உத்தரகாண்டம்

1

வாசலில் வண்டி வந்து நின்று கதவு அறைபடும் ஒசை கேட்கிறது. முற்பகல் நேரம். தாயம்மாள் கூடத்தில் மேலே மாட்டப்பட்ட காந்தியடிகள் படத்தை, சிறு மேசையில் ஏறித் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அன்றாடம் அதைத் துடைப்பது, அவளுக்கு ஒரு வழிபாடாக இருக்கிறது. காந்தியடிகளின் படத்துக்குக் கீழே, ஐயாவின் படமும் அம்மாவின் படமும் இருக்கின்றன. அவற்றுக்குச் சற்றுக் கீழே, ராதாம்மாவின் படம்.

இவர்கள் யாரும் இன்று இல்லை. ஆனால் இவர்களுடைய வாழ்நாளின் நினைவலைகள் அவள் உள்ளக் கடலில் மாயவேயில்லை.

அழுக்குப்படியாமல் துடைப்பது மட்டுமே அவள் செய்யும் பணி. பொட்டு, பூ மாலை என்று எதுவும் இல்லை.

அய்யா இருந்த நாட்களில், காந்தி படத்தைக் கையால் நூற்ற நூலினால் மலர்மாலை போல் செய்யப்பட்ட மாலை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. அய்யா நூற்பதை விட்ட பின்னரும், மதுரை ஆசிரமத்திலிருந்து, ஒவ்வொரு காந்தி ஜெயந்தி நாளிலும் நஞ்சுண்டையா வருவார். பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையை இசைப்பார். அய்யா, படுக்கையோடு விழுந்தபின், நஞ்சுண்டையா அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார். பேசவே மாட்டார்கள். அய்யா இறந்தபின் உடனே வந்தார். அடுத்த ஆண்டுக்கு அவரும் இல்லை...

மின்னல் கோடுகளாக நினைவலைகளின் தாக்கத்தில் அப்படியே பெஞ்சியின் மீது நின்ற அவள், சட்டென்று இறங்க முயன்று சாயுமுன் இருகரங்கள் அவளைத் தொட்டுத் தாங்குகின்றன.

கூச்சத்தில் குறுக இறங்கி நிலை பெறுகிறாள்.

“ஒ... இவனா?...” வெறுப்பு முகத்தைச் சுளிக்க மேலிடுகிறது.

‘என்னை ஏதற்கடா தொட்டுத் தாங்கினாய்? உன்னைப் பத்துமாதம் இந்த வயிற்றில் வைத்துக் கொண்டு, பால் கொடுத்து, பாசம் காட்டி வளர்த்ததற்காக அணு அணு வாய்ச் சிதைந்து கொண்டிருக்கிறேன்...’ என்று மனம் குமைகிறது.

“வாங்கையா? வாங்க?” என்று கொல்லைப்புறம் இருந்து வரும் ரங்கசாமி, மேலே சுழலும் விசிறிக்கான விசையைப் போடுகிறான். கூடத்தில் நாற்காலி ஏதுமில்ல. அகலமான பெஞ்சு ஒன்றுதான் இருக்கிறது. அய்யா கடைசி நாட்களில் அதில் தான் படுத்திருந்தார். அந்தக் கூடத்தில் உத்தரக்கட்டைக் கொக்கிகளில் தொங்கிய தேக்குமர ஊஞ்சல் அது. ராதாம்மா உட்கார்ந்து ஆடுவாள். தேனாம்பேட்டை வீடும் சுற்றுப்புறங்களும் “சேவாகுருகுலம்” என்றான பிறகு, அந்த ஊஞ்சல் இங்கு வந்தது. இந்த விடும், சுற்று வட்டம் மனைகளும் அம்மாவின் பிறந்த வீட்டு வழியில் வந்தவை.

“உக்காருங்கையா? விசிறில காத்தே வரல...”

அவள் துடை துணியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்து, அடுப்பைப் பார்ப்பது போல பாவனை செய்கிறாள்.

ராகிக்கூழோ, ஒர் அரிசிப் பொங்கலோ தான் இவள் சமையல்.

ஏதேனும் காய், கீரை-மோர்.

ரங்கசாமி சமையற்கட்டின் வாயிற்படியில் நிற்கிறான். “எதுனாலும் வாங்கிட்டு வரட்டுமாம்மா?”

“என்ன வாங்கணும்? பச்சக் கொத்துமல்லி துவையல் அரச்சிக்கிறேன். எனக்கு ஒண்ணும் வாங்கித் தரவேணாம்!” நறுக்கென்ற துண்டிப்பு.

“ரங்கசாமி ?”

“ஐயா?” என்று அவன் ஓடி வருகிறான்.

