உடற்கல்வி என்றால் என்ன/தலைமை ஏற்கும் தகுதிகள்

11. தலைமை ஏற்கும் தகுதிகள்
LEADERSHIP

தலைமையும் தகுதியும்

மனிதர்கள் எல்லோரும் தோற்றத்திலோ, தொடர்பான எண்ணத்திலோ, தொடங்கி முடிக்கும் செயல்களிலோ ஒன்று போல் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் வேறுபாடு இருந்தாலும், அவர்கள் ஒன்றுகூடி வாழ வேண்டிய அவசியமும் கட்டாயமும், ஆதி நாட்களிலிருந்தே ஆரம்பித்துவிட்டன.

இரண்டு கடிகாரங்கள் ஒத்த நேரத்தைக் காட்டுவது இல்லை என்பார்கள்.அதுபோலவே இரண்டு மனிதர்கள் ஒன்று போல் சிந்திப்பதில்லை. சொல்வதில்லை.

ஒரு சில மனிதர்கள் மற்ற மனிதர்களை விட ஆற்றலில், ஆண்மையில், ஆளுமையில், ஆஜானுபாகுவான உடலமைப்பில் எடுப்பாக இருப்பார்கள். இந்த மாற்றங்களும் தோற்றங்களும் இயற்கையாகவே அமைந்திருப்பவைதான். இவ்வாறான சிறப்புத் திறன் உள்ளவர்களே. மற்றவர்களுக்கு தலைமை தாங்குகின்ற வாய்ப்புக் களைப் பெற்றுக் கொள்கின்றனர்.பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆதிநாட்களில், மக்கள் காடுகளில் வாழ்ந்தபோது, அந்த கூட்டத்திற்கு ஒரு தலைமை தேவைப்பட்டது. விலங்குகளால் விளைகின்ற பேரபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும், அவர்களைப் போல் கூட்டமாகக் கூடியிருந்து வாழ்ந்த கூட்டத்திலிருந்து பாதுகாப்புப் பெறவும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைமை இன்றியமையாததாகத் தேவைப்பட்டது.

அத்தகைய தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியுடையவருக்கு சில அதிசயமான குணாதிசயங்கள் வேண்டியிருந்தன. அந்த தலைவனுக்குரிய முக்கிய தகுதியாக அவனது வயது, வலிமை, அறிவாற்றல் கணக்கிடப்பட்டது.

இவ்வரிய பண்புகளை அதிகம் கொண்டிருக்கின்றவனே மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அப்படி ஏற்றுக் கொண்டவர்களும் அவனைப் போற்றி, அவனைப் பின்பற்றி நடக்க, வாழ்ந்துசெல்ல முற்பட்டனர். ஆதலால் அவன் தலைவனானான். அவனது நிலைமை தலைமை என்று புகழ் பெறலாயிற்று.

ஆதி நாட்களில் இந்தத் தலைமைப் பொறுப்பு இடம், அறிவு, வயது, வலிமை கொண்டவர்களால் நிரப்பப்பட்டது. அதுவே குடும்பச் சொத்துபோல, பரம்பரை உரிமையாகவும் வரத்தொடங்கியது.

காலம் மாற மாற, அரசராட்சி முறை மாறி, மக்களாட்சி முறை மலர்ந்து வந்தது. பரம்பரை ஆட்சி முறை மாறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பினை ஏற்றார்கள். 

உலகில் இன்னும் சில பகுதிகளில், அதிரடி முறையில் ஆட்சிப் பொறுப்பை பிடித்துக் கொண்டார்கள். அதனை இராணுவ ஆட்சி முறை என்றனர்.

எனவே, மக்களுக்கு மேலாக ஒரு உயர்ந்த இடம் இருக்கிறது என்று கூறி, அதனை தலைமை பீடம் என்றும், தலைமை ஏற்றவனை தலைவன், அரசன், அல்லது பிரதமமந்திரி என்ற பெயர்களையிட்டு அழைத்து மகிழ்ந்தனர்.அவன் வாழ்ந்த இடத்தைக் கோயில் என்றும் புகழ்ந்து பேசினர்.

தலைமைக்கு விளக்கம்

“தன் கூட வசிக்கின்ற மக்கள் கூட்டத்தை, ஒரு பொதுவான நோக்கம் கருதி, பொறுப்புடன் அழைத்துச் செல்கிற பொறுப்புக்கே தலைமை” (Leadership) என்ற பெயர் என்று மார்ஷல் மான்ட்கோமரி என்னும் ஆங்கில அறிஞர் கூறுவதை இங்கே கூர்ந்து கவனித்துக் கொள்ளலாம்.

எந்தத் துறையிலும் முன்னேற்றம் வரலாம். அப்படி ஒரு முன்னேற்றம் வருகிறது என்றால் அங்கே ஒரு நல்ல தலைமை இடம் பெற்றிருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவர் நல்ல தலைவராயிருக்கிறார் என்றால், அங்கே இரண்டு வித நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் நன்கறியலாம்.ஒன்று, நல்ல தலைவன் தனது நயமான பொறுப்புக்களினால் தானும் ஒரு தக்க இடத்தை மக்களிடையே பெற்றுக் கொள்கிறான். இது நேரடியாக அவன் பெறுகிற மதிப்பும் மரியாதையுமாகும். இரண்டு, அவன் தலைமையால், மறைமுகமாக அவனது பணி  வெற்றி பெற்று, பல்வேறுவிதமான பலன்களை மக்களுக்கும், நாட்டிற்கும் அளிப்பதாகவும் அமைகின்றன.

