுபவத்தை ஓரளவு பெற்றோம்.
இரு அறங்கள் : பௌத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரு அறங்களே உள்ளன. இல்லறத்தார் சாவக நோன்பிகள் எனப்படுவர். இவர்கள் மும்மணிகளை வணங்கிப் பஞ்ச சீலங்களைக் கடைபிடித்து ஒழுக வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய இயலாது. துறவற வழி நின்றவர் மும்மணிகளை வணங்கிப் பத்து வைசர் சீலங்களைக் கடைபிடித்து, நான்கு வாய்மைகளை மேற்கொண்டு, அஷ்டாங்க மார்க்க வழி ஒழுகி, ஞானம், யோகம் முதலியவற்றைச் செய்வார்களானால் பிறவா நிலையாகிய பேரின்பத்தை நல்கும் நிர்வாண மோட்சத்தை எய்துதல் கூடும்.

மும்மணிகள் : புத்தர் நிறுவிய புத்தம், தர்மம், சங்கம் என்ற மூன்று நிறுவனங்கள் மும்மணிகள் எனப்படும். இவற்றைச் சரணம் அடைதல் வேண்டும். இது ‘திரிசரணம்’ என்று வழங்கப்பெறும்.


“புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”

(கச்சாமி - அடைக்கலம் புகுகின்றேன்)

இவ்வாறு மூன்று முறை நாவினால் நவிற்றி, மும்மணியை மூன்று முறை வணங்க வேண்டும். “முத்திற மணியை மும்மையின் வணங்கி” (30 : 4) என்பது மணிமேகலைத் தொடராகும்.

அஷ்டாங்க மார்க்கம் : இவை நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லமைதி என்ற எட்டுவித ஒழுக்கங்களாகும். இந்த ஒழுக்கம் ‘விகத்தி மார்க்கம்’ என்றும் ‘பழுதிலா வாழ்க்கை’ என்றும் வழங்கப்பெறும்.

இந்த மார்க்கத்தை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு முக்கியமாய் மூன்று குணங்கள் வேண்டும். அவை சீலம், சமாதி, பிரதிஜ்ஞை என்பன. சீலமாவது, விலக்கியவற்றையே செய்தல். சமாதியாவது, மனத்தை ஒருமுகப்படுத்துதல், பிரதிஜ்ஞையாவது மெய்ஞ்ஞானம். இம்மூன்றும் திரிபிடகத்தில் அடிக்கடி சொல்லப்பெறுபவை.

சீலங்கள் : சீலம் பஞ்சசீலம் என்றும், அஷ்டசீலம் என்றும், தசசீலம் என்றும் மூவகைப்படும். கொல்லாமை, திருடாமை, வியபிசரியாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை என்னும் இவை பஞ்சசீலம் ஆகும். இஃது இல்லறத்தார் எல்லோர்க்கும் உரியது. இவற்றினோடு இரவில் தூய்மையற்ற உணவை உண்ணாமை. சந்தனம் முதலிய நறுமணமுள்ள பொருள்களை நுகராமை, பஞ்சணை போன்றவற்றை பயன்படுத்தாமை என்ற மூன்று சேர்க்கப்பட்டு அஷ்டசீலம் என்று பெயர் பெறும். இஃது இல்லறத்தாரின் சற்று உயர்நிலையடைந்தவர்க்கு உரிய ஒழுக்கமாகும். இவ்வெட்டனோடு நாட்டியம், இசை முதலிய விரும்பாமை, பொன் வெள்ளிகளைத் தொடாமை என்ற இரண்டும் சேர்த்து தசசீலமாகும். இது துறவறத்தாருக்குரிய ஒழுக்கமாகும்.

மாற்றமுடைமை : இந்த உலகில் மாற்றமடையாத நிலையான பொருள்கள் என்பவை இல்லை. எல்லாப் பொருள்களும் எப்போதும் மாற்றம் அடைந்தவண்ணமே உள்ளன. மாற்றமே உண்மை; மாற்றமே நித்தியம் என்பது இச்சமயத்தின் அதிராக் கொள்கை. அம்மாற்றங்கள் சிறுசிறு அளவில் நேரிடுவதால் அம்மாற்றங்களை நம்மால் உணர முடிவதில்லை.

நம் முயற்சியால் நாம் நிர்வாணத்தை அடையலாம் என்று ஹீனயானிகளும், உலகில் மற்ற உயிர்களின் துன்பத்தை நீக்குவதே நிர்வாணத்தை அடையும் வழி என்று மகாயானிகளும் கூறுவர். நிர்வாணம் என்பது ஒன்றும் இல்லாத - சலன மற்ற - ஓர் அமைதியான சூனியம் என்பது ஹீனயானிகளின் விளக்கம். இந்த அகிலம் முழுவதற்கும் மூல நிலைக்களமான ஓர் உயர்ந்த நிலையே நிர்வாணம் என்பது மகாயானிகளின் கருத்து.

3. அறிவியல், சமயம், தத்துவம் – மீள் பார்வை

உலகச் சிந்தனையாளர் அனைவரும் கடவுள், ஆன்மா, உலகம் என்ற மூன்று பொருள்கள்பற்றித் தம் சிந்தனையைச் செலுத்தியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டேன். இவை மூன்றும் வேத காலத்திற்கு முன்பும் பின்பும் பல ஞானிகள் பல காலகட்டங்க்ளில் ஆராய்ந்து தங்கள் எண்ண விளக்கங்களை நல்கியுள்ளனர் என்று சுட்டியுரைத்தேன். நம் நாட்டுத் தத்துவ ஞானிகள் புற உலகப் பொருள்களை (அஃதாவது, உலகத்தை)த் தவிர்த்து ஆன்மா இதை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். உலகமும் உலகப்பொருள்களும் அநித்தியமானவை (என் உடலே அநித்தியமானது) என்ற அடிப்படையில் அத்திசையில் நம் ஆய்வைத் தொடராது விட்டனர். இதன் காரணமாய் அறிவியலாய் வளர்ந்த உலகப்பொருள்களைப்பற்றிய ஆய்வின் முடிவுகள் அவ்வளவாய் வளரவில்லை என்ற கருத்தையும் உங்கள் முன் வைத்தேன்.

வேத, உபநிடத ஆகம அடிப்படையிர் தோன்றி வளர்ந்த சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை ஒரு பக்கமாகவும், இவற்றைத் தவிர்த்த புறச் சமயங்களாகிய உலகாயதம் (சாருவாகம்). ஆசீவகம், சமணம், பௌத்தம் மற்றொரு பக்கமாகவும் நிற்கின்றன. முன்னவை நம்பிக்கைமீதும் பின்னவை ‘தரவு அறிவு’ ஆகிய இரண்டன்மீதும் நிற்கின்றன. கடவுள் என்ற ஒரு மாபெரும் ஆற்றல் இந்த அகிலத்தைப் படைத்து ஆட்டிவைக்கின்றது என்ற நம்பிக்கையே முன்னவற்றின் அடித்தளம். இந்த அடிப்படையைக்கொண்டே அனைத்தையும் சமயங்கள் விளக்குகின்றன. அகிலத்தில் காணும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாய் அணுகி, அவற்றின் அமைப்பு, இயக்கம், அவற்றின் இடையே காணப்பெறும் தொடர்பு ஆகியவற்றின் தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து முடிவு சொல்ல முனைகின்றது, அறிவியல். வைதிகச் சமயங்கள் (ஆன்மிகம்) உளது என்ற கருதுகோளை (Hypothesis) மையமாய்க் கொண்டது. இலது என்ற கருதுகோளை (Null-hypothesis) மையமாய்க்கொண்டு விடையைத் தேடுகின்றது, அறிவியல். இரண்டன் நோக்கம் ஒன்றாயிலும், அணுகுமுறைகளும் ஆய்வு முறைகளும் இரண்டு துருவங்கள்போல் பிரித்து நிற்கின்றன.

