ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இராமாயண நாடகம்

இராமாயண நாடகம்!
ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் பொய் என்று பேசும் இந்திரா கட்சியின் அடிமைத் தலைவர்களே! தொண்டர்களே!

ஆரியர் - திராவிடர் பூசலைத் தொலைக்காட்சி இராமாயண நாடகத்தில் பாருங்கள்!

ந்திய நாட்டைப் பொறுத்த அளவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்றாலும், அவை அனைத்தும் ஆரியம், திராவிடம் என்னும் இரண்டு பேரினங்களுள் அடங்குபவை ஆகும். இவற்றுள் நம் தமிழ்த் தேசிய இனம் என்பது திராவிடப் பேரினத்துள் அடங்குவதாகும். இத்துடன் இந்தியாவிலுள்ள மற்ற இருபத்து மூன்று இனங்களும் இதில் அடங்கும்.

இந்திய நாடு விடுதலை பெற்றுப் பேராயக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், அந்த ஆட்சியை வடநாட்டு முதலாளிகளும் ஆரியப் பார்ப்பனர்களும் கைப்பற்றிக்கொண்டு, பிற அனைத்து இனங்களின் உட்கூறுகளையும் சிதைத்து வருவதோடன்றி, இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்னும் பெயரில், ஆரியப் பார்ப்பனிய மரபுகளையும், இந்துமதக் கோட்பாடுகளையுமே முகாமைப்படுத்தி வளர்த்தெடுக்கத் தொடங்கினர். இதற்குத் துணையாக, பிற இனக் கூறுகளைளத் தம் ஆரியமரபுக் கூறுகளுடன் உட்கவர்ந்துகொண்டு அனைத்துச் சிறப்பியல்களுக்கும் தாமே கட்டியங்கூறி உரிமை கொண்டாடித் தம் போலிப் பெருமைகளைக் கரவாக உலகெலாம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

இவற்றுக்கிடையில், ஆரிய - திராவிட மரபுகளை, இல்லை வரலாற்றை மாற்றி எழுதி - உரைத்து - எதிர்கால

இளைஞர்கள் உண்மைகளை அறிந்துகொள்ள இயலாதவாறு - அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர். ‘ஆரியமாவது - திராவிட மாவது ? அவை எங்கே இருக்கின்றன’ என்று வெளிப்படையாகவோ இப்பொழுதுள்ள இந்திரா பேராயக் கட்சியின் வரலாறு தெரியாத கத்துக்குட்டித் தலைவர்களெல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசிப் பகடிசெய்தும் வருகின்றனர்.

இவர்களுக்கு ஆப்பு வைத்து அறைகிறது போல், இப்பொழுது ஒரு செய்தி நடந்துவருகிறது. அதுதான் அண்மையில் தில்லித் தொலைக்காட்சியினின்று கிழமைதோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற ‘இராமாயணத் தொடர் நாடக’ நிகழ்ச்சியாகும். இந்தி மொழியில் ஒளிபரப்பாகிவரும், இந் நாடகத்தில், பச்சையாக ஆரிய - திராவிடப் பூசல்கள் உரையாடல் வடிவில் பேசப்பெற்று வருவதை அனைவரும் கவனித்திருக்கலாம். இராமன் ஆரியர் தலைவன் என்றே புகழ்ந்து பேசப்பெறுகிறான். இந்நாடு ஆரிய நாடு - ஆரிய நிலம் - என்று வரலாற்றை மூடிமறைக்கின்றவாறு போலிக் கருத்துகள் வெளிப்படுத்தப் பெறுகின்றன.

ஆரியரை உயர்த்திக் கூறுகின்ற வகையில் ஆரிய - திராவிடப் பூசல்களைப் பேசுவது மட்டும் இவர்களுக்குத் தேவையாகிறது போலும் இதன் தன்மையை இங்குள்ள இந்திரா கட்சியிலுள்ள வரட்டுத் தலைவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுகிறோம். ஆரியர்கள் உயர்வாகவும் திராவிடர்கள் இந் நாடகத்தில் தாழ்வாகவும் கூறப்படுவது, இவர்கள் கறிக்கு வேண்டுமானால் உறைக்காமல் இருக்கலாம். ஆனால், இங்குள்ள தமிழர்கள் எல்லோரும் இவர்களைப் போல் உணர்வற்றுற மானமற்று இருக்க முடியுமா? நிலை இப்படியே தொடருமானால், இந்தியாவில் இவ்விருபதாம் நூற்றாண்டு எல்லையிலேனும் மீண்டும் ஒர் இராமாயணக் கதை நடைபெற்றாலும் வியப்பதற்கில்லை! ஆனால் முடிவு வேறாக இருக்கும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 84, 1987.