ஆகவே, தலைமை என்பது யாரோ ஒருவருக்கு அதிர்ஷ்டத்தால் வந்துசேருகிற வினைப்பயனல்ல.இதைக் கற்றுத் தேர்ந்து, தெளிந்து, முயற்சி செய்தால் திறமை மிக்கத் தலைவராக மாறிக் கொள்ளலாம்.

உடற்கல்வியில் தலைமை

விளையாட்டு உடற்கல்வி பற்றிய அறிவு, தத்துவம், கொள்கை, திறன் நுணுக்கங்கள் முதலியவற்றில் நல்ல வாய்ப்பும் பற்றும் இருந்தால், ஒருவருக்கு தலைமை தாங்கிக் கற்பித்து நடத்துகிற வாய்ப்புக்கள் நிறைய வரும். இப்படிப்பட்டவர்கள் தலைமை தாங்கி நடத்துகிற பொழுதுதான், விளையாட்டுத் துறையும் வளரும், உடற் கல்வித்தலைவராக வருகிறவருக்குப் பொறுப்பு அதிகமாக உண்டு.

பொறுப்பினை எல்லோரும் பகிர்ந்து கொண்டு, விருப்பத்துடன் செயல்களில் பங்குபெறும் போது தான், இந்தத் துறை ஏற்றமான வளர்ச்சியைப் பெறுகிறது. அதிர்ஷ்டத்தாலோ அல்லது சந்தர்ப்பவசத்தாலோ, முன்னேற்றம் எந்தத் துறைக்கும் வந்து விடுவதில்லை.

ஒவ்வொரு உடற்கல்வி ஆசிரியரும் உன்னதத் தலைவராக இருக்க வேண்டும். தங்கள் பொறுப்பினைத் தீர்க்கமாக உணர்ந்து, திண்ணமாக செயல்படுத்தும் சீர்மை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஒரு கழகம் அல்லது இல்லம் அல்லது நாடு போன்றது தான். அதன் தலைவர் தான் உடற்பயிற்சி ஆசிரியர்.அவரின் தலைமையின் கீழ் தான், உடற்பயிற்சித் துறை உயர்ந்து வளர்ந்தாக வேண்டும். 

எந்த ஒரு ஆசிரியரும் ஒரே நாளில், உன்னதமான தலைவராக ஆகிவிட முடியாது. அவர்கள் நிறைய பயிற்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். தொழில் முறையான அனுபவங்களைத் தேர்ச்சியால் பெற்றிருக்க வேண்டும்.இதுபோன்ற இனிய நிலை எப்பொழுது வரும் என்றால், தனிப்பட்ட ஒருவரின் தணியாத முனைப்பு இருந்தால் தான் முடியும்.

தலைவருக்குரிய தகுதிகள்

ஒருவர் தலைவராக இருக்கிறார் என்றால், அவருக்கு இரண்டு யோக்கிதாம்சங்கள் இருக்க வேண்டும்.

ஒன்று, அவர் தான் தலைமையேற்றிருக்கும் இடத்தில், தகுந்தவர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில் இருக்க வேண்டும்.இரண்டு தன்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நல்ல முன்னேற்றம் பெற வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு நிறைந்தவராக இருக்கவேண்டும். தனக்குரிய பணிகளை, தூய்மையான பணி என்று தூய்மையாக நினைத்து, துணிவுடன் நிறைவேற்றுகின்றதன்மையும், அதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற ஆர்வமும் உடையவராக, உடற்கல்வித் தலைவர் எனப்படுகிறவர் இருக்க வேண்டும்.

தலைவருக்குரிய தகுதிகளைப் பற்றி நாம் விளக்க வேண்டும் என்றால், அவற்றைக் குறிப்பிட்டு, இன்னது தான், இப்படித்தான் என்பதாகக் கூறிவிட முடியாது. தகுதிகள் என்பது துறைக்குத் துறை, சூழலுக்குச் சூழல்; தொழிலுக்குத் தொழில் வேறுபடுவது உண்டு.

எப்படியிருந்தாலும்,செய்யக் கூறி, வழிமுறைகளைக் காட்டி, நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய திறமைகளே தலைவருக்கு உரியவை என்றால், அவற்றிற்கும் ஒரு சில குறிப்புகள் உண்டு. அந்தத் தகுதிகள் பற்றி சிறிது விளக்கமாகக் காண்போம்.

1. தன்னம்பிக்கை

நல்ல தலைவனுக்குரிய முதல்தரமான குணநலன் தன்னம்பிக்கைதான்.தன்னைத்தான் நம்பாத ஒரு தலைவன் மற்றவரை எப்படி நம்புவான்? அவனது சந்தேகம் அவனை மட்டும் அழிக்காமல், அடுத்தவர்களையும் வீழ்த்திவிடும் அவனைப் பின்பற்றுவோர்களையும் பெரிதும் துன்பப்படுத்திவிடும்.

ஆகவே, ஒவ்வொரு காலக் கட்டத்திலும், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் (Stop) அவன் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டே வரவேண்டும். இந்த நம்பிக்கைதான் நம்பியுள்ளவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும்.

எந்த சந்தர்ப்பத்திலும் களைத்துப் போகாத, கஷ்ட நேரங்களிலும் கலங்கிப் போகாத திடமனம் உள்ளவர்களே, தங்கள் மக்களை வழி நடத்திச் செல்ல முடியும். வெற்றிகரமாகவும் வாழ்விக்க முடியும்.

