அவள் ஒரு மோகனம்/அவள் அழட்டும்!

10. அவள் அழட்டும்!


ஞானசீலனுக்கும், குழலிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது?

மூச்சுக்கு மூச்சு - பேச்சுக்குப் பேச்சு "அண்ணா... அண்ணா...” என்கிறாளே, அவ்வளவு பாசம் பொங்க என்ன காரணம்?

குழலியின் உடன் பிறந்தவன் அல்லன், ஞானசீலன். ஆனால், உடன் பிறந்தவனுக்கும் மேலாக அவனை மதிக்கிறாள், குழலி, அதற்கு என்ன காரணம்?

குழவியே அந்தக் கதையைக் கூறினாள்.

"இருபது மாதம் இருக்கும். முன் இரவு நேரம். பிசி பிசி"ன்னு மழை தூறிச்சு. ஒரு தோழியைப் பார்த்திட்டு வீட்டுக்குத் திரும்பிக்கிட்டு இருந்தேன். தெருவிலே ஈ, காக்கை இல்லே. பயத்தோட நடந்தேன்.

திடுதிப்னு யாரோ ரவுடி ஒருத்தன் எக்கச்சக்கமான குடிவெறியிலே, என்னை மடக்கி மறிச்சு, என் கையைப் பிடிச்சு இழுத்து, ‘ஏ, சின்னப்பொண்ணு! என் பின்னாலே மூச்சுக்காட்டாம ஒடியா. இல்லாட்டி, உன்னை குளோஸ் பண்ணிப்புடுவேன்!'ண்னு மிரட்டினான்.

எனக்குக் கதிகலங்கிப் போச்சு. அலறினாலும் ஆபத்து. தெய்வமே! அப்படின்னு நெஞ்சுக்குள்ளறவே அழுதேன்.

அப்பத்தான் தெய்வமாட்டம் தன்னோட ரோஜா நிறச் செவர்லே காரிலே வந்த ஞானசீலன், பிசாசு மாதிரி வந்த அந்த ரவுடி கையிலேருந்து என் மானத்தையும் உசிரையும் காப்பாற்றினார்!

பார்த்தீங்களா, டாக்டர்! - இப்பத்தான் நினைப்பு வருது. கொஞ்ச நாழிகைக்கு முன்னாடி நாம இங்கே திரும்பிக்கிட்டு இருக்கையிலே, உங்களையே ஒரு ரவுடி மடக்கிட்டானே. நான் எந்த மூலையாம்?’’

சற்றே ஓய்ந்தாள், குழலி.

பொறிதட்டிப் போனாள், ரேவதி. மேஜையில் கிடந்த கைத்துப்பாக்கி அவள் பார்வையில் சுழன்றது.

“டாக்டர்”.

“குழலி, கதையைத் தொடரப் போறியா?” ஆமாங்க; என் கதைக்கு நாயகன் யார், சொன் லுங்க???”

“ஞானசீலன்! - அந்தப் பெயரை என்னாலே எப்படி, மறக்க முடியும்? ஊம்; கதையைச் சொல்லேன், குழலி!”

"மறுபடி சொல்றேன். இது உண்மைக் கதை. சரி, கேளுங்க; வசதிபடைச்ச எங்கள் அண்ணன் ஞானசீலனுக்கு. எங்கள் தெருவிலே பெரிய வீடு இருக்குது; ஆனால், சின்ன வீடு எதுவும் இருக்கிறதாகத் தெரியல்லே. ஆனாலும், அவர் வெகு அபூர்வமாகத்தான் அங்கே வருவார். அவர் பம்பாயிலே என்னவோ தொழில் வச்சிருக்காராம், அவர் இங்கே பட்டணத்துக்கு வந்தால், எதையோ மறக்கறதுக் கோசரம் குடியே சதம்னு கிடக்கிறாராம். கெட்ட பொம்பளைங்களின் கெட்ட சவகாசம் இருக்கிறதாவும் அழுகையும் ஆத்திரமுமாகச் சொன்னார். உடலிலே கெட்டவராக இருக்கலாம், எங்கள் அண்ணன். ஆனால், உள்ளத்தாலே அவர் ஒரு நல்ல மனிதனாகத்தான்

இன்னமும் இருந்துக்கிட்டு வர்றாங்க... என் பேச்சு சத்திய மானதுங்க, டாக்டரம்மா!...” கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டாள்.

