இலக்கியங்கண்ட காவலர்/இளந்திரையன்

4
இளந்திரையன்

சான்றோர் உடைத்து’ என்ற சிறப்பினை உடையது தொண்டை நாடு. தொண்டை நாடு என்ற பெயரால் அந்நாடு அழைக்கப் பெறுதற்கு முன்னர், அஃது, அருவா நாடு, அருவாவடதலை நாடு என இரு கூறுபட்டுக் கிடந்தது. அந்நாட்டில் அன்று வாழ்ந்த மக்களும் அருவாளர் என்றே அழைக்கப் பெற்றனர். அருவா நாட்டின் தலைநகராய் அமைத்து. சிறப்புற்றது காஞ்சிமா நகரம். அந்நாட்டின் வடக்கே வடவெல்லை யாய் அமைந்து வளம் பல தந்தது வேங்கடமலை.

அருவா நாட்டிற்குத் தொண்டை நாடு எனப் பெயரளித்துப் பாராண்ட அரசர் தொண்டையராவர். சேரர், சோழர், பாண்டியர் என்ற அரச இனத்தாரைப் போன்றே, தொண்டையர் என்பாரும் ஊராண்ட ஒர் அரச இனத்தவராவர். அந்த அரச இனத்தில் வந்து தொண்டை நாடாண்ட அரசர்களுள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவன் திரையன்.

சோழ நாட்டின் தலைநகராய், கடல் வாணிகம் மிக்க கடற்கரைப் பட்டினமாய்ச் சிறப்புற்ற புகார் நகரத்துக் கடற்கரைக்கண் உள்ள புன்னை மரச் சோலையில் உலாவிவரும் இயல்புடையனாகிய கிள்ளி வளவன் ஒருநாள் ஆங்கு வந்திருந்த பீலிவளை என்ற நாக நாட்டரசன் மகளைக் கண்டு மணந்து கொண்டு மகிழ்ந்திருந்தான். மன்னனை மணந்த அவள், ஒரு திங்கள்வரை அவனோடிருந்து விட்டுத் தன்னாடடைந்தாள். ஆங்குப் பிறந்த தன் மகனை, அந்நாட்டிற்கு வாணிபம் கருதிவந்த சோணாட்டு வணிகன் கம்பளச் செட்டியோடு கலத்தில் ஏற்றிச் சோணாட்டிற்கு அனுப்பினாள். அனுப்புங்கால், அவன் தன் மகன் என்பதை அரசனுக்கு அறிவித்தற் பொருட்டு, அவனுக்குத் தொண்டைக் கொடி யணிந்து அனுப்பினாள். அம்மகனைப் பெற்றுக் கொண்ட வணிகன் கலமேறிச் சோணாடு திரும்பினான். ஆனால், அந்தோ இடைவழியில் அக்கலம் கவிழ்ந்து போயிற்று. கப்பலில் சென்றார் பலர் கடலுக்கு இரையாயினர். ஒரு சிலரே பிழைத்து ஊர் அடைந்தனர். அவ்வாறு பிழைத்தாருள் ஒருவன் துணையாம், அரசிளங்குமரன் அரசனை அடைந்தான். தன் மகன், திரையொலிக்கும் கடல்வழி வந்ததால், அரசன் அவனுக்குத் திரையன் எனப் பெயரிட்டுப் போற்றினான். தொண்டைக் கொடி அணிந்து வந்தமையால், அவன் வழிவந்தோர் தொண்டையர் என அழைக்கப் பெற்றனர். அவர் ஆண்ட அருவா நாடும், அன்று முதல் தொண்டை நாடு என அழைக்கப் பெற்றது. திரையனும், தொண்டையரும், தொண்டை நாடும் தோன்றிய வரலாறு இது. வேறு வகையாகக் கூறுவாரும் உளர்.