அதுபோலவே, உடற்கல்வித் துறையிலும், தன்னம்பிக்கைதான் எல்லா செயல்களிலும் தலையாய இடத்தை வகித்து வருகின்றது. உதாரணமாக, தன்னம்பிக்கை இல்லாதவர்கள் சாதாரணக் குட்டிக் கரணம் கூடப் போட முடியாது. ஏனென்றால், ஏதாவது நேர்ந்துவிடும் என்ற பயம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும். ஒடுகளப் போட்டிகளில் கூட தாண்டுவதும் எறிவதும் தன்னம்பிக்கை மிகுந்திருக்கும் பொழுதுதான், சரியாகவும் குறியாகவும் செய்ய முடியும். 2. உழைப்பும் உறுதியும்

உழைப்பில் ஆர்வமும், உள்ளத்தில் உறுதியும் ஒரு தலைவனுக்கு இரண்டு கண்கள் போல. அதாவது தலைவன் என்பவன் “கஷ்டப்படுவதற்கு இஷ்டப்பட வேண்டும்”. ஒரு காரியத்தை செய்கிறபோது, தடைகள் வரும். தடங்கல்கள் நேரிடும்.இடையூறுகள் எதிர்ப்படும். ஆபத்துகள் கூட அடுத்தடுத்து நடக்கும்.

அவற்றிற்கெல்லாம் அஞ்சாமல், தைரியமாக சந்திக்கும் சாமர்த்தியம், தன்னைத் தொடர்கிறவர்களையும் துணிவோடு முன்செல்ல வைக்கும் வண்ணம் துண்டுகிற சாதுர்யம், மற்றவர்களைவிட மிகுதியாக உழைக்கும் உடல் வலிமை, துன்பங்களைத் தன்மேல் சுமத்திக் கொள்கிற மனத்துணிவு.

இவையெல்லாம் கற்றுக் கொள்வதால் மட்டும் வருகிற திறமைகள் அல்ல. பிறவியிலே பெற்று வருகிற பேறுகள். பரம்பரைப் பண்புகள், இப்படிப்பட்ட குணங்களைத்தான் உடற்கல்வித்துறையும் எதிர்பார்க்கிறது.

உடற்கல்வி தலைமை நிர்வாகி என்பவர், வெறும் வாய் வார்த்தைகளால் வருணித்து விடுவதால் மட்டும் எந்தப்பயனையும் ஏற்படுத்திவிடமுடியாது. சொல்வதைச் செய்து காட்டும் திறன்தான், பின்பற்றும் மாணவர்களைப் பெரிதும் கவரும். தாங்களும் செய்திட வேண்டும் என்ற துணிவைத் துண்டும். செய்து பார்த்து மகிழ சிந்தையும் விரும்பும்.

கஷ்டமானது என்று கருதி, கைவிட்டு விடலாம் என்று கைகழுவ நினைக்கும் காரியத்தை, பொறுமையாக இருந்து திறமையாகச் செய்ய முயற்சிக்கிறபோது, வெற்றிமட்டுமல்ல. வருங்காலத்தில் கெளரவமும் பாராட்டும், வாசலில் வந்து காத்து நிற்குமே!

இதை எண்ணிப் பார்த்து, உடற்கல்வி ஆசிரியர்களும், சிறப்புப்பயிற்சியாளர்களும், அணித்தலைவர்களும் மேற்கொள்கிற செயல்களில், அதிகமான பொறுப்பேற்றுக் கொண்டு, கஷ்டமான காரியங்களைக் கூட மாணவர்கள் எளிதாகச் செய்யும் வண்ணம் கற்பித்திட வேண்டும். கருத்துடன் வழிநடத்திடவேண்டும். தாங்கள் பின்பற்றுபவர்களை சாமர்த்தியசாலிகளாக்கும் கடமையல்லவா அவர்களுடையது!

3.சுறுசுறுப்பும் கற்பனையும்

செயல்கள் செய்யும்போது, கற்பனைச் செறிவும், முன்னறிவும் மட்டும் போதாது. நல்ல சுறுசுறுப்பும் வேண்டும். இந்த சிறந்த குணங்கள்தாம், ஒருவரை மற்ற மனிதர்களிடமிருந்து தனியே வேறுபடுத்திக் காட்டுகின்றது.

சுறுசுறுப்பான மூளை, மற்றவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி விரிவாக சிந்திக்கிறது . விரைவாகவும் விவேகமாகவும் சிந்திக்கிறது. ‘சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை’ என்று கூறுவதை இங்கே நினைவு கூர்வோம்.

சுறுசுறுப்பான மூளை மற்றவர்களையும் சிறப்பாக செயல்படும் வகையில் உற்சாகப்படுத்துகிறது. சிக்கலான பிரச்சினைகளில் சிறப்பான முடிவெடுத்து விடுவிக்கிறது.தீர்த்துவைக்கிறது.

கொஞ்சம் மந்தத்தனமாகவும் கலைந்து போகிறச மன ஆர்வம் உடையவர்கள், கணக்காகக் காரியமாற்ற முடியாமல், கலங்கிப்போய் விடுகிறார்கள். பதறிச் செய்கிற அவர்கள் காரியம் எல்லாம் சிதறிப் போய் விடுகிறது.