"ஏன் இப்படி நீங்கள் வீணாகக் கெட்டுப் போகணும்னு ஒரு நாள் உரிமையோட அவரைக் கோவிச்சேன், ஊர் உலகத்தைப்போல ஒரு கலியாணம் காட்சி பண்ணிக்கினு நாலுபேரைப் போல இருக்கப்படாதான்னு கேட்டேன். அப்பத்தான் ஒரு இரகசியம் தெரிஞ்சுச்சு, எனக்கு!’’-பேச்சிற்கு அரைப்புள்ளி வைத்தாள்.

"ஊம், பேசேன், குழலி!”

ரேவதியின் மெய் தடுமாறியது; ஆனால், மெய்உண்மை தடுமாறுவதில்லையே! உள்ளுணர்வு நிதானமாகத் தான் விழித்திருக்கிறது.

குழலி தனது பேச்சுக்குத் தொடர்பு சேர்த்தாள். "அண்ணன் ஞானசீலன் சொன்ன சிதம்பர இரகசியம் இதுதான் - அவர், உயிருக்கு உயிராய்க் காதலித்த ஒருத்தியைக் கலியாணம் பண்ணிக்கிட்டாராம். அந்தப் பொண்ணும் அவர் மேலே உயிரையே வச்சிருந்தாளாம் , இடையிலே என்னவோ துளியூண்டு தகராறு வந்துச்சாம்; அந்தப் பெண் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்படாததாலே, இவர் ஆத்திரப்பட்டு, வாயும் வயிறுமாக இருந்த பெண்டாட்டியை எட்டித் தள்ளிப்பிட்டாராம். அந்த அம்மாளுக்குத் ' தான்' என்கிற ஆணவமும் அகங்காரமும் ரொம்ப ரொம்ப அதிகமாம். அதனாலே, அவள் என்னோட அன்பான அண்ணனை விவாகரத்துச் செஞ்சிட்டாளாம். இதனாலே மனசு வெறுத்து, கடல் மாதிரியான பங்களா, புதுசா வாங்கின பிரிமியர் கார் எல்லாத்தையும் விற்றுப்போட்டு, புதுக்கோட்டையை விட்டுட்டு பம்பாய்க்கு ஓடிப் போயிட்டாராம்! பின்னாலே ரொம்ப நாள் கழிச்சு தமிழ் மண்ணோட ஞாபகம் வந்திருக்கும் போலிருக்குது. இப்ப இங்கே வந்திருக்கார். தமிழிலே

ஒரு படம் எடுக்க வேணும்னு ஆசையாம்; கூடிய சீக்கிரத்திலேயே இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கப் போறாதாம்! காதல் ஒரு முறைதானே வரும்னு என்னைக் கேட்டார். எனக்குப் பதில் சொல்லத் தெரியல்லீங்க!... ஆமாங்க!" - மீண்டும் இடைவேளை விட்டாள், குழலி.

ரேவதி குறுக்கிட்டாள்: “காதல் ஒருமுறைதான் வரும்!”

"அம்மா!" என்று அழைத்தாள், குழலி. அவளுக்கு விழிப்பூட்டினாளோ? - தொடர்ந்தாள்; "அ ம் மா, உங்கள் தூக்கத்தைக் கெடுத்திட்டேன். தொடங்கிய கதையை முடிச்சிடறதுதான் நியாயம்! அண்ணனோட முதல் சம்சாரம் யார், என்ன என்கிற விவரத்தை நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படலாம்; அது நியாயமும் கூட! ஆனால், அந்த விவரத்தை நானும் அவர்கிட்டே கேட்கல்லே, அவரும் அதைப்பற்றிச் சொல்லல்லே!" குழலி பெருமூச்சு விட்டாள்.

