இளையர் அறிவியல் களஞ்சியம்/கோப்பர்னிக்கஸ்

கோப்பர்னிக்கஸ் : பண்டைக் காலத்தில் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. அதனால் தான் இரவு பகல் ஏற்படுகின்றன என்று தவறாகக் கருதி வந்தனர். அது தவறான எண்ணம், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற பேருண்மையைக் கண்டறிந்து ஆதார பூர்வமாக எண்பித்தவர் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் கோப்பர்னிக்கஸ் ஆவார்.

கோப்பர்னிக்கஸ்

கோப்பர்னிக்கஸ் போலந்து நாட்டிலுள்ள டாரூனி எனும் ஊரில் 1478ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த கோப்பர்னிக்கஸ் கிரேக்கோ பல்கலைக்கழகத்தில் லத்தீன் மொழி, கணிதம், வானவியல் ஆகிய கலைகளை மூன்றாண்டுகள் கற்றுத் தேர்ந்தார். பின் இத்தாலி சென்று போலோனியா

சூரிய மண்டலம்

பல்கலைக்கழகத்தில் வானவியல் படிப்போடு கிருத்துவ சமயச் சட்ட நுட்பங்களையும் படித்தார். வானவியல் படிப்பிலும் ஆராய்ச்சியிலும் பேரார்வம் கொண்டார். தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வந்தார்.

முன்பு தாலமி போன்றவர்கள் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்றும் கூறியிருந்தனர். பலரும் அன்றுவரை அதையே நம்பி வந்தனர். ஆனால், கோப்பர்னிக்கஸ் 1497ஆம் ஆண்டில் தாலமியின் கொள்கை தவறானது என்றும் பூமியே சூரியனைச் சுற்றுகிறதென்றும் பிரபஞ்சத்தின் மையப் பகுதி சூரியனே என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவினார். பூமி சூரியனைச் சுற்றும் அதே நேரத்தில் தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தினார். பூமியைப் போன்றே பிற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையையும் கண்டறிந்து கூறினார்.

கோப்பர்னிக்கசின் வானவியல் ஆராய்ச்சி உண்மைகள் தான் சார்ந்த கிருத்துவ சமயக் கருத்துக்களுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தே இருந்தார். ஆயினும் சமயவாதிகளால் தனக்குத் துன்பம் ஏற்படலாம் என்று எண்ணினார். இதனால் தன் ஆராய்ச்சிக் கருத்துக்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை எரித்துவிட முயன்றார். ஆயினும், அவரது நண்பர்கள் எரிக்க விடாமல் தடுத்துவிட்டனர். பின்னர், அக்கையெழுத்துப் பிரதியை நூலுருவாக்க விரும்பி அச்சேற்றினர். நூல் வெளியான அன்று கோப்பர்னிக்கஸ் மறைவெய்தினார்.

அவரது நூல் அவருக்குப் பின்னால் வந்த வானவியல் ஆய்வாளர்களுக்கு அரிய வழிகாட்டி நூலாக அமைந்தது. பின்னர் வந்த வானவியல் நூல்கள் யாவும் கோப்பர்னிக்கசின் கண்டுபிடிப்புகளை மெய்ப்பிப்பனவாக அமைந்தன.