ஈசாப் கதைப் பாடல்கள்/பெண் கேட்ட சிங்கம்

விறகு வெட்டி மரத்தினை
வெட்டிக் கொண்டே இருந்தனன்.
அருகில் சிங்கம் வந்தது;
அவனைப் பார்த்து விட்டது!

சிங்கம் அருகில் வருவது
தெரிந்த வுடனே அவனுமே
அங்கி ருந்து வேகமாய்
அலறிக் கொண்டே ஓடினன்.

சிங்கம் அவனைத் தொடர்ந்துமே
சென்று பிடித்து விட்டது!
‘எங்கே ஓடப் பார்க்கிறாய்?’
என்று மிரட்டிக் கேட்டது.

‘மிருக ராஜ சிங்கமே,
மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்;
இரக்கம் காட்டி விட்டிடு’
என்றே அவனும் வேண்டினன்.

‘உன்னை விட்டு விடுகிறேன்.
ஒன்று மட்டும் செய்திடு.
இன்றே உனது மகளை நீ
எனக்கு மணந்து கொடுத்திடு.’


இந்த வார்த்தை கேட்டதும்
ஏதோ அவனும் எண்ணினன்;
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிச் செல்லக் கருதினன்.

‘மன்னர் சிங்கம் அவர்களின்
மாம னாகும் பாக்கியம்
இன்று நானும் பெறுவதே
முன்பு செய்த புண்ணியம்.

‘மன்னர் சிங்கம் அவர்களின்
மனைவி யாகப் போகிறாய்’
என்று நானும் சொன்னதும்
எனது மகளும் மகிழுவாள்.

ஒன்று மட்டும் கேட்டிடு.
உயர்ந்த மிருக ராஜனே!
என்றன் மகளோ பயந்தவள்;
எதற்கும் நடுங்கும் இயல்பினள்.

கூர்மை யான பற்களும்
குத்திக் கிழிக்கும் நகங்களும்
பார்த்த வுடனே நடுங்குவாள்:
பயந்து மணக்கத் தயங்குவாள்.


ஆத லாலே அவற்றினை
அகற்றி விட்டு, அவளிடம்
போதல் மிகவும் நலம்’எனப்
புகன்றான் விறகு வெட்டியும்.

‘உண்மை, உண்மை, உண்மைதான்.
உடனே பற்கள் நகங்களை
என்னை விட்டுப் பிரித்திடு;
எனது ஆசை தீர்த்திடு.’

சிங்கம் இதனைச் சொன்னதும்
சிறிதும் தயக்கம் இன்றியே
அங்கே அடுத்த நிமிஷமே
அந்த விறகு வெட்டியும்,

நகங்கள், பற்கள் யாவையும்
நன்கு பிடுங்கி விட்டனன்.
மிகவும் வலித்த போதிலும்
வெளியில் சிங்கம் சொல்லுமோ?

பிறகு சிங்க ராஜனைப்
பிரியங் காட்டித் தன்னுடன்
விறகு வெட்டி அழைத்தனன்;
வீடு நோக்கிச் சென்றனர்.


வீட்டுக் குள்ளே சென்றவன்
மிகவும் பெரிய உலக்கையைக்
காட்டிக் கொண்டே திரும்பினன்;
கையை ஓங்க லாயினன்.

‘பல்லும் நகமும் போனபின்
பயமு றுத்த முடியுமோ?
நல்ல பிள்ளை போல நீ
நடையைக் கட்டு; சீக்கிரம்!

கண்டாய் எனது கையிலே
கனத்த உலக்கை இருப்பதை ;
மண்டை பிளந்து போய்விடும்.
வழியைப் பார்த்து ஓடிடு!’

என்ற விறகு வெட்டியை
ஏது சிங்கம் செய்திடும்?
ஒன்றும் கூறி டாமலே
ஓட்டம் பிடிக்க லானது!

பெண்ணைக் கேட்க வந்தவர்
பேச்சு மூச்சு இன்றியே
கண்ணை மூடி ஓடிடும்
காட்சி நல்ல காட்சிதான்!