ஆகவே, செய்யும் செயலின் தன்மையை அறிந்து, அதன் பெருமையை புரிந்து கற்பனை நயத்துடன் வலிமை மனத்துடன், சுறுசுறுப்பாக இயங்கி, வெற்றியை ஈட்ட வழி வகுக்கிறவனே வல்லமை மிகுந்த தலைவனாக விளங்குகிறான்.

4. முடிவெடுக்கும் திறன்

எந்தக் காரியமாக இருந்தாலும், அதுபற்றி அலசி ஆராய்ந்து, நல்ல முடிவெடுக்கத் தெரிந்தவரே, சிறந்த தலைவனாகிறார்.

நுண்மையாக சிந்திக்கத் தெரிந்த மனிதனே, மற்றவர்களைவிட மாண்புமிகு காரியங்களை செய்து முடித்து சிறப்படைகிறான், மனத் தெளிவுள்ளவர்களே, சாடிவரும் சந்தர்ப்பங்களுக்கேற்ப சாமர்த்தியமாக ஈடு கொடுத்து, சமத்காரமாக திட்டங்களைத் தீட்டி வெல்கிறார்கள்.

விளையாட்டுக்களில் அதிகமாகவும் அடிக்கடியும் இக்கட்டான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது இயல்புதான். அந்த அச்சமூட்டும் சந்தர்ப்பங்களில், அறிவுபூர்வமாக அணுகி, விரைந்து முடிவெடுத்து வெளிவருவதும், விடுதலையடைவதும், வெற்றி பெறுவதும் நல்ல பண்பாளர்களாலே தான் முடிகிறது. ஆகவே மனத்தெளிவும், முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள் மட்டுமே, மற்றவர்களுக்கு வழிகாட்டும் மகாசக்திபடைத்தவர்களாக விளங்குகின்றார்கள். 

5. தைரியம் (Courage)

தைரியம் உள்ள தலைவனையே தொண்டர்கள் நம்பிக்கையுடன் பின்பற்றிச் செல்வார்கள். கோழைகள் எத்தனைதான் கொள்கை வளமும், கூரிய மதியும் கொண்டிருந்தாலும், தொண்டர்களால் தூற்றப்படுவார்கள். உள்ளத்திலிருந்தும் ஒதுக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப் போரில் காட்டிய வீரமும் தைரியமும் தான், இன்றும் அவரை உலகமே போற்றிப்புகழும் வண்ணம் உயர்த்தி வைத்திருக்கிறது.

சர்ச்சிலின் மற்றொரு குணம், தான் விரும்பாத ஒரு குறிப்பை,வேண்டியவர்களிடம் கூட, முகத்திற்கு முன்னே துணிச்சலாகக் கூறிவிடுவது தான். அந்தத் தைரியம் தான், அவரை சரித்திர புருஷராக மாற்றி வைத்தது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உண்மையைக் கூறுகின்ற நெருக்கடியான நேரங்கள் நிறையவே ஏற்படுவதுண்டு.அப்போது, மாணவர்களுக்கு நலம் பயப்பதற்காக, நல்லது செய்வதற்காகத் துணிந்து, உண்மையைக் கூறிவிட வேண்டும். சரியான செயல்களை சரியாக மாணவர்கள் செய்கின்ற நிலைமை, அப்பொழுதுதான் ஏற்படும்.

ஆகவே, உண்மையைக் கூறுகின்ற தைரியம், சந்தர்ப்பங்களுக்கு சாய்ந்து போகாமல் சாமர்த்தியமாக வெல்லுகிற தைரியம் உள்ள தலைவர்களே, தொண்டர்களால் துாய அன்போடு பாராட்டப்படுவார்கள்.

6. ஒழுக்கப் பண்புகள்

ஒழுக்கமாக வாழ்வது, கற்பைப் பேணுவது என்பதெல்லாம் தொண்டர்களுக்கு மட்டுந்தான். தலைவர் களுக்கு அல்ல என்ற தடிக்குணமும் மடத்தனமும் நிறைந்தவர்கள் நல்ல தலைவர்கள் ஆகிவிட முடியாது.

கட்டுப்பாடு,ஒழுக்கம், கடமை உணர்வு, நீதி காக்கும் நெஞ்சம், நியாயத்துக்குப் பணிகின்ற பெருந்தன்மை, உள்ள தலைவர்களே தொண்டர்களுக்கு நல்ல வழிகாட்டி ஆவார்கள் உலகமும் அவரை வாழ்த்தி, வணங்கிப் பின்செல்லும்.

அதுபோலவே உடற்கல்வி ஆசிரியர்களும் சத்திய சீலர்களாக, உத்தமப் பண்பாளர்களாக இருந்தால்தான், உடன் இருக்கும் மாணவர்களும், ஆசிரியரைப் பின்பற்றி, அருங்குண மாணவர்களாக வாழ்ந்திட விரும்புவார்கள்.

ஒழுக்கமற்ற ஆசிரியர்கள் பழிக்கப்படுவர்.வெறுக்கப்படுவர்.அவர் உபதேசம் வெறும் வாய்மொழியாகத் தான் போகுமே தவிர, வேத மொழியாகாது. ஆகவே, ஆசிரியர்கள் இக்கருத்தைப் பின்பற்றிக் கண்ணியவான்களாக வாழும் திண்ணியராக வாழ்ந்திட வேண்டும்.

தலைவராவது எளிதல்ல

யாரும் தலைவராக உயர்ந்து விட முடியாது. தலைவராவது அவ்வளவு எளிதான காரியமுமல்ல.

