இளையர் அறிவியல் களஞ்சியம்/கண்

கண் : “எண் சாண் உடம்புக்குத் தலையே முதன்மையானது“ என்பதுபழமொழி.தலையில் உள்ள உறுப்புகளுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கண் ஆகும். முகத்தில் உள்ள இரு கண்களும் ஏழு எலும்புகளாலான குழிக்குள் மிகப் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழாக உள்ள மூக்கும் கன்ன எலும்புகளும் பாதுகாப்பளிக்கின்றன.

ஒவ்வொரு கண்ணையும் குழிச்சுவரோடு இணைந்த ஆறு தசைகள் இயக்க உதவுகின்றன. இவற்றின் உதவியால் கண்ணை எப்பக்கமும் திருப்ப இயலும். கண்ணினுள் அமைந்துள்ள சிறு உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒருவிதப் பணியைச் செய்கின்றன.

நாம் பொருள்களைப் பார்க்க கண்ணின்முன்புறமுள்ள பாவை (Pupil)யும் அதன் பின்புறமுள்ள லென்சும் உதவுகின்றன. இவை இரண்டின் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள் பார்வைப் படலத்தில் (Ratina) குவிகின்றன. இவ்வாறு பார்வைப் படலத்தில் விழும் பிம்பம் அங்கு அமைந்துள்ள நரம்பணுக்களில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இம்மாற்றத்தை பார்வை நரம்புகள் உடனடியாக மூளைக்குத் தெரிவிக்கின்றன.

“ஐரிஸ்’ என்று சொல்லப்படும் விழித்திரை பாவையைச் சுற்றி அமைந்துள்ளது. அதிக வெளிச்சத்தின்போது விழித்திரை விரிய பாவை சிறிதாகிவிடும். இதனால் அதிக ஒளி கண்ணுக்குள் புகாமல் தடுக்கப்படுகிறது. வெளிச்சம் குறைவாக இருக்கும்போது விழித்திரை சுருங்க பாவை பெரிதாகிவிடும்.

நாம் பார்க்கும் பொருளின் தூரத்துக்கேற்ப கண்ணில் உள்ள லென்ஸ் குவிந்தும் தட்டையாக மாறியும் பார்க்கும் பொருளின் பிம்பத்தை பார்வைப் படலத்தில் விழவைக்கிறது. கரு விழிப்படலம் ஒளி ஊடுருவிச் செல்ல உதவுகிறது.

கண் அமைப்பு வரைபடம்

கண்ணைக் காக்கும் கேடயமாக அமைந்திருப்பது இமைகள் ஆகும். கண்களினுள் தூசி விழாமல் தடுப்பதோடு தவறிவிழும் தூசிகளைத் துடைத்தெடுக்கும் துடைப்பானாகவும் பயன்படுகிறது. இமைகள் கண்ணீர்ச் சுரப்பிகளை அழுத்துவதால் வெளிப்படும் கண்ணீர் கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

குறைந்த ஒளியோ மிக அதிக ஒளியோ கண்களுக்குக் கெடுதல் உண்டாக்கும். அளவான ஒளியிலேயே படிக்க வேண்டும். படிக்கும் போது நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்து படிக்க வேண்டும். படிக்கும்போது படிக்கும் புத்தகத்திற்கும் கண்களுக்குமிடையே சுமார் 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். கண்களில் தூசி ஏதும் விழுந்துவிட்டால் வெறுங்கையாலோ அன்றி முரட்டுத் துணியாலோ தேய்க்கக் கூடாது. கண்களைச் சுத்தமான நீரால் கழுவு வேண்டும். அதிக நேரம் கண் விழித்தல் கூடாது. போதிய அளவு இமைகளை மூடிக் கண்களுக்கு ஓய்வுதர வேண்டும். கண்பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்தே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

மனிதர்களைப் போன்றே பிற உயிரினங்களுக்கும் கண்கள் அமைந்துள்ளன. ஈ போன்ற வைகட்கு ஆயிரக்கணக்கான கண்கள் 'கூட்டுக் கண்' களாக அமைந்துள்ளன. இவற்றின் மூலம் அவை எப்பக்கத்தையும் காணமுடியும்.