வைதிகச் சமயங்கள் யாவும் இறைவன் உலகினைப் படைத்தான் என்ற கொள்கையை ஒப்புக்கொள்கின்றன. புறச்சமயங்கள் இக்கருத்தை ஒப்புக்கொள்ளாது உலகத் தோற்றமும் வளர்ச்சியும் அணுக்கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகின்றன என்கின்றன. சமணர்கள் ‘சக்திகள்’ உலகத் தோற்றத்திற்குத் தேவை என்று பிறிதொரு கருத்தையும் கூடுதலாய் முன்வைக்கின்றனர். இப்போது நாம் அறிவியல் அடிப்படையில் இவற்றை நோக்குவோம்.  (1) அண்டமும் பிண்டமும் : ‘அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலே’ என்பது தம் மக்களிடையே வழக்கிவரும் ஒரு முதுமொழி. இந்தப் பழமொழியின் உண்மை. அது அணு ஆராய்ச்சியில் புலனாவதை அறியலாம். அணுவின் அமைப்பும் அண்டங்களின் அமைப்பும் ஒப்புடையனவாயுள்ளன என்று அறிவியலறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர். அறிவியலறிஞர்கள் ஆய்வுகள் மூலம் கண்டவற்றையே நம் நாட்டு ஞானச்செல்வர்கள் உள்ளுணர்வால் அநுபவமாய்க் கண்டுள்ளனர். அறிவியலறிஞர்களின் அணுவியலும் ஞானச்செல்வர்களின் அநுபவ இயலும் ஓரிடத்தில் சந்திப்பதை ஆராய்ந்து பார்ப்போர் நன்கு அறிவர். அணுக்கோயிலின் முன்நிற்கும் அறிவியல் அறிஞர்களும் அண்டக்கோயிலின் முன்நிற்கும் அருளாளர் பெருமக்களும் ஒரே உண்மையைத்தான் காண்கின்றனர் என்பதை நாம் அறியுங்கால் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இறைவன் படைப்பை எண்ணிஎண்ணி வியக்கின்றோம்.

(2) அண்டங்களின் அமைப்பு : முதலில் அண்டங்களின் அமைப்பை நோக்குவோம். இந்த அகிலத்திலுள்ள அண்டங்கள் யாவும் ஆதவ மண்டலத்தில் அமைந்துள்ளன. ஆதவ மண்டலத்தில் நடுவிலிருக்கும் ஆதவனுக்கு மிக அண்மையிலிருப்பது புதன், தொடர்ந்து சுக்கிரன், பூமி, செல்வாய், குட்டிக் கோள்கள் (Asteriods), வியாழன், சனி, யுரேனஸ் (நிகுதி), நெப்டியூன் (வருணன்), புளுட்டோ (குபேரன்) என்ற வரிசையில் அமைத்துள்ளன. இவை ஒன்றையொன்று வேறுவேறு தளத்தில் வேறு வேறு திசையில் கற்றிக்கொண்டுள்ளன. இப்படியே எண்ணற்ற ஆதவ மண்டலங்கள் விண்வெளியில் அமைந்து உலவிக்கொண்டுள்ளன. இவை தவிர, பல்லாயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் வானவெளியில் கண் சிமிட்டிக்கொண்டுள்ளன. இவற்றுள் சூரியன், சந்திரன் (துணைக்கோள்), செவ்வாய், புதன், வியாழன் (குரு - பிரகஸ்பதி), வெள்ளி (சுக்கிரன்). சனி, இராகு, கேது இவற்றின் அடிப்படையில் சோதிடக்கலை (Astrology) உருவாகியுள்ளது. அறிவியல் அடிப்படையில் அண்ட கோளங்களிலுள்ள அனைத்தின் அடிப்படையில் வான சாத்திரம் (Astronomy) அமைந்துள்ளது. சோதிடக்கலை சமயத்தில் புகுந்துவிட்டதால் திருக்கோயில்களில் ஒன்பது கோள்கள் ‘நவகிரகங்கள்’ என்ற பெயரில் இடம் பெற்று வழிபாடும் நடைபெற்று வருகின்றது. இந்த அண்டங்களை யெலலாம் விசிட்டாத்வைதம் ‘அசித்து’ என்ற தத்துவத்திலும், ‘சைவ சித்தாந்தம்’ ‘பாசம்’ என்ற தத்துவத்திலும் அடக்கி விளக்கும் மேலும், ‘அசித்து’ எம்பெருமானுக்கு உடலாய் இருப்பதாய் வைணவம் பேசும். இதனைச் ‘சரீர-சரீரி பாவனை’ (உடல் - உயிர் - உறவு) என்று வழங்குவர்.

(3) அணுவின் அமைப்பு : அணுவின் அமைப்பையும் நோக்குவோம். அணு மிகமிக நுண்ணிய துகள். பேராற்றல் வாய்ந்த நுண்பெருக்கியால் (Microscope) காண முயன்றாலும் அது நம் ஊனக் கண்ணுக்குப் புலனாகாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால், அவை நாம் எழுதும் போது இடும் முற்றுப்புள்ளியில் அடங்கிவிடும். எனினும், அறிவியல் அறிஞர்கள் மிகச்சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர். ஓர் அங்குலத்தினை இருபத்தைந்து கோடிகளாய்ப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ளனர். பெரிய அணுவின் குறுக்களவு இதனை விட இரண்டரை மடங்கு பெரியது அ.தாவது, ஓர் அங்குலத்தினைப் பத்துகோடியாய்ப் பங்கிட்டதில் ஒரு பங்காகும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஓர் அங்குல விட்டமுள்ள பந்துபோல் பெருக்கமடைவதாய்க் கற்பனை செய்துகொண்டால், அந்தத் திராட்சைப்பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்துவிடும். இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் எடை, அதன் அகலம், நீளம், கனம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும், ஆய்வகத்தில் ஆய்வுக்கருவிகளைத் துணையாய்க் கொண்டு அறுதியிட்டுள்ளனர். அணுவின் நுட்பம் முழுவதையும் அறிந்தால் இயற்கையின் இரகசியம் முழுவதையும் அறிந்து கொள்ள முடியும். வைணவ ‘அசித்தும்’ சைவ ‘பாசமும்’ தெளிவாகும்.

அணுவின் நுட்பத்தை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். ‘மகிமா’ என்பது எண்வகைச் சித்துகளுள் ஒன்று; அது விருப்பம் போல் ஓர் உருவத்தைப் பருக்கச்செய்யும் ஒருவகைப் பேராற்றல். அணுவினை அண்டமாக்கும் மகிமாச்சித்து விளையாடும் ஒருவரிடம் மிகச்சிறிதாயுள்ள நீரிய அணு (Hydrogen atom) ஒன்றனையும் பந்து ஒன்றனையும் கொடுத்தால், அவர் இரண்டனையும் தம் இரு உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு சித்து விளையாடி, ஒரே விதத்தில் இரண்டையும் விம்மிப் பெருகச் செய்துக்கொண்டே போவார். பந்து இவ்வுலக அளவு பெரிதாய் விம்மித் தோன்றுங்கால், அணு ஒரு பையன் விளையாடும் பந்து போலத்தான் தோன்றுகின்றது. பந்துக்கும் உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை! அணு அவ்வளவு நுட்பமானது. அதனால் அதனைக்கொண்டுதான் அறிவியலறிஞர்கள் பண்டைக்காலத்து சித்தர்கள்போல் பந்தாட்டமும், கோலியாட்டமும் விளையாடுகின்றனர். எல்லா விளையாட்டு அவர்களது கற்பனையுலகிலேயே நடைபெறுகின்றன!

அணுவின் நுட்பத்தை இன்னொரு விதமாகவும் தெளியவைக்கலாம். ஓர் அங்குல நீளம், ஓர் அங்குல அகலம், ஓர் அங்குல உயரம் உள்ள இடத்தில் அடங்கிக் கிடக்கும் அணுத்திரளைகள் ஆறு இலட்சம் கோடி கோடி, இதனை எண்ணால் 6,00,00,000,000,000,000,000 என்றாகின்றது. இப்பேரெண்ணை மனத்தில் பதித்துக்கொள்ள முடியாது. சுருக்கி எழுதின 6 x 1019 என்று ஆகும். இதனை விநாடிக்கு ஒரு எண் வீதம் எழுதினால் ஓராண்டில் ஒருவரால் எண்ணி முடிக்கக்கூடியது மூன்று கோடியே பதினைந்து இலட்சத்து முப்பத்து ஆறாயிரம். நாற்பது கோடி மக்களும் அந்த அணுக்களை எண்ணுவதில் ஈடுபட்டால் எண்ணி முடிய ஏறக்குறைய 5000 ஆண்டுகள் ஆகும். அவர்கள் கலியுகம் பிறந்ததிலிருந்து இந்த நூற்றாண்டு வரை அவற்தை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்! இப்பொழுது அணுவின் நுட்பமும் எண்ணிக்கையும் ஓரளவு நமக்கு புலனாகும்.