வாழ்க்கை என்பது சாதாரண மண்மேடல்ல. எளிதாகத் தாண்டிச் செல்வதற்கு அது பிரமாண்டமாக எதிரே நிற்கும் பெரிய மலை போன்றது. அதில் ஏற மனத்துணிவும், உடல் வலிவும், கடுமையான முயற்சியும், கலங்காத கடமை உணர்வும், குறையாத கொள்கைப் பற்றும் வேண்டும்.அப்படிப்பட்டவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்வாங்கு வாழ முடியும்.

மகிழ்ச்சி என்பது எது? எப்போது? நமக்குள்ளே இருக்கும் திறமைகளை, கஷ்டப்படுத்தி வெளிப்படுத்தி, சாதிக்க முடியாது என்கிற காரியங்களையும் சாதிக்கும் போது தான், அந்த உண்மையான மகிழ்ச்சி உண்டாகிறது.

அப்படிப்பட்ட உண்மையான மகிழ்ச்சியை தனக்கும் உண்டாக்கிக் கொண்டு, பின்பற்றும் தொண்டர்களுக்கும் பெருமளவில் உண்டாக்கிவைக்கிற தலைவரே, சிறந்த தலைவராகிறார். அவரிடம் இருக்கும் வரையில், எந்த ஆபத்தும் தமக்கு அணுகாது என்ற நம்பிக்கையில், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற ஆனந்தத்தில், தலைவரின் சார்புள்ள மக்கள் மகிழ்வார்கள்.அதுவே நல்ல தலைவருக்குரிய பொற்குணங்களாகும்.

உடற்கல்வித் தலைவர்களுக்குரிய தகுதிகள்

1. பொதுக் கல்வித் தகுதி.

2. உடற்கல்வியில் பெறுகிற சிறப்பு தொழில் கல்வித் தகுதி. (உடற்கல்வி இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், உயர்நிலை உடற்கல்விப்பட்டம் போன்றவை)

3. விளையாட்டுக்களில் உள்ள திறன்களில் தேர்ச்சி உடல்தோரணை, ஆளுமை, ஒழுக்கப் பண்புகளில் உயர்ந்தவராக விளங்குதல்.

பம்பாய் உடற்கல்விக் குழு ஒன்று செய்த பரிந்துரையில் உள்ள சில தகுதிகளை இங்கே பார்ப்போம்.

1. வகுப்புகளில் பயிற்றுவிக்கும் பாடங்களாவன. ஆங்கிலம், கணிதம், உடற்கூறு நூல், உடலியல் நூல், உடற்கல்வியின் கொள்கைகள் என்பன பற்றி, உடற் கல்வி ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்.

2. மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களுக்கு எப்பொழுது, எப்படி பாடம் கற்பித்தல், உடற்பயிற்சி விளையாட்டு வகுப்பு எடுத்தல் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பேற்றல்.

3. மாணவர்கள் பாடங்களில் தேர்வுக்குரிய மதிப்பெண்களில் பின்தங்கியிருக்கும்போது, அவர்கள் உயர்வுக்கு உதவிட முயலுதல்.

4. மாணவர்கள் பல்வேறு சூழ்நிலையின் காரணமாக மன எழுச்சிக் குன்றியுள்ள நேரங்களில், அவர்களுக்கு வேண்டாத வேதனைகளை விலக்கவும், உற்சாகம் ஊட்டி விளையாட்டு நேரத்தில் ம்ன எழுச்சி பெறச் செய்து உதவுதல்.

5. மாணவர்களுக்கு நிற்கும் தோரணை (Posture) நடக்கும் தோரணை இவற்றில் குறைபாடுகள் உண்டு. உரிய மருத்துவரை அணுகி, அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.

6. பள்ளிகளில் மருத்துவ சோதனைகளை மாணவர்களுக்கு எடுக்கும் நேரத்தில், மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருந்து ஏற்றவை செய்து உதவுதல்.

7. மருத்துவர்கள் மாணவர்களைப் பரிசோதித்த பிறகு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகள் பற்றிக் கூறியதை அறிந்து, அவற்றைப் போக்குதற்குரிய பணிகளில் தொடர்ந்து ஈடுபடுதல்.

8. பள்ளி மற்றும் அதனைச் சார்ந்த சுற்றுப்புறம் தூய்மையுடனும் அழகுடனும் விளங்க, மேற்பார்வையிட்டு பணியாற்றுதல்.

9. மாணவர்களுக்குத் தனித்தனியே திறன்களையும், விளையாட்டுக்களையும் கற்பித்தது போல், குழுவாகச் சேர்ந்து அவர்கள் ஆடவும் போட்டியிட்டு மகிழவும் வாய்ப்பளித்தல், ஏற்பாடு செய்தல். 

10. மற்ற ஆசிரியர்களுக்கு எந்த விதத்திலும் தாழாமல், ஏற்றத் தகுதிகளைப் பெற்று உயர்ந்த நிலையில் உலா வருதல்.

11. தங்கள் செயல்களில் தகுதிகளை உயர்த்திக் கொள்வது போலவே, படிப்பிலும் பட்டங்கள் பெறுவதிலும் தங்கள் அறிவுத் தகுதிகளை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற தகுதிகள் யாவும்,

உடற்கல்வித் துறையில் உன்னதமான தலைவர்களாக உயர்த்திவிடும்: அறிந்து ஆவன செய்க.