“சில்லுனு கொஞ்சம் மோர்... அம்மா...!”

உள்ளே வந்து அடைந்த அவளைக் கொக்கி போட்டு இழுக்கிறானா? உழக்குத் தயிரைக் குறுக்கி, பானையில் இருந்த நீரை ஊற்றி, உப்பும் சீரகத்துள்ளும் தூவி தவலைச் செம்பில் கொண்டு வந்து பலகையில் வைக்கிறாள்.

என்ன வீராப்பானாலும், வயிற்றுச்சதை அசையாமலில்லை. இவனை அவள் எப்போது பார்த்தாள்? இந்தப் பக்கம் ஏதோ விழா- கல்யாணம் என்று வந்ததாகச் சொன்னான். மாலை சால்வை என்ற வரிசைகளை ஒரு கட்சிக்காரன் அவளுக்குத் தெரிவதற்காக வாங்கிக் கொண்டு நின்றான். இவள் அப்போது வாசல் மேல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

அப்பனைப்போல் கறுப்புத்தான். எடுப்பான முகம். சாதிப்பேன் என்ற திமிர் தெரியும் பார்வை. கட்சிக்கரை வேட்டி.

இவள் அலட்சிய பாவத்துடன் விசிறிக்கட்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

“எப்படி இருக்கீங்கம்மா? உங்க மருமவதா பாத்துட்டு, கூட்டிட்டு வாங்கன்னு நச்சரிக்கிறா. மஞ்சு கல்யாணத்தப்ப வந்திட்டு உடனே கிளம்பிட்டீங்க. புது வீடு வசதியா கட்டிருக்கு உங்க இஷ்டப்படி கிணத்துல எறச்சி ஊத்திட்டுக் குளிக்கலாம். வயசு காலத்துல, மகன் செல்வாக்கா இருக்கறப்ப நீங்க இப்ப இருக்கலாமா?...” என்று கெஞ்சினான்; குழைந்தான்.

ஆப்பிலும் மலை வாழையுமாகத் தட்டுக்கள் வந்தன.

“இதெல்லாம் இங்க எதுக்குக் கொண்டாரீங்க? எனக்கு கூழுகுடிச்சித்தா பழக்கம். எனக்கு எதுவும் வானாம். இதெல்லாம் கொண்டு போயி அதா அங்க ரோட்டோரம் கட்டிடம் இடிக்கிற ஏழைக்கும்பல் குஞ்சும் குழந்தையுமா பிழைக்க வந்திருக்கு. கொண்டு கொடுங்க!” என்று திருப்பினாள்.

ஆனால் அன்று பார்த்த அந்த உருவமா? அவனா இவன்? ஐம்பதைத்தானே கடந்திருக்கிறான்? எழுபது எழுபத்தைந்து என்று மதிப்பிடும் அளவுக்கு எப்படிச் சோர்ந்து போனான்? மழையும் காற்றும் வெயிலும் புரட்டிப் போட்டதாகச் சொல்ல முடியாது. சொகுசு கார்; ஏ.ஸி. என்று ஏதேதோ சொல்கிறார்கள். உழவோட்டி, சேற்றிலும் சகதியிலும் ஊறி, கால் வயிற்றுக் கஞ்சியும் கள் மொந்தையும், பண்ணையடிமையின் உலகில் முழு வாழ்வையும் கழித்த பாட்டன் அவளுக்கு நினைவு தெரிந்து தொண்ணூறு வயதிலும் இப்படித் துவளவில்லையே?

“தாயம்மா? உங்காயா நல்ல செவப்பு. அதா நீயும் செவப்பா இருக்கிற... ஏந்தெரியுமா?” என்று ஒரு பல் தெரியச் சிரிப்பான்.

“அட, சீ! நீ எதும் பேசாதே? பச்சப்புள்ள கிட்டப் போயி இதெல்லாம் பேசிக்கிட்டு!” என்று சின்னாயி அதட்டுவாள். அந்தப் பாட்டன் பொடுக்கென்று செத்துப் போனான்.

அடிமை வருக்கம் மேல் படியில் வந்ததும், மேல் படிக்குரிய எல்லாக் கசடுகளும் படிந்து விடுமோ? அவளுக்குத் தோன்றவில்லையே? மேலும் இவன் மேல் வருக்கத்தில் தானே கண் விழித்தான்?

அவன் மோரைக் குடித்துவிட்டுக் குளிர்ச்சியை அநுபவிப்பவனாக முகம் கனியப் பார்க்கிறான்.