அணுவின் உட்பகுதியை உட்கரு (Nucleus) என்று வழங்குவர். இதில் நேர் மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களும் (Protons) மின்னேற்றம் அற்ற நியூட்ரான்களும் (Neutrons) அடங்கியுள்ளன. இதனைச் சுற்றிலும் பல வட்டங்களில் எதிர் மின்னேற்றமுள்ள எலக்ட்ரான்களும் (Electrons) சுழன்றுகொண்டுள்ளன. எலக்ட்ரான்கள் நிறையற்றவை எனக் கருதப்பெறும் அளவுக்கு மிகவும் சிறியவை; நுண்ணியவை. இவற்றிலுள்ள மின்னேற்றம் உட்கருவின் நிறையையொட்டி அதிகமாகும். புரோட்டான் எலக்ட்ரானைவிட 1850 மடங்கு எடை மிக்கது. அணுவோ மின்னேற்றம் ஏற்படாமல் சமநிலையிலுள்ளது. உட்கருவைச் சுற்றிக் கோள் நிலையாகச் சுழன்று கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து படிப்படியாய் 92 வரையிலும் உயர்ந்துகொண்டே போகும். இந்த எதிர் மின்னேற்#o பல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் - :.ே ன்களும் ஒன்றிலிருந்து 92 鰲黎繆 எனவே ஒர் அணுவில் எத்தனை எனவே: தனை எல்க்ட்ரான்களும் ாட் டியே க்களின் வகையும் 92 க்கள் பலவகையாய்க் காணப்படுவதற்கு வேறுபாடே காண மாகும். மிகச்சிறியதாகி: க்ன்ேத்து அதனையொட்டிப் புரோட்டானோ ஒர் சேர்வதால் ஒர்னு வேறு ஒரு வகை அணுவாய் தன்மை நம்மை வியப் பினில் ஆழ்த்துகின்றது. ஒவெல்லாம் அடிப்படையில் ஒரு தன்மையனவே ன்பதை அதிகின்றோம். மின்துகள் களின் ஏற்றக்குறைவே வேத்துமைக்கு அடிப்படை. மின்துகள்களின் எண்ணிக்கையை ஒத்தவும் ஆதைக்கவும் கூடுமானால் ஒர் அணுவை வேறு ஒர் காக்கலாம். பண்டையோர் கருத்திலமைந்த இரசவாதமும் அ.தாவது. இரும்பைப் பொன்னாக்கும் முறையும் - இந்த அடிப்படையிலேயே அமைந்தது. இதனால் பொன்னும் (Gold) மண்ணும் 18itica) ஒன்றாகின்றன. இதனையுணர்ந்தே யோகியர் "ஒடும் செம்பொதும் ஒக்கவே தோக்கும் மனப்பான்மையைப் டிேத்துன்னனரோ என்று கருத வேண்டியுள்ளது. ^్క இன்னிடத்தில், இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை ல் தடைபெற்ற ஒரு திகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. ஒரு அகம், இராம.கி ஆஷ்குைம் அவர் துணைவியார் சாரதா விக்கதும் வாரனாசித் தெருவில் நடந்து சென்றனர். பரமஹம்சர் னே செல்ல, தேவியார் பின்னே சென்றார். வழியில் கில் ஏதோ ஒரு பொருள் (பித்தளைத்துண்டு?) மின்னு கண் டார் அதனைக் கால ல் மண்ணைத் தள்ளி கார். பின்னால் வந்துகொண்டிருக்கும் தேவியார் அதனைக் கண்டார். கணவரை தோக்கி, "என்ன மறைக்கின்றீர்கள்?" என்று தேவியார் வினவினார்; இராமகிருஷ்ணர் அதற்கு “ஏதோ தங்கம்போல் மின்னுகின்றது. தின் மனம் சலனப்படும் என்று கருதி மூடினேன்" என்றார். “இன்னும் தங்களுக்கு மண்ணும் தங்கமும் வேறு வேதாய்த் தோன்றுகின்றனவோ?’ என்று வினவி னாராம். இவற்றால், தேவியார் மனம் பக்குவப்பட்ட அளவுக்கு அவர் கணவரின் மனம் பக்குவப்படவில்லை என்பதையும் அதிகின்றோம். சிவனடியார்களைப்பற்றிப் பெரிய புராணம், "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்." .ே பேசி, பு: தேய். க்3 என்று குறிப்பிடும். இந்த மனநிலை - ஓட்டையும் பொன்னையும் ஒன்றுபோல் கருதும் மனநிலை - மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் கருதும் மனநிலை - இன்னும் இராமகிருஷ்ணருக்கு வரவில்லை என்ற கருத்தையும் சிந்திக்கின்றோம்.

மீண்டும் அணுவிற்கு வருவோம். அணுவின் உட்கருவிலுள்ள துகள்கள் (புரோட்டான். நியூட்ரான்) மிக இறுகப் பிணைக்கப் பெற்றுள்ளன. நாம் இதுகாறும் அறிந்த ஆற்றல்கள் அனைத்திலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல் மிகப்பெரியது. இந்த ஆற்றலை உட்கருவின் பிணைப்பாற்றல் (Binding Energy of the Nucleus) என வழங்குவர். அணுவின் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலைவிட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரியது; வன்மையும் வாய்ந்தது. ஆற்றல்தான் ஹிரோசீமாவை அழித்தது; நாகசாகியை நாசமாக்கியது.[1] இதுவே அணுகுண்டு செயற்படும் ஆற்றலாகும்.

(4) பொங்கல் திருநாள் : அணுவாற்றலைப் பேசிக்கொண்டிருக்கும் நமக்குப் பொங்கல் திருநாளும் நினைவிற்கு வருகின்றது. இந்திரனை மருதநிலக் கடவுளாய்த் தொல்காப்பியம் குறிப்பிடும். அவனுக்கு ‘மேகநாதன்’[2] என்ற பெயரும் உண்டு. அவனே மழைக்கடவுளாகவும் பிற்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பெறுகின்றான். உயிர்களுக்கு இன்றியமையாத வெப்பத்தையும் ஒளியினையும் தருபவன், ஆதவன். ஆகவே, கடவுளாகின்றான். பொங்கலன்று அவனுக்கு வழிபாடு நடைபெறுகின்றது. இந்த வழிபாட்டின் தத்துவம் அறிவியலடிப்படையில் அமைந்துள்ளது. இதனை,


“காதல் கொண்டனை போலும் மண்மீதே
     கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே,
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
     மண்டி னாள்இதில் ஐயம்ஒன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
     தோன்று கின்ற புதுநகை என்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
     ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.”[3]