உடற் கல்வி ஆசிரியர்களுக்குரிய குண நலன்கள்:-

1. தலைமையை மதித்து ஒழுகுதல்.

2. உற்சாகம், உழைக்கும் ஆர்வம், தன் திறமையை உரிய முறைகளில் பயன்படுத்துதல்.

3. சுறுசுறுப்பு, அனுசரித்துப் போகுதல், உடல் நலக்குறைவு இல்லாமல் இருத்தல், மற்றவர்களுக்கு மனமுவந்து கூடி, செயல்களாற்றுதல்.

4. கட்டுப்பாடு, கடமை, கண்ணியம், பிறருக்கு உதவுதல், மற்றவர்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக இருத்தல்.

5. வலிமையும் உண்மையும் காத்தல்.

6. நம்பிக்கைக்குரியவராக விளங்குதல், சரியான முறையான சிந்தனை, நீதி காத்தல் நியாயம் வளர்த்தல்.

7. பரிவு, பச்சாதாபம், நேர்மை, தன்னடக்கம் பொது இடத்தில் காக்கும் பண்பாடுகள், அறிவாண்மை, தியாகம், சிறப்புச் செயல்கள் புரிதல் போன்ற குணவான்களாக விளங்குதல்.

8. உடல் நலத்துடன் இருத்தல், உண்மை பேசுதல், நகைச் சுவையுடன் நல்லதைப் பேசுதல்.

9. மதி நுட்பம், உழைப்பு, ஒருபுறம் சாராமல் நடுநிலை வகித்தல், கற்பிக்கும் காரியத்தில் ஆர்வம் கொண்டிருத்தல்.

10. பொறுமை, கழிவிரக்கம், பொது மக்களுடன் இனிய தொடர்பு, உரிய துறையில் உயர்ந்த திறனாற்றல்.

இவ்வாறு உடற்கல்வி ஆசிரியர்கள் குணநலன்கள் மிக்கவர்களாக விளங்க வேண்டும். இவையே உயர்ந்த தலைவர்களாக, மக்கள் மத்தியிலே திகழவும் மேன்மை பெறவும் செய்கின்றன.

மாணவர்களும் தலைமைத் தகுதியும்

மாணவர்கள் படிப்புடன் நின்று விடாமல், மற்றவர்களுக்கு வழிகாட்டி, முன்னின்று நடத்துகிற தலைமைப் பண்புகளைக் கற்பித்து தலைமைப்பதவிக்குத் தகுதியுள்ளவர்களாகவும் செய்ய ஆசிரியர்களால் இயலும்.

வகுப்புக்களில் அவர்களுக்குத் தலைமை பற்றி விளக்கியும், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியும், அதில் முடிவெடுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தும், தலைமை ஏற்கச் செய்யலாம்.

இதனால் மாணவர்களிடையே கடமை உணர்வுகளும், கட்டுப்பாட்டுச் செயல்களும் மிகுதியாக வளர வாய்ப்புண்டு. பொறுப்புக்கள் பரவலாக ஏற்கப்படுகிறபோது, செயல்முறைகளில் சிரத்தை ஏற்படுவதுடன், செழித்தோங்கவும் முடிகின்றது.

தலைமைத் தேர்வுமுறை

1. பள்ளி நிர்வாகமே (தலைமை ஆசிரியர் மற்றும் குழுவினர்) மாணவர் தலைவரை நியமனம் செய்யலாம்.

2. அல்லாதபோது, தேர்வு நடத்தி, தேர்ந்தெடுக்கச் செய்யலாம். 

3. அல்லது சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கலாம்.

4. அல்லது, திறமையுள்ள மாணவர்களுக்கு, வாய்ப்பளிக்கலாம். ஒருவர் மாற்றி ஒருவர் என்ற வரிசையில்.

5. அல்லது அதிகத் திறமையுள்ளவராகப் பார்த்து, தலைமை ஏற்கச் செய்யலாம்.

சூழ்நிலை அறிந்து, தக்க முறைகளைப் பின்பற்றி, அக்கறையுடன் ஆராய்ந்து,தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்தபின், தலைமைக்குரிய தகுதிகள், வரம்புகள், வாய்ப்புகள், செயல்படும் நெறிகள், பக்குவமான வழிகள் இவற்றை அவர்களுக்கு விளக்கிக் கூறி வழிகாட்டவேண்டும்.

உடற்கல்வி வகுப்புகளில், மாணவர் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றார்கள். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

1. ஒரு குழுவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல;

2. பயிற்சி வகுப்புகளைக் கற்றுத்தர; மேற்பார்வையிட்டுப் பார்த்துக் கொள்ள.

3. ஒரு குழுவை வழி நடத்திச் செல்லும் பொறுப்பேற்க.

4. சுற்றுலா, நடைப் பயணம், போன்ற சமயங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் பற்றி பொறுப்பேற்க.

5. போட்டிகள் நடத்துகிற சமயங்களில், போட்டிகள் நடத்த பொது மக்களுக்கு வழிகாட்ட, இருக்கைகள் சரி செய்து போட, விளையாட்டு வீரர்களுக்கு வேண்டியன தந்து உதவ.

6. விளையாட்டுப் பந்தயங்கள் நடத்துகிறபோது, அதிகாரிகளாக, அலுவலர்களாக, தொண்டர்களாக பணியாற்ற.

7. சிறு சிறு விளையாட்டுக்களை நடத்துகிறபோது சேர்ந்து உதவ.