ஒருவாட்டி, கு. டி. மயக்கத்திலே ‘கண்ணே மணியே’ன்னு வசனம் பேசி, என்னமோ ஒரு பெயரைச் சொல்விச் சொல்லி விம்மினாருங்க; படுக்கையிலே அவர் பக்கத்திலே, அவரோட முகூர்த்தப் படம் ஒண்ணும் கிடந்திச்சுங்க!... அந்தப் படத்தையும் நான் பார்க்க விரும்பலிங்க! - முறிஞ்சு போன ஓர் உன்னதமான உயிர் உறவுக்கு அந்தப் படமே சாட்சியாக அமைய லாயக்கில்லாமல் போயிட்டதுக்கப்புறம், அந்தப் படத்தைப் பார்த்து நான் சாட்சியாக ஆகிறதிலே யாருக்கு என்ன ஆதாயம் வந்திட முடியும்?”

நிறுத்தி, "எங்கள் ஞானசில அண்ணா அன்பாலே நல்லவர்; மனிதாபிமானத்திலேயும் மனித நேசத்திலேயும் அன்பானவர் இல்லாட்டி, என்றைக்கோ தாலி கட்டிக் கிட்ட மனைவி தன்னைத் தூக்கியெறிஞ்சுங்கூட, இன்றைக்கும் அந்தப் பெண்டாட்டிக்காகவும், அவள் பறி கொடுத்த அவரோட குழந்தைக்காகவும் கண்ணீர் விட்டுக் கிட்டு இருப்பாருங்களா? சொல்லுங்கம்மா!"

குழலி மிகக் கூர்மையாக ரேவதியை ஊடுருவினாள்.

"மெய்தான்!...” என்றாள், ரேவதி. உயிரின் துடிப்பு அடங்கினால் தானே?

“அப்படின்னா? நீங்களும் என் கட்சிதான்!” என்று சோகம் இழைந்தோட நகைத் தாள், குழலி. அம்மா, தியேட்டரிலே நீங்கள் பேசிக்கினு இருந்த பொம்பளை கிட்டே ஜாக்கிரதையாக இரு க் கி ற து நல்லது. அவள் ஒரு சமூக வேசி! அண்ணன் குடிபோதையிலே உளருறதை வச்சுக்கிட்டு உங்களையும் 'ப்ளாக்மெயில்’ பண்ணப் பார்ப்பாள்! அப்புறம், வழியிலே உங்களை மடக்கின ரவுடியோட பசியை எத்தனையோ . தரம் எங்கள் அண்ணன்காரர் தீர்த்து வச்சிருக்காருங்க! மனிதன் மிருகமாகிறதுக்கு ஒரு நொடி போதாதுங்களா? ஒரு நொடியிலே மிருகமாகி, மறுநொடியில் மனிதனாகவும் ஆகி ஓடிப் போய்ட்டானே, அந்த ரவுடி...”

"என்னோட பாவத்தை கட்டிச் சுமக்காமல் போன வரையிலும் அந்த ஆளுக்குத்தான் லாபம்! இல்லேன்னா, இந்நேரம் நான் செத்த இடத்திலே புல் முளைச்சிருக்காதா?" என்றாள், ரேவதி.

"நல்லகாலம், ஒரு சமூக நஷ்டத்தையும் தவிர்த்திட்டான், அந்த ரவுடி!"

பிஸ்கட் மணக்கத் தொடங்குகிறது.

தாகசாந்திக்கு இப்போது தண்ணீர்க் கூஜாவால்தான் பதில் சொல்லக்கூடும்.

"அம்மா.”

"துக்கம் வந்தாச்சாம்மா?"

“துக்கம் போயாச்சுங்க!”

"அப்புறம்?"

உங்களோட திருமணத்துக்கு என் அண்ணன் ஞானசீலனை அழைப்பீங்களா? அண்ணனுக்காக என் கையில் ஓர் அழைப்பிதழ் கொடுப்பீங்களா?”

ரேவதியின் நெற்றிப் பொட்டில் சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடித்தது யார்? ரேவதி துடித்தாள். விழி வழியே உள்மனம் வெளியே பிதுங்கியது.

"அம்மா, கேட்டேனே?’’

"ஒ...கொடுப்பேனே!”