யார் -சன்ற அந்த நோக்கை'க் கவிஞர்களும் சில *SARன்றன!! என்பதற்த இஃது ஓர் எடுத்துக்காட்டாம் "கவிக வராதவார் காண்பவர் வெப்பொருள் S3 கர கய்யன் what'SEA?? இப்பா . ஆதவனைக் காதல் 4. பூமிதே & 'காதலாகவும் க!! say கின்றான், கக்கன். இந்த இருகிாகள்களும் 'காதலன் - காதலி தரிசனம்' தத்து நிற்கின்றன. கலகலுக்கு. ஆம், , மையும் அதுதானே, இந்த இரண்டும் இணங்க இணைத்து இயங்குவதால்தான் இல்ADA 7 நிலைத்திணையம் இயங்குதினையும் தோன்றி தினHெ HER FARS . செம்பொன்னை உருக்கி வார்த்தாவெனக் கூசட்.? ஆர்காக்கும். அந்திவான் செக்கர் அழகும், கொண்டல் கொ ன் ... Nf ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழை அழகும். அத்தண்புனல் மணற்கற்களை அரித் கோடும் அருவியின் அழகும். பச்சைப் பசேலெனப் பெருங் காத. A we arf) க்கும். பயிர்களின் அக்கும், அவற்றில் பச்சைப் பாம்யெனப் பின்னிக் கிடக்கும் கொடிகரின் அழகும், 4-வல்தினி என்றும் அரும்பியுள்ள தளகமலரின் அழகும்” 54 தம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கதிரவன் - பூமி என் இரண்டும் வந்து வாழும் வாழ்க்கையில் நாம் காணும் * கள் இவை. இவற்றின் அறிவியல் உண்மைகளை விக்க வேண் : | (5) ஆற்றல் மூலம் : - ஆதவனே ஆற்றல் மூலம்' (The Sun is the ultimate source of energy) என்பது இன்றைய அறிவியல் சுமை. ஆதவனிடம் இது புரோட்டான்களும் இரு நியூட்ரான்களும் இணைந்து பரிதி! உட்ககலை இயற்றும் நின் தக, ஒவ்வொரு நொடியிலும், கோடானுகோடி உட்கருக் களில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனால் ஏராளமான ஒளி ஆற்றல் அல்லது கதிர்வீச்சு ஆற்றல் ஆதவனிடம் உற்பத்தியாகி, விசும்பு வெளியைக் கடந்து, நொடி ஒன்றுக்கு 1,86,000 மைல் வீதம் விரைந்து வந்து பூ மண்டலத்தை அடைகின்றது. அது நம்மை வந்தடைவதற்கு, எட்டு மணித்துளிகள் ஆகின்றன. ஆதவனின் உட்புறத்திலுள்ள வெப்பம் 20,000,000° சுழியுள்ளது. அங்குள்ள அமுக்கமும் ஓர் அங்குலத்திற்கு 15,000,000,000 இராத்தல்களாய் உள்ளது. அமுக்கமும் ஆதவனிடம் ஒன்றாய்ச் சேர்ந்து இருப்பதால்தான் ஆதவனிடமுள்ள கோள நிலை எலக்ட்ரான்கள் உதிர்க்கப்பெறுகின்றன.

ஆதவனின் தேய்வு : ஒவ்வொரு நொடியிலும் ஆதவனிடமிருந்து ஒன்றரைக் கோடியே கோடி குதிரைத்திறன் (Horse Power) அளவுகொண்ட ஆற்றலைப் பூமி பெறுவதாய் அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு எரி, கடல் முதலிய நீர்நிலைகளிலிருந்து நீரை ஆவியாய் மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. இவ்வாறு நீராவியாய்ச் செல்லும் நீர்தான் பின்னர் மலைகளின் உச்சியில் மேகமாய் நின்று மழையாய்ப் பொழிகின்றது. மழைநீர் ஆறுகளாய் பாய்வதனால் அருவிகள் (Water Falls) உண்டாகின்றன. உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஓடுகின்ற நீரின் ஆற்றவைக்கொண்டு சுமார் 35 கோடி குதிரைத்திறன்[4] அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப்பிடுகின்றனர். ஆதவனின் வெப்பத்தையேட்டியே காற்றுகளும் வீசுகின்றன; பருவக்காற்றுகளால்தான் மழையும் பெய்கின்றது. உழவுத்தொழில் நடைபெறுவதற்கு ஆதவனே முதற்காரணம் ஆவான். இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நெருப்புக்கோளம்போல் உள்ள ஆதவன், ஒவ்வொரு நொடிக்கும் நாற்பது இலட்சம் டன் அளவு தேய்ந்து அழிகின்றமையே காரணமாகும்.

(6) தாவரங்கள் பகலவனின் ஆற்றலைப் பெறல்
இயற்கையில் நடைபெறும் ஓர் அற்புத நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை (Photo - synthesis) என்பது. தாவரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயு, வேர்களின் மூலம் பெறும் நீர் இவற்றை உட்கொண்டும், கதிரவன் ஒளிக்கற்றைகளாகவும் வெப்பக்கதிர்களாகவும் உமிழும் ஆற்றலைத் துணைக்கொண்டும் (இதுதான் அணுவாற்றல்; நீரிய உட்கருக்கள் பரிதிய உட்கருக்களால் மாறும்போது உண்டாவது) கார்ப்போஹைட்ரேட்டுகள் போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கும் நிகழ்ச்சிதான் ஒளிச்சேர்க்கை என்பது. தாவரங்கள் கதிரவனின் ஒளியைக்கொண்டே வாழ்கின்றன என்பதை அறிவோம். அவை ஆதவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த வையத்தில் தாவரங்களைத் தவிர வேறு எந்தப் பொருள்களும் கதிரவனிடமிருந்து நேரடியாய் ஆற்றலைப் பெறும் திறனை அடையவில்லை. மனிதன் உட்பட விலங்கு, பறவை முதலிய பிராணிகள் யாவும் கதிரவன் காலும் வெப்பத்தையும் ஒளியையும் விழுங்காமல் - விழுங்க முடியாமல் - அவற்தை விழுங்கிய தாவரங்களை விழுங்கிக் கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற புலால் உண்ணும் விலங்குகளோ கதிரவன் ஆற்றலை நேரே விழுங்குவதில்லை; தாவரங்கள் உண்டாக்கும் பொருள்களை விழுங்குவதுமில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்று ஆற்றலைப் பெறுகின்றன. ஏன்? திருமாலின் வாகனங்களாய்ச் செயற்படும் பெரிய திருவடி (கருடன்) புலால் உண்பவன், சிறிய திருவடியோ (அநுமன்) மரக்கறியை உண்பவன், இதனால்தான் வைணவர்களுள் சிலர், புலால் உண்பவர்களாய் உள்ளனரோ என்று நினைக்க வேண்டியுள்ளது. சிவபெருமானின் வாகனமாகிய எருது மரக்கறி உண்பதுதான். சைவர்களுள் சிலர் அசைவ உண்பது ஏனோ தெரியவில்லை! சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளல் பெருமான்.

“உயிர்க்கொலையும் புல்லைப்பொசிப்பும்
        உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர்
        புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல்
        மாத்திர மேபுரிக”[5]

என்று பகவர்வர். மேலும் அப்பெருமான், 

"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன். பசியினால் 'இளைத்தோ
வீடுதோ நிரந்தும் பசியாரா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைந்தேன்

என்று எல்லோர்மீதும் கருணை காட்டுவார்.

எனவே, ஆராய்ந்து பார்த்தால் இப்புவியிலுள்ள பிராணிகள் அனைத்தும் பகலோனிடமிருந்து ஆற்றலைப் பெறுகின்றன என்பது வெள்ளிடை மலையென அறிகின்றோம். இதன் அறிகுறியாய்த்தான் தமிழர்கள் பொங்கல் விழாவைக் கொண் டாடுகின்றனர். ஆந்திர வேளாண் மக்கள் பெத்த பண்டுக! (பெரிய பண்டிகை) என்று சிறப்பாய்க் கொண்டாடுகின்றனர்.

(7) கதிரவனின் தேங்கிய ஆற்றல் : தாவரங்கனின் ஒவ்வோர் அணுவிலும் கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் அடங்கிக் கிடக்கின்றது. இத்த ஆற்றல்தான் பூமியிலிருந்து கிடைக்கும் நிலக்கரியிலும் மண்ணெண்ணெய் போன்ற தீர்ம எரியைகளிலும் (Liquid filet) அடங்கிக் கிடக்கின்றது. நிலக்கரி என்பது என்ன? பண்டைக் காலத்திலிருந்த காடுகள்தாம் காலப்போக்கில் நிலத்தினுள் அழுந்தி உருமாறி நிலக்கரியாய் மாறியுள்ளன. நீர்ம எரியைகள் யாவும் இப்பழைய மரங்களின் சாறுகளேயாகும். ஆகவே, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் கதிரவனிடமிருந்து மரத்தினுள்ளே அன்று புகுந்த ஆற்றல் அங்கேயே உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் ஆற்றல்தான் நம் உடலினுள்ளோ வெளியிலோ எரிதல் திகழும் பொழுது உருகி வழிகின்றது: நாம் மீண்டும் வெப்பத்தையும் பெறுகின்றோம்; ஒளியையும் அடைகின்றோம். எரியை களிடமிருந்து கிடைக்கும் ஆற்றலைக்கொண்டு இயந்திரங் களையும் இயக்குகின்றோம். நான் இன்று உங்கள் முன்னால் பேசுவதற்கு வேண்டிய ஆற்றலைத் தந்தவை காலையில் உண்ட 2 இட்டிலியும் 2 பூரியுந்தாம் என்பதை உணரவேண்டும். இட்டிலியும் பூரியும் சூரிய மின்கலங்கள் போல் (Solar batteries) செயற்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளால், ஆதவனே ஆற்றல் மூலம் என்ற உண்மையும் நமக்கு ஒருவாறு புலனாகின்றது. (8) கதிரவன், வாழ்க்கையின் உயிர்நாடி : கதிரவன்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு உயிர்நாடியாய் அமைகின்றான். இந்த அறிவியல் உண்மையினை அநுபவமாய்க் கண்ட இளங்கோ அடிகள் என்ற கவிஞர் பெருமான்.

“ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேகு வலத்திரித லான்”[6]

என்து தாம் இயற்றிய காவியத்தில் மங்கல வாழ்த்துப் பாடலாய் வெளியிட்டார். ‘கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பில்’ திளைத்த நக்கீரர் பெருமானும்,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு”[7]

என்று தம் திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகின்றார். ‘உலகம்’ என்பது சீவான்மாக்களை உணர்த்துகின்றது. ‘பலர்’ என்பது எல்லாச் சமயத்தினையும் குறிக்கின்றது. ஆற்றலின் மூலமாய் - ஆதிமூலமாய் - விளங்கும் ஆதவனே பொங்கல் விழாவின் கடவுளாய் - உழவர்கள் போற்றும் ‘சூரியநாராயணன்’ என்ற தலைவனாய் விளங்குகின்றான். ஒவ்வோர் ஆண்டிலும் உழவின் பயனாய்ப் புதியனவாய்ப் பெற்ற பொருள்களை ஆண்டவன் திருவடியில் காணிக்கையாய் வைத்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றனர் உழவர் பெருமக்கள்; பொங்கல் விழாவினைப் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர்.

பகலவனிடமிருந்து இயற்றப்பெற்ற ஆற்றல் (அணுவாற்றல்) தாவரங்கள்மூலம் பாய்ந்து பல்வேறு பொருள்களைத் தோற்றுவிக்கின்றன; இப்பொருள்கள் யாவும் ஒன்றுசேர்ந்து பொங்கல் வடிவில் காட்சியளிக்கின்றன. பொங்கலிலுள்ள பொருள்கள் யாவும் உழவன், தாவரங்களின் மூலம் பெற்றவை. நெய், தாவரங்களை உண்ட பசுவின்மூலம் அடைந்த பொருளாகும். பொங்கல் வடிவமாயுள்ள ஆற்றல், ஆற்றல் வடிவமாயுள்ள ஆண்டவனுக்கும் (கதிரவனுக்கும்) படைக்கப் பெறுகின்றது. இயற்கை வாழ்வில் தோய்ந்த தமிழரின் பொங்கல் விழா. அறிவியல் உண்மைகள் அடங்கிய ஒரு பெருவிழாவாய் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. அணுயுகத்தில் வாழும் நமக்கு அஃது அணுவின் தத்துவத்தை ஒருவாறு விளக்கி நிற்கின்றது. இந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட பாரதியின் ஞாயிறு வணக்கப் பாடலுக்குப் பொருள் கண்டு மகிழலாம்.

(9) ஆடலரசனின் தத்துவம்: ஆதவனே ஆற்றலின் மூலம் என்பதை மேலே விளக்கினேன். இதுவே இன்றைய அறிவியல் உண்மை. ஆற்றல் முழுவதும் அணுவின் உட்கருவில் தேங்கிக் கிடக்கின்றது என்பதும் இன்றைய நவீன அறிவியல் மெய்ப்பித்த உண்மை. இந்த அகிலத்தைச் சிவமாய்க் கொண்டால் ஆதவன் ஆற்றலாகின்றான். அங்ஙனமே அணுவின் உட்கருவும் சக்தியாகின்றது. ஒருவருடைய உயிர்ப்பு ஆற்றல் தடைபடாத அவருடைய இதயத்துடிப்பில் இருப்பதைப் போலவே, இந்த அகிலத்தின் ஆற்றல் ஆதவனிடத்திலும், அணுவின் ஆற்றல் அதன் உட்கருவிலும் அடங்கியுள்ளன. அண்டங்களின் தத்துவமும் அணுவின் தத்துவமும் தில்லைத் திருநடனத் தத்துவத்தில் - அம்பலவாணனின் ஆனந்தக் கூத்தில் - வைத்து விளக்கப்பெற்றுள்ளன. இத்திருவுருவத்தின் திருவாசி ‘ஓம்’ என்னும் பிரணவமாகும்; அவரது சடை, ஞானமே வடிவமானது. அதனை விரித்து நின்று ஆடுவது அவர் ஞானத்தை அள்ளி வழங்குகின்றார் என்பதைக் குறிக்கும். வீசிய கரத்தால் மாயையை உதறி, ஊன்றிய பாதத்தினால் மலத்தினை அமுக்கி. தூக்கிய திருவடியாகிய அருளை எடுத்து, ஆன்ம கோடிகளை ஆனந்தத்தில் அழுத்துகின்றார் என்பதுதான் தில்லைக் கூத்தின் உட்பொருள். ஒருகையில் உடுக்கையையும், மற்றொரு கையில் சிவத்த மழுவையும் அவர் தாங்கியிருப்பதிலிருந்து உலக அமைப்பில் ஒலி, ஒளிகளின் முக்கிய தத்துவத்தை உணரலாம். ஒலி ஒளிகளின் மூல காரணமும் துடிப்பேயாகும். இத்தத் தில்லைக் கூத்தனின் தத்துவமே ஒவ்வோர் அணுவினுள்ளும் ஆடல் அசைவுகளாய் அமைந்து கிடக்கின்றது என்பதை இன்றைய அறிவியல் உணர்த்துகின்றது.

திருமூலரும் இந்த நடராச தத்துவத்தை,

“எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமா யிருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருட் டன்விளை யாட்டதே”[8]

என்று விளக்குவர். எங்கும் சிவனுடைய திருமேனி உள்ளது. பார்க்குமிடந்தோறும் அவனுடைய அருளாற்றல் நீக்கமற நிறைந்துள்ளது. அவன் திருவருளால் நடைபெறும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ற திருத்தொழில்கள் ஐந்தும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். இவையனைத்தும் சிவசக்தியின் வாயிலாகவே அவன் செய்தருள்கின்றான். அம்மையும் அப்பனும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எல்லாம் சிதம்பரமாகின்றது. அப்பன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்து காணப்பெறுகின்றது. அம்மையின் ஆற்றல் ஒவ்வொரு செயலிலும் தென்படுகின்றது. எல்லா உயிர்களும் உலகங்களும். எல்லா உலகியற்பொருள்களும் அவனைச் சார்ந்து நிற்கின்றன. எல்லாச் செயல்களும் அவனைச் சார்ந்துள்ளன. சுருங்கக் கூறின், உலகமெல்லாம் சிவசக்தியின் திருக்கூத்தாகும். இதனால் திருமூலரும் ‘அம்பல மாவது அகில சராசரம்’ [9] என்றனர். இதனையே சிவஞான சித்தியாரும்,

“உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
இலகுபேர் இச்ச ஞானக் கிரியையுட் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட்கு அறிவினை ஆக்கி ஐந்து
தலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிக்கும் நாதன்.” [10]

என்று விளக்கியுரைக்கின்றது. ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்தும்பொருட்டே இறைவன் இந்த ஐந்தொழில்களையும் புரிந்து வருகின்றான்.

இவ்வாறு அறிவியல் அடிப்படையில் ஆற்றலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது ‘சக்தி தத்துவம்’ (ஆற்றல் தத்துவம்) நினைவிற்கு வருகின்றது. அதனைப்பற்றியும் சிறிது சிந்திப்போம்.