திரையன் ஆண்ட தொண்டை நாடு நிலவளம் பெற்றது; நீர் வளம் உற்றது. அந்நாட்டில் பல்லாண்டு கட்கு முன்னர் விளைந்த பண்டங்கள் தின்ன மாட்டாமல் மண்டிக்கிடக்கும். அவ்விளை பொருள்கள் இட்டு வைக்கப் பெற்ற கூடுகள், அந்நாடு முழுவதும் நின்று காட்சி தரும். ஆண்டு பல கழிந்தமையால், அக் கூடுகள் அழிவுறினும், அக் கூடுகளில் இட்டு வைக்கும் உணவுப் பொருள்கள் மட்டும் அழிவுறாமலே கிடக்கும். திரையன் ஆண்ட தொண்டை நாடு அத்துணை வளம் செறிந்தது.

அவன் நாட்டு நிலங்கள், விளைநிலம் பல பெற்று விளங்கியதைப் போன்றே, அந்நாட்டில் வாழ்ந்த மக்களும் மனவளம் நனிபெற்று விளங்கினர். அவன் நாட்டிற் பிறந்து, சிற்றுார் வாழ்வினராய ஆனோம்பி வாழும் ஆயர்குல மகளிர், பொழுது புலர்வதற்கு முன்னரே எழுந்து, தயிர் கடைந்து முடித்து, மோரும், நெய்யும் கொண்ட கூடையுடன், அண்மையில் உள்ள பேரூருட் புகுந்து, அவற்றை விற்றுப் பணமாக்குவர். அவற்றுள், மோர் விற்றதனால் பெற்ற சில காசுகட்குத் தமக்கும், தம் வீட்டார்க்கும் வேண்டும் உணவுப் பொருள் வாங்குவர். நெய் விற்றுப் பெற்ற பொருள், கை நிறைந்த பெரும் பொருளாதல் கண்டு, தம் வாழ்க்கை வளம் பெருகப் பால் முதலாம் பயன் அளித்துத் துணைபுரியும் பசு, எருமைக் கன்று ஆகியவைகளை வாங்கி வருவர். என்னே தொண்டை நாட்டுப் பெண்டிர் உள்ளம் !

திரையன் பேராண்மை மிக்கவன். தன்னாட்டை அடுத்துச் சிற்றரசும், பேரரசும் கொண்டு வாழ்ந்த அரசர் பலரையும் வென்று பணி கொண்டான். பகைவர், தம் பேராண்மை கண்டு அஞ்சிப், பகை மறந்து, பணிந்து திறை தர முன்வரினும், அதை ஏற்றுக் கொள்ளாது, அப் பகைவர்தம் அரண்களை அழித்து, அவர்தம் ஆற்றலை ஒடுக்கி, மணிமுடிகளைக் கைப்பற்ற எண்ணும் போர்வெறி மிக்கவர் தொண்டையோர். ஆனால், அவர் வழிவந்த திரையன், அச் செயல் பகை வளர்க்கும் அறிவில்லாத செயலாம் என உணர்ந்தான். அதனால் பணிந்து திறை தர இசைந்த அரசர்பால் சினம் ஒழிந்து, அவரைத் தன் ஆட்சிக்கு அடங்கிய அரசராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதனால் அவன் அரசவையில், திறை தரவந்த வேந்தர்களும், நட்புடையராய் நாடாண்ட முடிவேந்தர்களும், தம் பகைவரை வென்று வாழ்வளிக்க வல்ல படைத் துணை வேண்டி வந்த மண்டில மாக்களும் வந்து குவிந்து கிடப்பர்.

