இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆவியாதல்

ஆவியாதல் : ஒரு திரவம் வெப்பத்தின் காரணமாக திரவ நிலை மாறி வாயு நிலை அடைந்தால் அதனை ஆவியாதல் என்கிறோம்.

நாம் ஈரத்துணியை வெயிலில் சிறிது நேரம் உலர்த்தினால் அதிலுள்ள ஈரம் மறைந்து விடுகிறது. அத்துணி ஈரப்பசையில்லாது உலர்ந்து போவதற்குக் காரணம் ஈரத் துணியில் இருந்த நீர் வெயிலின் வெப்பத்தால் விரைந்து நீராவியாகிவிடுவதேயாகும். இதே முறையில்தான் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் வெப்பத்தால் நீராவியாவதால் அவற்றின் நீர் நாளுக்குநாள் குறைகிறது. வெப்பம் குறைந்தால் ஆவியாதலும் குறைந்துவிடுகிறது. சமையலின்போதோ அடுப்பில் நீர் கொதிக்கும்போதோ அதில் உள்ள நீர் மெல்லிய புகைப்படலம் போல் ஆவியாகி மறைவதைக் காணலாம்.

இவ்வாறு உருவாகும் ஆவி மேல் நோக்கிச் சென்று மேகமாக உருமாறி வானில் மிதந்து கொண்டிருக்கும். அவற்றின் மீது குளிர்காற்றுப்பட்டவுடன் மீண்டும் நீர்த் திவலைகளாக மாறி மழையாகப் பெய்கிறது. இவ்வாறு நீர் ஆவியாகி மேகமாதலும் மேகமே குளிர்காற்றின் விளைவால் மழையாகப் பெய்வதும் சங்கிலித் தொடர் போன்ற இயற்கை நிகழ்வுகளாகும்.

நீர் நேரடியாக ஆவியாகிப் போவதைப் போன்று தாவரங்கள் மூலமும் ஒருவித நீராவிப் போக்கு ஏற்படுகிறது. தாவரங்கள் வேர்மூலம் நீரை உறிஞ்சி தண்டுக்கும் இலைகளுக்கும் அனுப்புகின்றன.இலைகளில் உள்ள சிறுசிறு துளைகள் மூலம் ஆவியாகி மேலெழுந்து மேகமாகிறது.

பெய்யும் மழையில் மூன்றில் இரண்டு பங்கு நீராவியாக மீண்டும் காற்று மண்டலத்துக்குத் திரும்பி மேகமாகிறது.

நீராவியை அழுத்துவதன் மூலம் விசையை உருவாக்கி நீராவி எந்திரங்களை இயக்குகிறார்கள். நீராவி ரயில் எஞ்சின்களும் நீராவிக் கப்பல் எஞ்சின்களும் நீராவி அழுத்த விசை மூலமே இயங்குகின்றன.

நீரை ஆவியாக்கிப் பயன்படுத்துவது போன்றே பாதரசம், சோடியம் போன்றவைகளை ஆவியாக்கி குறைந்த அழுத்தத்தில் கண்ணாடிக் குழாயுள் செலுத்தி அளவான மின்போக்கை ஏற்படுத்தி ஒளிரச் செய்யப்படுகிறது. இவ்வொளிர்வு மூலம் நல்ல வெளிச்சத்தைப் பெற முடிகிறது. இத்தகைய விளக்குகள் ஆவி விளக்குகள் (Vapour Lamp) என அழைக்கப்படுகிறது. இத்தகைய விளக்கு

நீர் ஆவியாகி மழை பொழிதல்

களில் சோடியம் ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு, வெண்சுடர் விளக்கு, நியான்சுடர் விளக்கு ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்