(10) சக்தி தத்துவம் : இது சைவத்திலும் உண்டு, வைணவத்திலும் உண்டு. சைவ சமயத்தினர் இறைவனை ‘அம்மையப்பன்’ என்று கருதுவது போலவே, வைணவ சமயத்தினர் இறைவனை ‘இலக்குமி - நாராயணன்’, ‘சீநிவாசன்’, ‘திருவாழ் மார்பன்’ என்றெல்லாம் கருதுகின்றனர். இருகடவுளர்களின் பெயர்களிலும் தேவிக்கு முதலிடம் இருப்பது கருதத்தக்கது. இம்மாபினைக் கருதியே இல்லக்கிழத்தியர்கள் தம் கணவன்மார்களின் பெயரைத் தம் பெயர்களுடன் சேர்த்து ‘விசயலக்குமி - இராமகிருஷ்ணன்’, ‘பிரேமா - இராமலிங்கம்’, ‘தனலட்சுமி - துரைசாமி’, ‘கல்யாணி-துரை’, ‘கீதா-அரங்கராசன்’, ‘யசோதா - ஐயபால்’ என்றெல்லாம் பெயர்கள் வழங்கி வருவதைக் காணலாம்.

வைணவத்தில் இறைவனும் இறைவியும் பிரிக்கப்பெறாது ஒன்றாய்க் கருதப்பெற்றாலும், செயல்முறையில் அவர்களைத் தனித்தனியாய்க் கருதும் மரபும் உண்டு.சட்டத்தின் அடிப்படையில் ஆட்சிபுரியும் இறைவனும், அன்பின் (கருணையின்) அடிப்படையில் ஆட்சிபுரியும் இறைவியும் இணைத்து செயற்படுவதால், சட்டத்தின் அன்பும் அன்பின் சட்டமும் உயிர்நிலையாய் ஒன்றோடொன்று பிணைந்து தெய்விக இயல்பாய்க் காட்சி அளிக்கின்றன. அறநூல்கள் வினையின் ஆட்சியை வலியுறுத்துகின்றன. சமயம் கருணையின் வரம்பற்ற நிலையை உணர்த்துகின்றது. அறத்தின் அடிப்படையில் அமைந்த சமயம் இரண்டன் உரிமைகளையும் சீர்தூக்கிப் பொருத்தமுறச் செய்கின்றது. இதனையே வேதாந்த தேசிகரும், “ஒண்டொடியான் திருமகளும் தானும் ஆகி” (தே. பி. 85) என்று இறைவன் நிலையைக் குறிப்பிட்டார். திருமகள் - பெரிய பிராட்டியார்:தூண் - இறைவன், நாராயணன். மணிவாசகப்பெருமானும் ‘அம்மையே அப்பா’ (திருவா. 536) என்பதில் அம்மையை முதலில் விளித்தார். வள்ளல் பெருமானும் ‘அம்மை அப்பன் என் ஆருயிர்த் துணைவன்’ (திருவருட்பா - இரண்டாம் திருமுறை 1333) என்ற தொடரில் முதலில் அம்மையைக் குறிப்பிடுதல் காணலாம். வைணவத்திலுள்ள பிராட்டியின் புருஷகாரம் (= தகவுரை கூறுதல்) ஓரளவு பிற சமயங்களிலும் ஊடுருவி நிற்றல் காணலாம். தேவி வழிபாடு சைவத்திலும் உண்டு, வைணவத்திலும் உண்டு. சைவத்திற்கு எடுத்துக்காட்டு அபிராமி அந்தாதி; வைணவத்திற்கு எடுத்துக்காட்டு முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருக்கண்ணமங்கை மாலை.

இவையெல்லாம் முற்றிலும் சமய அடிப்படையில் அமைந்த பெண் தெய்வ வழிபாட்டுத் தெய்வப்பனுவல்கள். அறிவியல் காலத்தில் வாழ்ந்த பாரதியாரின் சக்தி தத்துவத்தையும் சக்தி வழிபாட்டையும் இனிக் காண்போம். நம் நாட்டுச் சண்மதங்களுள்[11]. சாக்தம் என்பது ஒன்று. சக்தியை அடிப்படையாய்க் கொண்டு எழுந்தது. ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற மரபு ஒன்று உண்டு. சாக்த மதம் தோன்றிய பிறகு ‘சர்வம் சக்தி மயம் ஜகத்’ என்ற தத்துவம் தோன்றிய தாய்க் கருதலாம். இதுவே பாரதியாரின் பேச்சாகவும் மூச்சாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். சக்திபற்றி அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுவதே இக்கருத்திற்கு அரணாய் அமைத்துவிடுகிறது. பாரதியாரின் வாரணாசி வாழ்வும், கல்கத்தா வாழ்வும், புதுச்சேரியில் வாழ்ந்தபோது கொண்ட அரவிந்தரின் தொடர்பும் கவிஞரைச் சக்தி வழி பாட்டில் ஈடுபடுத்தியதாய்க் கருதுவது பொருத்தமேயாகும். அறிவியல் வளர்ச்சி பெற்ற உலகில் வாழும் நமக்குப் பாரதியின் பாடல்கள் அனைத்தும் அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பவையாய்க் காணப்படுகின்றன. ‘மூன்று காதல்’[12] என்ற பாடலில் மூன்றாவதாய் அன்னை பராசக்தியின்மீது இவர் காதல் கொண்டதாய்க் கூறுவர். இவள் ஒருநாள் இரவில் வருகின்றாள், கன்னி வடிவமாய் வருகின்றாள்; இவளைக் கண்ட களிப்பில்,

“அன்னை வடிவமடா ! - இவள்
        ஆதி பராசக்தி தேவியடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
        யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா”[13]

என்று எக்களிப்பில் மகிழ்ச்சிப் பெருக்கை வெளியிடுகின்றார். வாணி, சீதேவி, பார்வதி ஆகிய இம்மூன்று தேவியரும் ஒன்றாய் இலங்குபவளே மாதா பராசக்தி என்பது கவிஞரின் அதிராக் கொள்கையாகும். எனவே,

“மாதா பராசக்தி வையமெல்லாம் நீநிறைந்தாய்,
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே”[14]

என்று கூறுவர்.

“யாது மாகி நின்றாய்- காளி!
        எங்கும் நீநி றைந்தாய்!
தீது நன்மை யெல்லாம் - காளி
        தெய்வ லீலை யன்றோ.”[15]

“யாது மாகி நின்றாய் - காளி!
        எங்கும் நீநி றைந்தாய்!
தீது நன்மையெல்லாம் - நின்றன்
        செயல்க ளன்றி யில்லை.”[16]


“எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும்
        யாவுமாய் நின்றனை போற்றி” [17]

“எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர் சக்தி”[18]

என்ற பாடற்பகுதிகளில் ‘எல்லாம் சக்தி மயம்’ என்ற கருத்து தெளிவாவதைக் காணலாம்.

இதே கருத்தை வேறு மூன்று பாடல்களில் விரிவாய் விளக்குவர்.

“பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை,
        பரவும் வெய்ய கதிர்எனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
        காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை.
        சூழும் வெள்ளம் என்உயிர் மாற்றுவை;
விரியும் நீள்கடல், என்ன நிறைந்தனை,
        வெல்க காளி எனதம்மை வெல்கவே
வாயு வாகி வெளியை அளந்தனை,
        வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை;
தேயு வாகி ஒளிஅருள் செய்குவை;
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;”



பாயும் ஆயிரம் சக்திக ளாகியே
     பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை:
சாயும் பல்லுயிர் கொல்லுபவை நிற்பன
     தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை:
     நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை:
நிலத்தின் மீது மலையும் நதிகளும்
     சாரும் காடும் கனைகளும் ஆயினை:
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்
     கூட்டி வைத்துப் பவநலந் துய்த்தனை:
புலத்தை யீட்டிங் குயிர்கள்செய் தாய், அன்னே!
     போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!”71[19]

என்பவற்றில் இது விரிவாய் விளக்கப்படுதலைக் கண்டு மகிழலாம்.