இவ்வாறு பகைத்தாரைப் பணிய வைத்தும், பிற அரசுகளை அன்பால் அணைத்துக் கொண்டும் அரசோச்சி வந்தமையால், திரையன் ஆண்ட தொண்டை நாட்டு மக்கள், பகைவரால் பாழுறல் அறியாது, அச்சம் ஒழிந்து, அகம் மகிழ்ந்து வாழ்ந்தனர். பகை அழித்து, அப் பகைவரால் உளவாம் கேடொழித்து ஆண்ட திரையன், நாட்டில் உள்ளார்க்குப் பகைவரால் கேடுண்டாதலைப் போன்றே, அந்நாடாள் அரசனாலும், அவன்கீழ்ப் பணிபுரிவாராலும், அணங்குகளாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் கேடுண்டாதலும் கூடும்; ஆகவே, நாட்டு மக்கட்கு, அவற்றான் உளவாம் கேட்டினையும் ஒழித்து உறுதுணை புரிதல் நல்லரசின் நீங்காக் கடமையாம் என உணர்ந்தான். உணர்ந்த திரையன், காட்சிக் கெளியனாய், ஆன்றோர், அமைச்சர்களோடு அரசவையிலிருந்து, வலியரான் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், விளைவின்மை, வறுமை முதலியவற்றான் வருந்திக் குறை கூறி வந்தாரும் கூறுவ கேட்டு, முறையளித்தும், குறை போக்கியும் குடியோம்புவானாயினன். அதனால், அவன் நாடு அல்லன. அகன்று, நல்லன வாழும் வல்லரசாய் விளங்கிற்று. வழிப்போவாரை, இடை வழியில் அவர் அஞ்சுமாறு தாக்கி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து கொண்டு கொடுமை செய்யும் ஆறலைக் கள்வரை, அவன் நாட்டில் காண்டல் இயலாதாயிற்று. அத்துணைக் காவல் நிறைந்து விளங்கிற்று அந்நாடு. மேலும், நாட்டு மக்களை இடி இடித்தும், மின்னல் மின்னித் தாக்கியும் துயர் செய்வதில்லை. அந்நாட்டுப் புற்றுவாழ் பாம்புகள் மக்களைக் கடித்து மாளச் செய்வதில்லை; காட்டில் வாழும் கொடிய விலங்குகளாகிய புலி முதலாயின, தம் கொடுமை மறந்து கூடிக் குலவின. அத்துணை அறம் நிறைந்த நாடாய் நின்று விளங்கிற்று அவன் நாடு. அதனால், அவன் நாட்டில் புதியராய்ப் புகுந்து வாழும் பிற நாட்டார், அரண்மிக்க இடந்தேடி அலையாமல், தம் கைப் பொருள்களோடு, தாம் விரும்பும் இடங்களில், தாம் விரும்பியவாறே இருந்து இளைப்பாறிச் செல்வர். அத்துணை நன்மை மிகுந்த நல்லாட்சி, திரையனின் நாட்டாட்சி!

திரையன், இவ்வாறு, ஆண்மையும் ஆற்றலும், அன்பும் அருளும், அரசியல் அறிவும் உடையவனாய் நாடாண்டனன். ஆதலின் அவன் முரசு முழங்குதானை மூவேந்தரினும் சிறந்தோனாயினன். அவன் ஆண்ட தொண்டை நாடு, அம்மூவேந்தர்க்குரிய சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் சிறந்தது எனப் புலவரும், பிறரும் போற்றிப் புகழ்வராயினர். திரையன் ஆண்ட தொண்டை நாடு, அந்நாட்டுத் தலைநகர் காஞ்சி, அந்நாட்டில் நின்று சிறக்கும் வேங்கடமலை, அந்நாட்டு நிலவளம், நீர்வளம், அந்நாடு வாழ் மக்கள் மனவளம், அவன் அரசியல் நெறிவளம் முதலாம் பல்வேறு வளங்களும் தோன்ற, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற கடைச்சங்கப் புலவர் பெரும்பாணாற்றுப் படை எனும் பெயருடையதொரு பெரிய பாட்டைப் பாடிப் பாராட்டியுள்ளார்.

அல்லன கடிந்து, அறம் புரிந்து ஆட்சி புரியவல்ல திரையன், தன்னைப் போன்றே பிற அரசர்களும், நல்லாட்சி புரியும் நல்லோராயின், நாட்டில் பகை நீங்கும், பண்பு வளரும் என உணர்ந்தான். அதனால், நாட்டில் நல்லாட்சியை நிலவுவது எவ்வாறு என்ற அரசியல் உண்மையினை உலக அரசர் அனைவரும் அறிந்து கடைப்பிடிக்குமாறு அதை விளங்க உரைக்கும் அறப்பணியினையும் அவனே மேற்கொண்டான்.