"பலே, பலே...எங்கள் டாக்டர் தங்கம்னா தங்கம் தான்...சொக்கத் தங்கமேதான்!”

கைக்குழந்தைக்கு ஈடுகட்டிக் கள்ளங்கவடு இல்லாமல் வாய் நிரம்ப குதுகலத்தோடு சிரிக்கிறாள் குழலி.

ரேவதியின் உள்ளத்தின் உள்ளம் ஊமைத்தனமாக விம்மியது. "என்னோட தெய்வக் குழந்தை இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தானே வாய் கொள்ளாமல் சிரிக்கும்? அது செத்ததாலே தானே என் மனம் வெறுத்து, அவரையும் வெறுத்தேன்? அந்த மனிதர் அன்றைக்கு ஆத்திர வெறியோட ஈவிரக்கம் இல்லாமல் வாயும் வயிறுமாக இருந்த என்னைக் கீழே தள்ளி விடாமல் இருந்திருந்தால், அந்தக் குழந்தை பிழைச்சிருக்குமே? ஆண்டவனே! இனி நான் என்ன செய்வேன்...? இப்ப என்னை என்ன செய்யச் சொல்கிறாய்...??

பொங்கிய ரேவதி மெல்ல எழுந்து சென்று கண்ணீரைக் கழுவிக் கொண்டு வந்தாள்.

குழலிப் பெண்ணே உன்னோட வெள்ளைச் சிரிப்பிலே நான் குழந்தைத் தெய்வத்தைக் கண்டேன். ஆகவே, நீ என் குழந்தையாக வந்து எனக்கு ஒரு முத்தம்-ஒரே ஒரு முத்தம் கொடு. நான் உனக்குத் தாயாகி, நானும் உனக்கு முத்தம் கொடுத்திடறேன்...! ஊம்; வா...ஒடி வா, குழலி!” விம்மினாள் ரேவதி. பாசம் பரிமாறப்பட்டது.

முத்தங்கள் பரிவர்த்தனை ஆயின.

குழலி இப்போது விம்மினாள்.

"உனக்குத் தூக்கம் வருதா?"

"ஊகூம்; பொழுதுதான் விடியப் போகுதே! இனி மேல் தூக்கம் வந்துதான் என்ன புண்ணியம், அம்மா?’’

"அப்படியானால், வீடியோ போடட்டுமா? சங்கரா பரணம் பார்க்கலாமா?’’

"பார்க்கலாமே.”

சொல்லிக் கொண்டே, குழலி தலையைச் சாய்த்தாள். கொட்டாவி வந்தது; தூக்கமும் வந்து விட்டது. உறக்கத்திலும் கூட, குழலியின் பால்வழிந்த முகத்திலே, அழகு புனிதக்கோலம் ஏந்திச் சிரிக்கிறது!

ரேவதி தாவணியை எடுத்துக் குழலியின் தளிர் மேனியில் போர்த்தினாள். பிறகு சுழலும் நாற்காலியில் சுழலாமல் வந்தமர்ந்தாள். அவளது அந்தரங்க அறையிலே அவள் ஒருத்திதான் சிவராத்திரி விரதம் இருக்கிறாள்!

இப்போது, அவளது மனமும் அந்தரங்கக் கூடமாக மாறுகிறது! அந்தரங்கம் என்றால், இருட்டுத்தானோ? இருட்டின் சிரிப்பிலே, என்னென்னவோ புரியாத ராகங்களின் பின்னணியில், அவள் தனது வேடங்களைக் களைந்து வீசியெறிந்து நிர்வாணக்கோலம் தாங்கிய்வளாக அவளே இப்போது சிரிக்கத் தொடங்குகிறாள்!

“ஞானசீலன்! இப்போ நீங்கள் யார்...? நான் யார்...? விடுகதையை மறக்காமல் போட்டுக்கிட்டிருக்கிற உங்களுக்கு விடுகதைக்கு உண்டான விடையைச் சொல்லித்தர நினைப்பு வரவேண்டாமா...? சொல்லுங்க, மிஸ்டர் ஞானசீலன், சொல்லுங்க!”

ரேவதி அழுகிறாள்; அமுது கொண்டேயிருக்கிறாள்!