இருண்ட வீடு/அத்தியாயம்-33


33

கல்வியில்லா வீடு

இருண்ட வீடு


எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீட்டை இருண்டவீ டென்க!
படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க!
அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
நெறிகா ணாது நின்ற படிவிழும்!
சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
வித்து விளைப்பதோ விண்ணினும் பெரிதாம்!
செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்?
கல்வி இல்லான் இல்லான் என்க.
இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும்
படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்.
கல்லான். வலியிலான்; கண்ணிலான்; அவன்பால்
எல்லா நோயும் எப்போது முண்டு.
கற்க எவரும்; எக்குறை நேரினும்
நிற்காது கற்க; நிறைவாழ் வென்பது
கற்கும் விழுக்காடு காணும்! பெண்கள்
கற்க! ஆடவர் கற்க! கல்லார்
முதிய ராயினும் முயல்க கல்வியில்!
எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும்
படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும்
ஊமையும் கற்க; ஊமை நிலைபோம்!
ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க;

அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க,
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் உலகில்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-33&oldid=1534776" இலிருந்து மீள்விக்கப்பட்டது