சாலையில் ஊர்ந்து செல்லும் வண்டியொன்று, கேடுற்று, அழிவது, அவ்வண்டியின் திண்மை இன்மையாலும் அன்று; செல்லும் வழிக் கேட்டாலும் அன்று; ஒரு வண்டியின் கேடு, கேடின்மைகளுக்கு, அவ்வண்டியின் திண்மையின்மையும், திண்மை யுண்மையும் காரணங்களாகா, செல்லும் வழியின் சீர்கேடும், சீரும் காரணங்களாகா, அவற்றிற்கு அவ்வண்டியை ஒட்டுவோனே காரணமாம். ஒட்டு கின்றவன் வண்டி ஒட்டும் தொழிலில் வல்லனாயின், அவ்வண்டியினை ஈர்த்துச் செல்லும் எருதுகளை அடக்கி ஆளத்தக்க ஆற்றலும், செல்லும் வழியின் இயல்பறிந்து ஒட்டும் அறிவும் வாய்க்கப் பெற்றோனாயின், திண்மையில்லா வண்டிகளையும், வழியிடையே கெடுத்துப் போக்காது ஒட்டிச் சென்று ஊர் அடைவான். அவன்பால் அவ்வாற்றலும், அறிவும் இன்றாயின், அவன் ஒட்டும் வண்டி, கல்போலும் திண்ணிதேயாயினும், பள்ளத்தில் வீழ்ந்து பாழாகியும், சேற்றில் சிக்குண்டு சிதைந்தும் கேடுறும். ஆற்றல் உடையான் ஒட்டும் வண்டி ஊறு இன்றி ஊர் அடைதல் மட்டுமன்று; அவ்வண்டியில் ஏறிச் செல்லும் மக்களும், அதை ஒட்டிச் செல்லும் அவனும், எண்ணிய இடம் அடைந்து இன்புறுவர்; அதற்கு மாறாக ஆற்றலிலான் ஒட்டும் வண்டி, இடை வழியில், உடைந்துபோதலோடு, அதில் ஏறிவந்த மக்களும், அதை ஒட்டி வந்த அவனும் எண்ணிய இடத்தை அடைய மாட்டாமையோடு, இடை வழியில் வீழ்ந்து இன்னலுக்கும் உள்ளாவர்.

அதைப் போன்றே, ஒர் அரசின் வாழ்வும் தாழ்வும் அவ்வரசினை நடத்துவோர் தம் அறிவு, அறிவின்மை களினாலேயே உண்டாம். அதன் வாழ்வும் தாழ்வும், அதைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தலைவனின் ஆற்றல் ஆற்றலின்மைகளினாலேயேயாம். ஆளும் அரசன் அரசியல் அறிவும், ஆண்மையும் ஆற்றலும் உடையனாயின், எத்துணைச் சீர்கேடுற்ற அரசும் சீர் பெற்று உயரும்; அவ்வரசின் கீழ் வாழும் மக்களும், மனநிறை வாழ்வினராவர். அவனும் நிறை உடையவனாவன்.

சிற்றரசு பேரரசாகிப் பெருமை கொள்வதும், பேரரசு சிற்றரசாகிச் சிதைவதும், அவ்வக் காலங்களில் அவ்வரசியல் தலைமைக்கண் நிற்பார்தம் அறிவு, அறிவின்மைகளினாலேயே ஆகும் என்ற அரசியல் உண்மையினை உலக அரசர்கட்கு உரைக்க வந்த திரையன், உருளையும், பாரும் கோக்கப் பெற்று, எவ்வகை நிலத்தினும் விரைந்தோட வல்ல உறுதி வாய்ந்த வண்டி, அதை ஒட்டுவோன் அத்தொழிலறிந்த உரவோனாய வழி, கேடின்றி ஓடி, உன்னிய இடம் சென்று அடையும்; வண்டி ஒட்டும் வன்மை அதை ஒட்டுவோன்பால் இன்றாயின், அவ்வண்டி நெறியல்லா நெறி சென்று, சேற்றிலும் மணலிலும் சிக்கிச் சீரழியும் என ஒடும் வண்டியின் இயல்புரைப்பான்போல், உலக அரசுகளின் உண்மை யியல்பினை உள்ளவாறு உரைத்துள்ளான். இக் கருத்தமைந்த பாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் உள்ள 185ஆம் செய்யுளாக உள்ளது.