8. குழுக்களுக்குத் தேநீர் அளிக்கின்றபோது உதவ.

இவ்வாறு மாணவர்கள் பொறுப்பேற்றுத் தலைவர்களாக செயல்பட வழிகள் உள்ளன. அவர்களை ஆற்றுப்படுத்தி, அக்கறையுடன் செயல்பட ஊக்குவித்தால், அரிய பயன்களைப் பெற முடியும்.

உடற்கல்வி - ஒரு தொழில்

உடற்கல்வி என்பது ஒர் உன்னதமான தொழில் (Profession) தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்துகின்ற தொழில்நுணுக்கம் நிறைந்த துறை.

தொழில் என்றால் அதற்கென்று விஞ்ஞான பூர்வமானதேர்ந்த உண்மைகள் உண்டு.அவற்றை அடைய அறிவுபூர்வமான அணுகுமுறைகள் உண்டு. ஆற்றல்கள், திறன்கள், திறமைகள், வழிகள், வரைமுறைப்படுத்தும் விதிகள் என்றெல்லாம் நிறைய உண்டு.

வியாபாரத்திற்கு விளக்கம்

உடற்கல்வித் துறை என்றால் அது ஒரு வியாபாரம் (Trade) என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அது தவறு.வியாபரம் செய்பவர்கள் வியாபாரிகள் அவர்களுக்கு படிப்பறிவு அவசியமில்லை. அனுபவ அறிவே போதும். திறன் நுணுக்கங்கள் (Techniques) தேவையில்லை. திறமைகளே போதும். ஆளைப்பார்த்து பொருளை விற்கின்ற சாமர்த்தியம் தேவை.நிலையான விதிகளோ, நியாய வழிகளோ வியாபாரத்திற்கு வேண்டாம்.

பொது மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற பொறுப்புணர்வு குறைவு, தங்கள் லாபத்திற்காக, பொது மக்களுக்கு உதவுவது போன்ற பாவனைகள் வியாபாரிகளிடம் அதிகம் இருக்கிறது. வியாபாரத்தில் வருமானத்திற்கும், லாபம் சம்பாதிக்கவும் என்ற தன் முனைப்பே அதிகம்.

ஆகவே, உடற்கல்வித்துறையைப் போய் வியாபாரம் என்று யாராவது கூறினால், அது பொய் முழக்கமே தவிர, வேறல்ல.

தொழிலுக்கு விளக்கம்

தொழில் என்றால் அதற்கு விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமான கருத்துக்களின் தொகுப்பாகவும் அந்தத் தொழில் ஆக்கப்பட்டிருக்கவேண்டும்.

அடிக்கடி ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் அது ஆட்படவேண்டும்.

அதன் நுணுக்கங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் விஞ்ஞானமயமாக விளங்க வேண்டும்.

சமூக வளத்திற்காகவும், தொழில் என்பது உதவுவதாக விளங்க வேண்டும்.

ஈடுபடுகின்றவர்களுக்கு இணையற்ற பயன்களை அளிக்கும் வல்லமையுடன் விளங்க வேண்டும்.

உடற்கல்வி ஒரு தொழில் என்றால், கீழ்க்கானும் காரணங்களை நீங்கள் படிக்கிறபோதே, உணர்ந்து கொள்கிறீர்கள். ஒத்துக் கொள்வீர்கள். 

1. உடற்கல்வியின் அடிப்படைக் கருத்துக்களும் கொள்கைகளும் பல விஞ்ஞானங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறாகும்.

2. உடலியல், உடற்கூறு நூல், உயிரியல், சமூக இயல், விளங்கியல், உயிர் வரலாறு நூல் போன்ற பல விஞ்ஞானங்களின் மேன்மை மிகு கருத்துக்களின் தொகுப்பே உடற்கல்வியாகும்.

3. எல்லா கொள்கைகளுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் மேன்மைமிகு நோக்கத்தையே முனைப்பாகக் கொண்டுள்ளன.

4. சமுதாய அமைப்பில், தனிப்பட்டவர்கள் எவ்வாறு இணங்கி, இணைந்து செயல்பட்டு, செழிப்புக்கு உதவ வேண்டும் என்று உடற்கல்வி கற்றுத்தருகிறது.செயல்பாட்டில் ஈடுபடுத்தி, அனுபவப்படுத்துகிறது.

5. மக்களுக்கு நன்னடையும், நன்னடத்தைகளையும் கற்றுத் தருகிறது.

6. கலை உணர்வும், விஞ்ஞான அறிவும் மேம்பட துணைபுரிகிறது.

7. மனித சமுதாயத்தின் மகிமை மிக்கப் பண்பாடுகளை வளர்க்கும் மாபெரும் பணியில் உடற்கல்வி ஒரு தொழிலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.

தொழில் - தொழிலர்

ஒரு மனிதர் ஒரே நாளில் தொழிலராக (Professional) மாறி விட முடியாது. அவர் நீண்ட நாள் இருந்து, பழகி பயிற்சி பெற்று, பக்குவம் அடைகிற போதுதான், அந்த நிலையை அடைய முடிகிறது.

அவர் அந்தக் குறிப்பிட்ட தொழில் அறிவைக் கற்க வேண்டும். அந்த அறிவுக்கேற்ற திறன்களை வளர்க்க வேண்டும். அதையே முனைப்பாகக் கொண்டு உழைக்க வேண்டும். இதற்கு பல மாதங்கள் ஆகலாம். பல ஆண்டுகள் கூட போகலாம்.

தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, பணியாற்றுகிறவர்களே சிறந்த தொழிலர்களாக மாறிவிட முடியும். உதாரணமாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் ஒரே நாளில் நிபுணத்துவம் பெறமுடியாது. சிறந்த செயல்படுபவராகவும் ஆகமுடியாது. தொடர்ந்த, நீடித்த, தேர்ச்சியான பயிற்சிகள் வேண்டும் அதுபோலவே, உடற்கல்வித் துறை முழுவதும் ஒருமித்த உள்ளத்துடன் மேற்கொள்கிற ஈடுபாடுகளினால் தான் உயர்ந்து நிற்க உதவுகிறது.

தேர்ந்த திறன்கள் (Skills) என்பவை ஒரே நாளில் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. அவை காலங்காலமாக, கற்றோராலும் மற்றோராலும் கற்பனை நயத்துடன், அனுபவச் செழிப்புடன் உருவாக்கப்பட்டவையாகும். ஆகவே, வெறும் அறிவாற்றல் மட்டும் உடற்கல்வித் தொழிலுக்குப் போதாது. வீறுமிக்க செயல் திறன்களும் வேண்டும் என்பதையே உடற்கல்வித் தொழில் வற்புறுத்துகிறது.

உடற்கல்வித் தொழில் அதிகம் வற்புறுத்துவது தியாக மனப்பான்மை நிறைந்த சேவைகளைத்தான் (Service). இது சமுதாயச் செழுமையை வளப்படுத்தவே வற்புறுத்துகிறது. உடற்கல்வி இருக்கிறது. சேவை மனப்பாங்குள்ள ஆசிரியர்களே, சிறந்த தொழிலராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள்.

உடற்கல்வித்துறை சிறந்த தொழில் என்று மதிக்கப் படுவதற்குக் காரணம், அதுநாளுக்கு நாள் நொடிக்கு நொடி நுண்மையாக மாறிக் கொண்டு வருவது தான். தொழிலில் மாற்றம் நிகழ வேண்டும். அதில் ஆய்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டும் என்ற நியதிப்படி உடற்கல்வித் துறை அடிக்கடி ஆய்வுக்கு ஆளாகிறது. ஆராய்ச்சிகள் அகில உலக அளவில் நடைபெறுகின்றன. உணர்வுகளால், அறிவுச்சூழல்களால் உடற்கல்வித்துறை உயர்ந்த தொழிலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களை நல்லவர்களாக, ஒழுக்க சீலர்களாக மாற்ற முனையும் உடற்கல்வியின் மாண்புகளே, அதனை அனைவருக்கும் ஏற்ற தொழில் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய பெருமதிப்பினால் தான், உடற்கல்வியை உலகம் ஒரு ஒப்பற்றத் தொழிலாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்விக் கல்லூரி தான் முதன் முதலாகப் பயிற்சிக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.1947 வரை 5 கல்லூரிகளே இந்தியாவில் இருந்தன. இன்று 100 எண்ணிக்கையை எட்டும் அளவில், கல்லூரிகளில் எண்ணிக்கை மிகுந்து விட்டன. காரணம் உடற்கல்வியை உதவும் கல்வியாக உலகம் ஏற்றுக் கொண்ட காரணத்தால்தான்.

உலக நாடுகளுக்கும் இணையாக, நம்நாட்டு உடற்கல்வி உயர்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களையும் தரத்திலும் திறத்திலும் உயர்த்திக் கொண்டு, வருவோரையும் உயர்த்தும் தொண்டில் ஈடுபட்டு, உலகம் போற்றும் உடற்கல்வியாளராக சிறக்க விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்! விளையாட்டுத்துறை இலக்கியத்தின் தந்தை என்றும், பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்படுகின்ற, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள், விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பணியைத் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றினார்.

திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை 1937 - 2001 வளர்க்கும் விளையாட்டுத்துறை இலக்கியப் பணியை புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மூலமாக கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்துவந்தார்.

விளையாட்டு பற்றிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள், நாவல் மற்றும் தனிமனித முன்னேற்றம் பற்றிய அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

விளையாட்டுத் துறையில் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகவும், விருப்பத்துடன் பங்கேற்கவும் உதவும் வண்ணம், 25 வருடங்களாகத் தொடர்ந்து ‘விளையாட்டுக் களஞ்சியம்’ என்ற மாத இதழை (1977 முதல்) நடத்தி வந்தார்.

விளையாட்டு இசைப் பாடல்கள், உடற்பயிற்சிக்கான இசை ஒலி நாடா போன்றவற்றை மாணவ, மாணவியருக்காக இயக்கி, இசையமைத்து, தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

விளையாட்டின் சிறப்பை வெளிப்படுத்த, ‘ஒட்டப்பந்தயம்’ எனும் திரைப்படத்தைத் தயாரித்துத் திரையிட்டுள்ளார்.

சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக விளையாட்டுத் துறையில் ஆய்வறிஞர் (Ph.D.) பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

அழகப்பா கலைக்கல்லூரி (காரைக்குடி), வித்யாமந்திர், TVS நிறுவனங்கள்.ஒய்.எம்.சி.எ. கல்லூரி, சென்னை முதலிய புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இவரது மூன்று நூல்கள் தேசிய விருதும், ஒரு நூல் தமிழ்நாடு அரசின் பரிசினையும் பெற்றுள்ளது.