இருண்ட வீடு/அத்தியாயம்-28


28

திருடன் வந்து, அலமாரி திறந்து,

தன் செயலை அமைதியோடு செய்கிறான்.

சரியாய் ஒருமணி இரவில் தலைவர்
தூக்கமும் பசியின் துடிப்பும் விழிப்பும்
இரங்கத் தக்கவாய் இருந்தன. தலைவியோ
கனவால் விழிப்பதும் கண்ணயர் வதுமாய்
இருந்தாள். பையன் சொறிவான் தூங்குவான்!
இந்த நிலைமையில் இவர்கள் இருக்கையில்
திருடன் ஒருவன் தெருப் பக்கத்து
மாடிமேல் ஏறி ஆடா தசையாது
முற்றத்து வழியைப் பற்றி இறங்கினான்.
அவனோ கறுப்புடை அரையிற் கட்டிப்
பிறைபோற் கத்தியும் பிடித் திருந்தான்!
ஓசை யின்றி உள்ளறை புகுந்தான்!
படர்ந்தெரி விளக்கைப் பளிச்சென் றவித்தான்!
அலமாரி தனை அங்கையால் தடவினான்!
சாவி யில்லை; தாவி நகர்ந்து
தலைவியின் தலைமாடு தடவினான்; இல்லை.
சாய்வுநாற் காலியில் சாய்ந்திருந்தவரின்
அண்டையில் இருந்த குண்டுப் பெட்டிமேல்
இருந்தது சாவி; எடுத்துச் சென்றே
அலமாரி தன்னைக் கிலுக் கென்று திறந்தான்!
வீட்டு நாய் அதனைக் கேட்டுக் குலைத்தது!
தலைவர் விழித்தார் தலைவி விழித்தாள்.
பெரியவன் விழித்தான். தெருவில் தொலைவில்

எதையோ கண்டு பதைத்தது நாய் என்று
மதமத வென்று மல்லாந்திருந்தனர்!
சிறிது நேரம் சென்ற பின்னர்
நிறையப் பணத்தாள், நிறையப் பணங்கள்
போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக்
கையில் தூக்கினான் கரிய திருடன்;
பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில
வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை
அனைவர் காதையும் அசைத்த தேனும்
"தலைவர் எதையோ தடவு கின்றார்
என்று தலைவி எண்ணியிருந்தாள்;
தலைவி பாக்குத் தடவினாள் என்று
தலைவர் நினைத்துச் "சரி" என் றிருந்தார்
பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்.
திருடன் துணியொன்று தேடி, அதிலே
பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக்
கட்டி இடது கையிற் பிடித்து
வலது கையில் வைத்தான் கத்தியை!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-28&oldid=1534770" இலிருந்து மீள்விக்கப்பட்டது