‘எல்லாம் சக்திமயம்’ என்ற கருத்து பிறிதொரு கோணத்திலும் காட்டப்பெறுகின்றது:

“துன்ப மிலாத நிலையே சக்தி,
     தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
     ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
     எண்ணத் திருக்கும் எரியே சக்தி;
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
     முத்தி நிலையின் முடிவே சக்தி.”72[20]

இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் சக்தியின் பரிணாமம் பல்வேறு விதமாய்க் காட்சியளிக்கின்றது, முத்தாய்ப்பாய்.

“விழ்வு தடுக்கும் விறலே சக்தி,
     விண்ணை அளக்கும் விரிவே! சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
     உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி”,73[21]


என்று கூறிக் களிக்கின்றார் கவிஞர். மேலும்,

“பூதம் ஐந்தும் ஆனாய் - காளி!
        பொறிகள் ஐந்தும் ஆனாய்!
போத மாகி நின்றாப் - காளி!
        பொறியை விஞ்சி நின்றாய்.”[22]

என்று. அன்னை இந்திரியங்களாகவும் நிற்கின்றான். அவற்றைக் கடந்தும் நிற்கின்றாள் என்று காட்டுவர்.

‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது பெரியோர் வாக்கு. இதனையொட்டியே, எல்லாத் தொழில்களும் செயல்களும் சக்தி தேவியின் அருளால்தான் நடைபெறுகின்றன என்று நம்புபவர், பாரதியார்.

“செய்யும் கவிதை பராசக்தி
        யாலே செயப்படுங்காண்”<ref>75. வி.நா.மா. 26</ref>

என்று தாம் படைக்கும் கவிதைகளும் அன்னை பராசக்தியின் அருளால்தான் வெளிவருகின்றன என்று கூறுவதைக் காணலாம். பிறிதோர் இடத்தில்,

“பாட்டினிலே சொல்லுவதும்
        அவள்சொல் லாகும்
பயனின்றி உரைப்பாளோ?
        பாராய், நெஞ்சே!”[23]

என்று இக்கருத்தினையே மீண்டும் உரைப்பதைக் காணலாம். எனவே, பாடுவதும் அவள் அருளே என்று உணர்ந்த கவிஞர்,

“பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
        பாலித்திட வேணும்.”[24]

என்று தம் ‘பேராசையை’ வெளியிடுகின்றார். பராசக்தியைத் தமிழ் வாணியாகப் பாவித்து,

“வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
        ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
        விண்ணப்பம் செய்திடுவேன்;
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
        இராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
        வேல், சக்தி வேல்,சக்தி வேல்!”[25]

என்று வேண்டுகின்றார். இன்னும்,

“நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
        நன்றா வுளத்தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிலகை இன்பம் - நான்
        பாடத் திறனடைதல் வேண்டும்.”[26]

என்று, தாம் பாடும் பாடல் செவ்வனே அமைதல் வேண்டும் என்று விழைகின்றார். அப்படி அமைய அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றார்.

“எந்த நாளும் நின்மேல் - தாயே!
       இசைகள் பாடி வாழ்வேன்”[27]

என்று தம் நினைவை வெளியிடுகின்றார். இன்னுமோரிடத்தில்,

“நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
        நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
        பண்ணி லேகனி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
        முன்னு கின்ற பொழுதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
        கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.”[28]



என்று தம் பாடல்களையெல்லாம் பராசக்தி கேட்பதாய் கூறுகின்றார்.

சக்தி வழிபாடு இவர்தம் மூச்சாய் அமைகிறது.அதுவே பேச்சாகவும் இவர்தம் கவிதையில் வழிந்தோடுகின்றது.

"உயிரெனத் தோன்றி உணர்வுகொண் டேவளர்த்
தோங்கிடும் சக்திகை ஒதுகின்றோம்
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாவித்து நித்தம் வளர்க்கவென்றே."[29]

என்று 'வையம் முழுதும் படைத்தளிக்கின்ற' அன்னை பராசக்தியை வாழ்த்துகின்றார். பிறிதோரிடத்தில்,

"அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி ஒம்சக்திஓம்"

[30],

என்று பராசக்தியின்மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையை - மன உறுதியைத் தெளிவாக்குகின்றார்.

தம் உடல்பொருள் ஆவியனைத்தையும் சமர்ப்பணமாக்கி விடுகின்றார்.[31]. இஃது ஒரு நீண்ட பாட்டு, படித்து அநுபவிக்க வேண்டியது. இன்னொரு பாடலில்,

“சக்தி சக்தி வாழீ என்றால்
சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி
தாசன் என்றே பேராகும்."

[32]

என்று சக்திதேவியை வாழ்த்தித் தம்மைச் சக்திதாசன் என்று கூறிக் கொள்ளுகின்றார். சக்தி என்றால் அது முக்திக்கும் வேராகும் என்பது இவர்தம் உயிராகிய கொள்கை. பிறிதொரு பாடலில்[33]சக்தியையும் தம்மையும் ஐக்கியப்படுத்திக் கொள்ளுகின்றார். స్టీ { அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் "ಫಿ ..? fಳಿ விட்டாப் - காளி' னே: கு. ఢ K. 3, "αλ" பின்பு நின்னை பல்லாஸ் - காளி' 蠱 தும் உண்டோ"87 என்ற பாடல்: "உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னை உன்னில் இட்டேன்' என்ற பெரியாழ்வார் வாக்கையும் (விஷ்ணுசித்தர் அல்லவா?), புவியும் இருவிகம்பும் தின் அகத்த நீ.என். செவியின் வழிபுகுத்து என் உள்ளாய்; அவிவுஇன்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யார் அறிவார்'89 என்: தம்மாழ்வார் வாக்கையும், "தத்தது .ன்தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது பெற்றதொன்று என்பால்” அன்ற மணிவாசகப்பெருமானின் திருவாக்கையும் நினைவுகூரச் செய்துவிடுகின்றது. வைணவ தத்துவமாகிய அந்தர்யாமித் துவத்தை திகை நாட்டுவது போலக் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்ற மூன்று சக்தி தேவதைகள் பேர் போனவை. காஞ்சி காமகோடி பீடம் உலகப் பெயர் பெற்றது. எல்லாத் தெய்வ தத்துவங்களையும் நன்கு அறிந்த காஞ்சிப் பெரியவர், காமகோடி பீடத்தை நிறுவி வழிபடுவது சித்திக்கத்தக்கது. பெண்ணாய் உருவகம் செய்த பெரியோர் களின் சிந்தனையை வியக்கின்றோம். ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்க்கைத்துணை வியின் பங்கையும் இது சிந்திக்கச் செய் கின்றது. இந்த அடிப்படையில்தான் மனிதன் இறைவனையும் கற்பனை செய்தான் என்று எண்ணத் தோன்றுகின்றது. முடிப்புரை : இன்றைய பொழிவு மூன்று பிரிவுகளாய் அமைந்தது. முதற்பிரிவு அறிவியல் தோற்றமும் வளர்ச்சியும்’ 87. தோ.பா.39 காளிப்பு:ாட்டு - 2 88. பெரியாழ். திரு.5:4:5 இ. பெரி.திருவத். 5 90. தி.த.வா. கோயிற்றிருப்பதிகம் 10  என்பது. ஆதிமனிதன் ஆநுபவத்தில் அனைத்தையும் படிபடியாய் அறிந்துகொண்டான்: கூட்டு வாழ்க்கை - சமுதாய வாழ்க்கை - அமைந்த பிறகு அடிப்படைத் தேவைகனை வேளாண்மையால் நிறைவுசெய்துகொண்டான் உறையுள், உடை, பாதுகாப்பு முறைகள், அணிகள் முதலியவை படிப்படியாய் வளர்ந்தன. அறிவியல் போக்கில் என்று சொல்லக்கூடிய உயிரியல், மருத்துவம், கணிதம், வானியல், போக்குவரத்து முறைகள் யாவும் படிப்படியாய் வளர்த்தன.

'சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற இரண்டாவது பிரிவில், பல்வேறு சமயங்களைக் கூறி, அவற்றில் ஏற்பட்ட ஒருமைப்பாட்டை விளக்கினேன். ஐம்பெரும் பூதங்களால் இத்த அகிலத் தோற்றம் நிகழ்ந்தது என்ற பண்டையோரின் சிந்தனைகளை எடுத்துக்காட்டினேன். அடுத்து, வைதிகச் சமயங்களாகிய சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என்பவை பற்றியும், வேதாந்த சமயங்களாய் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என்பவைபற்றியும்; ஆகமங்களை முக்கிய அடிப்படையாய்க் கொண்ட சைவ சித்தாந்தத்தைப்பற்றியும் சுருக்கமாய் எடுத்துரைத்தேன். புறச்சமயங்களாகிய உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகியவற்றையும் அவற்றின் கொள்கைகளைப் பற்றியும் சற்று விரிவாகவே எடுத்துரைத்தேன். வைதிகச் சமயங்கள் யாவும் உலகப் படைப்புக்கு இறைவனே நிமித்த காரணமாய்க் கொள்வதையும் புறச்சமயங்கள்யாவும் அணுக்களிலிருந்தான் உலகம் தோன்றுவதாய்க் கொள்வதையும் வலியுறுத்தினேன்.

மூன்றாவது பிரிவில் அறிவியல், சமயம், தத்துவம் இவை இணைந்து கிடப்பதை விளக்கும் போக்கில் அண்டங்களின் அமைப்பையும் அணுவின் அமைப்பையும் விளக்கி, இரண்டன் அமைப்புகளையும் பொருத்திக் காட்டி, 'அண்டத்தைப் போலவே பிண்டமும்' என்ற முதுமொழியின் உண்மையையும் விளங்கச் செய்தேன். 'ஆதவனே ஆற்றல் மூலம்' என்பதையும், அந்த ஆற்றலையே ஆருயிர்கள் (விலங்குகள், பறவைகள் உட்பட) பல்வேறு வடிவங்களில் நுகர்கின்றன என்றும், இதற்கு அறிகுறியாய்த்தான் உழவர்கள் பொங்கல் திருநாளாய் - தமிழர் திருநாளாய் - கொண்டாடுகின்றனர் என்றும் விளக்கினேன். அணுவின் தத்துவமே ஆடலரசனின் தத்துவமாய் - ஒரு குறியீடாய் - எழுந்தது என்றும் விளங்க வைத்தேன். அணுவாற்றலே சக்தி தத்துவமாய் உருவெடுத்தது என்றும், அறிவியல் யுகத்தில் தோன்றிய பாரதியார் அறிவியல் அடிப்படையில் தம் பாடல்களைப் படைத்துள்ளார் என்றும்,காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி,மதுரை மீனாட்சி சக்தியின் உருவ வழிபாடாய் அமைந்த தெய்வங்கள் என்றும் விளக்கி, என் இன்றைய பொழிவைத் தலைக்கட்டுகின்றேன்

கரும்பு தின்னக் கூலி கொடுப்பதற்காக அமைந்தவை பல்கலைக் கழக அறக்கட்டளைகள்: புலவர்கட்கு மரியாதை செய்வதற்காக ஏற்பட்டவை. அடியேன் என் வறுமை நிலையில் கூட என் 81ஆவது பிறந்த நாள் நினைவாய் (27-8-96) இருபத்தைந்தாயிரம் வெண்பொற்காசுகள் தந்து, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ஒர் அறக்கட்டளை அமைத்துள்ளேன். கடத்த பத்தாண்டுகளுக்கு முன்னர்த் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் இத்தகைய ஒர் அறக்கட்டளையை நிறுவியுள்ளேன். இன்றைய பேச்சுக்கு ஊற்றுவாயாய் இருக்கும் அறக் கட்டளையை நிறுவியவர் இப்பல்கலைக் கழகத்து முதல் இந்திப் பேராசிரியர் - துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சங்கரராஜு நாயுடு அவர்களுக்கும், இந்த அறக்கட்டளையின் ஆதரவில் பேசுவதற்கு வாய்ப்புத் தந்த பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும், சிறப்பாய் அதன் துணைவேந்தர் பேராசிரியர் ப.க. பொன்னுசாமி அவர்களுக்கும், டாக்டர் இராதாகிருஷ்ணன் உயர்நிலை தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் இரா.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், இரண்டு நாள்களாய் என் உரைகளைச் செவிமடுத்த பேராசிரியப் பெருமக்களுக்கும் அறிஞர்கட்கும் மாணவச் செல்வங்களுக்கும் என் இதயங்கலந்த நன்றியைப் புலப்படுத்தி,

"எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
எண்ணினேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்


ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்கஅடைக் கும்போது உணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே" (8.9 9.11.)

என்ற அப்பர் பெருமான் திருத்தாண்டகத் திருப்பாடலுடனும்,


"ஒண்மிதியில் புனல் உருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து,அண்டம் மீதுபோகி,
இருவிசும்பி னூடுபோய் எழுத்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி,
தாடகையின் புறத்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கினேனே (திருநெடுத் 5)

என்ற திருமங்கையார் திருநெடுந்தாண்டகப் பாசுரத்துடனும் என் இன்றைய பொழிவை நிறைவு செய்கின்றேன்.

நன்றி.
அனைவருக்கும் வணக்கம்.
  1. 50. ஹிரோசீமா, நாகசாகி என்பன ஜப்பானிலுள்ள நகரங்கள். இரண்டாம் உலகப் பெரும் போரில் அமெரிக்க அணுகுண்டுகளால் அழிக்கப்பெற்றன.
  2. 51. இராவணனின் மூத்த மகனின் பெயரும் இதுவே. பிற்காலத்தில் இந்திரனைப் போரில் வென்று ‘இந்திரசித்து’ என்ற பெயர் பெற்றான்.
  3. 52. பா.க. ஞாயிறு வணக்கம் - 2
  4. 55. குதிரைத்திறன் - திறமை வாய்ந்த குதிரைகள் வேலை செய்யும் திறனின் சராசரியை அளவிட்டு இந்த அலகை வகுத்தவர். ஜேம்ஸ் வாட் என்பார். 550 இராத்தல் எடையுள்ள பொருளை ஒரு விநாடி நேரத்தில் ஓர் அடி உயரம் தூக்கக்கூடிய திறனே குதிரைத்திறன் ஆகும்.
  5. 56. திருவருட்பா = ஆறாம் திருமுறை - அருள் விளக்க மாலை - 71 (4160)
  6. 58. சிலப். மங்கல வாழ்த்து - அடி 4-6.
  7. 59. திருமுருகாற். அடி 1-2.
  8. 60. திருமத்திரம் ஒன்பதாந்தந்திரம் - திருக்கூத்துத் தரிசனம்.
  9. 61. திருமத்திரம் - திருக்கூத்துத் தரிசனம் - 54 (2775)
  10. 62. சிவஞான சித்தியார்- சுபக்கம் - 257
  11. 63. சண்மதங்களாவன: சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சாக்தம் என்பனவாகும்
  12. 64. தோ. பா. 63 மூன்று காதல் - 4
  13. 65. தோ. பா. 63 - மூன்று காதல் - 8
  14. 66. தோ. பா. நவராத்திரிப்பாட்டு - 1
  15. 67. தோ. பா. 29 காளிப்பாட்டு
  16. 68. தோ. பா. 30 காளி ஸ்தோத்திம் - 1
  17. 69. தோ. பா. 17 மகாசக்தி பஞ்சரம் - 2
  18. 70
  19. 71. தோ.பா. 33 மகாசக்தி வாழ்த்து - 3, 4, 5
  20. 72. தோ.பா., 20 சக்தி - 1
  21. 73. தோ.பா.20 - சக்தி - 3
  22. 74. தோ.பா. 25.காளிப் பாட்டு - 1
  23. 76. தோ.பா.26 பேதை நெஞ்சே - 5
  24. 77. தோ.பா.11 காணி நிலம் - 3
  25. 78. ஓம் சக்தி - 5
  26. 79. 31. யோகசித்தி - 1
  27. 80. 31. காளி ஸ்தோத்திரம் - 2
  28. 81. தோ. பா. 18 பராசக்தி - 3
  29. 82.தோ.பா.21,வையம் முழுதும்-4
  30. 83. தோ.பா. 17,ஓம்சக்தி - 3
  31. 84தோ.பா.23,சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
  32. 85தோ.பா.25,சக்தி திருபுகழ் - 9
  33. 86. தோ.பா.25, சிவசக்தி புகழ்.