ஆடும் தீபம்/தென் மலைச் சந்தனம்

தென் மலைச்
சந்தனம்
ஆடும் தீபம்!

சிந்தனையைத் தூண்டி விடும் சிறப்புப் பெயர். ஈராறு உள்ளங்களிலும் பெருகி வரும் இன்பக் கற்பனைகள் ஒருமிக்கச் சங்கமிக்கும் எழிலாழி.

வாழ்க்கைத் தீபத்திலே, கற்பு நெறி காத்து, அன்பைப் பெருக்கி, பண்பை வளர்த்து, இல்லறத் தவத்திலே சிறப்புற வாழ்ந்து, எழில் மக்களை ஈன்று, தன்னையும், தன் குடும்பத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் சந்தனம், பெண்; தேய்வில் மணம் பெறும் தியாகப் பிறவி. துன்பம் அவளுக்குத் துணைச் சக்தி. இல்லற எல்லைக் கோட்டினுள் அடங்குகையில், பெண்மையின் தியாகம் நற்பயனுறுகிறது. இல்லறத்தின் புறத்தே நோக்குங்கால், அவள் தெருவில் எறியப்பட்ட மாணிக்கம்! உடைமையில்லாத ஒரு பொருளைக் கைப்பற்றி, உரிமையாக்கிக் கொள்வதும், அவசியமில்லையென்றால், அதை உமிழ்ந்து விடுவதும், இன்றையச் சமூகத்தில் சிலருக்குச் சர்வ சாதாரணமான காரியமாகி விட்டது. ஆனால், சந்தனத்தின் தேய்வைப் பொருட்படுத்தாமல், மணத்தினை மட்டும் விரும்புகிறது உல்லாச உலகம்!

நீள் விசும்பும், நீலக் கடலும் இணையும் கோட்டினைக் குறிக்கோளாக்கி, ஒரு சுடர் பிரயாணம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவே அல்லிச் சுடர். தமிழ் மணம் தந்த சீதனச் சொத்து.
பரிதிக் கோளமாம் பேரொளியுடன் இரண்டறக் கலந்து, இன்பம் துய்க்க விரும்பும் அச்சுடருக்கு இதோ, என்னாலியன்ற பணி. எழுதுவது எப்படி எழுத்தாளரின் உரிமையோ, அது போல், ரசிப்பது வாசக நேயர்களின் உரிமை . ரசிகர்களும் இலக்கியமும், ஒன்று சேரும் பொழுது, ஆசிரியரோ, ஆசிரியையோ விலகி நின்றுதான் பார்க்க வேண்டும்.

கிருஷ்ணா