“பானைத் தண்ணி ஊத்திக் குடுத்தியாம்மா? என்ன இருந்தாலும் பானைத் தண்ணி சுகம் சுகம்தான். ஃபிரிடஜ்ல வச்சத எடுத்தா தேள் கொட்டுறாப்புல இருக்கும். வெளில வச்சாலும் தாகம் அடங்காது...”

“உப்புத் தின்னுறவனுக்கு வெளில வச்சாலும், ஃபிரிட்ஜூக்குள்ளாற வச்சாலும் தாகம் அடங்காது?”

சுருக்கென்று ஊசிக் குத்து பாய்கிறது.

பேச்சு எழவில்லை.

ஆனால் அவள் மனம் புலம்புகிறது.

‘மேல் படி'யில் தான் அந்த அய்யா கண் விழித்தார். படிகளைத் தட்டி, எல்லோரும் சமம் என்று பெரிய கைகளை நீட்டி எல்லோரையும் அணைத்துக் கொள்ளவில்லை?

இதழ்கள் துடிக்க மேலே படங்களைப் பார்க்கிறாள்.

காந்தி...மகான் காந்தி...மகாத்துமா காந்தி... அந்தச் சொல்லின் காந்தியில், கீழ் வரிசையில் உள்ள அய்யாவும் அம்மாவும் தங்கள் வாழ்க்கையையே காணிக்கையாக்கினார்கள்.

அவர்கள் புழங்கிய மண்; தண்ணீர்...கிணறு. இன்றும் அதில் நீர் அடியில் தெரியும் பாறையைக் காட்டிக் கொண்டு பளிங்காய், ஊற்றுக் கண்களால் வாழவைக்கிறது...

“அம்மா... உன்னைக் கூட்டிட்டுப் போகணும்னு வந்திருக்கிறேன். புது வீட்டில் உன் அடிபடனும்னு கெஞ்சிக்கிறேன்...” அவள் காலைப் பிடிக்கவும் விழைகிறான்.

“ஏய், இந்தக் காலுல விழற சாகசமெல்லாம் வேணாம். நா எதுக்கு அங்க வரணும்? எனக்கு ஒரு உறவும் யாருடனும் இல்ல. நீ என் வயித்தில் குடியிருந்த தோசத்துக்கு என்னை எப்பவோ பெருமைப் படுத்தி கவுரவிச்சிட்ட. அதுவே எனக்கு இந்த சன்மம் முச்சூடும் போதுமப்பா!”

“அம்மா... நீங்க இப்படிப் பேசலாமா? அரசியல்ங்கறது, சொந்த பந்தத்துக்கு அப்பாற்பட்டது. நீங்க ஆயிரம் மறுத்தாலும், நா உங்க மகன்ங்கறது இல்லாம போயிடுமா? ரஞ்சிதம் படுபடுக்கையாயிருக்கா. அவதா அம்மாளை எப்படின்னாலும் கூட்டிட்டுவாங்க. அவங்க மனசெரியும்படி நடந்து போச்சு, வாஸ்தவந்தா. ஆனா அதுக்குப் பிறகு எத்தனையோ மாறிப்போச்சி. நேத்து பரம விரோதியா இருந்தவன்லாம், இன்னைக்கு அரசியல் மேடையிலே கட்டித் தழுவி சொந்தம் கொண்டாடுறா. தாய் மகன் தொடர்பு, பெத்த மக்கள் தொடர்பு விடுமா, விடாது...” என்று என்னைக் கட்டாயப் படுத்தி அனுப்பிச்சிருக்கா... அவ பேச்சுக்கு மதிப்புக் குடுக்கக் கூடாதா?”

அவள் பார்க்கிறாள். இவன் மகா சாமர்த்தியக்காரன். நாடகம், வசனம், சினிமான்னு ஊறியவன். அரசியலில் சூது வந்திட்டதுன்னு, அன்றைக்கு அய்யா உதறித்தள்ளினார். அந்த அரசியல் மக்களை நல்ல மனிதர்களாக்கும் ஒழுக்க இலட்சியத்தை முதலில் வைத்தது... இவர்கள் அடிப்படையே வேறு தூ...! மனசுக்குள் காறி உமிழ்ந்து கொண்டு அவள் சமையலறைப் பக்கம் திரும்புகிறாள்.

“அம்மா... அம்மா...”

அவன் அவள் பின் வந்து காலடியில் விழுகிறான்.

“இதபாரு. இந்த நடிப்பெல்லாம் எனக்கு வேண்டாம். என்னால் இந்த நிழலை விட்டுவர முடியாது...”

தொண்டை கம்மி, கண்கள் கலங்குகின்றன.

“சரி, அதைப்பத்தி நா இப்ப எதும் பேசல. பேயானாலும் தாய்ம்பாங்க. ரஞ்சிதத்துக்கு நாளைக்கு ஆபரேசன்... அதுக்கு முன்ன உங்களைப் பார்க்கணும்னு சொல்றா...”

அப்படி உருகுபவள் என்றேனும் வண்டியெடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? இனி என்ன ஆபரேசன்? முப்பத்திரண்டு வயசிலேயே கர்ப்பப்பையை எடுத்துப் போட்டாயிற்று. பெரிய பையனே அப்பனின் வாரிசாக சரித்திரம் பண்ணிக் கொண்டிருப்பதாக அவள் செவிகளில் விழுகிறது- அடுத்த பெண்தான் மஞ்சு. இரண்டுக்கும் ஒரே மாசம்தான் வித்தியாசம். அது பதினெட்டாகுமுன் ஒரு காதலில் விழுந்து, வயிற்றில் வாங்கிக் கொண்டு, கல்யாணம் பண்ணினார்கள்... அது என்னவோ டிவோர்சாம்.

குப்பைகள் மேலே மேலே சேர்ந்தால், அடங்காத துர்நாற்றத்தில் ஆவியடிப்பதுபோல் இருக்கிறது.

“அம்மா, இப்படி, முன்னும் இல்லாமல், பின்னும் இல்லாமல் நீ எதற்காக இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கணும்? எஸ்.கே.ஆர். இருந்த வரை சரி. அவர் போய் பதினாறு வருசமாயிடிச்சி. வாரிசுன்னு யாரும் இல்லை. இது டிரஸ்ட்டைச் சேந்தது. அந்தப் பரசுராமன் நீ கட்டிக் காக்குறதாக நினைக்கும் இலட்சியத்தை என்னிக்கோ குழிதோண்டிப் புதைச்சிட்டான். உன்னை ஒருநாள், வேலைக்கார நாயே, வூடு சொந்தம்னு நினைக்காதே, வெளியே எறங்குன்னு சொல்லு முன்ன, நீ முடிவெடுக்கணும்!”

அவள் ஒருகணம் திகைக்கிறாள். அவன் சொல்வானோ, சொல்லமாட்டானோ, இவன் சொல்கிறான்.

நெஞ்சு கொதிக்கிறது.

“தாயம்மா, நீ தகுந்த பேர வச்சிட்டு, இங்கே ஏழைப் பெண்கள் தொழிற் கூடம் எதானும் வைக்கணும். நான் உயிலில் எழுதி இருக்கிறேன். கடைசி வரையிலும் நீதான் இருந்து கவனிக்கணும்... ராதாம்மா பேரை வைத்து நடத்தணும். எங்கெங்கோ பெண் குழந்தைகளைக் கொல்லுறாங்களாம். அந்த அவநம்பிக்கையைக் கிள்ளி எறியணும்...”

அவருடைய சொற்கள் ஒலிக்கின்றன.

அப்போது பெரிய டிஃபன் காரியருடன், ரங்கன் அய்யாவுக்குச் சாப்பாடு கொண்டு வருகிறான்.

“கிருஷ்ணா ஹோட்டல் முதலாளி ஐயாவைப் பார்க்க வரேன்னாருங்க...” ரங்கன் குழைந்து நிற்கிறான். இவன் போய்ச் சொல்லி இருப்பான். சாராய, லாட்ஜ் சாம்ராச்சியம் என்பது தெரியும். ‘இவனெல்லாம் அரசியல் மேடைகளில் புகழ் மாலைகளைத் தேடுகிறாங்க!’ என்று அய்யா புழுங்கிக் குமைந்தார். அவன் பஞ்சாயத்து, நகராட்சி என்று தேர்தல் காலங்களில் அவரைக் காண வருவான். “தாயம்மா நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவு! கறைபடிந்த தடங்கள்” என்பார்.

இன்று பெரிய சாலையில் பெரிய ஒட்டல் கட்டி விட்டான். காரோடு வந்து தங்குறாங்களாம்...

“அய்யா, சாப்பாடு வைக்கட்டுங்களா?...”

பெரிய பெஞ்சின் பக்கம், சிறிய மேசையைப் போட்டு அவன் பின்பக்கம் வாழை இலை அறுக்கச் செல்கிறான். ஆனால் அதற்குள் தலைவர் விடுக்கென்று திரும்பி கோபத்துடன் வெளியே நடக்கிறார். அவருடைய மேல் வேட்டியின் விசிறியில் காரியரின் நீண்ட ஆணி மாட்டி, அது நிலைகுலையச் சரிகிறது. குப்பென்ற மசாலா வீச்சமும் வறுத்த அசைவமும், தாயம்மாளின் உள்ளக்கனலை வீசி விடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/1&oldid=1022810" இலிருந்து மீள்விக்கப்பட்டது